Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3
திருக்குறள்

குன்றக்குடி அடிகளார்



குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 திருக்குறள்


                    குன்றக்குடி அடிகளார்

 

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை தொகுதி - 3

திருக்குறள்

முதன்மைப் பதிப்பாசிரியர்

தவத்திரு பொன்னம்பல அடிகளார்

விற்பனை உரிமை :

மணிவாசகர் பதிப்பகம் 31, சிங்கர்தெரு, பாரிமுனை,

சென்னை - 600108

முதல் பதிப்பு : டிசம்பர், 2000

திருவள்ளுவர் ஆண்டு : 2031

உரிமை : திருவண்ணாமலை ஆதீனம்

விலை : ரூ. 100-00

பதிப்பாசிரியர் குழு :

தமிழாகரர் தெ. முருகசாமி

நா. சுப்பிரமணியம்

குன்றக்குடி பெரியபெருமாள்

க. கதிரேசன்

மரு. பரமகுரு

செயலர் :

பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

கிடைக்குமிடம் :

மணிவாசகர் நூலகம்

சிதம்பரம், சென்னை, மதுரை, கோயமுத்துர், திருச்சி

தமிழ் மாமுனிவர்

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

1925 - 1995


பொருளடக்கம்

வாழ்க்கைக் குறிப்புகள்

குறள் பணிகள்

அணிந்துரை

முன்னுரை

உள்ளடக்கம்

வான் மழை

நீத்தார் பெருமை

அறன் வலியுறுத்தல்

வாழ்வாங்கு வாழ்வோம்!

வாழ்க்கைத் துணை நலம்

அறிவறிந்த மக்கட்பேறு

வளரும் தலைமுறை

அன்பு ஈனும் ஆர்வம்

அன்பு செய்க!

அன்பாற்றல்

மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை

மோப்பக் குழையும் அனிச்சம்!

நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள்

நன்றி மறவேல்

நன்றி பாராட்டுக!

சார்புநிலை கூடாது!

மற்றவர் சிந்தனைக்கு மதிப்புத் தருக!

நடுவு நிலைமை

தன்னடக்கம்

அடக்கமுடைமை ஆக்கம் தரும்

தன்னலம் அற்றலே நல்லொழுக்கம்!

நம் கடமை

ஒழுக்கமுடைமை

ஒட்ட ஒழுகல்

பொறையுடைமை

பொறுமை போற்றுக!

பொறுத்தாற்றும் பண்பு

பொறுமை ஆக்கம் தரும்!

அழுக்காறு திண்டா உள்ளம் பெறுக!

பொறாமை

பொறாமை கொள்ளற்க!

உழைத்து வாழ்க!

நடுவின்றி நன்பொருள் விரும்பற்க!

கோள் கேளற்க; சொல்லற்க!

புறம் கூறல் தீது!

நல்லன எடுத்துக் கூறி நட்பினைத் தோற்றுவிப்பீர்!

பயனுடைய சொல்லையே சொல்லுக!

தியினும், தீமை தீது!

கூட்டுறவு

ஒப்புரவு வாழ்க்கை

இரத்தல் தீது

உண்மையான தவம்

வாய்மையே பேசுக!

வேண்டாம் சினம்!

காத்துக் கொள்ளும் வழி

கோபமா? வேண்டாம்!

இன்னா செய்யாமை

எளிய வாழ்வியல் உண்மை!

நாள் எனும் வாள்!

மெய்ப்பொருள் காண்பதறிவு

ஆன்மாவின் உணவு!

அறிவு

சிறப்பு செய்தொழிலாலல்ல!

உழைத்து உண்க!

கற்புக்கடம் ஆண்ட வாழ்க்கை

நலமுற வாழ்வோம்!

முப்பால் அமைந்த திறன்

வரலாற்றுப் போக்கில் வள்ளுவம்

குறள் வாழ்வு

வாழ்வியற் கவிஞர்

திருக்குறளும் காந்தியடிகளும்

விண்ணகமாக்குவோம்!

மானிடச் சந்தையில்

மரபா? சீர்திருத்தமா?

வான்புகழ் வள்ளுவன்

வள்ளுவரின் நகைச்சுவை

திருக்குறட் கொள்கை

மனத்துக்கண் மாசிலனாதல்

வாழ்வாங்கு வாழ்க!

வன்சொல் தவிர்க்க!

வள்ளுவர் வாக்கு

வள்ளுவம் ஏன் பிறந்தது?

திருக்குறளும் ஒருமைப்பாடும்

எது தவம்?

வள்ளுவரும்-கார்ல்மார்க்சும்

வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை இயக்குக!

பகுத்துண்ணாமை கொலையே!

உலகம் தழீஇயது ஒட்பம்!

வாழ்வாங்கு வாழ்க

அறிவே ஆன்மாவின் அனுபவம்

அறிவின் அழகு

உழைப்பாம் வேள்வி

உழைப்பாம் வேள்வி

உழைப்பாம் வேள்வி

தமிழ்மொழிவழிக் கல்வி-2

தாய்மொழிவழிக் கல்வி-3

தாய்மொழிவழிக் கல்வி-4

தாய்மொழிவழிக் கல்வி-5

தொடரும் துன்பம்

சலத்தால் பொருள் செய்யற்க

ஒருமைப்பாட்டு உணர்வு கொள்

இகல்இன்றி இரு

பிறப்பால் இல்லை பிரிவினை

நுனிமரம் ஏறி அடிமரம் வெட்டற்க

உட்பகை உயர்வு தராது

மக்களாட்சியே மாண்புறு ஆட்சி

தக்காரைத் தேர்வு செய்

பொதுத்துறை பேணுக!

பலர் கூடிக் காண்டல் ஞானம்

இகலின்றி வாழ்தல் இனிது

பிறர்க்கென வாழ்தல் பெருவாழ்வு

அளவறிந்து ஆற்றுக

சலுகையின் எல்லை

சலுகையின் எல்லை - 2

ஆட்சிமொழிச் சிந்தனை

தேர்தல் சிந்தனை-1

தேர்தல் சிந்தனை-2

அரசுக்குப் பரிந்துரை

எல்லைக்கண் நின்றார் துறவார்

எல்லார்க்கும் எல்லாம்

ஊராட்சியும் பேராட்சியும்

எழுத்துச் சீர்திருத்தம்

பதவிக்கு அழகு பகைத்திறம் அறிதல்

எனைத்தானும் நல்லவை கேட்க!

ஜனநாயகமும் கருத்துப் பரிமாற்றமும்

காலம் அறிந்து செய்க!

வாக்காளர் கடமை

நல்லன நடப்பதாகுக!

அழுக்காறு கொள்ளற்க!

தேவரனையர் கயவர்

மறைமலைநகரும் காமராசர் இரயில் நிலையமும்

அரசின் கடமை

“நாமும் நமதும்” - வேண்டும்

ஒரே ஆன்மீக ராகம்

நடிப்புப் போலிகள்

வாழ்க, வருவாய்க்குத் தக

இட ஒதுக்கீடு

வேற்றுமையில் ஒற்றுமை

வருவாய்க்காக வழிமாறற்க!

நாடுக நடுநிலை

அமெரிக்கா எண்ணிப்பார்க்குமா?

யாரைத் தேர்ந்தெடுப்பது?

பெருமை பெருமிதம் இன்மை

நடந்தாய் வாழி காவேரி

மார்க்சியம் தோற்றுவிட்டதா?

திருவள்ளுவர் உலக மனிதர்

வேதாகமக் கல்லுரி

கூட்டுடைமைப் பொருளாதாரம்

நதிகள் இணைப்பு

இந்தியனாகச் சிந்திப்போம்

குறிக்கோள் நட்பு

கீழ்மக்கள்

மக்களாட்சி முறை

வன்முறை தவிர்ப்போம்!

நாணம் தேவை

என்புருக்கி நோய்

கவரிமான்

பொறுமையின் இலக்கணம்

இரண்டு சக்கரங்கள்

விருதுபெறும் வித்தகர்

கயமை சாடு

தோழமையைத் தேடுவோம்

தீமையை எதிர்த்து நில்

கூட்டாளி ஏன்?

வளர்ச்சி அல்ல; வீக்கம்!

குடியாண்மை

குடிசெய்வார் இயல்பு

மழைவளம் காப்போம்

டங்கல் ஒப்பந்தம்

விலை ஏற்றம்

சூது

சலுகைகள்-குடும்பங்கள் அடிப்படையில்

மக்கள் இருக்கிறார்கள்: மனிதன் இருக்கிறானா?

இட ஒதுக்கீடு

ஊழல் பிரச்சனைக்குத் தீர்வுகாண

இட ஒதுக்கீட்டுக் கொள்கை

பிளேக்-நோய்கள்

சாதிகள்-களைகள்

விருப்பங்கள்

உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல்

கல்விமொழியும்-தமிழ்ப்பணியும்

வாழும் மானிடத்திற்கு அழகு?

திருக்குறளும்-பெண்ணியமும்


 தமிழ்மாமுனிவர் அருள்நெறித் தந்தை

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வாழ்க்கைக் குறிப்புகள்

ஆண்டு நிகழ்வுகள்

1925 ● தோற்றம்

● பூர்வாசிரமம் தந்தையார் : திரு. சீனிவாசம் பிள்ளை

தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி

● பிள்ளைத் திருநாமம் : அரங்கநாதன்

● தோற்றம் பெற்ற ஊர் : தஞ்சை மாவட்டம் திருவாளப்புத்துர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம்.

1931 ● சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம்.

1936 ● 'சொல்லின் செல்வர்' ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு.

1937 ● தமையனார் திரு. கோபாலகிருஷ்ண பிள்ளை விட்டில்

1942 ● கடியாபட்டியில் வாழ்தல்.

● பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல்.

● 1942 விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு.

● 'வினோபா பாவே படிப்பகம்' தொடங்கி நடத்துதல்.

1945 ● தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் - கயிலைக் குருமணி அவர்களிடம் கந்தசாமித் தம்பிரான் என தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல்.

● தருமபுரம் தமிழ்க் கல்லூரியில் பயிலுதல்.

1947 ● சீர்காழிக் கட்டளைத் தம்பிரான் - திருஞான சம்பந்தர்

1948 ● திருமடம் தூய்மைப் பணி, திருமுறை வகுப்பு, விழா நடத்துதல்.

1949 ● குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு பட்டம் ஏற்பு. திருநாமம் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

1952 ● குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆவது குருமகா சந்நிதானமாக எழுந்தருளல்.

● அருள்நெறித் திருக்கூட்டம் தோற்றம்.

● 'மணிமொழி' என்னும் பெயரில் இயக்கப் பத்திரிகை வெளியிடல்.

1953 ● ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்க கால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) வள்ளல் பாரி விழாத் தொடங்குதல்.

● பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல்.

● இலங்கைப் பயணம் - இரண்டு வாரம் சுற்றுப் பயணம்.

1954 ● இராசாசி தலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு.

● திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சந்திப்பு.

● தாய்லாந்து, இந்தோசீனர், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்)

1955 ● அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல்.

● 'தமிழ்நாடு' நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல்.

● அறிஞர் அண்ணர் குன்றக்குடி திருமடத்திற்கு வருகை.

● ஆச்சார்ய வினோபா பாவே திருமடத்திற்கு வருகை.

1958 ● குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல்.

1959 ● ஆ. தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல்; பாரதப் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை.

1960 ● மத்திய அரசு சேமநலக் குழு உறுப்பினராதல்.

● மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சனை தொடங்குதல்.

1965 ● இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசு வழக்கு தொடர்தல்.

1966 ● தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தோற்றம்.

1967 ● திருப்புத்துர்த் தமிழ்ச் சங்கம் தோற்றம்.

● திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறை நெறிப்படி - போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்துர்த் தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல்.

1968 ● இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு - 'திருக்குறள் உரைக்கோவை' நிகழ்ச்சி தொடக்கவுரை நிகழ்த்தல் - திருக்குறள் இந்திய நாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல்.

● இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணா நோன்பிருத்தல்.

● கீழ வெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்; புத்தாடை வழங்குதல்.

1969 ● பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி ஏற்பு;

● கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை

● கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல்

● தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெறல்.

● சட்டமன்ற மேலவையில் இந்து அறநிலையத் திருத்த மசோதா சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல் பற்றிப் பேசுதல்.

● சோவியத் பயணம்; 22 நாள் சுற்றுப் பயணம்.

1972 ● பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி, திருவள்ளுவர் கலைக் கல்லூரியாக உருவாதல்.

● சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக நியமனம், வள்ளுவர் கோட்டம் திருப்பணித் தலைவராக நியமனம்.

● குன்றக்குடித் தருமைக் கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய இடத்தில் கட்டடம் கட்டித் திறத்தல்.

1973 ● திருக்குறள் பேரவைத் தோற்றம்.

● திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநில மாநாடு நடத்துதல்.

● "கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்" என்ற முழக்கம் நாட்டளவில் வைக்கப்பெற்றது.

● குன்றக்குடி கிராமத்தைத் தன்னிறைவுக் கிராமமாக ஆக்கும் திட்டம் உருவானது.

1975 ● நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல்.

● சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொர்னம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.

● மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி. வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச் சொற்பொழிவு.

● அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.

● இராமநாதபுரம் இனக் கலவரம் - அமைதிப்பணி.

1982 ● குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல்.

● மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்ட மன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். பாராட்டுதல்.

● மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம்.

● புளியங்குடி இனக்கலவரம் - அமைதிப்பணி.

1984 ● பாரதத் தலைமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் குன்றக்குடிக் கிராமத் திட்டக்குழுவின் பணிகளைப் பாராட்டல்.

1985 ● நடுவணரசு திட்ட ஆனைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை, கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.

● பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல்.

● மணிவிழா

1986 ● தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெறுதல்

● இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் "Kundrakudi Pattern" என்று அறிவித்தது.

● இவர் எழுதிய 'ஆலயங்கள் சமுதாய மையங்கள்' என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது.

● அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

1991 ● இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.

● இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம்.

● அரபு நாடுகள் பயணம்.

1993 ● மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்தது.

1995 ● இறைநிலை யடைதல்.

அடிகளாரின் குறள் பணிகள்

பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்கூறு நல்லுலகில் சமய மறுமலர்ச்சிக்கு வழிகண்டவர். அடிகளார் பூர்வாசிரமத்தில் செட்டிநாட்டில் எங்கள் ஊராகிய இராமச்சந்திரபுரத்தில் உயர்நிலைக் கல்வி பயின்றார்கள். எங்கள் தந்தையார் குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்களும், அடிகளாரின் அண்ணன் அவர்களும் விநோபா பாவே வாசகசாலையைத் தொடங்கினர். அடிநாள் தொட்டு அடிகளாரை நான் நன்கறிவேன். அடிகளார் திருவண்ணாமலை ஆதீனத்தில் பொறுப்பேற்ற பின்னர் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார்கள். முதன்முதலில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் அடிகளார் அவர்களும் நாங்கள் நடத்திய தமிழர் திருநாள் திருக்குறள் விழாவில் ஒரே மேடையில் பேசினர். அப்பொழுது ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் சந்திக்கின்றன என்ற செய்தியை வியப்புடன் நாளிதழ்கள் வெளியிட்டன. 

50, 60களில் அடிகளார் தமிழ்மேடைக்குத் தம் பேச்சால் புதிய வலிமை சேர்த்தார்கள். தமிழகம் முழுவதும் அடிக்கடி பயணம் செய்யும் நான் அடிகளாரின் நூற்றுக்கு மேற்பட்ட பொழிவுகளைச் செவிமடுக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். அடிகளார் நூல் பலவற்றைப் படிக்கும் பேறு பெற்றேன். அப்பொழுதெல்லாம் சிந்தனைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற வேனவா என்னுள்ளத்தில் முகிழ்த்தது. அது இன்று கைகூடுகிறது.

புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அடிகளார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் (D.Litt.) வழங்கிய போது அவர்களிடம் வாழ்த்துப்பெற்று, அடிகளார் நூல் வரிசைத் திட்டத்தை விரிவாக விளக்கினேன். “நான் நினைக்க வில்லை. நல்ல திட்டமாக இருக்கிறது” செய்யலாம் என்று சொல்லி இசைவளித்தார்கள். அடிகளார் எழுதிய 50-க்கு மேற்பட்ட நூல்களையும் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களை நேரில் சந்தித்து ஆசிபெற்று நூல்வரிசைத் திட்ட அறிக்கையைப் பணித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்தி இசைவு தந்தார்கள். பதிப்புக் குழுவை உருவாக்கினார்கள். கட்டுரைகளை வகைப்படுத்தும் பணி தொடங்கிற்று.

ஒவ்வொரு தொகுதியும் 400 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக வெளியிடும் திட்டத்தில் ஏற்கனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இன்று மூன்றாவது தொகுதி வெளிவருகிறது.

திருக்குறள்

இலக்கியம்

சமயம்

சமுதாயம்

பொது

என 5 நிலைகளில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மறைமலை அடிகளுக்குப்பின் 1960-90களில் சைவ உலகில் அடிகளார் பெரும்புரட்சி செய்தவர். சைவ சமய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தவர். சமயக்காழ்ப்பின்றி சைவசமயத்தின் கோட்பாடுகளை, தத்துவக் கூறுகளை பொதுமக்களும் உள்ளம் கொள்ளும்படி விளக்கியவர் தமிழ் மாமுனிவர். சைவசமயத்தை நடைமுறைச் சமயமாக்கவும், சீர்திருத்தக் கருத்துக்கள் செயற்படவும் அல்லும் பகலும் அயராது உழைத்து, புதியதொரு விடியலைக் கண்டார்கள். பெரியாரும் போற்றும் வண்ணம் பெருமிதமாக வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் பெரிய சைவத்திரு மடங்கள் 18 இருந்த போதிலும் குன்றக்குடி ஆதீனமே மக்களால் பெரிதும் அறியப்பட்டிருந்தது. தமிழ் மறுமலர்ச்சியின் ஒரு கூறாகிய சமய எழுச்சி, திருமுறை எழுச்சி, திருக்குறள் இயக்கம் முதலியவற்றின் வாயிலாக, எழுச்சி மிக்க புதிய தமிழகத்தை உருவாக்கினார்கள். அடிகளார் அவர்களை

⁠புரட்சித்துறவி

⁠சிந்தனையாளர்

⁠நூலாசிரியர்

⁠சொற்பொழிவாளர்

⁠நிறுவனர்

என ஐந்து நிலைகளில் வைத்து அடிகளாரின் பங்களிப்பை நாம் விளக்கலாம்; மதிப்பீடு செய்யலாம்.

புரட்சித்துறவி : தத்துவ தரிசனங்கள் அனைத்தையும் கற்றதோடு மார்க்சியமும் கற்றவர். சமூக இயலில் ஆழங்கால் பட்டவராதலால் தமிழ்ச் சமூக மாற்றத்திற்கு சைவ சமயம் வழியாக எவ்வாறு மேம்பாடு காணலாம் என உழைத்தார். தமிழ் வழிபாடு, ஆட்சி மொழி, பயிற்றுமொழி, இந்திஎதிர்ப்பு முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் தலைமையேற்று தமிழகத்திற்கு வழிகாட்டினார். அவருடைய எழுத்திலும், பேச்சிலும், புதுமைகள் பூத்துக் குலுங்கின. திருமடத் தலைவர்கள் பல்லக்கில் பவனிவந்தபோது பட்டி தொட்டிகளுக்கெல்லாம் அடிகளார் சைக்கிளில் சென்று சமயம் பரப்பினார். புரட்சித்துறவி அடிகளாரின் புரட்சிச் சிந்தனைகளை இந்த 10 தொகுதிகளிலும் நாம் காணலாம். நடைமுறைக்கு ஒத்து வராத சமயக் கருத்துக்களைத் துணிவோடு எடுத்துக்காட்டிய சமயப் புரட்சியாளர்.

சிந்தனையாளர் : தமிழ்ச் சிந்தனைக்குப் புதுவளம் சேர்த்தவர். திரு.வி.க. நெறியில் சமுதாய நோக்கில் சமயச் சிந்தனைகளை வழங்கியவர். பன்னுற் பயிற்சியும், பேரறிஞரின் நட்பும், தொடர்ந்த மேடைப்பொழிவுகளும், பட்டறிவும் அவருக்குப் பல்வேறு புதிய சிந்தனைகள் தோன்ற வாய்ப்பளித்தன. துறவியாய், தமிழறிந்த சான்றோராய் மட்டுமல்லாமல் மானுடம் மேன்மையுற வேண்டும் என்ற வேணவாவினால் எவர்க்கும் அஞ்சாமல், எதனையும் எதிர்பாராமல் புதிய சிந்தனை விதைகளைத் தூவினார்கள். அவை இன்று பூத்துக் குலுங்குகின்றன. அவரின் சிந்தனைகள் தனி நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

நூலாசிரியர் : பல்வேறு காலங்களில் பல்வேறு இதழ்களில் அடிகளார் எழுதிய கட்டுரைகள் நூல்வடிவம் பெற்றுள்ளன. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் அவர் ஆற்றிய அறக் கட்டளைச் சொற்பொழிவுகள் அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதித்துப் போற்றப்படுகின்றன. சிறியனவும், பெரியனவுமாய் 54 நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றில் அடிகளாரின் சிந்தனைத் தெளிவும் விளக்கும் திறமும், விரித்துரைக்கும் வகையும் நூலாசிரியர் இயல்புகளாய் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு நூலிலும் சமூகப் பார்வையுடன் கூடிய புதிய சிந்தனை, புதிய செய்தி ஒன்று இருக்கும்.

சொற்பொழிவாளர் : 1960-90களில் தலைசிறந்த சொற்பொழிவாளர் ஐவரைச் சுட்டினாலும், மூவரைச் சுட்டினாலும் அடிகளார் பெயர் முதல் வரிசையில் நிற்கும். புதுமைச் சிந்தனையாலும், புரட்சிக் கருத்துக்களாலும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பாராட்டப் பெற்றவர்.

நிறுவனர் : அருள்நெறித் திருக்கூட்டம் : அடிகளார் தொடங்கிய இந்த இயக்கம் தமிழ்ச்சைவ உலகில் புத்தார்வத்தையும், புத்துணர்ச்சியையும், புத்தெழுச்சியையும் உண்டாக்கியது. சிற்றூர்களில், பேரூர்களில் கிளைகள் முகிழ்த்தன. திருமுறைகள் வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றன. ஊர்தோறும், திருக்கோயில் தோறும் உழவாரப்பணி ஊக்குவிக்கப் பெற்றது. நாள்வழிபாடு ஒழுங்கு செய்யப் பெற்றது. வார வழிபாட்டுக்கூட்டம் வளர்ந்தோங்கியது.

தெய்விகப் பேரவை : தமிழ்க அரசின் இந்து அறநிலையத்துறையின் வழி தொடங்கப் பெற்ற இந்த அமைப்பு, பேரியக்கமாகப் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தது. சமய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறை உணர்வு நாளும் பெருக நல்லதொரு இயக்கமாக வளர்ந்தது.

திருக்குறள் பேரவை : தமிழ்மாமுனிவர் தோற்றுவித்த அமைப்புக்களில் இன்றும் இளமை குன்றாது மாநாடுகள் நடத்திவரும் பேரியக்கம் இது. தமிழறிந்தோர் எல்லோரும் திருக்குறள் அறிந்திடுதல் வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் கருத்தரங்கு நடைபெறுதல் வேண்டும். ஆண்டுதோறும் மாநில மாநாடுகள் நடத்துதல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் திருக்குறள் மாநாடு நடத்துதல் முதலியன இதன் செயல்திட்டங்கள்.

திருக்குறளைத் தேசிய நூல் எனப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று அடிகளார் எழுப்பிய குரல் இன்று நாடு முழுவதும் ஒலிக்கிறது.

அணிந்துரை

தமிழண்ணல்

துணைத் தலைவர், தமிழிலக்கியச் சங்கப் பலகைக் குறள்பீடம் ஒருங்கிணைப்பாளர். தமிழ்ச் சான்றோர் பேரவை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும் அவர் மக்கள் மன்பதைக்குப் பாடுபட்டு, நெறிகாட்டிய பெருமைக்குரியவர் என்பதால் அவரைச் சமுதாய மாமுனிவர் என்றனர். தமிழ்மொழி வளம்பெற நாடனைத்தும் சென்று, தம் சிந்தனைச் செல்வத்தைப் பகிர்ந்து கொண்டதால் தமிழ் மாமுனிவர் எனவும் போற்றினர்.

பிற மடங்களும் தமிழும் சிவனியமும் வளரப் பாடுபட்டன. எனினும் ‘ஆசார அனுட்டான’த் தடைகளால், மக்கள் அணுக முடியாத, உயர்ந்த பீடங்களில் இருந்தனர். அவற்றைவிடக் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் பெரியதன்று. ஆயினும் அப்பரடிகளைப்போல, திருஞானசம்பந்தரைப்போல, மக்கள் மன்றத்திற்கு வந்து அவர்களிடையே தாமும் ஒரு ‘மா மனிதராக’ விளங்கியதால், தாம் தலைமை தாங்கிய திருமடத்தின் புகழை உலகறிய உயர்த்தியவர்தான், தவத்திரு அடிகளார் ஆவார்கள்.

அவர்தம் சிந்தனைகளை, எழுதிவைத்த எண்ணங்களை மணிவாசகர் பதிப்பகம் பல பெருந் தொகுதிகளாக வெளியிடுகிறது. களஞ்சியங்கள் அனைய பெருநூல்களையே வெளியிட்டு வரும் பதிப்புச் செம்மல், தமிழவேள் ச. மெய்யப்பன் அவர்கள் அடிகளாரின் நூல்களைப் பல மடலங்களாக வெளியிடுவது அம் மாமுனிவர் தம் எண்ணங்கள் காற்றில் கரைந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சியாகும்.

இம் மடலம் ‘திருக்குறள்’ பற்றிய சிந்தனைத் தொகுப்பாகும் வள்ளுவம் பற்றி அவர் வெவ்வேறு காலங்களில் எழுதியன அனைத்தும் இந்நூலுள் ஒருவழித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளன. இவை ஒவ்வோரதிகாரத்தையும் அவ்வதிகாரத்துள் வரும் ஒன்றிரண்டு குறள்களால் தொடங்கிப் பின்பு பல்வேறு சிந்தனைத் தொடர்களாகக் கிளைவிட்டுப் படர்கின்றன.

இதில் திருவள்ளுவர் காலப் பின்னணியும் அச்சூழலின் எதிரொலியாக அவர் திருக்குறள் யாக்க நேர்ந்த நிலைமையும் விளக்கப் பெற்றுள்ளன.

திருக்குறளை அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலையுடன் - அதாவது இக்கால அரசியல், மன்பதையியல், பொருளியல் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கும் முறையே, பெருமளவில் காணப்படுகிறது.

வள்ளுவத்திற்கு அவர் தரும் ‘புதிய பார்வைகள்’ பல பளிச்சிடுகின்றன. அவர் ஒரு ‘பகுத்தறிவுச் சமயவாதி’யாக வெளிப்படுகிறார். இவரை விவேகானந்தருடன் ஒப்பிடலாம். என்றாலும் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் இத்தகையதொரு ஆன்மிகவாதியை நாம் காண்பதரிது.

தமிழன் தலைநிமிர வேண்டுமெனில், தந்தை பெரியாரின் பணியும் தேவை என உணர்ந்தவர் இவர். சிறந்த மார்க்சிய, லெனினியச் சிந்தனையுடைய முற்போக்காளர் இவரெனில் மிகையாகாது. மக்களுடன் மிக நெருங்கிப் பழகியதால், இவரது பார்வைகள் தெளிந்த, ஒளிவீச்சுக்களாகக் கானப்படுகின்றன.

வள்ளுவத்தை நெஞ்சார விளங்கிக் கொள்ள இந்நூல் பெருந்துணையாகுமென, ஒங்கும் குரலெடுத்து, உரக்கக் கூற விழைகின்றேன். அதற்காக இது ‘தெய்வத்தின் குரல்’ என்று கூறமாட்டேன். திருவள்ளுவர் தாம் ஒரு மனிதராக நின்றே, இந்த மன்பதை சார்ந்த மனிதர்களுக்கு ‘மனிதத்தை’, மனிதனின் மொழியில் எடுத்துரைத்தார். அதை அடிகளார் என்ற ‘மனிதர்’ நம் காலத்தில் பிறந்து, நமக்கு விளக்கியுள்ளார்.

அடிகளாரின் கருத்து நயத்திற்கும் சிந்தனைச் சிறப்புக்கும் பெருமிதப் பெருமைக்கும் எடுத்துக்காட்டுக்கள் ஒரு சிலவற்றை இங்குச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் போற்றிப் பாராட்டும் அதே குரலில், அம் மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் இவர் ‘எதிர்வைக்கும் கருத்துரைகள் ஆலோசனைகள்’ இதிலுள. பின்பாட்டுப் பாடுவது பெருமிதமன்று. அடிகளார் அரசியலில் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ அதிகாரத்திற்குப் பல ‘பரிமாணங்களில்’ ஒர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

அவர் வழிவரும் இன்றைய குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாரும் அதே நெறி முறைகளைப் பின்பற்றி வருவது தமிழர்கள் செய்த தவப்பேறேயாகும். தமிழர்கள், அவர்கள் ‘நாத்திகர்களே’ யாயினும், தங்கள் திருமடங்களைப் போற்ற வேண்டும்; வாழ்த்த வேண்டும்; பாராட்ட வேண்டும்.

பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள், தமிழுணர்வு, தமிழினவுணர்வு, தமிழ்ப் பண்பாட்டுணர்வு உடையவர்களை இனங்கண்டு போற்றி, கைம்மாறு கருதாமலும் செலவு பாராமலும் ‘தமிழர்கள் பனங்கொடுத்து நூல் வாங்கும் பழக்கமற்றவர்களாயிற்றே’ என்று தயங்காமலும் அத்தகையவர்களது நூல்களை வெளியிடுகிறார். பதிப்புலகில் ‘மெய்யப்பன் தமிழாய்வகம்’ அமைத்து ஒரு புரட்சியே செய்து வருகிறார்.

‘மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம் செய்தலன்று; வாழ்தல்’ என்கிறார் அடிகளார் (பக். 23). நாமோ அறம் பேசவும் விளக்கவும் என்றுதான் இன்று நடந்து கொள்கிறோம். துறவியாகிய இவர், ‘இந்த மண்ணுலகிலேயே அமர வாழ்வு வாழலாம்’ என்ற வள்ளுவர் கருத்தை மனம் ஒப்பி ஏற்குமிடங்கள் பலவாகும். ‘தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும் செயல்திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்’ என்பது வள்ளுவர்தம் உள்ளத்தை உணர்ந்து எழுதியதாகும் (29). அறிவறிந்த பெற்றோர்க்கே அறிவறிந்த பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது இவர் காணும் புதியவுரை (30, 31) மிக நுட்பமானது. ஒழுக்கமுடைமைக்கு இவர் மிக விரிந்த பொருள் காண்கிறார் (61). ‘ஒவ்வொரு நொடியிலும் சாகின்றோம் என்று உணர்ந்தால் வாழ்நாள் வீணாகாது’ என்பது இவர் தரும் விளக்கம் (106). ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பும் செய்யும் தொழிலால் வேறுபடாது; உயர்வு தாழ்வெனல் ஆகாது’ என்ற இவரது விளக்கமே, குறளுக்குப் பொருத்தமுடையதாகும். (115)

தாய்மொழி வழிக்கல்வி பற்றி இவர் எழுதியுள்ளவை இன்று, மிகுதியும் எல்லோர்க்கும் அறிவிக்க வேண்டிய செய்தியாகும் (262 - 276). இந்திய தேசிய மொழிகள், தமிழ் உட்பட இந்திய ஆட்சிமொழியின் தகுதி பெற்றால், இந்தியை நாட்டின், பொதுமொழியாக, உறவு மொழியாக ஏற்றுக் கொள்ளலாம்’ என விவாதிக்குமிடம் மிகமிகச் சிறந்த கருத்தாகும். ‘சாதி அடிப்படையில் சலுகைகள்’ என்பது பற்றிய இவரது சிந்தனைகளை அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும். தவம் பற்றிய விளக்கம் (236), தமிழில் வழிபாடு பற்றி இவர் ஆணித்தரமாக எடுத்துரைப்பவை, திருமணத்தில் புத்தகங்களைச் சீர்கொடுக்கலாகாது என்னும் இவர்தம் கருத்து என இந்நூலுள், தேடத்தேடக் கிடைக்கும் அரிய கருத்துக்கள் மிகப் பலவாகும்.

திருக்குறளை வாழ்வியல் நோக்கில் பார்க்க, இந்நூல் மிகச் சிறந்த துணையாகும் என்பதில் ஐயமில்லை.

தமிழண்ணல்

(Upload an image to replace this placeholder.)

முன்னுரை

தவத்திரு பொன்னம்பல அடிகளார்

அருள்நெறித் தந்தை, தமிழ்மாமுனிவர் இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள், மனிதநேய மாமுனிவர், காவி உடுத்திய கார்ல் மார்க்ஸ் எனப் பலவாறு அழைக்கப்பெற்ற நம் குருமகாசந்நிதானம் அவர்கள் எழுதிய பல்வேறு நூல்கள் இன்று தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. திருக்குறளைப் பற்றிய பல்வேறு சிந்தனைகள் இன்று செறிவாகச் சீர்செய்யப்பட்டு, சிறப்புடன் நமது கரங்களில் தவழ்கின்றது. பேச்சே வாழ்க்கை, வாழ்க்கையே பேச்சு என்று உலக உபதேசியாக மட்டும் இராமல் பேசியதை வாழ்வில் நடை முறைப்படுத்திச் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாத செயற்கரிய செயல்களை ஆற்றிய அருந்தவ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

உலக உயிர்கள் நலம்பெற உபதேசித்த அப்பர் அடிகளும், சுவாமி விவேகானந்தர் பெருமானும், வள்ளலார் பெருந்தகையும் எந்த அடைப்புக் குறிகளுக்குள்ளும் தம்மைச் சிறைவைத்துக் கொள்ளவில்லை. மடங்கள் என்ற நிறுவனங்களில் தங்களைச் சிறைவைத்துக் கொள்ளாமல் சுதந்திர வானில் சுடர்விட்டுப் பிரகாசித்தார்கள். பட்டு, பீதாம்பரங்களை அணிந்துகொண்டு பல்லக்கில் பவனிவரும் - காலத்திற்கு ஒவ்வாப் பரம்பரை மரபுகளை மறுதலித்துவிட்டு, தம் கடமைக்குரிய மரபுகளை வழுவாது நிறைவேற்றி, தம் பாதங்கள் நோகப் பாலைவனத்தில் பயணம் செய்து பாமர மனிதனின் வாழ்வை வளப்படுத்தச் சிந்தித்துச் செயலாற்றிய சமய சமுதாய உலகில் முதல் திருமடத்தின் தலைவர் நம் அருள்நெறித் தந்தையேயாவார். சுவாமி விவேகானந்தர் பெருமானும், வள்ளலார் பெருந்தகையும் மடாதிபதிகளாய் இருக்கவில்லை! திருமடத்தின் பொற்கூண்டுக்குள் மரபுகள் எனும் கத்திரிகள், சுதந்திரச் சிறகுகளை வெட்டிய பொழுதும் அதையும் தாண்டி, உலக மக்களின் ஆன்ம விடுதலைக்கு

தி.2 வித்திட்டு, வேதம் புதுமை செய்த மடாலயத் தலைவர் தாம் நம் மகாசந்நிதானம் வளர்ந்து வருகின்ற உலகில் பேச்சும் எழுத்தும் வாழ்க்கை வாணிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது, சமுதாய மாற்றங்களுக்கு விதைக்கின்ற நாற்றங்காலாக அவற்றை மாற்றிக் காட்டினார்கள். உருவமும், கோலமும் அடையாளமும் மட்டும் அல்ல துறவு நெறி எண்ணும் எண்ணதால் நினைக்கும் உள்ளத்தால், வாழும் வாழ்க்கை முறையால் வாழ்வதுதான் உண்மைத் துறவுநெறி என்று துறவிகளிடம் மிக்க கண்டிப்பாக இருந்த திருவள்ளுவப் பெருந்தகையின் குறள்நெறியை, குவலயம் எங்கும் பட்டிதொட்டி எங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டு, குறள்நெறிக்கு இயக்கம் கண்ட முதல் துறவி நம் மகாசந்நிதானமே ஆவார். குறள்நெறி பற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், ஆய்வுச் சிந்தனைகள், வானொலிச் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்களில் மலர்ந்த மலர்கள் தான் இன்று திருவள்ளுவர் சிந்தனை பற்றிய நூல் தொகுப்பாக மலர்ந்து மணம் பரப்புகின்றது.

சீனத்தில் கன்பூஷியஸ், கிரேக்கத்தில் சாக்ரட்டீசு, பிரெஞ்சு தேசத்தில் ரூஸ்ஸோ, சோவியத்தில் மார்க்சியம் புரட்சியை - மாற்றத்தை விளைவித்ததைப் போலத் தமிழ் மண்ணில் தமிழ் நிலத்தில் திருவள்ளுவப் பெருமானின் சிந்தனைகள் ஏன் புரட்சியை, மாற்றத்தைத் தோற்றுவிக்கவில்லை? என்ற நியாயமான வினாவினை மகாசந்நிதானம் எழுப்புகின்றார்கள். சிந்தனையைக் கிளறும் இந்த ஆழமான வினாவிற்கு அற்புதமான விடையையும் தருகின்றார்கள். “தமிழ் நிலத்தை, தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் அருளரசர்களாக இருந்தார்கள். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்று புறநானூறு பாடும். 'உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயினான்’ என்று கம்பன் தசரதனைப் பாடுவான்! முடி ஆட்சிக் காலத்தில் மன்னன் உடம்பாகவும் மக்கள் உடம்பை இயக்குகின்ற உயிராகவும் வாழுகின்ற ஆட்சிமுறை இருந்தது. புறாவிற்காகத் தன் தசையை அறுத்த சிபிச் சக்கரவர்த்தியும், கன்றை இழந்த பசுவிற்காகத் தன் மகனைத் தேர்க் காலில் இட்ட மனுநீதிச் சோழனும், அநீதி இழைக்கப்பட்ட அபலைப் பெண்ணிற்காக உயிர்நீத்த பாண்டியன் நெடுஞ்செழியனும், கொழுகொம்பின்றி வாடிய முல்லைக்குத் தேர் ஈந்த பாரி வள்ளலும், தண்தமிழுக்குத் தலைஈந்த குமணவள்ளலும் போன்ற அருளரசர்கள் ஆண்டமையால் உயிர்க்குலம் துன்பத்தைச் சந்திக்கவில்லை! நலம் செய்யாத அரசுகள் சில வாய்த்தபோதிலும் அவை மனிதகுலத்திற்குத் தீங்கு இழைக்கவில்லை. நலம் செய்யாததோடு தீங்கிழைக்கும் அரசுகளை நோக்கித்தான் புரட்சிகள் தோன்றும். இடையிடையே இருள் கவிந்தாலும் வள்ளுவர் வழித்தோன்றியவர்கள் இலக்கிய மாணவர்களாகவே அமைந்துவிட்டோம்! பரிமேலழகர் காலம் முதல் இன்றைய உரையாசிரியர்கள் வரை பாட்டுக்குப் பொருள்வரையும் உரையாசிரியர்களாக வளர்ந்து விட்டோம். திருக்குறள் நெறிக்கு எழுத்தில் உரை கூறுகின்றோம். வாழும் வாழ்க்கையில் உரைசெய்யத் தவறிவிட்டோம்! திருவள்ளுவரை வழிபாட்டுக்குரிய பொருளாக மாற்றி விட்டோம்!” என்று அருள்நெறித் தந்தை திருக்குறள் வாழ்வியல் நூலாக வெற்றி பெறாமைக்குக் கூறும் விளக்கம் எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்துவற்றுள் எல்லாம் தலை

என்ற திருக்குறள், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளது? என்ற வினாவினை எழுப்புவார்கள்! ஈகையில் வைக்கப்பட்டிருக்கலாம், ஒப்புரவறிதலில் வைக் கப்பட்டிருக்கலாம், விருந்தோம்பலில் கூறி இருக்கலாம். கத்தி எடுத்துக் கொன்றால் மட்டும் கொல்ை என்பதன்று. பெற்ற செல்வத்தைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து, பலரையும் பேணி வளர்க்காமல் சோறிட்டு மருந்து முதலியன வழங்கிப் பலரையும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமே என்பதனை உணர்த்தவே இந்தக் குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கின்றது என்ற அரிய விளக்கம் அருமையானது.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்

என்னும் குறளுக்கு அறிவியல் பார்வையில் தருகின்ற விளக்கம் அற்புதமானது. ஊர் நலம் போற்றுபவனின் விளைநிலம் உரிமையால் தனி மனிதனுடையதாக இருப்பினும் நிலம் பேணப்படுவதில் பொதுவுடைமையாகப் போற்றிப் பேணப்படும். உரிமையாளர் விவசாயம் செய்ய மறந்திருந்தால்கூட ஊரார் அவருக்காக வேளாண்மை செய்து விளைச்சலை வீடு கொண்டுவந்து சேர்ப்பர் என்ற விளக்கம் பாராட்டுக்குரியது.

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை

பொறுத்தானொ(டு) ஊர்ந்தான் இடை

என்பதற்கு, சமய ஞானியாய் இருந்துகொண்டு கூறும் விளக்கம் அடிகள் பெருமான் சமய உலகின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புரட்சித்துறவி என்பதனைப் பறைசாற்றுகின்றது.

மரபு வழிப்பட்ட சமயவாதிகள் வறுமைக்கும் ஏழ்மைக்கும் காரணமான பழியை, பரம்பொருள் மீதும் விதி - ஊழின் மீதும் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் பொழுது, ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்று வாழ்க்கை வழித்தடத்தில் உரை கூறிய வள்ளல் பெருமான்தாம் நம் அடிகள் பெருந்தகை!

அறிவு என்பது செய்திகளின் தொகுப்பு அல்ல! நூல்களின் இருப்பிடம் அல்ல. கற்றதைத் திரும்ப, கூறியது கூறும் கிளிப்பிள்ளை மொழி அல்ல! துன்ப நீக்கத்திற்குரிய மருந்து! நேற்றையத் துன்பத்தை இன்றைய இன்பமாக மாற்ற உதவும் கருவிதாம் அறிவு என்ற விளக்கம் புதுமையானது; உலகம் முழுமைக்கும் பொதுமையானது.

வள்ளுவ மருத்துவர் உயிரைத் தேடுகின்றார். வாழ்பவனை எல்லாம் அவர் உயிர் உள்ளவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. இடுகாட்டில் எரியும் பினங்கள்! நடுவீட்டில் நடை போடும் பிணங்கள் என்று கூறுகின்றார். சுவாசிப்பதாலும் இதயம் துடிப்பதாலும் உடல் இயங்குவதாலும் உயிர் இருப்பதாக ஒத்துக் கொள்வதில்லை. இயந்திரங்களும் தான் இயக்கினால் இயங்குகின்றன. கடிகாரமும் பெண்டுலம் அசைந்தால் ஓடுகின்றது. இயந்திர மனிதனும்தான் இன்று இயங்குகின்றான். இதயம் இல்லா மனிதனும் இயங்குகின்றான். எவன் இதயத்தில் அன்பு துடிக்கின்றதோ அவனே உயிர்த் துடிப்புடைய மனிதன் என்று வகைப்படுத்துவது இதுவரை உலகம் எண்ணிப் பாராத சிந்தனை ஆகும்.

நட்பு, காதல், ஒப்புரவில் இன்றைய இருபதாம் நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் காணுகின்ற வாழ்க்கைப் போக்கோடு எண்ணிப் புதிய சிந்தனையைத் தந்திருப்பது எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்

என்ற குறள் நெறிக்கு, பொது வாழ்வில் - பொது நன்மைக்குப் போராடும் பொழுது மான அவமானம் பார்க்கத் தேவை இல்லை என்ற விளக்கம் சிந்திக்கத்தக்கது. இந்தக் குறளுக்கு வாழும் வாழ்க்கையால் உரை சொன்னவர் பேரறிஞர் அண்ணா என்பதைச் சுட்டிக்காட்டி இருப்பது இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவதாகும்.

வள்ளுவம் கடவுளை நம்புகின்றது. அது ஆனும் அல்ல; பெண்ணும் அல்ல. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள் - கோட்டைகள் இல்லை. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை; அது பேரறிவு! தூய்மையான அறிவு! குணங்களின் திரு உரு! இன்பத்தின் திரு உரு! அன்பின் திரு உரு! அறத்தின் திரு உரு! என்ற வரிகள் உண்மையான, போலித்தனம் இல்லாத சமய உலகை அடையாளம் காட்டுகின்றது.

திருக்குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூல் அன்று! அது சமயச் சார்பற்ற நூல். ஆயினும் மனித குலத்தைச் சிந்தனையில் - அறிவியலில் - வாழ்க்கையில் வழிநடத்தும் நூல். திருக்குறள் கொள்கை சமயமாக உருப்பெறுகின்றது. அறிவின் வழிப்படும் பொழுது அன்பு கருக்கொண்டு அருள் உருப்பெறுகின்றது என்ற வைர வரிகள் சமயம் உறைந்துள்ள இடத்தை நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

முறை செய்து காப்பாற்றும் மன்னவனுக்குச் செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்பும் அறிவுறுத்தும் நல் ஆலோசகர்களும் தேவை என்கிறார். உயிர்க்குலம் துன்புறும் போரை, விரும்பாத போக்கும் எதிர்பாராத தாக்குதலும் எதிரிகளால் ஏற்படலாம். எனவே நல்ல படை பலமும் தேவை என்கிறார்.

ஆண்டவன் வரம் கொடுத்தாலும் பணப் பெட்டியின் மீது பித்துக்கொண்ட பூசாரிப் புரோகிதர்கள் எனும் நந்திகள் சமய வாழ்க்கையைச் சடங்குத் தன்மையுடையதாக மாற்ற வல்லார்க்குச் சாமரம் வீசுகின்றனர்.

‘நியாயம் வழங்க வேண்டிய அரசியல், வாய்ப்புடையார் வாயிலில் காத்துக்கிடக்கும் சேவகத் தொழிலாக மாறிவிட்டது. எங்கு நாட்டின் நீதியியலை முறைப்படுத்தி நிர்வகிக்கின்ற அரசு தோன்றவில்லையோ அங்கு அரசை ஆட்டிப்படைக்கின்ற தனியார் நிதிக் குவியல் தோன்றும்’ என்ற சிந்தனைக்குரிய வாக்கு நினைவிற்கொள்ளத்தக்கது. திருவள்ளுவ நெறிவழி மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கு அக வாழ்விலும் புற வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கக் கூறுகளை ஆழமாகச் சிந்தித்து, அற்புதமாக நமது மகாசந்நிதானம் தமிழ்ச் சமுதாயத்திடம் ஒப்படைத்துள்ளார்கள். இந்தச் சிந்தனைப் பெட்டகத்தைச் செயலாக்க வேண்டியது நமது கடப்பாடு.

பல குழுக்களாக விரவிக்கிடக்கின்ற தமிழ் இனத்தை ஒருமைப்படுத்த திருவள்ளுவப் பெருமான் முயன்றதைப் போல, பல பொழிவுகளாக விரவிக்கிடந்த கருத்துப் பெட்டகங்களைத் தொகுப்பு நூலாக மாற்றும் முயற்சியில் மணிவாசகர் பதிப்பகம் வெற்றி கண்டுள்ளது. பதிப்புக் கலையில் முத்திரை பதித்த வித்தகர் மெய்யப்பன், இதிலும் முத்திரை பதித்துள்ளார்.

இந்நூல் எழுத்துக் கருக்கொண்ட நாள் முதல் இன்றுவரை அல்லும் பகலும் அயராது உழைத்த பெருமை நம் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுருவைச் சாரும். பல வகைகளில் இந்நூல் தொகுக்கும் களத்தில் கடமை ஆற்றிய இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் தெ. முருகசாமி, பேராசிரியர் நா. சுப்பிரமணியம், ஆதீனப் புலவர் க. கதிரேசன், எழுத்துச்செம்மல் பெரியபெருமாள் போன்றவர்களின் பணிகள் அளப்பரியன்; எண்ணி எண்ணிப் போற்றும் கடப்பாட்டுக்குரியன.

இந்நூலுக்கு அரியதொரு அணிந்துரை நல்கிய திரு. தமிழண்ணலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வரிய நூலின் கருத்துக்களை, சிந்தனைப் பெட்டகங்களைச் செயலாக்குவதற்கு மகாசந்நிதானம் திருநாமத்தைச் சிந்தித்துப் பயணம் செய்வோம்!

இந்நூலை வாசிப்பதோடு நிறுத்திவிடாது அருள்நெறித் தந்தையின் சிந்தனைகளைச் செயலாக்குவதே, இந்நூலுக்கு அணிவிக்கின்ற பொன் அணியாகும். அருள் நெறித் தந்தையின் கனவு, நனவாகக் கற்றவழியில் கடமை ஆற்றுவோம்.

உள்ளுறை

1. வாழ்க்கை நலம்

17

2. மண்ணும் விண்ணும்

123

3. முத்து மொழிகள்

185

4. திருவள்ளுவர் காட்டும் அரசியல்

190

5. சிந்தனை மலர்கள்

205

6. தமிழமுது

225

7. அடிகளார் மடல்

251

அச்சும் அமைப்பும்

தமிழவேள் ச. மெய்யப்பன்

மணிவாசகர் பதிப்பகம்

1

வாழ்க்கை நலம்

* * *

1. வான் மழை

கடவுள் எல்லையற்ற பொருள்: ஆற்றலுடைய பொருள்; ஆனால் உருவமற்றது. விஞ்ஞான அடிப்படையில் கூட ஏராளமான ஆற்றல் மிக்க பொருள்கள்-வாழ்க்கைக்குப் பயன்படும் பொருள்கள் உருவமற்றவையாகவே இருக்கின்றன, என்பதை-உலகத்தின் மிகப்பெரும் ஆற்றலாக விளங்கும் மின்சாரத்திற்கே உருவமில்லையென்பதை நினைவிற் கொள்ள வேண்டும். கட்புலனுக்கு வாராத பொருள்களின் உண்மையை அவற்றின் செயற்பாட்டின் மூலமும், பயன்பாட்டின் மூலமும் அறிய முடியும். அது போல இயற்கையில் எல்லாம் விஞ்சிய இயற்கையாக விளங்குவது வான்மழை. கடவுளைப் பற்றிப் பேசிய திருவள்ளுவர் அடுத்து உலக இயக்கத்துக்கும் நுகர் பொருள் படைப்புக்கும் கருவியாக இலங்கும் வான் மழையைச் சிறப்பித்துக் கூறுகிறார்.

வானை இடமாகக் கொண்டு நீர்த்துளிகள் மழையாகப் பொழிவதால் வான் சிறப்பு எனப்பெற்றது. வான் சிறப்பு என்று கூறினாலும் வானின் பயனாக இருக்கின்ற தண்ணிர் என்றே கொள்ள வேண்டும். தண்ணிரின்றி உலக இயக்கமில்லை; உயிர் வாழ்வன இல்லை. அதனால் திருவள்ளுவர் "நீரின்றமையாது உலகு" என்றார்.

உலகின் அனைத்துப் பொருள்களிலும் நீர் கலந்திருக்கிறது. நீர்கலவாத-நீர் இல்லாத இடமில்லை. தண்ணீர் ஊடுருவி நிற்காத பொருளுமில்லை. நம்முடைய மானிட உடம்பில்கூட 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் உயிர்நிலை வாழ்வுக்கு இன்றியமையாதது. அது மட்டுமல்ல. பூமண்டலத்தில் தட்பவெப்ப நிலைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. தண்ணீர் உணவாகவும், பிற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சாதனமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் அழுக்குகளை நீக்கித் தூய்மை செய்வதற்குத் தண்ணிரே பயன்படுகிறது. இந்த உலகம் தண்ணீர் மயம்.

"நீரின்றமையாது உலகு" - என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியதை உற்று நோக்குக. ஒழுக்க நெறி நிற்பதற்கு ஏற்ற உடல் நலம் தேவை. உடல்நலம் பாதுகாப்பதற்குத் தட்ப வெப்பச் சூழ்நிலை தேவை. உடலின் கருவிகளைச் சீராக இயக்க நல்ல சமவிகித உணவு தேவை. இவ்வளவும் அமைந்தால்தான் ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் அமையும். இந்த ஒப்பற்ற சமுதாய அமைப்புக்கு அடிப்படையாக அமைவது மழையேயாம். அதனால் "வானின்று அமையாது ஒழுக்கு" என்றார் திருவள்ளுவர்.

நிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும். அங்ஙணம் நிலம் பசுமை தாங்கி விளங்குவது நிலத்திற்கும் நல்லது; உயிர்க் குலத்திற்கும் நல்லது. நிலமகள் பசுமைக் கோலம் பூண்டு விளங்க வேண்டுமானால் வான் நின்று மழை பொழிய வேண்டும். வான் நின்று மழை பொழியத் தவறி விடுமாயின் நிலத்தில் பசிய புல்லின் தலையைக் கூடக் காணல் அரிது என்கிறது வள்ளுவம். வளர்ந்த புல் அல்ல, முளைத்தெழும்புல் என்பதை "பசும்புல் தலை" என்றார் திருவள்ளுவர். வான் நின்று மழை பொழியத் தவறினால் நிலத்தில் பசும்புல் தலை இல்லை! ஏன்?

நிலத்தின் மேற்பரப்பிலுள்ள மண் நிலத்திற்கு இன்றியமையாதது. இந்த மேற்பரப்பு மண் தோன்றப் பல்லாயிரம் ஆண்டுகளாகின்றன. இந்த மண் காற்றினால் தூசியாகப் பறந்து போய்விடாமல் நிலத்தின் மேலேயே மழைத்துளிகளால் நனைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தின் மேலுள்ள மணற்பரப்பு மண்ணின் வளத்திற்கு உயிர் நிலையாகும். இந்த மண் பரப்பைக் காப்பது நமது கடமை.

காற்றினாலோ, தன் போக்கில் தண்ணிர் வேகமாக - ஓடுவதாலோ, கால் நடைகள் கண்டபடி மேய்வதாலோ, நிலத்தின் மேற்பரப்பு சமமாக இல்லாமல் மிக அதிகமான மேடு பள்ளமாக இருப்பதாலோ இந்த மேல் மண் பரப்பு அழிகிறது. இதை வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் மண்ணிரிப்பு என்பர். இந்த மண்ணரிப்பு வராமல் நிலத்தைப் பாதுகாப்பதற்கு மழை இன்றியமையாதது.

"விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது"

(16)

என்ற திருக்குறளைத் திரும்பத் திரும்ப படித்திடுக!

ஆதலால், தண்ணீரின் இன்றியமையாத் தன்மையை உணர்க! நமது நாட்டு வாழ்வியலில் தண்ணீரின் அருமை பலருக்குத் தெரிவதில்லை. நெறிமுறையின்றித் தாராளமாகச் செலவு செய்பவர்களை "தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள்" என்று சொல்வதுண்டு. ஆனால் உலக வாழ்க்கையில் தண்ணீர் இன்னும் பற்றாக்குறையென்பதைப் மறந்து விடக்கூடாது. ஆதலால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தண்ணீருக்குக் காரணமாக இருக்கிற வான் மழையைப் பெறுவதற்கு முதல் துணையாக இருக்கிற நீர் நிலைகளைப் பேணி, நீரைத் தேக்கி வைக்க வேண்டும். நீர்த்திவலைகள் நிறைந்த மேகத்தை மழையாக மாற்றித் தரும் ஈரப்பதக் காற்றைப் பராமரித்து வரவேண்டும். இதற்கு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும். வீட்டிற்கு ஒருமரம் என்ற செயற்பாடு போதாது. வாழும் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ஒரு மரம் என்ற நியதியை ஏற்றுக்கொண்டு மரம் வளர்க்க வேண்டும். மா மழை வழங்கும் தண்ணீரே இந்த உலகம், இளங்கோவடிகளும்

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று வாழ்த்தினார்.

2. நீத்தார் பெருமை

மனம், மொழி, மெய்களால் தீண்ட முடியாத கடவுளுக்கு முதலில் கடவுள் வாழ்த்து! அடுத்து, அந்த ஒப்பற்ற இறைவனை நினைவிற் கொண்டுவரும் வான் மழை; வான்மழையின் உண்மை உய்த்துணர்வாருக்கே புலப்படும்; அங்ஙனம் உணரமாட்டாதவர்களுக்கு உரைகளால் உணர்த்தும் பெரியோர் தேவை! யார் நம்மைத் தமது உரைகளால் உயர் நெறியில் உய்த்துச் செலுத்த இயலும்! அத்தகு பெரியோரை இனங்காட்டும் அதிகாரமே, நீத்தார் பெருமை அதிகாரம்

பற்றுக்களினின்று முற்றாக விடுதலை பெற்றவர்கள் நீத்தார் ஆவர். ஆம்! தற்சார்பான பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவர்கள்! மானுட உலகம் இன்று துன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து கிடப்பதற்குக் காரணம் ஆசைகளே யாம். இயல்பாக உயிரினம்-குறிப்பாக மனித இனம் தற்சார்பு நிலையிலே மையம் கொள்ளும். அதன் காரணமாகவே வேலிகள், சட்டங்கள், அரசாட்சிகள், சிறைக் கூடங்கள் மானுட வாழ்க்கையில் இடம் பெறலாயின.

இன்று மனிதன் களிப்பை-அமைதியைத் துய்ப்பதில் வெற்றி கண்டானில்லை. மாறாக அமைதியின்மை, துக்கம் இவைகளையே அனுபவிக்கிறான். இந்த அவலம் ஏன்? உலகந் தழீஇய ஒட்பத்திற்கே விரிவு உண்டு, ஊக்கம் உண்டு. இந்த ஒட்பம்-அறிவு தனக்குரிய இயலாமையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை; அலட்டிக் கொள்வதில்லை.

மானிட உலகத்தின் தேவைகள் நிறைவேறாமல் நமது தேவை மட்டுமே நிறைவேறும்பொழுதுதான் தீமைகள் கால் கொள்கின்றன. கடைசியில் இவன் தேவையும் நிறைவேறுவதில்லை; ஒரோவழி நிறைவேறினாலும் துய்க்க இயல்வதில்லை. ஒரே ஒரு மாமிசத்துண்டு. இவற்றிற்குக் காத்திருக்கும் பருந்துகளின் எண்ணிக்கையோ மிகுதி. என்ன ஆகும்?

உலகம் இல்லாமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே சிறந்த கொள்கை-கோட்பாடு. உல்கத்தை-இந்த உலகத்தின் இயக்க அமைதிகளை அறிந்து கொண்டு இந்த உலக அமைதிகளுக்கு ஏற்றவாறு-இசைந்தவாறு ஒழுகும் உரம் நம்மிடத்தில்லை.

"சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு"

(27)

என்பது திருக்குறள்.

மானுட உடலமைப்பில் பொறிகள் ஐந்து. இவை முறையே மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவாம். இவை அறிவுக் கருவிகள்; நுகர்தலுக்கு-அனுபவித்தலுக்கு உரிய கருவிகள். இவற்றை அறிவுக் கருவிகள் என்று கூறினாலும் இவை முழுமையான அறிவுக்கருவிகள் அல்ல. இவற்றை அறிவு வாயில்கள்-என்று கூறுவதே பொருந்தும். இந்தப் பொறிகளின் இயக்கத்தை அறிவார்ந்தனவாக ஆக்குபவை புலன்களேயாகும். இவை அகநிலைக் கருவிகள். புலன்களின் தகுதிப்பாடே, பொறிகளின் தகுதிப்பாட்டிற்கு அடிப்படை.

இன்று பெரும்பாலும் புலன்கள் செயலற்றுப்போய்ப் பொறிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. எதுபோல வெனில், எல்லா அதிகாரங்களையும் தமக்கே உடையராகப் பெற்றிருக்கும் மக்கள்-வாக்காளர்கள் அரசியல்வாதிக்கு அடிமைப்பட்டுக் கிடத்தல் போல! புலன்களை நெறிப் படுத்தும் இயல்பு-புலன்களின் நுகர்வுக்கு அனுபவத்திற்குரிய பொருள்களைப் பொறுத்தது.

புலன்களின் அனுபவத்திற்குரிய சுவை-ஒளி-ஊறுஒசை-நாற்றம் ஆகியவற்றின் இயல்புணர்ந்தோர் அவற்றை முறைப்படுத்திக் கொள்வன கொள்வர். இவர் உயர் அறிவினர்! இவைகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பூத பெளதிகம் அறிந்து-அவற்றின் இயக்கத்துக்கு மாறுபடாமலும், முற்றாக உடன்படாமலும் தக்காங்கு ஒத்திசைந்து வாழ்தலே வாழ்க்கை! சிறப்புடைய வாழ்க்கை! இத்தகை யாரே நீத்தார்!

புலன்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் பொறிகள் மிகவும் ஒழுங்கும், ஒழுக்கமும் உடையனவாக அமையும். புலன்களுக்கு அழுக்கினைச் சேர்க்கும் பொறிகளைப் பக்குவப்படுத்த வேண்டும்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்"

(6)

"அவித்தல்" என்றால் அழித்தல்-அடக்குதல் என்று பொருள் கொள்ளுதல் முறையன்று. அவித்தல் - பக்குவப்படுத்துதல். உண்ண முடியாத கிழங்கு முதலியவைகளை அவித்துப் பக்குவப்படுத்துதலைப்போல என்று அறிக. பொறிகள் தற்சார்பாக இயங்காமல் ஊர் உலகு என்று பொதுமையில் இயங்கினால் தூய்மையுறும்; பக்குவம் அடையும்; புலன்களும் தூய்மையாக இருக்கும்.

பற்றற்ற நிலை என்ற ஒரு சூன்ய நிலை-வாழ்க்கையில் இல்லை. பற்று இல்லாமல் இருக்கமுடியாது. பற்று எதன்மீது வைக்கிறோம் என்பதைப் பொருத்தே சீலம் அமைகிறது; நீத்தாருக்குரிய இயல்பு வந்தமைகிறது. தன்மீதும் தனக்குரிய தேவைகள் மீதும் பற்று வைப்பதற்குப் பதில், மற்றவர்களின் இன்பங்களை நாடும்பொழுது நீத்தார் தன்மை வந்தமைகிறது.

இத்தகு நீத்தார்க்குத் தற்சார்பின்மையால் விருப்பு வெறுப்புக்கள் இல்லை. விருப்பு வெறுப்பு இன்மையால் சார்பு இல்லை. சார்பு இன்மையால் சமநிலை! சார்பு இல்லையேல் நன்மையும் தீமையும் இல்லை. இத்தகையோரே அறம் இன்னதென நமக்கு உணர்த்தவும் முடியும். இத்தகு நீத்தார் பலர் இன்று தேவை.

3. அறன் வலியுறுத்தல்

இந்த உலக இயக்கம் குறிக்கோளுடையது. குறிக்கோள் இலாது இயங்கும் எதுவும் இல்லை. மானுட வாழ்க்கையும் குறிக்கோளுடையது. மானுடத்தின் குறிக்கோள் என்ன? வாழும் உயிரினம் அனைத்திற்கும் தலைமை தாங்குவது மானிடமே! மானுட வாழ்வைச் சார்ந்துதான் மற்ற உயிர்கள் வளர்கின்றன; வாழ்கின்றன. நிலம் முதலிய ஐம்பூதங்களும் கூட மானுடத்தின் மூலமே பயன்பாடுறுகின்றன. ஆதலால் மானுட வாழ்க்கை அருமையானது. மிக மிக உயர் குறிக்கோளுடையது.

மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம், செய்தலன்று; வாழ்தல். அறமே வாழ்வு; வாழ்வே அறம்! மனம், புத்தி சித்தம் ஆகிய அகநிலை உறுப்புக்களை அன்பில் தோயச் செய்து யார் மாட்டும் அன்புடையராக வாழ்தல் அறம். அறத்திற்குப் பகை, பகையேயாம். அதனாலன்றோ இறைவன் திருமேனியில் மாறுபட்டவைகள் பகை நீங்கி அணிகளாகத் திகழ்கின்றன. அறத்தில் சிறந்தது மனத்தில் மாசின்றி இருத்தல். மனத்திற்கு மாசு இயற்கையன்று. மனத்திற்கு மாசு கொள்முதலேயாம்.

நமது பொறிகள்-மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தகவலைச் சேகரிக்கும் கருவிகள்-ஆன்மாவிற்குத் தகவலைத் தரும் கருவிகள். இந்தக் கருவிகள் அறியும் தன்மையுடையன. ஆனால், அறிவுடையன அல்ல. இந்தப் பொறிகள் ஆன்மாவின் அறிவோடும் புலன்களோடும் தொடர்பு கொண்டு இயங்கின் மனத்திற்குத் தீங்கு வாரா! மாசும் வாரா! .

ஆனால் பொறிகள் தன்னிச்சைப் போக்குடையன; விரைவுத் தன்மையுடையன. எல்லா இடங்களுக்கும் வரையளவுமின்றி, நெறிமுறையின்றிச் செல்லும் தன்மையன. இந்தப் பொறிகள் வாயிலாகவே மனத்திற்கு மாசு வந்தடைகிறது. ஆதலால் பொறிகள் மீது நமக்கு மேலாண்மை தனியரசாணை செலுத்த உறுதிவேண்டும். ஆக மனத்துக்கண் மாசிலராக வாழ்தல் அற வாழ்க்கை.

எந்த ஒரு நன்மைக்கும் களம் துரய்மையாக வேண்டும். அதுபோல வாழ்க்கையெனும் களத்தில் ஆடச் செய்ய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய களைகள் அகற்றப்படுதல் வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியன அன்பின்மையால் வருவன. மற்றவர் வாழ்தலில் நமக்கு ஆர்வமும், மன நிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளப் பழகினாலேயே இத் தீமைகள் அகலும். இதற்குப் பெயர்தான் அன்பு.

அறத்தின் பெயர் இன்பம். அறத்தின் பயன் அமைதி, அறத்தின் பயன் ஒருமைப்பாடு. அறத்தின் பயன் எல்லாரும் வாழ்தல்-நன்றாக வாழ்தல், இதுவே நியதி.

அறத்தின் பயன் செல்வம், சிவிகையூர்தல் என்று சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானவை. இக்கருத்துக்கள் வல்லாண்மையில் வாழ்வாருக்குத் தாளம் போடும் கருத்துக்கள்!

கடவுள், மழை, நீத்தார் ஆகியன பயன்பாடுடையன என்று நிரூபணம் செய்வதே அறம்தான். அறநெறி நிற்போம். அறநெறிச் சிந்தனையில் தோய்வோம். அறநெறி சார்ந்த அறிவினைப் பெறுவோம். அறநெறி சான்ற மனத்தினையே பெற்றுயர்வோம்! அதனாலேயே அறன் வலியுறுத்தப்படுகிறது.

4. வாழ்வாங்கு வாழ்வோம்!

வாழ்தல், அறிவியல் சார்ந்த ஒரு கலை, உளவியல், சமூகவியல், தாவரவியல், வேளாண்மையியல், கால்நடையியல், கட்டுமானவியல், தொழிலியல், பொருளியல், நிர்வாகவியல் ஆகிய அறிவியல் துறைகள் அனைத்தும் சங்கமித்த தனிச்சிறப்புடைய வாழ்க்கையே வாழ்க்கை! மானிட வாழ்வியல், விலங்குத் தன்மையுடையதல்ல.

மனிதன், மிருகமும் அல்லன்; மனிதனும் அல்ல. விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையை அடையக்கூடிய படைப்பு! மனிதனாகிய பிறகு, அதி மானுடத் தன்மை அதாவது இறைமைத் தன்மை அடைய வேண்டிய படைப்பு! இந்தப் பரிணாம வளர்ச்சி, முறையாக நிகழ்ந்து நிறைவெய்துதலே வாழ்க்கையின் குறிக்கோள்; பயன்! இத்தகு மாற்றங்களும் வளர்ச்சியும் நிகழாத வாழ்க்கை, வாழ்க்கையாகாது. "வாழ்கின்றாய்! வாழாத நெஞ்சமே!” என்பது திருவாசகம்.

வாழ்க்கை என்பது தற்செயலாக ஏற்பட்டதல்ல. வாழ்வியல் திட்டமிட்டதே! அற்புதமான ஒழுங்கமைவுகளுடன் அமைந்ததேயாம். ஆதலால் சிறந்த முறையில் வாழ

தி. 3. முயற்சி செய்வதும் ஒருவகை அறிவியல் முயற்சியேயாகும். ஏன்? சீராக வாழ்ந்து-வாழ்ந்த காலத்திற்கும் தலைமுறைக்கும் ஏற்றம் தரும் வகையில் வாழ்ந்து முடித்தால், அஃது ஒர் அறிவியற்சாதனை என்று கூடப் பாராட்டலாம்.

வாழ்க்கையென்பது பல்வேறு பொறிகளைக் கொண்ட, புலன்களால் அமைந்த உடலைக் கருவியாக்கிக் கொண்டு வாழப்பெறுகிறது; இயக்கப் பெறுகிறது. உடம்பின் இயக்க ஆற்றலின் பாதுகாப்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இந்த உடம்பின் அனைத்துப் பொறிகளையும் புலன்களையும் சிறப்புற இயக்கிப் பயன் கொள்வதன் மூலம் வாழ்க்கை பயனுடையதாகிறது; முழுமையாகிறது.

இத்தகைய முழு வாழ்க்கைக்குத் தொடக்கம் இல் வாழ்க்கை, காதல் ஒருத்தியுடன் கூடி வாழ்க்கையை நடத்துதல் என்பது, ஒரு கூட்டு வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் மூலம் தென்புலத்தார் பேணப்படுகின்றனர்; தெய்வம் பூசிக்கப் பெறுகிறது; விருந்தோம்பும் வேளாண்மை நிகழ்கிறது; துறந்தவர்களுக்குத் துய்ப்பனவும் உய்ப்பனவும் வழங்கப் பெறுகின்றன.

துய்த்து மகிழும் வாய்ப்பிழந்தார்க்கெல்லாம் துய்ப்பன வழங்கப் பெறுகின்றன. இரந்தாருக்கும், இறந்தாருக்கும் ஏற்ப உதவிகள் செய்யப் பெறுகின்றன. தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையாக சமூக வாழ்க்கையாக, நாட்டு வாழ்க்கையாக வளர்கிறது! இதுவே வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி! இங்ஙனம் வாழ்தலே வாழ்க்கை!

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்”

(50)

வானத்திற்கு என்று ஒரு தனிவாழ்க்கை முறை இல்லை. இந்த வையகத்தில் வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்துபவர்களை நோக்கி வானகம் வந்துவிடும். வானத்தை இந்த மண்ணிலேயே காணலாம். இங்கேயே - இந்த மண்ணுலகிலேயே அமர வாழ்வு வாழலாம். வாழ்வாங்கு வாழ்தல் மூலம் மட்டுமே அமரவாழ்வு கிட்டும்! அறிவியல் சார்ந்த வாழ்க்கை வாழ்வோமாக! அறிவறிந்த ஆழ்வினை இயற்றுவோமாக! பொருள்களைச் செய்து குவித்து இன்பத்துடன் வாழ்வோமாக!

5. வாழ்க்கைத் துணை நலம்

வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்த நெடிய பயணத்தைத் தனியே நடந்து இனிதே முடித்தல் இயலாது. வழிநடைப் பயணத்துக்குத் துணை தேவை. ஆன்ம முதிர்ச்சியுடையவர்கள் கடவுளை மட்டுமே துணையாகக் கொள்வர். கடவுளை வழித்துணையாகக் கொள்ளுதலுக்கு, துறவியல் வாழ்க்கை-இல்லறவியல் வாழ்க்கை என்ற வேறுபாடு இல்லை. இவ்விரு வகையினருமே கடவுளை வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு பயன் பெற்றுள்ளனர்.

சுந்தரர் இல்லறத்தில் நின்று வளர்ந்தவர். ஆயினும் அவர் இறைவனையே துணையாகப்பற்றியவர். இறைவன்-சுந்தரர் தொடர்பு தோழமை வகையது. இந்த நெறி எல்லோருக்கும் இயன்று வராது.

பொதுவாக மானிட வாழ்வியலில் தேக்கம் அதிகம்; நாள்தோறும் வளர்ச்சி காண்பதரிது. நுகர்தலில் கூட ஒன்றிலேயே கழித்து மையமிட்டு நின்றுவிடுவார்கள் பலர். அதனினும் வளர்ந்து நுகர்தல் பாங்கும் இன்புறு திறனும் அடைவதில்லை ஏன்? நிறை நலமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று உணர்வதில்லை. "கண்டதே காட்சி! கொண்டதே கோலம்" என்ற பழமொழி இந்தச் சூழ்நிலையில் தான் பிறந்தது.

வள்ளுவம்; மனிதனின் நெடிய வாழ்க்கைப் பயணத்திற்குத் துணையாக - இல்லை, துணை நலமாகவே பெண்ணைக் கூறுகிறது. சிலர் பெண்ணைப் "பேய்" என்றும் "காதல், ஆண்டவனின் சாபம்” என்றும் கூறுவர். இல்லற வாழ்க்கையையும் துன்பம் நிறைந்த கடல் என்றும் கூறுவர். இயற்கைக்கு மாறான இந்தக் கருத்துக்களை வள்ளுவம் ஏற்பதில்லை; இந்திய தத்துவ ஞானமும் ஏற்பதில்லை. மனையறத்தைத் துறத்தல் என்ற கொள்கை, பெண்ணின்பால் ஏற்பட்ட வெறுப்பால் தோன்றியதன்று. தமது ஆற்றலை ஒரு சிறு எல்லைக்குள் முடக்கிக் கொள்ளாமல் பெரிய எல்லையில் வாழ்ந்திட எடுத்துக் கொண்ட உத்தி. ஒரு சிலர் மனையறத்தில் வாழ்ந்தாலும் சமுதாய வாழ்வின் எல்லை வரையிலும் சென்று பணிகள் செய்துள்ளனர். இஃது அவரவர்களின் மனப்பாங்கினையும் வளர்ச்சிப் போக்கினையும் ஒட்டியது.

ஆனால், வாய்க்கும் காதலி, வாழ்க்கைத் துணை நலமாக அமைய வேண்டுமே! ஒவ்வொரு பெரிய மனிதனின் வாழ்க்கையின் பின்னாலும் அந்தப் பெரிய மனிதனை உருவாக்கிய பெண் இருப்பாள் என்பது ஒர் அனுபவவாக்கு. மாமுனிவர் மார்க்சுக்கு வாய்த்த மனைவி ஜென்னியைப் போல உலகில் வாழ்க்கைத் துணை வாய்க்கப் பெற்றவர்கள் எண்ணிக்கையில் பலர் அல்லர். இது மறுக்கமுடியாத உண்மை.

ஒருவர் வாழ்க்கையில் - ஒருவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, தோழமையாக இருந்து உதவி செய்வது எளிதன்று. அதற்கு நிறையப் பயிற்சி தேவை; பொறுத்தாற்றும் பண்பு தேவை. குறை, குணங்களைக் கடந்து அன்பு பாராட்டல் வேண்டும். அது உயிர்த்துடிப்புள்ளதாக அதாவது வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் உந்து சக்தியை வழங்குவதாக அமைய வேண்டும்.

ஒரு பெண் தன் துணைவருக்கு-பரிவிலும் உணவளிப்பதிலும் தாயாகவும், தக்க ஆலோசனைகள் கூறி வழி நடத்துவதில் தமக்கையாகவும், குறை குணங்களைக் கடந்த நிலையில் அன்பு பாராட்டி எடுக்கும் காரியம் யாவினும் கை கொடுத்து நிற்பதில் தோழியாகவும், உடல் நலம் கருதிப் பேணுவதில் மருத்துவச்சியாகவும் காதலின்பத்தை அளிப்பதில் மனைவியாகவும், இடையூறு உண்டான நேரத்தில் தக்க நெறிமுறைகள் காட்டுவதில் அமைச்சராகவும் விளங்க வேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். இந்தக் கருத்தை வள்ளுவம்,

"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

(56)

என்று மொழிகிறது.

ஒரு பெண்ணுக்குரிய முதற்கடமை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல்! ஆம்; கணவனுக்குப் பின் வாழ்க்கைத் துணையல்ல. வாழ்க்கைத் துணை நலமே முதலிடம் வகிக்கிறது. அதாவது பொறுப்புக்களை எடுத்து நிறைவேற்றுவோர் நலமுடன் இருந்தால்தான் தாம் துணை நிற்பாருக்கு உரிய நலன்களைச் செய்யமுடியும், அது மட்டுமல்ல. கற்பு, அன்பு, ஒழுக்கம் ஆகியன உடற் சார்புடையன மட்டுமல்ல; உயிர்ச் சார்புடைய பண்புகள். இவற்றில் தடுமாற்றம் வருதல் கூடாது. அதனால் ‘தற்காத்து' என்றது குறள்.

அடுத்து ‘தற்கொண்டாற் பேணுதல்’ ஆதலால் தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும் செயல் திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்.

அடுத்து வாழ்க்கையின் குறிக்கோள் புகழ் பெறுதலாகும். புகழ் வேறு விளம்பரம் வேறு. விளம்பரம் வேண்டுவதன்று; புகழே வேண்டற்பாலது. அஃதாவது மற்றவர்கள் பாராட்டும் சொற்களைப் பெறுவது. பெற்ற சொற்களைப் பாதுகாப்பது; மற்றவர்கள் பழி தூற்றாமல் பார்த்துக் கொள்வது: குடும்பத்தின் செய்திகள் அயலறறியா வண்ணம் பாதுகாப்பது, கண்ணகி ‘பீடன்று’ என்று கூறிய நெறியைப் போற்றி வாழ்வது ஆகும். இத்தகு நலன்களை யுடைய வாழ்க்கைத்துணை நலம் அமையின் இன்புற்று வாழலாம்.

இத்தகு நலன்கள் பெண்ணினித்திற்கு அமைய வேண்டுமாயின் அவர்கள் கல்வி நலத்தில் சிறந்து விளங்க வேண்டும். உறுதியும் உத்தரவாதமும் உடைய வாழ்நிலை அவர்களுக்கு வழங்கப்பெறுதல் வேண்டும்.

6. அறிவறிந்த மக்கட்பேறு

மங்கலமாகியது இல்லற வாழ்க்கை. சிறந்த இல்லற வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு. இதனைத் திருக்குறள்,

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற"

(61)

என்று எடுத்துக்கூறி விளக்குகிறது. இந்த உலகில் பல்வேறு பேறுகள் உள்ளன. அவற்றுள் சில பொன், பொருள், போகம், புகழ், மக்கட்பேறு முதலியன. இவை யாவற்றுள்ளும் சிறந்தது மக்கட்பேறு. ஏன்? முன்னே சொன்ன பொன், பொருள், போகம், புகழ் ஆகியவற்றுள் ஒன்றைப் பெற்றாலும் சரி. பலவற்றைப் பெற்றாலும் சரி வாழ்க்கையும் முழுமை ஆகாது; அதோடு மானுட இயக்கத்தின் தொடர்ச்சிக்கு அரண் செய்வதாகவும் ஆகாது.

ஆதலால் இல்வாழ்வார் பெறக்கூடிய பேறுகளுள் தலையாயது மக்கட்பேறேயாம். மானுட இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் துணை செய்வது மக்கட் பேறே. அதோடு தத்துவ இயல்வழி ஒரு உயிர் மானுடப் பிறப்பு எய்தினால்தான் அமரநிலை எய்துகிறது. அதனாலேயே "பெறுமவற்றுள் யாமறிவதில்லை" என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறார் திருவள்ளுவர்.

"அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற" என்ற பகுதி, கவனமாகப் படிக்க வேண்டிய பகுதி. இந்தப் பகுதிக்கு உரை ஆசிரியர்கள் எழுதியுள்ள உரைகள் அறிவுக்கு இசைந்தனவாக இல்லை. ‘அறிவறிந்த’ என்றதனால் இறந்த காலமாகிறது. எப்படி ஒரு மகன் அல்லது மகள் பிறக்கும் பொழுதே அறிவு அறிந்த குழந்தையாக இருக்க இயலும்? முடியும்?

அப்படியானால் 'அறிவறிந்த' என்ற சொல்லை யாருக்கு அடையாகச் சேர்ப்பது? அறிவறிந்த பெற்றோர்களா? அறிவறிந்த மக்களா? பெற்றோர்களுக்குத்தான் 'அறிவறிந்த’ என்ற சொல்லை அடையாக்க வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களுக்கு அறிவறிந்த மக்கள் கிடைப்பார்கள். ஆம்! காதல் தூய்மையானது; அறிவார்ந்தது; உறவின் வழியது; தன்னல மறுப்புப் பண்பின் வழியது. காதல் மனை யறம் ஒரு நோன்பு. இந்த நோன்பினை அறிவார்ந்த நிலையில் இயற்றுநர் காதல் வாழ்வில் சிறக்கின்றனர். இத்தகையோரே நன்மக்களைப் பெறுகின்றனர். பெற்ற வண்ணம் வளர்த்து, உயர் நிலைக்குக் கொண்டு வருகின்றனர்.

ஆதலால் நன்மக்களை விரும்பும் பெற்றோர் "அறிவறிந்தவர்களாக” இருத்தல் வேண்டும்; வீட்டைப் பல்கலைக் கழகமாக்குபவர்களாய் இருத்தல் வேண்டும். கருவுற்ற காலம் முதல் பிறந்து வளர்ந்து தன் நிலை எய்தும் காலம் வரையில் பொறுப்போடு வளர்ப்பவர்கள் அறிந்த பெற்றோர்களாவர்.

அண்ணல் காந்தியடிகள், "சிறப்புப் பொருந்திய வீட்டுக்கு இணையான பல்கலைக்கழகம் இல்லை" என்று கூறியதை எண்ணுக. நல்ல பெற்றோர்களே குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியர்கள். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆதம்ஸ், தன்னுடைய கடவுள் பக்தி-அறநெறிப் பற்று அனைத்துக்கும் தன்னுடைய தாயே காரணம், என்று கூறுகின்றார். மக்களாவதும் - மாக்களாவதும் பெற்றோர்களின் பொறுப் பேயாம்.

ஆதலால், மனையறம் வாழ்வோர்-மகப்பேற்றுக்குரிய வாழ்வு வாழ்வோர் வாழ்வாங்கு வாழ வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களே அறிவறிந்த மக்களைத் தருகின்றனர் என்பதே வள்ளுவம்.

7. வளரும் தலைமுறை

வரலாற்று ஆசிரியன் சென்ற காலத் தலைமுறைகளை விவரித்துப் பேசுவான். ஆனால் இலக்கியப் படைப்பாளன் எதிர்வரும் தலைமுறையினரைப் பற்றிச் சிந்திப்பான்; எழுதுவான். எப்போதும் அறிஞர்களுடைய கவலை அடுத்த தலைமுறையைப் பற்றியதாகவே அமையும். திருக்குறள் ஒரு முழுதுறழ் இலக்கியம்; அறநூல்; வாழ்க்கை நூல். ஆதலால் திருக்குறள் எதிர்காலத் தலைமுறையினரைப் பற்றிப் பேசுவது வியப்பல்ல. அதுமட்டுமல்ல இன்று வாழ்பவர்களுக்கு எதிர் காலத்தைச் சிறப்புற அமையச் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்துகிறது.

இன்று வாழ்வோரின் கடமை, இவர்கள் வாழ்ந்து முடிப்பது மட்டுமல்ல; அடுத்து வரும் தலைமுறையினர் சிறப்போடு வாழ்தலுக்குரிய சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பது திருக்குறளின் கருத்து; முடிவும்கூட மனையற வாழ்க்கையின் மாண்பு, காதல் சிறப்பில் இல்லை; சுவைமிக்க உணவில் இல்லை; செய்து குவித்த பொருளில் இல்லை. வேறு எதில்தான் இருக்கிறது மனையறத்தின் சிறப்பு? ஆம்! அறிவறிந்த மக்களைப் பெறுவதில்தான், மனையறத்தின் மாண்பு பொருந்தியிருக்கிறது.

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற"

(61)

என்பது திருக்குறள். 'அறிவறிந்த’ என்ற சொல்லை மக்களுடன் சேர்த்து அறிவறிந்த மக்கள் என்பார்கள் உரையாசிரியர்கள். அறிவு, கல்வி கேள்விகளாலும், வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையிலும் தோன்றுவது. ஆதலால் மக்கள் பிறந்து வளர்ந்த பிறகுதான் அறிவறிந்த மக்களாதல் இயலும். ஆதலால் அறிவறிந்த என்ற சொல்லை மக்களின் பெற்றோர்கள்பால் சேர்த்துக் கூறுவதே பொருத்தம். ஆம்! பெற்றோர்கள் காதல் மனையற வாழ்க்கையை அறிவறிந்த நிலையில் நடத்துதல் வேண்டும். காமக்களியாட்டமாக ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அறிவார்ந்த நிலையில் அன்பும் அறமும் கலந்த; ஊனை, உயிரை, உணர்வினைக் கடந்த நிலையில் கூடுதல் நிகழுமாயின் அறிவறிந்த மக்கள் தோன்றுவர். பிறப்பில் கவனமாக இருந்தால் மட்டும் போதாது. அதைப் போலவே வளர்ப்பிலும் கவனமாக இருத்தல் வேண்டும். பொதுவாக நமது நாட்டில் கிராமப் புறங்களில் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை; அவர்களாகவே வளர்கிறார்கள். அதனால்தான் நமது சமுதாயத்தில் தரம் குறைந்திருக்கிறது. குடும்பம் மனையறத்தில் சிறந்து விளங்கினால் அக்குடும்பம் மனிதகுல வரலாற்றிலேயே இடம்பெறும். ஒருவர் தமது முன்னோரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் வளர்ச்சியின்மையைக் குறிப்பதாகும். மாறாகத் தனக்குத்தானே அறிமுகமாக விளங்கி வாழ்பவர்கள், தமது குடும்பத்திற்கும் விளக்கம் தருகிறார்கள். இவரைப் பெறுவதற்கு இவருடைய தந்தையும், தாயும் என்ன தவம் செய்தனரோ என்று வியக்கும் அளவுக்கு வாழக்கூடிய தகுதி, திறன்களுடன் மகவை வளர்க்க வேண்டும். "நல்ல தாய், நல்ல தந்தை” என்று பெயர் விளங்க வாழ்தலே சிறப்புற அமைந்த மனையற வாழ்க்கை.

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லென்னுஞ் சொல்"

(70)

8. அன்பு ஈனும் ஆர்வம்

மானிட வாழ்க்கை நலமாக, இன்பமாக இயங்க அன்பு தேவை. கடவுள் மனிதனுக்கு என்று தனியே அளித்தது அன்பு ஒன்றுதான். அன்பு, உள்ளங்களை இணைக்கும் - ஆற்றலுடையது. "ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். இந்த அன்பு வளருந்தன்மையுடையது. அன்பின் உணர்ச்சிக்கு எல்லை கிடையாது; நிபந்தனை கிடையாது.

இந்த அன்பு தம்முடன் பழகுவோரின் இயல்புகளை அறிவது, அவர்தம் இயல்புக்கு ஏற்றவாறு தம் பழக்கங்களை, பழகும் நெறிமுறைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்காக! தம்முடன் பழகுவோரின் விருப்பங்களை அறிந்து அவர்தம் பாங்குக்கு ஒத்துப் பழகினால்தான் அன்பு வளரும்; உறவு வளரும். "ஒத்தறிவான்' என்று திருக்குறள் கூறும். மற்றவர் தம்முடன் ஒத்துப்போக வேண்டும் என்றே பலர் விரும்புவர். இவர்களின் ஆன்மாவில் ஆன்மாவின் உயிர்ப்பாகிய அன்பு இல்லை.

ஆன்மா எப்போதும் மற்றவர்களை நோக்கியே விரியும். உடல் எப்போதும் சுயநலத்தையே நாடும். ஆன்மாவின் ஆதிக்கத்தில் உடல் இயங்கினால் அன்பு, உறவு, தியாகம் எல்லாம் இருக்கும். அப்படி இல்லாது உடலின் ஆதிக்கத்தில் ஆன்மா அடங்கிக் கிடந்தால் தன்னலம் மிக்கே விளங்கும்.

தூய அன்பு விரிவடையும், தம்முடன் பழகுவோரின் இயல்பறிந்து பங்கறிந்து பழகுந்திறனில் வளரும், அவர் தம் தேவையறிந்து உதவும், அவர்தம் வாழ்வுக்காகத் தன் வாழ்வு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கருதும். இந்த நிலை அன்புமுதிர்ந்து ஆர்வம் என்ற நிலைக்கு உயர்ந்த நிலை.

"அன்பினை எடுத்துக் காட்ட

அளவிலா ஆர்வம் பொங்கி"

என்பது சேக்கிழார் திருவாக்கு.

ஆர்வம் என்பது முறுகி வளர்வது. அன்பு, ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வளர்க்கப்பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பு நிலைக்கு இணையான வாழ்க்கை நிலை-உறவு இந்த உலகிலும் இல்லை; வேறு எந்த உலகிலும் இல்லை.

நட்புக்கு மறுபெயர் தோழமை. நட்பு இதயத் துய்மையுடையது. நட்பு எல்லையற்றது; அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் "சிறப்பு” என்று சிறப்பித்துக் கூறுகிறார். "சிறப்பு” என்ற சொல் உயர்வற உயர்ந்த உயர் நலத்தைக் குறிப்பதாகும். அதுவும் எத்தகைய சிறப்பு? எளிதில் நாடிப் பெறுதலுக்கு இயலாத சிறப்பு!

"அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு”

(74)

இத்திருக்குறள் உளவியல் வாய்ப்பாட்டில் அமைந்தது. உளதாகிய அன்பு வளரும். அன்பு வளர்ந்தால் ஆர்வம் என்ற உள்நெகிழ்வைத் தரும். ஆர்வம் தன்னை மறக்கச் செய்யும். பழகுவோரின் இயல்பறிந்து அவர் தம்முடன் விருப்பத்துடன் பழகி நட்பினை அடைய வளர்த்து உயர்த்தும்.

அன்புக்கும் நட்புக்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் Aptitude என்பர். தமிழிலக்கியம், பாங்கு என்று கூறும்.

9. அன்பு செய்க!

இறைவன் உயிர்க்குலத்திற்குக் கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்க்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று; அன்பே உயிர்க்குலத்தின் பாதுகாப்புக் கவசம், மானுடத்தில் உயிரியல் அடிப்பண்பு விரிந்து, வளர்ந்து வாழ்வது. விரிவன எல்லாம் வாழும். சுருங்குவன எல்லாம் அழியும்.

தன்னலம் ஆக்கம் போலத் தோன்றும். தன்னலம் இன்பம் போலத் தோன்றும். ஆனால் இதனிலும் துன்பம் மற்றொன்று இல்லை. ஆதலால் அன்புடையவராக விளங்க, காண்பவர்கள் அனைவரையும் நேசித்த பிறகு கடைசியாக நம்மை நேசித்துக் கொள்ள வேண்டும். அதுவும் வாழ்தலுக்காகவேயாம். அன்பு இல்லையேல் பிறதுறைகளில் பெற்றவை அதாவது அறிவு, யோகம் முதலியன கூட பயனற்றுப் போகின்றன.

அன்பு இயற்கையாக அமைந்த ஒரு நியதி. நல் வாழ்க்கையின் வரிச்சட்டம் தாவரங்கள், விலங்குகள் இந்த அன்பு என்ற அடிப்படைச் சட்டத்தினின்று விலக இயலாமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் மானுடசாதி அன்பு என்ற வரிச்சட்டத்திலிருந்து விலகிச் செல்கிறது. இது முற்றிலும் தவறு. பகுத்தறிவு நன்மையை வளர்க்கவே; தீமையை அகற்றவேயாம். மேலும் வாழ்க்கைப் போக்கை வளர்ப்பதற்கே பகுத்தறிவு. அணு ஆயுதங்களால் உலகை அழிப்பது எங்ஙணம் பகுத்தறிவு ஆகும்?

இன்று இயற்கை உலகம் விரிந்து கிடக்கிறது. மனிதன் படைத்துள்ள கருவிகள், விரிந்த உலகை இணைக்கின்றன. ஆனால் மனிதன் சுருங்குகிறான். தன் வீடு, தன் நாடு, தன் மொழி, தன் மதம் என்று சுருங்கி விடுகின்றான். அதன் காரணமாகக் கெட்ட போரிடும் உலகமே தோன்றியுள்ளது. கெட்ட போரிடும் உலகத்தை மாற்றி அமைத்திடுதல் வேண்டும்.

வீட்டிற்கும் வீட்டிற்கும் இடையே வைத்த சுவர்களை இடித்துவிட வேண்டும்; வீதிகளுக்கு இடையே உள்ள திரைகளை அகற்ற வேண்டும்; நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைகளை அகற்றிவிட வேண்டும்; இவர் தேவர் அவர் தேவர் என்று சண்டை போடும் உலகத்தை அறவே தவிர்த்திடுதல் வேண்டும்; ஆன்ம நேய ஒருமைப் பாட்டைக் காணல் வேண்டும்; ஒரு குலமாக வேண்டும். இதற்கு அன்பு செய்தலே வழி! ஆதலால், வையத்தீர் அன்பு செய்வீர்!

கதிரொளி பரவுகிறது. காய்கிற கதிரொளியாக மாறுகிறது. குளிர்காய்தலுக்காக வெயிலில் படுத்திருந்த புழு, காய்கிற கதிரொளியால் சுடப்பட்டு இறந்து போகிறது: அழிந்து போகிற்து. வெயிலின் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் புழுக்களுக்கு இல்லை. ஏன் எலும்பு இல்லாததால்! மனிதன், எலும்பு உள்ளவன்! அதிலும் முதுகெலும்பு உள்ளவன். வலிமையான படைப்பு. ஆயினும் ஏன்? அன்பில்லாத மனிதன் அழிவான்! அறக்கடவுள் அன்பில்லாத மனிதனைச் சுடும். வாழ்வு பாழாகும்!

"என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்”

(77)

இதனால் பெறப்படுவது, மானுடத்திற்கு உண்மையான வலிமை அன்பினால் மட்டுமே என்பது. அன்பில்லையேல் மானுடம் வாழ்தல் அரிது. ஆதலால் அன்பு செய்வீர்! அன்பே இந்த உலகத்தினை இன்ப உலகமாக்க உள்ள ஒரே வழி!

10. அன்பாற்றல்

அன்பு - இஃது ஒர் உயிர்ப் பண்பு; மனிதகுல வரலாற்றை உயிர்ப்புள்ளதாக்கும். பண்பு, தீமையைத் துடைத் தெறியும் ஆற்றல் மிக்க பண்பு; படைப்பாற்றல் மிக்க பண்பு. இந்த அன்பு தற்சார்பில்லாதது; முற்றாக அயலாரை நோக்கியே செல்லும் பண்பு. இத்தகு அன்பினை உயர் பண்பாகப் பெற்ற மனிதன் வளர்வான்; வாழ்வான். இத்தகு அன்பினை அறிவியற் பார்வையில் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது.

உயிர்க்குலத்தில் எலும்பு உடைய உயிர்களும் உண்டு; எலும்பு இல்லாத உயிர்களும் உண்டு. எலும்பு இல்லாதன புழு வகையின. கதிரொளியின் ஆற்றலைத் தாங்கும் ஆற்றல் எலும்புள்ள உயிரினங்களுக்கு மிகுதியும் உண்டு. ஒரோ வழி தாங்கிக்கொள்ள இயலாது போனாலும் ஓடிப்போய்ப் பிழைத்தல் இயலும். எலும்புகள் அமைந்த உடல்கள் விரைந்த இயக்கத்திற்குத் துணை செய்வன. எலும்பு இல்லாத புழுக்களுக்குக் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் இல்லை; தப்பித்துச் செல்லவும் உடலமைப்பு இடம் தராது; ஊர்ந்தே செல்ல இயலும். அதனால் எலும்பு இல்லாதவை கதிரவன் வெப்பத்தினால் அழியும் என்பது அறிவியற் சார்ந்த கருத்து.

அதுபோல மானுட வாழ்விற்கு அன்புடையராதல், எலும்புபோல் வலிமையைத் தரும். அன்புடையோர் சமுதாயத்தில் நிகழும் முறைப் பிறழ்வுகளால் அழிந்துவிட மாட்டார்கள். தாங்கி வாழ்விப்பார்கள். தாமும் வாழ்வார்கள்.

கதிரொளியில்-வெப்பத்தில் மாற்றங்கள் இல்லை. கதிரொளி காய்வதில்லை. அதனைத் தாங்கும் ஆற்றலற்றவை அழிகின்றன. அதுபோலச் சமுதாய வரலாறு, ஒரு தன்மைக்காக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு அடிப்படை மானுடத்திற்குரிய அறமேயாகும். அன்பின் ஆற்றலுடையவர் வாழ்கின்றனர். அன்பாற்றலற்றவர்கள் அழிகின்றனர். "ஆற்றலுடைமையே வாழும்" என்பது ஒரு உண்மை.

ஆதலால், வாழும் மானுடத்திற்கு எலும்பனைய அன்பினை அனைவரும் போற்றுமின்!

"என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்"

(77)

11. மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை

மனிதன் விரிந்த பரந்த உலகத்தோடு பழகும்பொழுது விரிவு அடைகிறான். சுருங்குவன எல்லாம் அழியும். விரிவன எல்லாம் வளரும். சுருங்குவன எல்லாம் ஆவது போல் காட்டி அழியும். விரிவன எல்லாம் அழிவதுபோல் காட்டி சால ஆக்கம் தரும்.

மனிதன் மானுடத்தின் பரப்பெல்லை முழுதும் உறவு கொண்டு பழகுதல் நல்லது; விரும்பத்தக்கது. இத்தகு விரிந்த பரந்த உறவுக்கு - நட்பாடலுக்கு நாட்டெல்லைகள், அரசியல் எல்லைகள் தடையாக இருத்தல் கூடாது. மொழிகளும், சமய நெறிகளும் துணையாகவே அமைவன; மொழியின் பெயரால், சமய நெறிகளின் பெயரால், மனிதன் சுருங்குவது அறம் அல்ல. அதுமட்டுமல்ல, மொழியின் குறிக்கோளுக்கும் மாறுபட்டது; சமய நெறிகளின் நோக்கத்திற்கும் முரண் பட்டது.

இத்தகு விரிந்த பரந்த உலகத் தொடர்பைக் கொள்வதற்கு விஞ்ஞான வளர்ச்சி மூலம் மனிதன் ஆர்வத்துடன் முயன்றிருக்கிறான். தொன்மைக் காலத்தில் யாத்திரை என்ற பெயரில் இந்த முயற்சி அமைந்திருந்தது. ஏசுவின் யாத்திரை, முகம்மது நபியவர்களின் யாத்திரை, ஆழ்வார்கள், நாயன்மார்களின் யாத்திரை, காந்தியடிகளின் யாத்திரை ஆகியன எடுத்துக்காட்டுக்கள். மிகப் பழங்காலத்தில் நாடு விட்டு நாடு யாத்திரை-பயணம் சென்றால் உணவு முதலியன கிடைப்பதற்கு வழியில்லை. திருக்கோயில் நாகரிகம் தலையெடுத்த பிறகு இப்படிப் பயணத்தில் வருவோருக்கு உணவளிக்கும் பொறுப்பைத் திருக்கோயில்கள் ஏற்றுக்கொண்டன.

இப்பொழுது எங்கும் உணவுச் சாலைகள் வணிகத் தொழில் அடிப்படையில் அமைந்துவிட்டன. ஆனால் விழுமிய பயனைத் தரவில்லை. மிகப்பழைய காலத்தில் வீடுகளில்தான், இத்தகு பயணிகளுக்கு உணவு வழங்கப் பெற்றது. வீடுகளில் உணவு வழங்கப் பெறுதலே சிறப்பு. இங்ஙனம் இல்லத்திற்கு வருபவர்கள் 'விருந்தினர்’ என்றழைக்கப் பெற்றனர்.

இன்றோ உறவினர்களும் சுற்றத்தினரும் விருந்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது முறையன்று. முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத அயலாரே விருந்தினர் எனப்படுவர். இவர்கள் இல்லங்களில் வந்து தங்கிப் போவதினாலே மொழி, கலை வழிபட்ட உறவுகளும் வளரும்; தொழில், பொருள் வழிப்பட்ட உறவுகளும்கூட வளரும். இத்தகு பயணங்களைத்தான் இன்றைய அரசு, சுற்றுலாத் துறை என்று ஒரு துறை அமைத்து வளர்த்து வருகிறது. இத்துறை பல நாடுகளுக்கு அதிகப் பொருள் ஈட்டத்தையும் தருகிறது.

மனையறம் பேசும் திருவள்ளுவர் விருந்தோம்பல் என்ற நெறியையும் எடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பல் அதிகாரம் முழுமையும் படித்தால் விருந்தோம்பலினும் சிறந்த அறம் இல்லை என்று தெரிய வரும். அதுமட்டுமல்ல. தமிழகத்தின் இல்லங்களில் நாள்தோறும் விருந்தினர் வந்த வண்ணம் இருந்தனர் என்று தெரிய வருகிறது. இந்த விருந்தோம்பும் பண்பைத் தமிழர்கள் பேரறமாகப் போற்றி வளர்த்ததினாலேயே தமிழ்ப் பண்பு உலகந் தழீஇய பண்பாக வளர்ந்து வந்துள்ளது. "யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற உயர் நெறி முகிழ்ப்பதற்கு விருந்தோம்பும் பண்பே காரணமாக அமைந்திருக்கும் என்று கருதவேண்டியிருக்கிறது.

விருந்தோம்பல் பண்பு சிறந்து விளங்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும், பொருள் புழக்கம் அதிகமாவதற்குரிய வாயில்கள் மிகுதி. ஒருநாடு விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பர்; முதலீடு செய்வர்.

அதுபோல ஒரு வீட்டினர் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த வீட்டினருடைய வளர்ச்சியில் விருந்தினர் பங்கேற்பர். ஒரு குடும்பத்தினர் விருந்தோம்புதலில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் வயலில் விதை பாவவில்லை. விதையில்லை அல்லது காலம் கிடைக்க வில்லை. வந்த விருந்தினர்கள் வாளாவிருக்க மாட்டார்கள். விருந்தினர்களும், அந்தக் குடும்பச் செல்வத்தின் பயனை நுகர்ந்தவர்களும் வாளாவிருக்க மாட்டார்கள். தாமே வலியச்சென்று அக்குடும்பத்தினரின் வயலில் விதையை விதைப்பார்கள். இஃது அறஞ்சார்ந்த வாழ்வியல் முறை. இதனைத் திருக்குறள்

"வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்”

(85)

என்று கூறும், ஆதலால் எல்லைகளைக் கடந்து பழகுக. நட்பினைக் கொள்க; உறவாகுக; உவந்து உண்பித்துப் பழகுக. இதுவே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை.

12. மோப்பக் குழையும் அனிச்சம்!

மானிடர் உயிர்ப்பில் வெளிவிடும் காற்று வெப்பத் தன்மையுடையது. இந்த வெப்பத்தைத் தாங்க முடியாத நிலையில் அனிச்சம் என்ற மலர் குழைந்து கெடும். அனிச்சம் நரம்புகளின் அமைவு பெறாத மென்மையான மலர். அதனால் மோப்பக் குழைகிறது. அதனால் அனிச்சமலரை முகராமல் மூக்கிற்குச் சற்றுத் தொலைவில் வைத்து மணத்தை அனுபவிக்கலாம்; அழகை அனுபவிக்கலாம்; தன்மையை அனுபவிக்கலாம். இங்ஙணம் ஒரு மலரை அனுபவிப்பதற்குப் பதிலாக அதனை முகர்ந்து கெடுப்பதில் என்ன பயன்?

விருந்தினர் என்பவர்கள் புதியவர்கள். அதாவது முன்பின் தெரியாதவர்கள். அதாவது நாடுவிட்டு நாடு, கற்பதற்காகவும் புதிய அனுபவங்களைப் பெறுதலுக்காகவும் பயணம் செய்து வருபவர்களே விருந்தினர். (இன்று உறவினர்களை விருந்தினர் என்று அழைப்பது தவறான மரபு) இத்தகு விருந்தினர்களை, உழுவலன்புடையாரைப் போல இனிய பரிவு நிறைந்த புன்முறுவல் தாங்கிய முகத்துடன் வரவேற்க வேண்டும். அங்ஙனம் வரவேற்காது, அந்நியர் என்ற உணர்வுடன் முகத்தின் ஐயப்பாட்டுணர்வும் விருப்பமின்யுைம் புலப்பட நோக்கின், வந்த விருந்தினர் மனத் துன்பம் அடைவர்; அவர்கள் சோற்றுக்காக வந்தவர்கள் அல்லர்; உறவுக்காக வந்தவர்கள். நன்மை செய்வதற்காக வந்தவர்கள்.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து"

(90)

13. நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள்

இன்பம் மனிதனால் உருவாக்கப் பெற்று அவனே துய்த்து மகிழும் ஒர் உணர்வு. இந்த இன்பம் என்பது அணுகும் வகையால் மனிதனுக்கு மனிதன் மாறும். ஒரு மனிதனுடைய வாழ்நாள்களிலே கூட பருவத்திற்குப் பருவம் மாறும். ஒரோ வழி சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் மாறக்கூடும். அப்படியானால் இன்பம் நிலையான ஒன்றில்லையா? இன்பம் நிலையான ஒன்றுதான். எங்கும் எப்பொழுதும் எல்லாருக்கும் இன்பமாக இருக்கின்ற ஒன்றே இன்பம். மற்றவை எல்லாம் துன்பம்.

ஆனால் மானுடம் தற்சார்பிலே பழகிப் பழகி, துன்பந்தழீஇய இன்பத்தையே இன்பம் என்று கருதுகிறது. இன்பம் போலக் காட்டித் துன்பம் தரும் இவற்றிற்காகவே மானிடர் போராடுகின்றனர். இன்பம் சமூக நலத்தில் உருவாவது; தோழமையில் வளர்வது; காதலில் நிலைப்பது. எல்லாவற்றிற்கும் அடிப்படை சமூக நலம். நம் ஒவ்வொரு வருடைய உள்ள நலமும் உடல் நலமும் கூட சமூக நலத்தினையே அடிப்படையாகக் கொள்வது.

ஆன்மாவின் உறுப்புக்களான மனம், புத்தி, சித்தம், அகத்துறுப்புக்கள், பிரிக்கப்படாத உறுப்புகள் அகத்து உறுப்புக்களே. இவைகளே அறியும் கருவிகள், அறிவுக் கருவிகளுமாம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன உடலுக்கு வாய்த்த பொறிகள். இப்பொறிகள் செயலுக்குரியன. அறிவும் செயலும் நிகழும் களம் சமூகம், தானே! ஆதலால் சமூகத்தையும் தனது வாழ்நிலையின் உறுப்பாக எண்ணவேண்டும். உறுப்பாக மட்டுமல்ல. சமூகநலனே இன்பத்தின் ஊற்றுக்களன் என்று கருதி சமூக நலனைப் பேணி வளர்க்க வேண்டும். சமூகத்துடன் பிணக்கிலாத நிலையைப் பராமரிக்க வேண்டும்; நெஞ்சு நெகிழத்தக்க உறவு நிலைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சமூக நலன் எப்போது கெடுகிறது? ஏன் கெடுகிறது? அன்பின்மையின் காரணமாக சமூகத்திலிருந்து தனி மனிதன் அந்நியப் படுத்தப்படுகிறான். அந்நியமான நிலை நன்றன்று. அன்பு அடக்கத்தினைத்தரும். வளர்ந்த அறிவு அடக்கத்தைத் தரும். அன்பின்மையும் அறிவின்மையும் தனி மனிதனைத் தற்சார்புடையவனாக்கி அகந்தைக்காரனாக வளர்த்து விடுகிறது. அறியாமையின் முகட்டில் வாழ்பவர்கள் அகந்தையே வடிவமாக வாழ்வர். இவர்கள் யார் மாட்டும் அடக்கத்தைப் பேணார். பணிவு என்பதே இவர்கள் வாழ்க்கை அகராதியில் இல்லை. ஆர்ப்பரவம் செய்வர். எல்லாரையும் இழித்தும் பழித்தும் பேசுவர். இத்தகு வாழ்க்கைப் போக்கு சமூக நலனைக்கெடுக்கிறது. உள்ளமும் கெட்டு உடலும் கெட்டு நாட்டின் நிலை இரங்கத் தக்க தாகிறது.

நல்வாழ்க்கைக்கு அடக்கம் தேவை, பணிவு தேவை. யார் மாட்டும் அடக்கம் தேவை, பணிவு தேவை. அடக்கமும் பணிவும் இருந்தால் இனிய சொற்களே பிறக்கும். ஒருவர் வாழ்க்கையில் அவர் வழங்கும் இனிய சொற்கள் தரும் பயன் அளப்பரியது. இனிய சொற்களால் பாராட்டுவதின் மூலமும் எண்ணற்ற காரியங்களைச் சாதிக்கலாம். மானுடத்தின் இயற்கையமைப்பு இன்சொல் வழங்குவதேயாம். ஆனால் முயன்று குருதியைச் சூடேற்றிக் கொண்டு மூச்சுக் காற்றினை நிறையச் செலவழித்துக் கடுஞ்சொற்களை - பிறருக்கும் தனக்கும் இன்னாதன விளைவிக்கும் சொற்களைக் கூறுகின்றனர்.

இனிமை பயவாத இன்னாத கடுஞ் சொற்களைக் கூறின் இரத்தக் கொதிப்பு நோய் வருகிறது; மூச்சுக் காற்று அதிகம் செலவாவதால் மூப்புத் தன்மை இளமையிலேயே வந்து விடுகிறது; மற்றவர்களுடைய பகையே வளர்கிறது; காரியக் கேட்டினைச் செய்கிறது. அது மட்டுமல்ல வன் சொல் திருட்டுத்தன்மையுடையது என்பது வள்ளுவத்தின் கருத்து. எப்படி வன்சொல் திருடு? விலங்கினத்திடமிருந்து கவர்ந்து கொண்ட விலங்கியல் தன்மையின் விளைவு வன்சொல். அதனால் வன்சொல் திருடு ஆகும். இனிய சொல் அன்பினை இருபாலும் ஊற்றெடுக்கச் செய்கிறது; தோழமையை வளர்க்கிறது. வாழ்க்கைப் பணியில் ஆற்றல் மிக்க ஒத்துழைப்பை நல்குகிறது. ஆதலால் பணிவும் இன் சொல்லும் வெற்றி பொருந்திய நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள். ஒன்றின்றில் பிறிதொன்று இல்லை. இன்சொல்லை என்றும், எங்கும் வழங்கி வாழ்வித்து வாழ்வோமாக!

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற"

(95)

14. நன்றி மறவேல்

நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது. ஒருவர், ஒருவருடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவி செய்ததை மறத்தல் கூடாது. நன்றை-நல்லதை மறவாதிருக்கும் பண்பினைக் குறிக்கும் சொல் நன்றி என்பது. இந்தப் பரந்த உலகத்தில் மானுடம் ஒருவருக்கு ஒருவர் கலகம் செய்து அழிந்து கொண்டே வந்திருக்கிறது. அழிந்துமிருக்கிறது.

இத்தகு உலகில் ஒருவர் பிறிதொருவருக்கு நன்மை செய்வது என்பதே ஒரு வளர்ந்த மனிதரின் நிலை. இங்ஙனம் ஒருவர் செய்த நன்மையை மறக்காது பாராட்டினால் மேலும் பல நன்மைகளைச் செய்ய அவர் முன் வருவார்; நாடு வளரும். அதோடு நன்மையை அடைந்த ஒருவர், அந்த நன்மையை மறவாதிருந்தாலே அவர் அந்த நன்மையின் - தன்மையின் பயனை அறிந்திருக்கிறார் என்று உணரப்பெறும். இங்ஙனம் தன்மையை அறிந்துணரும் நிலையில்தான் நன்மை வளரும். பலரும் பயன் பெறுவர்.

ஒருவர் செய்த நன்மையை மறந்து விட்டால், அவருக்கு யாரும் நன்மை செய்ய முன்வர மாட்டார்கள். அதனால் அவர் தம் வாழ்வில் தேக்கம் ஏற்படும். துன்பங்களும், துயரங்களும் தோன்றி அல்லற்படுவர்; அழிந்து போவர். அதனால் "நன்றி மறப்பது நன்றன்று” என்றது திருக்குறள். நன்மையை மறவாதிருத்தலே நன்மையை நிலையாகப் பாதுகாக்கவும் மேலும் பல நன்மைகளைப் பெறவும் கூடிய வழி.

நன்மை செய்தல் நல்லவர் பண்பு. நல்லவர்களாலே மட்டுமா இந்த உலகம் இயங்குகிறது. இல்லையே! இந்த உலகில் நல்லவர்கள்-நன்மை செய்யக்கூடியவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரேயாம்; தீமை செய்பவர்களே மிகுதி. ஆதலால் நமக்கு ஒருவர் தீமை செய்துவிட்டால் அந்தத் தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். ஏன்? தீமையால் விளையக்கூடிய பயன் யாதுமில்லை.

ஒருவர் செய்த தீமையை மறவாமல் நினைவில் வைப்பதால் தீமை செய்தார்மீது காழ்ப்புணர்ச்சி கால் கொள்ளும்; அவருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற முனைப்புத் தோன்றும். தீமை செய்தவருக்குத் தீமை செய்ய நேரிடும். தீமையை அடைந்தவர் நாம் செய்த தீமைக்குத்தானே தீமை என்று நினைக்கமாட்டார். மீண்டும் முறுகி எழும் சினத்துடன் தீமை செய்வார். அதனால் தீமையே சுழன்று கொண்டு வரும். முடிவு அழிவே. அதனால் "நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஆம்! தண்டனைகளால் மனித உலகம் திருந்தாது. தீமை செய்யும் அறியா மானுடர்பால் அனுதாபமும், இரக்கமும் பரிவும் காட்டித் திருத்த முயல்வதே நன்மை நாடுவோர் பணி! வையகம் வளர வாழ வழி!

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று"

(108)

இத்திருக்குறள், மானுட வரலாறு, சமூக இயல், உளஇயல் அடிப்படையில் தோன்றியது. அற்புதமான திருக்குறள். நன்றி மறப்பதனால் தீமை வளர்ந்து விடாது. அல்லது தீமை வளராது. நன்மை குறையும், அவ்வளவுதான். ஆனால் நன்றல்லாதவற்றை மறவாதிருப்பது பெருந்தீமை பயக்கும். அதனால் அதை "அன்றே" மறந்திடுக என்று வலியுறுத்துகிறது திருக்குறள்.

15. நன்றி பாராட்டுக!

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று"

(108)

என்பது திருக்குறள். இந்த ‘நன்றி’ என்ற சொல் இன்று உலக வழக்கில் சாதாரண வழக்கிற்கே கையாளப் பெறுகிறது. அதாவது, ஒருவர் செய்த உதவியை மறத்தல் கூடாது. உதவியைப் பெற்றவுடன் நன்றி கூறுதல் வேண்டும் என்ற வழக்கு, மேலோங்கி நிற்கிறது.

இன்று எந்த நிகழ்ச்சியானாலும் "நன்றி கூறல்" என்பது ஒரு சடங்காக இடம் பெற்றுவிட்டது. இது தவறன்று. ஆயினும், திருக்குறளின் பொருள் வழி நன்றி என்ற சொல் ஆழமான பொருள் தருவது. நன்று என்ற சொல்லிலிருந்து நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது ‘நல்லது’ என்ற சொல்தான் நன்றி என்ற சொல்லாக வழங்கப் பெறுகிறது.

ஒருவர் ஒருவருக்குச் செய்த நல்லதை மறத்தல் கூடாது என்பது கருத்து. அந்த நல்லதைத் தொடர்ந்து சிந்தையிலும் செயலிலும் காப்பாற்றி வரவேண்டும் என்பதே கருத்து. அப்படிக் காப்பாற்றிக் கொண்டு வாழ்வதே நல்லது செய்தவருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாகும்.

ஒருவர், ஒருவருக்கு நல்லது செய்தல் என்பது விரிந்த அளவுடையது. சிந்தையால், சொல்லால், செயலால் நன்மை செய்யலாம். ஆனால், இன்று நன்மை என்பதைப் பொருள் அளவினதாகச் சுருக்கி விட்டார்கள்.

பொருளை விட, நல்லறிவு கொளுவுதல், நன்னடை நல்குதல் முதலியனவும் நல்லனவேயாம். இத்தகு நல்லனவற்றைப் பாராட்டி ஏற்று ஒழுகுதலே நன்றி. ஒரோ வழி நன்றல்லாதனவற்றை மறந்தால் தான் நெஞ்சிறுக்கம் கொஞ்சம் குறையும். ஆதலால், அன்றே மறப்பது நன்று என்றார்.

புறநானூறு, திருக்குறளை அறநூல் என்று பாராட்டுகிறது ஏன்? அறங்களில் சிறந்தது நன்றி மறவாமை. இந்த நன்றி மறவாமை என்ற சிறந்த பண்பின் வாயிலாகப் பல்வேறு நற்பண்புகள் தோன்றி வளர வாய்ப்புள்ளது.

ஆதலால், நற்பண்புகளுக்குள் சிறந்த பண்பு நன்றி மறவாமை. நன்றி பாராட்டுதல் ஒரு நல்லொழுக்கம். நன்றி பாராட்டுதல் ஒரு சிறந்த வாழ்க்கை நெறி.

16. சார்புநிலை கூடாது!

நடுவுநிலைமை என்பது உயர்வாழ்வின் கொள்கை, கோட்பாடு. இருவேறு நிலையினதாக இயங்குவதே உலகத்தின் பெருவழக்கு பல சமயங்களில் பன்முக நிலையில் கூட உலகியல் நிகழும். இந்த நிலைகளில் தன்னலம், சார்பு நிலைகள் கருதி ஒருபக்கம் சார்ந்து விடுதல் கூடாது.

எல்லாக் கருத்துக்களையும், எல்லா நிலைப்பாடுகளையும் அறிவார்ந்த நிலையிலும் பொதுப் பயன்பாட்டு நிலையிலும் தீர ஆய்வு செய்து, ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றையதைத் துணிவுடன் தள்ளவேண்டும். அநீதிக்கும் நீதிக்கும் இடையில் நடுவுநிலையில் நிற்றல் என்பது கூடாது. நன்மையைச் சார்ந்து இராத நடுவு நிலைமை தீமையாகும்.

இன்றைய நமது சமுதாயத்தின் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கினால் அநியாயங்களே நியாயங்களாகிக் கொண்டு வருகின்றன். இன்றைய சமுதாய அமைப்பில் விருப்பு வெறுப்பு உணர்வுகள் (இராகதுவேஷங்கள்) நிறைந்துள்ளன.

நாம் தெரிந்தோ, தெரியாமலோ விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி; சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகு சூழ்நிலையில் நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் அறிந்தறிய வேண்டிய ஒன்று.

ஒரு கருத்து அல்லது ஒரு நடைமுறை சரி அல்லது தவறு என்று ஆய்வில்லாமல் முடிவுக்கு வரக்கூடாது. ஆய்வு நிலையில் ஆய்வுக்குரிய செய்திகள் பாலும் ஆய்வுக்குரிய செய்திக்குரியர்பாலும் நிறை நலம் சார்ந்த நம்பிக்கை இருத்தல் வேண்டும். மதிப்புணர்வு இருத்தல் வேண்டும். அதே போழ்து எல்லை கடந்த சார்பு நிலையும் ஆகாது.

பழங்காலத்தில் வணிகர்கள் பொருளை எடை போடும் முன் எடை போடப் பயன்படும் துலாக்கோலை (தராசை) முதலில் எடுத்து துலாக்கோலின் சமநிலையைக் காட்டுவர்; பின் எடை போடுவர். அதுபோல முதலில் அனைவரும் ஒத்த கருத்தினர் என்ற சமநிலை உணர்வு தேவை. இன்று நம்முடைய வாழ்க்கையில் துறைதோறும் நடுவு நிலை, முறை பிறழ்ந்து கிடக்கிறது. அரசியலில், சொல்லும் கருத்துக்கள் ஆராயப்படாமல், நபர்கள் ஆராயப் படுகின்றனர்.

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி”

(118)

என்பது திருக்குறள்.

"சமன் செய்து’, என்றார் திருவள்ளுவர். அதாவது இயல்பாகச் செய்யும் மனப்போக்கு இல்லை. வாழ்வியல் இல்லை என்பது தெளிவு. இந்தப் பூவுலகை மலைகள், கடல்கள் பிரித்திருக்கும் பிரிவுகளை விடக் கோடிக்கணக் கான பிரிவுகளை மனிதன் படைத்திருக்கின்றான். மனிதன் படைத்த பேதா பேதங்கள்-பிரிவுகள் ஆகியன பெற்றெடுத்த நச்சுப் பேய்கள்தானே ‘சுவர்’ ‘காவல்’ ‘வேலி’ ஆகியன. இவற்றிலிருந்து மனிதகுலம் என்று மீளும்? சீர்தூக்கும் கோல் என்றார்.

ஆம்! ஆய்வில் கூடச் சீர்மை பார்த்தலே நோக்கம். தீமை தூக்குவது இல்லை. தீமை தெரியாது! கண்ணிற்குப் படாது! ஆதலால், ‘கோடாமை' என்றார். ஆம்! மனிதர்கள் அவசரமாகக் கட்சி கட்டிக்கொண்டு, நியாயங்களைப் பார்க்காமல் ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறார்கள். இது மரபன்று. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நியாயத்தின் பால் நிற்காமல் சாய்ந்துவிடக் கூடாது. இத்தகு வாழ்க்கையே மக்களாட்சி முறையை வளர்க்கும்; அறநெறியை வளர்க்கும்.

17. மற்றவர் சிந்தனைக்கு மதிப்புத் தருக!

நடுவு நிலைமை என்பது வாழ்வியலின் சிறந்த பண்புகளில் ஒன்று. நடுவு நிலை என்றால் எதிலும் சேராத இரண்டுங்கெட்டான் நிலை என்று பொருள் கொள்ளக் கூடாது. இறுக்கமான சார்பு நிலை நடுவு நிலைக்கு எதிரானது. அதாவது நாம் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு, அந்த முடிவு நிலையின் அடிப்படையிலேயே மற்றவர்களை ஆய்வது; மற்றவர்களுடைய கருத்துக்களை ஆய்வது என்பது தவறான அணுகுமுறை. அது மட்டும் அல்ல. உள்நோக்கம் ஒன்றைக் கற்பித்துக் கொண்டும் ஆய்வு செய்தல்-அணுகுதல் ஆகாது.

மனிதன் எந்த வகையிலும் சுதந்திரமுடையவனே. ஒவ்வொரு மனிதனும் அவன் நிலையில் சிந்திக்கும் உரிமை உடையவன் என்பதை மறந்துவிடக்கூடாது. அவனைச் சிந்திக்கத் தூண்டி அந்தச் சிந்தனையில் தவறு இருந்தால், மடை மாற்றம் செய்ய வேண்டுமே தவிர, சிந்திக்கிற பழக்கத்தையே முறியடித்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, மற்றவர்களின் சிந்தனையின் மதிப்பைத் தற்சார்பின் காரணமாகவோ, பாரம்பரியம் அல்லது வேறுசில காரணங்கள் அடிப்படையிலோ தரக்குறைவாக எண்ணுதல் கூடாது. அவர்களுடைய சிந்தனைக்கு மதிப்பைத் தந்து சமநிலையில் கருதி, அவர்கள் சிந்தனையை எடுத்துக் கொள்ளும் மனப் போக்கு வேண்டும்.

இங்ஙனம் சிந்தனைகள் மதிக்கப் பெற்றால்தான் அறிவு வளரும். முதலில் ஒருவர் சிந்தனையைச் சமநிலையில் மதிப்புணர்வுடன் எண்ணி ஆய்வுசெய்து ஒப்புநோக்கி நல்லதைத் துணிந்து முடிவு செய்க. அடுத்து, ஆய்வு செய்த பிறகு தம் கருத்துடனும் மற்ற கருத்துக்களுடனும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்யலாம். இந்த முழுநிலை ஆய்வு நடந்த பிறகு எது நன்று - அல்லது சரியானது என்ற துணிவுக்கு வரலாம். வரவேண்டும்.

எதுபோல எனில், கடைகளில் பண்டங்கள் எடை போடப் பயன்படுத்தும் தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் போல, தராசு நிலையில், அதாவது எடைக் கற்களும், பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் தராசைத் தூக்கிச் சரிபார்த்து, தராசு நிலையில் பழுதில்லாமல் இருப்பதையும், சீராக எடை அளவு காட்டுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் வெறுந்தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் முறை. அதுபோலவே தான், தக்க கருத்து அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும் என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள உதவி செய்வது மற்றவர்களை மதித்தலாகும். அவர்தம் சிந்தனை மதிக்கப்பெறும்; நம்பிக்கையைத் தரும். எல்லோரையும் மதிக்கும் அடிப்படையிலே இது நிகழும்.

"சமன்செய்து சீர்துரக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி."

(118)

18. நடுவு நிலைமை

நடுவு நிலைமை ஓர் உயர்ந்த குணம்; பண்பு. நடுவு நிலைமை என்பது சார்புகள் காரணமாக முடிவு எடுக்காத கொள்கையாகும். எவரையும் எந்தச் சூழ்நிலையைப் பற்றியும் கவலைப்படாமல், யார் யார் சொன்னாலும் விருப்பும் வெறுப்பும் இன்றிக் கேட்டு, ஆய்வு செய்து விவாதித்து முடிவு எடுத்தலாகும்.

நடுநிலைப் பண்பு, நீதியைச் சார்ந்தது. நீதி உயிர்; நடுவு நிலைமை உடல், நடுவுநிலைக் குணம் அனைத்துக் குணங்களுக்கும் தாய் போன்ற முதல்நிலைக் குணம்.

மாந்தர் இயல்பாகச் சஞ்சலப்புத்தி உடையவர்கள். வெற்றியையும் இன்பத்தையுமே விரும்புவர்; தோல்வி, துன்பங்கள் கண்டு அஞ்சுவர். இதனால், மாந்தர் இச்சை பலவுடையவராக இருப்பர். விழிப்புணர்வு மிகமிகக் குறைவு; ஏமாறவும் செய்வர். இதனால் தற்காப்பு, தன் முனைப்பு ஆகியனவற்றின் வயப்பட்டு நடுநிலை பிறழ்வர்.

நிறுவை செய்யப் பயன்படுவது தராசு. தராசின் தட்டுக்கள் இரண்டும் சம எடையில் இருப்பதைத் துலாக் கோலை-நிறுக்கும் கருவியைத் தூக்கிச் சரிபார்த்துக் கொண்டுதான் நிறுவை செய்ய வேண்டும், நிறுவைத் தட்டுக்களில் ஏதாவது ஒன்றில் ஒரு பாக்கு அளவு புளி ஒட்டிக் கொண்டிருந்தால்கூட நிறுவை பாதிக்கும்.

அதுபோல் நாம் பலருடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும். கேட்பதற்குமுன் நமது மனநிலையைச் சார்புகளிலிருந்து விடுதலை செய்து கொண்டும், சொல்லுவோர் அனைவரிடத்திலும் சமநிலை மனோபாவத்துடனும் கேட்க வேண்டும். ஒரு மனிதனுடைய வார்த்தைகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இருகட்சிகளையும்-பல கட்சிகளையும் அமைதியாய்க் கேட்க வேண்டும். கேட்கும் செய்திகளைச் சார்பின்றி விருப்பு வெறுப்பின்றிக் கேட்க வேண்டும்.

நமக்கு என்று ஒரு கருத்து இருந்தாலும் அக்கருத்தைக் காய்தல், உவத்தலின்றிக் கேட்க வேண்டும். இப்படிக் கேட்க மறுத்தால் சுதந்திரம் பறிபோகும்; சமத்துவக் கொள்கைக்கு ஊறு விளையும், நடுநிலைமை பிறழ்வதால் சமுதாயத்தில் சீர்குலைவு தோன்றும்; மாந்தர் பாதுகாப்பை இழந்து விட்டதாக உணர்வர். இது வரவேற்கத் தக்கதல்ல.

ஆதலால் மனிதர்களை, சாதிகளை, மதங்களை இவற்றை மையமாகக் கொள்ளாது மனிதம்-நன்று-தீது என்ற அடிப்படையிலேயே நடுவுநிலைமை வளர வேண்டும்.

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி"

(118)

19. தன்னடக்கம்

தன்னடக்கம் என்பது வளர்ச்சிக்குரிய மூளை, தன்னடக்கம் எனினும் பணிவு எனினும் ஒரு பொருள் தரும் என்பது பிழையாகாது. ஆயினும் நிறைவாகாது. பலர் அடக்கம் உடையோராக இருப்பர். அதன் காரணமாக அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கிவிடுவர். சில சமயங்களில் ஒதுங்கி வாழ்தல் தன் முனைப்பு வளரவும் துணை செய்து விடுகிறது. ஆதலால், பலரோடு பழகிப் பணிவும் இன் சொலும் உடையோராக விளங்கினால் அடக்கமுடைமை முழுமை அடைகிறது. நாம் மற்றவர்களிடம் எப்படிப் பழகுகின்றோம்? இதுதான் கேள்வி. வளர்ச்சியின் ஆரம்பம் வணக்கத்தில் இருக்கிறது என்பது நியதி.

அடக்கமுள்ளவர்களிடம் பிழைகள் காண்பது அரிது. ஏன்? அடக்கமுள்ளவர்கள் பலரோடு பழகுவதால் பக்குவமும் முதிர்ச்சியும் எளிதில் கிடைக்கும்.

தன்னடக்கம் இரு பெரும் பிரிவுகள் உடையது. அவை பொறி அடக்கம்; புலன் அடக்கம் எனப்படும். பொறியடக்கமாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையடக்குதல் இப்பொறிகளை இயக்கும் புலன்களை அடக்குதல் புலனடக்கம்.

இவற்றுள் நாவடக்கம் தலையாயது. நாவடக்கம் இரண்டு வகைப்படும். முதலாவது நினைத்தபடி பேசாமை, இரண்டாவது உணவடக்கம். உணவடக்கம் உடலுக்கு நலம் பயக்கும். உடல் நலமுறின் பொறியடக்கமும் புலனடக்கமும் எளிதில் சித்திக்கும். உடல் நலத்துக்கும் சீரான இயக்கத்துக்குமே உணவு; சுவைக்கல்ல. விரும்பி அளவோடு சுவைக்கத் தேவை. அவ்வளவுதான் சுவையின் பயன். அல்லது உணவு உண்ணும் ஆர்வத்தைத் துாண்ட சுவை பயன்படலாம்.

நிறைய பேச-சொல்ல ஆசைப்படக்கூடாது. அதிகமாகப் பிறரிடம் கேட்கும் மனப்பாங்கு வேண்டும். "சில சொல் பேசுதலும் பல கேட்கக் காமுறுதலும்” வளர்ச்சிக்குரிய பண்பு. அதனாலன்றோ, கேட்கும் பணிக்கு மட்டுமே இரண்டு காதுகள் உள்ளன. பேசுவது, உண்பது ஆகிய இரண்டு பணிகளுக்கு ஒரே வாய். அந்தப் பேச்சும்கூட மற்றவர்கள் கருத்தை வாங்கத்தக்க வகையில் பேசினால் மிகமிக நன்று.

இன்றைய உலகம் வாயினால் கெட்டு வருகிறது. நாட்டில் கண்டபடி உணவுச் சாலைகள், மது உட்பட உள்ளன. சந்து பொந்து, சாவடி எங்கும் கூடிக்கூடி ஊர் வம்பு பேசியே காலத்தைக் கழிக்கும் மாந்தர்களின் எண்ணிக்கை மிகுதி. இது போதாது என்று மேடை வேறு போட்டுப் பேசுகிறார்கள். சேரிப்புறத்து அணியாக இருந்த ஏச்சு, அரங்கேறியுள்ளது அவ்வளவுதான்! இது வாழ்வியலன்று. யாரிடமும் பணிவாக இருப்பது; தன் முனைப்பு அற்று இருப்பது; தேவைக்கேற்பச் சிக்கனமாகப் பேசுவது; இவையே அடக்கமுடைமை.

20. அடக்கமுடைமை ஆக்கம் தரும்

மனித வாழ்க்கைக்குச் சிறந்த அடக்கம் தேவை. பழங் காலத்தில் அடக்கம் என்ற ஒரே சொல் பல ஒழுகலாறு களையும் வற்புறுத்தியது. இன்று அடக்கம் என்ற பண்பு, விரிந்து தனித்தனியே குறியிட்டுச் சொல்கிற வகையில் அமைந்துள்ளது. பொதுவாக மற்றவர்களிடம் அகந்தையின்றி அடக்கமுடையவராக நடந்து கொள்ளும் பண்பு, ‘பணிவு' என்ற பிறிதொரு சொல்லால் உணர்த்தப்படுகிறது. திருக்குறள் படி பணிவுடைமையும் அடக்கமுடைமையிலேயே அடங்கியிருக்கிறது. அடுத்துத் தன்னடக்கம், நாவடக்கம், பொறிகள் அடக்கம், புலனடக்கம் என்றெல்லாம் சொல்லப் புெறுகின்றது.

மனிதன் அடைந்து ஒழுக வேண்டிய நற்பண்புகள் பலப்பல. அவற்றுள் தலையாயது தன்னல மறுப்பு. நீதியின் பால் வேட்கை, ஈகைக்குணம், அன்புடைமை இவையெல்லாம் சிறந்தனவாயினும் தன்னடக்கமில்லாது போனால், இந்தப் பண்புகள் சிறக்கா. ஆதலால் ஒழுக்கங்களுள் சிறந்தது - தலையாயது தன்னடக்கம், கிரேக்கச் சிந்தனையாளன் சாக்ரட்டீஸ் மனிதன் மேற்கொள்ள வேண்டிய முதல்நிலைப் பண்புகளாகத் தன்னடக்கத்தையும் புலனடக்கத்தையும் கூறினான்.

தன்னடக்கம் என்ற சிறந்த பண்பினைப்பெற வேண்டுமாயின் மற்றவர்களிடம் குறை காணும் தீமை அறவே கூடாது. ஒரோ வழி குறை கண்டாலும் அதை இரகசியமாகக் கொண்டு பிறரிடம் கூறக்கூடாது. வீணான விவாதங்கள் அறவே கூடாது. கட்சி-பிரதி கட்சிச் சுழியில் சிக்கித் தவிக்காமல் என்றும் எப்பொழுதும் பொதுநிலை வசிக்க வேண்டும். தன்னைப் பற்றிய உயர்வு நினைவுகளை விட்டொழித்து விட்டால் அடக்கப்பண்பு வந்து விடும்.

பொதுவாகத் திருக்குறள் அடக்கமுடைமையையும் அதன் பயனையும் முதல் நான்கு குறள்களில் வகுத்துக் கூறுகின்றது. அடுத்து மற்றவர்களிடத்தில் பணிவாக நடந்து கொள்ள வேண்டிய பண்பை எடுத்துக் கூறுகிறது. செல்வமுடைமை அகந்தையை வளர்க்கும். ஆதலால், செல்வம் உடையார் பணிவுடையாராகவும் இருப்பின் இரண்டு மடங்கு செல்வம் பெற்றது போன்றது என்பது திருக்குறள் கருத்து.

அடுத்து, ஐம்பொறிகள், ஐம்புலன்களின் அடக்கத்தை, எடுத்துக் கூறுகிறது; அடக்கமுடைமை என்ற பண்பின் தோற்றத்திற்குரிய ஒழுகலாற்றை எடுத்துக் காட்டுகிறது. புலன்கள், ஆசைகள் தோன்றும் களம். ஆசைகள் தோன்றி வளர்ந்தால் அடக்கமுடைமையைப் பெறுதல் இயலாது. புலன்களில் ஆசைகள் தலைப்படின் அந்த ஆசைகளை அடையப் பொறிகளை இயக்கும் ஆன்மா, அப்போது பொறிகள் மதம் பிடித்த களிறுகளைப்போல் கட்டுப் பாடின்றிச் செயற்படும். இது தவறு, பெரும்பாலும் இச்சை, பொறிவாயிலாகச் செய்திகளாக, பொருள்களாகப் புலன்களுக்குச் செல்லும். புலன்கள், தாம் பொறிவாயிலாகப் பெற்ற செய்திகளை, பொருள்களை இச்சையாக மாற்றி மீண்டும் பொறிகளைத் துரண்டும் அவற்றை அடைந்து அனுபவிப்பதற்காக! ஆதலால், பொறிகளைக் கண்டபடி சுற்றவிடாமல் பாதுகாத்தால் பொறியடக்கம் புலனடக்கம் இரண்டும் ஒருங்கே வந்தனையும். இந்த உயரிய ஒழுகலாறு அமைய வேண்டுமானால் அழகுடையன எல்லாம் ஆராதனைக்கே உரியன, அனுபவிப்பதற்கு அல்ல என்ற கருத்தும், நல்லன வெல்லாம் மற்றவர்களுக்கே என்ற எண்ணமும் தோன்றிடின் பொறியடக்கம் தானே வந்தமையும்; புலனடக்கமும் வந்தமையும். பொறிகள் அடக்கத்திற்குத் திருக்குறள் அற்புதமான ஓர் ஆலோசனை கூறுகிறது. ஆமையை உதாரணமாக வைத்துக் கூறுகிறது.

ஆமை, தனக்கு நலம் பயக்காத சூழல்களில் தனது உறுப்புகளை உள்ளே இழுத்து ஒடுக்கிக் கொள்ளும். தனது நலனுக்கே ஏற்ற சூழ்நிலையில் தனது உறுப்புக்களை வெளியே நீட்டி அனுபவிக்கும். இதுபோல நாமும் நமக்கு நலம் பயக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம். கேள்விகளை கேட்டு அனுபவிக்கலாம், சுவையானவைகளை உண்டு அனுபவிக்கலாம். நம்முடைய ஆன்ம நலனுக்குப் பயன் தராத செய்திகளில் நம்முடைய பொறிகளை ஈடுபட அனுமதிக்காமல் இழுத்து அப்புறப்படுத்தி விடவேண்டும். ஆமையின் பொறிகளைப் போல் மனிதனின் பொறிகள் அடக்கக்கூடியன அல்ல. பின் என்ன செய்யலாம்? நமது பொறிகளுக்கு நாமே நலம் பயக்கக்கூடிய அனுபவங்களைப் படைத்துக் கொடுக்க வேண்டும். ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

(126)

அடுத்து நாவடக்கம் பற்றியும் மூன்று குறள்களில் பேசுகிறது. தீய சொற்களை அறவே விலக்கும்படி திருக்குறள் ஆணையிடுகிறது. இத்தகு அடக்கமுடைமையைச் சார்ந்த பண்புகள் வாழ்க்கையில் தங்கினால் வாழ்வு அறவாழ்க்கை வளரும்.

21. தன்னலம் அற்றலே நல்லொழுக்கம்!

ஒழுங்குகள், ஒழுக்கத்திற்கு முன்னோடி, ஒழுக்கங்கள் நெறிவழிச் செயற்பட ஒழுங்குகள் தேவை. ஒழுக்கம் தன் ஆக்கத்திற்குரியது; பிறருக்குத் தீங்கு செய்யாதது. ஒழுக்கம் பல துறையின. ஒழுக்கம் என்பது விரிந்த பரந்த பொருளுடையது. ஒரு நற்குணம், நற்செயல் மட்டுமே ஒழுக்கத்திற்கு அளவு கோலாக அமையாது.

ஒழுக்கம் இரு வகையினது. ஒன்று தன்னிலை ஒழுக்கம். பிறிதொன்று சமூக ஒழுக்கம். தன்னிலை ஒழுக்கம் தலைப்பட்டு நிற்போர் பலர், சமுதாய ஒழுகலாறுகளின்றி வாழ்வர். சமுதாய ஒழுகலாறுகளில் தலைப்பட்டு நிற்போர் பலர் தன்னிலை ஒழுக்கம் திரிந்து நிற்பர். ஒன்றையன்றிப் பிறிதொன்றில்லை. ஒரோவழி இருப்பினும் பயன் தராது.

தனி நிலையில் வளரும் ஒழுகலாறுகள் உடல் நலத்திற்கு உற்ற துணை; ஆன்ம நலத்திற்கு அரண். அதனால் அறிவு நலம் சிறந்து விளங்கும். முதுமை நிலையிலும் இளமை பேணலாம். எப்போதும் செயற்படலாம். ஓயாது உழைத்திட ஒழுக்க நலம் துணை செய்யும்.

சமூக நல ஒழுக்கங்கள் சமூகத்தைச் சீரமைக்கும். சூழ்நிலை வாழ்க்கைக்கு இசைந்ததாக அமையும்; நல்லெண்ணம்

தி. 5. வளரும்; நம்பிக்கை வளரும்; என்றும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

நாடு பரப்பளவில் பெரியது. பலகோடி மக்கள் வாழ்வது. இந்நாட்டில்-பலகோடி மக்கள் வாழுமிடத்தில் நல்லெண்ணம் இன்றியமையாதது. ஒருவருக்கும், பிறர் ஒருவருக்கும் இடையே நல்லுறவு வேண்டும். மொழி, சமய்ம், எல்லைகள் கடந்த நிலையில் உறவுகள் கால்கொள்ள வேண்டும். இந்த நிலையில்தான் நாடு வளரும்; நலமுறும். ஒரு நாட்டுணர்வு நிலையிலான ஒருமைப்பாட்டில் நிலை கொள்ள தேசிய ஒழுகலாறுகளை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய ஒழுகலாறு என்பது ஒரு நாட்டு மக்களிடையில் வழிவழியாக வளர்ந்து வந்துள்ள ஆன்மநேய ஒருமைப்பாடு, பொதுநல அடிப்படைகள் ஆகியவைகளைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் தேசிய ஒழுகலாறுகள் என்று சில, வளர்ந்து இடம்பெற்றுள்ளன. அத்தேசிய ஒழுகலாறுகள் காலத்திற்கு இசைந்த வகையில் புதுப்பொலிவுடன் பேணப் படுதல் வேண்டும். ஒழுக்க நெறிக்கு அரண் செய்து வளர்வது பொதுநலம். அதாவது பிறர் நலம் பேணுதல். தன்னலம் ஒழுக்கக் கேடு.

"உலகம் வேண்டுவது ஒழுக்கமே!

சுயநலம் தீயஒழுக்கம்!

சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!”

என்றார் விவேகானந்தர்.

வாழ்தல் என்பது இன்பமான ஒன்று. இன்ப வாழ்க்கையே இயற்கை. இன்ப நலன்களுக்காகவே உயிருடன் வாழ்கின்றோம். ஒழுக்க நலன்களே அச்சத்தை நீக்கும். இன்புறுந் திறனளிக்கும்; அமைதி வழங்கும். அதனால் உயிருடன் வாழ்தல் பயனுடையதாகிறது. உயிர் இன்றியமை யாததுதான்! ஆனால், அதனினும் நல்லது ஒழுக்கம்.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஒம்பப் படும்."

(131)

22. நம் கடமை

ஒழுகுதல், ஒழுக்கம் என்று பாராட்டப் பெறுகிறது. அதாவது ஒருவருடைய வாழ்க்கை நடைமுறைகள் ஒழுக்கம் என்று கணிக்கப்பெறும். ஒருவர் தனக்கும் தன்னோடு வாழும் மற்றவர்களுக்கும் கேடுகள் வாராது வாழ்வது ஒழுக்கமுடைய வாழ்வாகும்.

இப்பிறப்பு, சிறப்புடைய ஒன்று. இதற்கு இணையானது எதுவும் இல்லை. இதுவும் ஒரே ஒரு தடவைதான். தேர்வுகள் பல தடவை எழுதுவது போல, வாழ்க்கைத் தேர்வு பல் தடவை எழுத இயலாது; எழுத முடியாது. ஆதலால் வாய்த்த இந்தப் பிறப்பைப் பயனுறுவகையில் வாழ்ந்து, வாழ்க்கையின் பயன் காணவேண்டும்.

ஒழுக்க நிலையில், தற்சார்பான ஒழுக்கம் முதல் நிலையினது. அதாவது ஒருமனிதன் தன்னைத் தான் கொண்டொழுகுதல்; தன்னுடைய சுவைப் புலன்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல். உலகின் எல்லாவித நோய்களுக்கும், துன்பங்களுக்கும், தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம், சுவைநுகர்வின் பாற்பட்ட இழிவுத் தன்மையே! வளர்ந்து வரும் மருத்துவ மனைகள், காவல் நிலையங்கள் ஆகியன மானிடரின் சுவைப் புலன்கள் கெட்டவழித் தோன்றும் நோய்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் மானுடத்தை மீட்கவேயாம். மானிடர் புலன்களின் மீது கவனம் செலுத்தித்துய்மை காக்க வேண்டும். புலன்கள் தூய்மைக்குத் துணை செய்வது ஆசைகளிலிருந்து தப்பிப்பது. தேவையை அடைய நினைப்பது ஆசையல்ல. அளவற்று வெறி பிடித்த நிலையில் அடைய நினைப்பதே வெறுக்கத் தக்க ஆசை.

புலன்களில் தூய்மை காத்தால், தாமே பொறிகளில் தூய்மை காணப்பெறும், பொறிகள் மீது தனி ஆணை செலுத்தி நெறிப்படுத்திக் கொள்ளவேண்டும். நமது வாழ்க்கை என்ற தேர் பத்துக் குதிரைகள் பூட்டிய தேர் ஆகும். இந்தப் பத்துக் குதிரைகள் புலன்களும் பொறிகளுமாகும். இவைகளின் பிடி நமது கையில் இருப்பதே ஒழுக்கம் நிறைந்த வாழ்வு. ஒழுக்கமுடையார் என்றும் நலமுடன் வாழ்வர்; வெற்றிகளுடன் வாழ்வர்; பலருக்கும் பயன்பட வாழ்வர். வாழ்க்கையின் பெரும்பகுதி ஒழுக்கத்தால் சிறப்பது. வாழ்க்கைப் பயணத்தின் நெடிய வரலாறு ஒழுக்கத்தாலேயே எழுதப் பெறுகிறது.

அடுத்து ஒழுக்கத்தின் இரண்டாவது நிலை, சமுதாய ஒழுக்கம் எனப்படும். அதாவது பலருடன் ஒத்திசைந்து வாழ்தல். விதண்டா வாதங்களும், பிணககும், பகையும் சமூகத்தை அரித்து அழிக்கும் கரையான்களாகும். சமுதாயமே தனிமனிதனை உருவாக்கும் பட்டறை, ஆதலால், சமுதாய ஒழுகலாறுகள் கண்டிப்பாகப் பின்பற்றத் தக்கன. சமுதாயத்தின் மதிப்பைக் கெளரவித்தலில் தனிமனித ஒழுகலாறு சிறப்படைய வழி உண்டு. மதிப்பீட்டுப் பொறுப்புள்ள சமுதாய அமைப்பு, சமுதாய ஒழுக்கம் சீர்கெடின் தனிமனித ஒழுகலாறும் சிறக்க இயலாது. ஆக ஒழுக்கமுடையராக வாழ்தலே வாழ்க்கை.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்."

(131)

என்பது ஒரு சிறந்த குறள். ஆம்! ஒவ்வொருவருக்கும் அவர்தம் உயிர்பெரியது; எல்லாவற்றிலும் பெரியது. சாக யாரும் விரும்புவதில்லை. அதனால்தான் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிராகிய மானிடன் வரையில் எல்லா உயிர்களும் உயிர்காப்பு முயற்சியில் முன்னணியில் நிற்கின்றன. உயிர் காப்பு முயற்சியின் அளவுக்கு ஒழுக்கப் பாதுகாப்பு முயற்சி கால்கொள்ளவில்லை. உயிரோடு வாழ்தல், வாழ்தலின் பயன் காண! அதாவது வையகம் பயனுற வாழ்ந்து நிலத்திடை நீள்புகழ்பெற. இதற்கு ஒழுக்கம் துணை செய்யும். உயிரோடு வாழ்ந்தும் ஒழுக்கமிலாமையால் நோய்களுக்கு இரையாகியும், சமுதாய ஒழுகலாறு இன்மையால் ஊரவர் பழி துற்றவும் வாழ்ந்து பயன் என்ன? இத்தகையோர் வாழாமையே கோடி தரும்.

குடிமை-குடிமைப்பண்பு- Citizenship என்பது புதிய நாகரிகத்தின் வடிவம். ஆனால் திருக்குறள் குடிமைப் பண்பு பற்றிப் பேசுகிறது.

"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.”

(133)

அதாவது, நாடு தழுவிய நிலையில், ஒத்தது அறிந்து ஒழுகுதலே குடிமைப் பண்பு. நமது நாட்டுக்கு என்று சில நாட்டு ஒழுகலாறுகள் தேவை. முதலாவது நாட்டு ஒழுக்கம் சமயச் சார்பற்ற (secular) ஒழுக்கம். இரண்டாவது பல மொழிகளைக் கற்றல். மூன்றாவது சுதந்திரத்தை - ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்தல். இவைகளைத் தேசீய ஒழுக்கங்கள்-என்று கூறலாம். இந்த ஒழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுவது இந்தியக் குடியுரிமை பெற்ற ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

23. ஒழுக்கமுடைமை

மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்றசொல் மக்கள் மன்றத்தில் பரவலாகப் பேசப் பெறுவதே. தீய பழக்கங்கள் வேறு; ஒழுக்கம் வேறு. தீய பழக்கங்களை ஒழுக்கத்திற்குள் அடக்கலாம். ஆனால் ஒழுக்கத்திற்குள் தீய பழக்கம் வராது. கள்ளுண்ணல் முதலிய குற்றங்கள் தீயபழக்கங்கள். இந்தக் குற்றங்கள் ஒழுக்கக் கேடுகள் அல்ல.

ஒழுக்கம்-ஒழுகுதல், மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது-வாழ்வது ஒழுக்க முடைமை. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி, மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு. மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு செய்வனவெல்லாம் தீய பழக்கம். ஒழுக்கக்கேடு தவிர்க்கத்தக்கது. மனிதனைச் சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வனவெல்லாம் ஒழுக்கமுடைமை.

"உலகம் வேண்டுவது ஒழுக்கமே!

சுயநலம் தீய ஒழுக்கம்!

சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!”

என்றார் விவேகானந்தர். சுயநலம் தீய ஒழுக்கம். பொது நலத்திற்கு எதிரான சுயநலம் தீய ஒழுக்கம், சமூக வாழ்வைச் சிதைக்கும் சுயநலம் தீய ஒழுக்கம்.

நாம் தமிழர்கள், நாம் இந்தியர்கள், நாம் மனிதர்கள் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. நாம் தமிழர்களாகவும் இந்தியர்களாகவும் மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கம்.

நாடுகள் சுதந்திரம் பெற்றபின் "குடிமைப் பயிற்சி” என்பது மலிந்து வருகிறது. குடிமைப் பண்பு என்றால் என்ன? ஒருவர் வாழும் ஊரோடு ஒத்திசைந்து வாழ்தல் குடிமைப் பண்பு. இனம், மொழி, சாதி, மதச் சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும். எல்லாரும் ஒரு குலம்; எல்லாரும் ஒர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும்.

நல்லொழுக்கம் நாட்டின் குடிகளைத் தழீஇயதாக விளங்கும். நல்லொழுக்கத்தை ஒருமைப்பாடு என்று கூறினாலும் கூறலாம். மனிதகுல ஒருமைப்பாடே நல்லொழுக்கம். எல்லா உயிர்களிடத்திலும் எத்துணையும் பேதமுறாது, மகவென ஒக்கப் பார்த்து ஒழுகுதலே ஒழுக்கம்.

குடிமைப் பண்பிலாதார், ஒருமைப்பாட்டுணர்வு இலாதார், உலகந்தழீஇய செந்தண்மை இலாதார் ஒரு நாட்டின் குடிமக்களாதல் இயலாது. ஏன்? அவர்கள் மனிதக் கணக்கில்கூட வரமாட்டார்கள். அவர்களை இழிந்த பிறப்பு என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.

ஒன்றே குலம் - எல்லாரும் ஒருகுலம் - எல்லாரும் ஓர் இனம். ஒப்புரவுடன் ஒத்திசைந்து வாழ்தல். உலகம் உண்ண உண்ணல், உலகம் உடுத்த உடுத்தல், வாழ்வித்து வாழ்தல் - இதுவே ஒழுக்கம்.

இந்த ஒழுக்கம் வளர, உழைத்து உண்ணுதல், உண்பித்து உண்ணுதல் என்ற நடைமுறை துணை செய்யும்.

இந்த நல்லொழுக்கத்திற்குப் பகையான ‘பிறர் பங்கைத் திருடுதல்’, பிறர் வருந்த வாழ்தல் ஆகியன தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.

ஒழுக்கமே மானுடத்தின் விழுப்பம்; சிறப்பு. ஒழுக்கமுடைய உலகம் வளரும்! வாழும்!

24. ஒட்ட ஒழுகல்

ஒழுக்கம் உடையராதல் அரிது. ஆயினும் ஒழுக்கம் உடையராக வாழ்தலே வாழ்தல். "ஒழுக்கம்" என்ற சொல் பலராலும் கேட்கப் பெறும் சொல் ஆயினும் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு மக்கள் மன்றத்தில் கற்பிக்கப் பெற்றுள்ள பொருள். மிகச் சுருங்கியது. அதாவது ஆண் பெண் உறவுகளில் குற்றம் ஏற்படாமல் வாழ்வதே ஒழுக்கமுடைமையாகும் என்பது வலிமை சான்ற ஒரு கருத்து. இதில் தவறில்லை; உண்மை இருக்கிறது. ஆயினும் பெண் வழி நேரிடும் பிழைகளைத் தவிர்த்தல் மட்டுமே ஒழுக்கமுடைமையாகாது. இது ஒழுக்கமுடைமையின் ஒரு கூறு.

மேலும் கள்ளுண்ணல், கவறாடல் முதலியன செய்யாமை ஒழுக்கம் என்று கூறுவாரும் உளர். இதிலும் உண்மை இருக்கிறது. ஆயினும் கள்ளுண்ணாதிருத்தல், கவறாடாதிருத்தல் மட்டும் ஒழுக்கமுடைமையாகாது. இவையும் ஒழுக்கத்தின் கூறுகளே! இந்த அளவில் மட்டும் தான் ஒழுக்கம்பற்றி நமது நாட்டு மக்கள் அறிந்திருக்கின்றனர். கள்ளுண்ணாதிருத்தல் கவறு (சூது) ஆடாதிருத்தல், முறை தவறான பால் ஒழுக்கங்கள் மேற்கொள்ளாதிருத்தல் மட்டும் உடையவரே ஒழுக்கமுடையவர் என்று கருதும் கருத்து நமது சமுதாய அளவில் மேம்பட்டிருக்கிறது. இவைகள் ஒழுக்கத்தின் கூறுபாடுகளே. ஆனால் நிறை நலம் மிக்க ஒழுக்கம் எது?

நாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். இந்த உலக சமுதாயம் நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது; நாம் இந்த மானுட சமுதாயத்துக்குள் சங்கமமாக வேண்டும். மானுட சமுதாயத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஒழுகி வெற்றி பெறுதல் வேண்டும். உலக நடைமுறை தீயதாக இருக்கலாம். அத்தீய ஒழுக்கமும் ஏற்புக்குரியதா என்ற கேள்வி தோன்றும். இல்லை. இல்லை. தீயஒழுக்கத்தை ஏற்றுக்கொள்ளல் இல்லை! உலகத்தைப் புரிந்து கொண்டு அதற்குத்தக ஒழுகுதல் என்பதே பொருள். உலக இயலுக்குத் தக்கவாறு என்றால் ஒத்து ஒழுகுதல் என்று மட்டுமே பொருள் கொள்ளுதல் வேண்டா. உலக நடையினைப் புரிந்துகொண்டு அதனோடு மோதாமல் ஒத்துப் போகக் கூடியதாயின் ஒத்து ஒழுகுதல் வேண்டும். ஒத்து ஒழுக இயலாதது எனில் அதனை நாம் விரும்பும் நிலைக்கு மாற்ற முயலுதல் வேண்டும். இங்ஙனமின்றி முரண்பட்டு நின்றும், கலகங்களை வளர்த்தும் வாழ்தல் கூடாது.

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் மேலானது மனித நேயமே. ஆதலால் உலக மாந்தர்க்கு நல்லது செய்யும் வழியில் வாழ்தலே ஒழுக்கமுடைய வாழ்க்கை. உலக மானுட சமுதாயத்துடன் ஒத்து, உடன் நின்று வாழ்தலே ஒழுக்கமுடைமை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்”

(140)

25. பொறையுடைமை

பொறுமை-பொறுத்தாற்றுதல், பொறுமை பலவகை. துன்பம் வந்துற்றபோது பொறுத்துக் கொள்ளல், நோய் வந்த போது பொறுத்துக் கொள்ளல், பிறர் கூறும் பழிச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளல். பிறர் செய்யும் ஊறினைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளல் என்று பல வகையாகப் பிரித்துணரலாம். ஆயினும் பொறுத்தாற்றுதல் என்பது ஒரே பண்புதான். தன்னைச் சார்ந்து தன்னாலேயே உருவாக்கிக் கொள்ளப் பெற்ற துன்பங்களுக்கு காரணம் அவரவரே. இதனை அவர்கள் தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த இடங்களில் பொறுமை இயற்கை. ஆனால் இந்த இடங்களில் கோபம் வந்தால் கூட ஒரே வழி வரவேற்கலாம். இங்கே தங்களுடைய துன்பங்களுக்குக் காரணமான தவறுகளை - அறியாமை, வறுமை முதலியவற்றை நினைந்து அவற்றினோடு போராடத் துணியலாம். இந்த வகை வரவேற்கத் தக்கதேயாம்.

ஆனால் பிறர் தன்னை இழித்துப் பேசியபொழுது, பிறர் தமக்குக் கொடிய துன்பங்களைச் செய்த பொழுது - உடலுக்கு ஊறு முதலியன செய்த பொழுது பொறுமையை மேற்கொள்ளல் அரிது. இந்த மாதிரித் தருணங்களில் பொறுமை காட்டலே பொறுமை எனப்படும். போற்றுவதற்குப் பதிலாகத் தூற்றுபவர்களிடம் பொறுமையாக இருத்தலே பொறையுடைமை. "பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்றது கலித்தொகை. நாடவர் பழித்துரையைப் பூணாக ஏற்றுக் கொண்டாலே உய்தி பெறலாம் என்பது திருவாசகக் கருத்து. பண்புகளில் சிறந்தது பொறையுடைமை. அதே போழ்து பொறையுடைமைப் பண்பு ஆளுமையைச் சார்ந்து விளங்க வேண்டும். ஆளுமை இல்லாதவர்களிடம் உள்ள பொறையுடைமைப் பண்பு ஆகாது. இதற்குப் பெயர் கோழைத்தனம். நாட்டு மக்கள் பொறையுடைமையின் பெயரால் கோழைகளாகக் கூடாது. ஆளுமைப்பண்பு தழுவிய பொறையுடையவராய் இருத்தல் வேண்டும். இதுவே திருக்குறளின் கருத்து.

ஆடாது, அசையாது - கற்களாக உடைத்தாலும் பொறுமையாக இருக்கும் மலையைப் பொறுமைக்குச் சான்றாகத் திருக்குறள் கூறவில்லை. திருக்குறள் பொறையுடைமைக்கு எடுத்துக் காட்டாக நிலத்தைக் கூறுகிறது. ஏன்? நிலம் உழப்படுகிறது. உழுவதன்மூலம் நிலத்திற்கு ஊறு செய்யப்படுகிறது. நிலம் மண்வெட்டி கொண்டு கொத்தப் படுகிறது; வெட்டப்படுகிறது. நிலத்தின் பரப்பில் கீறல்கள், வெட்டுப் பள்ளங்கள் தோன்றுகின்றன. ஆயினும் நிலம் இத்துன்பங்கள் செய்தாரைச் சினப்பதில்லை; அவருக்குத் தீமை செய்வதில்லை. மாறாகத் தனக்குச் செய்யும் ஊறுகளையே ஆக்கமாக எடுத்துக் கொண்டு நிலம் செழுமையை அடைகிறது; வளம் கொழிக்கிறது. அந்த வளத்தினைத் தனக்குத் தீமை செய்த மனித குலத்திற்கே திரும்பத் தந்து விடுகிறது. அவர்கள் வாழ்க்கையை வளமாக்குகிறது; உயர்த்துகிறது. மலைக்கு இந்த இயல்பில்லை. மற்றவர்கள் மலையைக் குடைந்து கல் உடைத்து எடுத்தால் மலை பொறுத்துக் கொள்வது உண்மை; ஆனால் தன்னை அழித்துக் கொள்கிறது; கல் உடைப்பவனுக்கும் நெடிய பயன் தருவதில்லை. ஆனால் உழப்பெறும்-கொத்தப்பெறும் நிலம் அழிவதில்லை. தனக்கு ஏற்பட்ட அழிவையே ஆக்கமாக மாற்றிக் கொண்டு வளம் கொழிக்கிறது; வாழ்விக்கிறது; நிலையாக வாழ்விக்கிறது. அதுபோல் பொறுமைப் பண்பின் மூலம் ஒரு மனிதன் அல்லது ஒரு இனம் அழிந்துவிடக் கூடாது; வளர வேண்டும். பொறுத்தல் என்ற பண்பு ஆக்கத்தின் பாற்பட்டது. "பொறுமையும் சாந்தமும் ஒருவனுக்கு ஆற்றலைக் கொடுப்பன” என்றார் லேஹண்ட்

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

(151)

26. பொறுமை போற்றுக!

இந்த உலகில் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்; நியதியும்கூட! ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லையே! என்ன செய்வது? நாம் விரும்பாதன பல நடக்கின்றன! நன்மைகளைப்போலக் காட்டித் தீமைகள் செயல்படுகின்றன. பொய்யர்களின் மெய் அரங்கேறுகிறது. பழிதுாற்றும் படலமே ஓதப் பெறுகிறது.

நண்பர்கள் பகைவர்களாகின்றனர்! மலடிகள் மகப் பேறு மருத்துவ ஆலோசனைகள் கூறுகின்றனர். அதுவும் கருவுயிர்க்கும் அறையில் அல்ல; அரங்கில்! என்ன செய்வது? ஆத்திரப்படுவதில் பயனில்லை. பொறுமையாக இருத்தல் வேண்டும்!

பயன்படு வாழ்க்கைக்கு வாயில் பொறுமையே! மற்றவர்கள் தீயையே அள்ளிக் கொட்டினாலும் பொறையுடைய வாழ்க்கையை அது ஒன்றும் செய்யாது! கூளம், குப்பையாக இருந்தால் பற்றி எரியும்! இல்லையானால் தீ அவியும். இதுவே நடைமுறை!

பொறுமைக்கும் எல்லையுண்டு என்பர் சிலர்! இது தவறு. பொறுமைக்கு எல்லையே இல்லை! அப்படியே எல்லை உண்டு என்று கருதினாலும் அந்த எல்லை, "தீங்கு செய்பவன் திருந்தி நலம் செய்பவனாக மாறுவதே பொறுமையின் எல்லை" என்றார் முகமதுநபி.

நிலம் பயன்பாடுடையது. பயன்படு பொருள்கள் பலப் பல தருவது. நிலமின்றேல் வாழ்வு இல்லை. இந்த நிலத்தையே நாம் அகழ்ந்தும் துன்புறுத்துகின்றோம். ஆயினும் நிலம் அகழ்வாருக்குத் தீங்கு தருவதில்லை. மாறாகப் பயன்களையே தந்து வாழ்விக்கிறது.

அதுபோல் நாம் நம்மை இகழ்வார் மேல் கோபம் கொள்ளக் கூடாது. முடிந்தால் குற்றங்களைத் திருத்த வேண்டும் அல்லது பொறுக்க வேண்டும். பொறுத்தாற்றும் பண்பு ஒரு வலிமை; வெற்றிகளைத் தருவது; இன்பம் தருவது.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

(151)

27. பொறுத்தாற்றும் பண்பு

பொறுத்தாற்றல், பண்புகள் அனைத்திற்கும் மேம்பட்ட பண்பாகும். பொறுத்தாற்றல் பண்பால் பகைமை தடுக்கப்படுகிறது; திருத்தங்கள் காண்பதற்குரிய வாயில்கள் தோன்றுகின்றன; வலிமையும் தகுதியும் வளர்கின்றன. மகிழ்ச்சியின் திறவுகோலாகப் பொறுத்தாற்றும் பண்பு விளங்குகிறது.

உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கும் அதிகமான தன் மானம், பெருமை ஆகியன பற்றிக் கவலைப்படுதல், தேவையில்லா ஒரு மதிப்புணர்ச்சியைத் தமக்குத் தாமே உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியன பொறுத்தாற்றும் பண்புக்குத் தடையானவை. சில நாள் பொறுத்திருந்தாலே பல சாதனைகள் செய்யலாம். காலம் கருதிக் காத்திருப்பின் சல்லடையில்கூடத் தண்னணீர் எடுத்துச்செல்ல இயலும். ஆம்! தண்ணணீர் பணிக்கட்டியாக உறையும்வரை காத்திருக்க வேண்டும்.

வாழ்க்கையின் இயல்பே கூடிச்சேர்ந்து வாழ்தல்தான். அதுவே மானுட சாதியினுடைய படைப்பின் நோக்கம். கூடி வாழ்தல் எளிதான செயலா? அம்மம்மா! உயிர்க்குலம் அனைத்தினோடும் கூடக் கூடி வாழ்தல் இயலும், பாம்பினைப் பழக்கிவிடலாம். ஆனால், மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது எளிமையான காரியமன்று!

மானுட ஜாதி தன் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே சண்டை போடுதலைத் தொடங்கிவிட்டது. ஆம்! கலகங்களையும் சண்டைகளையும் நேரிடும் அவமானங்களையும் கண்டு வருந்துதல் கூடாது. திருத்தங்கள் காண முயல வேண்டும். குற்றங்களுக்குத் திருத்தம் காணும் முயற்சியிலேயே கூட்டுறவு வெற்றிபெற இயலும். திருத்தம் காண இயலாது போனால், பொறுமையாக இருந்தாக வேண்டும். சண்டைபோட்டுக் கொள்வதும் பிரிவதும் விரும்பத்தக்கனவல்ல.

பொறுத்தாற்றும் பண்பை வளர்த்து உறுதிப்படுத்துவது நம்மை வளர்த்துக் கொள்வதேயாகும். வலிமை, தூய்மை யாரிடம் இருக்கிறதோ அவர்களை எந்த இழிவும் சென்றடையாது. அவதூறுகள் நெருப்பிடை வீழ்ந்த உமியெனக் கருகிப்போம். சிலர் கோழை என்றுகூறி ஆறுதல் பெறுவர். அதனால் நமக்கென்ன குறை?

குப்பை கூளம் இல்லாத இடத்தில் நெருப்புப் பற்றி எரியுமா என்ன? ஆதலால் பொறுத்தாற்றும் பண்பைப் பெற வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; தூய்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதிகள் பலவற்றையும் முயன்று அடைய வேண்டும்.

இப்படி வளர்ந்த நிலையில் காட்டும் பொறுமைதான் பொறுமை; வலிமை சார்ந்த பொறுமை. தகுதி மிகுதியும் உடையோரின் பொறுமையே வாழ்வளிக்கும், வையகத்தின் வரலாற்றை இயக்கும் திருக்குறள், "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்."

(158)

என்று கூறி வழி நடத்துகிறது.

ஆம்! மற்றவர் பழிதூற்றினால் அதனால் உண்மையில் விளைவது; தகுதியில்லாதவராக இருந்தால் சினம், பகை, கலகம்; தகுதிமிகுதியும் உடையோராக இருந்தால் திருத்தம் காண முயற்சி செய்வர்; பழிதூற்றுவாரையும் வாழ்த்துவர்.

பரபரக்க வேண்டாம்; உணர்ச்சி வேண்டாம்; தேர்ந்து தெளிக! குப்பைகள் அகற்றப்பட வேண்டியவையே! குப்பைகள் உடைய இடங்கள் அகற்றப்படுவன அல்ல; அகற்றவும் இயலாது. குற்றங்களைத் திருத்துக. பயன் கொள்ள முயலுக. இவ்வழி பொறுத்தாற்றும் பண்பு வளரும்; நாளும் குற்றங்களிலிருந்து விடுதலை பெறுக; வளர்க; வலிமை பெற்றுயர்ந்திடுக; தகுதிகள் பலவும் பெற்று உயர்ந்திடுக. எல்லாரும் அணைவர். கூடி வாழ்ந்திடலாம். கோடி நன்மை பெறலாம்.

28. பொறுமை ஆக்கம் தரும்!

நிலம் கொத்துதல், உழுதல், தோண்டுதல் ஆகிய செயல்களின் வழி, துன்புறுத்தப்படுவது, உலகில் மாந்தர் வாழ்வியலுக்குரிய செயற்பாடு. ஆனால், நிலம் கொத்தப் பட்டும், வெட்டப்பட்டும் துன்புறுத்தப் படுவதனால்தான் நிலம், நிலத்தின் தன்மையை இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது.

கொத்தி உழப்பெறாத நிலம் மண் அரிப்பு நோய்க்கு இரையாகும். அது மட்டுமின்றி நிலம் உழப்பெற்றாலே வான் மழையின் நீரை-வாங்கித் தன் மடியில் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது; பசுமைப் புரட்சி செய்யும் ஆற்றலைப் பெறுகிறது.

உலகுயிர்க்கெல்லாம் உணவு அளித்துக் காப்பாற்றும் வேள்வியை நிலம் செய்ய முடிகிறது. நிலம் தன்னை அகழ்ந்து தரும் துன்பத்தினையே தனக்கு ஆக்கமாக மாற்றிக் கொள்கிறது; உழுவாரையும் வாழ்விக்கிறது. நிலத்தின் பொறுமை, ஆக்கமாகிறது; உயிர்க் குலத்தின் வாழ்வாகிறது.

மனிதனும் பொறுத்தாற்றும் பண்பு காத்தல் வேண்டும் பொறுத்தாற்றுவோரை, அறியாதார் கோழை என்று ஏளனம் செய்வர். அதனால் என்ன? தீமை வராது; நன்மையே பெருகி வளரும்! கூளம் குப்பைதான் தீக்கு ஆக்கம் - தீமையுடையார் தான் தீமைக்கு ஆக்கம். பொறை யுடையோர் முன் தீமை அழியும். நம்மில் வலியோர் தூற்றினால் பொறுத்துக் கொள்வது போலவே நம்மில் கீழோர் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறையுடைமை; பொறுத்தாற்றும் பண்பு.

பிரார்த்தனைக்கு ஈடானது பொறுத்தாற்றும் பண்பு. எல்லை கடந்த நிலையில் நமக்குப் பிறர் இன்னாதன செய்யும் பொழுது காட்டப்படுவதே பொறுத்தாற்றும் பண்பு - ஏன்? பொறுத்தாற்றும் நெறியின் வழி, விதியைக் கூட வெல்லலாம். தீமைக்கும் தீவினைக்கும் வாயில் சினமே!

சினம் தவிர்த்துப் பொறுமை மேற்கொண்டொழுகின் தீயவினையையும் அதாவது போகூழையும் ஆகூழாக மாற்றலாம். பொறுத்தாற்றும் பண்பு வெற்றிகளைத் தரும். நிலத்தினைப் பார்ப்போம். நிலத்தின் பொறுத்தாற்றும் பண்பை நமது அணியாக ஏற்போம்! நமக்கு இன்னாதன செய்வோரையும் ஏற்போம்! வாழ்விப்போம்!

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை."

(151)

29. அழுக்காறு திண்டா உள்ளம் பெறுக!

மனிதன் வெற்றி பெறுவது குணநலன்களினாலே யாம். குணநலன்களுடன் ஊக்கமும், திறனும் அமையின் மேலும் புகழ்மிக்க வாழ்க்கை கிடைக்கும். தீய குணங்கள் தாமே விலகா. நற்குணங்களைப் பயில்வதன் மூலமே தீய குணங்கள் அகலும். நற்குணங்கள் வளர்க்கப்பெறுவன. தீய குணங்கள் தாமே வளர்வன. மனத்தைக் கெடுக்கும் தீய குணங்களுள் தலையாயது அழுக்காறு. அதாவது மற்றவர் பெறும் பெருஞ் சிறப்புக்களைக் கண்டு மகிழ இயலாத உள்ளம் பெறுதல்; மற்றவர் பெறும் பேறுகளைப் பாராட்டும் உணர்வின்மை; மற்றவர் பெற்றுள்ள பெருஞ் சிறப்புக்களை அங்கீகரிக்க மனம் இல்லாமல் குற்றங் குறைகளைக் கூறுதல். இவையெல்லாம் அழுக்காற்றின் இயல்புகள். அழுக்காறுடையான், தான் ஒன்றைப்பெற முயல மாட்டான். மற்றர்கள் பெற்றிருப்பவைகளுக்குக் களங்கம் கற்பிக்கவே முயற்சி செய்வான். அதனால், தான் நலம் பெறும் முயற்சிகளில் அவனுடைய மனம் தலைப்படாது. கல்வி போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம் என்று சிலர் அறியாமல் கூறுவர். இது தவறு. ஒரு பொழுதும் அழுக்காறுடையார் நன் முயற்சியில் ஈடுபடார். நன்னெறியில் நிற்க ஒருப்படார். அழுக்காற்றினைப் “பாவி” என்று கூறியது திருக்குறள்.

அழுக்காறு என்ற தீயகுணம் நம்மைத் தீண்டாமல் இருக்க வேண்டுமானால் மற்றவர்கள் பெற்றுள்ள தனித் திறன்களைக் கண்டு உளமாரப் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பெற்றுள்ள செல்வம் முதலியன நியாயமானவையே என்ற எண்ணம் தேவை. இது மட்டும் போதாது. மற்றவர்களுடைய குற்றங் குறைகளைக் கண்டு எக்காரணத்தைக் கொண்டும் மகிழக் கூடாது. அதற்கு மாறாக இரக்கம் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் வாழ்ந்து பழகின் அழுக்காறு எனும் தீய குணம் மனத்தைத் தீண்டாமல் காக்க இயலும்.

அழுக்காறு - பொறாமைக் குணம் உடையவர் உள்ளம் ஊக்கத்தை இழத்தல் இயற்கை. ஊக்கத்தை இழந்த பின் ஏது ஆக்கம்? ஆதலால், அழுக்காற்றுக் குணமுடையவர்கள் ஒரு பொழுதும் வளரமாட்டார்கள்; வளமுடையவராக மாட்டார்கள். இந்த நியதிக்கு மாறாக அழுக்காறே பிறவிக் குணமாக உடையவர்கள் செல்வம் பெற்றிருந்தால் அந்தச் செல்வம் நியாயத்தின் பாற்பட்டதல்ல; நீதியொடு தொடர் புடையதல்ல. அழுக்காறுடையாரிடம் உள்ள செல்வம். களவால் ஆகிய செல்வமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். தேர்ந்து தெளிக! அது போலவே, அழுக்காறிலாது தூய மனப்பான்மையுடன் வாழும் மனிதர்கள் வறியவர்களாக வாழ்தலும் நெறியன்று; முறையுமன்று. இதிலும் முறை பிறழ்வுகள் உள்ளன! தேர்ந்து தெளிதலே முறை!

அறிவியல் வளர்ச்சி, ஊக்கம் நிறைந்த உள்ளம், நன்மையைப் பாராட்டி மகிழும் இயல்பு, பிறர் பெறும் பெருஞ் சிறப்புக்களை மதித்துப் போற்றும் பண்பு ஆகியன அழுக்காறு தீண்டா உள்ளம் பெற வேண்டிய பழக்கங்கள்; வழக்கங்கள்!

30. பொறாமை

பிறருடைய செல்வம், புகழ் முதலியன கண்டு மகிழ முடியாத குணம் பொறாமை எனப்பெறும். பொறாமையைத் திருக்குறள் அழுக்காறு என்று கூறுகிறது. அதாவது அழுக்கு நிறைந்த வழி. நமது நாட்டில் அறிந்தும் அறியாமலும் நல்லவைகளின் அடிப்படையில் அழுக்காறு கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

ஆயினும் அழுக்காறு கொள்ளுதல் எந்த நிலையிலும் தீதே. அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. அழுக்காற்று நெஞ்சமுடையார் நல்லவைகளையும் கூடத் தாம் பெற முயற்சி செய்ய மாட்டார்கள். நல்லவைகளைப் பெற்றிருப்பவர்கள் மாட்டு அழுக்காறு கொண்டு அவர்களுக்குக் குற்றங் குறைகளைக் கற்பித்துப் புழுக்கங் கொள்வர்! பழி துாற்றுவர்.

அதனால் அழுக்காறுடையார் மாட்டு உயர்வு தோன்றவும் இயலாது. உலக மகாகவி ஷேக்ஸ்பியர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்! எதற்கு? அழுக் காற்றிடம் சிக்கிச் சீரழியாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக!

“O Beware My Lord of Jealousy" என்று கூறுகிறார். "அழுக்காறு நெஞ்சம் பெறுதல் சாதலுக்கு நேரானது" என்பார் காட்டன். ‘Envy will sting itself to death’ என்பது அவர் கூற்று. அழுக்காறு உடையார் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சான்றாக ஒரு முடவன் (நொண்டி) தன்னுடைய காலைப் பழுது நீக்கிச் சீரமைத்துக் கொள்ள விரும்புவதில்லை; முயற்சி செய்வதில்லை. அடுத்தவன் கால் முடமாகி விட்டால், தான் நடக்க இயலும் என்று நினைப்பான். இதற்கே அழுக்காறு என்று பெயர்.

தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. "தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபச குனமாக வேண்டும் என்று நினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்” என்பர். இத்தகைய அழுக்காறு தீமைகளின் பிறப்பிடம்.

நற்குணம் இம்மியும் இல்லாத இழி பிறவிகளே அழுக்காறுடையராய் இருப்பர். அழுக்காற்றினைத் திருக்குறள் ‘பாவி’ என்றே திட்டுகிறது. இன்று எங்கும் பரவிக் கிடப்பது அழுக்காறேயாம்.

அழுக்காறில்லாத நெஞ்சம் பெறுதல் நல்லொழுக்கத்தின் இயல்பாகும். அழுக்காற்றினை எங்ஙனம் அகற்றுவது? அழுக்காறு வந்தபின் அகற்றுவது கடினம். அழுக்காறு வராமல் பாதுகாத்துக் கொள்வதே நல்லது. வருமுன் பாதுகாப்பு வேண்டும்.

பிறருடைய செல்வத்தை, செல்வாக்கைக் கண்டால், கேட்டால் மகிழும் இயல்பினைப் பெறுதல் வேண்டும். மகிழ்ந்தால் மட்டும் போதாது. அவர்களுடைய செல்வம், செல்வாக்கைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள நாம் துணையாக இருக்க வேண்டும்.

“அறனாக்கும் வேண்டாதான் என்பான் பிறனாக்கும்

பேணாது அழுக்கறுப் பான்”

(163)

அதாவது, மற்றவர்களுடைய செல்வம், செல்வாக்குகளைக் கண்டபொழுது மகிழ்ச்சியடையும் உள்ளத்தினைப் பெறுதல் வேண்டும். பாராட்டுகின்ற குணம் பெற்றிருத்தல் வேண்டும். அப்போதுதான் அழுக்காறு நம்மைத் தீண்டாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும்.

எப்போதும் செல்வம், செல்வாக்கில் தம்மில் உயர்ந்திருப்பாரை நோக்கி அண்ணாந்து பார்க்கக் கூடாது. அதற்கு மாறாகத் தம்மில் கீழிருப்பாரை எண்ணி அமைதி பெறும் இயல்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பழக்கங்களில் அழுக்காறு வந்து பற்றாது.

அழுக்காறு தீது! அழுக்காற்றினின்று விலகுக! முற்றிலும் விலகுக! பிறர் வாழ்வு நலன்கள் கண்டு மகிழ்க! ஊன் உருக உளம் உருகப் பாராட்டுக! அவற்றை இழக்காது துய்க்கும் வண்ணம் பாதுகாத்திடுக. பெறாததைப் பெற முயலுக! பெற்றவர்மீது புழுக்கம் கொள்ளற்க! உளம் குளிரப் பாராட்டுக! வளரும் வழி இது! அழுக்காறு இல்லாத வாழ்வே சிறப்புடைய வாழ்வு.

31. பொறாமை கொள்ளற்க!

அழுக்காறு - அழுக்கு நிறைந்த வழி. அதாவது நன்மையும் இன்பமும் இல்லாத வழி. இத்தகு அழுக்கு வழியில் வாழ்தல் வளர்ச்சிக்குத் துணை செய்யாது. இனியவை கூறல் பற்றிப் பல குறட்பாக்கள் இயற்றிய திருவள்ளுவர். "அழுக்காறு என ஒருபாவி” என்று அழுக்காற்றினைத் திட்டுகிறார்.

ஆம்! அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. மாறாகத் தீமையைத் தரும். இந்த அழுக்காறு தான் மக்கள் மத்தியில் "பொறாமை" என்று பேசப்படுகிறது. அதாவது மற்றவர்களின் ஆக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமை பொறுத்துப் போற்ற முடியாமை அழுக்காறு ஆகும்!

ஆனால் இன்று பலர் நல்லவைகளில் - கல்வியில் பொறாமைப்படலாம். தீமையன்று என்று அறியாமல் கூறுகின்றனர். இது தவறு. ஒருவர் நன்மை செய்வதில் அழுக்காறு கொள்பவன், நன்மை செய்ய முனைப்புக் கொள்ள மாட்டான். அழுக்காறு நிறைந்த உள்ளத்தியல்பும், நன்மை செய்வதில் ஊக்கம் காட்டாது என்றே திருக்குறள் கூறுகிறது.

நஞ்சு, அமுதாவது ஏது? சாக்கடை நன்னீராவது ஏது! அதுபோலவே தான் நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவனைப் பார்த்து குறைந்த மதிப்பெண் வாங்குபவன் அழுக்காறு கொண்டால் கூடுதல் மதிப்பெண் வாங்கும் முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு மாறாக அதிக மதிப்பெண் வாங்கியவன்மீது குற்றங்களை, குறைகளைக் கற்பித்துக் கூறுவான். ஏன், ‘காப்பியடித்து’ விட்டான் என்றே கூறுவான். மேலும் ‘மோசமாகி’ ஆசிரியர், கையூட்டுப் பெற்று விட்டார் என்று கூடக் கூறுவான். ஆதலால், எந்த வகையிலும் அழுக்காறு தீதே.

அழுக்காற்றை அகற்றும் வழி, நல்லவர்களை - வாழ்பவர்களைப் பாராட்டி மகிழ்வது தான். அதோடு பெற்றவைகளைக் கொண்டு மகிழும் மனம் வேண்டும். பெறாதவைகளைப் பெறும் முயற்சியும் வேண்டும். உப்பரிகைகளைப் பார்த்துப் புழுங்குதலைத் தவிர்த்து குடிசைகளில் வாழ்பவரை நோக்கி இரக்கங் கொள்ளுதல் வேண்டும். இத்தகு மனப்பான்மை வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.

எப்போதும் நல்லனவற்றையே நாடுதல்,நல்லனவற்றைப் பற்றியே பேசுதல் அழுக்காற்றிலிருந்து தப்பும் ஒரு வழி. எங்கும் எதிலும் எவரிடத்திலும் குற்றம் - குறைகள் இருக்கும். எல்லாரும் கடவுளா என்ன? நாம் அவர்களிடத்தில் உள்ள குணங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும்; நல்லவைகளைப் பாராட்ட வேண்டும். நாம் ரோசாச் செடியில் முட்களை எடுக்கக் கூடாது; மலர்களையே எடுக்க வேண்டும்.

அழுக்காறு என்ற தீய குணத்தினாலேயே மனித குலம் ஒன்றுபட்டு வாழ முடியவில்லை; பகையில் சிக்கித் தவிக்கிறார்கள். அழுக்காறு தனித்தும் நிற்காது. அழுக்காற்றின் படை அவா. வெகுளி இன்னாத சொல்லல், கலகம் எல்லாமேயாம்.

ஆதலால் அழுக்காறு கொண்ட மனிதன் வளர்தல் அரிது; வாழ்தல் அரிது; அதனாலேயே ‘திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்’ என்றது திருக்குறள். தேளின் கொடுக்கு, நஞ்சாம் தன்மைபோல அழுக்காறுடையார் உள்ளம் நஞ்சாகும்.

அழுக்காறு கொள்ளற்க! மற்றவர் வாழ்வதைக் கண்டு மகிழ்க! நீயும் வாழ முயலுக! நல்லனவற்றையே காண்க! நல்லனவற்றையே பேசுக. மற்றவர்கள் ஆற்றலை, அறிவைப் பாராட்டி மகிழ்க! எவரோடும் பழகுக! தோழமை கொள்க! மறந்தும் மற்றவர்களைப் பற்றிப் புழுக்கம் கொள்ளற்க!

32. உழைத்து வாழ்க!

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்"

(71)

இந்தத் திருக்குறள் சொற்பொருள் நிறைந்தது. பொருளில் தத்துவமும் அறநெறிக் கோட்பாடும் பொதிந்த திருக்குறள் இது!

‘நடுவுநிலை’ என்பது ஒர் உயர்ந்த வாழ்வியல் தத்துவம்; கொள்கை; கோட்பாடு! நியாயம்-அநியாயம், நீதி-அநீதி ஆகியவற்றுக்கிடையில் யார் பக்கமும் சாராது நிற்றல் என்பது பொருளல்ல. இங்கனம் நிற்றல், அதாவது அநீதிக்கும் நீதிக்கும் இடையே நடுநிலையாக நிற்றல் என்பது அறியாமை; கோழைத்தனம்! இல்லை, அநீதிக்கே துணை போவது போலத்தான்!

ஆதலால் அநீதி-நீதி இவற்றுக்கிடையே மோதல் வந்தால் தற்சார்பு, அச்சம், அவா ஆகியவற்றின் காரணமாக எது நீதியெனத் தெரிந்து கூறாது. சார்ந்து நில்லாது விடுதல் நடுவுநிலையன்று. அதுபோலவே பொருள், உழைப்பால் படைக்கப்படுவது; உரிமையால் பேணப்படுவது உழைப்பவர் படைத்த பொருளை உழைக்காமல் அடைய நினைப்பது, உரிமை கொண்டாடுவது நடுவு நிலைமையுடைய சார்பல்ல. உழைப்பவர்க்கே பொருள் உரிமை! உண்ணும் உரிமை!

"நன்பொருள்" - பரிசுச் சீட்டில் கிடைத்த பொருளல்ல; பிறர் பங்குப் பொருள் அல்ல; சலத்தால் செய்த பொருளும் அல்ல. உழைப்பில் உருவாய பொருள். அதனால் 'நன்பொருள்’ என்றார்.

ஒருவருடைய உழைப்பின் பொருளை, ஒருவர் திருடிக் கொண்டால் அந்தக் குடும்பம் வளர்ந்து விடாது. ஏன்; பொருளைவிடப் பொருளைப் படைக்கும் உழைப்பாற்றல் விலை மதிப்புடையது; மாறாத் தன்மையுடையது: ஊற்று வளம் நிகர்த்தது. சுரண்டுதல் மூலம் பிறர் பொருள்கிடைப்பின் வாழ்க்கையின் தேவைக்குக் கிடைத்து விடுவதால் உழைக்கும் உணர்வு தலையெடுக்காது.

அதனால் உழைப்பாற்றல் மிக்க புலன்கள், பொறிகள் காலப்போக்கில் தம்முடைய உழைக்கும் தகுதியை இழக்கும். நோய் கொள்முதல் ஆகும்! ஏமாற்றப்படுபவன் விழித்துக் கொண்டால் சுரண்டவும் இயலாமல் போய் விடும்! அப்புறம்?

வாழ்க்கை திண்டாட்டம்தான்! அதனால், வாழ்வு கெடும்! உழைக்கும் இயல்பின்மையால் குற்றங்கள் செய்து வாழும் நிலை உருவாகும். அதனால் திறமை, ஒழுக்கம், பண்பாடு வளர உழைப்பு தேவை! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலே வாழ்வு! உழைக்கும் வாழ்வே அறவாழ்வு! நலவாழ்வு!

33. நடுவின்றி நன்பொருள் விரும்பற்க!

வெஃகல்-பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல் அதாவது தனககு உரியன வல்லாதனவற்றிற்கு ஆசைப்படுதல் என்பது பொருள்! ஆம்! ஒருவர் மற்றவருடைய பொருளை விரும்புதல் களவுக்குச் சமம்! இதனால் வாழ்க்கை நிலைகளும் மாறிக் களவு, காவல் என்ற இழிநிலைகள் தோன்றும். பூட்டுக்கள் பெருகலாம். ஆனாலும் களவு நின்ற பாடில்லை. ஏன்? பொருள் என்பது உழைப்பின் பயன். உழைப்பாலன்றிப் பொருள் ஈட்ட விரும்புபவன் அறநெறி நிற்பவன் அல்லன். அதுமட்டுமின்றிப் பிறர் பொருளை விரும்புபவன் தனது அறிவை இழக்கின்றான்; ஆற்றலை இழக்கின்றான்; காலப்போக்கில் மானத்தையும், பெருமையையும் இழக்கின்றான்; பழியைத் தேடிக் கொள்கின்றான்.

உழைத்துப் பொருள் ஈட்டாது பிறன் பொருளை விரும்புபவர்கள் பொருளுடையாரைத் துன்புறுத்தவும் செய்வர்; ஈரநெஞ்சினை அறவே இழந்து வெறித்தனமாக நடந்து கொள்வர். அன்பும் அருளும் இவர்களுடைய பண்புகளாக அமைந்து விளங்கா.

இங்ஙனம் பிறன் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள் அதனால் அடையும் துன்பங்களும் பலப்பல. யாருடைய பொருளை விரும்புகிறார்களோ, அவரிடமிருந்தும் துன்பம் வரும், பிறர் கைப்பொருளை நம்பி வாழ்ந்தமையால், தாம் பொருளீட்டும் முயற்சியின்மையின் காரணமாக அவலம் வளரும், ஆதலால் பிறர் பொருள் மாட்டு உள்ள விருப்பம் இன்பத்தைத் தருவது இல்லை; மாறாகத் துன்பம் தருகிறது.

பொருளியல் நியதிகளைச் சார்ந்தே ஒழுக்கங்கள் வளர்கின்றன; அறிவு, ஆற்றல்கள் வளர்கின்றன; சமுதாயத்தினரிடையில் நம்பிக்கையும், நல்லெண்ணமும் வளர்கின்றன. ஆதலால் உழைத்து வாழ்தலே வாழ்வு. பிறர் பொருளை எடுத்துக்கொள்ள விரும்புதல், உதவியாகப் பெறுதல், இனாமாகப் பெறுதல் ஆகியனவும்கூட வெறுக்கத் தக்கனவேயாம்.

பிறர் பொருள் ஒரே வழி நம் கையகப்படினும் கூடச் சிறிது பொழுதே இன்பந்தரும். அந்த இன்பத்தினைத் தொடர்ந்து பெருந்துன்பம் வரும் என்பதறிக. நல்வாழ்வின் முன் இன்மை என்பது ஒரு பெரிய குற்றமன்று. இன்மையும் கூட மன்னிக்கப்பெறும். ஆனால் நடுவின்றிப் பொருள் வெஃகுதல் தாம் பிறந்த குடியையே அழிக்கும். மேலும் பல குற்றங்களையும் தரும்.

ஆதலால், பிறர் பொருளை எந்த வகையிலும் அடைய விரும்பற்க! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலையே விரும்புக.

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்”

(171)

34. கோள் கேளற்க; சொல்லற்க!

மானுடம் உறவுகளால் ஆயது; உறவுகளால் வளர்வது, உறவுகளுக்காகவே மானுடம் அமைந்தது. சமூக அமைப்பு மானுடத்தினிடையில் வளரும் உறவுகளால் அமைந்தது; வளர்ந்து இயங்குவது; வாழ்வது.

உறவுக்கு எதிரான பகை, தீயது: "யாரொடும் பகை கொள்ளற்க” என்பது இராம காதை தரும் அறிவுரை. உறவு முறிந்து பகை வளர வாயில்கள் பல உண்டு. சொத்துரிமையின் காரணமாக உறவுகள் முறியக்கூடும். இஃது அருகிய வழக்கே!

நம்பிக்கையின்மை காரணமாக உறவுகள் முறியும். இந்த வகையில் பிரிவும் பெரும்பான்மையல்ல. ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையில் இருக்கும் உறவு, பகையாக மாறுவது மூன்றாவது மனிதரின் தலையிட்டால் அதுவும் கோள் சொல்லுதல் மூலம் தலையீட்டால்.

கைகேயி உத்தமத்தாய். ஆனால், கூனியின் தலை யீட்டால் அந்தத் தூய அன்பு திரிந்தது. அதனால் ஒருவரைப் பற்றி அவர் இல்லாதபோது நமக்கு ஆயிரம் நலம் பயக்கும் செய்திகளை முன்னுரையாகக் கூறி, உடன் அந்த மூன்றாம் மனிதரைப் பற்றிச் சொல்லும் செய்திகளைக் கேளற்க! ஒரோவழி கேட்டாலும் பொருளாகக் கொள்ளற்க.

காற்றுப் புகாத நெருக்கமிக்க உறவுகளுக்கிடையிலும் கோள் சொல்லுவோர் புகுந்து விளையாடுவர்; பிரித்து விடுவர். நமக்கு நன்மைபோலச் சொல்வர்! நீதிச் சார்புடையன போலச் சொல்லுவர்! நயத்தக்க நாகரிகம் என்பர்! ஆன்றோர், சான்றோர் நெறி என்பர்! அவ்வளவும் பச்சைப் பொய். தாம் கூறும் கோள் விலை போக இவ்வளவு நடிப்பு! கவனமாக இருக்க வேண்டும்; விழிப்பாக இருக்க வேண்டும்.

மற்றவர்களைப்பற்றி ஒருவரிடம் கோள் பேசாதே; எதுவும் கூறாதே; கோள் சொல்லுதல் தீது. ஆதலால் நாம் யாதொரு கோளும் யாரைப் பற்றியும் கூறக் கூடாது. பிறர் சொல்லும் கோளைக் கேட்கவும் கூடாது.

கோள் தற்சார்பு இனிப்பு மூடிய கொடிய நஞ்சு, இதய வலிமையுடையோரைக் கூட எளிதில் வீழ்த்தும் இயல்பு கோளுக்கு உண்டு. ஒரு நன்மையே விளையுமென்றாலும், கோள் வாயிலாக அந்த நன்மை விளைய வேண்டாம்.

கோளுக்கு உடன் வரும் தோழமைச் சொல் முகமன் (முகஸ்துதி). இதையும் தவிர்த்து விடுக. கோள் சொல்லுபவன் நச்சுத்தேன். கோள் சொல்வோர் உறவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் உறவுகளைக் காண்க; வளர்த்துக் கொள்க: வையகத்தில் வாழ்வாங்கு வாழ்க!

35. புறம் கூறல் தீது!

புறங் கூறல்-அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய குற்றம் குறைகளைப் பேசுதல், மேலும் அவர் முன்னே முகமனாகப் பாராட்டுதல்; புகழ்தல்; அந்த நபரை அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய பழிகளை மட்டும் கூறுதல் புறங்கூறுதலாகும்.

சிலர் புறங்கூறுதல் என்ற தீமையை, நன்மை கருதிச் சொல்வதாகக் கூறுவர். ஆனால் புறங்கூறித்தான் நன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. எல்லாரும் நேரிடையாக நன்மையை எடுத்துச் சொன்னால் மறுப்பார் யார்? அறம் சொல்லுவார்போல் நடித்துப் புறம் சொல்லுதல் தீயபழக்கம்.

சிலர் வாயிலிருந்து சொற்கள் வருவதில்லை. "எரியும் நெருப்புக் கனலே வீசுகிறது" என்று ஒரு பழமொழி உண்டு. நன்மையையே சொன்னாலும் புறத்தே சொல்லுதலை நன்மையென எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் பகையே வளரும், மானம்-அவமானச் சிக்கல்கள் தோன்றும். புறஞ்சொல்லுதல் ஒரு பயனையும் தராததால் புன்மை என்றார் திருவள்ளுவர். "குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்” என்று திருமுறை கூறும்.

ஒருவர் இல்லாத இடத்தில் அவர்தம் நற்குணங்களைப் பற்றி மட்டுமே கூறவேண்டும். அவர் முன்னே குற்றங்களை எடுத்துக் கூறலாம். புறங்கூறுதலால் பிணக்கும் பகையும் வளர்ந்து பிரிவினைகள் உருவாகும். இதனால் புறம் பேசுதலில் ஒரு நன்மையும் இல்லை; தீமை மட்டுமே உண்டு.

குற்றங்களையே எண்ணிப் பேசுதலால் காலப் போக்கில் குற்றங்கள் நம் மீதே சாரும் என்பதையும் அறிக! குற்றங்களைப் பொறுத்தாற்றும் உணர்வோடு ஏற்றுக் கொண்டு பழகும் அனுபவம் இருந்தால் குற்றங்கள் தொடரா.

நல்லனவற்றை நேரில் கூறுக. புறங்கூறுதல் அளவிறந்த தீமை தரும். அதனால் 'புன்மை’ என்று ஏளனம் செய்யப் பெறுகிறது.

புறங்கூறும் பழக்கமுடையவர்களுக்கு மற்றவர்களின் குணங்களும் அருமைப்பாடும் தெரியாது, குற்றங்குறைகளையே காண்பர்; விமர்சிப்பர்; ஏசுவர்; பழிதூற்றுவர். இதனால் பகை வளரும். ஆதலால் புறங்கூறுதல் தீது. நன்மையை நோக்கிக்கூடப் புறங்கூறக் கூடாது.

"அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்."

(185)

36. நல்லன எடுத்துக் கூறி நட்பினைத் தோற்றுவிப்பீர்!

இயற்கையின் நியதி ஒன்றாக வாழ்தல்; ஒருமை நலத்துடன் வாழ்தல். வேறுபட்டவெல்லாம் ஒன்றுபட்ட நிலையிலேயே உலகம் இயங்குகிறது. உலகியற்கையில் காணப் பெறும் வேறுபாடுகள் ஒருமை நிலைக்கு ஈர்க்கும் ஆற்றலுக்கு இசைந்த வேறுபாடுகளேயாம்.

மானுடம் கூடிவாழப் பிறந்தது. ஆனால் அது கூடி வாழ்ந்த காலம் எது? எங்கே என்ற விவரம் அறியப்புகின் விடை எளிதில் கிடைக்காது. இந்த உலகில் மானுடம் சேர்ந்து வாழ்ந்ததை விடக் கலகப்போர் செய்து கொண்டு அழிந்த செய்திகளே வரலாற்றுப் புத்தக ஏட்டில் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. ஏன் இந்த அவலம்? மொழி, சமயம் பெற்றுங்கூட ஒருமையைக் கட்டிக் காப்பாற்ற முடியவில்லை.

ஒருவரிடம் ஒருவர், இல்லாத ஒருவரைப் பற்றிக் குற்றங் குறைகளைக் கூறுதல், வெறுப்பை வளர்க்கும்; பகைமையை வளர்க்கும்; பிரிவை உண்டாக்கும். "மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாய் திறந்தால் நீ உன் காதைப் பொத்திக்கொள்; கேட்காதே!" என்றார் குவாரல்ஸ்.

”Scandal breeds hatred; hatred begets division"

- Quarales.

ஒருவர் ஒருவருக்குச் செய்யக்கூடிய உதவி என்பது அவர் பலரோடு நட்பாக இருப்பதற்குரிய வாயில்களை அமைத்துத் தருவதேயாம். இருவருக்கிடையில் நட்பை உருவாக்கும் பணிக்கு ஈடான அறம் வேறொன்றும் இல்லை. சிவபெருமான், சேரமான் பெருமாளுக்கும், சுந்தரருக்கும் நட்புண்டாக்கிய வரலாற்றை அறிக. ஒருவருடைய சிறந்த அம்சங்களை எடுத்துக் கூறி அறிமுகப்படுத்தப் பழகுவதற்குரிய வாயில்களை உருவாக்கவேண்டும். நல்ல நட்பைத் தேடிக் கொடுத்துவிட்டால்கூட, திருந்த வேண்டியவர் இயல்பாகவே திருந்திவிடுவர்.

ஆதலால், மகிழ்ச்சி நிறைந்த நட்புறவை உண்டாக்கி வளர்த்தலே அறம். இந்த இனிய அறத்தை அறிந்து செய்ய இயலாதார் குற்றங் குறைகளை எடுத்துக்கூறி நண்பர்களைப் பிரிப்பர்; சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்குவர். இத்தகையோர் நம்மை நாடி வந்து வாய் திறந்தால் நமது காதைப் பொத்திக் கொள்வது நல்லது. புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவர்கள் வல்லவர்கள், நமக்கு நல்லன செய்வது போலக் கூறுவார்கள்; சாத்திர ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவர். காற்று இடைப்புகாது பழகிய நட்பு உடையாரைக் கூடப் பிரித்து விடுவர். எனவே விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

உலகில் உயர்ந்தது நட்பே! உலகில் உயர்ந்த அறம் ஒன்றி நின்று பழகுதலே! ஒன்றுதலுக்கு ஈடான அறம் இல்லை! இந்த அறம் நிகழ்ந்தாலே சமுதாயத்தில் திருத்தங்களும் கூடத் தோன்றும்; தீமைகள் சாயும்; நன்மைகள் பெருகும்.

ஆதலால், ஒருவரைப்பற்றி நன்றாக மட்டும் பேசக் கற்றுக் கொள்க! ஒருவரைப் பற்றிப் பிறிதொருவரிடம் நல்லன எடுத்துக்கூறி நட்பினைத் தோற்றுவித்து வளர்க்க முயல்வீர்! இதுவே வாழும் வழி!

"பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்வி

நட்பாடல் தேற்றா தவர்”

(187)

37. பயனுடைய சொல்லையே சொல்லுக!

இந்த உலகப் படைப்புகளெல்லாம் பயனை மையமாகக் கொண்டனவேயாம். பயன்படுத்தப்படாதன கழிகின்றன. தவறாகப் பயன்படுத்தப்படுவன தீமையை விளைவிக்கின்றன. இந்த உலகில் ஆற்றல் வாய்ந்தவைகளில் "சொல்” தலையாயது. சொல்லப்படுவது சொல். அறிந்து ஆராய்ந்து சொல்லப்பெறும் சொற்கள் பயனைத் தரும்.

பயனுடைய சொற்களே சொல். பயனற்றவைகள் 'சொல்’ என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளப் பெறுதல் இல்லை. வறுமை, பொருள் சார்ந்தது மட்டுமல்ல. சொற்களிலும் வறுமை உண்டு என்பது இளங்கோவடிகள் கருத்து. "வறுமொழியாளர்" என்று சிலம்பு கூறுகிறது. பயன் மிகுதியும் இல்லாத சொற்கள் என்பது சிலம்பின் கருத்து. "வெற்றெனத் தொடுத்தல்" என்று இலக்கணம் கூறும்.

தீய சொற்கள் அவற்றைச் சொல்வோருக்குத் தீமை விளைவிப்பதும் உண்டு. திருக்குறள், சொற்களில் அதிகக் கவனம் செலுத்துகிறது. இனியவை கூறல், புறங்கூராமை போன்ற அதிகாரங்கள் மூலம் விளக்கியுள்ளது. இவை போக "பயனில் சொல்லாமை” என்று தனியே விரித்தும் கூறியது, பயனில்லாத சொற்களையும் சொல்லக்கூடாது என்பதற்கே யாகும்.

வாழ்க்கை, பயனைக் குறிக்கோளாக உடையது. வாழ்க்கையின் குறிக்கோளை அடைதற்குரிய கருவிகளில் ஒன்று சமூகம். சமூக அமைப்பும் உறவும் சொற்களால் இயக்குவிக்கப்படுகின்றன. சமூகத்தில் இயங்கி நம்முடைய வாழ்க்கைக்கும் ஆக்கம் தரும் நெறிகளைப் பற்றி அறிவது "அரும் பயன்” ஆகும்.

அற்ப மகிழ்ச்சி, சிறுபொழுது இன்பக் கிளர்ச்சிகளுக்காகச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. நீண்ட நெடிய பயன் வேண்டும். அரிய பயனாக இருந்தால் மட்டும் போதாது. திருவள்ளுவருக்குக் கொள்ளை ஆசை! பெரும் பயன் வேண்டும் என்கிறார்.

வாழ்க்கையின் அருமைக்குரிய பயன்களை ஆராய்ந்து அறிக! அந்த, அரிய பயன்களைத் தரக்கூடிய சொற்களைத் தேர்வு செய்க. அச்சொற்களையே சொல்லுக.

"அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்

பெரும்பய னில்லாத சொல்"

(198)

38. தியினும், தீமை தீது!

நல் வாழ்க்கை அமைய, தீமை தரும் செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். நல்லன செய்தல் வாழ்க்கையின் குறிக்கோள். நல்லன செய்தல் நன்று.

நல்லன செய்வது ஒருபுறம் இருக்கட்டும். தீமையைச் செய்யாது இருத்தல் வேண்டும். தீமையாவன வெறுப்பு, அகங்காரம், பொறாமை, பகைமை, பயம், தூற்றுதல் முதலியன.

இத் தீமைகளிலிருந்து வாழ்க்கை முற்றாக விலக வேண்டும். யாரொருவரையும் வெறுத்தல் கூடாது. நான் என்ற அகங்கார உணர்வு மேலிடுதல் கூடாது. யார் மாட்டும் எவர் மாட்டும் அழுக்காறு கொள்ளுதல் ஆகாது. யாரொடும் பகை கொள்ளுதல் கூடாது. பயம், அதாவது அச்சம் அறவே ஆகாது! மற்றவர்களுடைய சிறுமையை, குற்றங்களைத் துாற்றக்கூடாது. இவை தீமைகள். இவை தம்மைச் சார்ந்தாரை அழிக்கும்.

தீயைவிடத் தீமை கொடிது. தீ சார்ந்ததை மட்டும் எரித்து அழிக்கும், அது தீமை தோன்றும் இடத்தையும் அழிக்கும். சேரும் இடத்தையும் அழிக்கும். தீ, ஒரோ வழி பயன்படும்; தீமை பயன்படாது. அது அறவே தீது; முற்றிலும் தீது. ஆதலால், தீயன சொல்லற்க. தீயன செய்யற்க. தீமை செய்தலைக் தவிர்த்திட ஒரே வழி நல்லன செய்தலேயாம்.

“தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.”

(202)

39. கூட்டுறவு

‘உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றமெல்லாம் கூட்டுறவின் அடிப்படையில் தோன்றியனவாகும். தோல்விகள் எல்லாம், வாழ்க்கையையும் நடவடிக்கையையும் உண்டாக்கும் பொருள்களிடையே கூட்டுறவு காணப்படாததால் நேர்ந்தவைகளாகும்’ என்றார்-எஸ்.கே.டே "கூட்டுறவு இயக்கம் மிக முக்கியத்துவம் ஆகிவிட்டதை எல்லாரும் புரிந்து கொண்டதாகச் சொல்வதற்கில்லை" என்றார் மாமேதை லெனின்.

கூட்டுறவு, மக்கள் இயக்கமாக விளங்க வேண்டும். கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் கட்சிகள் தலையீடும், அரசின் அதிகாரங்களும் ஊடுருவுதல் கூடாது; கூடவே கூடாது. இதனால் அரசின் தொடர்போ, - மேற்பார்வையோ, தணிக்கையோ கூடாது என்பதல்ல. அரசின் அணுகு முறைகள் கூட்டுறவைப் பொருத்தவரையில் குடியரசின் அடிப்படையான குடிமக்களின் நல்லிணக்க வாழ்க்கைக்கும், கூட்டுறவுப் பொருளாதார வளர்ச்சித் துறைக்கும், நிர்வாகத் துறைக்கும் பயிற்றுவித்து வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகக் குழுவைக் கலைத்தல் - தனி அலுவலர் நியமித்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. இங்ஙனம் செய்வது மனித உரிமைகள் அடிப்படையிலும், அறநெறி அடிப்படையிலும் முற்றிலும் தவறானது.

ஏனெனில் கூட்டுறவில் அதன் உறுப்பினர்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களைப் பங்குகளாக இட்டு வைத்துள்ளார்கள். அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை அந்தக் கூட்டுறவு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு அங்கத்தினர்களை-கூட்டுறவு நிர்வாகிகளை விலக்குவது மரபல்ல.

மக்களும் கூட்டுறவை தங்களுடையதாகவும் பொது நலத்திற்க்கு உரியதாகவும் கொண்டு ஒத்திசைந்து வாழ்தல் வேண்டும். கூட்டுறவில் தனி நிலத்திற்கும் பொது நலத்திற்கும் இடையே மோதல் ஏற்படும்போது, பொது நலத்திற்கே முதன்மை இடம் வழங்கப் பெறுதல் வேண்டும். ஏனெனில் தன்னலத்தில் பொது நலம் அடங்காது. பொது நலத்தில் தனி மனித நலம் அடங்கும். மேலும் பத்திரமாகவும் இருக்கலாம்.

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்."

(214)

40. ஒப்புரவு வாழ்க்கை

சமுதாய அமைப்பில் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். ஆதலால் ஒவ்வொருவரும் பிறிதொருவருக்குச் சமுதாயத்தில் பலருக்குக் கடமைப்ப்ட்டிருக்கின்றனர். இந்தக் கடமைப்பாட்டினை அறிந்து கொண்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் இசைந்து கூடி நட்புறவுப்பாங்கில் வாழ்தல் வேண்டும்.

தம்தம் நிலையை வற்புறுத்தாமல் மற்றவர்கள் நிலையறிந்து அவர்களுடன் கூடி வாழ்தல் ஒத்ததறிந்து வாழ்தல். பூத பெளதிக மாற்றங்களால் உடல் நலம் கேடுறாது பார்த்துக் கொள்வதுபோல நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களால் நமது உணர்வு, ஒழுங்கு, ஒழுக்கங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் மற்றவர்களுடைய நலனுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் வாழ்தல் ஒத்தறிந்து வாழும் வாழ்க்கை, ஒப்புரவு வாழ்க்கை, அது தீமை பயக்கும் வாயில்களை அடைத்துவிடும்; நல்வாழ்க்கைக்குரிய இயல்புகளை குணங்களைத் தந்து ஊக்குவிக்கும்.

ஊருணி ஊராருக்கு உண்ணும் தண்ணீர் தருவதால் "ஊருணி” என்று பெயர் பெற்றது. ஊரார் ஊருணித் தண்ணீரை அள்ளிக் குடிப்பதால் “ஊருணி” என்று புகழ் பெற்றது.

பல ஊருணிகளில் ஊற்று வளம் இருப்பதில்லை. அதுபோல் அறிவுடையானிடம் செல்வம் இருப்பின் அச்செல்வம் ஊராருக்குப் பயன்படும். ஆயினும் அறிவறிந்த ஆளுமை இன்மையால் செல்வம் அவனிடம் ஊற்றுப் போலப் பெருகி வளராது. இருக்கும் வரையில் கொடுப்பான். பின் அவனும் ஓர் இரவலனாகி விடுவான். அதனால்தான் நம் நாட்டில் வாழ்ந்த புலவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள் போலும்!

ஊருணியை ஊர் பயன்படுத்தாது போனால் ஊருணி கெடும். அதுபோல அறிவுடையோனின் செல்வம் வழங்கப் பெறாது போனால் அழிந்துபோகும். ஆதலால், ஊருணி நீரைப்போல இழந்து போகாமல் மேலும் செல்வ வளம் பெற உழைப்பு வேண்டும். அறிவறிந்த ஆள்வினைதான் செல்வத்தை வளர்க்கும்; பாதுகாக்கும்! மற்றவர்க்கு வழங்கி வாழ்வதில் உலகந்தழீஇய புகழ் கிடைக்கும்.

இந்த உலகத்தில் எல்லாரும் உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ இயலும். ஆனால் நம் ஒவ்வொருவருடைய பேராசையின் காரணமாக இருந்து வரும் இல்லாத நிலை ஏன்? பேராசைதான் காரணம்! பேராசை இழப்பில்தான், மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆதலால், எல்லாரும் வாழ உரிமை உடையவர்கள் என்ற கருத்து முதலில் ஏற்கப் பெறுதல் வேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன,

உலகம் உண்ண உண்! உடுத்த உடுத்து!

என்ற பெருநெறியே, ஒப்புரவு நெறி!

இந்த ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கைக்கு ஈடாக ஒரு வாழ்க்கை நெறி இந்த உலகத்திலும் இல்லை! தேவர் உலகத்திலும் இல்லை! ஆம்! ஒருவரை ஒருவர் சார்ந்தும் இணைந்தும் உறவு கொண்டாடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை!

41. இரத்தல் தீது

நமது வாழ்க்கையில் நாம் ஒன்றைச் செய்யும்போது அச்செயலைச் சார்ந்து சில பண்புகளும் திறன்களும் வளர்கின்றன. அதுபோலவே செய்யத்தகாதனவற்றைச் செய்யும் பொழுதும் திறமைக் குறைவுகளும் தீய குணங்களும் வந்தடைகின்றன. சான்றாக நமது வாழ்வு நுகர் பொருள்களைச் சார்ந்து அமைகின்றது. அப்பொருள்களை வழங்கும் பண வசதி, அடிப்படை இன்றியமையாதது ஆகிறது.

நாம் ஒவ்வொருவரும் உழைத்துப் பொருளீட்டி நுகர்ந்து வாழ்தலே முறையான வாழ்க்கை. உழைத்துப் பொருளீட்டி வாழும் வாழ்வியலில், சார்பின்றித் தனித்து வாழும் பேறு கிடைக்கும். நாமே பொருளீட்டி வாழும் வளமான வாழ்வு தொடர் வரலாறாக நீடிக்கும்.

உழைப்பின் வழி அறிவறிந்த ஆள்வினை, செயல் திறன் கைகூடும், அறிவு வளரும்; ஆற்றல் பெருகி வளரும். ஆதலால், உழைத்துப் பொருளீட்டி உண்டு வாழ்தலே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை.

அங்ஙணமின்றி நமக்குத் தேவையானவைகளை மற்றவர்களிடம் வாங்கி வாழும் இரத்தலால் வாழ்வு வளராது. தன்னம்பிக்கையுடையதாக விளங்காது. உழைப்பாற்றல் வற்றிச் சோம்பலில் வாழும் வாழ்க்கை அறிமுகமாகும்! அறிவும் வளராது. ஆதலால், "இரத்தலும் நல்லதே” என்றால் வாழ்வு வளராது; பயனுடையதாக அமையாது.

"நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று."

(222)

42. உண்மையான தவம்

இந்த உலகத்தில் இயற்கை, ஒருவருக்கொருவர் உதவி என்ற நியதியில்தான் இயங்குகின்றது. வாழ்க்கையின் நோக்கமே உதவி செய்வதுதான். ஒருவருடைய வாழ்க்கை முழுமை அடைவதும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதுதான். ஏன் உயிரியக்கத்தின் நோக்கம் உதவி செய்தல் தான்!

இங்ஙனம் உதவி செய்யும் முறையில் வாழ்வியல் அமையாது போனால் வாழ்க்கை துன்பச் சுமையாக தோன்றும். "ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதற்காகவே, நாம் வாழ்கின்றோம். வேறு எதற்காகவும் இல்லை” என்றார் எலியட்.

ஒருவர் நம்மை நாடி வந்து கேட்டபிறகு செய்வது சிறந்த உதவியாகாது. நாமாகவே தேடிச் சென்று செய்யும் உதவியே உதவி. அபிதாவூது என்ற பெரியார், "நீ பிறருக்காகச் செலவு செய்தால் நான் உனக்காக செய்து கொண்டிருப்பேன்" என்று அல்லா அருளியுள்ளதாகக் கூறியுள்ளார்.

உதவி என்ற அச்சில் உலகியல் இயங்குகிறது. அது மட்டுமின்றிப் பிறருக்குத் தன்முனைப்பின்றி, விளம்பரமின்றி உதவி செய்வதில் இதயம் அன்பால் நிறைகிறது; அடக்கம் வந்தடைகிறது. பலர், சுற்றமாகச் சூழ்வர்.

இன்றைய உலகில் சமய நோன்புகளை நோற்பது பெருமையாகப் பேசப்படுகிறது. அதாவது உண்ணாமல் நோற்பது பலர் உண்ணாமல் நோற்கின்றனர். அதனால் பெயரும் புகழும் அடைகின்றனர். வரலாற்று நிகழ்வில் உண்ணா நோன்பை அறிமுகப்படுத்தியவர் அப்பரடிகள் ஆவார். பின் அரசியல் போராட்டங்களுக்கு அண்ணல் காந்தியடிகள் உண்ணா நோன்பைக் கருவியாகக் கையாண்டார்.

இன்று மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக உண்ணா நோன்பு வந்துவிட்டது. பசியைத் தாங்கிக் கொள்வது, உண்ணாது நோற்பது ஆற்றல் மிக்க தவம் என்று சமய நூல்கள் கூறும். ஆனால் திருவள்ளுவர் பசியைப் பொறுத்துக் கொள்பவரின் ஆற்றலைவிட மற்றவர். பசியை உணவளித்து அகற்றுவார் ஆற்றல் பெரிதென்று கூறுகின்றார்.

தமக்குற்ற பசியைத் தாங்கி, பொறுத்துக் கொண்டு தவம் செய்வது ஒரு வகையில் ஆற்றல்தான். ஆயினும், மற்றவர் பசியை மாற்றுவார் ஆற்றலை நிகர்த்த ஆற்றல் அல்ல அது என்று கருதுகிறார் திருவள்ளுவர். ஏன்? தமக்குற்ற பசியைத் தாங்கிக் கொள்வது, தொடக்க காலத்தில் இடர்ப் பாடாக இருப்பினும் பழகிய நிலையில் பசி வருத்தாது. துன்பம் செய்யாது.

மற்றவர்களுடைய பசியை மாற்ற வேண்டுமாயின் உழைப்பு தேவை. மெய்வருந்த உழைத்துப் பொருளீட்டினால் தான் மற்றவர்க்கு உதவ இயலும். உழைத்துப் பொருளீட்டிய நிலையில், பொருளிடத்துப் பற்று வருதல் இயற்கை. உழைத்து ஈட்டிய பொருளிடத்துப் பற்று மிகாது, மற்றவர் பசி நீக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல் அருமையிலும் அருமையாகும். தன் பசி தாங்குவதில் தாங்கும் திறன் மட்டுமே காணப்படுகிறது. அதுவும், பழகிப் போனால் திறனாகாது.

மற்றவர் பசியை மாற்றும் பணியில் உதவி செய்யும் வகையில் கைவருந்தி உழைக்கும் உழைப்பு அமைகிறது: பொருட் பற்றுடன் பொருளீட்டி, பின் பொருட்பற்று விட்டு உதவி செய்யும் குணநல ஆக்க மாற்றங்களாக அமைகின்றது. தன் பசி தாங்கலில் துறவியல் பண்பு முகிழ்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.

வறுமையாளர் கூடப் பசியை தாங்கிக் கொள்ளவே செய்கின்றனர், வேறு வழியில்லாமல்! மற்றவர் பசியை மாற்றுதற்குரிய உதவியைச் செய்கிறவர்கள் பொருட்பற்றினின்று நீங்கியே உதவி செய்கின்றனர்.

பசியைப் பொறுத்தலினும்-மற்றவர் பசியை மாற்றும் ஆற்றலே ஆற்றல்! இத்தகைய ஆற்றலைப் பெருக்கி வளரும் நாடு என்றும் வளரும்; வாழும்.

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்."

(225)

45. வாய்மையே பேசுக!

சத்தியம், உண்மை என்ற சொற்களால் உணர்த்தப் பெறும் ஒன்றைத் திருக்குறள் ‘வாய்மை’ என்று கூறுகிறது. ‘சத்' என்ற சொல்லுக்குப் பொருள் ‘உள்ளது’ என்பது. உள்ளது என்ற சொல் உண்மை என்ற பொருளை மட்டும் தரும்.

உண்மை கூறுதல் என்பது உள்ளது உள்ளவாறே (The Principle of Sincearly) என்ற பொருளில் வழங்கப் பெறுகிறது. கடவுள் தமது இரண்டு கரங்களில் ஒன்றில் உண்மையையும் பிறிதொன்றில் உண்மையைத் தேடும் ஆர்வத்தையும் தாங்கியிருக்கிறான் என்ற அனுபவ உரை ஒன்று உண்டு.

எனவேதான் "சத்தியமே கடவுள்" என்ற கொள்கையுடைய அண்ணல் காந்தியடிகள் சத்தியத்தைத் தேடுவதிலும், சத்தியத்தைத் தமது வாழ்க்கையில் சோதிப்பதிலும் செல வழித்தார்.

உண்மை கூறுதல் என்ற அடிப்படையில் உள்ளதை உள்ளவாறு கூறலாமா? அங்ஙணம் கூறுவது மனித குலத்திற்கு நலம்பயக்குமா? பல சமயங்களில் உள்ளதை உள்ளவாறு கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதே வாழ்வியல் உண்மை. மாறாக எதிர் விளைவுகளையே உருவாக்கி வந்துள்ளன.

உள்ளதை உள்ளவாறே கூறுதல் பற்றி, மகாவீரர், ‘நீ உண்மை பேசுவதினால் ஒருவர் மனம் நோகும். உன் பேச்சு ஒருவனுக்குப் பிடிக்காது பிற உயிர்களுக்குத் துன்பம் நேரும் என்றால் அதைப் பேசாதிருத்தல் நலம். அது உண்மையாக இருந்தாலும் உனக்குப் பாவமே நல்கும்" என்று கூறுவதை அறிக.

ஆதலால், உண்மையை உள்ளவாறே கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதையறிந்த திருவள்ளுவர், திருக்குறளில், சத்தியம், உண்மை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் "வாய்மை" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

வாழ்க்கையின் நோக்கு, தீமைகளைப் புறங்கண்டு நலங்காண்பதேயாகும். தீமை கொடிது, எந்த ஒன்றையும் விடத் தீமைக் கொடிது. ஆதலால் உள்ளதை உள்ளவாறே கூறுகிறோம் என்று, தொற்றுநோய் பரப்பும் கிருமிகளைப் போலச் செய்திகளை, வதந்திகளைப் பரப்பும் மனிதர்கள் காலராவை விடக் கொடியவர்கள்.

ஒருவர் பிறிதொருவரைப் பற்றித் தகாதன சொன்னாலும் அதை அப்படியே மற்றவரிடம் சொல்லிக் கோபத்தையும், கலகத்தையும் வளர்ப்பது உண்மையன்று; பொய்; சின்னத்தனம். எனவே, திருக்குறள்,

"வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை யிலாத சொலல்"

(291)

என்று கூறுகிறது.

வாய்மை என்று கூறப்படுவது யாது? எவ்வுயிர்க்கும் எந்தவிதத் தீமையையும் செய்யாததே வாய்மை. எவ்வுயிர்க்கும் தீமையைத் தராததே வாய்மை. வாய்மையல்லாதன கூறுபவர்களையும் நல்லன பல சொல்லித் தேற்றுவோம்.

நம் செவிக்கு வரும் செய்திகளில் உள்ள வாய்மையைத் தேறித் தெளியவேண்டும். செவிப்புலனுக்கு வரும் செய்திகளில் வாய்மையினைக் கண்டுணராமல் கோபித்தலும் பகை கொள்ளலும் நட்பு. பாராட்டலும் நன்றல்ல. ஆதலால் எவ்வுயிர்க்கும் நல்லன தருவதே வாய்மை.

வாய்மையே பேசுக. எந்தச் சொல்லிலும் பொருளை மட்டும் நாடாமல் வாய்மையை நாடுக. நமக்கும் பிறருக்கும் ஒரு தீங்கும் இல்லாத நலம்தரும் சொற்களையே கூறுக.

44. வேண்டாம் சினம்!

சினம்-கோபம் தீமையுள் தீமை. கோபத்தால் விளையும் தீமை பலப்பல. கோபத்தால் இரத்த நாளங்கள் சூடேறி உடலைக் கெடுக்கிறது. ஏன் கோபம் வருகிறது? எதனால் கோபம் வருகிறது? கோபம் தோன்றும் களங்கள் எவை எவை? விருப்பு வெறுப்புக்களால் தாக்கப் பெற்றுள்ள மனித மனத்தில் தான் கோபம் எழும்!

காலம் காட்டும் கருவியை-கடிகாரத்தை உற்று நோக்குங்கள்! ஒயாது. ஒடிக்கொண்டிருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கிறது. கடிகாரங்களைச் சூழ்நிலை பாதிப்பதில்லை. அதுபோல நமது வாழ்க்கையும் ஓர் இயக்கம்.

எந்தச் சூழ்நிலையிலும் திகைப்பும் அச்சமும் கொள்ளாமல் தொடர்ந்து செயல் செய்தல் வேண்டும். கோப்த்தினால் இழப்பேயாம், ஒருபொழுதும் ஆக்கம் இல்லை. ஆக்கப்பணிக்கு அடக்கி வைக்கப்பெற்ற வெப்பம் எரிசக்தியாக மாறுவதைப்போல, அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஆக்கத்தைத் தரும்.

பணிகள் தொடர் நிலைத் தன்மையுடையன. படிப்படியாக வளரும் தன்மையதே மனிதவியல் திறன். முதலில் செய்ய இயன்றதைச் செய்க! அதன் தொடர்ச்சியாகச் செய்ய முடியாததையும் செய்யும் திறன் உருவாகும்.

திருவள்ளுவர் வெகுளாமை என்று பத்துக் குறள்களை ஓதுகிறார். வெகுளி, மனிதனின் நகையைக் கொல்லும்; வகையைக் கெடுக்கும்; இனத்தை சுட்டெரிக்கும்; தோழமையைக் கெடுத்துப் பிரிக்கும் என்றெல்லாம் வெகுளியினால் வரும் கேட்டினை விவரிக்கின்றார். திருவள்ளுவர் வெகுளியை மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார்.

ஆம்! வெகுளியை மறந்துவிட வேண்டும். தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும் வெகுளி என்றும் கூறுகின்றார். வெகுளியை மறந்து விடுக! வெகுளியை யார் மாட்டும் மறந்து விடுக! யார் மாட்டும் வெகுளி வேண்டாம்.

வெகுளியை மறந்தால் எண்ணியவைகளையெல்லாம் அடையலாம்! கால தாமதமில்லாமல் உடனடியாக உன் விருப்பத்தை அடையலாம்! எப்போதும் அடையலாம். உள்ளத்தில் உள்ளியதை அடையலாம். ஆதலால் வேண்டாம். வெகுளி; விடுமின் வெகுளி!

மறத்தல் வெகுளியை யாமாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.

(303)

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி யெனின்.

(309)

45. காத்துக் கொள்ளும் வழி

வாழும் மனிதர்களில் யாருக்குத்தான் தற்காப்பு உணர்வு இல்லை! நூற்றுக்கு நூறு பாதுகாப்பையும் அமைதியையும் விரும்புபவர்கள் நாம்! ஆனால் வாழ்வியலறிவு பெறாததால் பலர் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாப்பின்மையையே பெறுகிறார்கள்.

பலர் எவற்றைப் பாதுகாப்பு என்று கருதுகிறார்களோ அவையே அவர்களுக்குப் பாதுகாப்பின்மையைத் தோற்றவித்து விடுவதை வாழ்க்கைப் போக்கில் காணலாம். சொத்து, பெருமை, புகழ் ஆகியன பாதுகாப்பு என்று தேடினாலும், அவைகளுக்கு ஆபத்து ஏற்படும்போது அவை பாதுகாப்பு தருவதில்லை.

தான் நினைத்தவாறு நடக்காதபோது மனிதனுக்குக் கோபம் வருகிறது. கோபம் வெகுளி என்றும் கூறப்படும். கோபம் வந்தால் இதயத் துடிப்பு கூடுகிறது; இரத்த ஒட்டம் கூடுகிறது. அது மட்டுமின்றி இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. இதனால் இதயப் பாதிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது; உடல் நலம்கெடுகிறது. உடல்நலக் கேட்டின் வழி மனநலம் கெடுகிறது.

உடலும் மனமும் கெட்டால் அறிவு வேலை செய்யுமா? ஒரு போதும் செய்யாது. ஆதலால் கோபம் எதையோ காப்பாற்றிக் கொண்டு பாதுகாத்துக் கொள்ளத் தோன்றுவது போலத் தெரிகிறது. ஆனால் அது உண்மையன்று. கோபத்தினால் இழப்பே ஏற்படுகிறது.

கோபப்படுவதற்கு மாறாகத் திகைப்பும் படபடப்பும் அச்சமும் இல்லாமலிருந்தால் ஒன்றும் கெட்டுவிடாது. எல்லாம் நன்றாக நடக்கும்; பாதுகாப்பும் இருக்கும். அடக்கப் பட்ட கோபம் ஆற்றலாக மாறும்! பொறுப்புணர்ச்சியைக் கூட்டும்! வேலைகள் அதிகம் செய்யலாம். ஏமாற்றங்களும் ஏற்படா, உடலுக்கும் பாதுகாப்பு, பணிக்கும் பாதுகாப்பு! அதைவிட நம்மைச் சார்ந்தவர்களிடத்தில் மனக்கசப்பு ஏற்படாததால் அவர்களிடமிருந்தும் பாதுகாப்பு!

சில நிமிடக் கோபம் பல நாசங்களைச் செய்கின்றன. பொறுத்தாற்றும் பண்பு, எண்ணற்ற நலன்களைச் செய்கின்றது. பல ஆண்டுகள் வாழலாம்; நலத்துடன் வாழலாம்! வாழ்வாங்கு வாழலாம்!

இனிமேலாவது கோபப்படாமல் வாழக் கற்றுக் கொள்வோம். ஆனால் கோபத்தை அடக்குதல் எளிதன்று! கடுமையான பயிற்சி தேவை. கோபம் வரும் பொழுதெல்லாம் கவனித்தல் வேண்டும். எதைக் கவனிக்க வேண்டும்? கோபத்தின் காரணங்கள் மாறக் கவனித்துக் காத்திருக்க வேண்டும்.

கோபத்தினை மடைமாற்றம் செய்யப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது அண்ணல் காந்தியடிகள் காட்டிய வழி! ஏன் காலதாமதம்? கோபத்தை விட்டுவிட வேண்டியது தான்! பிளேட்டோவைப்போல் கோபம் வரும் பொழுது பேசாமல் மெளனமாக இருக்கக் கற்றுக்கொள்வோம்! கோபத்தை வென்று விடலாம்.

"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்"

(305)

தன்னைக் காத்துக் கொள்ளும் விருப்பம் உண்டா? தன்னையே கொல்லும் சினத்திலிருந்து காத்துக் கொள்க. அப்படிச் சினத்திலிருந்து தன்னைத் தானே காத்துக் கொள்ளத் தவறினால் அந்தச் சினமே கொன்று விடும் என்பது திருக்குறள் கருத்து! மரணம் அல்லது சாவு வேண்டாம் என்றால் சினத்தைத் தவிர்த்திடுக!

46. கோபமா? வேண்டாம்!

வெகுளி, சினம், கோபம் ஆகியன ஒரு பொருட்சொற்கள். எல்லா அறநூல்களுமே வெகுளியை அறவே விலக்குகின்றன. வெகுளி, பல தீய செயல்களுக்கு வழி வகுத்துவிடுகிறது. சினந்து எழுவதற்குரிய சூழ்நிலைகளை வாழ்க்கையில் சந்திக்காமல் வாழ இயலாது.

ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் வெகுளாமல் இருப்பதே நல்லது. அதுவே நன்னெறி சார்ந்த வாழ்வு. கோபம் ஏன் வருகிறது? எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது போனால் கோபம் வரும்; பேராசையின் காரணமாகக் கோபம் வரும். வேறு சிலருக்கு இயலாமை ஏற்படும் பொழுதும் கோபம் தோன்றும். கோபம் வெறும் உணர்ச்சி மட்டுமே. கோபத்திற்கு வலிமை கிடையாது.

இந்த உலகில் அனைவருமே தங்கள்மீது அதிக ஆசை காட்டுகிறவர்கள். அவரவர்களும் அவரவர்களுடைய வாழ்க்கை மீது தனிக் கவனம் செலுத்துவது இயற்கை! பெருவழக்கும்கூட! உங்கள்மீது உங்களுக்குப் பெருவிருப்பம் உண்டா? தற்காப்புணர்வு இருக்கிறதா? அப்படியானால் கோபப்படாதீர்கள்!

ஆம்! நீண்டநாள்கள் வாழவேண்டுமா? அறிவில் சிறந்து விளங்க வேண்டுமா? ஆம் எனில் கோபப்படாதீர்கள்! கோபம் மரணத்தின் வாயில்! அதனால் இதயத்துடிப்பு கூடும்! குருதி கொதிப்பேறும்; இதயம் பாதிக்கும்! மரணம் வந்து சேரும்!

ஆதலால் மரணத்தைத் தவிர்க்கவும், நீண்டநாள் வாழவும் வேண்டுமானால் கோபப்படாதீர்கள்! கோபம் நிதானத்தை இழக்கச் செய்யும்! அவ்வழி சிந்தனைப் புலன் சிதறும். அறிவு கையிகந்து போகும்! கோபத்தின் விளைவால், மனிதன் மிருகமாகிறான். ஏன் இந்த அவலம்? கோபம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!

மனித சக்தி அளப்பரிய ஆற்றல் உடையது. படைப்பாற்றல் மிக்கது. இத்தகு அற்புதமான மனித ஆற்றலை ஒன்றுக்கும் பயன்படாத கோபத்தில் பாழாக்கலாமா? அடக்கி வைத்த உஷ்ணம் சக்தியாக மாறுகிறது. அதுபோலக் கோபம் வரும்போது அக்கோபத்தை உள்ளடக்கி ஆற்றலாக்குக! அந்த ஆற்றல் ஆக்கநிலையில் அற்புதங்கள் செய்யும்! யார்மீது உங்களுக்குக் கோபம்? அவர்களையே நட்பாக்கிக் கொள்ளலாம். தீமை நன்மையாக வளரும்!

"எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அமைதி இழக்காதவர்கள் பொறுமைசாலிகள்" என்றார் லூயிஸ் டீவென்சன்! அவர் மேலும் விளக்குகிறார். கடிகார்ம் எந்தச் சூழ்நிலையிலும் டிக்டிக் என்று ஒரே மாதிரி அடிப்பதைப் போல எந்தச் சூழ்நிலையிலும் ஒரேமாதிரி இதயத் துடிப்பு உடையவராக விளங்கவேண்டும் என்று கூறுகிறார்.

ஆதலால், நற்பண்புகளுக்கு எதிரிடையான கோபம் வேண்டாம்! வேண்டாம்! கோழைகளின் இயல்பே கோபம்! ஆண்மையும் தைரியமும் உடையவர்கள் கோபப்பட மாட்டார்கள்! கோபத்துடன் தொடர்பு கொண்டு இழப்பை அடைவதில் என்ன பயன்?

47. இன்னா செய்யாமை

திருக்குறள் ஓர் அறிவியல் நூல்; உளவியலைச் சார்ந்த அறிவியல் நூல். நெருப்பை அள்ளி அடுத்தவர் வீட்டின் மீது கொட்டினால் கை சுடாமலா போகும்? அது போல் நாம் மற்றவர்களுக்குக் கொடுமை செய்தால் நாம் கெடாமலேயா மற்றவர்களுக்குக் கொடுமை செய்ய முடியும்? அல்லது இயலும்?

நமது சிந்தனையும் அறிவும் உணர்வும் புலன்களும் கெட்ட பிறகுதான் மற்றவர்களுக்குக் கேடு செய்ய முடியும் ஆதலால், யார் ஒருவருக்கும் தீங்கு செய்தல் கூடாது; நமக்குத் தீங்கு செய்தாருக்குங்கூட நாம் திரும்பச் செய்யகூடாது. இப்படித் தீமைக்குத் தீமை என்னும் சித்தாந்தம் தீமையின் தொடர் வரலாறாகி விடும்; தலைமுறைத் தலைமுறைக்குத் தீமை தொடரும், இது விரும்பத் தக்கதன்று.

எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாற்றும் பண்பே விரும்பத்தக்கது. அது மட்டும் அல்ல, பொறுத்துப் போதல் எளிமையானது. பொறுத்துப் போதல் ஆக்கத்திற்குத் துணை செய்யும். அதற்கு மாறாகச் செய்யும் பழிவாங்கும் முயற்சி கடினமானது; அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டிவரும்; இன்பமும் அமைதியும் குலையும்.

பழிவாங்கும் மனப்போக்கில் பழி பாவங்களுக்குரிய அச்சம் இருக்காது. ஏன் அறிவேகட வேலை செய்யாது. ஆத்திரம் மட்டுமே வேலை செய்யும்; புத்தி முடங்கிப் போகும். பழிவாங்கும் படலம் துன்பத்தின் தொடர் வரலாறாகிவிடும். எப்போதும் அச்சம். சட்டங்களின் (அறத்தின்-அரசின்) அச்சுறுத்தல் முதலியன ஒருங்குகூடி வாழ்க்கையை நரகமாக்கிவிடும். பழிவாங்கும் இயல்புடையோனிடம் மனித நேயம் இருக்காது. அவன் கல்நெஞ்சனாக இருப்பான். கடினசித்தம் அவனுடைய சித்தம்! கொடுமைகளின் ஒட்டுமொத்தமான உருவமாக விளங்குபவனே பழிவாங்குவான்; தீமை செய்வான்.

ஆனால், மனித நேயமுடையவர்கள், சிந்திப்பவர்கள், வாழ்வாங்கு வாழ விரும்புபவர்கள், யார் ஒருவருக்கும், எவ்வுயிர்க்கும் கொடுமை இழைக்கமாட்டார்கள். மாறாக மறப்பார்கள்; மன்னிப்பார்கள்; பகைமை பாராட்ட மாட்டார்கள்; பண்பு நலஞ்சார்ந்து உறவு கொள்வார்கள். "நமக்குத் தீங்கு செய்த ஒருவரைப் பழிவாங்க வேண்டுமா? அவருக்கு நன்மையைச் செய்வதன் மூலமே பழிவாங்குக" என்று திருக்குறள் நெறி ஆற்றுப்படுத்துகிறது.

பழிவாங்கும், கொடுமை இழைக்கும் மனமுடையோருடைய நெஞ்சு கொதித்து நிற்கும்; அறவுரை-அறிவுரைகள் யாதொன்றும் அவர்கள் காதில் ஏறாது. ஆதலால் முதலில் இவனுடைய சினத்தைத் தணிக்க வேண்டும். அவன் சினந் தணிந்த நிலையில் கேட்கத் தகுதியுடையவன் ஆவான்; சிந்திக்க முயற்சி செய்வான். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் முதற்பணி சினந்தனிக்கும் பணியே.

எப்போதும் கெட்டவர்களைத் திருத்துவதற்குரிய ஆற்றொனாச் சினத்தில் மூழ்கி இருப்போரைத் திருத்துவதற்குரிய முதல்விதி அவர்களை மறுக்காமல்முதலில் அவர்களுடன் கொஞ்சம் உடன்பட்டு நிற்றல் வேண்டும் என்பது. இஃது உளவியல் அடிப்படையின் வாய்ப்பாடு. முதலில் கெட்டவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள்; திருந்துவார்கள். வாழ்க்கையும் பயனுடைய தாகும்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்”

(314)

என்ற திருக்குறளை நோக்குக. இந்தத் திருக்குறளில் "ஒறுத்தல்” "அவர்நாண" என்ற சொற்கள் உடன் பாட்டுச் சொற்கள். இந்தச் சொற்களைக் கையாள்வதன் மூலம் பழிவாங்கும் உச்சாணிக் கொம்பிலிருப்பவன் இறங்கி வருவான்.

அவனுடைய சினம் தணியும், பழிவாங்கும் மனப் போக்கிலும் மறு ஆய்வு தலைகாட்டும். இந்த இதமான-இங்கிதமான சூழ்நிலையில் அவனுக்கு ஒரு நன்மை செய்தால் மகிழ்வான்; மாறுவான்; என்றும் நல்லவனாக இருப்பான்.

48. எளிய வாழ்வியல் உண்மை!

ஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் என்பது பழி வாங்குதல் ஆகும். இந்தப் பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழிவாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு ஆயினும் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம்.

பழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அற்ப மனமுடையவர்கள் பழிவாங்குவர்.

திருக்குறள் பழிவாங்குதலை வெறுக்கிறது; வெறுத்து ஒதுக்குகிறது. ஆயினும் உயர்ந்த பண்புகளை எளிதில் எடுத்துக்கொள்ளும் இயல்பறியா மாந்தரிடத்தில் பழி வாங்குதல் தீது என்ற அறிவு எளிதில் வராது. ஆதலால் திருவள்ளுவர் உளவியல் அறிவியல் நியதியில் பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனிதனை அணுகுகிறார்.

ஆம்! எடுத்த எடுப்பில் யாரிடமும் அறிவுரைகள்- உப தேசங்கள் விலைபோகா. முதலில் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். உணர்ச்சி வெள்ளம் வடிவதற்குரிய காலம் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சமநிலைக்கு வந்த பின்னரே எத்தகைய அறிவுரையையும் கூறவேண்டும். அப்போதுதான் அறிவுரைகள் எடுக்கும்.

இன்னாசெய் தாரை ஒறத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.

(316)

என்பது குறள்.

பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்பவன் ஞானம் இல்லாதவன்; அற்ப அறிவு உடையவன். ஆதலால் முதல் நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியின் உச்சியில் நிற்பவனுக்கு உடன்பட்டே பேசியாக வேண்டும்; இல்லையெனில் திருவள்ளுவரையுமே அவன் மறுத்து விடுவான்.

ஆதலால் திருவள்ளுவர் "இன்னாசெய்தாரை ஒறுத்தல்" என்று தொடங்குகின்றார். தமக்குத் துன்பம் செய்தாருக்குத் தாம் ஒறுத்தல் செய்ய வேண்டும்; கட்டாயம் ஒறுத்தல் செய்ய வேண்டும். இந்த அறிவுரை தொடக்க திலையிலேயே வெகுளியின் உச்சக்கட்டத்தில் நிற்பவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதனால் சினம் தணிகிறது; உணர்ச்சி வடிகிறது. மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வருகின்றான். தன்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு நிற்கும் அவனுக்குத் திருவள்ளுவர் மீதும் நம்பிக்கை பிறக்கிறது.

இந்தச் சூழ்நிலையைத் திருவள்ளுவர் பயன்படுத்திக் கொண்டு தம் நிலைக்கு அந்த மனிதனை அழைக்கின்றார்; உயர்த்துகின்றார். ஆம்! பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி? "தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு!" என்று வள்ளுவர் கூறுகின்றார்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்"

(316)

என்பது திருக்குறள்.

"இன்னாசெய்தாரை ஒறுத்தல்" - என்ற சொற்றொடர் உடன்பாட்டுச் சொற்றொடர். "அவர் நாண நன்மை செய்துவிடுதல் என்பது" பொறுத்தாற்றும் நெறியில் ஆற்றுப் படுத்துதலாகும். இந்தக் குறள் சிறந்த உளவியல் அறிவியலைச் சார்ந்த குறள்.

"எவருடனும் முதல் நிலையில் உடன்பட்டுநில்; அவருடைய நம்பிக்கையைப் பெறு; பின் அவர்களை உன் நெறிக்கு அழைத்துக் கொள்”. இது எளிய வாழ்வியல் உண்மை.

49. நாள் எனும் வாள்!

ஒன்றின் தொகுதி தரும் உணர்வினை, படிப்பினையைப் பகுதி தருவதில்லை. பகுதிகள் அற்பமாகக் கருதப் பெறுவது இயல்பாக இருக்கிறது. பல பகுதிகள் தொகுதியாகிறது என்ற உண்மையையும்; பகுதி, தொகுதியிலிருந்து பிரிக்கப்படாதது என்பதையும் நம்மனோர் உணர்வதில்லை. ஏன் தொகுதிகளுக்கு மதிப்புயர்கிறது?

கடற்பரப்பின் தண்ணீர் கணக்கற்ற தண்ணீர்த் திவலைகளின் தொகுப்பேயாகும். அக்கடற்பரப்பிலிருந்து ஒரு திவலை பிரியுமானால் அந்தத் திவலை தன் வடிவத்தைதன்னை இழந்து விடுகிறது. அதுபோலத்தான் பகுதிகளுக்கு மதிப்பீடும் மிக மிகக் குறைவு! ஆயுளும் அற்பமே!

மானுடத்தின் விலை மதிக்க முடியாத தொகுதி, வாழ்க்கை. வாழ்க்கை காலத்தினால் ஆயது. வாழ்க்கையென்பது நூறாண்டாகவும் அமையலாம். கூடுதல், குறைவாகவும் அமையலாம். வயது என்பதும் நம்மீது திணிக்கப்படுகிறது. நாம் விரும்பினாலும் சரி. விரும்பாது போனாலும் சரி வயதுகள் வருதலும் வளர்தலும் தவிர்க்க இயலாதது.

ஆனால், வாழ்க்கை என்ற தொகுதிக்குரிய விபத்தாகிய மரணம் வரும்போது எல்லாரும் பயப்படுகின்றனர்; அழுகின்றனர்; புலம்புகின்றனர். சாவிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால், இந்த வாழ்க்கை என்ற தொகுதியின் பகுதியாகிய ஒரு வினாடி கடந்து செல்லும்போது யாரும் துணுக்குறுவதில்லை; கவலைப்படுவதில்லை. ஏன்? சாவு என்பது ஒருநாளில் வருவதில்லை. நாள்தோறும் சாவு வருகிறது. நொடி தோறும் சாவு வருகிறது. சாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றோம்.

ஆனால், இந்த உணர்வு சாகின்றவர்களுக்கும் வருவதில்லை. சுற்றிலும் இருப்போருக்கும் வருவதில்லை. ஒரு மரம் வாளால் அறுக்கப்படுகிறது. நூல் நூலாகத்தான் அறுக்கப்படுகிறது. அதுபோலத்தான் வாழ்நாளும்! இன்று, நாளை என்று நாள்கள் ஒடுகின்றன. நொடி தோறும், வாழும் பொழுது வாழ்நாள் சுருங்குகிறது. ஆக மொத்தத்தில் சாவு வத்துவிடுகிறது.

ஆனால், வாழ்க்கைப் பயணத்தில் நொடிப் பொழுதுகள் எல்லாம் வாழ்க்கைக்குரியவை. ஒவ்வொரு நொடியும் வாழ்வே! ஒவ்வொரு நொடியிலும் சாகின்றோம் எனறு உணர்ந்தால் வாழ்நாள் வீணாகாது. வாழ்நாள் முழுமையும், பயன்படுத்தலாம்; புகழ்பட வாழலாம். ஆனால் சிலரது உள்ளம் நொடிதோறும் சாகும் சாவிற்குக் கவலைப் படுவதில்லை. இஃது ஒரு வினோதமான உளப்போக்கு!

"நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்"

(334)

50. “மெய்ப்பொருள் காண்பதறிவு”

இந்த உலகம் பொருள்களால் ஆயது. பொருள்கள் தம்முள் வேறுபட்ட தனித்தன்மைகள் உடையன. சில பொருள்கள் வேறுபட்டு விளங்கினாலும் பிறிதொரு பொருளுடன் ஒன்றும் இயல்புடையன. சில தனித் தன்மை பெற்றே விளங்குவன.

மாந்தர் வாழ்க்கை பொருள்களுடன் தொடர்புடையது. வாழ்வின் துறைதோறும், வாழ்வு முழுவதும் பொருள்களுடன் யாதானும் ஒரு உறவு இல்லாமல் வாழ்க்கை அமைவதில்லை; அமையாது; அமைதல் முடியாது. அதனால் தான் திருக்குறள், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றது.

பொருள்களால் ஆயது வாழ்க்கை. இந்தப் பொருள்களை, பொருளின் தன்மைகளை உள்ளவாறறிந்து அப்பொருள் தன்மைக்கு ஏற்பவும் வாழ்க்கைக்குரிய வகையிலும் பயன்படுத்த அறிந்து கொள்ளவேண்டும். பொருள்களின் தன்மையறிதலுக்குத் தனித்திறனும் பயிற்சியும், அறிவும் வேண்டும். பல பொருள்கள் தோற்றமான நிலையிலேயே தொடர்ந்து இருப்பதில்லை. மாறும் தன்மை உடையன உண்டு.

சில பொருள்கள் நிலையாயின போலத் தோன்றும்; பெயர் பெற்று விளங்கும். ஆனால் நிலையில்லாதனவாகிப் போதலும் உண்டு. சில நன்மை தருவது போலக் காட்டி துன்பம் தரும். சில துன்பம் தருவது போலக் காட்டி இன்பம் தரும். சான்றாக நமது உடலுக்கு "மெய்” என்று பெயர். ஆனால், இது உண்மையல்ல. காலத்தால் கேடுறுதலாம். சர்க்கரை இனிமையானது. சர்க்கரையால் விளைவது பெருந்துன்பம். வெந்தயம் கசப்பான பொருள். ஆனால் வாழ்க்கைக்கு நலம் தருவது; இன்பம் தருவது.

குளிர்ச்சியானவையாக இருப்பவை சூட்டையே தருகின்றன. சூடாக இருப்பவை குளிர்ச்சியையே தருகின்றன. ஆதலால் பொருளின் தோற்றம் பார்க்காமல் பொருளின் தன்மை, அப்பொருளால் விளையும் பயன் ஆகியன தெரிந்து அதற்கேற்பப் பயன்படுத்தல் வேண்டும். இத்தகு அறிவு, சராசரி மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. ஞானிகளுக்கே உண்டு.

சாதாரண மக்கள் தோற்றத்தால் கவர்ச்சிக்கப்படுவர், தற்காலிகமானவையாக இருப்பினும் உடனடியாகப் பலன்களை எதிர்பார்ப்பர். எப்பொருளையும் ஆழ்ந்து நோக்குவதில்லை. வேளாண்மைக்குப் பயன்படும் இரசாயன உரங்கள் உரமே இல்லை.

ரசாயன உரங்கள் ஒருவகைத்தூண்டு சக்தியேயாகும். ஆனால் நமது மக்கள் இவைகளை உரம் என்று நம்பினார்கள்; இந்த உரத்தையே நம்பி, குப்பை உரம் தயாரிப்பதை மறந்தார்கள். இதனால் நிலத்தின் பூசாரம் குறைந்தது தான் மிச்சம். அறியாமை அறிவாக ஏற்றுக் கொள்ளப்படுதல் இன்றைய பெரு வழக்கு. இதற்கு அப்பரடிகள் ஒரு கதை கூறி விளக்கினார்.

ஆமை சாப்பிடும் மக்கள், ஆமையை உலைப் பானையில் இட்டு வேக வைத்தார்கள். உலைப்பானையில் தண்ணீர் இளஞ்சூடாக இருக்கும் பொழுது ஆமை இன்ப போதையில் துள்ளி விளையாடும். ஆனால் அந்தச் சூடு இன்பமாக இருக்கும் பொழுது, நீடிக்கப் போவதில்லை. விரைவில் கொதி நிலை மாறும்; ஆமை அழியும்; இதனை உணரும்சக்தி ஆமைக்கு இல்லை. ஆமைக்கு மட்டுந்தானா? மனிதர்களிலும் பலர் இப்படித்தான் வாழ்கின்றனர்.

பெரும்பான்மையான மக்கள் காலப்போக்கில் துன்பம் விளைப்பனவற்றையே இன்பமெனக் கருதி வாழ்ந்து ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதனைத் திருவள்ளுவர்

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

(355)

என்றார்.

51. ஆன்மாவின் உணவு!

மனிதன் பிறப்பதில்லை; மனிதன் உருவாக்கப்படுகின்றான். இதுவே அறிவியல் உண்மை. மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் பாத்திரம் மிகமிகப் பெரியது. கல்வியின் இலட்சியமே மனிதனை உருவாக்குவதுதான்! அதனால் மனிதனை உருவாக்கும் கல்வியிலும் விழுமியது இல்லை.

மனிதனின் பொறி, புலன்களைப் பயனுடையனவாக்கி வாழ்க்கையை வளர்த்து விளக்கமுறச் செய்வது கல்வியே! மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூலமே இனங்காணப் பெற்றுச் செயலாக்கத்திற்குப் பயன்படு நிலைக்குக் கொணரப் படுகிறது! ஏன் கல்வியே ஆன்மாவின் சிறந்த உணவு.

திருக்குறள் ‘கற்க!' என்று பேசுகிறது. ஆம்! கல்வி கற்பது மனிதர்களின் பழக்கமும் வழக்கமும் ஆகவேண்டும். கற்றல் பலவகை. அவற்றுள் எளிமையானது, முதன்மையானது தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் கற்பது.

"கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்பது பழமொழி. கண்டது=கண்ணால் கண்ட இயற்கைக் காட்சி களையே கற்பது. இங்ஙனம் கற்ற பாடங்களிலேயே ஐசக் நியூட்டனின் ‘புவி ஈர்ப்பு ஆற்றல்’ கண்டுணரப் பெற்றது என்பதறிக.

அடுத்து அவரவர் சொந்த வாழ்க்கையின் பட்டறிவு வழி பெறும் கல்வி அறிவு. இந்தக் கல்வி தனி முயற்சியில்லாமல் வாழ்க்கையின் வழியிலேயே கற்கப் பெறுவது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிதோல்விகள் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் ஒட்டி உறவாடி வாழ வேண்டிய இடத்தில் முரண்பாடுகள் தோன்றுதல், நம்பிக்கையின்மை வளர்தல் ஆகியன வாழ்வியலுக்கு நல்லவையல்ல.

மனிதர்களிடையில் மன முறிவுகள் தோன்றுவதும் அவ்வழி மனித உறவுகள் பாதிக்கப்படுவதும் ஏற்க இயலாத ஒன்று. அன்றாடம் வாழ்ந்த வாழ்க்கைப் பாங்கைத் திறனாய்வு செய்து திறனாய்வு வழி வாழ்நிலைகளை அறிந்து கடைப்பிடித்தல் சிறந்த கல்வி.

மூன்றாவது, நூல்களைக் கற்பதன் மூலம் பெறும் அறிவு. இந்தக் கல்வி முறை தான் இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதும் இந்தக் கல்வியே! இந்தக் கல்வியை மக்கள் பெறுவதற்காக நாடு செலவழிக்கும் காலமும் பணமும் அளவிடற்கரியது.

ஆயினும் போதிய பயன் இல்லை; ஏன்? கல்வி முறையே காரணம். இன்றைய கல்வியில் சிந்தனைக்கு வாய்ப்பில்லை; செயலுக்குரிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. கல்வி கற்றதனால் எந்த ஒரு தனித்தகுதியும் வந்தடைந்ததாக இல்லை. ஏன்? கற்கும் ஆர்வம் கூட இல்லை.

திருக்குறள் ‘கற்க’ என்று கூறுகின்றது. ஆம்! கற்பது - இடையீடில்லாது தொடர்ந்து கற்பது மனிதனின் கடமை. ஏன் கற்க வேண்டும்? மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். அவன் எண்ணிய செயல்களைச் செய்ய முடியும். ஆயினும் அவனுடைய அகநிலைக் குற்றங்களாகிய அச்சத்திலிருந்து விடுதலை பெற்றால்தான் கற்கும் கல்வி பயன்தரும். “கசடறக் கற்பவை கற்க” (391) என்றது திருக்குறள். “கசடு"- மனக்குற்றங்கள். மனக்குற்றங்களை நீக்கும் மருந்து கருத்துக்கள் தாம். கருத்துக்கள் பெரும்பாலும் நூல்கள் வாயிலாகவே கிடைக்கும். கற்க வேண்டிய நூல்களைத் தேடிக்கற்ற பிறகு அக்கருத்துக்கள் வழி நடந்து அக்கருத்துக்களுக்கு உரிமை புடையராதல் வேண்டும்.

52. அறிவு

அறிவு, மானுட வாழ்க்கையை இயக்கும் ஒரு சிறந்த கருவி. இன்று பலர் கருதுவது போல அறிவு என்பது தகவல்கள் அல்ல. செய்திகள் அல்ல. அறிவு ஒரு கருவி (instrument). துன்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கருவி. செவி வழிக்கேட்கும் செய்திகளை, அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்வது அறிவு. ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளை மட்டும் ஏற்பது அறிவுடைமை.

அதுபோல, இந்த உலகில் உள்ள பொருள்களைச் சார்ந்தது தான் வாழ்க்கை, சில பொருள்கள் நல்லன போலத் தோன்றும்! ஆயினும் தீமையே பயக்கும்!

காட்சியில் வேறாகவும் அனுபவத்தில் வேறாகவும் காணப்படும் பொருள்களின் தன்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்ளுதலே அறிவுடைமை. அறிவு பல்வகைப் பிரிவாக வளர்ந்து இந்த உலகின் துறைகள் அனைத்தையும் செழிக்கச் செய்கின்றது. இது பகுத்தறிவு; முதன்மையானது.

பகுத்தறிவு மாந்தர் அனைவருக்கும் உரியது. ஆனால், பலர் பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை. அறிவு வளர்ந்தே ஞானம் தருகிறது. ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கைக்கு அறிவே மூலதனம். இந்த உலகில் பெறக்கூடிய பேறுகள் யாவற்றிலும் சிறந்தது அறிவுடைமையேயாம். அறிவுடையார் எல்லாச் செல்வங்களும் உடையவர்.

"அறிவுடையார் எல்லாம் உடையார்” (480) என்றது திருக்குறள். அறிவு கல்வியால் பெற இயலும்! ஆனால், கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையராவர் என்று எண்ணற்க கற்றவர்களிலும் அறிவில்லாதவர் உண்டு. கற்ற கல்வி - கருத்து வாழ்க்கையில் சோதனைப்படுத்தப்படும் பொழுது தான் அறிவு உருவாகிறது. அறிவு - பகுத்தறிவே இந்த உலகைப்புரிந்து கொள்ளவும் இந்த உலகில் சிறப்புற வாழ்ந்திடவும் துணை செய்கிறது.

அறிவு, முற்காப்புக் கருவியாகவும் தொழிற்படுகிறது. அதாவது, துன்பம் வந்து தாக்காமல் நெறியில் உய்த்துச் செலுத்துவது அறிவு. இனி எதிர்வரும் காலத்திலும் துன்பம் வந்தணையாமல் காப்பதும் அறிவுதான்! வாழ்க்கை ஒரு அரியகொடை; வைப்பு; இந்த வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற்றிட அறிவு தேவை. அறிவு காட்டும் வழியில் வாழ்தலே வாழ்வு. "மேலான சக்தி” களை நம்புவதில் பயனில்லை.

அறிவு ஒரு போதும் தீமை செய்யாது. அறிவுக்குக் கொடுக்கும் விலை சிறந்த மூலதனம். அறிவுடையார்கள் பலவீனர்களாக இருக்கமாட்டார்கள். அதனால், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். சூழ்நிலைகளைக் கடந்தும் சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொண்டும் வளரும் தன்மை அறிவுடையவர்களுக்கு உண்டு.

இயற்கை அறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது நூலறிவு. நூலறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது ஆய்வியல் சார்ந்த அறிவு. ஆராய்ந்து அறிந்த அறிவுக்கு பெயர் நுண்ணறிவு, நுண்ணறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது பட்டறிவு. இங்ஙனம் வாழ்க்கையின் வாயில்கள் தோறும் வளர்ந்து செழுமைப்படுவது அறிவு.

53. சிறப்பு செய்தொழிலாலல்ல!

இன்று ‘மானுடம் உலகமாக உலகளாவிய நிலை’யில் வளர்ந்து வந்திருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வளரும். இன்று மனிதம்; குடும்பம், சமூகம், சமுதாயம் ஆகிய பரிணாம வளர்ச்சியின் எல்லைகளைக் கடந்து மானுடம் ‘ஓருலகம்’ என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

ஆதிகாலத்தில் மனிதக் கூட்டம்தான் இருந்தது; இந்த மனிதக் கூட்டந்தான் காலப்போக்கில் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாக வளர்ந்தது. ஏன்? சார்ந்து வாழும் பண்புகள் வளர்ந்தன. ஒருவருக்கொருவர் தேவைப்பட்டவர்களாக, ஒருவரையின்றி மற்றொருவர் இல்லை என்கிற அளவுக்கு வாழ்நிலை அமைந்தது. இந்த நிலையில்தான் சமூக அமைப்பு வடிவம் பெறுகிறது.

மக்களிடையில் ஏற்பட்ட பல்வேறு வகைத் தொடர்புகளால் சமூக அமைப்பு தோன்றுகிறது. சமூகம் இயற்கையாகப் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவது. தனி மனிதர்களே சமூகத்தைத் தோற்றுவிக்க முடியாது.

ஆனால் சமூக அமைப்பினால் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெறுபவர்கள் சமூகத்தை ஆதரித்துப் பாது காக்கின்றார்கள்.

இங்ஙகனம் இருந்த சமூக அமைப்பில் வகுப்பு, சாதி, குடும்பம் ஆகியன எதுவும் தொடக்கத்தில் இல்லை. காலப்போக்கில் விவசாயத் தொழில் தோன்றிய நிலையில் சமூகம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு நிலச் சொந்தக்காரர்கள் மற்றொரு பிரிவு நிலத்தில் விவசாயம் செய்யும் தொழிலாளிகள். இதனால் பண்ணையாட்கள்-அடிமை முறை தோன்றியது.

தி.9.

இந்தக் காலக் கட்டத்தில்தான் ஒருவர் அல்லது சிலர் பிறிதொருவருக்காகக் கூலி அடிப்படையில் வாழ்தல் என்னும் நடைமுறைத் தோன்றியது. இந்த நடைமுறை தோன்றிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வேளாண்மை அடிப்படையிலான பல தொழில்கள் தோன்றின. அதே போழ்து வாழ்நிலையினால் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சியின் காரணமாகவும் பல தொழில்கள் தோன்றின.

தொழில்கள் தோற்றத்தின் அடிப்படையில் வகுப்புக்கள் தோன்றின. வகுப்புக்கள் தோன்றிய நிலையில் வகுப்புக்களுக்கிடையில், செய்யும் தொழில் அடிப்படையில் தகுதி, அந்தஸ்து, பெருமை முதலியன தோன்றின.

இங்ஙணம் தொழில்கள், வகுப்புக்கள் அடிப்படையில் பெருமை சிறுமைகள் தோன்றிய நிலையை, திருக்குறள் அறுதியிட்டு எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டுவதுடன் மட்டு மல்ல. மாந்தருள் பெருமை கோரிப் பெறும் உரிமையையும் மறுக்கிறது.

மாந்தர் எவரும் பிறப்பில் தொழில் செய்பவராகவோ, பெருமைக்குரியவராகவோ பிறப்பதில்லை. பிறப்பிலேயே உயர்வுடையவர்கள் என்பது புகழ்ச்சியேயாம். அறிவியல் சார்ந்த உண்மையல்ல. பிறப்பில் அனைவரும் ஒன்றும் அறியா குழந்தைகளே என்பதை அக்பர் சோதனையின் மூலம் நிரூபணம் செய்த வரலாற்றை ஒர்க. அதனால் தானே ததீசி முனிவரின் பத்தினி மும்மூர்த்திகளையும் குழந்தைகள் ஆக்கினார் போலும்.

பிறப்பில் அனைவரும் சமம். மொழி இல்லை, மதம் இல்லை; உடமை இல்லை; தொழில் இல்லை; பெருமை இல்லை; சிறுமை இல்லை; வளர்ச்சியின் காரணமாகச் சில பெறலாம். ஆயினும் மானிடத்தின் அடிநிலைக் கொள்கையான சமம், சமத்துவம் ஆகியனவற்றை இழந்து விடக்கூடாது.

சமூகத்தின் இயக்கத்துக்குப் பல தொழில்கள் தேவை. தொழில்கள் சில உயர்வான அறிவு சார்ந்த உழைப்பாக இருக்கலாம். பல உடல் சார்ந்த உழைப்பாகவும் இருக்கலாம். ஆயினும், தொழிலின்கண் உள்ள வேறுபாடுகள் தொழிலை செய்பவர்களிடம் வந்துவிடக்கூடாது. வந்தால் சமூக மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற சமூகவியல் அறிவியலை

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்”

(972)

என்ற திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.

பிறப்பின் அடிப்படையில் உள்ள சமம், சமத்துவம் சமூகத்தின் அடிநிலைக் கொள்கையாக விளங்க வேண்டும். வாய்ப்புக்கள் காரணமாக அமையும் தொழிலின் காரணமாக எந்த ஒரு சிறப்பு உரிமையையும் தகுதியையும் சமூகத்தில் பெறக்கூடாது; அடையக்கூடாது. கோயில் சிலையைப் பூசிப்பவனும் சந்தி பெருக்குபவனும் செய்யும் தொழிலால் வேறுபடலாம். அதனால் கோயிற்பூசை செய்வோர் உயர் நிலையினராகவும் சந்தி பெருக்குவோர் இழி நிலையினராகவும் சமூகத்தில் ஆகக்கூடாது.

சமூகத்தில் எந்த இரு பிரிவினரும் ஒத்த சமூகத் தகுதி உறவுகள் பெறுவதே சமூக நீதி. அப்படி இருந்தால்தான் சமூகத்திற்குத் தேவையான பல்வேறு தொழில்களையும் செய்ய முன் வருவர். அதனால் செய்யும் தொழில் காரணமாகச் சிறப்புரிமைகள் கோரிப் பெறுவதை-அடைவதை "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்று மறுக்கிறது திருக்குறள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிக்கல்கள் வராத சமூக அமைப்புக்கு, திருக்குறள் வழி காட்டியுள்ளது.

54. உழைத்து உண்க!

இந்த உலகு உழைப்பினால் ஆயது. இந்த உலகு உழைப்பினால் இயங்குவது. இந்த உலகை இயக்கும் ஆற்றல் உழைப்பு. உலகின் முதற்பொருளாகிய கடவுள் தமது படைப்பில் உழைப்பில்லாமல் வருவன எவற்றையும் கண்டிலன்; படைத்திலன்.

இயற்கையும் உழைப்புத் தன்மையுடையதே. மலர்களும் காய்களும் கனிகளும் உழைப்பின் விளைவேயாம். உழைப்புக்குரிய பிறப்பு, மானுடப் பிறப்பு. மானுடம் பெற்றுள்ள உடம்பின் அமைப்பு உழைப்பைக் குறிக்கோளாகக் கொண்டதேயாம். உழைப்பு உடம்பின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் இன்றியமையாதது.

துறவு நெறியில் சென்ற புத்தர் பெருமுயற்சியுடன் வாழ்வதை வாழ்வு என்றார். மானுடத்தின் புலன்களில், பொறிகளில் கலந்திருப்பது உழைப்பு. உழைத்தால் பொறிகளின் ஆற்றல் வளரும்; புலன்களின் ஆற்றல் வளரும். உழைப்பு இல்லையேல், உழைப்பில் பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து அழிவதைப்போல உடம்பு அழியும்.

மனித வாழ்வு உணவால் இயங்குகிறது. ‘உண்டி முதற்றே உலகு’ என்பது பெரியோர் வாக்கு. உணவை உழைத்துப் பெறுவதற்கு என்றே கால்களும் கைகளும் கொடுக்கப்பட்டன. உணவு, உழைப்பின்றிக் கிடைக்காது. ஒரோ வழி பிறர் உழைப்பால் உருவாகும் உணவை "உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்” என்றார் அண்ணல் காந்தியடிகள்.

நெற்றியில் வியர்வைத் துளிகள் காணும் அளவுக்குக் கடுமையாக உழைத்தால் உண்ணும் உணவு சுவையாக இருக்கும். அங்ஙனம் உழைத்து உண்பதே நலம் பொருந்திய வாழ்க்கை.

“A in the sweet of the fere shalt than cat Bread” என்ற அனுபவ வார்த்தை அறிக. உழைப்பில் சிந்தும் வியர்வையே உண்ணும் ரொட்டிக்கு விலை. உழைத்து உண்பதே ஒழுக்கம்; நீதி சார்ந்த வாழ்வியல். சுவையுடைய உணவு வேண்டாம்! உணவுக்குச் சுவையிருப்பினும் வாழ்க்கைக்குப் பயன்படாது. தண்ணீர்போல அமைந்த கூழாயினும் உழைப்பால் வந்ததாயின் அந்தக் கூழே இனியது. ஆதலால் சிலவாம் இனாம் வேண்டாம்.

“Nothing is free” என்ற வாழ்க்கையை நியதியாக்குவோம். உழைப்பு-படைப்பாற்றல் தன்மை வாய்ந்தது. உழைப்பு, உழைப்பு! - நேர்மையான உழைப்பு ஒன்றுதான் மனித சமுதாயத்திற்குச் சிறப்பான மருந்து.

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது

உண்ணலின் ஊங்கினியது இல்.

(1065)

55. கற்புக்கடம் ஆண்ட வாழ்க்கை

காதற் கடமை பூண்ட வாழ்வியலிலும் அறிவியல் உண்டு. உளவியல் ஒரு சிறந்த அறிவியல். இன்று நடைபெறும் சமூகத் தீங்குகள் பலவற்றிற்கும் காரணம் உளவியல் அறியாமை. ஏன், வாழ்க்கையையே அறிவியலடிப்படையில் இயக்கினால் எண்ணற்ற இன்பங்கள் கிடைக்கும். இதனைத் தமிழ் மக்கள் பண்டே உணர்ந்து வாழ்வியலுக்கும் அகத்திணை இலக்கணம் செய்தனர்.

காதல் மலரினும் மெல்லியது; அதன் செவ்வி உணர்ந்தார் சிலரே என்பது வள்ளுவத்தின் முடிவு. காதல் மனையறத்தில், நம்பிக்கையும் நல்லெண்ணங்களும் ஊற்றுக் கண்களாகும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதலும், ஒத்துழைத்தலும் இன்றியமையாக் கடமை; மனையறத்தின் இணைகள், மாண்புகளை ஒருவருக்கொருவர் சேர்க்கும் இணைகளாகும். ஆதலால், நமது அறத்தில் மனை வாழ்க்கை, பிரிவினைக்குரியது அல்ல. இஃதோர் ஒப்பந்த அளவில் அமைந்ததும் அல்ல. இஃதொரு தியாக வேள்வி.

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை.

(1151)

என்பது வள்ளுவம்.

ஆதலால், காதல் மனைவாழ்க்கையின்பம் ஆன்ம இன்பம்; ஆன்ம அனுபவம். ஆதலால் கற்புக்கடம் பூண்ட பெண்ணே வாழ்க்கைக்குத் துணை நிற்கமுடியும்; மற்றவர்களால் இயலாது. ஒருவர், இருவருக்குச் சேவை செய்ய இயலாது. இங்ஙனம் விரும்புதல் புலால் சுவையேயாம். இது கொடிதினும் கொடிது. இத்தகு தவறுகள் செய்யாத வாழ்க்கையையே, பேராண்மை நிறைந்தது என்றும், கற்பெனும் திண்மை கொண்ட வாழ்க்கை என்றும் வள்ளுவம் போற்றுகிறது.

56. நலமுற வாழ்வோம்!

உடல் ஒரு அற்புதமான கருவி. உடம்பில் உயிர் இயங்குகிறது. உடற்கருவி வாய்க்காது போனால் உயிர் இயக்கம் இல்லை. நுகர்வு இல்லை. அறிவு இல்லை. உயிர் வாய்ப்பாக அமையாது போனால் உடல் பயனற்றது. உடல் உயிருடன் இணைந்திருக்கும் பொழுதுதான் பெயர். உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டால் பெயர் போய்விடுகிறது. பிணம் என்ற புதுப்பெயர் வருகிறது.

வாழ்வதற்கு இந்த வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். முழுமையாக வாழ்தல் வேண்டும். உடல்-உயிர் சார்ந்த வாழ்க்கைக்குப் புலன்கள் முதன்மையானவை.

புலன்கள் மூளையின் சார்புடையன. மூளையின் இருப்பு தலை, "எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்" என்பர். உடலுக்கு வாய்த்துள்ள கருவிகள் இரு வகையின. ஒன்று அறிவுக்கருவிகள், இவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன. பிறிதொன்று செய் கருவிகள். இவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.

மனம் ஆற்றல் வாய்ந்த கருவி. காற்றைவிட வேகமாகச் செல்லும் தன்மையது. ஆனால், எங்கு, ஏன் போகிறோம் என்று அதற்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசைப் படுவதில்லை. இந்தப் பணியை புத்திதான் செய்கிறது. மனம் பற்றும் செய்திகளை ஆய்வு செய்து எடுத்துக் கொள்வதுதான் புத்தியின் வேலை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர், புத்தி அளவுக்கு வளர்வதில்லை. மனத்தளவிலேயே நின்று விடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப் படுவார்கள்; வாழத் தெரியாதவர்கள்.

சித்தம் சிந்திப்பது. சிந்தனை மனிதரின் சிறந்த அகநிலைத் தொழிற்பாடு! சித்தம் மிக மிக நுண்மையான பகுதியைக்கூட ஆய்வு செய்து, உண்மைகளைக் கண்டு பிடிக்கும்; ஆழமான உண்மைகளைக் கண்டு பிடிக்கும். அகங்காரம் என்பது முடிவு செய்யும் உறுப்பு. எடுக்கப்பெறும் முடிவுகள் மெய், வாய், கண், மூக்கு, செவிகள் வாயிலாகச் செயற்பாடுறும். இது உடலியக்கம்.

உடலியக்கத்திற்கு உடலோடு கூடி வாழ்தலுக்கு இயற்கை, கால எல்லை நியதி செய்திருக்கிறது. மிகப் பெரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல் உடையது இந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மானுட வாழ்க்கையின் காலம், ஆற்றல் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

புத்தி, ஆழமான உண்மைகளைக் காணுதல் வேண்டும். கண்கள் அறிவார்ந்த நெடிய தொலைநோக்குப் பார்வை பெறவேண்டும். கைகள் உழைக்கும் கரங்களாக விளங்க வேண்டும். இந்த உடல் நோய்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். கதிரொளியில் தோய்தலும், காற்றில் உலாவுதலும் உடலுக்கு நல்லது.

உடல், ஒரு உழைப்புச் சாதனம்-கருவி. இந்த உடலுக்குப் போதிய உழைப்புத் தராது போனாலும் நோய் வரும். உடல், உழைப்பில் ஈடுபடுத்தப் பெறுதல் வேண்டும். உடலுக்கு இசைந்த உழைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய நல்ல உணவு தேவை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் - நல்ல நினைவுகள் இல்லாத வாழ்க்கை நச்சுத்தன்மை அடைந்து விடும்.

மேலும் சிறப்பாக உயிருக்கு உயிராக விளங்கும் கடவுளிடம் பேசி மகிழ வேண்டும். இவையெல்லாம் அமைந்து நலமுற வாழ்தல் அறிவியல் சார்ந்த வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்! வையகத்திற்கு அணியாக வாழ்வோம்!

57. முப்பால் அமைந்த திறன்

திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பாலாக வகுத்துச் செய்தது ஏன்? இந்த வினாவுக்குப் பலர் விடையளித்துள்ளனர். பெரும்பாலோர் மரபுவழிச் சிந்தனை. பழக்க வழிப்பட்ட சிந்தனை (Conventional thinking-Habitual thinking) நோக்கிலேயே காரணங்கள் காட்டியுள்ளனர். ஆனால், அவை அறிவியல் ஆய்வின் முன்னிற்குமா என்பது ஐயம்.

திருவள்ளுவர் நூல் செய்யத் தொடங்கும் பொழுது எல்லாரையும் போலத்தான் நினைத்து அறத்துப்பாலை மட்டுமே செய்ய எண்ணினார். அறத்துப்பாலை இயற்றி முடிக்கும் பொழுது நூல் ‘ஊழிய’லில் வந்து முடிந்தது. ஊழியல் முடிந்தவுடன் திருவள்ளுவர் சிந்திக்கின்றார்; ஆழமாகச் சிந்திக்கின்றார்; வாழவேண்டிய மானுடத்தை ஊழைக்காரணங் காட்டி நடுத்தெருவில் - முட்டுச் சந்தியில் நிறுத்தி விட்டுப் போகத் திருவள்ளுவர் விரும்பவில்லை.

ஆதலால் ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலுடையதாக மானுடத்தை ஆக்க விரும்புகின்றார். ஊழை எதிர்த்துப் போராடுதல் எளிது அன்று. அதற்குரிய கருவி, காரணங்களை மானுடம் பெற்றாக வேண்டும். இந்த நோக்கத்தில்தான் பொருட்பாலைத் திருவள்ளுவர் இயற்றுகின்றார்.

ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலை, கல்வி, கேள்வி, அறிவறிந்த ஆள்வினையுடைமை முதலிய கருவிகளை நாம் பெறத்தக்க வகையில் பொருட்பால் இயங்குகிறது. மேலும் ஊழை எதிர்த்துப் போராடும் களத்தில் போராடத் தக்க உறவினர்களையும் துணைகளையும் கூட்டுவிக்க முயற்சி செய்கிறார்; பொருட்பாலை இயக்கிச் செல்லும் திருவள்ளுவர் சமுதாயத்தில் முரண்பாடுகளையே சந்திக்கின்றார்! பெரியோரைத் தேடிப்போகின்றார்! சிறியோரே வந்து சேர்கின்றனர். நல்நட்பை நாடிச் செல்கின்றார்! ஆனால், கிடைத்ததோ தீ நட்பு: செங்கோன்மையைத் தேடிப்போகின்றார்! கிடைத்ததோ கொடுங்கோன்மை! இந்த அவல நிலை திருவள்ளுவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால் பொருட்பால் முடிவில் ஆற்றாமை மீதூர மானுடத்தைத் திட்டுகிறார்.

"ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவும்ஓர் நோய்"

(848)

"சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்

கொல்லப் பயன்படும் கீழ்”

(1078)

என்றெல்லாம் கடிந்து பேசுகின்றார்! ஆதலால், திருவள்ளுவருக்கு அன்று வாழ்ந்த மானுடத்தின்மீது கட்டுக் கடங்காத கோபம்! மீண்டும் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்திக்கின்றார்!

அந்த ஆழ்ந்த சிந்தனையின் வடிவு, இன்பத்துப்பால். செய்ய முற்பட்டது! இன்பத்துப்பாலின் நிகழ்வுகளை இல்லறவியலிலும் திருவள்ளுவர் கூறியிருந்தும் மீண்டும் இன்பத்துப் பால் செய்யமுற்பட்டதேன்? இல்லறவியல் கூறியவை இல்லற வாழ்வின் செயல் முறைகள்! கோட்பாடுகள்! காமத்துப் பாலில் சொல்வது காதலின் சிறப்பு-காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! காமம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லாரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்!

"மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார்”

(1289)

என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறந்தானே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையாக இரண்டு பகுதிகளாக இயக்கினார்.

2

மண்ணும் விண்ணும்

* * *

1. வரலாற்றுப் போக்கில் வள்ளுவம்

இன்றையச் சமுதாய அமைப்பைப் பொறுத்த வரையிலே ‘வரலாற்றுப் போக்கில் வள்ளுவர்’ என்ன கருதுகிறார். நீண்ட நெடுங்காலமாக இந்த நாட்டில் உள்ள பல்வேறு சமயத்தினரும், இங்குள்ள எல்லா அரசியல் தரப்பினரும், பல்வேறு கொள்கைகளையும் தத்துவங்களையும் கொண்டவர்களும் ஏற்றுப் போற்றும் ஒரு பொது நூலாகத் திருக்குறள் திகழ்ந்தாலும் அது எல்லோருக்கும் வழக்கறிஞராக விளங்க முடியுமா? என்பதுதான் ஒரு பெரிய கேள்வி.

தூற்றுகிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான்-போற்றுகிறவனும் திருக்குறளை ஏற்றுக்கொள்ளுகிறான். சமுதாயத்திற்கு நலன் செய்கிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான்-தீமை செய்கிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான் என்று சொன்னால், இருதரப்பினருக்குமே திருவள்ளுவர் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளுகிறார் என்று கூறிவிட முடியுமா? ஒருபோதும் சொல்ல முடியாது.

மனித சமுதாயத்தில் ஏதோ ஒரு தவறு நடந்து கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு மூலையில்-சிந்தனையில் தொடர்ந்து தவறு நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகிற பலவீனமான மனோபாவம் பலரிடம் அமைந்திருக்கிறது. அத்தகையவர்கள் மிகச்சிறந்த நூலாக-மக்கட் குலத்தை வாழ்வாங்கு வாழவைக்கும் மறையாக விளங்கும் திருக்குறளைத் தங்கட்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முயல்கிறார்கள் - மாற்றிக் கொள்ளுகிறார்கள். அது நீதியுமாகாது-நேர்மையு மாகாது என்று காட்டுவது நமது பொறுப்பும் கடமையுமாகும்.

வரலாற்றுப் போக்கில் வள்ளுவம் என்று நாம் சொல்லுகின்றபோது, நிறையக் கருத்துக்களைக் கூற முடியும். ஒரு கவிஞன் அல்லது ஒரு புலவன், அல்லது ஒர் எழுத்தாளன் சிந்தித்து ஒரு சிந்தனையைப் படைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும். வெறும் புலமையினாலே மட்டும் ஓர் இலக்கியம் தோன்றினால் அதை வியந்து போற்ற முடியாது. வெறும் பக்தியினாலே-பாசத்தினாலே ஓர் இலக்கியம் தோன்றினாலும் அதை வியந்து பாராட்ட முடியாது. கவிதை படைக்கும் ஆற்றலினால் மட்டும் ஓர் இலக்கியம் தோன்றுமானால் அதையும் நாம் கையேந்தி வரவேற்க முடியாது. அந்தப் புலவன்-பக்தன்-கவிஞன்-எழுத்தாளன் வாழ்ந்த காலச் சமுதாயத்தில் நடை முறைகளை ஆழமாக-தெளிவாகப் புரிந்துகொண்டு அந்தச் சமுதாயத்திலே-நடைமுறையில் இருந்த தவறுகளை குறைகளை எண்ணிப்பார்த்து அந்தத் தவறுகளை மாற்றி குறைகளைக் குறைத்து நிறையுடைய செழுமையை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்குப் பயன்படும் அவன் பயன்படுத்தும் சாதனமே இலக்கியம் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

நடைமுறையில் இருப்பதை எடுத்துக் காட்டுவதினால் மட்டும் இலக்கியம் சிறந்துவிடாது. கண்முன்னே காண்பனவற்றைக் கோவையாக எடுத்து விளக்குவது நிறைவான இலக்கியமன்று. வெறும்பொழுது போக்கிற்காகப் புல்லிய உணர்ச்சிகளையும்-ஆசாபாசங்களையும் வளர்ப் பதற்காகப் படைக்கப் பெறுவனவற்றை இலக்கியங்களாக ஏற்றுக் கொள்வதற்கில்லை. தான் வாழும் தலைமுறையில், மனித சமுதாயம் எந்த முறையில் வாழ்கிறது-அந்தச் சமுதாயத்தின் உணர்ச்சிகளும் போக்குகளும் எப்படி இருக்கின்றன? அவற்றில் உள்ள குறை என்ன? நிறை என்ன? என்பனவற்றை யெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டு இலக்கியங்களைப் படைப்பவனே இலக்கிய கர்த்தா-எழுத்தாளன்-கவிஞன். அவன் அவற்றைப் புரிந்து கொள்வது மட்டும் போதாது-அவ்வாறு சிந்தித்து உணர்ந்ததை-புரிந்து கொண்டதை மனித உலகமே கூடி எதிர்த்தாலும் குறையைச் சுட்டிக்காட்டி குறை நீங்கி மனித சமுதாயம் நிறைவை நோக்கி நடைபோடுவதற்கான வழிமுறைகளை அஞ்சாமல் எடுத்துக் காட்டுபவனே சிறந்த கவிஞன்-சிறந்த இலக்கியப் படைப்பாளன். இவற்றை நினைவில் வைத்துக்கொண்டு வரலாற்றுப் போக்கில் வள்ளுவம் என்கிறபோது, திருவள்ளுவர் வாழ்ந்த காலம்-அவருக்கு முன்னர் வாழ்ந்த மூத்த தலைமுறை-அன்றையச் சமுதாயம் எப்படியிருந்தது என்ற பின்னணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் திருக்குறளை-வள்ளுவத்தை ஓர் உயர்ந்த ஒழுக்க நூலாகமட்டும் பார்க்க வில்லை. திருவள்ளுவர் தான் வாழ்ந்த காலத்துச் சமுதாய அமைப்பையும், தனக்கு முந்திய காலத்துச் சமுதாய அமைப்பையும், அந்தச் சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு களையும், மேடுபள்ளங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டு, தாழ்வுகளை நீக்கி ஏற்றங்காணவும், பள்ளங்களை நிரப்பி மேடுகளாக்கவும் திட்டமிட்டுத்தான் திருக்குறளைச் செய்தார். இதிலே நான் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். வள்ளுவர் வாழ்ந்த காலத்திய மனித சமுதாயம் மேடு பள்ளங்களையுடையதாகவே இருந்தது. ஆம், மேடுகள் குறைவாகவும், பள்ளங்கள் சற்று அதிகமாகவும் இருந்தன. அந்தப் பள்ளங்களை நிரப்பி, மனித ஒழுக்க நெறியில் அந்தச் சமுதாயத்தை ஈடேற்ற வேண்டும்-வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார்.

திருவள்ளுவர் மனித சமுதாய வரலாற்றில் ஏற்பட்டிருந்த குறையை-வீழ்ச்சியை-ஒழுக்கக் கேடுகளைக் கண்டுபிடித்து, அவற்றை மாற்றியமைத்து ஏற்றமும் எழுச்சியும் உண்டாக்கிச் சமுதாயத்தை நல்வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற தூய நன்னோக்கத்தோடு வள்ளுவத்தைச் செய்தார்-மனிதகுலச் சிந்தனையாளனாக-ஒழுக்க நெறியாளனாக-இவற்றிற்கெல்லாம் மேலாக, சமுதாயத் தலைமைக்குத் தகுதியுடையவனாகத் தன்னை ஆக்கிக் கொண்டு திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார் என்ற உண்மையை- முன்னுரையை நாம் இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு-அந்த முன்னுரையிலிருந்து நாம் சில செய்திகளைக் காணலாம்.

திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மனித சமுதாயத்தில் எண்ணத் தொலையாத-ஏராளமான பிரிவினைகள் இருந்திருக்கின்றன. அந்தப் பிரிவினைகளின் காரணமாக-வேற்றுமைகளின் காரணமாக மனிதனே மனிதனைப் பகைக்கின்ற மிகக்கொடிய சூழல் வளர்ந்துவிட்டது. ஒருவருக்கொருவர் சிரித்துப்பேசி மகிழப் பிறந்த மனித குலம், குளிர்ந்த பார்வையால் ஒருவரோடொருவர் கூடி உறவாடப் பிறந்த மனிதகுலம் தனக்குள் பல்வேறு வேற்றுமைச் சுவர்களை எழுப்பிக் கொண்டது. மனித சமுதாயத்தில் இல்லாத பல்வேறு கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு எழுப்பிய பிரிவினையுணர்வினைத் திருவள்ளுவர் பார்த்தார். "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார். மனித குலத்தில் எத்துணை வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும், எவ்வளவு பிரிவினை யுணர்வுகளைத் தோற்றுவித்தாலும் பிறப்பிலும் இறப்பிலும் வேறுபாடுண்டா? அப்படி வேறுபாடில்லாத, உலகத்தை நீ ஏன் வேறுபடுத்துகிறாய்?-நீ ஏன் வேறு பாட்டுணர்வுகளை வளர்க்கிறாய்? என்று கேட்டது போலத் திருவள்ளுவர் பேசுகிறார்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாச்

செய்தொழில் வேற்றுமை யான்."

என்று குறிப்பிடுகிறார். இதைச் சொன்னதோடு திருவள்ளுவர் அமைந்துவிடவில்லை-அமைதிகொள்ள அவரால் முடிய வில்லை. ஒழுக்கத்தைச் சார்பாக வைத்துக்கொண்டு இன்னாருக்கு இன்ன ஒழுக்கம்-இந்த ஒழுக்கமுடையவர் இன்ன சாதியினர் என்று கூறி அகத்தின் வழிப்பட்ட ஒழுக்கத்தை வரையறுத்துக் கொள்ளாமல் வெறும் புறச்சார்பான ஒழுக்கத்தையே பெரிதெனக் கருதி, வெளிநடை முறைகளை-புறச் செயல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றின் வழி நால்வகைச் சாதிகளை உருவாக்கி வளர்த்து வைத்திருந்த சமுதாயப் போக்கையும் திருவள்ளுவர் பார்த்தார். அவ்வாறு, நால்வகைச் சாதிகளுக்குள் பெருஞ்சுவர் எழுப்பிக்கொண்டு மனிதகுலம் வாழ்ந்த கொடுமையைப் பார்த்தார். சாதிமுறைகளை ஏன் ஒழிக்க முடியாது என்று கேட்டார்.

"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்"

என்றார். ஆம், நீ யார் வீட்டிலே பிறந்தாய் என்பது முக்கியமன்று-நீ எந்தத் தெருவிலே வளர்ந்தாய் என்பது முக்கியமன்று-நீ எந்தத் தொழில் செய்யும் பரம்பரையில் தோன்றினாய் என்பது முக்கியமன்று-உன்னிடத்து மனித குலத்தை வாழ்விக்கின்ற-அணைத்து மகிழ்கின்ற அக வொழுக்கம் இருக்கிறதா? அந்த அகவொழுக்கத்தைப் பெற்றவனே பெருங்குடிமகனாவான்-‘ஒழுக்கமுடைமை குடிமை’ என்று சொன்னார். உயர்குடிப்பிறப்பை அளக்கும் அளவுகோலே ஒழுக்கந்தான். பிறந்த வீடும், பேசும் மொழியும், கும்பிடும் கோயிலும், ஓதுகிற வேதமும் உயர்குடிப்பிறப்பை அளக்கும் அளவுகோல்கள் அல்ல என்று கருதினார். இவற்றையே அளவு கோலாகக் கருதிப் பெருமையும் சிறுமையும் பேசிய-கற்பித்த பேதைமையைச் சாடினார். மனித குலத்திலிருந்த சாதி இனவேற்றுமைகளை ஒழித்து மனிதகுலத்தை ஒருகுலமாக்குவதற்கென்றே திருவள்ளுவர் வள்ளுவத்தைச் செய்தார். திருவள்ளுவர் விரும்பிய வண்ணம் சாதி இன வேறுபாடுகளை ஒழித்துக்கட்டி, மனிதகுலத்தை ஒருகுலமாக்க திருவள்ளுவர் வலியுறுத்துவதுபோல நாம் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்.

ஒழுக்கத்தைத் தூண்டி வளர்ப்பன கல்வி, அறிவு, சிந்தனை ஆகியன. இந்த உண்மையையும் திருவள்ளுவர் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். தமது தவறான பழக்க வழக்கங்களைக்கூட நியாயமானவை என்று பிடிவாதம் பிடிக்கின்றவர் பலர் இருக்கின்றனர் என்பதையும் திருவள்ளுவர் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தார். மனிதனின் அகக்கண் குருடாகிப் போனதாலேயே அவன் தன்னுடைய வாழ்வியலைப்பற்றி-ஒழுக்க இயலைப்பற்றி - பழக்க வழக்கங்களைப் பற்றித் தானாகச் சிந்தித்துத் தன்னைச் செழுமைப் படுத்திக்கொள்ள முடியவில்லை. செழுமைப்படுத்திக் கொள்ளுகின்ற அளவிற்குக் கல்வியறிவு இல்லை என்பதைக் கண்டார். எனவே, சமுதாயம் முழுமைக்குமாகக் கல்வி கொடுக்கவேண்டும். சமுதாயத்தையே படிப்பிக்க வேண்டும் என்றார். ‘எல்லாரும் படியுங்கள்! எல்லாரும் சிந்தனை செய்யுங்கள்’ என்றார். கல்வியின் இன்றியமையாமையை - கல்வியின் சிறப்பை மிகத் தெளிவாக எடுத்துக் கூறி வலியுறுத்துகிறார்.

இவ்வாறு, கல்வியின் இன்றியமையாமையை-அதன் சிறப்பை வலியுறுத்துகிற திருவள்ளுவர், ‘கற்றிலனாயினும் கேட்க’ என்கிறார். நீ நேரடியாகப் படித்துச் செய்திகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமற் போனாலும் உன்னை வாழ்விக்கின்ற - உன்னைச் செழுமைப்படுத்துகின்ற - உன்னை உருவாக்குகின்ற-உன்னுடைய வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துகின்ற சிறந்த செய்திகளையும், சிந்தனைகளையும் படித்தவர் வாயிலாகக் கேட்டாவது தெரிந்துகொள் - அப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்வதின் மூலம் உன்னுடைய அகவாழ்வில் புத்தம்புதிய மாறுதலை உண்டாக்கிக்கொண்டு-ஒழுக்கப்பண்புகளை வளர்த்துக் கொண்டு உயர்குடி வரிசையில் நீ உன்னைச் சேர்த்துக் கொள்ள முயற்சி செய் என்கிறார்.

அடுத்து நாடு, மொழி, இனம், மதம் இவற்றிற்கிடையேயுள்ள வேற்றுமைகளைக்கூட ஒழித்துவிட வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு எல்லா மக்களும் கல்வி அறிவு பெற வேண்டும். கல்வி அறிவு என்று சொல்லுகின்ற பொழுது, மொழியின் மூலமாகப் பெறும் அறிவை மட்டும் சொல்ல வில்லை. மொழியின் மூலமாக மட்டும் பெறுகிற அறிவு பிரிவினைகளை வளர்க்குமே தவிர அவற்றைத் தடுக்காது-குறைக்காது. எனவே மொழியின் மூலமாக மட்டும் பெறும் அறிவை முழுமையான அறிவு என்று ஒத்துக்கொள்ள முடியாது. அறிவு மொழிகளைக் கடந்தது-சமயம் என்பது சடங்குகளைக் கடந்தது-எல்லைக் கோடுகளைக் கடந்தது.

வேறுபடு சமயங்கள் புகுந்து பார்க்கின்

விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்

என்றார் தாயுமானவர்.

பொதுவாக மனிதனுடைய உணர்ச்சிகளை வளர்ப்பதற்காக - அவனுடைய வளர்ச்சி வட்டங்களுக் கேற்றவாறு அவ்வப்போது எல்லைக்கோடுகள் வகுத்துக்

தி.10. கொள்வது இயல்பு. எனினும், அந்த எல்லைக் கோடுகளுக்குள்ளேயே நின்று விடுதல் கூடாது. அதுபோல, அன்பைத் தூண்டி வளர்ப்பதற்கு மொழி ஒரு கருவி. எனினும், மொழியின் எல்லைக் கோட்டுக்குள்ளேயே நின்றுகொண்டு பேசுவது மட்டும் அறிவாகிவிடாது. மனித குலத்தை நேசிக்கின்ற உணர்வும், மனித உலகத்தை வாழ்வித்து வாழும் உணர்வுமே அறிவு எனப்பெறும். திருவள்ளுவர் கூட கல்வி வேறு-அறிவுடைமை வேறு என்றுதான் கருதினார். கல்வியே அறிவு என்று அவர் ஒத்துக்கொண்டிருப்பாரானால், ‘கல்வி’ என்று ஒர் அதிகாரமும் ‘அறிவுடைமை’ என்று இன்னோரதிகாரமும் வைத்திருக்கமாட்டார். கல்வி என்பது அறிவைப் பெறுவதற்குத் துணை செய்யும் ஒரு கருவி-அது மனிதனை அறிவுலகத்திற்கு அழைத்துச் செல்லும். அவ்வளவு தானே தவிரப் படித்தவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் என்று ஒத்துக் கொள்ள முடியாது. படித்தவர்கள் எனப்படுவோரில் ‘படிக்காதவர்’களும் இருக்கிறார்கள்-படிக்காதவர்கள் எனப் படுவோரில் 'படித்தவர்’களும் இருக்கிறார்கள். கல்விவேறு - அறிவுவேறு என்ற உண்மையைத்தான் இது நமக்குக் காட்டுகிறது.

இன்று நாம் சாதி, இனம், மொழி, நாடு ஆகிய எல்லாவகையான எல்லைக்கோடுகளையும் வேற்றுமைகளையும் கடந்த ஒரு புதிய சமுதாயத்தை-உலக மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். எனவே, மொழியைப் படிப்பதோடு அறிவியல், பொருளியல், தொழிலியல், சமூக இயல் ஆகிய பல்வேறு துறைகளிலும் அறிவைப் பெற்று நம்மை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்று, திருவள்ளுவர், பரந்துபட்ட அறிவியலைத் தூண்டிவிட்டு-பரந்துபட்ட சிந்தனையைத் தூண்டிவிட்டு, மனித சமுதாயத்தில் பரந்துகிடந்த வேற்றுமைகளைக் களைய வேண்டும் என்ற நோக்கிலேயே திருக்குறளைச் செய்தார்.

பலர் படிக்கிறார்கள்-சிந்திக்கிறார்கள். ஆனாலும் சிந்தனை முழுவதுமே துாய்மையானது என்று கருதிவிடுவதற்கில்லை. ஏனெனில் பலரின் சிந்தனைக்கும்-புறச் சூழலுக்கும் தொடர்பிருக்கிறது. சிலருடைய சிந்தனை முதலில் அவர்களுடைய தவறான பழக்க வழக்கங்களில்தான் சென்று படரும். அந்தத் தவறான பழக்க வழக்கங்களை நியாயப் படுத்திக் காட்டவும் அவர்களின் அறிவு முயற்சிக்கும். அதனால்தான், 'உன்னுடைய மனச்சாட்சி மட்டும்-உன்னுடைய சிந்தனை மட்டும் பெரிதல்ல-சமுதாயத்தின் மனச்சாட்சியோடு உன்னுடைய மனச்சாட்சியையும் ஒத்துப் பார்’-என்றான், மாவீரன், மாஜினி. பல தவறுகளுக்கு -பல அநியாயங்களுக்குக் கூட ‘நான் என் மனச்சாட்சியறியப் பொய் சொல்லவில்லை’ என்று சொல்லத் தோன்றும். 'அவனுடைய மனச்சாட்சிப்படி’ தவறில்லைதான். அவன் மனச்சாட்சி அவன் பார்த்த பார்வையிலேதான் சென்று கொண்டிருக்கிறது. பாரமேற்றிய வண்டியை இழுத்துச் செல்லும் எருதுகள் நள்ளிரவில் தூங்கிக்கொண்டே நடந்து செல்லும். அது, அதற்குப் பழக்கத்தால் ஏற்பட்ட பயிற்சி. அதுபோலவே மனிதனும் பழக்கத்தின் அடிச்சுவட்டில் செல்லுவதில் எளிதாய் பயிற்சி பெற்றவன். 'படித்தவர்கள்’ எனப்படுவோர் பலர், ‘பழக்கம்’ என்ற உழுசாலில் செல்லுவதற்கே முயல்கிறார்கள்; தங்களை மாற்றிக்கொள்ள - புதுமைப்படுத்திக்கொள்ள வெட்கப்படுகிறார்கள் - கூச்சப்படுகிறார்கள்-பயப்படுகிறார்கள். தவறு என்று தெரிந்தும்கூட அதைவிட்டு விலகுவதற்கு அஞ்சுகிறார்கள். இந்த நூற்றாண்டில்கூட, உலகின் சமாதானத்திற்கு எந்தயுகம் அணுகுண்டைத் தோற்றுவித்ததோ-அந்த யுகம், அதைத் தடுக்கின்ற வலிமையான கரங்களையும் தோற்றுவித்தது. ஆனால் அப்பாவி உலகம் மீண்டும் அணுகுண்டைத் தடுத்து நிறுத்துகிறவனின் கரத்தை, வெட்டி வீழ்த்தி விட்டது! குண்டை வைத்திருக்கும் கரத்தை என்ன பண்ணப் போகிறதோ தெரியவில்லை. இந்த நிலைமையை நாம் எண்ணிப்பார்க்கின்றபொழுது, மனிதன் பகுத்தறிவில்லாதவனா? அவன் மொழிகளில் உலக இலக்கியங்கள் தோன்றவில்லையா? அதில் புத்தம் புதிய சாத்திரங்கள் தோன்றவில்லையா? அவனுடைய பிரார்த்தனையுலகில் செழுமை படரவில்லையா? எல்லாம் இருந்தும்கூடப் பலர் ‘சிரங்குசொறி பிடித்தவர்கள்போல’ திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்! எது வளரவில்லை. நம்மைப்புறச் சூழலில் வளர்க்கின்ற சமயம் வளரவில்லை என்று கூற முடியுமா? உலகிலேயே அமெரிக்க நாட்டில்தான் கடந்த பத்தாண்டுகளில் வழிபாட்டில் அதிக நம்பிக்கையுடையவர்கள் பெருகியிருக்கிறார்கள். இந்தப் பத்தாண்டுகளில் அங்கு ஏராளமான மாதாகோவில்கள் தோன்றி யிருக்கின்றன, பைபிளை அதிகமாக ஓதுகிறவர்களை அங்குதான் பார்க்கிறோம். ஆனாலும், அங்கு ஏசுவின் மதம்-கிறித்தவம் கல்லறைக்குப் போய் விட்டது என்பதை மறுக்கமுடியுமா? இந்த உண்மைகளையெல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டுதான் திருவள்ளுவர் பேசுகிறார். 'மனித வாழ்க்கையில் அன்பும் அமைதியும் வேண்டும்’ என்றார். அன்பும் அமைதியும் வேண்டுமென்று சொன்னால், உன்னுடைய அறிவுமட்டும் போதாது. நீ எதைக் கேட்கின்றாயோ-எதைச் சார்ந்திருக்கின்றாயோ அந்த அறிவு-மெய்யறிவாக-மெய்ப்பொருளாக இருக்கிறதா என்று பார் என்று சொல்லுகிறார். ‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்கிறார். நாம் வாழுகிற மனித சமுதாயத்தில் எல்லாவகையான ஆதிக்கக் காரர்களும் உண்டு. ஆட்சியில் வீற்றிருப்பவர்கள் மட்டும் ஆதிக்கக்காரர்கள் அல்லர். பொருளாதாரத்தைத் தங்களிடத்தே குவித்து வைத்துக்கொண்டிருப்பவர்கள் மட்டும் ஆதிக்கக்காரர்கள் அல்லர். அறிவுலகத்திலும் ஆதிக்கக் காரர்கள் உண்டு. அவர்கள், மற்றவர்களுக்கு அறிவு வளர்ந்துவிடக் கூடாது என்று கருதுகிற ஆதிக்க உணர்வுடையவர்கள். இத்தகைய, ஆதிக்க உணர்ச்சி பல்வேறு கோலங்களில், எல்லாக் காலங்களிலும் உலவியது. என்றைக்குச் சமய உலகில் ஆதிக்க உணர்ச்சி தோன்றியதோ அன்றே, சமயச் சண்டைகளும், பல்வேறு சமயப் பூசல்களும் முளைத்தன. சமயம் சமயமாகவே இருந்தால் அது பெளத்த மாயினும் சரி, இஸ்லாமாயினும் சரி, சமணமாயினும் சரி, கிறித்தவமாயினும் சரி, சைவ வைணவமாயினும் சரி சமயச் சண்டைகள் தோன்ற மாட்டா.

உலகில் பொதுவாக, சமய உணர்ச்சியைக் கருவியாகக் கொண்டு, ஆதிக்க உணர்ச்சி தோன்றுகின்றபோதுதான் கரும்பே கசப்பதுபோல-சர்க்கரையே புளிப்பதுபோல குளமே சேறாகிவிடுவதுபோல ஆபத்துக்கள் உருவாகின்றன. உடம்பைத் தூய்மைப்படுத்த வேண்டிய தண்ணீரே அழுக்குச் சேர்ந்தாகிவிட்டால் என்னென்ன கொடுமைகள் ஏற்படும்? . வாழ்க்கையை வளமுடையதாக்க- தூய்மையுடைய தாக்கத் தோன்றிய சமயங்களில் ஆதிக்க உணர்ச்சி தலையெடுத்து - அது சமயச் காழ்ப்பாக மாறிச் சமயச் சண்டைகள் தோன்றி மனித குலத்தையே ஆட்டி அலைக்கழிக்கின்ற பல நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம். இவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்து கொண்டே திருவள்ளுவர் ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்’ என்றார். யார் யார் வாய் கேட்பினும் என்றால் என்ன? இங்கு தலைமை வகித்திருக்கும் நண்பர் மணலி கந்தசாமி அவர்களே பேசுகிறார்கள் என்றாலும் அவர்களை பொதுவுடைமைக் கட்சிக்காரர் என்ற பார்வையில் அவரைப் பார்க்காதீர்கள். அவர் என்ன சொல்லுகிறார்-அவர் சொல்லுகின்ற கருத்து இந்த நாட்டுக்கும் இந்த நாட்டு மக்கட்கும் நன்மை பயப்பதாக இருந்தால் தைரியமாக-துணிவாக அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நன்மை பயப்பதாக இல்லையானால் அதைத் தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். இந்த இரண்டிலும் கோழைத்தனம் வேண்டாம்-முதலில் கருத்துச் சரியா தவறா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்திலேதான் திருவள்ளுவர் பேசுகின்றார்.

திருவள்ளுவர் காலத்திலே தமிழ்நாட்டிலே நிறையப் பேர் கருத்துக் கடை விரித்தார்கள். தமிழகத்திற்குச் சமணர்கள் வந்தார்கள் - பெளத்தர்கள் - மாயாவாதிகள் வந்தார்கள். இந்தப் பல்வேறு சமயவாதிகளும் இந்த நாட்டில் கருத்துக் கடைகளை விரித்துத் தமிழர்களைத் தங்கள் வலையில் இழுக்க முயன்றார்கள். இதைப் பார்த்துத்தான் திருவள்ளுவர், கடை யாருடையது என்றோ, கடையில் யார் வியாபாரம் செய்கிறார்கள் என்றோ கவலைப்படாதீர்கள் - கடையில் விற்கப்பெறும் சரக்கின் தரத்தைப் பாருங்கள் என்றார். சொல்லுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சொல்லுகிற கருத்திலே மெய்ப்பொருள் தன்மை இருக்கிறதா என்று பாருங்கள். உங்கட்கும், உங்கள் நாட்டுக்கும், உங்கள் சமுதாயத்திற்கும், பாரம்பரியத்திற்கும், உலகுக்கும் நன்மை வருமா என்று பாருங்கள்-அதுதான் அறிவு.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்று சொன்னார்.

பொதுவாக, ஒரு செய்தியைச் சொல்லுபவர்கள் யார் என்பதை வைத்துக் கொண்டே அச்செய்தியைப் பற்றிய முடிவெடுக்கிற ஒரு பரிதாப நிலையை-அவல நிலையை இன்று நாம் சமுதாயத்தில் காண்கிறோம். செய்தியைப்பற்றி ஒரு முடிவெடுப்பதற்கு அச்செய்தியைச் சொல்லுகிறவர்களை ஒர் அளவு கோலாகக் கொள்ளலாமே தவிர, முழுமையாகக் கொள்ள முடியாது. அவர்கள் சொல்லுகிற கருத்து எத்தகையது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும்.

அடுத்து, திருவள்ளுவர் காலத்திற்கு முந்திய தமிழகம், ‘வள்ளல்’களைப் போற்றிப் பாராட்டிய பாரம்பரியம் உடையதாக இருந்தது. முல்லைக்குத் தேர்கொடுத்தான்-மயிலுக்குப் போர்வை கொடுத்தான்-பொன்னும் மணியும் இன்னபிறவும் வாரிக் கொடுத்தான்-பொற்பூ சூட்டினான் என்றெல்லாம் பலவாறாக ‘வள்ளல்’களைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இந்த ‘வள்ளல்’ பரம்பரையைப் பாராட்ட திருவள்ளுவருக்கு மனம் வரவில்லை. நாம் எந்தப் புறநானூற்றுக் காலத்தில் வள்ளல்களைப் பார்க்கிறோமோ, அந்தப் புறநானூற்றுக் காலத்திலேயே வெம்பசியால் வாடியவர்கள் வயிற்றுச் சோற்றுக்காகப் ‘பசிப்பிணி மருத்துவன்’ இல்லத்தை நோக்கி எறும்புகளைப்போலச் சாரை சாரையாகச் சென்று கையேந்திய கழிவிரக்க நிலை இருந்ததென்பதையும் பார்க்கிறோம். அப்படியானால், எங்கிருந்து வள்ளல் தன்மை தோன்றுகிறது? பொதுவாக ஒருவர் வாரிக்கொடுக்க வேண்டும் என்றால் அவரிடத்து எஞ்சிய பொருள் நிறைய இருக்கவேண்டும். அவனிடம் அந்தப் பொருள் எப்படி வந்தது? எவ்வாறு குவிந்தது? என்று திருவள்ளுவர் கேட்டாரோ இல்லையோ அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ‘எஞ்சிய செல்வத்தை இன்னொரு வருக்குக் கொடுப்பதில் உனக்கு என்ன பெருமை இருக்கிறது?’ என்று கேட்கிறார். உன்னிடம் செல்வம் எஞ்சிக் கிடக்கிறது. எஞ்சியதை இன்னொருவருக்கு - தேவைப் படுகிறவருக்குக் கொடுப்பதுதானே கடமை? அதுதானே தொண்டு? இதில் உனக்கென்ன சிறப்பான வரவேற்புப் பத்திரம் வேண்டியிருக்கிறது?-இப்படித்தான் திருவள்ளுவரின் கருத்துச் செல்லுகிறது. இதனை ‘ஒப்பரவு’ என்ற ஓர் அதிகாரத்தில் அழகாகப் பேசுகிறார். செல்வம் உடையவர்கள் இல்லாதவர்கள் இதனை ‘ஒப்பரவு' என்ற ஓர் அதிகாரத்தில் அழகாகப் பேசுகிறார். செல்வம் உடையவர்களிடமிருந்து இல்லாதவர்கள் அதனைப் பெறுவது உரிமை. இந்தக் கடமை உரிமை உணர்வுகளுக்கிடையே ஈகை, கருணை, இரக்கம் என்ற சொற்கள் ஏன்? இல்லத்தலைவன் தன் இல்லத் தலைவிக்குத் துணி வாங்கிக் கொடுப்பதைக் கடமையாகக் கருதுகிறானே தவிர அதற்கொரு பாராட்டுப் பத்திரமும், வாழ்த்துரையுமா எதிர்பார்க்கிறான்? நிலத்தின் சொந்தக்காரன் அந்நிலத்தைப் பேணிக்காப்பது கடமை. அதுபோல, செல்வம் உடையவர் எஞ்சிய செல்வத்தை இல்லாதவர்க்கு உதவுவது கடமை. இதனை உணர்த்துகிறார் திருவள்ளுவர். இந்த ஒப்புரவுக் கொள்கையை மூன்று சிறப்பு உவமைகள் மூலம்-மூன்று சிறந்த எடுத்துக்காட்டுக்கள் மூலம் தெளிவாக விளக்குகிறார்.

'ஊருணி நீர் நிறைந்தற்றே’ என்று ஒரு குறள். இந்தக் குறட்பா, வள்ளலையும் ‘வள்ளல் தன்மை’ யையும் பாராட்டுவதாகக் கருதிக்கொண்டே இன்னும் பலர் பேசிக்கொண்டு வருகிறார்கள். உரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வள்ளலையும், வள்ளல் தன்மையையும் பாராட்டுகிற குறளாக இக்குறட்பா எனக்குத் தோன்றவில்லை. ஊருணி இருக்கிறது-ஊரினர் பலர் அதிலே தண்ணீர் எடுத்துக் குடிக்கிறார்கள். நாள்தோறும் அக்குளத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ஊருணி இந்த ஊருக்கும் உலகுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற உணர்வோடு கொடுக்கிறதா? அந்த ஊருணியில் அந்த ஊர்மக்கள் தண்ணீர் எடுக்கவில்லையானால் ஊருணி என்னாகும்? அந்த ஊருணி பாசி பிடித்து, ஊற்றுவளம் கெட்டுப் புழு நெளியும் குட்டையாகி அந்நகரின் நகராட்சி மன்றம் அதைத் துர்த்துவிடத் திட்டம் போடுகிற நிலைமை ஏற்பட்டு விடாதா? அந்த ஊருணி ஊர் மக்களுக்குத் தண்ணீர் கொடுப்பது கொடைபோலத் தோன்றினாலும் அது மறைமுகமாகத் தன்னுடைய ஊற்றுவளத்தை-ஊருணி என்ற பெயரை இவற்றிற்கெல்லாம் மேலாகத் தன் தூய்மையைக் காப்பாற்றிக் கொள்ளுகிறது. அதுபோலவே அறிஞன் கொடுப்பான். "ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகுவாம்

பேரறி வாளன் திரு”

என்றார். அறிவு கொஞ்சம் திட்டவட்டமாகக் கணக்குப் போடும். ஒன்றைச் செய்தால் அது எப்படித் திரும்பிவரும் - இதனால் என்ன இலாபம் என்று கணக்குப் போட்டுப் பார்த்துத்தான் பேரறிவாளன் ஒன்றைச் செய்வான். ஆனால், சமுதாயத்தோடு-சமுதாய உணர்ச்சியோடு-அன்போடு-அருளோடு-அற உணர்வோடு கலக்காத வெற்றறிவு எப்படிக் கணக்குப் போட்டுப் பார்க்கும்? பேரறிவாளன், தன்னை நம்பிக் கொண்டு, தனக்காக-தன்னுடைய நலனுக்காகவே கொடுப்பான், குறி எதிர்ப்பைக் கொண்ட இந்தக் கொடையையே திருவள்ளுவர் 'ஊருணியோடு ஒப்பிட்டார்.

மனித உலகம் மேலும் வளர்ச்சியுற வேண்டும். அது தனக்காக-தன்னுடைய நன்மைக்காக அல்லாமல் தன்னை மறந்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு மருந்து மரத்தை உவமையாக-எடுத்துக் காட்டாகக் கொண்டு விளக்குகிறார்.

"பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கட் படின்"

என்றார். நயனுடையான் என்றால் நெஞ்சுடையவன் என்று பொருள். நெஞ்சுடையவனுக்கு மூளை மேலோங்கி நிற்கவில்லை-இதயம் வேலை செய்கிறது. இவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன்-இவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் - இவன் எந்த மொழியைப் பேசுபவன் - இவனுக்கு - இவனுடைய ஏழைமைக்குக் கொடுப்போமா? வேண்டாமா? என்றெல்லாம் மூளையால் ஆராய்வதில்லை. இதயம் அவனது ஏழைமையைப் பார்த்து-துன்பத்தைப் பார்த்து உதவ முந்துகிறது. உள்ளூருக்குள்ளே, கனிகளைத்தரும் பயன்மரம் பழுத்துக் கனிந்திருக்கிறது. அது, கனிந்த கனிகளைக் கிழே உதிர்க்கும்போது இது யாருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிப் பார்ப்பதில்லை. வேலிவைத்துப் பாதுகாத்து வளர்த்தவனின் வீட்டுத் தோட்டத்துக்குள்ளேகூடப் பழம் முழுவதும் விழுவதில்லை. வேறு இடத்திலும் விழலாம். அது, இன்னார் இனி யார் என்று பார்ப்பதில்லை-இவர் உதவினார்-இவர் உதவி செய்தார் என்றுகூடப் பார்ப்ப தில்லை. தன்னுடைய கனிகளைச் சமுதாயத்திற்குக் கொடுப்பது என்ற கடமையுணர்வோடு மட்டுமே கணிகளை உதிர்க்கிறது. இவ்வாறு நட்டவனுக்கா எருவிட்டவனுக்கா, நீர்பாய்ச்சியவனுக்கா, வேலியிட்டவனுக்கா, பட்டாக் காரனுக்கா என்று பாராமல், கனிந்த கனிகளைச் சமுதாயத்திற்குக் கொடுப்பது தன்னுடைய கடமை என்று கடமையுணர்ச்சியோடு மட்டும் கனிகளை உதிர்ப்பதுபோல, நெஞ்சுடையவன் தன்னை மறந்து, மறந்து எதைப்பற்றியும் சிந்தனை செய்யாமல், யாருக்குக் கொடுக்கிறோம் என்பதைப் பற்றிக்கூடக் கவலைப் படாமல் கொடுப்பான். இஃது இரண்டாவது வளர்ச்சி.

திருவள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே செல்லுகிறார் - மூன்றாவது உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். அந்த உலகந்தான் மனித குலத்தை வாழ்விக்கும் என்று சொல்லுகிறார். அது எந்த உலகம்? அது மருந்து மரத்தோடொத்த பெருந்தகையார் உலகம். மருந்து மரம் இருக்கிறதே அது பல்லாற்றானும் நமக்கு உதவுகிறது. அதனுடைய பட்டை வெட்டப்பெறுகிறது-இலைகள் பறிக்கப் பெறுகின்றன. பூக்கள் கொய்யப்பெறுகின்றன. வேர் வெட்டப் பெறுகிறது. இவ்வாறாக மருந்து மரத்தின் எல்லா உறுப்புக்களையும் எடுத்துப் பயன் படுத்துகிறோம். எனினும் அந்த மரம் ஆடாமல்-அசையாமல் உலகிற்கு இன்பந்தந்து வாழ்விக்கிறது. அது தன்னை நினையாது மட்டுமன்று தன்னை மறந்து மட்டுமன்று-தனக்கு இழைக்கப் பெறுகிற தீங்குகளையும் பொறுத்துக்கொண்டு சமுதாயத்திற்கு உதவுகிறது. மருந்து மரம் போன்ற பெருந்தகையார் பலர் வாழும் சமுதாயத்தையே திருவள்ளுவர் விரும்பினார். ‘பிரிய பெருந்தகை’ என்று திருஞானசம்பந்தரைச் சேக்கிழார் பெருமான் பாராட்டுகிறார். பெருந்தகை என்றால் மிகச் சிறந்த பெரிய மனிதர் என்று பொருள். மருந்து மரத்தை எடுத்துக்காட்டாகக் காட்டும் இக்குறட்பாவில் திருவள்ளுவர் பெருந்தகையான் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

திருவள்ளுவர் காலத்தில் வள்ளல் மனோபாவம் தோன்றி, ஒருவர்க்கு ஒன்று உதவினால் பதவிவேண்டும் - பாராட்டு வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பாராட்டு உலகத்திற்கும் செல்வ உலகத்திற்கும் மட்டும் தொடர்பிருந்தது. பாராட்டத் தெரியாதவனுக்கும் பேசத் தெரியாதவனுக்கும், அப்பாவிகளுக்கும் ஒன்றும் கிடைக்க வில்லை. இந்த நிலையைப் பார்த்துத்தான் திருவள்ளுவர் 'கொடுப்பது கடமை’ என்று கருதும் புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க விரும்பினார். வள்ளுவர் காலத்தில் கொடுப்பவன் பெரிய மனிதன் என்று பாராட்டப் பெற்றதை நாம் வரலாற்று ரீதியாகப் பார்க்கிறோம். அந்த நிலை மாறவே, கொடுப்பது உன்னுடைய கடமை-உனக்கு வருகிற தீங்கையும் பொறுத்துக் கொண்டு கொடுப்பது பெருந்தகைமை-இந்தப் பெருந்தகைமையை உறுதிப்படுத்திக்கொள்’ என்று வள்ளுவர் கூறுகிறார்.

அடுத்து, திருவள்ளுவர்காலம் பெளத்தம், சமணம், மாயாவாதம் மூன்றும் தலைமயங்கிய காலம். அந்தக் காலத்தில்தான் வாழ்க்கை நிலையில்லாதது-யாக்கை நிலையில்லாதது. பொன் நிலையில்லாதது-பொருள் நிலையில்லாதது என்ற ‘நிலையாமை’த் தத்துவம் அதிகமாகப் பேசப்பெற்றது. இந்தத் தத்துவம் மேலோங்கி நின்றமையாலேயே இடையிலே இந்த நாடு பெரும் அளவிற்கு ஏழைமையில் அமிழ்ந்து போனதைப் பார்க்கிறோம். தீமையைத் தடுத்து நிறுத்துவதற்குச் சக்தியில்லாமல் அவதியுற்றவர்களைப் பார்க்கிறோம். இவ்வாறு எதைப்பார்த் தாலும் நிலையில்லாதது-நிலையில்லாதது என்று சொல்லி மனிதன் உழைக்கும் சக்தியைப் பெருக்குவதையே விட்டு விட்டான். முயற்சி செய்வதையும் விட்டுவிட்டான். எதிலுமே அவனுக்கு ஒரு வறண்ட மனோபாவம் ஏற்பட்டது. எனவேதான் தஞ்சைப் பெருங் கோயிலையும், தில்லை நடராசர் திருக்கோயிலையும் எழுப்பிய பரம்பரை இன்றைக்கு ஓர் ஓராசிரியர் பள்ளியைக் கட்டக்கூட வேறு யாரையாவது எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நமது வரலாற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் திருவள்ளுவர் மிக நன்றாகப் புரிந்து கொண்டார். ‘இந்த உலகத்தில் நீ இன்பம் பெற வேண்டும் என்றால்-இறைவனின் திருவருளைப் பெறவேண்டும் என்றால் நீ முதலில் இந்த உலகத்தில் வாழக் கற்றுக்கொள்’ என்றார். இந்த உலகத்தில் வாழ்கிற வாழ்க்கை ஒன்றும் பெரிதல்ல-இங்கு எப்படி வாழ்ந்தாலும் மறு உலகத்தில் இடம் பிடித்து விடலாம் என்ற போலி நம்பிக்கை மக்களிடத்தில் மிகுந்திருந்தது. இந்த உலகில், சேற்றைப் பூசிக்கொண்டு வாழ்ந்தால், மறு உலகத்தில் சந்தனப் பூச்சுக் கிடைக்கும் என்று நம்புகிற அளவிற்குத் தத்துவம் பரவிக்கிடந்தது. இந்த உலகில் பட்டினி கிடந்தால் மறு உலகில் தேவாமிர்தம் சாப்பிடலாம் என்ற நம்பிக்கை வளர்ந்து கிடந்தது. இந்தப் போலி உணர்வுகளின் காரணமாக, பரந்துபட்ட சமுதாயம் காலப்போக்கில் கூனிக்குறுகி, அலுத்துச் சலித்து இளைத்து வறுமைத் துன்பத்திற் சிக்கி அவதிப்படுமே என்று கவலைப்பட்டார் திருவள்ளுவர். எனவே, அவர் 'நீ மறு உலகத்திற்குப் போவதைப்பற்றி இப்போது கவலைப்படாதே! நீ இந்த உலகில் வாழ்வாங்கு வாழு; வீட்டின்பத்தை இறைவனே பார்த்து உனக்குக் கொடுப்பான் என்றார். தவறுதலாக இப்பொழுது யாரோ சிலர் குறளுக்கும் குறளைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நாம் வருத்தப்படுகிறோம். இவ்வாறு குறளுக்கும் குறளைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசியவர்கள், அவ்வாறு குறிப்பிட்டதில் ஒரளவு உண்மை இருக்கிறது என்பதை நாம் முற்றிலும் மறுக்கவில்லை. அறம் பொருள் இன்பம் என்ற மூன்று மட்டுமே திருக்குறளில் சொல்லியிருக்கிறது-இறுதி இலட்சியமான ‘புருஷார்த்தம்' என்ற ‘வீடுபேறு’ பற்றித் திருக்குறள் பேசாமையினாலே அந்த நூல் முழுமை பெற்ற நூல் அன்று’ என்று சொன்னார்கள். உண்மைதான். தமிழனின் பாரம்பரியம் கடமை செய்தலைப் பெருமையாகக் கருதியதே தவிர, பலனை எதிர்பார்த்த தில்லை. அது அந்த சாதிக்கே இல்லாத ஒன்று, மேலும், அறமும் பொருளும் இன்பமும் கூடிய நல்வாழ்வு இயைந்து விடுமானால் இறைவனே பார்த்து நமக்குக் கொடுக்க வேண்டிய வீடு பேற்றைக் கொடுப்பான். நம்மிடமுள்ள தகுதி-நம்மிடமுள்ள யோக்கியதை-நம்மிடமுள்ள வாய்ப்பு அனைத்தும் அறத்தோடும் பொருளோடும் இன்பத்தோடும் சேர்ந்த மனித உலகிற்கு நலன் தருகிற செழுமையான வாழ்க்கையை நம்மிடத்து அமைத்து விடுமானால், இறைவன் தானே இறங்கி வந்து வீடுபேற்றை-மோட்சத்தைக் கொடுக்கத் தவறமாட்டான் என்பது தமிழ்ப் பாரம் பரியத்தின் கருத்து. எனவேதான் திருவள்ளுவர் தனியாக வீடுபேற்றைப் பற்றிப் பேசவில்லை. பலனை எதிர்பார்த்துப் பணி செய்வது மாற்றார் கருத்து. ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை' என்பது வேற்றவர் கொள்கை. நாம் இன்னும் கோயில்களிலே பார்க்கிறோம். தட்சிணை எங்கே என்று கேட்டுக்கொண்ட பிறகுதான் அருச்சனை உலகம் வருகிறது. தட்சினையை மையமாக வைத்து அருச்சனை உலகம் வருவதனாலேதான் சமயம் தனது உள்ளீட்டை இழந்துவிட்டது போலத் தோன்றுகிறது. எந்த உலகம் கணக்கு வழக்குகளைக் கடந்து - தன்னலத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டுமோ அந்த உலகிலேயே தவறு நிகழ்வதைப் பார்க்கிறோம். குட்டை குழப்பப் பெற்றுச் சேறாகிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் அறம்' என்பது திருவள்ளுவரின் கருத்து. மனிதன் அறமுடையவனாக-அற உணர்வுடையவனாகிப் பொருளைப் போற்றி இன்பியல் வாழ்க்கை வாழ்ந்தால் இறைவன் வீடுபேற்றைத் தருவான் என்று திருவள்ளுவர் கருதினார். ‘வாழ்க்கை ஒறுத்துச் சாவதற்கே’ என்று இந்நாட்டு மக்களிடையே நிலவிய கருத்தை மாற்றி வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற கருத்தை வலியுறுத்த எண்ணினார். எனவே,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்."

என்றார்.

அடுத்து, ஊழைப் பற்றித் திருவள்ளுவர் கூறிய கருத்துக்கள் மிக உயர்ந்தன-சிறந்தன. திருவள்ளுவருக்கு முந்திய காலத்துத் தமிழகத்தில், ஊழ் வலியது-மாற்ற முடியாதது என்ற கருத்து வேரூன்றியிருந்தது. இன்றும் ஊழின் வலிமையைப் பற்றிப் பேசுகிற-எழுதுகிற இலக்கியப் பேச்சாளர்கள் - எழுத்தாளர்கள் - பேராசிரியர்கள் - இலக்கிய கர்த்தாக்கள் எல்லோருமே ஊழின் வலிமையைச் சிறப்பித்தே பேசுகிறார்கள். அவர்கள் இதற்குச் சான்றாக கீழ்க்கண்ட புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் காட்டுவார்கள்.

‘ஒரு பேராறு-அதிலே வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. அந்த வெள்ளத்திலே ஒரு படகு, அந்தப் படகு எங்கே போகும்? வெள்ளம் போகிற போக்கில்தானே போய்ச் சேரும்? இதுதான் அவர்கள் எடுத்துக்காட்டும் உவமை.

சிந்தித்துப் பாருங்கள். படகு உயிரற்றது-அதற்குப் பகுத்தறிவுண்டா? சிந்தனை யுண்டா ? எதுவுண்டு? உயிரும், பகுத்தறிவும், சிந்தனையும் தன்னாற்றலும்-செயல் திறனும் இல்லாத அந்தப் படகு வெள்ளத்தின் போக்கிலே போவது தவிர வேறுவழி என்ன? மனிதனும் அந்தப் படகும் ஒன்றா? மனிதன் உயிரற்றவனா? செயல்திறனற்றவனா? சிந்தனையும் பகுத்தறிவும் இல்லாதவனா? எனவே இந்த உவமையை எங்ஙணம் ஒப்பமுடியும்? அந்தப் படகிலே சிந்தனையும் செயல் திறனும், பகுத்தறிவும் உடைய ஒரு மனிதன் இருந்து படகை இயக்கினால் படகு வெள்ளத்தை எதிர்த்துப் போகுமா? வெள்ளத்தின் போக்கிலேயே போகுமா? எண்ணிப் பாருங்கள். இந்தக் கருத்திலேதான் திருவள்ளுவர், 'கூற்றம் குதித்தலும் கைகூடும்’ என்று குறிப்பிடுகிறார். ஆம், எதிர்நோக்கி வருகிற எமனையும்கூட எதிர்த்து நிற்கமுடியும்.

‘நாளென்செயும்? வினை

தான் என் செயும்?

எனே நாடி வந்த

கோளென் செயும்? கொடுங்

கூற்றென் செயும்?

என்று கேட்டார் அருணகிரியார். மார்க்கண்டேயர் வரலாறு நமக்கு எதையுணர்த்துகிறது? பதினாறாண்டிலே ஒருவன் மரணமடைவான் என்றால்-அதுதான் விதி என்றால் அந்த மரணத்தையும் வெல்ல முடியும் என்பதை யுணர்த்த அந்தக் காலத்துச் சமுதாய அமைப்பிற்கேற்றவாறு-‘பெளராணிக’ முறையிலே தோற்றுவிக்கப் பெற்றது மார்க்கண்டேயர் வரலாறு. ஊழினால் சாகத்தான் வேண்டுமென்றால், அந்த விதியை எப்படி இறைவன் மாற்றினான்? ஆளுக்கு ஏற்றாற் போல் இறைவன் விதியை மாற்றுவானா? அப்படி ஆளுக் கேற்ற வண்ணம் இறைவன் நீதியை மாற்றக் கூடியவனானால் அவனுக்கு, நீதி என்ற பெயர் எப்படிப் பொருந்தும்? ‘நடுவுநிலையாளன்' என்ற பெயர் எப்படிப் பொருந்தும்? 'ஆதியும் நடுவும் அந்தமும் ஆனான்’ என்பது எப்படிப் பொருந்தும்? விதியின் ஆற்றலை-ஊழின் வலிமையை வலியுறுத்த,

"பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.

என்ற ‘நாலடியார்’ பாடலொன்றை எடுத்துக்காட்டுவார்கள். அதுவும் அவர்கள் காட்டும் புறநானூற்றுப் பாடல் போன்றதுதான்.

‘ஒரு பெரிய பசுமந்தை அதற்குள் ஒரு கன்றை அவிழ்த்துவிட்டால் அது போய்த் தன் தாய்ப் பசுவைப் பிடித்துக் கொள்வதுபோல, ஊழும் இந்த மனிதசமுதாயத்தில் தனக்கு உரியதனை வந்து பற்றிக்கொள்ளும்’ என்பது நாலடியார் பாடலின் கருத்து. கன்றுக்குப் பகுத்தறிவும் சிந்தனையும் உண்டா? ஊழின் வலிமையை வலியுறுத்துவதற்கு பகுத்தறிவும் சிந்தனையும், செயலாற்றலும் இல்லாத வற்றையே எடுத்துக் காட்டி வந்திருக்கிறார்கள்.

இனி, ஊழைப் பற்றித் திருவள்ளுவர் கொண்ட கருத்தென்ன? ஊழை அவர் முழுக்க முழுக்க மறுத்தாரா? முற்றிலும் முரண்பட்டாரா? என்றால் இல்லை. ஊழில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் மனிதன் அதனை எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டும் என்றார்.

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்'

என்கிறார். ஆற்று வெள்ளம் வேகமாகத்தான் போகிறது-மிகக் கடுமையாகத்தான் செல்லுகிறது. மணிக்கு 100 மைல் வேகத்தில்தான் போகிறது. ஆனாலும், படகிலிருந்து துடுப்புப் போடுகிறவன் நல்ல திறமைசாலியாக இருப்பானானால்-ஆற்றலுடையவனாக இருப்பானானால் அவன் ஆற்றின் வேகத்தைத் தடுத்து எதிர் திசையிலேயே செல்ல முடியாதா? ஆற்றின் வேகம் அதிகம் என்றால், அதிலே எதிர்த்துப் போகிறவனின் சக்தி பெரிதில்லையா?

பொதுவாக, மண்ணிலிருந்து விண்ணோக்கிச் செல்லுகிற பொருளெல்லாம் மீண்டும் மண்ணுக்கே இழுத்தெறியப் படும் என்பது ஈர்ப்பாற்றல் விதி ‘ஆகர்ஷண தத்துவம்’ ஆனாலும், மண்ணின் ஈர்ப்பாற்றலைத் தடுத்து நிறுத்தி, மனிதன் விண்ணில் மிதக்கிக் கற்றுக் கொள்ள வில்லையா? வானில் பறக்கவில்லையா? ‘ஈர்ப்பாற்றல்’ ஓர் ஒழுங்குதான்- சக்திதான். ஆனாலும், மனிதன் தன் சக்தி கொண்டு அதனை வெற்றி கண்டு விடுகிறானே! அதுபோல, ஊழ், மனிதனின் நெடுநாளையத் தவறான பழக்கவழக்கங்கள் அவனைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்ல முயலும். மனிதனுடைய சிந்தனை-செயற்பாடு முயற்சி ஆகியன ஒழுங்காக இருக்குமானால் நேற்றைப் பழக்க வழக்கங்களை இன்று மாற்றிக் கொண்டு விடுவான். ஊழ் என்பதென்ன? நேற்றைக்கு முந்தின செயலின் விளைவு நெடுநாளைக்கு முந்தின காரியத்தின் விளைவு, சிந்தனைத் திறனும் செயலாற்றலும் இருக்கும்ானால், அவ்வினையின் விளைவை-புதிய சிந்தனை-செயல்களின் மூலம் மாற்றிக் கொள்ளமுடியும். ஊழினால் வருகிற உணர்வை-ஊழினால் வருகிற பழக்கத்தை மனிதன் மாற்றிக் கொள்ள முடியும். எனவே, ஊழை எண்ணிக் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டிருந்து அழிந்து போகாதே என்று திருவள்ளுவர் பேசுகிறார்.

ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்

என்னும் ஒரு குறட்பா ஊழ் என்ற அதிகாரத்தில் வருகிறது. இதில் வருகிற ‘முந்துறும்’ என்ற சொல்லை ஆராய்ந்தால் அதில் ஒர் உறுதிப்பாடு-திண்மை ஒலிக்கவில்லை. ‘முன்வந்து நிற்கும்’ என்று தான் கூறுகிறார். ஆனால் முயற்சியைப் பற்றிச்

தி.11. சொல்லும்போது அப்படி யல்ல. மனிதன் என்ன முயற்சி பண்ணினாலும் ஊழ் முன்வந்து நிற்கும். ஆனால், முயற்சியால் அதனை வென்று விடலாம் என்கிறார்.

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துளுற்று பவர்"

"தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய் வருந்தக் கூலிதரும்"

என்று முயற்சியின் வலிமையை-முயற்சியால் ஊழை வெற்றி காண முடியும் என்ற உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்துகிறார். அப்படியானால் 'ஊழிற் பெருவலியாவுள?' என்று வள்ளுவர் ஏன் குறிப்பிட வேண்டும் என்று கேட்கலாம். 'ஊழை நீ அழித் தொழிக்க வேண்டுமானால் உன்னுடைய ஆற்றல் மிகப் பெரிதாக இருக்க வேண்டும்’ என்ற உணர்வை எழுப்புவதற்காகத்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மாற்றான் படையைப் பெருமைப்படுத்திக் கூறினால் அது தன் படையை இழித்துக் குறைத்துக் கூறியதாக ஆகாது. தன்படை வீரர்கள் திறமையாகப் போர் புரியவேண்டும் என்பதற்காக மாற்றான் படையினைப் பெருமைப்படுத்தித் தன் படை வீரர்களுக்குக் கூறியனுப்புவது இயல்பு-மரபு. அதுபோல, ‘ஊழிற் பெருவலி யாவுள?' என்று திருவள்ளுவர் கேட்டது ஊழைப் பெரிது படுத்துவதற்காக அல்ல-நீ எதிரியை-மாற்றானை ஆற்றலற்றவன்-பலவீனன் என்று கருதிப் போய் தோற்றுவிடாதே-என்று உணர்த்துவதற்காகத் தான். ‘ஊழ் பெருவலிவுடையதாக இருக்கலாம்-அது முன்வந்து நிற்கும்-ஆனாலும், உன் முயற்சி, நாணயம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் நீ அதை வெற்றி பெற முடியும் என்று அவர் மனித சமுதாயத்திற்கு நம்பிக்கை யூட்டுகிறார். வள்ளுவர் காலத்தில், மக்களிடையே அதிகப்படியான ஊழ் நம்பிக்கை பரவிக்கிடந்தது. மனிதன் ஏழையாகப் போவதற்கு ஊழ் காரணம்-மனிதன் கெட்டவனாகப் போவதற்கு ஊழ்காரணம்-மனிதன் கொலைகாரனாகப் போவதற்கும் ஊழ்தான் காரணம்! இப்படிச் சமுதாயத்தில் யார் எந்தக் கொடுமையை-தீமையைச் செய்தாலும் ஊழைக் காரணமாகக் காட்டிவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் போலத் தோன்றியது. இப்படியே கொலைகாரர்களும் தப்பித்துக் கொள்ள ஊழைக் காரணமாகக் காட்டிய காலத்தில் திருவள்ளுவர் ஊழைப் பெரிது படுத்துவது போலத் தோற்றத்திற்குக் காட்டினாரேயொழிய உண்மையிலேயே அவர் ஊழைப் பெரிது படுத்தவில்லை. மனிதனுடைய அறிவு-சிந்தனை-முயற்சி ஆகியவற்றைப் பெரிதுபடுத்தவே அவர் நூல் செய்தார். அதனால்தான் இந்தச் சமுதாயம் அழிந்து படாமல் இந்த அளவிற்காவது வாழ முடிந்தது. இன்று ஓரளவு மனித முயற்சிகள் தோன்றி வளர்ந்திருப்பதற்குக் காரணம் வள்ளுவர் இட்ட வித்து. வள்ளுவர் இந்த வித்தை இட்டிருக்காவிட்டால், மனிதன் தன்னுடைய சிந்தனை-அறிவு-முயற்சி நடவடிக்கைகள் அத்தனையையும் பற்றிக் கவலைப்படாமல், ஊழின்மீது சுமையைப் போட்டு விட்டுக் கையைக் கட்டிக் கொண்டிருந்து முழுச் சோம்பேறியாகப் போயிருப்பான். இந்த நிலையை நாம் எண்ணிப் பார்க்கிறபொழுது தான் அந்தக் காலத்தில் வரலாற்றில் ஏற்பட்டிருந்த தளர்ச்சியைப் பார்த்துச் சமுதாயம் அழிந்து படுமே என்றஞ்சி, சமுதாயத்திற்குச் சிந்தனை தேவை - செயல் தேவை - முயற்சி தேவை என்பதையுணர்ந்து அவற்றைக் கொடுப்பதற்கே திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார் என்று நமக்குத் தோன்றுகிறது.

திருவள்ளுவர் காலத்தில் இன்னொரு பெருங்குறை நிலவியது. சமுதாயத்தில் சாதிப் பிரிவுகளும், வேற்றுமை யுணர்வுகளும் பெருகிக்கிடந்ததைவிட நாட்டுக்கு நாடு வேற்றுமை பெருகிக் காணப்பட்டது. வீட்டுக்குள் வேற்றுமையுணர்விருந்தாலும், நாட்டுக்குள் வேற்றுமையுணர் விருந்தாலும், அது தவறுதான். எனக்கு என்னுடைய மொழி பெரிதுதான். ஆனாலும் என்னுடைய மொழிப்பற்று மனித குலத்திற்குப் பகையாகப் போகுமானால் அதை அனுமதிக்க முடியுமா? என்னுடைய சமயம் எனக்குப் பெரிதுதான். அந்த உணர்வு தேவையானதுதான். ஆனாலும், என்னுடைய சமயப்பற்று மனித குலத்திற்குப் பகையாக மாறிவிடக்கூடாது. என்னுடைய நாடு எனக்குப் பெரிதுதான். ஆனாலும் என்னுடைய நாட்டுப்பற்று, இன்னொரு நாட்டோடு போய் மோதுவதை அனுமதிக்கலாமா? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஆக்கிரமிப்பது-ஒருவன் இன்னொருவனோடு மோதுவது ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டது.

பொதுவாக, சேரநாட்டில் பிறந்தவன் சேரநாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான்-பாண்டிய நாட்டில் பிறந்தவன் பாண்டிய நாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான்-சோழநாட்டில் பிறந்தவன் சோழ நாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான். இந்தக் கூனிக்குறுகிய-தரித்திர புத்தியைத் திருவள்ளுவர் பார்த்தார். இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவர் தமது திருக்குறளில் உலகம், உலகம், உலகம் என்றே முழங்குகிறார் இன்றைக்கு இருப்பதைப்போல வானொலியும் தொலைபேசியும் இல்லாத காலத்தில் இவ்வளவு அதிகமாக உலகத்தைப்பற்றித் திருவள்ளுவர் பேசியதையும், உலகக் கண்ணோட்டத்தோடு பாடியதையும் நாம் பார்க்கிறோம். கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை ஆகியவற்றை ஒழுக்கமென வலியுறுத்தும் வள்ளுவர் அந்த ஒழுக்கங்களையெல்லாம் நீ போற்றாவிட்டாலும் பரவாயில்லை-உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சிறந்த-பெரிய ஒழுக்கம், அந்தப் பெரிய ஒழுக்கத்தை நீ காப்பாற்று என்கிறார்.

நாம் பல்வேறு நாட்டினரைப் பார்க்கிறோம். அவர்களிடத்து அவர்களுடைய நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிகுந்திருப்பதைப் பார்க்கிறோம். சமயப்பற்றும், இன உணர்ச்சியும் மிகுந்திருப்பதைப் பார்க்கிறோம். எனினும், திருவள்ளுவர் எந்த இனத்தைச் சார்ந்தவர்-எந்த நாட்டைச் சார்ந்தவர்-எந்த மொழியைச் சார்ந்தவர்-எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்று இனம் தெரிந்துகொள்ள இயலாத வண்ணம் திருக்குறளைச் செய்திருக்கிறார். இவ்வாறு உலகக் குடிமகனாத் திகழுதற்குரிய ஒரு நூலைச் செய்த பெருமை திருவள்ளுவருக்கே உண்டு. .

'உன்னுடைய சமயத்தை நீ கால்கொள்ளுகிற இடமாகப் பயன்படுத்திக்கொள்-எனினும், உன்னுடைய அறிவும் ஒழுக்கமும், சிந்தனையும், இதயமும் உன்னுடைய பழைய பழக்க வழக்கமும் உலகத்தைத் தழுவட்டும்’ என்று கூறுவதுபோல உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சிறந்த கல்வி என்கிறார். எவ்வதுறைவது உலகம் அவ்வதுறைவது அறிவு. உலகம் எங்கே தங்குகிறதோ அங்கே நீ தங்குவது அறிவு என்கிறார். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதைச் சொன்னார். ‘சாதிகளில்-சமயச் சந்தடிகளில் மதிமயங்கிய நாடு. உலகை நோக்கிப் போகாமல் ஒதுங்கிப் போய்விட்டது. நீ ஒதுங்கி விடாதே! உலகம் தழுவிய வாழ்க்கை வாழு’ என்று கூறிய அந்தப் பெருமகனாரின் வானார்ந்த நெறியை நாம் பார்க்க வேண்டும். கவிஞர்கள் தாம் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும், தமது நாட்டு மக்களையும், தங்கள் நாட்டு மன்னர்களையுமே பாடிவந்த நிலையில் திருவள்ளுவர் அந்தக் கவிஞர் உலகத்திற்கு ஒரு பேரிடியாகவே வந்தார். நாட்டை, மொழியை, சமயத்தை மறந்து ‘மனிதாபிமானம்' என்ற ஒன்றை மட்டும் கருவியாக வைத்துக்கொண்டு உலகம் முழுவதுக்குமாக ஒரு நூல் செய்தார்.

திருவள்ளுவருக்குச் சமய நம்பிக்கை கிடையாதா? உண்டு ஆனாலும், அவர் எந்தக் கடவுளைக் கும்பிட்டார் என்று கண்டுபிடிக்க முடியாது. அவர் எந்தக் கடவுளையாவது பாராட்டிப் பேசியிருப்பாரானால் மதக்காழ்ப்பும், மதச் சண்டையும் வந்திருக்கும். ‘நீ எல்லாவற்றிற்கும் அப்பால் இருக்கிற கடவுளை வாழ்த்து’ என்றுதான் திருவள்ளுவர் பேசுகிறார். திருவள்ளுவர் காலத்திற்கு முந்தியும் பிந்தியும் எவ்வளவு சமயச் சண்டைகள்! எவ்வளவு சமயக்காழ்ப்புக்கள்! சமயத்தை-சமய நெறியைக் கடைப்பிடித்தொழுகாதவன் கூட சமயத்தின் பேரால் சண்டைபோடுகிற காலம்! அத்தகைய 'சமயவாதி’யே சமயத்திற்காகப் பரிந்து பேசிப் போராடவும் வந்தான்! காரணம், அன்று அது அவனுக்குத் தொழிலாக இருந்தது. இந்த நிலையைத் திருவள்ளுவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். எனவே, உலகப்பொதுச் சமயத்தை நோக்கியே அவர் பேசினார்.

திருவள்ளுவப் பெருந்தகை, ‘அறக்கடவுள்’ என்று குறித்தாரே தவிர, சிவனென்றோ, திருமால் என்றோ, முருகன் என்றோ, சக்தி என்றோ பிரித்துச் சொல்லவில்லை. காரணம், மனிதகுல ஒருமைப்பாடே திருவள்ளுவருக்கு இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சிய உலகை நாம் நோக்கிப் பார்க்கிறபோதுதான், மிகச் சிறந்த உலகப் பொதுச் சமுதாயத்தை-உலக மனித சமுதாயத்தைக் கண்டு பிடிப்பதற் காகத் திருவள்ளுவர் அரிதின் முயன்று இந்நூலைச் செய்தார் என்ற உண்மை நமக்குப் புலப்படுகிறது. அவர் அரிதின் முயன்று அந்நூலைச் செய்த பிறகும்கூட, நமது நாட்டில் சாதி, இன, சமய, மொழி வேறுபாடுகளைப் பெரிதுபடக் காட்டி நாம் சண்டையிட்டுக் கொண்டுதான் வாழ்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது பெரிதும் வேதனையாக இருக்கிறது. நம்முடையதிலே நமக்குப் பற்றிருக்க வேண்டும் -ஆனால் மற்றவர்களுடையதிலே வெறுப்பு இருக்கக்கூடாது. இந்த பொது ஒழுக்கத்தை நாம் வள்ளுவர் வாயிலாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

இனி, அரசியலைப் பற்றி திருவள்ளுவர் என்ன கருதினார்-வள்ளுவரின் அரசியல் சித்தாந்தங்கள் என்ன என்பதையும் நாம் சிறிது காணலாம்.

திருவள்ளுவருக்கு முன்பிருந்த அரசியல் யுகத்தில் அவருக்கு அவ்வளவு பிடிப்பில்லை. அவர் ஒரு புதிய அரசியல் சித்தாந்தத்தை நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நமது இலக்கியங்களைப் பார்த்தால், ‘மன்னன் உயிர்த்தே மலர் தலையுலகம்' என்ற கொள்கைதான் நிலவியது. கோடானுகோடி மக்கள் வாழ்ந்து வளரும் உலகம் இது, ஆனால், அதற்கு ஒரேயொரு உயிர்-ஒரேயொரு ஆன்மா, அரசன்தான்! நாம் உடுப்பதுவும், உண்பதுவும், பூசுவதும் உடம்புக்காகவா? உடம்பிலிருந்து உயிர் பிரிந்தபிறகு இந்த உடம்பிற்குப் பூசுவதும், மற்றவையும் ஏதோ உபசாரத்திற்காகவேயன்றி வேறெதற்கு? அப்படியானால், உயிர் பெரிதா? உடல் பெரிதா? உயிர்தானே? அந்த உயிர் பிரிந்தபிறகு பூசுவதும் பிறவும் செய்கிறோம் என்றால் கடைசிக்காலத்தில் ஏதோ உபசாரத்திற்காகச் செய்கிறோம். அவ்வளவுதான்! திருவள்ளுவருக்கு முந்திய யுகம், 'மக்களெல்லாம் உடம்பு-மன்னன் உயிர்’ என்று சொன்னது. மன்னன் என்ற உயிர், நலன் பெறத்தான் மக்கள் வாழுகிறார்கள் என்ற அரசியல் தத்துவம் நிலவியது! மன்னனைப் பார்த்தால் மகேஸ்வரனைப் பார்த்தது போலக் கருதினார்கள். இந்த நிலையைத் திருவள்ளுவர் பார்த்தார்.

அரசனின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கேட்கக் கூடாது என்று ஐரோப்பிய நாட்டிலே ஒரு சித்தாந்தம் வளர்ந்து வந்திருக்கிறது-ஆம். அரசன் தவறு செய்யமாட்டான் என்ற ஒரு நம்பிக்கை. எனவே, ‘அரசனின் உரிமை தெய்வீக உரிமை. அதை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது' என்பன போன்ற கருத்துக்கள் பரவியிருந்த உலகில், ‘அரசன் குடி தழீஇக் கோலோச்ச வேண்டும்’ என்று வலியுறுத்திக் கூறியவர் திருவள்ளுவர்தான். ‘மன்னவனே! நீ குடிகளைத் தழுவிக் கோலோச்சத் தெரிந்துகொள்! நீ பிறப்புரிமை உடையவனல்லன்! இந்த அரசுரிமை உனக்குத் தெய்வத்தால் வந்தது என்று நீ நினைத்து விடாதே! மக்களால் உனக்கு வழங்கப் பெறுவது! எனவே, நீ குடிகளைத் தழுவி வாழ்க்கை நடத்த வேண்டும்’ என்ற அரசியல் சித்தாந்தத்தை - மாற்றத்தை உலகில் ‘ஜனநாயகம்’ பிறப்பதற்கு முன்னால் - மக்களாட்சிக்கொள்கை மலர்வதற்கு முன்னால் சொன்ன பெருமை திருவள்ளுவருக்கு உண்டு. அது மட்டுமா? அப்படி நீ குடிதழீஇக் கோலோச்ச வில்லையானால், 'கூழும் குடியும் ஒருங்கிழப்பாய்! நாட்டையும் இழப்பாய்! என்றார். நீ இழந்துவிடுவாய் என்பதுகூடப் பொருளல்ல-நீ குடிதழீஇக் கோலோச்சவில்லையானால், குடிமக்கள் உன்னைப் பதவியிலிருந்து இறக்கிவிடுவார்கள்’ என்ற கருத்துப்பட எச்சரிக்கையும் விடுக்கிறார். திருவள்ளுவருக்கு முன்பு இப்படி ஒரு பாடல் உண்டா? ஒரு பாடல் உண்டு. 'அரசன் தவறு செய்துவிட்டால் புலவர்கள் அவனைப் பாடமாட்டார்கள்’ அதுதான் பெரிய தண்டனை.

'கூழும் குடியும் ஒருங்கிழப்பாய்’ என்று திருவள்ளுவர் மிக அடக்கமாகப் பேசுகிறார். ‘ஒருங்கிழந்து விடுவாய்’ என்பதைச் சற்று ஆத்திர ரீதியான வார்த்தைகளில் போட்டால், ‘மன்னவனே நீ மக்களைத் தழுவி ஆட்சி நடத்த வில்லையானால் உன்னை இறக்கிவிடுவோம்’ என்றாகும். இந்நிகழ்ச்சி இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் ஏற்பட வில்லையா? மன்னவனை அரசு கட்டிலிலிருந்து இறக்கிவிட வில்லையா? அவன் தானாகவே இறங்கிக் கொல்லைப்புற, வழியாக ஓடிவிடவில்லையா; இதற்கெல்லாம் கால்கோள் செய்வதுபோல வள்ளுவர் பேசியிருக்கிறார். திருவள்ளுவருக்கு முன்பு, அரசனுக்கு அறநெறி சொன்னவர்கள்-நீதி சொன்னவர்கள் நிறையப் பேர் உண்டு. ஆனாலும்கூட இப்படி இடித்துக் கூறியவர்களைக் காணமுடியாது. ‘இப்படி செய்தால் நல்லது-உன் அரசு வாழும்-உனக்குப் புகழ் இருக்கும்’ என்று ஒரு மாதிரியாக-நாகரிகமாகப் பேசியிருக்கிறார்கள். நம் நாட்டின் நீண்டகால பாரம்பரியத்தாலேயே அவர்களெல்லாம் அப்படிப் பேசியிருக்கிறார்கள். ‘அரசனை இடித்துக் கேட்கிற அமைச்சன் வேண்டும்.’

இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன்

கெடுப்பார் இலானுங் கெடும்.

என்ற முறையில் வள்ளுவர்தான் பேசியிருக்கிறார். வரலாற்றில் மன்னனின் எதேச்சாதிகாரம் பெருகி, அரசன் எண்ணியபடியெல்லாம் செய்கின்ற தன்மை வளர்ந்தது. அப்போதுதான், ‘மன்னவா! இடித்துச் சொல்லும் அமைச்சனை அருகில் வைத்துக்கொள். ஒத்தூதுகிற ஆட்களாகப் பார்த்துப் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதே’ என்று சொல்லுவதுபோலப் பேசுகிறார். அதுமட்டுமா? உனக்குச் சாதகமாகப் பேசுகிறவன்தான் உனது நண்பன் என்று எண்ணி ஏமாந்து விடாதே என்றும் எச்சரிக்கிறார். இடித்துச் சொல்லுகிற அமைச்சனையும் ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை உன்னிடம் அதிகரித்திருக்குமானால், உன் அரசு நெடுநாள் வாழும் என்று உணர்த்துகிறார்.

திருவள்ளுவருடைய காலத்தில்-சமுதாயத்தில் பல வேறுவிதமான தரக் குறைவுகளும் தகுதிக் குறைவுகளும் நிறைந்திருக்கின்றன. திருவள்ளுவர், சென்றகாலப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை நீக்கி, நிறைவு படுத்துவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டு ஒரு மாபெரும் கருத்துப் புரட்சியையே தோற்றினார். சிந்தனைப் புரட்சியைத் தோற்றுவித்து குறையுடையதாக இருந்த சமுதாயத்தை நிறையுடையதாக ஆக்க முயன்ற ஒரு சிறந்த எழுத்தாளர் திருவள்ளுவர். அவர் ஒரு சிறந்த கவிஞர். ஒப்புயர்வற்ற வரலாற்றுச் சிற்பி. அந்தப் பெருமகனாரின் நூல் வெறும் இலக்கியப் புலமைச் செறிவோடு மட்டும் தோன்றியதன்று. அது மனிதனின் உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் இரையாக இல்லாமல் வெறும் பொழுதுபோக்குக்குப் பயன்படும் நூலாக இல்லாமல், சமுதாயத்தின் அடி மனத்தைத் தொட்டுச் செழுமைப் படுத்தக்கூடிய ஒரு பெரு நூலாகத் திகழ்கிறது.

வரலாற்றுப் போக்கில் நாம் வள்ளுவத்தைப் பார்க்கிறபோது, அரசியல் துறையில்-சமுதாயத் துறையில்-அறிவுத்துறையில் ஏற்பட்டிருக்கிற குறைகளை நீக்கி, நிறைசெய்யத் தோன்றிய நூலாகவே தோன்றும். சமுதாயத்தில் நிலவும் குறைகளைக் களைந்து நிறைவுடைய வாழ்வு வாழ்வதே திருவள்ளுவருக்கு நாம் செய்கிற கைம்மாறு, நாம் செய்யத்தக்க கடமையுங்கூட.

2. குறள் வாழ்வு

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றி இன்றும் வழக்கில் உள்ளது-போற்றிப் பாராட்டப் பெறுகிறது என்பது திருக்குறளுக்குரிய சிறப்பாகும். இந்நூல் உண்மையிலேயே சிறப்புடையதா? அல்லது, காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியின்படி நாம் அதைச் சிறப்பிக்கிறோமா என்பதை ஆராய வேண்டும்.

திருக்குறளின் கருத்து காலஎல்லைக்கு உட்பட்டதல்ல. காலங்கடந்த தத்துவங்களையுடையது அந்நூல். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு வரையறைகளைக் கடந்து உலகம் தழீஇய பொதுநூல். அது மனித குலத்தின் நீதி நூல்.

வள்ளுவத்தில் அதிசயங்கள் அற்புதங்கள் கிடையாது. அன்று வள்ளுவர் சொன்னதை நாம் இன்று கையாள முடியவில்லையென்றால், அது நூலின் பிழையன்று; நாம் மனித தன்மையிலிருந்து-மனிதப் பண்பிலிருந்து நெடுந்தூரம் விலகிச் சென்றிருப்பதே காரணமாகும். கல்விக்கும் வாழ்க்கைக்கும் இன்றுள்ள உறவு அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவைப்போல் இருக்கிறது. நமது வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி. சராசரி மனிதனால் நடை பயிலக்கூடிய அறநெறியையே கூறினார் அவர். வாழ்க்கை முறை பற்றிச் சமுதாயத்தின் சாதாரணப் படியில் உள்ள சராசரி மனிதனுக்குச் சொல்ல விரும்பியே அளவில் சுருக்கமாக-தனித்தனியே-உரிய முறையில் கூறினார்.

வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களையும் அவர் பேசுகின்றார். அனைத்தும் அனுபவித்த ஒருவர் கூறுவது போலவே பேசுகின்றார். திருக்குறளே அனுபவ விளக்கமாகக் காட்சியளிக்கிறது. திருவள்ளுவர் சமுதாயத்தின் பல்வேறிடங்கட்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் பார்த்து, நாட்டில் பலர் பேசிய-வழக்கில் இருந்த பல்வேறு செய்திகளையும் கருத்துக்களையும்கூட நினைவில் வைத்துக்கொண்டு நூல் செய்திருக்கிறார். மிகச் சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றி யிருக்கிறார். அவர் ஒரு கைவந்த சொல்தச்சராகவே விளங்குகிறார்.

இன்று, அள்ளித் தெளித்த தெல்லாம் கோலம் என்பது போல பலர் வாழ்க்கை நடத்துகின்றனர். வரலாற்றைப் படிப்பதிலே நாம் அவ்வளவு அக்கறை காட்டவேண்டிய தில்லை. நாம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்க முயற்சிக்க வேண்டும். நமக்கு முன் வாழ்ந்தவர்கள் செய்த தவறுகளை நாமும் செய்து வீழ்ச்சியடையக் கூடாது.

தொடக்கத்தில் மனிதன் கண்களால்தான் பேசியிருக்கிறான். உள் உணர்வுகளுக்குத் தக்கபடி கண் ஆடும். மனிதன் கண்களைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது. இதனால்தான், இறைத் தோற்றத்தில்கூட அப்பரடிகள் முதன் முதலில் குனித்த புருவத்தைப் பற்றிப் பேசுகிறார்.

வள்ளுவர் காலத்தில் நம் மக்களிற் பலர் எண்ண-சிந்திக்க விரும்பாமலேயே வாழ்ந்தார்கள். எனவே வள்ளுவர் எண்ண வேண்டும்-சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தினார், எண்ணிச் சிந்தித்துச் செயற்படுவதன் மூலமே உலகத்தை வெற்றி பெறமுடியும்.

புறத்துறையில் புரட்சி செய்தவர்கள் ஏராளம்; ஆனால் அகப்புரட்சி செய்தவர்கள் மிகச் சிலரேயாவர். அந்த அகப்புரட்சியும்கூட ஆற்றொழுக்காக இல்லாமல் இடையிடையே தடைப்பட்டுத் தளர்வுற்று வந்திருக்கிறது. மனிதன் அகவளர்ச்சியில் தேய்ந்து கொண்டே வந்திருக்கிறான். மனிதன் வாழத்தானே புதிய புதிய சாதனங்கள் எல்லாம் என்பதை, அவன் எண்ணிப் பார்க்கக்கூட மறந்து விட்டான்.

குடிப்பிறப்புச் சிறப்பு மனிதனுக்கு இன்றியமையாதது. திருவள்ளுவர், அப்பரடிகள் ஆகியோரின் குடிப்பிறப்பு சிறப்பு இன்று நம்மிடம் இருக்கிறதா?

'நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்'

என்று, வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பவனைப் பார்த்து குடும்ப வாழ்க்கையில் செழுமை யில்லாதிருப்பவனைப் பார்த்துப் பேசினார்.

'உலகத்தோடு ஒத்து வாழு; ஒதுங்கி வாழாதே’ என்று பேசுகிறார் திருவள்ளுவர். நீ சென்று குடியேறிய நாட்டை உன் நாடாக எண்ணிப் போற்று; அதனை உன் நாடாக ஆக்கிக்கொள். அதற்கு அந்நாட்டு மொழிகளையெல்லாம் கற்றுக்கொள் என்கிறார். உலகத்தை உன்னிடத்தே இழுக்க முயற்சிக்காதே; உலகம் தங்கும் இடத்தில் நீ தங்கிவிடு' என்கிறார். வள்ளுவம் அருமையானதொரு வாழ்க்கை இலக்கியம்.

இன்று உலகச் சந்தையில் அந்நியர் கருத்துக்கள் வந்து மலிந்து கிடக்கின்றன. அவற்றின் தோற்றத்தையோ, கவர்ச்சியையோ கண்டு ஏமாறாமல், மெய்ப் பொருளைக் கண்டு பயன்பெற வேண்டும்.

‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு'

'எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பெருள் காண்ப தறிவு'

என்றும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

இலட்சம் செங்கல் கொட்டிக்கிடந்தாலும் அது கட்டிடமாவதில்லை. அவற்றை அடுக்கிச் சந்து பதிந்துதான் சுவரை எழுப்ப வேண்டும். உடைந்த செங்கலையும் முழுச் செங்கலையும் இணைத்து இடைவெளி ஏற்பட்ட இடத்தில் முழுச் செங்கலையும் கூட உடைத்துப் போட்டுச் சந்து நிரப்புவது போல, மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயச் சுவரை எழுப்ப முற்படவேண்டும். உடைந்த செங்கலையும் முழுச் செங்கலையும் இணைத்துச் சுவரை எழுப்புபவர் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவனையும் வலிமையற்றவனையும் இணைத்து ஒருசேர அழைத்துச் செல்லுபவரே சமுதாயத் தலைவராவார்.

சோஷியல் (Social) என்ற ஆங்கிலப் பதமே விருப்பு வெறுப்புக்களைக் கடந்து உள்ளம் ஒன்றிப் பழகும் பண்பைக் குறிப்பது. இதைத்தான் திருவள்ளுவர் ‘ஒப்புரவு' என்று குறிப்பிடுகிறார். மற்றவர்களோடு சேர்ந்து பழகும்போது அப்படிச் சேர்ந்து பழகுவதனால் ஏதேனும் கேடுகள் விளையுமானால் அவற்றையும் பொறுமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’ என்கிறார் வள்ளுவர். ஒத்தது அறிதல் என்பதற்குப் பொருள், மற்றவர்களுக்கும் ஒத்ததறிந்து என்பதேயாகும். அப்படி மற்றவர்க்கும் ஒத்ததறிந்து வாழ்பவனே உயிர் வாழ்பவன்.

பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டவிடத்தும் பொறுத்துக்கொள் என்கிறார் திருவள்ளுவர். மனிதனையும் மாமனிதனையும் இணைத்துச் சமுதாயக் கட்டிடத்தை எழுப்ப இந்தப் பொறுமைப் பண்பு இன்றியமையாதது.

சமயம், கடவுள் நம்பிக்கை ஆகியவற்றில் மிக தெளிவான கருத்துடையவர் திருவள்ளுவர். வீடுபற்றி அவர் பேசிய அளவிற்கு வேறு யாரும் பேசியதில்லை.

'புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.

என்ற குறட்பாவின்மூலம் திருவள்ளுவர் வீடுபேற்றின் மேன்மையை விளக்கி யிருக்கிறார்.

நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் தந்தவர் திருவள்ளுவர். நண்பர். ஒருவர் நஞ்சு கலந்த பாலைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்து விடு-நஞ்சு கலந்தது என்று நினைக்காமல் குடித்துவிடு என்று கூறுகிறார். நஞ்சு கலந்தது என்று நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரும்; நஞ்சு கலந்தது என்பதை நாம் அறிந்து கொண்டோம் என்பதை அந்த நஞ்சு வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் வருந்துவார். அந்த வருத்தத்தைக் கூட அவருக்குக் கொடுக்கக்கூடாது என்கிறார். நஞ்சு என்று நினைக்காமல் குடித்தால் அது நம்மைக் கொன்றுவிடாது. நஞ்சையும் மாற்றும் வல்லமை தூய செங்குருதிக்கு உண்டு. சாக்கிரடீசுக்கு நஞ்சு கொடுத்தார்கள். அவர் நஞ்சு என்று தெரிந்து-நஞ்சைச் சாப்பிடுகிறோம் என்று அறிந்து அதைச் சாப்பிட்டார்; செத்துப் போனார். அப்பரடிகளுக்கும் நஞ்சு கொடுக்கப்பட்டது. அந்த நஞ்சை அப்பரடிகள் உண்டும் சாகவில்லை. 'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்'

என்று நயத்தக்க நாகரிகம் பேசிய வள்ளுவர் பிறந்த நாடு அன்றோ நமது நாடு? குறள்வழி, நஞ்சினையுண்டும் வாழ்ந்தார் நமது ஞானத் தலைவர் அப்பரடிகள்.

மனிதன் ஒரு சொரிசிறங்கு பிடித்தவன்போல; அரிப்பு ஏற்பட்டபோது சொரிந்து கொள்வான்; சொரியும்போது சுகமாக இருக்கும். பின்னர் எரிச்சல் ஏற்படும்; அவ்வாறு எரிவெடுத்ததும் இனிமேல் சொரியக்கூடாது என்று தனக்குள் எண்ணிக்கொள்வான். பின்னர் ஊரல் ஏற்படும்போது அதை மறந்து சொரிய ஆரம்பித்து விடுவான். அதுபோலவே பலர் அன்பு, அருள் என்று படிக்கும்போது அன்பும் அருளும் காக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வார்கள்; அடுத்த நேரமே அவற்றை மறந்துவிடுவார்கள். இத்தகைய பண்பு, வாழும் மனித சமுதாயத்திற்கு நல்லதல்ல. நாம் கற்க வேண்டும்; கற்றநெறியில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் ஏற்படும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவது திருக்குறள். வீட்டிலும், நாட்டிலும் குறள் மணம் கமழ வேண்டும்; குறள் வாழ்வு மிளிர வேண்டும்.

3. வாழ்வியற் கவிஞர்

நூறுமைல் தொலைவைக் கடந்து செல்ல, ஒவ்வோரங் குலத்தையும் கடந்து செல்வது போல, மனிதனின் உள்ளுணர்ச்சிகள் வளர வளர அவன் தனது சிறு குறை நிறைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு நிறைவு படுத்திக் கொள்வது சிறந்த வாழ்க்கை முறை. பொதுவாக நமது நாட்டில் பலர் வாழ்க்கையைப் பற்றிய துறைகளில் அக்கறை கொள்வதில்லை-ஆர்வம் காட்டுவதில்லை. வாழ்க்கைக் கலை நுண்ணியது. ஆழமானது. வாழ்க்கையைப் பூரணமாகப் பயன்படுத்தி வளர வேண்டும்.

வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெறுவது விண்ணுலகுக்குப் பறந்து சென்று சந்திர மண்டலத்தைக் காண்பது போலத்தான். எனினும், இன்று, 100க்கு 70 பேர் அலுத்துச் சலித்து, சாவு வராதா என்று ஏங்கி இளைத்து மிதந்தவாறாகப் போலி வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்”

என்று பேசுகிறார் வள்ளுவப் பெருந்தகை. திருவள்ளுவர் கற்பனைக் கவிஞரல்ல-அவர் ஒரு சிறந்த வாழ்வியல் கவிஞர். அவருடைய இலக்கியத்தில் பொய்யும், புனைந்துரையும் இல்லை. அவர் சமுதாய வாழ்க்கையின் தெருப்புறத்தையும் பார்த்தார்; கொல்லைப்புறத்தையும் பார்த்தார். திருவள்ளுவர், மாணிக்கவாசகர், அப்பரடிகள் இவர்கள் எல்லோருமே சமுதாயத்திற்கு வாழ்வு நெறிகாட்டி வழி நடத்திச் செல்லத் தோன்றிய அறிவியல் ஞானிகள். அவர்கள் காட்டிய பாதையில் செல்ல வேண்டிய தமிழ்ச் சமுதாயத்தைத் திசைமாற்றி விட்டவை, இடைக்காலத்தே தோன்றிய மடல்கள், உலாக்கள், பிரபந்தங்கள் ஆகியனவே என்று நான் கருதுகிறேன்.

வள்ளுவர் பிற்போக்கான கொல்லைப் புறத்தைப் பார்த்து ஆத்திரப்பட்டுப் பாடியதுதான் திருக்குறளில் உள்ள 'கயமை’ என்ற அதிகாரம். வள்ளுவர் உயர்ந்த-மிகச் சிறந்த நகைச்சுவையாளர். வள்ளுவர் பேசுவது சிரிப்பாகத் தெரிகிறது. சமுதாயத்தைப் பார்த்து அவர் சிரிக்கிறார். ‘அதோ போகிறாரே, அவர் யார்?’ என்று ஒருவர் வள்ளுவரைக் கேட்கிறார். போய்க் கொண்டிருப்பவரை ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு ‘மனிதன் மாதிரி இருக்கிறது என்கிறார்; ‘மக்களே போல்வர்’ என்கிறார், இத்தகைய நகைச்சுவையை நாம் ஆங்கில நாவலாசிரியரான டிக்கன்சனின் நாவல்களில்கூடக் காணமுடியாதே. திருவள்ளுவர் மக்கட் சமுதாயத்தை உள்ளது உள்ளபடி பார்த்தார். மனிதனைப் பார்த்து, உறுப்பாலே மனிதனாகி விடுவதில்லை... உயர்ந்த பண்பாலே மனிதனாக வேண்டும்; உடலாலே மனிதனாகிவிடுவதில்லை - உள்ளத்தால் மனிதனாகவேண்டும்’ என்கிறார்.

பொதுவாக ஆடுகளையும் மாடுகளையும் தொழுக்களில் கட்டி வைப்பார்கள்; மனிதர்களை அப்படிக் கட்டி வைப்பதில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். பகுத்தறிவு, மனச்சாட்சி இவற்றை வைத்துத் தம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும். அறிவில்லாத விலங்குகள்கூட வேலிக்கும் சுவருக்கும் விலகி ஒதுங்கிப் போகின்றன. மனிதனோ அவற்றை உதைத்துத் தள்ளிவிட்டுப் போகிறான்.

வானம், காற்று இவைபோல, அறிவும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும். அந்த அறிவைத்தான் சமய உலகில் ஞானம் என்கிறோம்; வள்ளுவர் ‘வாலறிவன்’ என்கிறார். இந்த உலகை-உலகமக்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் தூய அறிவையே வள்ளுவர் போற்றுகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு-பலருக்குக் கல்வி பெற வாய்ப்பும் வசதியும் இல்லாமலிருந்த அந்தக் காலத்தில் கல்வியுரிமை மறுக்கப்பெற்ற காலத்தில் - படித்தறிய வாய்ப்பும் வசதியும் இல்லாமற் போனாலும் படித்தவரிடம் சென்று கேட்டறிந்து அறிவை வளர்த்துக்கொள் என்று வலியுறுத்தினார். ஒரு பெரும் கல்விப் புரட்சியையே உண்டாக்கினார். எல்லாருக்கும் கல்வி கொடுப்பது சமுதாயத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும். 'அறிவினால் ஆராய்ந்து பார்’ என்ற பெரும் புரட்சியைச் செய்தவர்களில் தலையாயவர் திருவள்ளுவர்.

பெளத்த ஆரிய எதிர்ப்புக்களையெல்லாம் மோதிச் சமாளித்துத் தமிழ் நாகரிகத்தையும் தமிழர் பண்பையும்

தி.12. செழுமைப்படுத்தி யிருக்கிறார் வள்ளுவர். இப்படி நாம் கூறும்போது சாதி இனப்பிரச்னைகளைக் கணக்கில் வைத்துக் கொண்டு பார்க்கக்கூடாது.

மனிதன் புற உலகத்தில் வளர்ந்திருக்கிற அளவிற்கு அகஉலகில் வளர்ச்சியடையவில்லை. உலகம் அவனது காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. புயலை, வெள்ளத்தை, நோயையெல்லாம் அடக்கியாளக் கற்றுக் கொண்டிருக்கிற மனிதன் பக்கத்து வீட்டுக்காரனோடு கூடிக் குலாவி அன்டோடும் பண்போடும் வாழக் கற்றுக்கொள்ளவில்லை.

மனிதன் உள் அமைப்பால் வளர வேண்டும். உடம்பை மருத்துவரிடம் காட்டிப் பரிசோதனை செய்துக் கொள்வது போல, உள்ளத்தால் உணர்வால் வளர்ந்திருக்கிறோமா என்று நமது செயல் முறைகளை எண்ணிக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டாமா? மனிதனைப் பார்த்து மனிதன் என்று கூற இன்னொரு மனிதன் இல்லையென்றால் மனிதன் என்ற பெயர் எப்படியிருக்கும்? எனவேதான், மனிதனுக்கு அறம் கூற வந்த திருவள்ளுவர்,

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்:

ஆகுல நீர பிற"

என்றார். செயலால் குற்றமற்றவனாக வாழ்ந்து விடுதல் எளிது. சிந்தையால் குற்றமற்றவனாக வாழ்வதுதான் அரிது. பல பக்தர்கள் நெற்றியிலே திருநீறு பூசியிருப்பர்; சரிதான், சிறந்த பக்தர் போலிருக்கிறது என்று கருதுவோம். அருகில் போனால், அவரிடம் கொஞ்சம்கூட மனிதவாடையே இருக்காது. இவர்களைப் பார்த்துத்தான் திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலனாக இரு’ என்று வற்புறுத்தினார்.

இன்று, நமது நாட்டைப் பொறுத்தவரை அறம், நீதி, ஒழுக்கம் என்பன யாவும் எல்லோரும் விளையாடும் பொது விளையாட்டுத் திடலாகி விட்டது. அந்தப் பொய்யான ஒழுக்க நெறியிலிருந்து மனிதனை விடுதலை செய்யவேண்டும் என்று வள்ளுவர் விரும்பினார். எனவேதான் அவர், சத்திரமும் சாவடியும் கட்டுவதை அறம் என்று கூறாமல் 'மனத்துக் கண் மாசிலனாதல் அறம்' என்றார்.

உயிர் சிலருக்குப் பொருளாக-சிலருக்கு நீதியாக - வேறு சிலருக்கு அன்பின் வடிவமாக மாறும். ‘அன்பின் வழியது உயர்நிலை’ என்றார் திருவள்ளுவர். ஆனால், இன்று உலகியலில் அழிக்கும் சக்தி வளர்ந்திருப்பதுபோல, அன்பு காட்டும் முறை வளரவில்லை. அன்பும் வாழ்க்கையும் என்பும் தசையும்போல.

வெகுளாமையை வலியுறுத்திய வள்ளுவருக்கும் வெகுளி வருகிறது. அப்படி வெகுண்டெழுந்து,

‘செத்தாருள் வைக்கப்படும்,’ ‘அவியினும் வாழினும் என்? என்றெல்லாம் பேசுகிறார். வெகுளியை வெறுத்தொதுக்க வேண்டும் என்று கூறிய வள்ளுவருக்கு வெகுளி தோன்றியது நியாயமா? என்று கேட்கலாம். தன்னலத்திற்கு ஊறு செய்யும்பொழுது வெகுளி கூடாதுதான்; சமுதாயத்தின் பொது ஒழுக்கத்திற்கு ஒருவன் ஊறு செய்தால் வெகுண்டெழுந்து தீப்போலக் காய்வதில் தவறில்லை.

வள்ளுவர் பல்வேறு கோணங்களில் அருமையான தொரு ஒழுக்கக் கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்; பல்வேறு சாளரங்களையுடைய ஒரு சுகாதாரமான நல்ல வீடு அது. ஒழுங்காக ஒவ்வொரு கல்லாக வைத்து அடுக்கி அந்தக் கட்டிடத்தை அவர் எழுப்பினார். வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறிகளை ஒவ்வொன்றாக மேற்கொண்டு வாழ உறுதி கொண்டால் பத்து ஆண்டுகளில் நாம் ஒப்புயர்வற்ற ஒரு மனிதனாக வாழ முடியும்.

இனி வள்ளுவருக்கு விளம்பரம் தேவையில்லை. வள்ளுவரின் வாழ்க்கை முத்திரை வீட்டிலும் நாட்டிலும் பதிக்கப்பெற வேண்டும். அதற்கு முயற்சி செய்யுங்கள்! வள்ளுவர் காட்டிய ஒழுக்கச் சமுதாயத்தைக் காண முயற்சி செய்யுங்கள்! வள்ளுவத்தைத் தமிழகத்தின் வாழ்க்கை நெறியாக-ஒழுக்க நெறியாகக் கொண்டுவரப் பாடுபடுங்கள்!

4. திருக்குறளும் காந்தியடிகளும்

சராசரி வாழ்க்கையைக் கடந்தவர்களின் வாழ்க்கையோடு திருக்குறள் கருத்துக்கள் பொருந்துவது இயல்பு. மனிதனால் செய்யக்கூடிய காரியங்களைப் பற்றித்தான் திருக்குறள் பேசும். எனவே நமது தேசத்தந்தை காந்தியடிகளின் வாழ்க்கையோடு திருக்குறள் பொருந்தி வருவது சாலப் பொருத்தமானதாகும்.

திருக்குறள் "கடவுள் போல", நாடு இன மொழி வேறுபாடுகளைக் கடந்து விளங்கும் நூல். நாத்திகர்களும் கூடத் திருக்குறளைத் தங்கள் நூல் என்று போற்றுகிறார்கள். காந்தியடிகள் எவரின் ஆதிக்கத்தை எதிர்த்தாரோ, அந்த ஆதிக்கத்தினரும் அவரை மதித்துப் போற்றினார்கள்.

திருக்குறட் கடவுள் வாழ்த்தினை வள்ளுவர்தான் செய்தாரோ? அவர் கடவுள் வாழ்த்துச் செய்திருப்பாரா? என்று சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நிச்சயமாகத் திருக்குறட் கடவுள் வாழ்த்து திருவள்ளுவர் செய்ததுதான்.

திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து, அறிவுக்கும் அனுபவத்திற்கும் மிக ஒத்தது. திருவள்ளுவர் புனைந்துரையாக எழுதவில்லை.

கடவுளை நம்பிச் சிந்தித்து வாழ்த்த, நாம் என்ற உயிர் ஒன்று உண்டு என்று உணர வேண்டும். ‘உயிர்’ இல்லை என்பார் சிலர்; உயிரும் கடவுளும் ஒன்று என்பார் சிலர். 'உயிர் தனியானது’ என்பதை ‘நீடுவாழ்வார்’ என்ற சொற்றொடர் மூலம் ஒத்துக் கொண்டிருக்கிறார் திருவள்ளுவர். உயிரின் இயல்புகளைப் பற்றி வள்ளுவர் அழகாகப் பேசுகின்றார். ‘மன்னுயிர்’ என்கிறார். ‘மன்’ என்றால் நிலைபெற்றது என்பது பொருள். இப்படி அவர் கூறியதன் மூலம், ‘உயிர் என்றும் உள்ளது; அது என்றைக்கும் வாழும்; அது தோன்றியது மில்லை அழிவதுமில்லை’ என்ற நமது சித்தாந்தத்தைத் திருவள்ளுவர் ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. உயிர்கள் வினைகளின் வழிப்பட்டபயனை அனுபவிப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். ‘இருள் சேர் இருவினை’ என்று பேசுகின்றார். இருவினைப் பயன்கள் மன மொழி மெய்யால் செய்யப்படுகிற செயல்களால் விளைவன.

ஒலிப்பதிவு நாடாவில்-டேப் ரிக்கார்டரில் நாம் ஒலிப்பதிவு செய்ததையே மீண்டும் கேட்கிறோம். புதிதாகக் கேட்க முடிவதில்லை. அப்படிப் புதியது கேட்க விரும்புவோமானால் அழித்து விட்டுப் புதுப்பதிவு செய்யவேண்டும். அது போல நம் உயிரின் ஒலிப் பெட்டியில் நாம் எண்ணியனவும் சிந்தித்தனவுமே பதிகின்றன. அவையே நம்மை நிழல்போல் தொடர்கின்றன. நாம் ஒன்றைச் செய்யும்போது, ‘நான் செய்கின்றேன்’ என்ற எண்ணத்தோடு செய்யக்கூடாது. தான் செய்வதாகக் கருதும் தன்முனைப்புக் கூடாது என்பது திருவள்ளுவர் கருத்து.

நமது காந்தியடிகள் ‘நான் சொல்லுகிறேன்' என்று என்றுமே சொல்லியதில்லை. என்னுடைய அந்தராத்துமா சொல்லுகிறது என்றுதான் எப்பொழுதும் கூறினார். அவர் கொஞ்சமும் தன் முனைப்பு இல்லாதவராக வாழ்ந்தார். அவர் பகைவனிடத்தும்கூடக் காழ்ப்புக் கொண்டதில்லை. எனவே அவர் இருள் சேர் இருவினையும் தன்னைப் பற்றாமல் காத்துக் கொண்டார்.

பிறவியுண்மை நமது சமயத்திற்கு மிகவும் முக்கியமானது. இன்றைய உழைப்பின் பயனை நாளை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால்தான் உயிர்நலத்தில் நாட்டம் ஏற்படும். பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டும் என்று திருவள்ளுவர் விரும்பினார். காந்தியடிகளும் பிறவித்தளை நீங்க வேண்டும் என்று விரும்பினார்.

இருவினைகளிலிருந்தும் விடுதலை பெற, பொய்தீர் ஒழுக்கநெறி நிற்க வேண்டும். காந்தியடிகள் மிக எளிய உணவையே உண்டுவந்தார்-மிக்கெளிய தோற்றம் உடையவராகத் திகழ்ந்தார்-மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவர் திறந்த மேனியராக வாழ்ந்தது போலவே, திறந்த உள்ளத்தினராகவும் வாழ்ந்தார். எனவே காந்தியடிகள் ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்ந்தார் என்பதைக் காட்டிலும், ஐம்பொறிகளும் தாமே அடங்கின என்பது சாலப் பொருந்தும். அவர் வாழ்க்கையில் இரகசியம் என்பதே கிடையாது. அவர் தம்மால் முடிந்ததை ஒழுக்கமாக ஏற்றுக் கொண்டார். இடையே தொய்வே ஏற்படாமல் பாதுகாத்து வாழ்ந்தார்-பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழ்வார்”

என்றார் திருவள்ளுவர். அதன்படி காந்தியடிகள் வாழ்ந்தார். எனவே கர்ந்தியடிகள் அன்று வாழ்ந்தார்-இன்று வாழ்கிறார் - என்றுமே வாழ்வார்.

காணப்பட்ட உலகத்தின் மூலமாகக் காணப்படாத இறைவனைக் காட்டுகிறார் திருவள்ளுவர். ‘அகரமுதல எழுத் தெல்லாம்’-என்பது குறட்பா. இறைவனைக் காட்டுகின்ற மிகப்பெரிய புத்தகம் இயற்கை ‘கடவுள் பிரார்த்தனை இல்லாமற்போனால் நான் செத்துப் போவேன்’ என்கிறார் காந்தியடிகள். ‘என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து இயங்கினான்’ என்று அப்பரடிகள் பேசுகிறார்.

'கடவுள் உண்டு என்பதை நீங்கள் நம்புகிறீர்களா' என்று காந்தியடிகளைக் கேட்டபோது, ‘நீங்களும் நானும் இருப்பது உண்மையானால், நமது பெற்றோர்கள் வாழ்ந்தது உண்மையானால், நமது பிள்ளைகள் இருக்கப்போவது உண்மையானால் கடவுளும் உண்டு’ என்று அவர் கூறினார். அவர் குண்டடிபட்டு விழுந்த போதும்கூட ‘ராம்ராம்’ என்றுதான் கூறினார். இராமனே அவரது உயிர்நிலையாக விளங்கியமையை உணர்கிறோம். எனவே காந்தியடிகளின் கடவுள் நம்பிக்கை மாசற்றது-உறுதியானது.

திருவள்ளுவர் கடவுளை மிக எளிய முறையிலே பார்த்தார். யார் யார் எந்த வடிவோடு நினைக்கிறார்களோ அந்த வடிவில் அவர்கள் உள்ளத்தில் இறைவன் வந்து சேர்வான் என்பது திருவள்ளுவர் கருத்து. காந்தியடிகள் ஏழை மக்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் கடவுட் காட்சியைக் கண்டார்.

திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து வேறு. காந்தியடிகளின் வாழ்க்கை வேறு அல்ல. எனவே, காந்தியடிகள் காட்டிய அன்பு நெறியை-அறநெறியை-கடவுள் நெறியை நாம் கடைப்பிடித்து வாழ்வோமாக!

5. விண்ணகமாக்குவோம்!

மனிதகுலத்துக்கு ஒரு கவிஞராக-மனிதகுலம் வாழ் வாங்கு வாழ வழிகாட்ட வந்த ஒரு கலங்கரை விளக்காக-மனிதனை மனிதனாக வாழச் செய்யும் மாபெரும் கவிஞராக வாழ்ந்தவர் வள்ளுவப் பெருந்தகை.

நமது நாட்டைப் பொறுத்தவரை படிப்புப் பெருகிய அளவிற்குப் பண்பாடு பெருகவில்லை. நாட்டில் படிப்பிற்குப் பஞ்சமில்லை. பண்பாட்டிற்குத்தான் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

வேறு எந்த நாட்டையும்விட இந்த நாட்டில்தான் பக்தி அதிகம். எனினும், எது பக்தி என்பதிலே ஒரு தெளிவான கருத்து இல்லை. எனவே, இந்த நாட்டில் வளர்கின்ற பக்தி, பொட்டல் காட்டில் மழைபெய்வதுபோல ஆகி விடுகிறது. அங்கயற்கண்ணியும் அண்ணல் சோமசுந்தரப் பெருமானும் எப்படி இருந்தார்களோ அந்த வாழ்க்கை அனுபவம் இன்று நம்மிடை இல்லை. அன்று, பன்றிக் குட்டி ஒன்று பால் இன்றிப் பசியால் கதறியது. அந்தக் கதறல் அண்ணல் சோமசுந்தரப் பெருமான் திருச் செவிக்கு எட்டியது. அண்ணலே தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டிக் காப்பாற்றினார். இன்று, மதுரைமா நகரிலே கதறியழும் மனிதனுக்குச் சோறு கொடுக்க யார் முன் வருகிறார்கள்?

ஒரு கல்யாணம் என்றால் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு அண்டாவும் சட்டிகளும் வாங்கிக் கொடுக்கிறார்களே, ஒரு நூறு ரூபாய்க்காவது புத்தகம் வாங்கிக் கொடுக்கின்றவர்களைப் பார்க்கிறோமா? தமிழர்கள் தமது வீட்டை அடுப்பங்கரையாக்கியது போதாதென்று கோயில்களில் மடப்பள்ளிகள் கட்டி, அவற்றையும் அடுப்பங்கரையாக்கி விட்டார்களே! இங்கு வயிறு வளர்ந்துள்ள அளவிற்கு அறிவு வளர்ந்திருக்கிறதா? வயிற்றை வளர்க்க எடுத்துக் கொள்ளும் முயற்சியில் கால் பங்காவது அறிவை-உணர்வை வளர்ப்பதற்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? நாட்டில் அறிவுப் புரட்சியும் கருத்துப் புரட்சியும் ஏற்பட வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் இந்த நாட்டில் வள்ளுவர் தோன்றி வாழ்ந்து இலக்கியம் செய்தார் என்பதற்குரிய அடிச்சுவடு-இலக்கிய மணம் தனி மனித வாழ்க்கையில்-சமுதாயத்தில்-நாட்டில் காணப்படுகிறதா?

நம்முடைய நாட்டில் தத்துவத்திற்கும் கொள்கைக்கும் குறைவில்லை. ஆனால் அவை செய்முறையில் வரவில்லை. கொஞ்சமாகப் படித்தாலும், படித்ததை வாழ்க்கையில் நடை முறைப்படுத்துங்கள்! படிப்புக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கிற இடைவெளியைக் குறையுங்கள். சாப்பிடுவதைக் கடமையாகக் கொள்வது போலப் படிப்பதையும் கடமையாகக் கொள்ளுங்கள்.

இருபது ஆண்டுகட்குமுன் விற்ற கண்ணாடிகளைவிட இன்று ஏராளமான கண்ணாடிகள் விற்பனையாகின்றன. அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து முகத்தை அழகு படுத்திக் கொள்கிறோமே அதுபோல, நாள்தோறும் திருக்குறளில் நமது நெஞ்சைப் பார்த்து, உள்ளத்திலுள்ள மேடு பள்ளங்களைத் திருத்திச் சரி செய்து கொள்ள வேண்டாமா?

மனிதனுக்குத் துன்பமும் தொல்லையும் மற்றவர்களிடமிருந்து வருவதில்லை. அறியாமையின் காரணமாக நம்மிற் பலர் இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில்லை. இதனை, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று புறநானூறு உணர்த்துகிறது.

துன்பம் வரும்போது நாம் அதைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பத்திற்குக் காரணம் என்ன என்று எண்ணிப்பார்க்க வேண்டும். நம்மை ந்ாமே எண்ணிப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை எண்ணிப் பார்த்து நாம் விமர்சனம் செய்து சிரிக்க மறந்து விட்டால், நம்மைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். துன்பம் வரும்போது, அந்தத் துன்பத்திற்குக் காரணம் நமது அறியாமையும் முட்டாள்தனமும்தான் என்று உணர்ந்து சிரிக்க வேண்டும்.

வள்ளுவம், ராஜா ராணியைப் பற்றிப் பாடிய நூல் அல்ல. இங்கு நடமாடுகின்ற சாதாரண சராசரி மனிதனைப் பற்றிச் சராசரி மனிதனுக்காகப் பாடப்பெற்ற வாழ்க்கை நூல் அது.

மனிதன் தனது கடமைகளைச் செவ்வனே செய்வதன் மூலம் கடவுள் வழிபாடு செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும். இன்று உலகெங்கும் வாழ்கின்ற 300 கோடி மக்களில் 10-ல் ஒரு பகுதியினர் சோற்றுக்கின்றித் துன்பப்படுகிறார்கள் என்றால், மனித சமுதாயத்திற்கே இது ஒரு அறை கூவல் இல்லையா? மனிதன் உழைப்பு உடையவனாக-உலையாத முயற்சியுடையவனாக இருந்து மனித சமுதாயத்தை வாழ்வித்து வாழவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுள்ளம்.

தேவலோகத்திற்குப் போய்த் தெய்வத்தைத் தேடுவதை விட உன்னையே நீ தெய்வமாக்கிக் கொள்ளலாம் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதற்கு உண்டால் மட்டும் போதாது-வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்., கை கால்களும், தலையும், உடலும் இருப்பதால் மட்டும் ஒருவன் மனிதனாகி விடுவதில்லை. மனிதனுக்குரிய மனச்சாட்சியோடு வாழ்பவன்தான் மனிதன். இதை நன்றாகப் புரிந்து கொண்டுதான் ‘வாழ்வாங்கு வாழு’ என்று பேசினார் திருவள்ளுவர்.

மனிதன் எண்னக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே திருவள்ளுவர் செய்த முதற் புரட்சி. ‘எண்ணிய எண்ணியாங் கெய்துப’ என்றார். கிறித்தவ மதத்தலைவர்கள் மனித சமுதாயத்தை எண்ணிச் சிந்தித்து, அந்த மனித சமுதாயத்தின் நல்வாழ்வில் அக்கறை கொண்டதுபோல இங்குப் பல இலட்சக்கணக்கான வெண்பொற்காசுகளையும் ஆயிரக்கணக்கான வேலி நிலங்களையும் வைத்துக் கொண்டிருக்கிற நமது சைவ சமயத் தலைவர்கள்-காவி வேட்டி ஜமீன்தார்கள் மக்களைப் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை.

அகமும் புறமும் ஒத்த வாழ்க்கை தேவை மனத்தது மாசாகக் கூடாது. மன மாசைக் கழுவித் தூய்மைப் படுத்தத்தான் வழிபாடு, கடவுள், மத நம்பிக்கை எல்லாம். இன்றோ, குளம் சாக்கடையாக மாறியதுபோல மதம், கடவுள் நம்பிக்கை யாவும் வெறும் சடங்குகளால் நிறைந்து விட்டன.

தமிழகத்துத் திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம் முதலியவற்றை ஓதி வழிபட வேண்டும் என்று நான் கூறியபோது, பலர் என்னைக் கருப்புச் சட்டை என்று கூறினார்கள். எனக்கு மொழி, இன சாதி வேறுபாடுகள் கிடையாது. வழிபாடு என்ற குளத்தில் மனம் குளிக்க வேண்டும்; அதன் மூலம் மனவெப்பம் கழிய வேண்டும். இந்த மனோதத்துவ அடிப்படையில்தான் நான் தாய்மொழியில் வழிபாடு செய்யவேண்டும் என்று கூறினேன். நமது குறைகளைச் சொல்லி அழுது, மனம் திருந்த நமக்குக் கிடைத்திருக்கிற ஒரே இடம் கோயில்தானே! மனிதன் கைகால்களால்-வாயால் தூய்மையாக இருந்துவிட முடியும். அது எளிது; மனத்தால் தூய்மையாக இருப்பதுதான் அரிது. மனிதன், மனத்தை அடக்கியாளக் கற்றுக்கொண்டால் - அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் அவன் உயர்நிலை எய்துகிறான். எனவேதான் திருவள்ளுவர் மனப்புரட்சி செய்தார்.

அன்று, பாண்டிய மன்னன் ஒருவனின் உயிர்நிலை அரச நீதியில் தங்கியிருந்தது. பாண்டியன் மாண்டான்-அவன் பத்தினியும் மடிந்தாள். அவள் உயிர்நிலை கற்பிலே தங்கி இருந்தது.

இன்று பலர் உயிர்நிலை பணத்திலேதான் தங்கியிருக்கிறது. உயிர்நிலையை அன்பில் வைத்திரு என்கிறார். அது மட்டுமா? அன்பைப் பார்க்க முடியும் என்றும் அவர் கூறுகிறார். இன்னொருவர்க்கு உற்ற துன்பத்தைக்கண்டு, இரங்கி வருந்தி அழும்போது சிந்துகின்ற கண்ணீர் அன்பைக் காட்டிவிடும் என்கிறார்.

மூச்சுக் காற்றும், சோறும், தண்ணீரும்போல இந்த நாட்டு மக்களுக்கு வள்ளுவம் இன்றியமையாததாகும். அது நாம் நாள்தோறும் உண்ண வேண்டிய கருத்துணவு. அதை உண்டால் மட்டும் போதாது; சீரணித்துக் கொள்ள வேண்டும்.

கவிதையைப் பாராட்டுவதின் மூலம் அதைப் பாடிய கவிஞனைத் திருப்திப்படுத்துவதுபோல, ஓவியனைத் திருப்திப்படுத்த முடியும் என்பதே எனது இலட்சியம். இதுதான் அருள் நெறிக் கொள்கை. வள்ளுவத்தின் வழி வாழ்ந்து, இந்த வையகத்தில் வாழுகின்ற எல்லா மக்கட்கும் சோறும் துணியும் தருவதன்மூலம் மண்ணகத்தை விண்ணகமாக்கி, இறைவனை மீண்டும் இங்கே கொணர்வோமாக!

6. மானிடச் சந்தையில்

மானிடச் சந்தையில் பல்வேறுவிதமான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்; கோவலன் இருந்திருக்கிறான்; இராமன் இருந்திருக்கிறான்; இராவணனும் இருந்திருக்கிறான். மானிடச் சந்தையில் இணைத்துக் கட்டப்படாமலேயே மனிதர்கள் கூடிநிற்பார்கள்.

மனிதன் எதையும் எண்ணிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; அந்த எண்ணத்தின் வழியாக-சிந்தனையின் வழியாக பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டும்; நமது பழந்தமிழர்கள் எதையும் எண்ணித்துணிவார்கள்; துணிந்த பின் எண்ணமாட்டார்கள். அதுமட்டுமல்ல துணிந்தபின் எண்ணுவது இழுக்கு என்றுகூடக் கருதுவார்கள். எனவே, அவர்களது அகத்துறையிலும் புறத்துறையிலும் தகுதி இருந்தது, தரம் இருந்தது. இன்று, எண்ணிச் சிந்திப்பதற்கு அக்கறை குறைந்து விட்டது. கேள்விக்குச் சரியான விடையிறுப்பதென்பதும் அரிதாகிவிட்டது.

தமிழர்களில் பலர் நேற்று நேற்று என்றே கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்; நேற்றைய நிகழ்ச்சிகளைக் கனவு கண்டு கொண்டிருப்பதால் எத்தகைய உருப்படியான பயனும் ஏற்படப் போவதில்லை-நாளை நாளை என்று கனவு கண்டாலாவது இன்றில்லா விட்டாலும் நாளை, நாளை இல்லா விட்டாலும் நாளை மறுநாள் விடிவெள்ளி முளைக்கலாம்.

மனிதன் எண்ணுபவனாக எண்ணித் துணிபவனாக ஆளுபவனாக-ஆளப்படும் நேரத்தில் உறுதியுடையவனாக இருப்பது மானிடச் சந்தைக்கு இன்றியமையாத பண்பாகும்.

'மனிதர்கள் இயற்கையில் மிக நல்லவர்கள்: சமுதாயத்தால் கெடுகிறார்கள்’ என்பது காந்தியடிகளின் கருத்து. மாக்ஸ் வெல்லியன் கருத்து இதற்கு முற்றிலும் மாறானது. 'மனிதன் அயோக்கியனாகப் பிறக்கின்றான்; சமுதாயத்திற்குப் பயந்தே நல்லவனாக வாழ முயற்சிக்கிறான்' என்பது மாக்ஸ் வெல்லியின் சித்தாந்தம்.

'மனிதன் ஒளியுடையவன்; ஒளிபடைத்தவன்; ஒளியுடையவனாக வாழ முடியும். ஆனால், அவன் அறிவை வளர்த்துக் கொள்வதில்லை’ என்கிறார் சாக்ரடீஸ். நீண்ட காலமாக மனிதசமுதாயம் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. தந்தையின் அறிவைவிட மகனறிவு தூயதாக இருக்கக்கூடும் என்பதை நம்பவேண்டும். நம்மிலே பலர் யார் சொல்லுகிறார் என்பதைத்தான் பார்ப்போமேயொழிய, என்ன சொல்லுகிறார் என்பதை ஆராய்வதில்லை. எனவேதான்

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்றார் திருவள்ளுவர். ‘பகுத்தறிவால் ஆராய்ந்து பார்' என்றார் சாக்ரடீஸ், ‘ஏன்’ என்று கேட்பது பாவம் என்று கருதிய மானிடச் சந்தையைப் பார்த்து. மனிதன் தன்னைப் பற்றியே எண்ணிச் சிந்தித்து, ‘ஏன்’ என்று கேள்வி கேட்கத் துணிய வேண்டும் என்று கூறினார் சாக்ரடீஸ்.

பொதுவாக, பணத்தோடும் பதவியோடும் தொடர்பு கொண்டவர்களைச் சட்டத்தாலேயே மாற்றமுடியும் என்பது ஒரு சித்தாந்தம். மனிதன் உயர்ந்தவன்; அவனது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் உள் உணர்வுதான். இன்று, மானிடச் சந்தைக்கு வருகிறவர்களிற் பலர் தங்கட்குப் பிடித்தமான வற்றை எடுத்துச் செல்லாமல், பிடிக்காதவற்றைப் பற்றியே பேசிப்பேசி மானிடச் சந்தையைக் கலகக்காடாகவே ஆக்கி வருகிறார்கள். மானிடச் சந்தை கலகக்காடாகவே மாறிக் கொண்டும் வருகிறது. பொதுவாக, இன்று மானிடச் சந்தையிலே 95 விழுக்காடு நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருக்கின்ற 5 விழுக்காட்டினரின் ஆற்றல் எஞ்சிய 95 விழுக்காட்டினரையும் ஆட்டிப் படைக்கிறது. எனவேதான் மானிடச் சந்தையில் நல்லவர்களாக மட்டும் இருப்பது போதாது-நல்லவர்கள் வல்லவர்களாகவும் இருக்க வேண்டுவது இன்றியமையாதது என்று நான் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

கிரேக்க நாட்டின் தலைநகரம்; பல்லாயிரக் கணக்கான மக்கள் நடமாடும் முச்சந்தி. பட்டப்பகல் நேரம் ஒரு பெரியவர் கையிலே தீவட்டியை ஏந்திக்கொண்டு எதையோ தேடிக்கொண்டு வருவது போல வருகிறார்.

‘என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார் ஒருவர். அந்தப் பெரியவர் சாவதானமாக,

'மனிதனைத் தேடுகிறேன்’ என்று பதில் கூறினாராம். இந்தப் பதில் முதலில் நமக்குச் சற்று வியப்பாகவும் புதிராகவும்தான் இருக்கும்.

'விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு

நூல் கற்றாரோ டேனை யவர்'

என்று பேசுகிறார் திருவள்ளுவர். இன்று, மானிடச் சந்தை புறத்தே போர்த்திக்கொண்டு வாழ்கிறதே தவிர, அகப்போர்வையை இழந்துவிட்டது. இந்த நிலைமையால் மானிடச் சந்தை அழுகிப்போனது போலத் தோற்றம் அளிக்கிறது. இன்றைய மனிதன் வெள்ளத்தை விலங்கை பேயை பெருந்துன்பந்தரும் நோயைக் கண்டுகூட அஞ்சவில்லை. தன்னையொத்த மனிதனைக் கண்டே அஞ்சும் நிலைக்கு வந்துவிட்டான். அவ்வளவு தூரத்திற்கு வாழ்க்கைப் போக்கு நசித்திருக்கிறது. ஆணவமும், ஆதிக்க சக்தியும் மனிதனைப் பிடித்து ஆட்டுகின்றன. மனிதன் இவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டாமா? மற்றவர்களையும் மகிழவைக்க வேண்டாமா? மானிடச் சந்தையின் தரம் உயர வேண்டுமானால், சிந்தனையால்-செயலால் இன்ன பிறவற்றால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்; கருத்து வேற்றுமைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் வேற்றுமைகளை உள்ளடக்கி விழுமிய ஒருமைப்பாட்டைக் காண வேண்டும். கருத்து வேற்றுமைகளால் புதிய காட்சிகளைத் தோற்றுவிக்கக் கூடாது. எறும்பு, தேனீ, கறையான் இவற்றைப் போல ஒருமைப்பாட்டோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புரவுக் கொள்கை மானிடச் சந்தைக்கு மிகமிக இன்றியமையாததாகும். மானிடச் சந்தையில் மனிதர்கள் ஒருவரோடொருவர் மனங்கலந்து பழக வேண்டும். புதிய கருத்துக்களையும் புதிய சித்தாந்தங்களையும் கண்டு, அவற்றைச் செழிப்புடையனவாக வளர்க்க வேண்டும். மானிடச் சந்தையைக் கருத்துப் புரட்சியுடையதாக ஆக்க வேண்டும்.

வாழ்க்கையில் போட்டி இன்றியமையாததுதான். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத் தவறு செய்யக்கூடாது. திறந்த வெளியில் திறந்த மனத்தோடு வாழ்ந்து வெற்றிபெற வேண்டும். மானிடச் சந்தையைத் தரம் உடையதாக-தகுதி உடையதாக-நாணயம் உடையதாக ஆக்குங்கள். அன்பும் அறமும் மானிடச் சந்தையில் இடம் பெறுமாறு செய்யுங்கள்!

7. மரபா? சீர்திருத்தமா?

மரபை வலியுறுத்த வந்தவர்கள் மரபு என்பதற்கு என்ன வரையறை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி அவர்களே குறிப்பிடவில்லை. எது மரபு? பொதுவாக நேற்றையச் சீர்திருத்த்ம் இன்று மரபாகி விடுகிறது. இன்றையச் சீர்த்திருத்தம் நாளை மரபாகிவிடும். இது வளரும் உலகத்தின் இயற்கை. இந்தத் திருக்குறள் விழாவை நடத்துகிறவர்கள் நான்கு ஆண்டுகட்கு முன்பு இவ்விழாவை ஆரம்பித்தபோது அது புதுமை. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல் என்று மரபின் வழிச்சேர்த்து வழங்குகிறோம்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று தனிப்பெரும் நூல் செய்த திருவள்ளுவரின் கருத்து இன்று நமக்கு மரபாகி இருக்கிறது. பொதுவாக, பொருளுடைமையில் ஆசையிருப்பதென்பது மரபு. ஆனால், பொருள் வருவதற்குரிய வழியைக் கண்டுபிடி-அவ்வழிப் பொருளைப் பெருக்கு என்ற வள்ளுவர் கருத்து மரபல்ல.

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார். அவர் கடவுள் வாழ்த்தோடு நூலைத், தொடங்கியதாலேயே அது மரபு என்றாகிவிடாது. விவசாயத்துறையில் சீர்திருத்தம் அரசியல் துறையில் சீர்திருத்தம் என்றால், நிலமே இல்லாமலோ அரசியலே இல்லாமலோ சீர்திருத்தம் செய்வதில்லை. நிலம், அரசியல் என்ற அடிப்படையை வைத்துக் கொண்டுதான் காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற திருத்தங்களைச் செய்யவேண்டும். இதைத்தான் வள்ளுவர் செய்திருக்கிறார். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார் என்றாலும், தொல்காப்பியம் குறிப்பிடுவது போல, நால்வகை நிலங்களையும் அந்தந்த நிலங்கட்குரிய தனித்தனி நான்கு கடவுள்களையும் திருக்குறள் பேசவில்லை. திருவள்ளுவர் பொருள் குறிப்பிலே, குணக்குறிப்பிலேதான் கடவுளைக் குறிக்கிறார். நாட்டில் வேறுபாடற்ற-ஒருமித்த கடவுள் உணர்ச்சி வேண்டும் என்று விரும்பி வலியுறுத்தினார். வழிபாடுபற்றி அவர் குறிக்க நேர்ந்தபோதும் வெறும்-ஆரவாரமான சடங்குகளைப் பற்றிப் பேசவில்லை. நினைத்தலையும், சிந்தித்தலையும் அதன் மூலமாகத் தன்னை வழிப்படுத்திக் கொள்ளுதலையுமே வள்ளுவர் குறிக்கிறார். இறைவன் தூய ஒளிபொருந்திய அறிவாக விளங்குபவன் என்ற அடிப்படையை மனத்தகத்தேகொண்டு ‘வாலறிவன்’ என்று பேசுகின்றார் வள்ளுவர். வள்ளுவத்துக்கு முன் எழுந்த நூல்களில் இதனைக் காண முடியுமா?

அடுத்து, பலாப்பழத்தைத் திருத்துவது என்கிறோம். அப்படியானால், பலாப்பழத்தில் உள்ள சுவையற்ற பகுதிகளை உண்ணுதற்கு ஒவ்வாதனவற்றை நீக்கிப் பலாச் சுளையை எடுப்பதுதான். அதுபோல, சீர்திருத்தம் என்றால், நடைமுறைக்கு ஒவ்வாதனவற்றை நீக்கிவிட்டு, நாட்டுக்கும் வாழ்க்கைக்கும், நடைமுறைக்கும் ஏற்றவற்றை ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுதலேயாகும்.

"மரபு நூல்கள்” எனப்படுவன தமிழகத்தின் எல்லையைத் தாண்டவில்லை. ‘முன்னோர் சொல்லைப் பொன்னே போல் போற்றுதும்’ என்பது மரபு. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று வள்ளுவர் பேசுகிறாரே இது சீர்திருத்தமா இல்லையா? ‘சொன்னதை ஆராய்ந்துபார்’ என்பதே சீர்திருத்தம்தானே? எண்ணிய எண்ணியாங்கெய்துப எண்ணியர் திண்ணியார் ஆகப் பெறின்’ என்று கூறுவதன் மூலம், திருவள்ளுவர் எண்ணத்திற்கு வலிமையுண்டு என்று வலியுறுத்துகிறாரே, அது சீர்திருத்தம்தானே? எண்ணினால், எண்ணத்திற்குத் திண்மை ஏற்பட்டால் கை கால்களுக்கு வலிவு வந்துவிடும்; "நீ எண்ணிய எண்ணியங்கு எய்துவாய்?" என்பது சீர்திருத்தம்தானே? திருவள்ளுவர், வாழ்க்கையில் உள்ள மாசுகளை நீக்கி, வையகம் வாழ்வாங்கு வாழவேண்டுமென்று விரும்பித் திருக்குறளைச் செய்தார்; எனவே திருவள்ளுவர் வற்புறுத்தியது சீர்திருத்தமே என்று உறுதியாகக் கூறலாம்.

திருவள்ளுவர்க்கு முன்தோன்றி நூல் செய்த தொல்காப்பியர் நாட்டில் இருந்த நிலைமையை உள்ளவாறு

தி.13. கூறினார். இப்படியிருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறினார். அதுவே சீர்திருத்தம்தான். மேலும் நூல் முறையிலேயே வள்ளுவர்தான் சீர்திருத்தம் செய்தார். திருக்குறளுக்கு முன்பு, ஒழுக்க இயலுக்காக முறையான ஒழுக்க நூல்-நீதி நூல் எதுவும் எழுந்ததில்லை. எனவே, ஒழுக்கம் இயல் கூற முதன் முதல் திருக்குறள் எழுந்ததே சீர்திருத்தம்தான். திருவள்ளுவர் நேரடியாக வந்து உன் வாழ்க்கை வளமுற இன்ன இன்ன கொள்கையைக் கடைப்பிடி என்று கூறுகிறார். அவர் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் குறட்பாக்களை ஆக்கியிருக்கிறார்.

கள்ளுண்ணல், புலால் உண்ணல் ஆகிய தமிழ் மரபை வள்ளுவர் கடுமையாகச் சாடுகிறார்.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

என்கிறார் திருவள்ளுவர். இதிலே, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டல்" என்பது மரபு. அதாவது வேள்வி செய்தல் மரபு, ஆனால், "ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை" என்பது சீர்திருத்தம்.

வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்துக் கற்பைக் காப்பதுதான் இங்கு மரபாக இருந்திருக்கிறது. இதனையே "இற்செறித்தல்" என்று குறித்துள்ளனர், பழம்புலவர்கள். திருவள்ளுவரோ, இந்தச் செயல்முறையை வன்மையாக எதிர்க்கிறார். "சிறைகாக்கும் காப்பு எவன் செயும்?" என்று கேட்கிறார். "நிறை காக்கும் காப்பே தலை" என்று வலியுறுத்துவதன் மூலம் சீர்திருத்தம் செய்கிறார்.

அடுத்து, வாய்மை என்பதற்கு நாட்டில் இருந்த வழக்கு "உள்ளதை உள்ளவாறே சொல்லுதல்" என்பதுதான். வள்ளுவர் இந்த மரபை வலியுறுத்தவில்லை. உள்ளதை உள்ளவாறே சொல்லித் தீமை விளைவிப்பதைவிட, பிறருக்குத் தீமை விளைவிக்காத-நன்மை விளைவிக்கின்ற பொய்யையும் வள்ளுவர் வாய்மையின்பாற் பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார். எனவே, அவர் தீமை விளைவிக்காத சொல்தான் "வாய்மை" என்கிறார். இது சீர்திருத்தமா இல்லையா?

ஈதல், விருந்தோம்பல் முதலிய அடிப்படைப் பண்புகளை மரபை வள்ளுவர் ஒத்துக்கொண்டு, ‘ஒப்புரவறிதல்’ என்ற புதிய-சீர்திருத்த்தைச் சொல்லி, அதன்மூலம் தலைசிறந்த மனிதப்பண்பைக் காட்டுகிறார். பலரோடு கூடிவாழு-ஒத்ததறிந்து வாழு-ஒத்ததறிதல் என்றால் நமக்கு மட்டும் ஒத்ததறிதல் அல்ல-மற்றவர்களுக்கும் ஒத்ததறிதல் என்பதுதான். இந்த ஒப்புரவுப் பண்பு உலகப் பேரிலக்கியங்களால் மிகமிகப் பாராட்டப்படக்கூடிய பண்பு. அது உலகந்தழுவிய வாழ்க்கையையே குறிக்கும்.

பெண்ணின் கடமைபற்றிப் பேசப் புகுந்த வள்ளுவர்,

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை"

என்று பேசுகிறார். வள்ளுவர் காலத்தில் குடும்ப மகளிரிடம் தெய்வம் தொழுகின்ற உணர்ச்சி மிக்கோங்கி வளர்ந்து, குடும்பப் பொறுப்புக்களில் அக்கறை குறைந்து குடும்ப நலன்கள் பாதிக்கப்படுகிற ஒரு நிலை இருந்திருக்க வேண்டும். அந்நிலையை மாற்றியமைத்துக் குடும்பம் பெண்களுக்கு அவர்களின் கடமையை உணர்த்தவும், குடும்ப நலன்கள் பாதிக்கப்படாமல் காக்கவும் விரும்பியே வள்ளுவர் ‘கொழுநனே தெய்வம்' என்ற சீர்திருத்தத்தை உண்டாக்கினார் என்று கூறலாம் அல்லவா?

அடுத்து,

"தேவர் அனையர் கயவர் அவரும்

மேவன செய்தொழுக லான்”

என்ற குறட்பாவில் திருவள்ளுவர் தேவர் என்ற மரபை ஒத்துக்கொண்டு, மனப்போக்குப்படிச் செயல் செய்கிறவர்களைக் கயவர்களாக்கி, அவர்களைத் தேவர்களோடு ஒப்பிட்டுப் பேசியது சீர்திருத்தம். ஊழ் மரபு, அதனை வள்ளுவர் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் மரபுக்கட்சியினர். ஊழை எந்த அளவில் வள்ளுவர் ஒத்துக்கொண்டிருக்கிறார்?

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்"

என்று வள்ளுவர் கூறுகிறார். இதிலும் ‘முந்துறும்’ என்கிறாரே தவிர ‘ஊழே வெல்லும்’ என்ற உறுதிப்பாட்டை அவர் உணர்த்தவில்லை. மேலும்,

'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்'

என்ற குறட்பா மூலம், தளர்வுறாமல் முயற்சி செய்தால் ஊழையும் வென்றுவிட முடியும் என்று எடுத்துக் கூறுகிறார். ஊழ் என்ற மரபை ஒத்துக்கொண்டு, தளராத முயற்சியால் அதை வென்று விடலாம் என்ற சீர்திருத்தக் கருத்தையே வள்ளுவர் வற்புறுத்தியிருக்கிறார். நிலத்தையும், வீட்டையும் வைத்துக்கொண்டு தேவையான திருத்தங்களைச் செய்வது தான் சீர்திருத்தம். இதைத்தான் திருவள்ளுவர் செய்தார்.

8. வான்புகழ் வள்ளுவன்

தேசீயக் கவிஞன் பாரதி. பல இலக்கிய மேதைகளைப் பாராட்டித் தமது கவிதைகளில் புகழ்மாலை சூட்டியுள்ளார். பலரைப் பாராட்டியிருந்தாலும் திருவள்ளுவரைப் பாரதி பாராட்டிய முறை தனிச்சிறப்புடையது. பாரதி, திருவள்ளுவருக்குச் சூட்டிய புகழ்மாலை. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு" என்பது. பாரதி தமிழ் நாட்டையே பாராட்டுகிறான். காரணம் திருவள்ளுவரை ஈன்று அவர் வழி உலகு திருக்குறளைப் பெறக் காரணமாக இருந்ததுதான். உலக அரங்கில் ஒரு கவிஞரால் நாடு உலகப் புகழ் பெறுதல் என்பது அருமையிலும் அருமை. திருவள்ளுவர் உலகு புகழ் கவிஞர். இவர் அருளிய திருக்குறள் உலகப் பொதுமறை. அதனாலன்றோ பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து” என்று மனங்குளிரப் பாடுகின்றார். திருவள்ளுவரைப் பெற்றமையால் தமிழ்நாடு பெற்றபுகழ் வான்புகழ். வான்புகழ் என்றால் இலக்கண மரபுப்படி மிகச் சிறந்த புகழ் என்று பொருள் கூறுவர். எனினும், நிலமனைத்தும் வானால் சூழப்பெற்றுள்ளது. வான் புகழ் என்றால், வானகம் பரவியுள்ள நிலவுலகமனைத்திலும் நின்று நிலவும் புகழ் என்றும் கொள்ளலாம். மேலும், வானுலகம் போற்றும் புகழ் என்றும் பொருள் கொள்ளலாம். இத்தகு சிறந்த புகழ் திருக்குறளுக்கு எப்படி வந்தது?

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, திருக்குறள் தோன்றயது. திருக்குறள் தோன்றிய ஆண்டிலும் அதற்கு முன்பும் உலக மொழிகளில் திருக்குறள் போன்ற சிறந்த நூல் ஒன்றும் தோன்றவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதி, இன, மொழி, சமய வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொது நூல், காணும் ஆற்றல் தமிழகத்திற்கே இருந்தது. உலகில் மக்களாகப் பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் இத்தகையதொரு நூல், திருக்குறள் தோன்றுவதற்கு முன்பு தோன்றியதில்லை. ஏன்? அதற்குப் பின்பும் இதுவரையிலும் கூட திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் தோன்றவில்லை.

நூல் தோன்றிய காலத்தின் தொன்மைமட்டும் நூலின் சிறப்புக்கு முற்றிலும் காரணமாகமாட்டா. நூல் நுதலும் கருத்துக்களும், சிறப்புடையனவாக இருத்தல் வேண்டும். இரட்டுற மொழிதலும், மயக்க நிலையின் பாற்பட்டனவும் கூட இல்லாமையும் வேண்டும். திருக்குறளில் இரட்டுற மொழிதலும், பயனில் சொற் கூறுதலும், ஒழுக்கக் கேடுகள் எனக் குறிப்பிடப் பெறுகின்றது. திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தல் மிகவும் எளிதேயாகும். திருக்குறள் வாழ்க்கை முறையை திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி முறைகளை ஏற்றுக் கொள்ளுதல் சாத்தியமான ஒன்றேயாகும்! திருக்குறள் கூறும் ஒழுக்க நெறிகள் கால எல்லைகளுக்குக் கட்டுப்பட்டனவல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காட்டிய நெறிமுறைகளே யாயினும் இன்னும் கடைப்பிடிக்கக்கூடியனவாக உள்ளன. மேலும், திருக்குறள் ஒழுக்க நெறிகள், சாதி, இனம், பால், சமயம், மொழி, பருவம் ஆகியனவற்றால் மாறுபடக் கூடியனவல்ல. ஒரே மாதிரி ஒழுக்க நெறியை எடுத்துக் கூறப் பெற்றுள்ளது. திருக்குறள் ஒழுக்க நெறி உலகப் பொதுநெறி. மனிதகுலத்தின் வாழ்க்கை நெறி.

திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் கற்பனையில் தோன்றியனவல்ல. நடைமுறைப்படுத்த முடியாத அளவு அருமையுடையனவல்ல. மிகமிக எள்ளிய ஒழுக்க நெறிகளேயாம். உலகியலுக்கும், உடலியலுக்கும், உயிரியலுக்கும், மாறுபட்ட எந்த ஒன்றையும் திருவள்ளுவர் ஒழுக்க நெறியாக வலியுறுத்தவில்லை. திருக்குறள் ஒழுக்க நெறிகளை நடை முறைப்படுத்த முடியவில்லை என்றால், மனிதர்களின் தரம் வீழ்ந்திருக்கிறது என்பது கருத்தேயொழிய அது வலியுறுத்தும் நெறி கடுமையானதல்ல. மேலும், திருக்குறள் ஒழுக்க நெறிகளை எடுத்துக்காட்டும் பொழுதும் இயைந்தவாறு காட்டுவதானால், சிறந்து விளங்குகிறது. நடைமுறைப்படுத்த முடியாத ஒழுக்க நெறிகள் எந்த ஒன்றினையும் திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தவும் இல்லை. அதனாலும் திருக்குறளின் புகழ் சிறந்து விளங்குகிறது. மேலும், ஒழுக்க நெறிகளைக் காட்டும்பொழுதும் இயைந்தவாறு, ஒன்றுக்கொன்று தொடர்பாக முறைப் படுத்திக் கூறியிருப்பது அறிந்தின்புறத்தக்கது. அதுமட்டுமல்ல, உலகியலில் நோய்பற்றிக் கூறுவோர் பலருண்டு. நோயாளி கூட கூறிவிடுவான். ஆனால் நோயின் காரணத்தைக் கண்டறிந்து சொல்லுபவர் இல்லை. அப்படியே ஒரு சிலர் கண்டறிந்து சொன்னாலும் நோய் நீக்கத்திற்குரிய மருந்தினைத் தெளிவாக, அறிவியல் அடிப்படையில் காட்டுவதில்லை. திருவள்ளுவர் நோய் கண்டு காட்டினார். நோயின் காரணத்தையும் கண்டு காட்டினார். நோய் நீக்கத்திற்குரிய வழிமுறைகளையும் கண்டு காட்டினார். ஐயந்திரிபரக் காட்டி யுள்ளார். மனிதன் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறான். இதற்குக் காரணம் அவனுடைய மனமே. மனத்தில் தூய்மை இருந்தால் அதுவே அறம்-பேரறம், மருவுலகில் பல்வேறு அறங்களைச் செய்வதைவிட மனத் தூய்மையைப் போற்றி வளர்த்தால் சிறந்த அறம் என்று குறிப்பிடுகின்றார். அதுமட்டுமின்றி மனத்துாய்மையின்றிச் செய்யப்பெறும் வேறு பல அறங்களை வெறும் ஆரவாரத்தன்மையன என்றும் மறைமுகமாகக் கண்டிக்கின்றார். இந்த மனத்தூய்மையை அறிவாலும், அன்பினாலும் பெறமுடியும் என்று திருக்குறள் வழி காட்டுகின்றது.

திருக்குறள் ஓர் அறிவுநூல். நம்பிக்கையின் அடிப்படையில் திருவள்ளுவர் எந்த ஒன்றையும் வற்புறுத்தவில்லை. கடவுள் வழிபாட்டதிகாரத்திலும்கூட உலக இயக்கத்தின் பாற்பட்ட அறிவுணர்வின் அடிப்படையிலேயே திருக்குறள் கடவுள் வாழ்த்து தோன்றியுள்ளது. திருக்குறள் காட்டும் அறிவு வெறும் நூலறிவு அல்ல. ஆனாலும், கற்றல் கேட்டலின் மூலம் பெறும் அறிவைத் திருக்குறள் மறுக்கவில்லை. திருக்குறள் அறிவு என்று இறுதியாக எடுத்துக்கொள்வது. வாழ்க்கையின் அனுபவத்தையொட்டிய உணர்வுகளேயாகும். தீமையினின்றும் விலகி நன்மையின்பால் செலுத்துகின்ற அறிவையே அறிவு என்று திருக்குறள் போற்றுகின்றது. தீமைகளுக்குப் பிறப்பிடமாகிய அன்பின்மையை திருக்குறள் கண்டிக்கிறது. ஏன்? அறிவின் பயனே அன்பு காட்டுதல். அன்பினால் வளர்தலும் வளர்த்தலுமே அறிவினது ஆக்கம் என்று திருக்குறள் பேசுகின்றது.

"சென்றவிடத்துச் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு."

"அறிவினால் ஆகுவதுண்டோ பிரிதின் நோய்

தன்னோய்போல் போற்றாக் கடை"

என்ற குறட்பாக்கள் நினைந்தின்புறத்தக்கன. தமிழக சமய நெறி இவ்விரு சிந்தனைகளின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தது. "நன்றின்பால் உய்ப்பது அறிவு" என்ற திருக்குறள் அடியின் "நன்றுடையானை தீயதிலானை' என்ற திருஞான சம்பந்தர் அருள்வாக்கு ஒப்புநோக்கி உணரத்தக்கது. "அறிவினால் ஆகுவதுண்டோ" என்ற திருக்குறளும் "அன்பே சிவம்" என்ற திருமூலர் வாக்கும் ஒப்புநோக்கி இன்புறத்தக்கன. இன்றைய தமிழர் சமய வாழ்வில் இந்த அன்பும், நன்றும் மீதுர்ந்து வளரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. திருக்குறள் ஓர் அறிவு நூல். முழுதுரிழ் அறநூல். உலகப் பொதுமறை. நேற்றும் இன்றும் என்றும் வாழ்க்கைக்குப் பயன்படும் பொதுமறை. அதன் புகழ் வான்புகழ்.

3

முத்துமொழிகள்

* * *

1. வள்ளுவரின் நகைச்சுவை

உயிரினம் இன்பத்தை நாடி ஏங்குகிறது. பெரும் சிற்றின்பங்களை அனுபவித்து இன்பப்படுவதில் நிறைவு பெறுகின்றது. இன்பம் என்று கருதி அனுபவிக்கும் சிலவற்றால் துன்பம் நேரிடுவதுமுண்டு. எதிர்வரும் துன்பத்தைப்பற்றி எண்ணிப் பார்க்க உயிரினங்கள் நினைப்பதில்லை. எண்ணாமல் செயல் நடைபெறுகின்றது. சிற்றின்ப வேட்கை பெருந்துயரில் கொண்டு போய் நிறுத்துகின்றது. மனிதன் மற்றெல்லா உயிரினங்களிலும் பார்க்க உயர்ந்தவனாக மதிக்கப்படுகிறான். உடைமையைப் பொறுத்தே உணர்ச்சியுள்ளது. பணப்பெருக்குடையவர்களும், கல்விச் சிறப்புடையவர்களும் செல்வாக்குச் சிறப்புடையவர்களும் பதவியுயர்வுடையவர்களும் உயர்த்திப் பேசப்படுவதை நாம் உலகியலில் காணமுடிகிறது.

பொதுவாக-மனித இனம் சிறப்பாக மதிக்கப்படுவதற்கு அதன் சிந்தனா சக்திதான் காரணம். பகுத்தறிந்து, பண்புடன் வாழத் தெரிந்த இனம் மனிதஇனம். தீயதை விலக்கி நல்லதை நாடி-அறத்தைப் போற்றி-மறத்தைக் கடிந்து- அன்பை நாடி-பண்பை அழித்து-அறிவைப் பேணி மடமையை அழித்து- துன்பம் நீக்கி-இன்பமளித்து வாழ மனிதனுக்கு நெறி காட்டுவது அவனது சிந்தனைச் சிறப்புத்தான்.

சிந்தனைச் சிறப்புமிக்க மனித குலத்தில் பண்டு முதலே கற்றோரும்-மற்றோரும் போற்றுமளவுக்கு வாழ்ந்து, வாழ்க்கை நெறிகண்ட இனம் நமது தமிழினம். மனிதன் கண்ட கண்டபடி புலனைச் செலுத்திச் சீரழிந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்வைப் பற்றிச் சிந்தித்துச் சிறப்பு மிகுந்த தத்துவங்களை வாரி வழங்கிய இனம் தமிழினம். காலத்தாலும் கருத்தாலும் மூத்த உலக வரலாற்றில் தனக்கென ஒர் இடத்தைப் புனிதமான ஒரு நிலையைப் பெற்ற பெரும்பேறு நமக்கு உண்டு. ஆனால் இத்தகு தகைமையை நினைந்து இறும்பூ தடைவதில் காலத்தைப் போக்கியதாலே தான் இன்றுள்ள இழிநிலை நமக்கு வந்துள்ளது. முந்தையத் தமிழன் வாழ்க்கையைப்பற்றிச் சிந்தித்தான்; இன்றுள்ள நாம் வாழச் சிந்திக்கின்றோம். எப்படியாவது வாழ்ந்து இந்த வாழ்க்கையை முடித்து விடுவோம் என்று நினைக்கிறோமே தவிர எப்படி வாழவேண்டும் என்று நினைக்கின்றோமில்லை. குறிக்கோள்களோடும், கொள்கைகளோடும் வாழ்வை வரையறுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ எண்ணுகிறோம், இல்லை, இவ்வாறு எண்ணிய இனத்தின் வழித்தோன்றல்கள் - எப்படி யாவது வாழ-எண்ணாது வாழ முனைவது வருத்தத்தைத் தருகிறது. எண்ணிச் சிந்தித்து வாழும் சமுதாயத்தை உருவாக்க அவாவுறவேண்டும். நமது மொழிவழி வந்த நாகரிகத்தைப் பேணிக்காக்க விரும்புதல் வேண்டும். பேரின்ப நிலைபெற உழைக்கும் உயர்ந்த உள்ளங்களை உருவாக்க வேண்டும். எங்கும் எல்லா உயிர்களிடத்தும் எப்போதும் அன்பு செலுத்தி, அறத்தால் வருவதே இன்பம் என்று கருதி அருள் வாழ்வு வாழவேண்டும்.

எங்கும் அன்பைச் செலுத்த மனத்திற்குப் பக்குவம் வேண்டும். மனோபக்குவம் இல்லாது அன்பை செலுத்துவதென்பது முடியாத காரியம். அப்படி அன்பு செலுத்துவதாக இருந்தாலும் அது வெறும் நடிப்பாகவே முடியும். நிறைந்த நடிப்பு வாழ்க்கை வாழ்வதிலும் குறைந்த நல்ல வாழ்க்கை வாழ்வது சிறப்பு. மனத்தைப் பக்குவப்படுத்துவதற்கு மனத்தில் உள்ள குழப்பங்கள் குறையவேண்டும். சினம், பொறாமை, பொச்சரிப்பு, சந்தேகம், சபலம் முதலியன நீங்கத் தொடங்கினால் மனோபக்குவத்திற்கு வேண்டிய அடித்தளம் அரும்ப ஆரம்பிக்கும். மனோபக்குவ அடித்தளத்தைப் பெற ஒரேயொரு வழிதான் உண்டு-அதுவே வழிபாடு. வழிபாடு மனத்தை நல்வழியில் ஆற்றுப்படுத்த எழுந்த சாதனம். இலட்சியமற்று இங்குமங்கும் அலைந் தலைந்து அல்லலுறும் ஆன்மாவை உருக்கிக் கசியவைத்து நன்னெறிப்படவைக்கும் பேராற்றல் வழிபாட்டிற்குண்டு.

இறைவழிபாடு இன்பங்கள் எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை-பேரின்பத்தை நல்குகின்றது. கவலை தோய்ந்த கருத்தைக் களிப்படைய வைக்கிறது. பைத்திய நிலையைப் பக்குவப்படுத்திப் பயனடையச் செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சிரித்துவாழவும்-கொடுத்து மகிழவும் போதிக்கிறது. சிரிப்பதற்காக மனிதன் பலதுறைகளை நாடியோடித் திரிகிறான். நாடகத்திலும் திரைப்படத்திலும் கால்கடுக்க நின்று ஒன்றேகால் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிச் சிரிப்பை அனுபவிக்கிறான். சினிமாவிலே டணால் தங்கவேலுவின் சிரிப்பை, இராதாவின் சிரிப்பைக் கண்டு ஆனந்திக்க மழையிலும் வெய்யிலிலும் நின்று உழல்பவர்கள் எத்தனைப் பேர்! காசில்லாமல்-செலவில்லாமல் கருத்தைக் கனிய வைத்துச் சிரிப்பிலாழ்த்திப் பேரின்பத்தை நல்கும் வழிபாட்டு நெறியினைப் பின்பற்ற மனிதராகிய நாம் நினைக்க வேண்டும்.

உலகியலிலே சிரிப்பதற்கு எவ்வளவோ நிகழ்ச்சிகள் உண்டு. நாள்தோறும் நடைபெறும் சம்பவங்கள் நம்மைக் கைகொட்டி நகையாட வைக்கின்றன. நம்மிற் சிலர் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கத் தெரியாதிருக்கிறோம். தலைசிறந்த தத்துவப் பேராசிரியர்கள் உலகவாழ்க்கையிலிருந்தே சிரிப்புக்கிடமானவைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் காட்டிய சிரிப்புக்கிடமான நிகழ்ச்சிகள் சிந்தனைக்கும் விருந்தளிக்கின்றன். வாழ்வைப் பார்த்து-வாழ்க்கையைப் பார்த்துச் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை ஒரு தத்துவக் குயில். அவரொரு நிகழ்ச்சியை நமக்குக் காட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்வதைப் பாருங்கள்.

ஒரு கடைவீதியிலே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கிறான். தேநீர்க்கடை ஒன்று குறுக்கிடுகிறது. வைத்திருந்த பணத்துக்கு ஏதோ பலகாரம் வாங்குகிறான். வழிநெடுக அதைக் கொறித்துத் தின்று கொண்டே போகிறான். இடையில் வள்ளுவர் எதிர்ப்படுகிறார். அவர் அவனை மறித்து "தம்பீ! உனக்கு உயிர் இருக்கிறதா?” என்று கேட்டார். அவன் திகைத்து - வெலவெலத்து - வேர்த்துக் கொட்ட விழித்தபடி நின்றான். சற்று நேரம் பொறுத்து "என்ன ஐயா கேள்வி இது? நான் நடக்கிறேன், மூச்சு விடுகிறேன். முறுக்குத் தின்கிறேன் என்னைப் பார்த்து - உனக்கு உயிர் உண்டா? என்று கேட்கிறீர்களே" என்றான். "சரியப்பா, நீ அந்தக் கடையிலே முறுக்கு வாங்கியபொழுது, இரண்டு வேளையாகச் சாப்பிடாமல் வாடிய வதங்கிய நிலையில் நின்றானே ஒரு ஏழை! நின்றதோடல்லாமல் பசிக்கிறது என்று கெஞ்சிக்கேட்டானே! நீ வைத்திருந்த முறுக்கில் பாதித் துண்டையாவது அவனுக்குக் கொடுத் திருக்கக்கூடாதா? நீ அப்படிக் கொடுக்காது வந்ததுதான் என்னைச் சந்தேகிக்க வைத்தது" என்றார் வள்ளுவர். இதிலுள்ள நகைச்சுவையையும் பகுத்துண்டு பல்லுயி ரோம்பும் பண்பையும் நாம் நினைத்துச் சிரிப்பதோடு சிந்திக்கவும் வேண்டும்.

நமது சிந்தனை அருளார்ந்த சிந்தனையாக-அன்புவழிச் சிந்தனையாக மிளிர வேண்டும். அப்பொழுதுதான் நமது அகத்திலேயுள்ள ஆத்திரம் கொதிப்புப் போன்றவை அடங்கி-ஆன்மீக வாழ்வு பெற வழி ஏற்படும். அகத்தின் ஆத்திரமும், பொறாமை, எரிச்சல் போன்ற தீய உணர்வுகளும் களையப்பட வேண்டும். உலையிலே வெந்து கொண்டிருக்கும் அரிசி பொங்கினால், ஒரு கரண்டி மூலம் கிண்டிக் கிளறிவிட்டால் அவ்வரிசி நன்றாக நின்று வேகும். இன்றேல் அரிசி வேகஉதவும் நீர் வெளியாவதோடு, சோறாக்க உதவிய நெருப்பையும் அவித்துவிடும். அதேபோல மனிதனின் ஆத்திர உணர்ச்சி பொங்கி வராதபடி தடுக்கப்படல் வேண்டும். இன்றேல் ஆத்திரத்தால் அறிவு மங்க-செயலாற்றத் தகுந்த ஆற்றலும் அழிந்து-காரிய சாதனைக்குரிய அடிப் படைச் சூழலும் கெட்டுவிடும்.

ஆகவே! இனங்களில் உயர்ந்து சிறந்து போற்று தலுக்குள்ளாகி யிருக்கும் மனித இனம் எண்ணிச் சிந்தித்து அருளார்ந்த வாழ்வுவாழ வேட்கைகொள்ள வேண்டும். அன்பு வாழ்வுக்கும் அறவாழ்வுக்கும் வழி வகுத்துத் தர வழிபாடு சாலச் சிறந்தது. வழிபாட்டின் மூலம் அமைதியையும் பேரின்பப் பேற்றையும் பெற்று மனிதரில் மாணிக்கங்களாகத் திகழ முடியும். உலக உத்தமர் காந்தியடிகள் கூட வழிபாட்டினாலும் வழிபாட்டை ஒட்டிய சிந்தனைகளினாலும் சிறப்புற்றார்.

உலகியலில் சிந்தனைக்கு வித்திடக்கூடிய சிரிப்பை அனுபவித்து ஆன்ம நேயத் தொண்டுகளைச் செய்ய முனைய வேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு நம் தமிழினத்துக்குப் பழமையானது-அது தொன்றுதொட்டு வழிவழிவந்த ஒரு தன்னிகரற்ற தத்துவம். அந்தத் தத்துவத்துக்கு மதிப்பளித்து - என்றும் அன்பாய் வாழ வேண்டும்.

4

திருவள்ளுவர் காட்டும் அரசியல்

* * *

1. திருக்குறட் கொள்கை

தமிழின் சிறப்பு

தமிழ் காலத்தால் மூத்தது; கருத்தாலும் மூத்தது, தமிழ் வாழ்க்கையோடு இயைந்து வளர்ந்த மொழி. வாழ்க்கையை வளர்த்த மொழி. தமிழினம் உலகின் வரலாற்றுக் காலந்தொட்டே சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து வந்திருக்கிறது. தமிழினத்தின் கருத்துக்கள் நம்பிக்கை, நல்வாழ்க்கை இவைகளுக்கு இயைபுற அமைந்தன. வரட்சித்தன்மையுடைய கற்பனைகளோ, இசைவான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டவைகளோ, தன்னிச்சையான மனப் போக்குகளின் படைப்புகளோ தமிழில் இல்லை.

தமிழ், மொழியாக மட்டும் வளரவில்லை. நாகரிகம், பண்பாடு, சமயம் ஆகியவற்றையும் தழுவி வளர்ந்திருக்கிறது. தமிழ் வாழ்க்கையை ஏனோ தானோவென்று கணிக்கவில்லை. வாழ்க்கையை வாழ்க்கையாகவே பார்க்கிறது. ஏன்.? வையத்துள் வாழ்வாங்கு, வாழ்தல் தமிழ்தந்த பாடம். இன்றா? நேற்றா? இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயாம். உலகமொழி என்று பாராட்டப்படுகின்ற ஆங்கிலத்திலும் மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. இந்திய நாட்டின் இணைப்பு மொழியாக செயற்கைக் கோலம் தாங்கும் இந்தியிலும் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. ஏன்? இந்திய நாட்டின் சமயத்திற்குரிய மொழி என்றும், பாசம் ஒன்றின் காரணமாகவே சிலரால் பாராட்டப்பெறும் சமஸ்கிருதத்தில் கூட வாழ்க்கைக்கென்று முறையான இலக்கணமில்லை. தமிழில் எழுத்து, சொல், பொருள் என்ற அமைப்பில் இலக்கணத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் இயற்றித் தந்துள்ளார். தமிழிலக்கிய வழக்கில் பொருள் என்றால் பயன் என்றே கொள்ளப் பெறும். மொழியின் பயன் நல்வாழ்க்கையேயாம். ஆதலால் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் தனிமனிதன், வாழ்க்கைத் துணையுடன் கூடி வாழும் மனையற வாழ்க்கைக்குரிய நெறிமுறைகளை அகத்திணை இயலிலும், அவனே சமுதாயத்துடன் தொடர்பு கொண்டு வாழ்வதற்குரிய நெறிமுறைகளை புறத்திணை இயலிலும் இலக்கணமாக வகுத்துச் செய்துள்ளார். இத்தகு சிறப்புடை மரபில் உலகுபுகழ் திருக்குறள் தோன்றிற்று.

திருக்குறளின் சிறப்பு

திருக்குறள் பயில் தொறும் இன்பந்தரும் நூல். ஒரு முழுதுறழ் அறநூல். இனிய தமிழ், எளிய நடை, மனம் கொளத்தக்க குறுகிய அளவு. இருபொருள் படாத தெளிந்த நடை. ஐயத்தின் நீங்கிய துணிபு, இனம், மொழி, மதம் சார்பற்ற தன்மை, காலவெள்ளத்தில் அழியாத நீதி, ஓரின ஒழுக்கம் பேசாமல் உலக ஒழுக்கம் பேசிய ஒட்பம், வீட்டையும், நாட்டையும் பிணைத்த பெட்பு, இருவகைக் காதலையும் எடுத்துக் காட்டிய இனிய சால்பு. குற்றங் காட்டுதல்-குற்றம் கடிதல், நன்றின்பால் உய்த்தல் ஆகியன நிகழ்த்தும் ஆற்றல், இப்படி எத்தனை எத்தனையோ சிறப்புகள், விரிப்பின் பெருகும்; தொகுப்பின் எஞ்சும்.

திருக்குறள் வளர்க்கும் முறை

தனிமனிதன் குடும்பம் சமூகம் சமுதாயம் உலகு என்ற முறைவைப்பை வரலாற்றுப் போக்கு காட்டுகிறது. இந்த முறைவைப்பின் பல்வேறு படிகளில் உள்ள பாத்திரங்களை முறைப்படி வளர்த்து, ஒன்றுக்கும் பிறிதொன்றுக்கும் இடையில் தொய்வில்லாமல், ஒன்று பிறிதொன்றின் நலனுக்கு இடையூறு இல்லாமல் வளர்த்து வழி நடத்தும் பெருமை திறக்குறளுக்கே உரியது. திருக்குறள் தனிமனிதனை நம்புகிறது; முற்றிலும் முழுதும் நம்புகிறது. அவனே மனித சமுதாயத்தை வரலாற்றை இடையீடின்றி எழுதும் பாத்திரம் என்று நம்புகிறது. அவனை அகத்தாலும் புறத்தாலும் வளர்த்து உறுதிப்படுத்த-நிலைநிறுத்த திருவள்ளுவர் முயற்சி செய்கின்றார்.

சிற்பிக்குச் சிலை வடிப்பதே நோக்கம். உழவனுக்குக் காடுகளைக் கழனியாக்குவதே நோக்கம். திருவள்ளுவருக்கு மனிதனை-மனித சமுதாயத்தை வளர்ப்பதே நோக்கம். திருக்குறளில் இலக்கிய இன்பம் உண்டு கவிதை நலமுண்டு; எதுகை மோனைகள் ஏராளம்; அணியின்பங்கள் ஆயிரமாயிரம். எனினும் இவை யனைத்தும் மனிதனை முழுமைப்படுத்துகின்ற குறிக்கோளுக்குத் துணையேதவிர அவையே மேம்பட்டு விளங்கவில்லை. மனிதனை வளர்க்கும் நோக்கமே திருக்குறளில் நிறைவுற்று வெளிப்பட்டுக் காட்சி அளிக்கிறது. தனிமனிதனைத் தம்நிலை ஒழுக்கத்தில் ஈடுபடுத்தி, வளர்த்து, துணையுடன் கூட்டி, அவ்வழி உலகுடன் இணைத்து, அவ்வழி இறையின்பத்துடன் இணைத்துப் புகழ் உண்டாக்குகிறது.

உயிர்க்குறுதி

தமிழ்மரபு உயிர் உண்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இன்று வரையில் பிறமொழி இலக்கியங்கள் உயிரைப்பற்றித் தெளிவாக விளக்க முடியாமல் அல்லற்படுகின்றன. திருக்குறள் உயிர் உண்மையை ஒத்துக் கொள்கிறது. உயிர் தோற்றமும், அழிவும் இல்லாத நிலையான ஒன்று என்பது திருக்குறள் முடிபு. இதனை “மன் உயிர்" என்னும் சொல்லாட்சியால் உணரலாம், இதனை மேலும் அரண் செய்ய எழுபிறப்பு உண்மை துணை செய்கிறது. அது துன்பத் தொடக்கிலிருந்து விடுதலை பெற்று நல்லின்ப வாழ்க்கை பெறுதற்குறியதென்று காட்டுகிறது. உயிர் அறிவுப் பொருள் என்றும் நம்புகிறது. ஆனால் இயல்பான அறிவன்று. உயிர் அறிவுபெற்று விளங்குதற்குரிய பொருள். அறிவே உயிர்க்கு முதல்துணை என்பது திருக்குறள் முடிபு. அதனால் "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று பேசுகிறது. இந்த அறிவினைப் பெறுதற்குரிய வழி வகைகளையும் ஐயத்திற்கு இடமின்றி அறிவுறுத்தலோடு ஆணையாகவும் கூறுகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

என்பது குறள். இத் திருக்குறள் திறனாய்வுக்குறிய நிறைந்த செய்திகளைக் கொண்டது. உடல் நலமில்லார் மருத்துவரிடம் காட்டுவர். மருத்துவர் உடலினைச் சோதனை செய்து உடலில் நலம் விளைவித்தற்குரிய இன்னின்ன உயிர்ச்சத்துக்கள் இல்லை என்று எடுத்துக் கூறுவர். நலம்பெற விரும்புவோர் தம் உடலில் இல்லாத உயிர்ச்சத்துக்களைப் பெறுதற்குரிய உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் தேடி உண்பர். நலம்பெறும்வரை உண்பர். அதுபோல ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே சில உயிர்க்குறைகள் (குணக்குறைகள்) உண்டு. இந்த உயிர்க்குறைகளை இன்னவை எனத் தெளிந்து அக்குறைகளை நீக்கி நலந்தரக் கூடிய நல்ல நூல்களைக் கற்க வேண்டும். அக்குற்றங்கள் நீங்கி நலம் பெறும் வரை கற்க வேண்டும். இக்கருத்தினைக் “கசடறக் கற்பவை" என்ற சொற்களின் மூலம் விளக்குகின்றார்.

மனிதன் புறத்துறுப்பால் காணப்படுபவன் மட்டுமல்லன் புறத்துறுப்பால் மட்டும் மக்கள் போல் தோற்றம் அளிப்பவர்களை "மக்களே போல்வர்" என்று கிண்டலும் கேலியும் செய்கிறது. இந்த இரு சொற்களில் திருவள்ளுவர் வெளிப்படுத்தும், வேதனை கலந்த போலி மனிதனை விமர்சனம் செய்யும் உணர்வு வால்டேர், இங்கர்சால் போன்றவர்களின் உணர்வைவிட விஞ்சி நிற்கிறது என்பதை மறுக்க முடியாது.

"புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும்?" என்பது திருக்குறளின் வினா. புறத்துறுப்புக்களைப் பொருளுக்கு உரியனவாகவும் புகழுக்குறியனவாகவும் ஆக்குதல் அகத்தியல் வளமையேயாம். உடல் வளத்திற்கு அடிப்படை உணவு, செரித்தல், வலிமை ஆதல்; அகத்தியல் வளத்திற்கு அடிப்படைக் கருத்து அனுபவமும், ஒழுக்கமுமாம்.

அன்புடைமை

அறிவைத் திருவள்ளுவர் கருவியாகவே கருதுகிறார். "அறிவு அற்றங் காக்கும் கருவி" என்பது குறள், அறிவின் உயிர்ப்பும் பயனும் அன்பேயாகும்.

அறிவினா லாகுவ துண்டோ பிறிதின்நோய்

தன்னோய்போல் போற்றாக் கடை

என்பது குறள். திருவள்ளுவர் உயிரை எல்லாவற்றிலும் சிறந்ததாகக் கருதுகிறார். "உயிரினும்" என்று குறிப்பிடுவதே இதற்குச் சான்று. இந்த உயிர் தங்கியிருந்து இயங்குவது உடலிலேயாம். இதனை "உடம்போடுயிரிடை நட்பு" என்று கூறும். ஆயினும் உயிர் அமைப்பாலும் தோற்றத்தாலும் உடம்பிடைத் தங்கி இருந்தாலும் அன்பினில் உயிர் நிலையைப் பொருத்திக் கொள்ளுமாறு வள்ளுவம் வழி நடத்துகிறது. உடலிடை மட்டும் உயிர் தங்கிக் கிடக்க வாழ்தல் விலங்கியல் வாழ்க்கை. அன்பினில், குறிக்கோளில், சால்பில் உயிரை நிறுத்தி வாழ்தல் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாகும்.

அரசியல் நீதியில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனும், தெய்வக் கற்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டிமாதேவியும், இன்ப நட்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பிசிராந்தையாரும், கொடையில் உயிரை நிறுத்தி வாழ்ந்த குமணனும் தமிழன நாகரிகத்தின் காப்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த அப்பரடிகளும் எண்ணத்தக்கவர்கள். ஆதலால், உயிருடைமைக்கும் இன்மைக்கும் அடையாளம் உண்ணலும் ஓடித்திரிதலும் அன்று.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

என்பது திருக்குறள், எலும்பு போர்த்த உடம்பு யாதொன்றிற்கும் பயன்படாது. அதுமட்டுமின்றி நாற்றத்தால் மற்றவர்க்கும் கேடு செய்யும். ஏன்? தோற்றத்தாலேயே கண்டாரை வெருட்டும். அதுபோல அன்பில்லாத மனிதர்களால் அவர்களுக்கும் மனித உலகத்திற்கும் பயனில்லை. பயனில்லாத தோடன்றித் தீமையும் விளைவிக்கும்.

உடைமையியல்

இன்றைய மனித சமுதாயத்தில் உடைமை உணர்வு மிகுதியும் மேலோங்கி நிற்கிறது. அதாவது நிலம், பொன், பொருள் ஆகியவைகளைத் தனிமனிதர்கள் தத்தம் உடைமையாக்கிக் கொள்ளப் போரிடுகின்றனர். வெற்றி பெற்ற பின்பு உழைப்பின் வழி வாழாமல் உடைமைகளையே சார்ந்து வாழத் தலைப்படுகின்றனர். மனிதனுக்கு ஏவல் செய்ய வேண்டியன உடைமைகள். ஆனால் உடைமை களுக்கே மனிதர்கள் அடிமைகளாகி விடுகின்றனர். இங்ஙனம் மனிதகுலத்தின் ஆற்றலை, பண்பை அரித்து அழிக்கும் உடைமைகள் மீது சான்றோர்களுக்கு வெறுப்பு ஏற்படுவது இயற்கை. இந்தவகையில் கார்ல் மாக்ஸ் மாமுனிவரின் சிந்தனை ஏற்றுக்கொள்ளத் தக்கது. பாராட்டத்தக்கது. அவர் "உழைக்காதவனுக்கு உண்ணவும் உரிமையில்லை" என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் இதே கருத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் கூறியது என்று எண்ணி மகிழ்வாரில்லை.

உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதிலார்

உடையார் உடையரோ மற்று.

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

என்பன போன்ற திருக்குறள்கள் புதுமையும் புரட்சியும் நிறைந்த கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன.

பொருளியல்

உலகியல், பொருளியல் வலையில் பின்னப் பெற்றுச் சுற்றி சுழன்று வருகிறது. உலகியலே பொருளியல், ஏன்? பொருளியலே உலகியலும்கூட "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்ற பிறிதொரு கருத்துக்கு இடமின்றித் தெளிவாகத் திருக்குறள் பேசுகிறது. ஆனால் எது பொருள் என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. இன்றையச் சூழலில் பலர் பொருள் என்றால் நேரிடையாக நுகர்வதற்குப் பயன்படாமல் நாணயமாக, பொன்னாக, மணியாக இருப்பனவற்றையே பொருள் என்று கருதுகின்றனர். நுகர்வதற்குரியவை அல்லாதவை எங்ஙணம் பொருளாக முடியும்? துய்த்தற்குரியவையே பொருளாகும். "யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல" என்ற பரிபாடல் அடி பொன்னையும் பொருளையும் பிரித்து உணர்த்துவது உணரத்தக்கது. தீ ஏதாவது ஒரு பொருளை பற்றுக்கோடாகக் கொண்டே இயங்குகிறது. அதுபோல உயிர் யாதானும் ஓர் உடம்பினைப் பற்றுக் கோடாகக் கொண்டே இயங்கும். உடலினுக்கு எரிபொருள்களாக உணவு முதலிய பண்டங்கள் தேவை. அஃதின்றேல் உடலியக்கம் ஒடுங்கும். இதனைப் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்று தெளிவாகத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது. இப்பொருள்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுவதாலும், கால வெள்ளத்தில் அழியாமல் பொருள்களின் மதிப்பைத் தாங்கித் திரும்ப அப்பொருள்களைப் பெறுதற்குக் கருவியாக இருப்பதாலும் உபசார வழக்கில் பொன்னையும் பொருளெனப் போற்றினார்கள்.

இத்தகு வாழ்க்கைக்குப் பயன்படும் பொருளியலைப் பற்றித் திருக்குறள் தெளிவான கருத்தை மேற்கொண்டிருக்கிறது. இன்றைய பொருளியல் சாத்திரங்கள் பக்கம் பக்கமாக விரித்துரைக்கும் பொருளியல் சித்தாந்தங்களைத் திருக்குறள் மிக எளிமையாக நான்கைந்து சீர்களில் விளக்குவதில் வெற்றிபெற்று நிற்கிறது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு

இந்த ஒரு திருக்குறள் பொருளியல் தத்துவத்தின் சிறந்த விளக்கமாக அமைந்திருக்கிறது. உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மனித எண்ணிக்கையால் மட்டுமன்று. தேவைகளின் பட்டியல்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. வளரும் தேவைகளை ஒரு வழித்துறையில் முற்றிலும் அடைய முடியாது. ஆதலால் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகப் புதிய புதிய பொருள் நுட்பத்திற்குரிய புதிய வழிகளைக் காணவேண்டும். இதனை "இயற்றலும்" என்ற சொல் மூலம் காட்டுகிறார் திருவள்ளுவர். அதாவது திட்டமிட்டுத் தொழில் புரட்சிகளைச் செய்து புதிய வருவாய்த் துறைகளைக் காணுதல் என்பதாகும். இயற்றலைத் தொடர்ந்து ஈட்டுதல், பின் பொருள் சிறு திவலைகளாகச் சிதறிக் கிடக்குமாயின், அங்ஙனம் சிதறிக்கிடக்கும் பொருள் மீண்டும் பொருள் உற்பத்திக்குப் பயன்படும் ஆற்றலை, தகுதியை இழந்து விடுகிறது. ஆதலால், ஈட்டப்படுகின்ற பொருள்கள் மூலதனமாக வளர்ச்சியடைகின்ற வரையில் காக்கப் பெறுதல் வேண்டும், பின் முறையான பங்கீடு அல்லது விநியோக முறை வேண்டும். இன்றைய நம்முடைய பொருளாதாரத்தில் உள்ள சிக்கல் பெரும்பாலும் முறையான பங்கீடு இன்மையே யாகும். இவ்வளவு தெளிவாகப் பொருளியலைக் கண்டுணர்த்திய திருக்குறளின் பெருமைக்கு ஈடுண்டோ!

சமுதாய உறவு

திருக்குறள் தனி மனிதனைச் சமுதாயப் பொது மனிதனாக வளர்ப்பதில் நிறைய அக்கறை காட்டுகிறது, அவனுடைய சமுதாய உறவுகளை வளர்ப்பதிலும் பக்குவப்படுத்துவதிலும் திருக்குறள் முழுக்கவனம் செலுத்துகிறது. தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இருக்க வேண்டிய நல்லுறவைத் தடுத்துக் கெடுக்கும் தடைகளைப் பற்றியும் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறது. இந்த உறவினை வளர்த்துக் கட்டிக் காப்பதற்காகப் பற்பல குறள்களைத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார். மற்றவர்களைச் சார்ந்து நலம் செய்து வாழ்வதால் கேடுவருமாயினும் ஏற்றுக்கொள் என்று ஆணையிடுகிறார்.

ஒப்புரவி னால் வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து

என்பது திருக்குறள்.

மனித உறவை வளர்ப்பதில் பொறையுடைமைப் பண்பிற்குச் சிறந்த பங்குண்டு. ஆனால், பொறையுடைமை என்பதை இன்று பலர் கருதுகிற பார்வையில் திருவள்ளுவர் கருதவில்லை. கோழைத்தனத்ததினாலும் அச்சத்தினாலும் பொறுத்தாற்றுதலுக்குத் திருவள்ளுவர் உடன்படார். பொறையுடைமை என்றே ஓர் அதிகாரம் செய்துள்ளார். அதில் மிகவும் சிறந்த திருக்குறள்,

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பொறையுடைமைக்கு எடுத்துக் காட்டும் உவமை எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. மலையையும் உடைத்துக் கல் எடுக்கிறோம். அது பொறுமையாகவே இருக்கிறது. அணைகளும் மாளிகைகளும் கட்ட கற்களைத் தருகின்றது. நன்னூல் ஆசிரியர் போன்றவர்கள் நிலைதளராத முனிவர் பெருமக்களுக்கு மலையை உவமையாகக் கூறுவர். ஆனால் திருவள்ளுவர் பொறுத்தாற்றும் பண்பிற்கு நிலைத்தை எடுத்துக்காட்டாகக் கூறுவானேன்? மலை, உடைப்போரைப் பெரும்பாலும் எதிர்த்துத் தாக்குவதில்லை. ஒரே வழி எதிர்த்துத் தாக்குதலும் உண்டு. அது மட்டுமன்று; அது உடைக்க உடைக்க அழிந்து போகிறது. அதனாலேயே மலையை ஒதுக்குகிறார் திருவள்ளுவர். நிலம், உழுவோர் தரும் துன்பத்தைத் தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டு வளர்கிறது. நிலம் உழ உழ வளம் பெறும். பயன் பெருக்கித் தரும். உழுவோருக்கே தரும். பயன்படும் வகையால் தன் மதிப்பினை உயர்த்திக் கொள்ளும். ஆதலால் உழுபவன் நிலத்தினுடன் உரிமையும் உறவும் கொள்கிறான். அது போலவே பகைவர்கள் துன்பங்கள் தருவார்களானால் அத்துன்பங்களை உரமாக்கிக் கொண்டு வளர்தல் வேண்டும். அப்படி வளர்ந்தால் துன்புறுத்தியவர்களும் உறவும் உரிமையும் கொண்டாடுவர், என்ற மிகச் சிறந்த கருத்து எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. இறைநிலை

திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உடையவர். திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாடுகிறது. ஆயினும் திருவள்ளுவர் நம்பிக்கைக்கும் நல் வாழ்க்கைக்கும் இசைவில்லாத வெற்றுச் சடங்குகளைச் சார்ந்த சமய நெறிகளில் நம்பிக்கை இல்லாதவர், தூய தெளிவான வாழ்க்கை யோடியைந்த மெய்ந்நெறியில் நம்பிக்கை யுடையவர். இவருடைய சமயம் உலகியலில் அழுந்துவது மன்று; அப்பாற்பட்டதுமன்று. இவர் வாழ்த்தும் கடவுள், கோலம் குறிகளுக்கு அப்பாற் பட்டவர்; வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்; தனக்குவமை இல்லாத தலைவர். இத்தகு தூய "அருள்நெறியே” இந்த நூற்றாண்டிற்கும் ஏன்? இனிவரும் நூற்றாண்டுகளுக்கும் ஏற்ற நெறியாகும்.

திருக்குறளும் தமிழ் இனமும்

தமிழினம் முன்னர்க் குறிப்பிட்டது போல கடந்தகால வரலாற்றுச் சிறப்புடையதாயினும் இடைக்காலத்தில் அதற்கேற்பட்ட வீழ்ச்சி மறைக்கவோ மறுக்கவோ முடியாத ஒன்று. பிறமொழி நுழைவு தமிழின் தூய்மையைக் கெடுத்தது. ஆயினும் சிறந்த தமிழ்ச் சான்றோர்கள் தமிழின் துய்மையைக் காப்பாற்றி வந்தனர். அயலினத்தாரின் நுழைவால் ஓரினமாக வாழ்ந்த தமிழினம் பலநூறு சாதிகளாகப் பிரிக்கப் பெற்றது. தமிழினத்தையே சார்ந்த ஒரு சாதியினர் பிறிதொரு சாதியினரிடம் ஓரினம் என்ற அடிப்படையை மறந்து காழ்ப்புக் கொண்டனர்; பகை பாராட்டினர். இந்த இன்னாத சூழ்நிலையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு வளர்ந்த தமிழினம், நாளையும் கோளையும் அவ்வழிப்பட்ட அத் திட்டத்தையும் நம்பத் தலைப்பட்டது. ஊழையும் உப்பக்கம் காணும் கொள்கை கண்ட இனம் தலைவிதி என்ற தத்துவத்தின் காலடியில் சிக்கிச் சீரழிந்தது. உயர்ந்த திருக்குறளைப் பயிலாமல் ஒரு குலத்திற்கொரு நீதி உரைக்கும் நூலையும், நடுவாக நன்றிக்கண் தங்காமல் அநீதிக்கும் நீதிக்கும் சமரசம் செய்துவைக்கும் நெறியல்லா நெறியை நெறியெனக் காட்டிய நூலையும் பயின்று வீழ்ச்சியுற்றது. இந்த வீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை எடுத்து நிறுத்த இந்த நூற்றாண்டில் சிறந்த சான்றோர் அடுத்தடுத்து முயன்று வந்துள்ளனர்-வருகின்றனர்.

புறப்புற இருள்நெறி கடிந்து தமிழ் ஞாயிறு எழுகின்றது. இந்த எழுச்சி தமிழக வரலாற்றில் முன்னைப் பழமையைப் புதுப்பிக்கும். புதிய புதுமைகளைச் சேர்க்கும்.

ஒர் உலகம்

இன்று எங்கும் ஓர் உலகம் பற்றியே பேச்சு. இன்று நம்மிடையில் ஒர் உலக அமைப்பாக உலக நாடுகள் பேரவை (ஐ.நா.சபை) தோன்றியிருக்கிறது. இந்த ஓர் உலக அமைப்பு நல்லெண்ணத்துடனேயே தோன்றியிருக்கிறது. அதாவது மனித குலத்தினிடையில் கொண்டும் கொடுத்தும் கூடிக் கலந்து இன்ப அன்புடன் வாழ்கின்ற பண்பாட்டை உருவாக்குவதே இந்தப் பேரவையின் நோக்கம். பேரவை தோன்றிய நோக்கமும் பேரவையின் பயனும் போற்றுதலுக்கு உரியவையேயாம். ஆயினும் இப்பேரவையின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்த துன்பச் சூழலை வரலாறு மறைக்க முடியாது. இரண்டு உலகப் போர்களின் படிப்பினையாகவே உலக நாடுகளின் பேரவை தோன்றிற்று. உலக நாடுகளின் பேரவை தோற்றத்தில் அச்சமும் பங்கு பெற்றிருக்கிறது. அதனால்தான் போலும் அந்தப் பேரவையால் உலகத்தை மானிட சாதியை முற்றிலும் போர்ப் பயத்திலிருந்து விடுதலை செய்ய இயலவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் ஓர் உலகக் கருத்தைக் கண்டு காட்டினார். இவர்தம் நூலே ஓர் உலகக் கருத்தை மையமாகக் கொண்டு விளங்குகிறது. இவர்தம் ஓருலகக் கருத்து அச்சத்தில் விளைந்ததன்று: அன்பில் விளைந்தது. பெரும்பாலும் நூல்கள் தன் நாடு, தன் மொழி, தன் இனம், தன் சமயம் ஆகியனவற்றைச் சிறப்பித்தே எழுதப்பெறும். ஒரோ வழி தம்முடையதைச் சிறப்பித்தும், மற்றையதை இழித்தும் எழுதப்பெறுவதும் உண்டு. திருக்குறள் இந்தக் குறைகளின்று முழுதும் நீங்கிய நூல், திருக்குறளில் தமிழ் என்ற சொல் இல்லை. தமிழன் என்ற சொல்லும் இல்லை. பெயர் குறிப்பிட்ட காடு, மலை, ஆறு, நாடு ஆகியவை பற்றிய செய்திகளும் இல்லை. எந்தக் கடவுளின் பெயரும் இல்லை. எந்தச் சமயச் சின்னங்களும் இல்லை. ஆதலால், திருக்குறள் இனச் சார்பற்ற நூலாக, நாடும் எல்லையும் கடந்த நூலாக, மனித குலத்தின் பொது நெறி நூலாகத் திகழ்கிறது.

இன்றையத் தேவை மனிதகுல ஒருமைப்பாடு. இதனைச்சமயச் சான்றோர் ஆன்மநேய ஒருமைப்பாடு என்று கூறுவர். இத்தகு ஒருமைப்பாட்டைக் காணுதலும் வளர்த்தலும் அருமையான முயற்சி. ஆயினும் இன்பம் பயக்கும். ஆனால் உண்மையான ஒருமைப்பாட்டைக் காணல் வேண்டும். ஒற்றுமையே ஒருமைப்பாடென மயங்கிவிடுதல் கூடாது. ஒற்றுமை, கட்டாயம், தேவை ஆகியவை கருதியும் தோன்றலாம். கலகம் செய்வதற்கு ஆற்றல் இன்மையின் காரணமாகவும் ஒற்றுமை இருக்கலாம். இது நெடிய பயனைத் தராது. ஒருமைப்பாடு என்பது சிந்தனையினால் உணர்வினால், குறிக்கோளால், வாழ்க்கை அமைப்பால் ஒன்று கலந்து இருப்பதாகும். இத்தகு ஒருமைப்பாட்டை அரசுகளால் தோற்றுவிக்க முடியாது. அறநெறியினாலேயே முடியும். அதனாலன்றோ கார்லைல் என்ற பேராசிரியர் "மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்" என்று குறிப்பிடுகின்றார் இன்றைய உலகத்தை இணைக்க உலகப் பேரிலக்கியமாகத் திகழ்வது திருக்குறளேயாம். பாரதியும் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடிப் பரவுகின்றார்.

இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்புகிறது. விரும்பி வற்புறுத்துகிறது. இந்திய ஒருமைப்பாட்டை வலிமை பொருந்திய மத்திய ஆட்சியின் அதிகாரத்தாலும் இந்தி மொழியாலும் காணமுடியும் என்று நம்புகிறது. இது வெறும் கானல் நீரே. இந்திய நாட்டின் இணையற்ற தேசீய இலக்கியமாகத் திருக்குறளை, ஏற்றுக் கொண்டு, இந்திய நாட்டு மக்கள் அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும் திருக்குறள் நெறி வாழ்க்கையிலும் ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும். இந்திய நாட்டின் தேசிய இலக்கியமாகவும், உலகப் பேரிலக்கியமாகவும் திருக்குறள் விளங்கி அமையும் நாளே, மனித சமுதாயத்தின் இனிய வரலாறு தொடங்கும் நாள்.

கடமைகள்

திருக்குறள் இலக்கியமே. ஆயினும் அதன் நோக்கம் இலக்கிய இன்பம் தருவதன்று. வாழ்க்கையில் இருள் நீக்கி இன்பந் தருவதேயாகும். திருக்குறளை மையமாகக்கொண்டு இலக்கியத்திறனாய்வு செய்யலாம். துறைதோறும் இன்பந்தரும். பல நூற்றாண்டுகளுக்குத் திறனாய்வு செய்யலாம். ஆயினும் திருக்குறளை மனிதகுலச் சிறப்பிற்குரிய ஒழுக்கத்துறைகளில் நடை முறைப்படுத்தித் திறனாய்வு செய்வதே பாராட்டுதற்குரியது; அதுமட்டுமன்று; கடமையுமாகும்.

மனிதராய்ப் பிறந்தோர் அனைவரும் நாள்தோறும் திருக்குறள் கற்றலும் கேட்டலும் கடமையெனக் கொள்ள வேண்டும். தமிழராய்ப் பிறந்தோர் இதனைக் கடமையாக மட்டுமல்லாமல் ஒழுக்கமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றையத் தமிழக அரசு திருக்குறளுக்கு உரிய இடத்தை மக்கள் மன்றத்திலும், அரசிலும் அளிக்க ஆர்வத்துடன் முன்வந்திருக்கிறது. இது நன்றி உணர்வுடன் என்றும் பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த இனிய சூழலை முழுவதும் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். எங்கும் முத்தமிழ் முழங்கவேண்டும். திருவள்ளுவர் எழுப்பிய திருக்குறள் ஒலி நாற்புறமும் ஒலிக்கச் செய்ய வேண்டும். தமிழர் இல்லங்களைத் திருவள்ளுவர் திருவுருவம் அணிசெய்ய வேண்டும். தமிழர்தம் நெஞ்சங்களில் திருக்குறள் கருத்துக்கள் தங்கவேண்டும். தமிழினத்தின் வாழ்க்கையில் திருக்குறள் ஒழுக்கநெறி கால்கொண்டு அமையவேண்டும். இந்த உயரிய குறிக்கோளோடு நம் அனைவரும் இனிய இன்ப உலகத்தைக் காண முயற்சிப்போமாக.

5

சிந்தனை மலர்கள்

* * *

1. மனத்துக்கண் மாசிலனாதல்

மனம், மனிதனின் சிறந்த அகக்கருவி. மனிதனின் செயற்பாடுகளுக்கெல்லாம் மனமே முதல் நிலைக்கருவியாக அமைகிறது. செயல்களுக்கு அடிப்படையாக அமைகின்ற செய்திகளை, வாயிலாக இருந்து ஆன்மாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் மனமே! மனம் தூய்மையாக இருந்தால் மந்திரங்கள் செபிக்க வேண்டியதில்லை என்று கூறுவர். மனம் தூய்மையாக இருப்பது நல்வாழ்க்கைக்கு இன்றியமையாதது; நல்ல சமுதாயத்திற்கும் இன்றியமையாதது. புறத்தோற்றங்கள், மற்றும் செயல்கள் எப்படியிருப்பினும் மனம் தூய்மையாக இருந்தால் புறத்தோற்றம் கருதி யாரும் இகழமாட்டார்கள்; ஏற்றுக் கொள்வார்கள். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தூய்மை பெறுதல் வேண்டும்.

மனத்துக்குத் துய்மைக்கேடு எப்படி வருகிறது? மனம் இரண்டு வகையில் தூய்மைக் கேடு அடைகிறது. முதலாவது ஆன்மாவினிடத்திலுள்ள அறியாமை. இரண்டாவது புறச் சூழ்நிலை. ஆன்மாவினிடத்திலுள்ள அறியாமையினாலேயே மனம் கெடுகிறது என்பது பழைய கருத்து. மனம் புறச்சூழ்நிலையாலேயே கெடுகிறது என்பது மார்க்சிய சித்தாந்தம்; அண்மைக்கால விஞ்ஞானக் கருத்து. ஆயினும் புறச்சூழ்நிலையும் சார்பும் மனித மனத்தை உருவாக்கும் காரணங்கள் என்ற கருத்து, பழந்தமிழ்க் கருத்து என்பதை மறந்துவிடுவதற்கில்லை. மனத்திற்குத் தூய்மைக்கேடு அகநிலையிலிருந்து வந்தாலும் சரி, புற நிலையிலிருந்து வந்தாலும் சரி! வந்த வழியைப் பற்றி இப்பொழுது என்ன கவலை? இரண்டு நிலைகளையுமே இப்பொழுது ஆய்வு செய்யலாம். மனம், ஒரு பொருளைச் சென்று பற்றுகிறது. அல்லது ஒரு நிகழ்வில் தோய்ந்து ஈடுபடுகிறது. அப்பொழுது மனத்தின் பங்கு ஆன்மாவின் அறியாமை என்கிற தாக்கத்தின் காரணமாக விருப்பு நிலையையோ வெறுப்பு நிலையையோ அடைகிறது. மனம், ஒன்றை விருப்புணர்வோடு அணுகினாலும் சரி, வெறுப்புணர்வோடு அணுகினாலும் சரி, நடுநிலை பிறழ்கிறது! விருப்புணர்வு அடைய வேண்டுமென்ற ஆர்வத்தையும், வெறுப்புணர்வு ஒதுக்க வேண்டுமென்ற உணர்வையும், உருவாக்கும். அவ்வழி அழுக்காறு, அவா, வெஃகல், வெகுளி, இன்னாச்சொல், பகை ஆகிய இயல்புகள் மனத்தினிடைத் தங்கித் தாம் முன்னியது முடிக்க ஆன்மாவை இழுத்துக் கொண்டு செல்லும். ஆதலால், மனத் தூய்மைக் கேட்டுக்கு முதல் நிலையாக அமைவது ஆன்மாவின் அறியாமை என்பதில் ஐயமில்லை. மனம் சென்று பற்றுகிற புற உலகில் வேற்றுமைகள் மிகுதியாக இல்லாமல், உடையார் - இல்லாதார் என்ற வேற்றுமையில்லாமல் எல்லாருக்கும் எல்லாம் எளிதில் கிடைக்கக் கூடிய பொதுமை நிலையுடைய சமுதாய அமைப்பு இருந்தால் ஆன்மாவிற்கு அல்லது மனத்திற்கு விருப்புகளும் வெறுப்புகளும் உருவாவதற்குரிய வாயில்கள் அடிபட்டுப் போகின்றன. அத்தோடு, புறத்தே பற்றுக் கோடாகக் கொள்ளும் நட்பு, சுற்றம் முதலியன நல்லன எண்ணி, நல்லன. சொல்லி, நல்லன செய்வனவாக இருந்தாலும் மனம் தூய்மைக் கேடுறாது.

ஆதலால், மனம் தூய்மையுடையாராதலே மனிதத் தன்மையின் முதல் முயற்சி. அதுவே இன்ப வாழ்க்கையைத் தரக்கூடிய சிறந்த முயற்சி. மனம் தூய்மையுடையவராக வாழ்தலே அறவாழ்க்கை. மனம் தூய்மையில்லாது மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் புகழுக்காகவும் செய்யப் பெறும் செயல்கள் ஆரவாரத் தன்மையுடையன. இரைச்சல், ஒலி மட்டுமே! இரைச்சலைக் கேட்டுப் பொருள் கொள்ள முடியாது; கருத்துருவம் பெற முடியாது. அதுபோல ஆரவாரம் அன்புச்சார்பில்லாதது; இதயத்தொடர்பில்லாதது; அறமல்லாதது; ஆரவாரமான உலகத்திலிருந்து விலகி, சமுதாயம் தழுவிய அறவாழ்க்கையை மேற்கொள்ள மனத்தூய்மை பெறுவோம். சமுதாய வாழ்க்கை வாழ முயன்றாலே எளிதில் மனத்துாய்மை வரும். யார்மாட்டும் அன்பு, மற்றவர் வாழ்வு கண்டு மகிழ்தல், மற்றவர்களை வாழ்விக்க முயற்சி செய்தல், மற்றவர் வாழ்க்கைக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தல் ஆகியன மனத்தூய்மை பெறுதற்குறிய வாயில்கள். மனத்தூய்மை உடைய வாழ்க்கையே அறம் சார்ந்த வாழ்க்கை.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற”

17-2-86.

2. வாழ்வாங்கு வாழ்க!

(1)

வாழ்க்கை வெற்றி பெறவேண்டும், பயனுடையதாக வேண்டும் என்றால், அதற்குச் சில இன்றியமையாத பண்புகள் தேவை. அவற்றுள் தலையாயது பணிவு. அதாவது யார் மட்டும் பணிவாக நடந்து கொள்ளுதல். பணிவு என்பது அடக்கமுடைமையின் முதிர்ச்சியில் தோன்றுவது. பணிவு இயற்கையாக அமைதல் வேண்டும். அதற்கு வேறு பின்னணிகள் இருக்கக்கூடாது. இயலாமை காரணமாகப் பணிதல் பணிவுடைமையன்று. பணிவுடைமைக்குரிய இலக்கணத்தை எழுத்தில் எழுதிக்காட்ட இயலாது. உடல் வணக்கம் மட்டும் பணிவாகாது. உடல் வணக்கம் பணிவுடைமையில் சேராது என்றும் சொல்ல முடியாது. ஒருவரின் பணிவு அல்லது வணக்கம் பணிவின் பாற்பட்டதா அல்லது நடிப்பா என்பதை எளிதிற் பிரித்துக் காணமுடியும். உடல் வணக்கம் நாவடக்கம் ஆகியன பணிவின் பாற்சாரும்! ஏன்? மனஅடக்கமும் கூடத்தான்!

மற்றவர்களுடைய மதிப்பினைக் கருதியும் வருந்தா நிலை வேண்டியும் பணிவாக இருத்தல் வேண்டும். சில பொழுது பணிவின் காரணமாகத் தமது அறிவு, ஆற்றல் ஆகியவற்றைக்கூட முற்றாக வெளிக்காட்டாது அடங்கியிருத்தலும் பணிவின்பாற் சாரும் பணிவுடையாரிடத்தில் தான் மற்றவர்கள் எளிதில் பழகுவர்; மனம் ஒப்பிப் பழகுவர். அப்பழக்கம் பல பண்பாடுகளையும் பயன்பாடுகளையும் கொண்டுவந்து சேர்க்கும்.

பணிவு எளிதில் வாராது. பணிவு, வாழ்க்கையில் சிறந்தோருக்கே தோன்றும் உயர்ந்த இலக்கணம். முற்றிய கதிர்மணிகளுடைய செந்நெற் பயிர்கள் தாழ்ந்து தரையிற் கிடத்தல்போல, நிறைந்த அறிவும் எதிரில் ஆற்றலும் உடையவர்கள்தாம் பணிந்துபோவர். அது கோழைமையன்று. குன்றில் உயர்ந்து விளங்கும் கொள்கையின் மாட்சி! மண்ணில் தாழ்ந்து தாழ்ந்து செல்லாத வேர்களைப் பெறாத மரங்கள் விரிந்து வளர்ந்து விண்ணோக்கிச் செல்ல இயலுமா? அவை பயன்தரும் மரங்களாகத்தான் விளங்க முடியுமா? ஒருவர் நிற்க, தான் அமராமை. ஒருவரைக் கண்டுழி மலர்ந்த முகத்தோடு வரவேற்று அவரை இருக்கை யில் அமர்த்தியபிறகு அமர்தல், அவர்தம் கருத்து இன்னதென்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வணங்கியவாயினராகக் கேட்டல், உடன்படாதவற்றைச் சொன்னாலும் உவப்புடன் கேட்டல், மற்றவர்கள் உவப்பக் கருத்தைத் தெரிவித்தல் ஆகியன பணிவிற்குறிய சில அடையாளங்கள். எங்கே பண்பில் முதிர்ச்சியிருக்கிறதோ அங்கே பணிவு இருக்கும். எங்கே பழுத்த மனம் இருக்கிறதோ அங்கே பணிவு இருக்கும். ஆழ்கடலில்தானே அழகான முத்து! கட்டடத்தின் வலிமை அடிப்படைக் கல்லால்தானே!

எங்கே பணிவு இருக்கிறதோ அங்கே நிச்சயம் இன்சொல் இருக்கும். கொள்கை உயர்ந்ததாக இருந்தால் போதாது! அதை மற்றவர் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துக்கூறும் ஆற்றல் வேண்டும். பணிவுக்கு இன்சொல் அரண். இன்சொல்லுக்குப் பணிவு அரண். இரண்டும் இரட்டைப் பண்புகள்! ஆனால் வாழ்க்கையைச் சிறப்பிப் பதில் ஒருமைநலம் சார்ந்த பண்புகள்! இவ்விரண்டு பண்புகளும் ஒருவர் வாழ்க்கைக்கு அழகூட்டுவன; மதிப்பூட்டுவன; உயர்வூட்டுவன. இவ்விரு பண்புகளையும் அணியெனப் பெற முயலவேண்டும், இவையே புகழ்மிக்க வாழ்க்கைக்கு அணிகள்! மற்றபடி கவர்ச்சியான ஆடைகள், தங்க அணிகலன்கள், வண்ணப்பூச்சுகள், வாசனைப்பூச்சுகள் முதலியனவற்றை அணியெனக் கருதி ஏமாறுதல் வேண்டா. அவற்றுக்காகப் பெரும்பொருளை இழக்கவேண்டா. அவற்றை மதிப்பார் யார்? பிணத்திற்குக் கூடப் பொன்னணி பூட்டப்படுவது உண்டு. பயன் என்ன? உயிர்ப்புள்ள, பொருளுள்ள, புகழ்மிக்க வாழ்க்கைக்கு அணி, பணிவும் இன்சொல்லுமேயாம். மக்களாட்சி நடைமுறை வாழ்க்கைக்குப் பணிவும் இன்சொல்லும் இன்றியமையாப் பண்புகள்! இந்த அணிகளை அணிவோமாக! காசின்றி எளிதில் முயன்று பெறக்கூடிய இந்த அணிகளை எவரும்

தி.15. அணிந்து கொள்ள முடியும் தேவை, உளமார்ந்த விருப்பமும் முயற்சியும் தான்!

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணி; அல்ல மற்றுப் பிற"

என்பது குறள். 12-9-86

வாழ்வாங்கு வாழ்க!

(2)

இனிய சொற்கள் இன்பத்தைத் தருவன. இனிய சொற்கள் சொல்வாருக்கும் இன்பம் தருவன: கேட்பாருக்கும் இன்பம் தருவன. இன்சொல் தப்பாமல் நட்பைத் தரும்; பெற்ற நட்பை வளர்க்கும்; பாதுகாக்கும். இன்சொல் குறித்த பயனைத் தவறாமல் தரும். பெரும்பான்மையான மனிதர்கள் இன்பத்தை விரும்புகிறார்கள். வளர்ந்த மனிதர்கள் சொற்களைப்பற்றிக் கவலைப்படாமல் பயன் இன்பமாக இருந்தால் சரி என்று கருதுவார்கள். இது பெருந்தகைமையின் பாற்பட்டது. ஆனால் சராசரி மனிதர்கள் பயன் எவ்வளவு இன்பமானதாக இருந்தாலும் சொல் கடுஞ்சொல்லாக இருந்துவிட்டால் மிகுந்த சங்கடப்படுகின்றனர். ஆதலால், நன்மைக்குத்தானே சொல்கிறோம் என்று கடுஞ்சொல்லால் கூறக்கூடாது. எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் நன்மையைக் காணவும் சரி, தீமையை அகற்றவும் சரி இனிய சொற்களையே பேசுதல் உயர்ந்த ஒழுக்கம்.

இனிய சொற்களை வழங்குவதன் மூலம் நல்ல பயன் விளையும். பகைவரையும்கூடத் தன்வயப்படுத்த முடியும். குற்றங்கள் - குறைகள் இல்லாத மானிடர் உலகில் இல்லை. இவற்றைக் கண்டுபிடித்துக் கூறுவதற்காக நமக்கு வாய் படைக்கப்படவில்லை, ஆனால் சமுதாய அளவில் நல்லன வளர வேண்டும் என்ற பெருநோக்கு இருக்குமானால் அவற்றை உரியாரிடத்திலேயே இனிய சொற்களால் பேசி நயந்த முறையில் திருத்தம் காண முயற்சி செய்யலாம். வருத்தம் தருகிற ஒரு கட்டி, உடலில் இருக்குமானால் அதை உடனே அறுக்க முடியாது. அந்தக் கட்டிக்குச் சில ராஜோபசாரம் செய்து மருந்துபூசிப் பழுக்கவைத்துப் பின்தான் அறுக்க வேண்டும். உடலில் வேண்டாத உரோமங்கள் இருப்பதை நீக்கும் முயற்சியில்கூட தண்ணீர் தடவிப் பதப்படுத்தித்தான் நீக்க வேண்டியிருக்கிறது. அது போலத்தான் குற்றமுடையாரைத் திருத்துவதற்கும் கூடச் செய்ய வேண்டும். முதலில் குற்றமுடையாரை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்புடன் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முழு அன்புடன் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த நேசம் குற்றத்தின் இயல்புவழிச் செல்லாத மேலாண்மையுடையதாக இருக்க வேண்டும். குற்றமுடையாரை முதலில் அங்கீகரிக்க வேண்டும். மதிப்புயர் மனிதர்களாக நடத்த வேண்டும். அதன் பின்தான் நம்முடைய திருத்தப் பணிகள் கனியெனக் கனியும். ஆதலால், இன்சொல் எந்தச் சூழ்நிலையிலும் இன்பத்தைத் தரும்; வெற்றியைத் தரும்; புகழ்மையைத் தரும். எந்தச் சூழ்நிலையிலும் இன்சொல் பிழைபோகாது.

இங்ஙணமின்றி இவன் தகுதியில்லாதவன்; கீழானவன், பாடிக்கறக்கிற மாட்டைப் பாடித்தான் கறக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வன்சொல்லால் திட்டுவது பயன்தராது. பயன்தராதது மட்டுமின்றி எதிர் விளைவுகளையும் உருவாக்கும். மானுட வாழ்வின் அமைதி கெடும்; அவலம் பெருகும்; ஏன் வன்சொல் பேசுகிறீர்கள்? மற்றவர் கூறும் இனிய சொல் தனக்கு இன்பம் தருவதை அனுபவித்து அறிகின்ற ஒருவன், மற்றவரிடம் வன்சொல் சொல்வது என்ன பயன் கருதி? என்பது திருவள்ளுவர் எழுப்பும் வினா! ஆதலால் வன்சொல் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! சுடுசொல் கூடாது! கூடவே கூடாது! இனிய சொற்களையே வழங்குங்கள்! மற்றவர் மனம் மகிழத்தக்க சொற்களையே சொல்லுங்கள்! இன்பத்திற்காகப் பேகங்கள்! அதுவே வாழ்க்கையின் வெற்றிக்குவழி!

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது”

என்பது திருக்குறள். 13.9.86

வாழ்வாங்கு வாழ்க!

(3)

மானுட வாழ்க்கை இயற்கையாய் அமைந்தது; இன்பமாய் அமைந்தது. இயற்கை வாழ்க்கையில் இன்பமே! எந்நாளும் துன்பமில்லை! இனிய சொற்களை வழங்கும் இயல்பு இயற்கையிலேயே மனிதனுக்கு உண்டு. இன்சொல் வழங்குதலே இயற்கை; இயல்பாய வாழ்க்கை. ஆதலால், நமக்கே உரிமையுடையனவாய இன்சொற்களை வழங்கிப் பழக வேண்டும். இன்சொல் இயம்பும் இயல்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இனிதாக இல்லாத சொற்கள் - அதாவது கடுஞ்சொற்கள் செயற்கைத் தன்மையன; அழுக்காற்றில் தோன்றுவன; வெகுளியில் பிறப்பன. உள்ளுறுப்புகளையும் செங்குருதியையும் சூடாக்கித் தோன்றுவன; அதிக மூச்சுக் காற்றைக் குடிப்பன; உடற்பாதிப்பைத் தருவன; கடுஞ் சொற்களைத் தொடர்ந்து கூறுபவர்கள் காலப் போக்கில் நிறம் மாறுவர்; குணம் மாறுவர்; உடல் நலப் பாதிப்புக்கு ஆளாவர்; நோய்க்கு விருந்தாவர்; சமுதாயத்தில் தனிமைப் படுத்தப்படுவர். கடைசியில் அவர்களுக்குத் திறக்கப்படும் ஒரே வாயில் நரகத்தின் வாயிலேயாம்.

சிலர், தங்களிடத்தில் உள்ளனவற்றை நுகரார்; பயன் படுத்தமாட்டார்; ஆனால் மற்றவர்களிடத்தில் இருப்பதை விரும்புவர்; காமுற்று அலைவர். தம்மிடம் உள்ளதைவிட அது தரம் குறைந்ததாக இருந்தாலும் விரும்புவர். அதைப் பெறமுடியாது போனால் களவு செய்யவும் துணிவர். ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் நல்ல பழுத்த கனிகள் உள்ள மாமரங்கள் நிற்கின்றன. அந்த மாமரங்களிலிருந்து கனிகள் பழுத்து உதிர்ந்துள்ளன. இக்கனிகளை அவர் எடுத்து உண்பதற்கு யாதொரு தடையுமில்லை; உரிமையாலும் தடையில்லை; சுவையாலும் தடையில்லை. ஆயினும் இந்தக் கனிகளின்மீது அவருக்கு நாட்டமில்லை. அடுத்த வீட்டுத் தோட்டத்து மாமரங்களிலுள்ள காய்களிலேயே அவருக்கு நாட்டம், வேலிக்கு அப்பாலுள்ளதிலேயே நாட்டம். அவை பிறருக்கு உரிமையுடைய காய்கள்! சுவையில்லாத காய்கள்! ஆயினும் அறியாமையின் வழித் தோன்றிய விருப்பத்தால் அக் காய்களைக் கவர்ந்துண்ண ஆசைப்படுகிறார். இப்படிக் கவரும் முயற்சி எத்தகைய இன்னல்களைத் தரும் என்பதை எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. ஏன் இந்த அவலம்? இனிய சொற்களை வழங்குதல் நமது பிறப்பின் வழிப்பட்ட இயல்பு; கருவில் அமைந்த திரு. இனிய சொற்களையே வழங்குவோம்! காயினைப் போன்ற இன்னாச் சொற்களைக் கூறி மற்றவர்களைத் துன்பத்தில் ஈடுபடுத்த வேண்டாம்! அவ்வழி நாமும் துன்பத்திற்கு ஆளாக வேண்டாம்!

திருவள்ளுவர் நயம்பட,

"இனிய உளவாக இன்னாத கூறல் கன்னியிருப்பக் காய்கவர்ந் தற்று"

என்கிறார். கனி, இனிய சொல்லுக்கு உவமை. காய், கடுஞ் சொல்லுக்கு உவமை. இங்கு ‘இன்னாத’ என்றதால் சொல்லளவில் மட்டுமல்லாமல் பயனிலும் இன்னாதது என்பதை உணர்த்தினார். சொல்லிலும் பொருளிலும் ஒருசேர இன்பம் பயக்கத்தக்க சொற்களைத் தேர்ந்து சொல்வோர் சான்றோர். சொல் இனிமையாக இருந்து விளையும் பயன் இன்னாததாக இருந்தாலும் பயனில்லை. விளையும் பயன் இன்பமாக இருந்தாலும் பேசிய சொல் இன்னாததாக இருந்தால் அதனை முழுமையான பயனாகக் கருத முடியாது. ஆதலால், எல்லோருக்கும் இன்பம் வேண்டும் என்று விரும்புக, விழைவுறுக! மனம் குழைந்தால் இனிய சொற்கள் தோன்றும். எனவே மனத்தை நாள்தோறும் அன்பில் நனைத்து நனைத்துக் குழைத்துப் பக்குவப்படுத்திக் கொள்க! இனிய மனத்தில் - குழைந்த உள்ளத்தில் இனிய சொல் தோன்றும். எல்லாருக்கும் இன்பம் வேண்டும் என்ற இன்பக் குறிக்கோளை இனிய சொற்களால் எடுத்து விளம்புக! எங்கும் இன்பம்! யாண்டும் இன்பம் சூழ்க! இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க! 14-9-86

3. வன்சொல் தவிர்க்க!

வன்சொல் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! ‘சொல்’ சொல்லப்படுவது அன்புப் பரிமாற்றத்திற்கே! ‘சொல்’ சொல்லப்படுவது உறவினை வளர்த்துக் கொள்வதற்கே! சொல், பயனுடையதாக அமைதல் வேண்டும். வன்சொல் என்ன பயனைத் தரும்? யாதொரு பயனும் தராது! எதிர் விளைவுகளைத்தான் உருவாக்கும். வன்சொல் தவிர்த்திடுக! இனிய சொற்களையே வழங்குக!

சொற்கள் அன்பில் கலந்தவையாக இருக்க வேண்டும். செவிக்கும் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் இன்பம் பயப்பனவாக அமைதல் வேண்டும். சில சொற்கள் செவிக்கு இனிமையாக இருக்கும். ஆனால் சிந்தனைக்கு இனிமையாக இருப்பதில்லை. வாழ்க்கைக்கும் இன்பம் பயப்பனவாக இருப்பதில்லை! ஆதலால் வாழ்க்கையை வளர்க்கும் இன்சொல் கூறுக!

குணங்களைச் சொல்ல வேண்டும். குற்றங்களைப் பேச வேண்டும். இது அப்பர் அடிகள் காட்டும் வாழ்க்கை முறை. ஒருவருடைய குணங்களை அவரில்லாத இடத்தில் எடுத்துக் கூற வேண்டும். யாதானும் குற்றமிருப்பின் அவரிடம் நேரில் பேசும்பொழுது அதை எடுத்துக் கூறல் வேண்டும். நம்மில் பலர் இந்நெறிக்கு மாறுபட்டே வாழ்கின்றனர். ஒருவரது குற்றங்களை எடுத்துக் கூறுதலே ‘சிறுமை’ என்பார் திருவள்ளுவர். ‘சிறுமைதான் குற்றமே கூறிவிடும்" என்பதறிக!

வன்சொல் வரிசையில் தூற்றுதலுக்கு அடுத்தது கோள். ஆண்டாள் நாச்சியார் ‘தீக்குறள்’ என்பார். கோள் மிகவும் கொடுமையானது; கலகம் விளைவிப்பது; அமைதியைக் கெடுப்பது. வன்சொல் வரிசையில் தவிர்க்க வேண்டியவற்றுள் கோள் தலையாயது. அடுத்து இன்சொல்போலத் தோற்றித் தீமை செய்வது முகமன். இது அமைப்பில் வன்சொல் அல்ல. பயனில் வன்சொல் என்றே கூற வேண்டும். பாராட்டுதல் வேறு; முகமன் வேறு. முகமன் மூலம் ஒருவருடைய வளர்ச்சி பாதிக்கிறது. ஆதலால் முன்னே வைத்து உரைக்கும் முகமனைத் தவிர்த்திடுக! முகமனைத் தவிர்த்திடுக!

இன்சொல், கரும்பனையது; சொல்லுவார் கேட்பார் இருபாலாருக்கும் நன்மை பயப்பது; இன்பம் பயப்பது. இன்சொல் சொல்வதற்கு அதிக உழைப்புத் தேவையில்லை. பதற்ற நிலை தேவைப்படாது. ஆதலால் இன்சொல் கூறுபவர் இளமையும் இன்பமும் பேணி நிற்பர். வன்சொல், இரும்பனையது. இரும்பைக் கடித்தால் என்னாவது! இரும்பு கடித்தல் யாதொரு பயனையும் கூட்டுவிக்காது. அது எய்ப்பினையும் களைப்பினையுமே தரும். ‘இரும்பு கடித்து எய்த்தவாறே’ என்பார் அப்பரடிகள். இனிய சொற்கள் இயல்பாய் அமைந்தன; உரிமை உடையன; எளிதில் வழங்கத் தக்கன. இன்சொல் கனி! உரிமையில் உள்ள கனிகள்! வன்சொல்லோ செயற்கை அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீமைகளைத் துணைக் கொண்டு வருவது வன்சொல். வன்சொல் உயிர்க்கு அந்நியத் தன்மையுடையது; காய் அணையது. உரிமையுடைய தன்று. வன்சொல் கவர்ந்தே கூறுதல் வேண்டும். கவர்தல் எப்போதும் நன்மையன்று.

அன்பினைக் கெடுத்து உறவினை அகற்றும் வன்சொல் தவிர்த்திடுக. அன்பு கலந்த இன்பம் விளைவித்து எல்லாருக்கும் இன்பம் பயக்கும் இன்சொற்களையே கூறுக! இனிய சொற்களே கூறத்தக்கன! கூறுக! பழகுக!

'இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது’

என்பது. வள்ளுவம். சொற்களின் பயன் ஒருவரை ஒருவர் நெருங்கச் செய்வது; ஒருமையுடையராக்குவது; அகனமர்ந்த அன்பினராக ஒழுகச் செய்வது. வன்சொல் தோன்றும் களம் தற்சார்பேயாம். தற்சார்பான தன்னலத்திற்குக் கேடுவருமோ என்று ஐயுறும் பொழுது, தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் வன்சொல் தோன்றுகிறது. அடுத்து, வன்சொல் தோன்றும் களம் ஏமாற்றங்களும் தோல்விகளுமாகும். அழுக்காற்றின் காரணமாகவும் வன்சொல் தோன்றும். இந்தக் களங்களில் தோன்றிய வன்சொற்கள் யாதொரு பயனையும் தந்ததில்லை. மாறாக எதிர்விளைவையே உண்டாக்கியுள்ளன என்பதே வரலாற்று உண்மை, அதுமட்டுமல்ல, கருத்து வளர்ச்சியும் மாற்றங்களும்கூட வன்சொல் வழங்குவதின் மூலம் தடைப் படுகின்றன. நிலம் செப்பமாக இல்லாதபோழ்து விதைத்து என்ன பயன்?. முளைக்காது. கேட்பார் மனம் செப்பமாக இருக்கத்தக்க வகையில் இன்சொற்களைக் கூறாது போனால் பயன் கிடைக்குமா? மற்றவர் கூறிய இனிய சொற்கள் இன்பம் விளைவித்திருப்பதைச் சென்ற காலவரலாற்றிலும் காணமுடிகிறது. நிகழ்கால வரலாற்றிலும் காண்கிறோம். இன்சொல் இன்பத்தைத் தருகிறது. பழகும் இனிய நட்பினைத் தரும்! இத்தகு மேம்பட்ட பயன்களை இன்சொல் அளிப்பதை அறிந்திருந்தும் ஏன் வன்சொல் வழங்குகிறீர்கள்?

வன்சொல், வாளினும் கொடிது; நாவினால் வன் சொல் கூறிச் சுடுவது தவறு. வன்சொல் இன்ப அன்பிற்குப் பகை; அறத்திற்கு முரண். வன்சொல் அமைதியைக் கெடுத் திடும். வன்சொல் வழங்கற்க! இன்சொல்லைச் சொல்லிடுக!

வன்சொல், சிறுமை பொருந்தியது. இன்சொல், பெருமையோடு தொடர்புடையது. வன்சொல் இம்மையையும் கெடுக்கும்; மறுமையையும் கெடுக்கும். நன்றைத் தரும் இன்சொல் கூறிப் பழகுக! இன்சொல்லை அணியெனப் பற்றுக! 22-3-1987

4. வள்ளுவர் வாக்கு

(1)

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.”

என்பது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் மொழிந்த திருக்குறள், இன்றைய நிலையில் பூத, பெளதிக உலகம் நெருங்கி வந்துள்ளது. "உலகம் ஒரு வீதி” என்று கூறும் அளவுக்கு நெருக்கமுற வந்தவிட்டது. மண்ணில் அமைந்துள்ள சாலைகளும். விண்வழிப் பயணங்களும், தொலை பேசிகளும் உலகம் நெருங்கி வரும்படி செய்துள்ள காலம். காலத்தையும் தூரத்தையும் வென்று விளங்குகின்றான் மனிதன்! இதுபோன்ற நிலை திருவள்ளுவர் காலத்தில் இல்லை! ஆனாலும், திருவள்ளுவர் ஓருலகமே கண்டார்! பிரிவினையற்ற உல்கமே திருக்குறளின் குறிக்கோள்!

எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? தான் சென்று வாழும் நாட்டையும் ஊரையும் தமது நாடாக - ஊராக ஆக்கிக் கொள்ளும் கல்வியைக் கற்றுக் கொள்ளாதவன் எப்படி வாழ்க்கையில் வெற்றி கொள்ளமுடியும்? இன்று, கல்வி என்றால் ஏட்டுக் கல்வி மட்டும் நினைவுக்கு வருகிறது! ஏட்டுக்கல்வி மட்டும் கல்வியல்ல. பல்வேறு திறன்களையும் பண்பாட்டினையும் கற்றுக் கொள்வதும் கல்வியேயாம்!

ஒரு நாட்டில் சென்று வாழ்ந்தால், அந்நாட்டு மக்களுடன் கலந்து அந்நியமின்றி வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம். அங்ஙணம் வாழவில்லையெனில் சாதலை நிகர்த்த துன்பங்கள் விளையும்! சாகிற அளவு துன்பம் சூழினும் அவருடன் அந்நியமின்றி வாழக்கற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி வாழமுடியும்!

இன்றுள்ள சூழ்நிலையில் மனித குல நினைப்பே விழுமியது; இன்றியமையாதது. அதனை அடுத்துத்தான் நாட்டுவழிமக்கள்! மொழிவழி அமைந்த இனம்! சமயவழி அமைந்த சமுதாயம்! நாடு, மொழி, சமய வேறுபாடுகளைக் கடந்து "மனிதகுல” உணர்வு வளரவேண்டும்! இன்று ஆங்கிலேயர் நன்றாக வாழ்கின்றனர்! அமெரிக்காவை நோக்குங்கள்! ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பல இனத்தவர்களும் கூடி வாழ்கின்றனர்! கூட்டரசு கண்டுள்ளனர்! அதனால், இன்று ஆங்கிலேயர் உலகத்தை இயக்கும் இனமாகத் திகழ்கின்றனர்! சீனர்களும் அப்படியேதான்!

தமிழர்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்தொடங்கியே குடியேறி வாழ்கின்றனர்! ஆனால், தாம் சென்று குடியேறிய நாட்டைத் தமது நாடாக ஆக்கிக் கொள்ளும் திறனைக் கற்றார்கள் இல்லை! அந்தந்த நாட்டு மக்களுடன் இனம் கண்டு கொள்ள இயலாத நிலையில் கலந்து வாழ்ந்தார்கள் இல்லை! ஆங்கிலேயர் உலக மொழிகளுக்குத் தொண்டு செய்ததைப் போலத் தமிழர்கள் பிறமொழிகளுக்குத் தொண்டு செய்வதில்லை! ஏன்? தமது சமய - கலைஞானத்தையும் கூட, மற்றவர்களுக்கு வழங்குவ்தில்லை! ஏன் இந்த நிலை?

குடியேறி வாழும் நாடு, எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? கவலற்க! அந்த நாட்டையே தாய்நாடாகக் கருதுக! அங்கேயே வாழ்க! அந்த நாட்டையே உழைத்து வளமுள்ள நாடாக ஆக்குக! அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்க அந்தந்த நாட்டுக் கலை ஞானங்களைக் கற்றுத் தெளிக! நம் மொழியை அந்த நாட்டு மக்களுக்குக் கற்றுத் தருக! நமது கலைஞானங்களை உலக வீதியில் வாழும் மக்களுக்குத் தருக! தமிழர் வாழ்க்கை, கொண்டும் கொடுத்தும் வாழும் வாழ்க்கை; இந்தக் கலை ஞானத்தை ஏன் மரணத்தின் வாயிலில் நிற்கும் வரையிலும் கூடக் கற்றுக் கொள்ளாமல் காலம் கழிக்கிறீர்! பக்கத்தில் உள்ள மனிதருடன் கலந்து பழகாத வாழ்க்கை, மரணத் துன்பத்திலும் கொடிய வாழ்க்கையல்லவா? வேண்டாம், இந்த மரணவேதனை! எல்லா மொழிகளையும் கற்போம்! நமது மொழிகளை மற்றவர் கற்கும்படி செய்வோம்! நாடுகள் பலவாயினும் ஒர் உலகமே! எல்லா ஊர்களும் சொந்த ஊர்களே! இதுவே வள்ளுவம் காட்டும் வாழ்க்கைமுறை.

உலக வாழ்க்கையில் இந்தத் திருக்குறள் நடைமுறைக்கு வந்துவிட்டால் உலகத்தில் போர் ஏது? மொழிச் சண்டைகள் ஏது? மதச்சண்டைகள் ஏது? இந்தத் திருக்குறளை வாழ்க்கையில் பதிக்கும் நாளிலேயே கெட்ட போரிடும் உலகம் மாயும்! ஓருலகம் தோன்றும்!

"யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு."

(397)

வள்ளுவர் வாக்கு (2)

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்

இந்தத் திருக்குறள் அருமையான செய்திகளை உடையது. தமிழர்க்கென்றே குறிப்பாய் செய்யப்பெற்ற திருக்குறளோ என்று தோன்றுகிறது. குடி என்பது ஒரே குருதிச் சார்புடைமையைக் குறிக்கும் சொல்லாகும். தமிழ் மரபில் குடி, குலம், இனம் - இவை உண்டு. பிறப்பின் வழி உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி முறைகள் இல்லை. குடி என்பது குருதி வழி மரபு. இது இன்றைய அறிவியல் உலகத்திலும் ஏற்றுக்கொள்ளப் பெற்ற உண்மையேயாகும். ஒருவர் குறைந்த அளவு தாம் பிறந்த குடியையாவது சிறப்புற வாழச்செய்யவேண்டும் என்பது திருக்குறள் நெறி. அதனால் "குடி செயல் வகை" என்றே ஒர் அதிகாரம் அமைந்திருக்கிறது.

குடி செய்தல் என்பது, தாம் பிறந்த குடியில் உள்ள உற்றார் அனைவரையும் வளத்தோடும் மகிழ்வோடும் வாழச் செய்தலாகும். ஒவ்வொருவருக்கும் இது தவிர்க்க இயலாத கடமை. தாம் பிறந்த குடியை வளர்க்கும் பணியில் ஈடுபடுவோர், பருவகாலங்கள் நாள், கிழமைகள் பார்க்க வேண்டியதில்லை என்பது திருவள்ளுவர் கருத்து.

தமது குடிப்பிறந்தாரை நலமாக வாழ்விக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் பருவம், நான், கிழமை முதலியன பார்த்துக் காலத்தைக் கடத்தினால் பல்வேறு இழப்புகள் தோன்றும் என்ற கருத்தில் "பருவம் இல்லை" என்றே கூறுகிறது, வள்ளுவம். அடுத்து பருவத்தையும் நாளையும் கிழமையையும் எதிர்பார்த்து "இன்று” “நாளை” - என்று கடமைகளை ஒத்திப்போடுவது சோம்பலாகும்.

உலகில் உயிர்களுக்கு இயற்கை சுறுசுறுப்பாக இருத்தல்; சோம்பியிருப்பது செயற்கை, சோம்பியிருத்தல் கூடாது என்பதை வலியுறுத்த, "மடி செய்து" என்றார். அடுத்து "மானம் கருதக் கெடும்" என்பது மிக முக்கியமான பகுதி. மானம் என்பது பெருமை என்று பொருள்படும். மானிட சாதிக்கு மானம் பெரிது என்று "மானம்" என்ற அதிகாரத்தில் திருவள்ளுவரே வலியுறுத்தியுள்ளார். தமது உடம்பில் உள்ள ஒரு சிறு உரோமத்தை இழந்தாலும் வாழாத கவரிமானைப் போல மானமிழந்தபின் வாழக் கூடாது என்று "மானம்” என்ற அதிகாரத்தில் திருக்குறள் வலியுறுத்துகிறது.

ஆனால், இந்தக் குறிப்பிட்ட அதிகாரத்தில் மானம் கருதக் கூடாது என்று திருக்குறள் கூறுகிறது. இஃது என்ன, திருக்குறளில் முன்னுக்குப்பின் முரண் என்று எண்ணத் தோன்றுகிறதா? திருக்குறளில் ஒன்றும் முரண்பாடு இல்லை! இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும்.

பொதுவாக எந்த ஒரு நற்பண்பும் காலப்போக்கில் பொய்ம்மையாகப் போய்ப் பிடிவாதத்திற்கு இரையாதல் உண்டு, இந்த நிலையில் மானம் என்பது பொய்ம்மையைத் தழுவிய மானமாகி விடுகிறது! இயல்பாக உள்ள பெருமையில்லாமல் மற்றவர்கள் தன்னை மதிக்கவேண்டும் என்ற உணர்வில் ஒரு பொய்ம்மையான மான உணர்வு உறவுகளையும் பகையாக மாற்றிச் சீரழிவு செய்துவிடும்.

பெரும்பாலும் இத்தகு பொய்ம்மை மானத்தால் அழிந்த குடும்பங்கள் பல! பிரிந்த நண்பர்கள் எண்ணிலர்! நலிந்த காதலர்கள் பலர்! உடைந்த இயக்கங்கள் பலப்பல! இத்தகு பொய்ம்மை மானம்போற்றி ஒழுகின் தாம் பிறந்த குடியை வளர்க்கமுடியாது என்று திருக்குறள் ஐயத்திர்கிடமின்றிக் கூறுகிறது!

இத்திருக்குறளுக்கு அரிய இலக்கியமாக அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்த தலைவர் ஒருவர் இருந்தார்! தம்மை இழித்தும் பழித்தும் பேசிப்புறக்கணித்து ஒதுக்கிய தலைவர்களிடத்திலும் குடிமைப் பண்பின் காரணமாக அயராது தனது அன்பையும், மதிப்பையும், காட்டி வாழ்ந்து, தாம் பிறந்த தமிழ்க் குடிக்கு வெற்றியைத் தேடித் தந்த அறிஞர் அண்ணாவை யார்தான் மறக்க இயலும்?

நாமும் அவ்வழியில் தமிழ்க் குடியினை வளர்க்கும் பணியில் பருவம் பார்க்காது, சோம்பலின்றி, மானம் கருதாது உழைப்போமாக!

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்

வள்ளுவர் வாக்கு (3)

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

இந்தத் திருக்குறளின் பொருளை நோக்க இது விருந்தோம்பல் அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? ஈகை அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? ஒப்புரவறிதல் அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? அல்லது குடிசெயல்வகை அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? - என்றெல்லாம் சிந்தனை ஒடும்! ஆனால் இந்த அதிகாரங்களில் இந்தத் திருக்குறள் இல்லை! பின் எந்த அதிகாரத்தில் இருக்கிறது? "கொல்லாமை" அதிகாரத்தில் இந்தத் திருக்குறள் இருக்கிறது? ஏன்? என்ன இயைபு?

ஒருவனை, கருவிகள் கொண்டு கொலை செய்தல் மட்டும் கொலை என்ற கருத்து இன்று நிலவுகிறது! சமய நூல்கள், சட்டங்கள் இப்படித்தான் கூறுகின்றன! ஆனால், திருவள்ளுவர் இதில் ஒரு புதிய சிந்தனையைத் தூண்டுகிறார்! தருகிறார்! வாழப்பிறந்த உயிர்களுக்கு வாழ்வளிக்க வேண்டிய பொறுப்பு, சமுதாயத்திற்கு இருக்கிறது. அரசுக்கு இருக்கிறது! ஏன்? ஒவ்வொரு மனிதனுக்குமே இருக்கிறது! இங்ஙனம் கடமை உணர்ந்து செய்தலே அறம்! உலக மொழிகளின் மறைநூல்கள், மற்ற இலக்கியங்கள் ஆகியவற்றில் கூறப்படும் அறங்களில் எல்லாம் சிறந்தது. பகுத்துண்டு வாழ்தல் என்ற அறம். இது நூலோர் தொகுத்துக் கூறும் அறங்கள் பலவற்றிலும் சிறந்த அறம். தலையாய அறம்!

‘பகுத்துண்டல்’ என்றால் வெந்த சோற்றைப் பங்கிட்டு உண்ணுதல் என்ற அளவில் மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. இங்ஙனம், கொள்வதற்கு, "பல்லுயிர் ஒம்புதல்” என்ற பின் வரும் சொற்களும் அச்சொற்களின் கருத்தும் தடையாக உள்ளன. "ஓம்புதல்” என்ற சொல், அகன்ற - உயர்ந்த பொருள் நோக்குடையது. ஓம்புதல் என்ற சொல் பாதுகாத்தல், வளர்த்தல், வாழ்வித்தல் என்ற பொருள்களையும் தருகின்றது. அதாவது; உணவு, மருந்து முதலியவற்றால் பாதுகாத்தல், கல்வி - கலைஞானங்களால் வளர்த்தல், தக்காங்கு தாமே வாழும் தகுதியைப் பெறச் செய்து வாழ்வித்தல் என்றெல்லாம் பொருள் தரும். இத்தகைய கடமைகளைச் சோறு வழங்குவதால் மட்டும் இயற்ற இயலாது உயிர் வாழ்வதற்குரிய நுகர்பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்திக் களங்களைத் தனி உடைமையிலிருந்து பொதுவுடைமையாகப் பகுத்துக் கொண்டும் உறவும் உணர்வும் கலக்கக் கூடி உண்டும், வாழ்தல் வேண்டும். இத்தகு வாழ்க்கை அறவாழ்க்கை.

அறம் என்றால் கடவுளை நோக்கிச் செய்ய வேண்டும் என்பதல்ல. மனிதனை நோக்கி மனிதனுக்காகச் செய்தாலும் அறமேயாம்! இல்லை, அதுவே அறம்! இந்தத் திருக்குறள் இன்னும் வாழ்வாக மலரவில்லை! மீண்டும் மீண்டும் நமது நாட்டு மக்கள் மனித குலத்தை ஒருமைப்படுத்தி உண்பித்து வாழ்விப்பதை அறமாக ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை! ஆரவாரமான கடவுட் பூசைகள், வேள்விகள், சடங்குகளிலேயே ஈடுபடுகின்றனர். ஏன்? நமது நாட்டின் அறிஞர்களில் பலரும் கூட இத்தீமைக்கே ஆளாகி உள்ளனர். இது நன்றன்று; தீதேயாம்.

செல்வம் பொதுமையானது. பலரும்கூடி உண்டு வாழவேண்டும். எல்லா உயிர்களும் உண்டு, உடுத்து வாழ்வதற்குரிய செல்வத்தினை உழைப்பால் பெறவேண்டும். உழைப்பதற்குரிய வாய்ப்பும், உழைப்பால் உற்பத்தியாகும் செல்வம் மற்றவர்களால் கவரப் பெறாத சமுதாயப் பாதுகாப்பும் வேண்டும். சோற்றால் மட்டுமே உயிர்வாழ்வு அமைந்துவிடுவதல்ல. களிப்பும் மகிழ்ச்சியும் தேவை; கல்வியும் கலைஞானமும் தேவை; மெய்யுணர்வும் தேவை இவற்றைச் சமுதாயமும் அரசும் உயிர்க்குலத்திற்கு வழங்கவேண்டும். அப்போதுதான் சமுதாயம் வளரும்; வாழும்; இன்பஉலகு அமையும்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

(322)

என்ற குறள்நெறி வையகத்தின் வாழ்வு நெறியாக மலர உரிய கடமைகளைச் செய்வோம்! செல்வக் குவியலைத் தவிர்ப்போம்! உடைமையாளராக வாழ்வதைவிட, பலருக்கும் உறவினராக வாழ்வதையே விரும்புவோம்! செல்வத்தைப் பொதுமை செய்வோம்! பலரோடும் கூடிப் பகுத்துக்கொண்டு, உண்பித்தும் உண்டும் மகிழ்வோம்! மகிழ்வுறுத்துவோம்! இதுவே வள்ளுவம் காட்டும் வாழ்க்கை; அன்பு வாழ்க்கை! அறவாழ்க்கை.

6

தமிழமுது

* * *

1. வள்ளுவம் ஏன் பிறந்தது?

தமிழினம் காலத்தால் மூத்த இனம்; நிலவுலகத்தை மூடியிருந்த நீர்ப்பரப்பு மறைந்து, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி வீரத்தில் மட்டுமன்று, சிந்தனைத் திறத்திலும் சிந்தனையைச் செப்பும் மொழித் திறத்திலும், இலக்கியப் படைப்பாற்றலிலும் இலக்கியத்தின் பயனாகிய நனி நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இனம், தமிழினம். செல்வச் செழிப்பும் இருந்தது. அதனால், காலப்போக்கில் மதோன்மத்தமான வாழ்க்கையை நடத்தத் தொடங்கிவிட்டனர். கள்ளும், காமமும் இடம் பெற்றன. ஐந்திணை ஒழுக்கத்திற்குப் பதில் பரத்தையர் ஒழுக்கம் கால்கொண்டது. ஓரினத்திற்குள் உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் தலைகாட்டத் தொடங்கின. அவ்வழி, பல்குழுத் தோற்றமும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் வளரத் தொடங்கின. பொழுது விடிந்தால் பொழுது போனாற் போலப் பண்பாட்டை வளர்க்கும் சமய நெறிகளும் பல

தி.16. வாயினமையின் காரணமாகச் சமயநெறியாளர்களுக்குப் பதில் சமயக் கணக்கர்கள் சமுதாயத்தில் தோன்றினர்.

அவர்களும் சமுதாயத்தைப் பண்பியல் வழியில்-அமைதி நெறியில் ‘இவர் தேவர் அவர் தேவர்’ என்று இரண்டாட்டுகின்ற புன்னெறியை வளர்த்தனர். இங்ஙனம் புகழ்பூத்து வாழ்ந்த தமிழனத்தில் வீழ்ச்சியுறும் நிலை தலை காட்டிய பொழுது திருவள்ளுவர் பிறந்தார். இருள் கடிந்தெழுகின்ற ஞாயிறெனத் தோன்றினார் திருவள்ளுவர். திருவள்ளுவர் என்ற ஞாயிறு கனன்ற கதிரொளியே திருக்குறள், ஓரினத்தை அழிவு வராமல் பகைப்புலத்தில் காக்கும் போர் வீரனை விட வாழ்வியல் நெறியில் நயத்தக்க நாகரிகத்தினைக் கட்டிக் காப்பாற்றிய வள்ளுவர் போற்றுதற்குரியர். ஏழேழ் பிறப்பும் போற்றுதற்குரியர்; வடபுலம் கண்டு வாகை கொண்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வெற்றியை விட செந்தமிழ்ப் பேராசான் திருவள்ளுவர் புகழ் போற்றுதலுக்குரியது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வெற்றி ஒரு பொழுதே பகை தடுத்தது. நாவலர் வள்ளுவர் வெற்றி ஊழி ஊழிக் காலத்திற்கு வெற்றி கொண்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வெற்றி பகை மட்டுமே தடுத்தது; பண்பினை வளர்க்கப் பயன்படவில்லை, திருவள்ளுவர் செய்த திருக்குறளோ நந்தமிழ் நெறியினை நஞ்சனைய நெறியின் கலப்பினின்று தடுத்துக் காப்பாற்றியது. நமது சமுதாயத்தை வாழ்வாங்கு வாழும் நெறியில் வழிநடத்தியதன் மூலம் பண்பியலையும் பேணிக் காத்து வந்திருக்கின்றது.

வள்ளுவம் வையகத்து வரலாற்றின் சந்திப்பில் பிறந்தது; வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பிறந்தது; தேங்கிக் கிடந்த சமுதாயத்தில் தெளிவு காணப் பிறந்தது; நூல்கள் பல கற்பதிலும் நுண்ணிய அறிவு ஆற்றலுடையதெனக் காட்டப் பிறந்தது. கல்வி, கற்கின்ற ஆற்றல்ைப் பொறுத்ததல்ல, கசடு அறுத்தலிலேயே இருக்கிறது. என்று உணர்த்தப் பிறந்தது; மண் வழிப்பட்ட உடைமைகளிலும் உள்ளம் உடைமையே உடைமையென உணர்த்தப் பிறந்தது; ஆனதைக் கதையாக்கிக் கவலையாக்கிச் சாகாமல், தடுக்க ஆவது காட்டப் பிறந்தது. நிலத்தில் துய்மை, உடலில் துய்மை, நெற்றியில் தூய்மை இவையனைத்தும் கைகள் செய்பவை. இந்தத் துய்மை பெருகி வளர்ந்தும், பேணும் சமுதாயம் பகையினின்றும் விடுதலை பெற்றபாடில்லை. நன்செயலின் தோற்றமும் நஞ்சையிலில்லை; புன்செயலின் தோற்றமும் புஞ்சையிலில்லை. காழ்ப்பின் தோற்றம் காசுகளிலில்லை. கலகங்களின் தோற்றம் கடவுள்களிட்டதில்லை. கொலையுணர்வின் தோற்றம் கொடுவாளிடத்திலில்லை. உருக்குலைக்கும் உட்பகையின் தோற்றம் உடலின்கண் இல்லை, ஆங்கிலங்கும் நீற்றிலில்லை. பின் எங்கு? நஞ்சின் நிலைக்களம் மனமேயாம். மனத்துக் கறுப்பு வைத்து மாநிலம் முழுதும் தூய்மை செய்தாலும் பயனில்லை என்று பாங்குறக் காட்டி மனத்தின் கண் மாசறுத்து மகிழ்வூட்டப் பிறந்தது வள்ளுவம்.

மனிதன், உருவெளித் தோற்றத்தால் தனி மனிதன்; மக்கட் கணக்கெடுப்பில் தனி மனிதன், வயிற்றால் வாயால் தனி மனிதன், ஆயினும், அவன் படைத்திடும் வாழ்க்கை தனி மனித வாழ்க்கையன்று; சமுதாய வாழ்க்கை-கூட்டு வாழ்க்கை அவனிடத்தில் உருவாகித் தோன்றும் உணர்வுகள் உலகம் தந்த உணர்வுகளேயாம். ஈண்டு உலகம் என்பது மனித சாதியை நினைத்தேயாம். எனவே, இயற்கை உலகம், மனித சாதியினைப்போல எளிதில் ஒழுக்கங்களைக் கடப்பனவல்ல; முறைகளை மீறுவன அல்ல; நீதிகளை நீப்பன அல்ல. இயற்கை உலகில் மாற்றங்கள் உண்டு; ஆனால் ஏமாற்றங்கள் இல்லை. மனித சாதியிலோ முறைகளை எளிதில் கடந்த சிலச் சிதைவினையும், ஏமாற்றங்களையும் வரலாறுகளே படம் பிடித்துக் காட்டுகின்றன; இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. கீழே விழுந்துவிடாமல் தம்மை அடிக்கடி தூக்கி நிறுத்திக் கொண்ட மனிதசாதி கெட்டதைப் போல செடிகள் உலகம் கெடவில்லை. கொடிகள் உலகம் கெடவில்லை. விலங்குகள் உலகமும் கெடவில்லை. ஆனால் மனிதனோ தம்பட்டம் அடித்துக்கொள்கிறான். விலங்குகளுக்கு ஐந்து அறிவாம். இவனுக்கு ஆறாவது அறிவாம் ஐயகோ, மனிதர்களே! வாயும் வார்த்தைகளும் கிடைத்தமையால் ஏன் இப்படி வையகத்தை ஏமாற்றுகிறீர்கள்? எங்கேயிருக்கிறது உங்கள் ஆறாம் அறிவு? நமக்கு அறிவு இருப்பதன் அடையாளம் என்ன? அதற்கு பதில் ஆரவாரம்தானோ? விலங்குகளும் துன்பம் அனுபவிக்கின்றன. ஆனால் ஓர் அதிசயம்! விலங்குகள் அனுபவிக்கும் துன்பங்கள் பெரும்பாலும் இயற்கை வழியில் வந்த துன்பங்கள். ஒரோவழி, அறிவின்மையின் காரணமாகச் சில அவலங்களையும் அடைகின்றன. ஆயினும் மனிதச் சாதியைப்போல செயற்கை இன்பங்களும் செயற்கைத்துன்பங்களும் விலங்கினத்திற்கு கிடையா! அறிவிருப்பதைக் காட்டுதற்குரிய அன்பு பிறந்திருக்கிறதா? "மேடையில் தான் பிறக்கிறது! வணிகம்தான் நடை பெறுகிறது!” என்று இடித்துக்கேட்க- “அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" என்று வள்ளுவம் பிறந்தது.

வாழ்க்கையென்பது, ஒன்றரையடியில் பிறந்து ஆறடிக்கு வளர்ந்து மண்ணுக்கு உரமாகவோ? நிலத்தில் விளைந்தவைகளைத் தின்று திரிந்து கதை முடிக்கவோ? உண்ட உணவின் கொழுப்புகளால் விளைந்த உடலெரிச்சலைக் கூடித் தணித்துக் கொள்ளவோ? இல்லை, இல்லை! மனிதன்-அவனே வையகத்தின் நாயகன்! கடவுளின் சாட்சியாக விளங்க வேண்டியவன்! அவன் வாழ்வாங்கு வாழ்ந்தால், வையகம் வளரும்; வானகம் மண்ணுக்கு வரும். அங்ஙனம் வாழ்தல் வாழ்க்கை என்று காட்ட, "வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!” என்று வள்ளுவம் பிறந்தது.

மண்ணுக்கு இயற்கையில் உயிர்ப்பாற்றல் இருக்கிறது. அந்த உயிர்ப்பாற்றலின் வழி இழுத்தெறியப் படாமல் மேலே உயர உயர ஓங்கி வளர, இயற்கை ஆற்றலும் தந்தது. விலங்குகளுக்குக் கால்களும், மரம், செடி கொடிகளுக்கு வேர்களும் கிளைகளும் அந்த நோக்கத்துடனேயே அமைந்தனவாம். அவைகள் மண்ணிடை வேர் பாவிக் கிளைகள் விட்டு அதன் உயிர்ப்பாற்றலின் சக்தியைத் தடுத்து நிறுத்தித் தன்னை இழுத்தெறியும் ஆற்றலுடைய மண்ணையே, தான் நின்று நிறுத்தி வளரும் களமாக மாற்றித் தாம் வளர்வதோடன்றிப் பூத்துக் குலுங்கிக் காய்ப்பதோடன்றி விலங்குகளுக்கும் மனித உலகத்துக்கும் கூட வாழ்வளிக்கின்றன. ஆனால் மனிதனோ, மண்ணின் ஆற்றலால் உடல் மட்டுமின்றி உள்ளத்தையும் பறிகொடுத்துத் தானும் வாழாமல் மற்றவர்களுக்கும் வாழ்வளிக்காமல் பயனின்றி நடமாடுகிறான். அதனாலேயே வாழ்வாங்கு வாழ்தலைத் தெய்வமாக்கினார். வள்ளுவர் காலத்தில் மனிதர் பூசித்தது தெய்வத்தை பூசிப்பவன் ‘சாத்தான்’. ஆனால் பூசனையால் வரும் பயனென்ன? தெய்வ மணம் கமழும் இனநலம் உடையவனே தெய்வத்தைப் பூசித்தற்குரியவன். சாத்தானின் இடம் சுடுகாடு. தெய்வங்களின் இடம் மனித இனம் நடமாடும் மலர்ச்சோலை; திருக்கோயில்கள்; ஆதலால், சாத்தானாக விளங்கும் மனிதனைத் தெய்வமாக்கவே வள்ளுவம் பிறந்தது. ‘வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வம்’ என்று வள்ளுவம் பேசுகிறது.

வள்ளுவம் ஏன் பிறந்தது? என்று இதயத்தில் பட்டதை எழுதியிருக்கிறோம். வள்ளுவம், பதவுரை, பொழிப்புரைக்காகப் பிறக்கவில்லை; பாராட்டுரைகளுக்காகப் பிறக்க வில்லை. மண் செழிக்க மழை பொழிவதுபோல, மனிதகுலம் செழிக்க-மனித உள்ளங்கள் செழிக்க-உலகு செழிக்க-உயர்கடவுள் சிரித்து மகிழ வள்ளுவம் பிறந்தது! முடிந்தால்-மனமிருந்தால் வள்ளுவம் பிறந்ததன் பயனையடைய வழி காணுங்கள். வையகம் சிறக்கும்! அல்லது வழக்கம்போல வாழ்த்துரைகளில் வாழ்நாளை வீணாக்குங்கள்! அஃது உங்கள் விருப்பம்! வள்ளுவரே, ‘ஏவவும் செய்கலான் தான் தேரான்’ என்று நொந்து கூறியுள்ள பொழுது நாம்தான் என்ன செய்ய முடியும்? வளர்க வள்ளுவம்.

2. திருக்குறளும் ஒருமைப்பாடும்

சுதந்திர பாரதத்திற்கு ஒருமைப்பாடு இன்றியமையாதது என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட முடிபு. புரட்சிக் கவிஞன் பாரதி, பாரத நாட்டின் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் பறித்து எடுத்துக் கொண்டதாகக் கூறவில்லை. அதற்கு மாறாக, சுதந்திரம் தவறிக் கெட்டுப் போய்விட்டது என்று குறிப்பிடுகிறான். "விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரததேசம்’ என்றே பாடுகின்றான், சுதந்திரம் தவறிக் கெட்டுப் போனதற்குரிய அடிப்படைக் காரணம் பாரத நாட்டு மக்களிடையே நிலவிய வேற்றுமைகளேயாம். பாரத நாட்டு மக்களிடையே ஒத்த உரிமையுணர்வு இல்லாது போய் பல நூற்றாண்டுகள் ஆயின. சாதி, இனம், மொழி, சமயம் ஆகிய வேறுபாடுகளால் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகளாகப் பிறந்திருந்தும் பற்றும் பாசமுமின்றிக் காழ்ப்பொடு கூடிய கலகம் விளைவித்துக் கொண்டனர். இதன் பயனாக நம்முடைய பேரரசுகள் வீழ்ந்தன.

இந்த வேற்றுமையுணர்ச்சிகளை இலக்கியத் துறையிலும் சரி, சமயத் துறையிலும் சரி எதிர்த்துப் புரட்சி செய்த சான்றோர்கள், இமயம் முதல் குமரி வரையில் பரந்து கிடக்கும் பாரத பூமியில், பலர் தோன்றினார்கள். ஆயினும் நிறைந்த பயன் கிடைக்கவில்லை. பயன் விளையாமைக்குக் காரணம் சிந்தை வேறு, சொல் வேறு, செயல் வேறு பட்ட வாழ்க்கையேயாம்.

ஒருமைப்பாடு என்பது ஒரு மிகச் சிறந்த பண்பாடு. ஒருமைப்பாடு ஒரு கலை; ஒரு நோன்பு, அகத்தில் ஒத்து, ஒத்த உரிமையினராகி எல்லோரும் இன்புற்று வாழ, வகை செய்வது ஒருமைப்பாடு. ஒருமைப்பாட்டுணர்வு மெல்ல மெல்ல வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விழுமிய பண்பாகும். உலகியற்கையில்-இறைநலப் படைப்பில் ஒருமைப்பாடே அதிகம். அங்கு மோதலில்லை. அந்தரத்தில் தொங்கும் அண்டசராசரங்களும் கூட ஒன்றோடொன்று மோதாமல் இயங்குகிற அமைப்பில் வியத்தகு ஒருமைப் பாட்டினைப் பார்க்கிறோம். வெளித்தோற்றத்தில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் ஒருமைப்பாடே மிகுதியும் மேம்பட்டு விளங்குகிறது. வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமை-ஒருமை காண்பது பாரதப் பண்பு. இந்தப் பண்பின் வழியாகப் பாரிலுள்ளோரைப் பகையின்றி வாழச் செய்யலாம்.

ஒற்றுமையும், ஒருமைப்பாட்டுணர்வும் ஒன்றல்ல ஒற்றுமையென்பது தற்காலிகமான கூட்டுச் சேர்க்கை. அது தற்காலிகமானதாகவும் இருக்கலாம். நிர்பந்தத்தின் காரணமாகவும் இருக்கலாம். ஒற்றுமையைவிட ஒருமைப்பாடு மிக மிக உயர்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகுக்கு ஒரு நூல் செய்த திருவள்ளுவர் ஒருமைப் பாட்டையே உயர்த்திப் பார்க்கிறார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அவர் வாக்கு மேலும் அவர்,

"ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து"

என்றார்.

மானிட இனத்தின் சிறப்புமிக்க இயல்பு ஒழுக்க முடைமை. திருவள்ளுவர் ஒழுக்க நெறியில் பலவற்றைப் பகுத்துக் கூறினாராயினும் ‘உலகத்தொடொட்ட ஒழுகல்’ மிகச் சிறந்த ஒழுக்கமென வரையறுத்து வற்புறத்திக் கூறுகின்றார்.

இன்றைய சூழ்நிலையில் நமது பாரத நாட்டுக்கு ஒருமைப்பாடு மிகவும் தேவைப்படுகிறது. நாள்தோறும் செய்தித் தாள்களைப் புரட்டினால், ஒரு கந்தல் துணியைப் பார்ப்பது போன்ற ஒர் உணர்ச்சி நமக்கு ஏற்படுகின்றது. அதாவது இன, வகுப்புக் கலவரச் செய்திகளையும் அரசியல் காரணமாக ஏற்படும் குழுக்களில் ஏற்படும் பகைமையுணர்ச்சியால் விளைந்த மோதல்களையும் செய்தித்தாள்களில் நிறையப் படிக்கிறோம். இந்தச் செய்திகளைப் படிக்கின்ற ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டியவனாக இருக்கிறான். தென்னகத்தில் தாய்மொழிப்பற்று இயற்கையாகவே உண்டு. ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டை தாய்மொழியுணர்ச்சிக்கு பின் தள்ள முடியாது. அதுபோலவே நாலைந்து மொழிகளுக்கு மேலாகப் பேசப்பெறும் நாட்டில் ஒரு மொழியின் மூலம் ஒருமைப்பாட்டை உண்டாக்க முடியாது. அது போலவே ஆட்சிமுறைச் சட்டங்களாலும் ஒருமைப்பாட்டை உருவாக்கி விடமுடியாது.

ஒருமைப்பாடு என்பது உணர்வின் பாற்பட்டது. அது ஒரு கலை; அது ஒரு தவம். ஒருமைப்பாட்டுணர்வினைப் பயிலுதல் எளிதன்று. ஒரும்ைப்பாட்டை சிந்தனை, கல்வி, வாழும் இயல்பு ஆகிய வழி வகைகளாலேயே காண முடியும். அதனாலன்றோ, "ஒரு நாட்டுமக்களை ஒத்த உரிமையுணர்வுடன் இணைக்க ஒரு சிறந்த தேசிய இலக்கியம் இருக்க வேண்டும்" என்று கார்லைல் கூறினான்.

பாரத நாடு விடுதலை பெற்று பல ஆண்டுகளாயிற்று. பாரத நாட்டின் தனி-பொது அரசியல் வாழ்க்கை விரிந்த மக்களாட்சி அடிப்படையில் அமைந்துள்ளது. எந்த ஒரு வருடைய அல்லது எந்தவொரு இனத்தினுடைய அடிப்படை உரிமைகளுக்கும் பாதுகாப்பு உண்டு, ஆயினும் பாரத நாட்டின் பொது நலனுக்கு இடையூறு செய்கின்ற தனி நலன்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கன அல்ல. ஒருவருடைய நலன் பலருடைய நலங்களுக்கு கேடுவிளைவிப்பதாயின் அது ஒரு நலனே அல்ல; தீமையேயாம். நன்மை நன்மையைத் தோற்றவிக்குமே தவிர தீமையைத் தோற்றுவிக்க முடியாது. ஆதலால் உயர்ந்த கல்வி-மறந்தும் மாறுபாடுகளைக் காட்டாத கல்வி-மூலமே ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். ஆதலால் தான் தேசீய இலக்கியம் வேண்டுமென்று கார்லைல் கூறுகிறான்.

பாரத நாட்டு இலக்கியங்களில் பெரும்பான்மையானவை மொழி, இன, சமயச் சார்புடையனவேயாம். இவைகளின் சார்பில்லாத இலக்கியங்களில் இருப்பது அருமை. இஃது உலகியற்கை. இன்று உலகின் நெருக்கம் வளர்ந்திருப்பது போலப் பண்டு இன்மையின் காரணத்தினாலும், போர்க் கருவிகளின் ஆற்றல் பெருகி வளர்ந்திருப்பதன் காரணத்தினாலும், இன்று ஒருமைப்பாடு இன்றியமையாத் தேவையாகிறது. பாரத நாட்டு இலக்கியங்களில் திருக்குறள் ஈடு இணையற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இனம், மொழி, சமயச் சார்பின்றி மனித உலகத்தின் நல்வாழ்க்கையை மையமாக வைத்துச் செய்யப்பெற்ற சிறந்த நூல் திருக்குறள். திருக்குறள் எடுத்துக் கூறும் ஒழுக்க நெறிகளும் கற்பனையில் தோன்றியவை அல்ல; அதீதமானவைகளுமல்ல. சாதாரணமாக ஒரு சராசரி மனிதன் நடைமுறைப்படுத்தக் கூடிய வாழ்க்கை முறைகளையே ஒழுக்கமென்று கூறியுள்ளார் திருக்குறளாசிரியர். சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற ஒழுக்கங்களை அவர் இந்நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.

மனித சமூகத்தினைச் சார்ந்த ஒழுக்க நெறிகளைப் பேணி வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். இதுவே திருவள்ளுவரின் இலட்சியம். இந்த ஒரே நோக்கத்தோடு செய்யப்பெற்ற நூல் திருக்குறள். திருக்குறள் ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று வரையறுத்துக் கூறுவதால், பிறப்பின் வழிப்பட்ட வேற்றுமைகளைக் களைகிறது. ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’ என்று கூறினமையால், சமூக ஒழுக்க நெறியை எடுத்துக்காட்டுகிறது. ஒழுக்கங்களில் உயர்ந்த ஒழுக்கமாகிய ஒப்புரவினால் பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை மாற்ற முடியும். பொருளியல் ஏற்றத்தாழ்வு குறைந்து சமநிலைச் சமுதாயம் அமைந்தால் சமுதாயமும் ஒன்றுபடும். ஒழுக்க நிலையும் உயரும்; இன்பமும் பெருகும்.

திருவள்ளுவர் கல்வியை ஒருமைப்பாட்டுக் கல்வியாகவே கருதுகிறார். ஒருமையுணர்வினைத் தராத கல்வியை-அறிவை திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்"

என்றும்,

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு”

என்றும், கூறியிருப்பது அறியத் தக்கது. எல்லா நாடுகளையும், எல்லா ஊர்களையும் தமதென ஏற்றுத் தழுவி வாழுதலுக்கே கல்வி தேவையென்று கருதுகின்றார் திருவள்ளுவர். இதனை,

"யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு”

என்ற குறளால் அறியலாகும்.

ஆதலால், பாரத நாட்டு ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு உடனடியான தேவை பாரத நாட்டு இலக்கியம். அதாவது-தேசிய இலக்கியம். நிலம், குலம், சமயம், இனம், மொழி ஆகிய எந்தச் சார்பினையும் சாராது மானிடச் சமுதாயத்தின் மேம்பாட்டினைக் கருதியே செய்யப்பெற்ற நூலை உடனடியாகப் பாரத நாட்டு இலக்கியமாக அறிவிக்கவேண்டும்.

இமயம் முதல் குமரி வரை வாழும் அனைத்து மக்களின் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் அடிப்படைச் சுருதியாகத் திருக்குறள் அமைய வேண்டும். அதுபோழ்து பாரத ஒருமைப்பாடு உருவாகும். பாரத சமுதாயமும் வளரும.

3. எது தவம்?

திருக்குறள் ஒர் ஒழுக்க நூல்-ஆயினும் விஞ்ஞானப் பார்வையில் தலைசிறந்து விளங்கும் நூல். திருக்குறள் காட்டும் ஒழுக்கநெறி அறநெறி. மனித இயல்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நடைமுறைப் படுத்தக் கூடியவையாகவே கூறப் பெற்றிருப்பது எண்ணி உணரத் தக்கது. வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட-நடைமுறைச் சாத்தியமற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை-வாழ்வாங்கு வாழ்தல் என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது. அங்ஙனம் வாழ்பவர்கள் தெய்வமெனப் போற்றப்படுவார்கள் என்று திருக்குறள் கூறுகிறது.

வாழ்க்கை என்பது கடமை என்ற செயற்பாட்டுக் காகவே. சிறந்த சமய நூல்களும் உயிர்கள் வாழ்க்கைக் களத்தில் கடமைகளைச் செய்வதன் மூலம் அறிவும் அனுபவமும் பெற்று இறுதியில் துன்பச் சூழலினின்றும் விடுதலை பெறுகின்றன, என்றே கூறுகின்றன. கடமைகளைச் செய்வதற்கு உயிர்கள் தமக்கு இயைபான களங்கள் அமைத்துக் கொள்கின்றன. அதற்குக் களங்களே இல்லறம், துறவறம் என்றமைகின்றன. இவையிரண்டுமே கடமைகளின் பாற்பட்டனவே. இல்வாழ்வான் கடமைகள் சற்று தன்னலச் சார்பும், குடும்பச் சார்பும் தழுவினவாக இருக்கும். இந்த வாழ்க்கைக்குச் சில விதி விலக்குகள் உண்டு. துறவற வாழ்க்கைக்குத் தன்னலச் சார்பே இல்லாத பிறர் நலம் கருதிச் செய்கின்ற கடமைகளேயுண்டு. இங்கு விதி விலக்குகள்-மிகமிகக் குறைவு. ஏன்? இல்லையென்றே கூறலாம். ஆயினும், இவ்விருவகை வாழ்க்கையின் இலட்சியமும் கடமைகளைச் செய்தலேயாகும்.துறவறம் அல்லது தவ வாழ்க்கை என்றால் கடமைகளினின்று விடுதலை பெறுதலல்ல. கதே என்று தத்துவஞானி கூறியதுபோல, ஞானிகளின் கடமை உலகத்தைத் துறந்து ஓடிவிடுவ தன்று-உலகத்தோடு ஊடுருவி உண்ணின்று அதன் இயல்பறிந்து அதனுள் விழாமல்-வீழ்பவர்களையும் காக்கப் பணிகள் செய்தலேயாகும்.

திருவள்ளுவர் துறவற இயலில் ‘தவம்’ என்றஅதிகாரத்தில்

"தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றெல்லாம்

அவம்செய்வார் ஆசையுட் பட்டு"

என்று குறிப்பிடுகின்றார். இந்தத் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள், வாழ்க்கையைத் துறந்து தவம் செய்கின்றவர்கள் தம்முடைய காரியத்தைச் செய்கிறார்கள் என்பது போலப் பொருள் காண்கிறார்கள். அங்ஙணம் செய்யாதவர்கள் ஆசையுட்பட்டு பாவம் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்தத் திருக்குறளுக்கு இன்னும் சற்று விரிந்த நிலையில் பொருள் காண்பது நல்லது ‘தம்கருமம் செய்வார் தவம் செய்வார்’ என்று கொண்டு கூட்டிப் பொருள் காண்பது சிறப்பாக இருக்கும், மனித வாழ்வியலில் அவர்களுக்கென்று கடமைகள் அமைந்துள்ளன. அவர்களும் அவரவர் கடமைகளை உணர்ந்து செய்யாமையினால் தம்மையும் கெடுத்துக் கொள்ளுகிறார்கள். அவர்களோடு தொடர்புடையதாக இருக்கிற சமூகத்திற்கும், கேடு செய்கிறார்கள். இதன் விளைவாகச் சமூகச் சிக்கல்கள் பெருகி, அழுக்காறு அவா வெகுளி போன்ற இழி குணங்கள் பெருகி வளர்ந்து மனித சமுதாயத்தை அலைக்கழிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகக் கடமைகளைச் செய்வதன் மூலமே உயிர்களைப் பரிணாம வளர்ச்சியில் ஈடுபடுத்தி தகுதிப் படுத்தி ஆட்கொண்டருளும் இறைவனுடைய திருவுள்ளத்திற்கும் மாறாக வாழ்ந்து பாவத்தை விளைவித்துக் கொள்ளுகிறார்கள். ஆதலால், தமக்குரிய கடமைகளைச் செய்தலையே திருவள்ளுவர் ‘தவம்’ என்று கருதுகின்றார். இல்லறத்தாராக இருப்பாராயின் மனித சமுதாயத்தையே தழுவி, அவர்கள். நன்நெறி நின்று ஒழுகி நல்லின்பத்தோடு வாழச் சிந்தனையாலும், செயலாலும் கடமைகளைச் செய்தல் வேண்டும். இஃதன்றி உலகியலை ஒழித்த தவம் என்று பெயர் கொள்ளுதல் சிறப்புடையதன்று.

‘கடமைகளை முறையாகச் செய்தல் சிறந்த கடவுள் வழிபாட்டுக்கு ஈடு அல்லது இணையானது’ என்னும் பொருள்படச் சான்றோர் பலரும் பேசியிருக்கிறார்கள்.

"கடமையே மிகச்சிறந்த நோக்கம். ஏனெனில் அது கடவுட் கருத்தைத் தழுவியதாக இருக்கிறது" என்று லக்கார்டயரும்;

"கடமையை விருப்பத்தோடு செய்பவர்களுக்குக் கடவுள் எப்பொழுதும் உதவியாக இருக்கிறார்” என்று கெய்லரும்;

"கடமைகளைச் செய்யாமல் தட்டிக் கழித்தல் அறிவையும், மனத்தையும் பலவீனப் படுத்தித் தூய்மை தவவாழ்க்கையைப் புதைத்து விடுகிறது” என்று ட்ரயான் எட்வார்ட்ஸ் என்பாரும்;

"உயிர்கள் தம்முடையக் கடமைகளை உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொள்வது கடவுள் இதயத்தின் சந்நிதி" என்று பேகனும் பேசியிருக்கிறார்கள்;

பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டச் சான்றோர்களின் வரலாற்றை நமக்கு அருளிய சேக்கிழார் பெருமானும், தவம் என்ற வாழ்க்கையை உலகியல் வாழ்க்கையோடு இணைத்துக் கூறுவதை நூல் முழுதும் பார்க்கக் காணலாம். சங்கிலியாருக்குச் சுந்தரரைச் சிவபெருமான் அறிமுகப் படுத்தும்போது, ‘மேருவரையின் மேம்பட்ட தவத்தினான்’ என்று கூறுவதாகச் சேக்கிழார் பெருமான் சித்திரித்திருப்பது அறிந்தின்புறத்தக்கது. அதனால், திருக்குறள் காட்டும் தவம் தத்தம் கடமைகளைச் செய்தல்; கடமைகளைச் செய்யா தொழித்துப் பிறவற்றைச் செய்தல் அவமாகும்.

4. வள்ளுவரும்-கார்ல்மார்க்சும்

திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மலர்ந்தது. வரலாற்றுக்கு எட்டியவரையில் வள்ளுவத்தைப் போல் செப்பமான ஒரு வாழ்வியல் விஞ்ஞான நூல், வள்ளுவம் தோன்றிய காலத்தில் எந்த மொழியிலும், தோன்றவில்லை. ஏன்? மாமுனிவர் கார்ல்மார்க்சு தந்த 'மூலதன’த்தைத் (Capital) தவிர இன்னமும் எந்த நூலும், தோன்றவில்லை. திருக்குறள் தோன்றிய பின் பல நூறாண்டுகள் கழித்து கார்ல்மார்க்சின் ‘மூலதனம்’ முகிழ்த் திருக்கிறது. சிந்தனையில் ஒருமைப்பாடு, தத்துவப் பார்வையில் ஒரு நோக்கு, திருக்குறளுக்கும், ‘மூலதன’த்துக்குமிடையே இருப்பதை அறிந்தோர் அறியலாம். ஆயினும், அவற்றுக்குள் வேறுபாடு இல்லையென்று யாரும் கருத வேண்டாம். கார்ல்மார்க்சு தந்த மூலதனத்திற்கும் முதற் பாவலர் திருவள்ளுவர் தந்த திருக்குறளுக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு. ஆயினும் முரண்பாடுகளைக் கடந்த விழுமிய ஒருமைப்பாடும் உண்டு. காலத்தால் பிந்தியதால் ‘மூலதனம்’ செய்த கார்ல்மார்க்சு, வள்ளுவம் தத்துவமாக சொன்னதை விரிவாக்கி விளக்க உரை தந்துள்ளார். லெனின், அந்த ‘மூலதன’த்தையும் விரிவாக்கி விளக்கினார். காலம் வளர வளரக் கருத்து வளர்தலும், தெளிவு தெரிதலும் இயற்கை.

மார்க்சீயம்; அறிவு நிலையானது என்று கூறுவதல்ல. அறிவு, வளர்ச்சிக்குரியது. அறிவு, மேன்மேலும் வளராமல் தேக்க நிலை எய்துமானால் மனித சமுதாயம் பாழ்படும் என்பது மார்க்சீயத்தின் மெய்ஞ்ஞானம். ஆம்! ஊற்றுவளம் இல்லாத நீர்நிலை கெட்டுத்தானே போகும்? ஒடும் இயல்பில்லாத ஒன்றுக்கு ஆறு என்று பெயருண்டோ? அதுபோல வளரும் இயல்பில்லாத ஒன்றுக்கு அறிவு என்று பெயர் சொல்ல முடியாது. திருக்குறளும் ‘அறிதோறு அறியாமை’ என்றது.

மனிதன், அவன் வாழும் சூழ்நிலைகளால் உருவாக்கப் படுகின்றான். அவனுக்கென்று தனியே ஒரு குணம் இல்லை. மனிதனுடைய எண்ணம், கருத்து ஆகியவை கூட அவன் சார்ந்துள்ள புறச் சூழ்நிலைகளின் பிரதிபலிப்பேயாகும் என்பது மார்க்சீயத் தத்துவம். நமது திருவள்ளுவம் இதனையே.

"மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு”

என்றது.

மார்க்சீயம், சொற்களுக்குக் காணும்பொருளே வேறு. மார்க்சீய அகராதியில் ‘பொருள்’ என்றால் தங்கம்- நாணயம் ஆகியவற்றை ஒரு பொழுதும் குறிக்காது. மனிதக் குலத்திற்குப் பயன்படும் தகுதி குறித்தே பொருளுக்கு மதிப்பு என்பது மார்க்சீயத்தின் சித்தாந்தம். திருக்குறளும் ‘பொருள்’ என்ற சொல்லுக்கும் பொருளாகக் காட்டியது; மனிதகுலம் துய்த்து மகிழ்ந்து அனுபவித்து வாழக்கூடிய, வாழவைக்கக் கூடிய பொருள்களையே. "பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை" என்ற திருக்குறளுக்கு இதுவே கருத்து. உடல்-உயிர்ப் பிணைப்பில் நடமாடும் மனித உலகம் நெடிதுநாள் வளர வாழ உண்பனவும், தின்பனவும் ஆகிய துய்ப்புப் பொருள்கள் தேவை. அத்தகைய பொருள்களே பொருள்கள் என்பது வள்ளுவத்தின் செழுமையான கருத்து.

உழைப்பாற்றலே மனிதனுக்குரிய ஒரே உடமையாக இருக்க வேண்டும், என்பது மார்க்சீயம். "உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை" என்றே மார்க்சீயம் ஐயத்திற்கு இடமின்றித் தெரிவிக்கிறது. நமது திருக்குறளும். "உள்ளம் உடைமை உடைமை" என்றும்

"உடைய ரெனப்படுவ துரக்க மஃதிலார்

உடைய ருடையரோ மற்று"

என்றும் கூறியுள்ளது. வள்ளுவம் உடைமை வர்க்கத்தினருக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்திருக்கிறது.

மார்க்சீயம் உழைப்பாளிகளின் பாற்பட்டது. உழைப்பாளர் உலகத்தை உயர்த்துவது. மார்க்சீய தத்துவப்படி உழைப்பவர்களுக்கே எல்லாம்! அவர்களுக்கே மரியாதை! வள்ளுவத்தின் வழி என்ன?

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்"

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குரல் கொடுத்தது. உழுபவரே உயர்ந்தோர்! உழுபவரே வாழ்பவர்! உழுபவரே தொழத் தக்கவர்! ஆனால், வள்ளுவம் பிறந்த நாட்டில் இன்னமும் உழுவோரைத் தொழத்தக்க சூழ்நிலை உருவாகவில்லை.

மார்க்சீயத்தின் உயிரனைய கொள்கை, உழைப்புக்குத் தகுந்த ஊதியம் என்பது. உழைப்போர் செல்வத்தை, யாரும் கொள்ளை கொள்ளக் கூடாது. இதனை வள்ளுவம் மிக நாகரிகமாக எடுத்தோதிற்று; ‘தாழ்விலாச் செல்வர்’ என்று பிறரைத் தாழ்த்தாத செல்வரே தாழ்விலாச் செல்வர். அது மட்டுமா? துலாக் கோலில் எடைகாண இடப்புெறும் பொருளும், எடை காட்டும் கல்லும் சமநிலையில் இருக்க வேண்டும். துலாக்கோலில் எடைக் கல்லோடு பொருளிடும் தட்டு சமநிலையில் நிற்காமல் தாழுமானால் பொருள் அதிகமாகும். அல்லது இடைக்கல் தாழுமானாலும் அப்படியே! சில சூது வணிகர்கள் பொருளிடும் தட்டின் அடியில் புளியை ஒட்டவைத்து வஞ்சனை செய்து பொருளைக் குறைப்பர். அதுபோல ஒருவர் பெற்றிருக்கும் பொருளைக் குறைப்பர். அதுபோல ஒருவர் பெற்றிருக்கும் பொருளை அல்லது செல்வத்தை அவருடைய உழைப்பாற்றலோடு எண்ணி எடையிட்டுப் பார்க்கும் பொழுது அவர் உழைப்பும் ஆற்றலும் அவர் பெற்ற பொருளும் சமநிலையில் இருக்க வேண்டும். அங்ஙனமின்றி நியாயமில்லாத ஒன்றை நியாயமென்று சொல்லி, வளைந்த கோலைச் செங்கோல் என்று செப்பி, மற்றவர் பொருளை வஞ்சித்தெடுத்த செல்வம் தாழ்வுடைச் செல்வமாகும். தாழ்விலாச் செல்வர் என்று வள்ளுவம் வகுத்ததே, மார்க்சீய சிந்தனையினுடைய தொடக்க காலமாகும்.

வள்ளுவம், மார்க்சீயத்திற்கு முன்னே தோன்றியது. வள்ளுவம் தமிழகப் பழமையில் பூத்த புதுமைநெறி; பொதுமை நெறி. வள்ளுவத்தின் வழி பொதுமை மலருமானால் நம்முடைய மரபுகள் தடம்புரளா, அங்ஙனம் பொதுமை மலராது போனால் வரலாறு எந்தத் திசையில் திரும்பும் என்று இப்போதைக்குக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. வள்ளுவம் வையகத்தின் வாழ்க்கையாக மலரப் பணி செய்வதே இன்று நமது கடமையாகும். தலையாயப் பணியாகும்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு...நெஞ்சை

அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி

ஆரம்படைத்த தமிழ்நாடு

- பாரதியார்

5.வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை இயக்குக!

தமிழ் தழீஇய தமிழர் வாக்கை

தமிழ், ஒரு வளர்ந்த மொழி. இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழியின் சிறப்புக்குரிய இலக்கணம் கண்ட மொழி. தமிழில் மொழிக்கு மட்டுமா இலக்கணம்! தமிழர்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் உண்டு. ஆதலால், தமிழ்மொழி சிறந்த மொழி, தமிழ் தழீஇய வாழ்க்கை நாகரிக வாழ்க்கை. பண்டைத் தமிழரின் வாழ்வில் மிளிர்ந்த சிறப்பு மிக்க நாகரிகக் கூறுகள் உலகில் வேறு எங்கும் கிடைப்பதரிது. ஆயினும் என்? இன்றைய தமிழரின் நிலை என்ன? பெருங்காயம் இருந்த பாண்டம் பெருங்காய வாசனை தர இயலுமா?

தமிழக வரலாற்றில்

இரண்டாயிரம் ஆண்டு காலமாகத் தமிழக வரலாறு நகரவில்லை. இடையில் அப்பரடிகள், வள்ளலார் போன்ற சமயச் சான்றோர்களும் தலைவர் காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்களும் நகர்த்த முயன்றனர்; நகர்த்தினர். கொஞ்சம் நகரவும் செய்தது. ஆனால் அவர்களுடைய மறைவிற்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விட்டது. இல்லை, இருந்த நிலையைவிட மோசமாகிவிட்டது. அதனால் தமிழக வரலாற்றில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்க்கையை இருள் கவ்வி மூடிமறைத்து வருகிறது. தமிழர்கள் துன்பப்படுகின்றனர். இந்தத்துன்பச் சூழ்நிலைக்குக் காரணம் தமிழர்களேயாம். உண்மையைச் சொல்கின்றோம்; வேறு யாருமில்லை! தமிழர்களுக்குப் புத்தி வருமா? வள்ளுவத்தைப் பயில்வார்களா? வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்களா?

தமிழகத்தில் "நான்” “எனது”

செருக்கு, கெட்ட குணம்; அழிக்கும் குணம். "நான்” -"எனது” என்ற சொற்கள் மானிட நாகரிகத்தையே அழிக்கும் சொற்கள்! "நான்” என்ற உணர்வு மனிதனை, மற்றவர்களோடு சேரவொட்டாமல் தடுத்துவிடுகிறது. அதனால் சமூக அமைப்பே உருவாகாமல் போய்விட்டது. சமூகத்தில் கிடைக்கக் கூடிய பல்வேறு ஆற்றல்கள் பயன்படுத்தப் பெறாமல் வறிதே பாழாகின்றன. இந்த "நான்” இன்றைய தமிழகத்தில் கம்பீரமாக நடைபோடுகிறது. "நான்" என்ற நிலையை பராமரிக்கவே கட்சிகள் தோன்றுகின்றன. ஏன், நமது சமயத் தலைவர்களையும் கூட இந்த "நான்” விட்ட பாடில்லை, "நான்" உணர்வு மிஞ்சியதால் விளம்பர வாடை வீசுகிறது. நாட்டில் பல தமிழச்சிகள் ஒற்றை சேலையுடன் வாழ்கிறார்களே! அதுவும் கூட பலருக்கு மானம் மறைக்க முடியாத நிலை! ஆயினும் நமது நாட்டுச் சுவர்கள் நாள்தோறும் புதிய வண்ணச் சேலைகளை உடுத்திக் கொண்டுள்ள பொலிவைப் பார்க்கவேண்டுமே! ஆம்; இன்றைய சுவரொட்டிகள், சுவரொட்டிகள் அல்ல! இவை; சேலைகளை விஞ்சிவிட்டன. பாடப்புத்தகத்தில் இளைத்த எழுத்துக்கள், சுவரொட்டிகளில் உப்பி ஊரைப் பார்த்துச் சிரிக்கின்றன. என்னைப் போல் உப்பலாக நீங்கள் இல்லையே! இளைத்திருக்கிறீர்களே! என்று! இந்தக் கேவலம் "நான்” என்ற அகங்காரத்தால் நடைபெறுகிறது.

வையத்துள் வாழ்வு சிறக்க!

"எனது” என்பது மனித நாகரிகத்தின் அடித்தளத்தையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கியுள்ளது. "எனது” என்ற சொல்லுக்கு மூலமாக உள்ள தனிஉடைமைக்குணம் செழித்து வளர்ந்துள்ளது. இன்று கணவன்-மனைவியிடையே கூடக் குடும்பம் உருவாகாமல் தனி உடைமை ஆசை கெடுத்துவிட்டது; நண்பர்கள் உருவாகாமல் செய்து விட்டது. ஏன் கையூட்டுகள், வரதட்சணைக் கொடுமைகள் ஆகிய கொடிய தீமைகளைப் பெற்றதே தனி உடைமையைச் சார்ந்த கொடுமைதானே! ஆதலால், "நான்” “எனது” என்ற சொற்களுக்குரிய தீய குணங்கள் மாறாத வரையில் தமிழ்ப்பண்பு வளராது; தமிழ் நாகரிகம் தழைக்காது; சமய வாழ்க்கையும் உருவாகாது; வள்ளுவமும் வாழ்க்கையில் இடம் பெறாது.

"யான் எனதுஎன்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்."

(346)

என்றது திருக்குறள். வையகத்தில் வாழ்க்கை சிறக்க வேண்டுமா? ‘நான்’ ‘எனது’ என்ற சொற்களைத் தோற்றுவிக்கும் சமுதாய அடிப்படையை மாற்றுங்கள்! வையகம் சிறக்க வேண்டுமா? வள்ளுவத்தின் வழியில் வையகத்தை இயக்குங்கள்! "நான்” “எனது” என்ற சொற்கள் வழி அமைந்துள்ள சமய நெறிக்குப் புறம்பான வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்! அப்பொழுதுதான் தமிழ் வெற்றி பெறும்! தமிழ் வளரும்! தமிழ் வாழும்! தமிழர் வாழ்வு புகழ் பூத்த வாழ்வாக அமையும்.

6. பகுத்துண்ணாமை கொலையே!

திருக்குறள் அதிகார அமைப்புகளை உடையது. இந்த அதிகார அமைப்புகளைத் திருவள்ளுவரே செய்தார் என்று கருதுவோரும் உண்டு. அங்ஙணமின்றி இந்த அதிகார முறைவைப்புகள் திருவள்ளுவரால் செய்யப்பெறவில்லையென்றும்; பின் வந்த உரையாசிரியர்கள் செய்தனரென்றும் கூறுவாரும் உண்டு.

யார் செய்தால் என்ன? அதிகார அமைப்பிற்கேற்றவாறு திருவள்ளுவர் குறள்களைப் பாடிவைத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகார அமைப்பிலும் நிறைந்த பொருளாக்கம் இருக்கிறது; பயன் இருக்கிறது. ஒரு செய்தியை ஒரு தடவைக்குப் பத்துத் தடவை திரும்பத் திரும்ப நினைந்தாலே நெஞ்சகம் அந்த நெறியில் ஈடுபடுகிறது. அதனால், ஒரு நன்னெறியினைப் பலவகைகளில்-பல கோணங்களில் பல தடவை ஆராய்ந்து உயர்தலே வாழ்க்கைக்கு உற்ற முறையென்பதால் அதிகார அமைப்புகளும் சாலச் சிறந்தனவேயாம்.

இங்ஙணம், தனித்தனி நெறிகளுக்கேற்றவாறு திருக்குறள் அதிகாரங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அதிகார அமைப்பில் கொல்லாமையும் ஒன்று.

உயிர்கள், உடம்பொடு தொடர்பு கொண்டு வாழ்க்கை நிகழ்த்தித் தம்மை வளர்த்து உயர்த்திக்கொள்ளும் சாதனமே வாழ்வியல். இந்த வாழ்வியலுக்கு ஏற்றவாறு இசைந்துள்ள உடம்பொடு உயிரிடை ஏற்பட்டுள்ள நட்பை-உறவைப் பாதுகாப்பது ஒரு பேரறம் ஆதலாலன்றோ, "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றார் திருமூலர்.

உடம்பிற்கும் உயிர்க்கும் ஏற்பட்டுள்ள உறவை நீக்குதலையே ‘கொலை’ என்று கூறுகிறோம். கொல்லப் பெறுதல் உடம்பேயாயினும், உயிர்க்கொலை என்றே கூறுகிறோம். காரணம், உடம்பு இல்வழி உயிரின் இயக்கமும்-துய்த்தலும் நுகர்தலும்-வளர்ச்சியும் இல்லாது போதலினாலேயாம்.

அதுபோலவே, உயிர் தங்கி உலவும் உடலியக்கத்துக்கு எரிபொருளாகிய உணவினை வழங்குதலைப் பேரறம் என்று கூறுகிறோம். உணவு இல்வழி உடலியக்கமில்லை. உடல் இயங்காவழி உயிர்க்கும் இலாபமில்லை. அதனாலேயே உடல் உயிர் உறவு இயக்கத்தைப் பாதுகாக்கின்ற உணவு, மருந்து முதலியன வழங்கும் உடன்பாட்டு அறங்களாலும், அது போலவே உடல் உயிர் உறவை நீக்காமையைக் கொல்லாமை என்ற எதிர்மறை அறத்தாலும் மனித உலகம் போற்றுகிறது.

திருக்குறளில், கொல்லாமை என்று ஒர் அதிகார முண்டு. கொல்லுதலின் கொடுமையை வள்ளுவர் நினைந்து நினைந்து கொதித்து கண்டிக்கின்றார். இந்த அதிகாரத்தில் முதற் குறளாக கொல்லாமையை அறம் என்று பொதுவாக உணர்த்தி, அடுத்த குறளில், "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

என்று கொல்லாமை நெறியை வற்புறுத்துகின்றார். இந்தக் குறளில் பலரோடு பங்கிட்டு உண்பதும், பல உயிர்களைப் பேணிக் காப்பதும் பேரறம் என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் குறளுக்கும் கொல்லாமைக்கும் என்ன தொடர்பு? இதனை, ‘விருந்தோம்ப’லில் கூறக்கூடாதா? ‘ஒப்புரவறித’லில் கூறக் கூடாதா? அல்லது ‘ஈகை’யில்தான் கூறக் கூடாதா? இங்ஙனம், அங்கெல்லாம் கூறாமல், 'கொல்லாமை’ அதிகாரத்தில் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பாங்கான நெறியைக் கூறியது ஏன்? கொல்லுதலும் குற்றமே. அதைவிடக் குற்றம், உண்டி முதலியன வழங்கிக் காப்பாற்றாமல் சாகவிடுவது, அது கொலைக்குற்றமே என்பதை உணர்த்தவே இங்குக் கூறினார்.

கூடிவாழும் மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாக விளங்கும் மனிதனுக்குச் சமுதாய ரீதியாகக் கடமைகளும் உண்டு; உரிமைகளும் உண்டு. ஒரு சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாகப் பிறந்த மனிதனைச் சோறு இன்றிச் சாகவிடும் சமுதாயம் கடமையுணர்வு இல்லாத சமுதாயமாகும்; அதையே ஒரு கொலைகார சமுதாயம் என்று கூறினாலும் பொருந்தும். கத்தியெடுத்துக் கொன்றால் மட்டுமே கொலை யென்பதல்ல.

பெற்ற செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுத்து, பலரையும் பேணி வளர்க்காமல் பலரையும் சோறிட்டும் மருந்து முதலியன வழங்கியும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமேயாகும் என்பதனை உணர்த்தவே இந்தக்குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அடிப்படையில் இன்று நம்முடைய நாட்டினை நோக்கினால் கொலைகாரர்கள் மிகுதியும் உள்ளனரோ என்று வினா எழுந்தால் மறுப்பார் யார்?

7. உலகம் தழீஇயது ஒட்பம்!

மானுடத்தின் வெற்றி பொருந்திய வாழ்க்கைக்கு தேவை அறிவு. திருக்குறள், அறிவைக் கருவியென்று இனங் காட்டுகிறது. அறிவு என்பதற்குத் தெளிவான இலக்கணத்தைத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது. அறிவு, எல்லைகளைக் கடந்தது; மொழி, இனம், சமயம், நாடு முதலிய சிறைகளைக் கடந்தது! சிந்தனை சிறைப்பட்ட இடத்தில் அறிவு ஆக்கம் பெறுவதில்லை. ஆதலால், அறிவுக்கு மொழியெல்லையில்லை. அறிவு வளர்ச்சிக்கு மொழி முதலியவை தடையேயாம். பல மொழிகள் கற்பதும் பல நாடுகள் காண்பதும் உலகமாந்தருடன் கலந்துறவாடுவதும் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும் வாயில்கள். உலகம் தழுவிய நிலையில் வாழும்போதுதான் அறிவு விரிவடைகிறது; வளர்கிறது.

"உலகம் தழீ இயது ஒட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு”

என்பது குறள்.

"உலகம் தழீஇயது ஒட்பம்" என்பதற்கு "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்ற வாக்கின் அடிப்படையில் உயர்ந்தோர் என்று பொருள் கொண்டு அத்தகு உயர்ந்தோரிடத்தில் உறவு கொள்ளும் நல்லறிவும் அவ்வுறவில் மலர்தலும் கூம்பலும் இல்லாமல் பேணுதலும் என்று பொருள் கொள்வாரும் உளர். மானுடத்தை உயர்ந்தார் - தாழ்ந்தார் என்று பிரிவினை செய்தல் இற்றைத் தலைமுறைக்குப் பொருந்துவதல்ல. உலகத்தில் மிகப் பெரிய மானுடத்தைப் படைத்து வளர்ந்து வரும் ஜப்பான் நாடு, மனிதனை அவன் உள்ளபடியே அங்கீகரித்தல், வளர்த்தல், உயர்த்துதல் என்ற வழியிலேயே அணுகுகிறது என்பது எண்ணத்தக்கது.

வாழ்க்கை, மானிடர் அனைவர்க்கும் பொது. அது போலவே அனுபவங்களும் பொதுவேயாம். அறிவும் பொதுவேயாம். ஆதலால், மானிடப் பரப்படன் உறவு கலந்து வாழும்போதுதான் அறிவு தலைப்படுகிறது. மானிட உலகத்துடன் கொள்ளும் நட்புறவு நிலையானது. இந்த உறவில் ஏதாவது அடிப்படையில் மலர்தலும், பிறிதொரு வகையில் சுருங்குதலும் கூடாது. இன்று பலர் ஏதாவது ஒர் எல்லைக்குள் தம்மைச் சுருக்கிக் கொண்டு அல்லது சிறைப்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்பப் பழகுகின்றனர். இது வரவேற்க இயலாத முறை. மானிடர் அனைவரையும் முதலில் மாந்தர் என்ற நிலையில் அங்கீகாரம் செய்ய வேண்டும். எந்த ஒரு காரணமும் ஒருவரிடத்தில் உறவு கொள்ளத் தடையாக அமையக்கூடாது. உறவு கொண்டபின் விருப்பு - வெறுப்புகள் தலையெடுக்கக்கூடாது. நட்புறவு என்பது விருப்பங்களையும் வெறுப்புகளையும் கடந்தது.

இன்றைய மானுடம் இந்த நிலையில் வாழவுமில்லை; வாழ விரும்பவுமில்லை. வளர்ந்த விஞ்ஞானக் கருவிகள் மூலம் பூத பெளதிக உலகங்கள் இணைக்கப் பெற்றுள்ளன. ஆனால் மானிடரிடையில் இதயங்கலந்த நட்புறவுகள் கால்கொள்ளவில்லை. அதனால் இன்னமும் "மானுடம்” முழுமையடையாத கச்சாப் பொருளாகவே விளங்குகின்றது. இன்றைய மானுடம் பொதுமையை நாட மறுக்கிறது. அவரவரும் அவரவருடைய உணர்ச்சிகளின் வயப்பட்டே வாழ்கின்றனர். சரியான அடிப்படையில் அமையாத மானுடம் துன்புறும்; கெட்ட போரில் ஈடுபடுவோர் அழிப்பர்; அழிவர். இதுவா அறிவின் பயன்? ஆதலால், உலக மாந்தரொடு கலந்து பழகி நட்புறவினை வளர்த்துக் கொண்டு வாழ்தலே "அறிவு”. எல்லாவித எல்லைகளையும் கடந்து நேசக்கரங்களை நீட்டி வாழ்வதே அறிவு.

நாடு, மொழி, இனம், சமயம் ஆகியன வாழ்வியலில் இடம் பெற்றுள்ளன; இவை அவசியமும்கூட! ஆனால் இவற்றின் மீது காட்டும் ஆர்வம் அளவுக்குக் கட்டுப்பட்ட தாக இருக்கவேண்டும். கூவலாமை, குரை கடலாமையைக் கேட்ட கதை போல் ஆகிவிடக்கூடாது. எந்த ஒன்றும் வாழ்வுக்குரிய சாதனமேயாம். சாதனங்களையே சாத்தியங்கள் என்று நம்புவதும் அதற்காகவே வாழ்வதும் அறிவுடைமையாகாது, ஆதலால் நாட்டுப்பற்று வேண்டும். ஆனால் வெறி கூடாது. அதேபோழ்து நாட்டிற்கும் நாட்டிற்குமிடையே உள்ள எல்லைகளை எடுத்துவிட்டு உலகப் பேரரசு காணும் விழைவு வேண்டும்.

சாதிகளின் பெயரால், மதங்களின் பெயரால் இன்று எங்கும் புன்மை வளர்க்கப் பெறுகிறது. ஏன், ஓரணிக் குள்ளேயே பல அணிகள் உள்ளன. அதனாலேயே திருவள்ளுவர், மதங்கள் பற்றி பேசவில்லை; யாதொரு அதிகாரமும் இயற்ற வில்லை, திருக்குறள் நாடு, மொழி, மதம் முதலியன பற்றி யாதொன்றையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. திருக்குறள் பொது நூல்; ஒருமை நூல்; திருக்குறள் நெறி, உலக நெறி; பொது நெறி.

தன்னலம் விலங்கின் தன்மையது. ஒரு சரக்குப் பேருந்து சாலையில் வரும்பொழுது தாழான ஒரு பன்றிகூடத் தற்காத்துக் கொள்ள ஒடி ஒளியும். ஆனால் மற்றப் பன்றிகளைப் பாதுகாக்கும் உணர்வு அந்தப் பன்றிக்கு இருக்காது. மனிதனும் தன்னலம் சார்ந்தவனாகவே வாழ்கின்றான். தன்னலம் செறிந்த வாழ்வு, உலகந்தழீ இயதுமல்ல; ஒட்பமும் அல்ல, இந்த உலக இயக்கத்தின் நடைமுறைகளைக் கூர்ந்து கவனித்தால் இந்த உலகம் பொதுமையில் வளர்கிறது. வாழ்கிறது. உலக மாந்தர் இனம் தோன்றவேண்டும். உலகப் பேரரசு தோன்ற வேண்டும்.

இத்தகு பொது நெறி தோன்ற மானுடம் சில நெறி முறைகளைப் பின்பற்றவேண்டும். முதலாவது, பல மொழிகளைக் கற்கவேண்டும். மொழிகள் உறவுகளின் கதவுகளைச் திறந்துவிடும் இயல்பின. சொல்வன சிலவாகவும் கேட்பன பலவாகவும் இருக்கவேண்டும். மொழிகளின் வாயிலாகத் தான். கருத்துப்பரிமாற்றங்கள் நிகழமுடியும்; நிகழும் மொழிகள் வாயிலாகத்தான் கலாச்சாரப் பரிவர்த்தனைகள் நடைபெற இயலும். இன்றைய மானுடத்திற்குப் பன்மொழிப் பயிற்சிக்கு வாயில் அமைந்தால் உலகந்தழீஇய ஒட்பம் பெறும்! இந்த உலகந்தழீஇய ஒட்பத்தை மலர்தலும் கூம்பலும் இல்லாத அறிவை மானுடம் பெறுதலைப் பொருத்தே மானுடத்தின் தலைவிதி அமையும்!

7

அடிகளார் மடல்

* * *

1. வாழ்வாங்கு வாழ்க

இனிய தமிழ்ச் செல்வ! வாழ்த்துக்கள்! உனது கடிதம் கிடைத்தது. செய்திகள் அறிய வந்தன. உலக அரங்கில் இரண்டு அணியினர். ஓர் அணியினர் மானுட வாழ்க்கையை மறுப்பவர்; துன்பச் சுமையென வெறுத்து ஒதுக்குபவர். பிறிதோர் அணியினர் வாழ்க்கையை ஏற்பவர்; ஏற்று மகிழ்ந்து வாழ்தல் வேண்டும் என்ற கொள்கையினர். நாம் இரண்டாவது அணியினர். நமது கருத்து, மானுட வாழ்க்கை உயர்ந்தது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது, ஆம்!

இனிய செல்வ! வாழ்க்கையை மறுக்கும் அணியினர் பேச்சை அன்புகூர்ந்து கேட்க வேண்டாம்! அந்தவழியில் செல்ல வேண்டாம்! அது நமது வழியன்று. நமது வழி, வாழ்வதே!

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்”

என்பது நமது குறள். இத்திருக்குறள் காட்டும் வழியே வழி. நில உலகில் வாழ்வதே வாழ்க்கை. வாழ்க்கை என்பது ஒருகலை; அது நுண்ணிய அருமைப்பாடுகள் உடையது. பிறந்தவர்கள் எல்லாம் வாழ்ந்து விடுவதில்லை. இம்மண்ணில் பலர் பிழைப்பையே நடத்துகின்றனர்; வாழ்கின்றார் மிகச்சிலரே. வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப் பெற்ற மாளிகையல்ல. ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சிந்தனையால், எண்ணத்தால், உணர்வால், செயல்களால் தமது வாழ்க்கையைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பலர் இதனையறியாமல் வறிதே பொழுது போக்குகின்றனர். வெளியே சொல்ல முடியாதவற்றையெல்லாம் எண்ணுகின்றனர். அவர்கள் எண்ணம்போல வாழ்க்கை அமைந்து விடுகிறது. இத்தகு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக அமையும். துன்பத்தைத் தாங்க இயலாது நோகின்றனர். ஏன்? வாழ்வாங்கு வாழ்ந்திருந்தால் வாழ்க்கை முழுதும் நன்றாக அமையும்; மகிழ்வாகவே அமையும். அதுமட்டுமா? வாழ் வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வம்போல் வையகத்தில் மதிக்கப்படுவார்கள்; போற்றப்படுவார்கள்.

இனிய செல்வ! வாழ்வாங்கு வாழ வழி காட்ட வேண்டும் என்ற குறிக்கோள் நோக்கியே திருக்குறள் எழுதப் பெற்றது. நமது திருக்குறள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் நூல்; திருக்குறள் வழியே வாழும் வழி. இனிய செல்வ, திருக்குறள் வாழ்க்கையின் பருவங்கள் தோறும் வழிகாட்டி அழைத்துச் செல்லத் தக்கதாக இயற்றப் பெற்றுள்ளது. நாள் தோறும் திருக்குறள் படி! அந்தந்தச் சூழ்நிலையில் தக்க வழியை, குறள் காட்டும்! செய்ய வேண்டிய நெறிகளையும் புலப்படுத்தும், அன்றாடம் காலையில் எழுந்தவுடன் நேற்றைய வாழ்க்கையின் நிகழ்வுகளை எண்ணுக! குற்றம்-குறை-குணங்களை ஆய்வு செய்க! குற்றங்களைக் களைக! குறைகளை நீக்கிடுக! குணங்களை எடுத்துக் கொள்க! இன்று எப்படி வாழ்வது என்று எண்ணுக! திட்டமிடுக! வாழ்க! இதுவே வாழ்வாங்கு வாழும் வழி!

எந்தச் சூழ்நிலையிலும் வாழ்ந்து சேர்த்த குணங்கள் என்னும் முதலினை இழந்துவிடாதே! வாழ்க்கையை நொந்து அழாதே! விழிப்பாக இரு வாழ்வாங்கு வாழ்க! ஓயாது உழைத்திடுக! முதலில் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்! மகிழ்ச்சியாக இரு! வாழ ஆசைப்படு! அடுத்து எழுதுகிறோம்.

இன்ப அன்பு

அடிகளார்

2. அறிவே ஆன்மாவின் அனுபவம்

இனிய தமிழ்ச் செல்வனுக்கு,

"வள்ளுவர் வழி” வழியாகப் புத்தாண்டு வாழ்த்துகள்! திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துகள்! உனக்கு எழுதிப் பல திங்கள்கள் ஆயின “வள்ளுவர்வழி” நாயகர் தே.கண்ணன் அடிக்கடி கேட்பார். கடிதம் யாதொன்றும் வரவில்லையே என்று! நீண்ட இடைவெளிக் காலம் கழிந்து போனதற்காக வருந்துகின்றோம். இனி, கூடுமானவரை தொடர்ந்து எழுதுகின்றோம்.

சென்ற கடிதத்தில் "வாழ்வாங்கு வாழ்க!" என்று எழுதியிருந்தோம். ஆம்! வாழ்தலைப் பொருளும் பயனும் உடையதாக ஆக்க வேண்டும். "பிழைத்தல்" "காலம் கழித்தல்” ஆகியன உயிர்ப்புள்ள வாழ்க்கையன்று. வாழ்க்கை அறிவுச் சேகரிப்பு வழியாலும் சங்கிலித் தொடரனைய செயல்களாலும் நிரப்பப்படுதல் வேண்டும். அறிவறிந்த ஆள்வினை வாழ்க்கையின் கருவி. அறிவு எளிதில் கிடைப்பதா? அறிஞர் ஆகலாம் என்று கற்கின்றோம். ஆனால், கற்போர் எல்லாராலும் அறிஞராக முடிவதில்லை. கீறல் விழுந்த வெறும் இசைத் தட்டுகள் போலப் புலம்பித் தவிக்கின்றனர் சிலர். அறிவு, பட்டறிவின் வழி வருவது.

பட்டறிவுக்கு ஆற்றுப்படுத்துவது கல்வி. உந்துசக்தியாக அமைவது சான்றோர் வாய்கேட்ட சொல். அறிவு துன்பத்தினின்றும் பாதுகாக்கும் கருவி. அறிவு தன்மையைப் படைப்பது. இனிய தமிழ்ச் செல்வ, ஆக்கம் நிறைந்த படைப்பின் வழியின்றித் துன்பம் நீங்காது. துன்பம் இயற்கையுமன்று, செயற்கை. அஃதாவது செயற்கையின் காரணமாக வருவது துன்பம். அறிவு அற்றம் காக்கும் கருவி என்று வள்ளுவர் வழி கூறுகிறது. அறிவினாலன்றி வாழ்க்கை முழுமையாவதில்லை. பயனுடையதாகவும் அமைவதில்லை; பண்பாடுடையதாகவும் அமைவதில்லை.

இனிய தமிழ்ச் செல்வ, அறிவுக்கு வாயில் நல்ல நூல்களைக் கற்றல். கற்றல் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமை. கசடறக் கற்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக நாம் சுமந்து வந்திருக்கிற மூடநம்பிக்கைகள் என்ற கட்டுகள் ஒன்றா? இரண்டா? தலைமுறை மரபு நம்பிக்கைகள் அறிவுக்குப் பகை. அதனால் வழிவழி வந்த சில உயர்ந்த மரபுகளை இழந்துவிட வேண்டும் என்பது அவசியமில்லை. அந்தப்பழைமைகள் கூட காலத்திற்கேற்பப் புத்துருவம் பெறவேண்டும் வளர்ந்து வரும் புதுமையுடன் அடையாளமின்றிக் கலக்க வேண்டும். சமுதாய வாழ்க்கையில் பழைமை, புதுமை என்ற பிரிவினை கூடாது. எந்த ஒரு பழைமையும் பின்னைப் புதுமையை ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டால் பழைமை மலடாகிவிடும். அது போலவே, வளர்ந்துவரும் புதுமை, பழைமை, உணவை எடுத்துக் கொள்ள மறுத்தாலும் புதுமை ஊட்டமில்லாத சவலையாகிவிடும். இனிய தமிழ்ச் செல்வ, "முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே" என்ற திருவாசக அடிகளை நினைந்துபார்! இன்று உலகில் வளர்ந்த நாடுகளில் சப்பானும் ஒன்று. சப்பானியர்களின் வளர்ச்சி வியப்பைத் தரக்கூடியது. அத்ற்குக் காரணம் சப்பானியர்கள் பழைமைக்கும் புதுமைக்கும் சிறந்த இணைப்பை உண்டாக்கி வாழ்க்கைக்குப் பயன்படுத்துகின்றனர். அதனால் அந்த நாடு முன்னேறியிருக்கிறது. நம்முடைய நாட்டிலோ பழைமை புத்துருக் கொள்ள மறுக்கிறது. இளமையை ஏற்க மறுக்கிறது. பழைமை கிழடுதட்டிப்போய் பிரேத ஊர்வலமாக வந்து கொண்டிருக்கிறது. புதுமை என்ற பெயரில் சிலசிந்தனைகள் வறட்சித்தன்மையுடையனவாய் ஊட்டமின்றித் தேவாங்கு போல நடமாடுகிறது. இது வளரும் தமிழகத்திற்கு நன்றன்று.

இனிய தமிழ்ச் செல்வ, நல்ல நூல்களைக் கற்க வேண்டும். புதிய உணர்வுடன் கற்க வேண்டும்; அறிவு பெற வேண்டும். அறிவு, ஆற்றல் மிக்க கருவியாக வாழ்க்கையில் செயற்பாடுறுதல் வேண்டும். கற்கின்ற நூல்களின் கருத்தை வாழ்க்கையில் சோதனை செய்தல் வேண்டும். கற்ற நூற்கருத்துக்குச் செயலுருவம் தரவேண்டும். இம்முயற்சியில் பெறுவதே அறிவு. அறிவு ஆன்மாவின் இணையற்ற கருவி, அனுபவம், செல்வம். ஆதலால் இனிய தமிழ்ச் செல்வ, "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பதை நினைந்து அறிவைத் தேட முயல்க! வாழ்வாங்கு வாழ அறிவைப் பெறுதலே முதற்கடமை. முயற்சியைத் தொடங்குக! திருவள்ளுவரைப் பழுதறக் கற்பாயாக! எதிர் வரும் இருபத்தோராம் நூற்றாண்டின் தேவை உணர்வுடன் கற்பாயாக! கற்கும் பாங்கே அறிவைத் துரண்டும் சக்தி! கற்றதைச் செயற்பாட்டுக்குக் கொணர்தலே வாழ்க்கை! வாழ ஆசைப்படுக! வாழ்ந்திடுக! பிற பின்! வாழ்த்துகள்!

இன்ப அன்பு

அடிகளார்

3. அறிவின் அழகு

இனிய தமிழ்ச் செல்வனுக்கு, வாழ்த்துக்கள்!

வாழ்க்கைக்குப் பயன்படும் அறிவு இரு வகையினது. ஒன்று ஆனது அறிதல், பிறிதொன்று ஆவது அறிதல். ஆனது அறிவதைப் பட்டறிவு என்பர். அதாவது இந்த நொடிக்கு முன்புவரை நம்முடைய வாழ்க்கையானாலும் சரி சமுதாய அமைப்பானாலும் சரி நடந்தனவற்றை அறிதல். இங்கு அறிதலாவது அவற்றின் நடைமுறைகளையன்று. சென்றகால நிகழ்வுகளின் விளைவுகளை அறிதல் அல்லது எதிர்விளைவுகளை அறிதல்.

வாழ்க்கை ஒரு தொடர்கதை. நேற்று நிகழ்ந்தனவற்றை ஆராய்ந்து அறிந்து கொண்டால்தான் எதிர்காலத்திற்குத் திட்டமிட முடியும். சென்றகால நிகழ்வுகள் நல்லனவாக அமைந்து நல்லன விளைந்திருந்தாலும் அந்த நன்மையின் தரத்தினை மேலும் மேலும் உயர்த்த வேண்டும். ஒரு நன்மை கூடத் தொடர்ந்து கண்காணிக்கப் பெற்று மேலும் மேலும் செழித்த நன்மையாக வளர்க்கப் பெறாது போனால் ஒரு தேக்கம் உருவாகும்! ஒரு சூன்யம் தோன்றும். பின் அந்த நன்மையும் கூட வளர்ச்சியின்மையின் காரணமாகத் தீமையாக மாறிவிடுதலும் உண்டு. ஆதலால், சென்றகால நிகழ்வுகளின் நன்மையை மேலும் மேலும் செழிப்படையச் செய்யவேண்டுமானால் ஆனதறிதலைத் தொடர்ந்து ஆவதறிதலும் வேண்டும்.

நன்மையே செய்தாலும் செய்யும் நன்மைகளனைத்தும் நன்மை என்ற காரணத்தினால் வெற்றி பெற்று விடுவதில்லை. மானிட வரலாற்றில் தீமைகள் வெற்றி பெற்ற அளவுக்கு நன்மைகள் வெற்றி பெற்றதில்லை. ஆனால் தீமைகள் பெற்ற வெற்றி நிலையானதன்று. பாரதி கூறியாங்கு,

"தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடியும் வெல்லும்"

ஆனாலும் நன்மை செய்ததிலிருந்து இடர்ப்பாடுகளை அல்லது ஏற்பட்ட தோல்விகளை ஆய்வு செய்து கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் ஆனது அறிதலாகும்; பட்டறிவுமாகும். இந்த அறிவைப் பெறுவதால் நாம் தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பதைத் தவிர்க்கலாம். ஆனது அறிதலினும் ஆவதறியும் முனைப்பு மிகுதியாகத் தேவை. ஆவது அறிகின்ற அறிவு இல்லாமல் ஆனது அறிகின்ற அறிவுமட்டுமே பெற்றிருந்தால் வாழ்க்கையில் துன்பமே மேலிடும்; கவலையே மிகும். இத்தகையோர் சென்ற காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பர்; புத்துணர்வு கொள்ளார்; புதிய அறிவினையும் பெறார். புத்துழைப்பினையும் இவர்களிடத்தில் கான இயலாது. சென்றகாலத்தைப்பற்றிய அறிவு எதிர்காலத்திற்கு உந்தி செலுத்தக் கூடிய ஊக்கியாக இருக்க வேண்டுமே தவிர அதுவே வாழ்க்கையாக இருந்துவிடக் கூடாது.

இனிய அன்ப, நம்மில் பலர் சென்ற காலத்திலேயே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்று விரைந்து வளரும் உலகத்தை அவர்கள் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை. தமிழைப்பற்றி நிறையப் பேசுகிறார்கள். அவ்வளவும் பழையகாலச் சிறப்பு, தமிழுக்குப் புதிய சிறப்பினைச் சேர்க்கும் முயற்சிகள் இம்மியும் இல்லை. தமிழ் இனத்தின் புகழ்பூத்த பழங்கால வாழ்க்கையைத் திறம்பட எழுதிக் காட்டுகின்றனர்; பேசிக்காட்டுகின்றனர். ஆனால் சதுரப்பாட்டுடன் வாழ்ந்து வையகத் தலைமை ஏற்க முன் வருவதில்லை.

இனிய தமிழ்ச் செல்வ! இயற்கை அமைப்பு எதிர்நோக்குடையதாகவே அமைந்திருக்கிறது. மனிதனுடைய உடலுறுப்புகளின் அமைப்பு முழுதும் முன்னோக்கிச் செல்வதாகவேதான் அமைக்கப் பெற்றிருக்கிறது. ஆதலால் நேற்று நடந்தவை நடந்தவையாகி விட்டன. அவற்றில் இனி எந்த மாற்றமும் எவ்வளவு முயன்றாலும் செய்ய முடியாது. அதனால் அவை வாழ்க்கைக்குப் பின்னணியாக அமைய முடியுமே தவிரப் பயன் தருவனவாக அமையமுடியாது. இனிய அன்ப, நம்மில் பலர் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவே அச்சப்படுகின்றனர். கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் ஏதோ எதிர்காலம் நம்முடைய கையில் இல்லாதது போலச்சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். கடவுள் நாம் செய்யும் முயற்சிகளுக்கெல்லாம் துணை நிற்பவரே தவிர அவராக ஒன்றும் செய்து விடுவதில்லை.

இனிய அன்ப, நீ பேருந்துப் பயணம் செய்திருக்கிறாய் அல்லவா? அந்தப் பேருந்தில் வலவர் (டிரைவர்)க்கு முன்னால் ஒரு சிறிய கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதைப்

தி.18. பார்த்திருக்கிறாய் அல்லவா? அது ஏன்? அது அழகு பார்த்துக் கொள்ளும் கண்ணாடியன்று; வண்டிக்குப் பின் பகுதியில் என்ன நிகழ்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேயாம். அதுவும் ஒரளவு தெரிந்து கொள்ளத்தான்! அவ்வாறு தெரிந்து கொள்வதுங் கூட முன்னேறிச் செல்லும் பயணத்திற்கு யாதொரு இடையூறும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்வதற்கேயாம். அந்த அளவுக்குமேல் பின் நோக்கிப் பார்த்தில் கூடாது. அதே வலவர் முன்னால் அவர் முன்னேறிச் செல்ல வேண்டிய எதிர்த்திசையைக் காட்ட அல்லது தெரிந்து கொள்ளப் பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதையும் பார்த்திருப்பாய்! இனிய அன்ப, போதும் போதும் பழம்பெருமை பேசியது! இனி என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்! அஃதே அறிவுடைமைக்கு அழகு! அஃதே ஆவதறியும் அறிவு!

இன்ப அன்பு

அடிகளர்

4. உழைப்பாம் வேள்வி

இனிய தமிழ்ச் செல்வ!

"அறிவுடையார் ஆவதறிவார்” என்ற திருக்குறள் சிந்தனை வழி வாழ்க்கைப் பயணம் நடைபெறுதல் வேண்டும். இத்தகு வாழ்க்கையின் உயிர்ப்பாக இருப்பது உழைப்பு, உழைப்புடைய வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை. உழைப்பை வள்ளுவம் ஆள்வினை என்று பாராட்டும். உழைப்பும் கூட அறிவறிந்ததாக இருத்தல் வேண்டும். "அறிவறிந்த ஆள்வினை இன்மைபழி” என்பது திருக்குறள். ஆம்! அறிவியல் சார்ந்த உழைப்பால் காலம் மிஞ்சும்; உழைக்கும் ஆற்றல் மிஞ்சும். குறைந்த நேரத்தில் குறைந்த ஆற்றலில் குறைந்த மூலதனத்தில் அற்புதமான படைப்புக்களைச் செய்யத் துணை செய்வது அறிவறிந்த ஆள்வினை.

இனிய தமிழ்ச் செல்வ, உழைப்பில் வாராத உறுதிகள் உலகத்தில் இல்லை! இயற்கை, மானுடத்திற்கு வழங்கிய கொடை. அறிவுப்புலனும் உழைப்பாற்றலும், உழைப்புக் கருவிகளுமேயாகும். உழைப்பவர்க்கே வாழ உரிமை உண்டு. இஃது அறநெறிக் கொள்கை இனிய தமிழ்ச் செல்வ! ஆனால், நமது நாட்டில் உழைக்காமலும் வாழலாம். இந்த நாட்டில் தான் பிறர் பங்கைத் திருடி வாழும் வாழ்க்கை அனுமதிக்கப் பெற்றுள்ளது. பிறர் பங்கைத் திருடும் வாழ்க்கை-சுரண்டும் வாழ்க்கை குற்றமுடைய வாழ்க்கை; பழிசுமந்த வாழ்க்கை. அதனால் உழைப்புச் சார்ந்த வாழ்க்கையே திருக்குறள் வாழ்க்கை.

உழைப்பு என்பது பொருள் நிறைந்தது; வளம் சார்ந்தது. ஒரு பொருளின் மதிப்பை உயர்த்துதல்-பயனற்றவைகளைப் பயன்பாடுடையனவாகச் செய்தல் ஆகியன உழைப்பின் பயன். இனிய தமிழ்ச் செல்வ, நமது நாட்டில் உழைப்பு என்பதும் பொய்ம்மை தோற்றம் பெற்று வருகிறது. இனிய தமிழ்ச் செல்வ, கண்களை அகல விரித்துப் பார்ப்பதன் பொருள் என்ன? நமது நாட்டில் உடலுழைப்பாளிகள் இந்தத் தவற்றை இன்னும் செய்யவில்லை! மூளை உழைப்பாளிகள் இந்தத் தவற்றை வெளிப்படையாகவே செய்கின்றனர். இனிய தமிழ்ச் செல்வ! நல்வாழ்க்கைக்கு முதலாக நிலம், வீடு, மனை, அணிகலன்கள் முதலிய பொருள்கள் தேவையென்று எண்ணி ஏங்கக் கூடாது. இவையின்மை ஒரு பொருட்டல்ல. அறிவறிந்த ஆள்வினை மட்டும் இருந்தால் போதும்! எல்லாவற்றையும் படைக்கலாம்! நுகருமாறு நுகரலாம்! வாழ்வாங்கு வாழலாம்!

இனிய தமிழ்ச் செல்வ, அறிவறிந்த ஆள்வினையே வாழ்க்கையின் தேவை! இவையிரண்டும் நம்மிடம் உள்ளன. வேண்டிய அளவு தூண்டி வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்! அறிவறிந்த ஆள்வினையைப் போற்று! உடன் கிடைக்கும் பணியில் அமர்க! ஏதாவது ஒரு பணியினைத் தொடங்கு! பின் வாழ்க்கை தொடரும்! வளரும்! அடுத்து உன்னைச் சந்திக்கும் பொழுது உழைப்பு வேள்வியில் காண வேண்டும். இது நமது விருப்பம்.

இன்பஅன்பு

அடிகளார்

7. தமிழ்மொழிவழிக் கல்வி-2

இனிய தமிழ்ச் செல்வ, நல்வாழ்த்துக்கள்!

உனது மடல் கிடைத்தது. நன்றி. வள்ளுவர் வழியைப் படிப்பதிலும் சிந்திப்பதிலும் உனக்கு இருக்கிற ஈடுபாடு மகிழ்வைத் தருகிறது. இதழாசிரியர் தே. கண்ணன் அவர்கள் மிக மிக மகிழ்வார்.

ஆம்! சென்ற கடிதத்தில் திருக்குறளை எடுத்துக் காட்டவில்லை! இது தவறுதான்! ஆனாலும் மடல் தொடர்கிறது, முடியவில்லை என்பதை நினைவில் கொள்க!

திருவள்ளுவர் 'கற்க’ என்று பொதுவாகத்தான் கூறினார். திருக்குறள் மானிட சமுதாயத்திற்காக இயற்றப் பெற்றது. அதனால் தாய்மொழிக் கல்வி பற்றி எழுதப் பெறவில்லை. கல்வி மானிடத்திற்குப் பொது. உலக மானிடர் பேசும் மொழிகள் அனைத்தும் மானிடர்க்கு உரிமையுடைய மொழிகளேயாம். அனைத்து மொழிகளையுமே கற்பது மானிடரின் கடமைதான்! இலக்கியத் திறனோடு கற்காது போனாலும்-ஆய்வு நிலை மனப்பாங்குடன் கற்காது போனாலும் அனைவருடனும் உறவு கொண்டு பழகும் அளவிலாவது மற்ற மொழிகளைக் கற்பது வரவேற்கத் தக்கது. திருக்குறள் கற்றலை வற்புறுத்துவதைப் போல - இல்லை, அதைவிட முதன்மையாக-அறிவுடைமையை வலியுறுத்துகிறது.

"அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்"

என்பது திருக்குறள்.

அறிவு, தாய்மொழிக் கல்வி வாயிலாகத்தான் எளிதில் வந்தமையும். மொழியின் பயன் மற்றவர்களுடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ளுதல். அறிவின் பயன், பெற்ற உறவைத் தாழாது பேணல். அடுத்து, உலகியற்கையைத் தனக்கும் தன்னுடைய சமுதாயத்திற்கும் பயன்படுமாறு ஆக்கிக் கொள்ளல். இனிய செல்வ, இக்குறிக்கோள்கள் நிறைவெய்தா விடின் வளர்ச்சி இல்லை; வாழ்வு இல்லை; அமைதி இல்லை. ஆதலால், ஒரு மொழியின் காரணமாக நமது உலகியல் நலன்களை இழந்து விடுவோம் எனில் அந்த மொழியை எதிர்க்கலாம். தவறில்லை! எதிர்க்கவும் வேண்டும். ஆதிபத்தியம், வல்லாண்மை சார்ந்த மேலாண்மை எங்கும் எப்போதும் எதிர்க்கக் கூடியது. ஆனால், அந்த மொழியினைச் சார்ந்தோருடைய ஆதிபத்திய உணர்வை - வல்லாண்மையையே எதிர்த்துப் போராட வேண்டும். அதற்குத் துணையாக அந்த மொழி அமையாமல், பாதுகாக்கத் தக்க வகையில் அந்த மொழியையும் எதிர்க்கலாம். ஆனால் அந்த மொழியை விரும்பிக் கற்கக் கூடாது என்று தடை செய்வது மனித இயலுக்கு முரணானது. இந்தியின் ஆதிபத்தியத்தை எதிர்ப்பது வேறு; இந்தியை எதிர்ப்பது வேறு.

இனிய செல்வ, இன்று நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி, இந்தியாவின் அலுவல் மொழியாக இருப்பதை எதிர்க்கவில்லை. நாம் எதிர்ப்பதெல்லாம் இந்தி படிப்பதையே! ஆம்! "இந்தியைத் திணிக்காதே!” என்பது நமது கோரிக்கை! அவர்களின் வழக்கமான விடை, "இந்தியைத் திணிக்கமாட்டோம்” என்பதுவேயாம். இந்தி, இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்க ஒத்துக் கொண்ட பிறகு, கற்கப் பெற வேண்டிய அவசியத்தை உணராது போனால் நடுவண் அரசில் நாம் பெறக்கூடிய பங்கு குறைந்து போகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? இனிய செல்வ, அது மட்டுமல்ல! அமரர் நேரு பெருமகனாருடைய உறுதி மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பது நமது கோரிக்கை! அமரர் நேருவின் உறுதி மொழி என்ன? "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில் ஆங்கிலம்-இணை ஆட்சி மொழியாக இருக்கும்” என்பதேயாகும். இனிய செல்வ, நேரு மகனாரின் உறுதி மொழியை நன்றாகப் படி! சிந்தனை செய்! “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில் ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்கும்" என்பதில் உள்ள "விரும்பி ஏற்கும் வரை" - என்ற சொற்கள் உணர்த்தும் பொருள் என்ன? இந்தி பேசாத மாநில மக்கள் இந்தியை விரும்பிக் கற்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. விரும்புகிற காலம் தான் முடிவு செய்யப் பெறவில்லை! விரும்பி ஏற்கும் காலத்தை முடிவு செய்யும் பொறுப்பு, இந்தி பேசாத மாநில மக்களிடம் விடப் பெற்றது. இதுவே உண்மை. இந்தியை என்றாவது ஒரு நாள் விரும்பி ஏற்க வேண்டும் என்ற நியதியை ஏற்றுக் கொண்ட பிறகு கற்க மறுப்பதில் என்ன பொருள் இருக்கிறது? அல்லது கற்கும் காலத்தைத் தள்ளிப் போடுவதில் என்ன பயன் விளையப்போகிறது?

இனிய செல்வ, நேரு பெருமகனாரின் உறுதிமொழி இந்தி பேசாத மாநிலங்களைக் குறித்தது. இன்று இந்தி பேசாத மாநிலங்களின் நிலை என்ன? தமிழ் நாட்டைத் தவிர அனைத்து மாநில மக்களும் மூன்று மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு மூன்றாவது மொழியாக இந்தியைத் தொடர்ந்து கற்று வருகின்றனர். இந்தச் சூழ் நிலையில் நமது நிலை என்ன? இனிய செல்வ, அது மட்டுமல்ல! ஓர் உண்மை உனக்கு தெரியாமல் இருக்க முடியாது. அதாவது தமிழ் நாட்டிலும் உலகியல் தெரிந்து தெளிந்த உயர்குடியினர் - எதிரதாக் காக்கும் உயர் குடியினர் இன்று இந்தியைக் கற்கத் தொடங்கிவிட்டனர். நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக விரும்பி கற்று வருகின்றனர். பின் தங்கிய நமது சமூகம் தான் இந்த மொழிச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. நமது நிலையில் தாய்மொழி வாயிலாகத் தொடர்ந்து படிக்க இயலவில்லை.

ஆங்கிலம் கற்க வேண்டிய ஒரு மொழியேயாம். இதில் இரண்டு கருத்து இருக்க இடமில்லை. ஆனால், ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கத் தகுதியற்றது. ஆங்கிலம் பயிற்று மொழியாக நீடிப்பதால் தமிழர்கள் அறிஞர்களாக முடியாமல் தடை செய்கிறது. இன்றைய நிலையில் ஆங்கிலம் வாயிலாகப் பயிற்றும் கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு முற்றாகத் தடை. இனிய செல்வ, இது தமிழ் நாட்டில் தொடர்ந்து உயர் குடியினராக ஒரு சிலரையும் இரண்டாம் தரக் குடிமக்களாகப் பலரையும் ஆக்குகிறது. இது வரவேற்கத்தக்கதல்ல.

இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் கூட எண்பது விழுக்காட்டு மக்களுக்கு ஆங்கிலம் ஒரு புதிய மொழியேயாம். உலக நாடுகளிலும் ஆங்கிலம், கற்போர் சிலரே! அதுவும் ஆய்வுக்காகக் கற்பதேயாம். இங்கிலாந்து, இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகள், காமன் வெல்த் நாடுகள் அமெரிக்கா முதலியவைகளில் மட்டுமே ஆங்கிலப் புழக்கம்! மற்றபடி சோவியத் ஒன்றியம், சீனா, சப்பான் போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளே பயிற்று மொழி! ஆட்சிமொழி.

"உலகத் தோடொட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்"

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு"

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு"

என்ற குறள்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? என்பதைச் சிந்தனை செய்து எழுது. இன்ப அன்பு

அடிகளார்

8. தாய்மொழிவழிக் கல்வி-3

இனிய தமிழ்ச் செல்வ,

திருவள்ளுவரின் கல்வி, "கற்பவை கற்க!” திருவள்ளுவரின் கேள்வி, "நல்லவை கேட்க!” திருவள்ளுவரின் அறிவு "உலகந்தழீஇய ஒட்பம்”. திருவள்ளுவரின் அறிவு ஒழுக்கம் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல்’ திருவள்ளுவரின் வாழ்நிலை.

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோ(டு)

அவ்வது உறைவது அறிவு”

நாடு எதுவாயினும் அதுவே திருவள்ளுவரின் நாடு!

"யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு”

இனிய தமிழ்ச் செல்வ! இந்தத் திருக்குறள்கள் நமது தமிழினத்தின் வாழ்க்கை நெறிகளாக மலர்ந்திருப்பின் இன்று, தென் கிழக்காசிய நாடுகளில் ஒரு தமிழர் கூட்டுக் குடியரசு நிலவும் வாய்ப்பிருந்திருக்கும். அந்த நல்லூழ் நமக்கு இல்லாமப் போய்விட்டது. அதற்கு வரலாறு பிழைசெய்து விடவில்லை. நாம் செய்த பிழையே காரணம். இனிமேலும் தொடர்ந்து பிழை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இன்று, நம் மத்தியில் மொழிச் சிக்கல் பரவலாகப் பேசப்படுகிறது; இந்தி எதிர்ப்புணர்ச்சி காட்டப்படுகிறது. இவை சரியா? தவறா? என்று திருவள்ளுவர் பார்வையிலும் இன்றைய சூழ்நிலையை அனுசரித்தும் பார்ப்பது நமது கடமை அல்லவா?

இனிய தமிழ்ச் செல்வ! தமிழின் வளர்ச்சி வேறு! தமிழ் வளர்ந்தால் தமிழனும் வளர்வான்! தமிழன் வளர்ந்தால் தமிழும் வளரும்! ஆனால் இவையிரண்டும் உடன் நிகழ்வாக நிகழ வேண்டும். சில சமயங்களில் தமிழுக்குத் தொடர்பில்லாமல் தமிழன் வளர்வான். இது வரவேற்கத்தக்கதல்ல! இனிய தமிழ்ச் செல்வ! இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கு முன்பு சில அடிப்படை உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவது இன்று தமிழர்கள் உலகம் முழுதும் பரவி வாழ்கிறார்கள். உலக ஆட்சி பெறவில்லையே தவிர, உலகக் குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். செல்வ! உண்மை என்னவென்றால் நமது தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையை விட இந்தியாவின் பிறமாநிலங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் நாட்டில் வாழும் நமது எழுத்தும் பேச்சும் எடுக்கும் முடிவுகளும் உலகந்தழீஇ வாழும் தமிழ் மக்களுக்கு ஊறு விளைவித்து விடக் கூடாது. செல்வ, இரண்டாவதாக இன்றைய உலகம் சுருங்கி வருகிறது. உலக மானுடம் ஒன்றாகும் காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்தக் காலக் கட்டத்தில் நாம் தமிழனாகவும் இந்தியனாகவும் உலகக் குடிமகனாகவும் வாழ வேண்டியது வரலாற்றின் கட்டாயமாகும். அதுமட்டுமல்ல. அதுதான் அறிவு என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். இதைத்தான் திருவள்ளுவர் "உலகந் தழீஇயது ஒட்பம்” என்று கூறுகின்றார். சிறந்த மொழிப் பற்றுடைய இனத்தவர் உலகின் எத்தனை மொழிகளைக் கற்றாலும் தாய்மொழிப் பற்றில் சிறந்தே விளங்குவர். இன்றைய தமிழரிடத்தில் தமிழ்ப்பற்றே இல்லை! தமிழ் மூலம் பயில முன்வரமாட்டேன் என்கிறார்கள். தமிழில் அருச்சனை செய்ய முன்வருகின்றார்கள் இல்லை. ஏன்? இதழ்களைப் படிப்பதிலும் கொச்சைத் தமிழ் பரப்பும் தாளிகைகளைத் தானே விரும்பிப் படிக்கின்றனர். 1957-ம் ஆண்டு முதல் தமிழ் பயிற்று மொழி இயக்கத்தில் நமக்குத் தொடர்பு உண்டு. ஆனால், கலைப் பாடங்கள் மட்டுமே தமிழ் பயிற்று மொழித் திட்டத்தில் வந்தன. அறிவியல், கணிதம், தொழில்நுட்பப் பாடங்கள் தமிழ் மூலம் கற்கும் முயற்சியில் தமிழர்களுக்கு நாட்டம் இல்லை; அரசுக்கும் அக்கறை இல்லை. இன்று, தமிழ், தமிழ் நாட்டின் பல்கலைக் கழகங்களில் பயிற்று மொழியாகத் தடை இல்லை! அரசியல் சட்ட ரீதியாகக் கூட தமிழ் நாட்டில் தமிழே அனைத்துத் துறைகளிலும் ஆட்சி செய்தல் வேண்டும். ஆனால் இந்த இனிய பேறு, தமிழ்த் தாய்க்குக் கிடைக்கவில்லை. இனிய செல்வ, இன்று தமிழ் வளர்ச்சியின்மைக்குக் காரணம் தமிழர்களே தாம். இந்திய அரசியல் சட்டம் தடையாக இல்லை. இன்று தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது இந்தியல்ல; ஆங்கிலமேயாம். ஆங்கிலத்தை அகற்றி விட்டால் அந்த இடத்தில் இந்தி வந்து நுழைந்து விடும் என்று பயமுறுத்துகிறார்கள்! இந்தியை நடுவணரசிலிருந்து அகற்ற வேண்டாம். இந்தியை இந்தியர் அனைவரும் ஒருமொழியாகக் கற்பதைத் தடுக்க வேண்டாம். ஆங்கிலம் ஒருமொழியாகக் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். அவசியமும் கூட. ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஒரு மொழியாகக் கற்பிக்கப் பெறவில்லை என்பதறிக! ஆங்கிலம் பயிற்று மொழியாக விளங்குகிறது. அதனால் துறைதோறும் துறைதோறும் தமிழ் பயிற்று மொழியாவது தடைப்படுகிறது; தமிழரின் வளர்ச்சியும் தடைப்படுகிறது: ஆதலால் இன்று தமிழின் வளர்ச்சிக்குத் தடையாயிருக்கும் ஆங்கிலம் பயிற்று மொழியாயிருப்பதை அகற்றித் தமிழுக்கு அந்த இடத்தைத் தந்தாக வேண்டும். ‘கற்பவை கற்க! தமிழே கற்பிக்கும் மொழி; கற்கும் மொழி! தமிழ் வாயிலாகக் கற்போம்! ஆங்கிலம் மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப் பெறுதல் வேண்டும். இது தொடர்பாக நிறைய எழுத வேண்டியிருக்கிறது. தொடர்ந்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு

அடிகளார்

9. தாய்மொழிவழிக் கல்வி-4

இனிய தமிழ்ச் செல்வ,

நமது மடலின் சிந்தனைகள் செயலாக்கம் பெறுவதை நாட்காலையில் படிக்கும் செய்தித் தாள்கள் எடுத்துக் கூறுகின்றன! மகிழ்ச்சிதானே!

இனிய செல்வ, தமிழ்நாடு சட்டமன்றம் இந்திய ஆட்சி மொழி குறித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானமாவது; "இந்திய தேசிய மொழிகள் நடுவணரசின் ஆட்சி மொழியாகும் தகுதிபெறும் வரை ஆங்கிலம் நடுவணரசின் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும்” என்பதாகும். அதாவது, "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை" என்பதற்குப் பதிலாக "இந்திய தேசிய மொழிகள் நடுவணரசின் ஆட்சி மொழியாக அமையும் காலம் வரை" என்பது திருத்தம். இனிய செல்வ, இந்திய தேசிய மொழிகள் 14. இவற்றுள் தமிழும் ஒன்று. இந்திய அரசின் அலுவல் மொழியாகத் தமிழும் இடம்பெறவேண்டும் என்பதே தீர்மானத்தின் சாரம். தமிழராகப் பிறந்தோர் அனைவரும் இந்தத் தீர்மானத்தை வரவேற்பர் என்பது தெளிவு. ஆனால், தீர்மானம் செயலாக்க அடிப்படையில் அமைந்ததாகத் தெரியவில்லை.

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு”

என்ற திருவள்ளுவர் வழியில் சிந்திக்க வேண்டும். நடுவணரசின் ஆட்சி மொழியாகத் தமிழ் இடம்பெற வேண்டுமானால் தமிழ் நாட்டில் தமிழ் துறைதோறும் இடம் பெற வளர-திட்டமிடுதல் வேண்டும். காலவரையறைக்குட்பட்ட திட்டம் தேவை. தமிழகத்திலேயே பயிற்று மொழியில் தமிழுக்குரிய இடத்தை ஆங்கிலம் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்றித் தமிழுக்கு மீட்டுத் தரவேண்டும். அதுபோலவே தமிழ் நாட்டு அரசின் அனைத்துத் துறையிலும் தமிழே ஆட்சி மொழி என்று நடைமுறைப்படுத்தவேண்டும். தமிழ் மூலம் பயின்றோர் பட்டம் பெற்றோர் தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் அமர்தல் வேண்டும். இவை நடந்தாலே தமிழ் வளரும். அவ்வழி நடுவணரசின் ஆட்சிமொழியாதலுக்குரிய சூழ்நிலையைத் தமிழுக்கு வழங்க இயலும். இவை பற்றிய சிந்தனைகள் தென்படவில்லை.

இனிய செல்வ, அடுத்து இந்தி ஆட்சி மொழியாதல் மட்டுமே நோக்கமன்று. அஃது ஒரு பொது மொழியாக பொது உறவு மொழியாக விளங்கவேண்டும் என்பது நடுவண் அரசின் கொள்கை. இந்தப் பொதுமொழி உறவு மொழி குறித்துத் தமிழ்நாடு அரசின் கருத்து என்ன என்பது தெளிவாகத் தெரிதல் நல்லது. அவசியமும் கூட:

இனிய செல்வ, தமிழ், நடுவணரசின் ஆட்சி மொழியானால் நாட்டளவில் ஆங்கிலத்திற்குரிய இடம் என்ன? அஃது ஒரு மொழியாகக் கற்கப் படுமா? அல்லது கை விடப்படுமா? இனிய செல்வ, மேலும் ஒரு சிக்கல் உள்ளது. இந்தியா, ஒரு துணைக் கண்டம். பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தின் தாய் மொழியே ஆட்சி மொழி. தமிழ் மக்கள் இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை விரும்பி ஏற்காது போனால் அந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பு பெறுவதும் வாழ்வதும் பாதிக்கும். இப்படி எண்ணற்ற சிக்கல்கள் பற்றி எண்ண வேண்டியிருக்கிறது.

இனிய செல்வ, இந்திய தேசிய மொழிகள் தமிழ் உள்பட இந்திய ஆட்சி மொழியின் தகுதி பெற்றால் இந்தியை நாட்டின் பொது மொழியாக உறவு மொழியாக ஏற்றுக் கொள்ளலாம். இதனால் இந்திய ஒருமைப்பாடு உறுதி பெறும். தமிழ், நடுவணரசின் ஆட்சிமொழியாதல் பற்றி மட்டும் எடுத்துக் கூறினால் பாராளுமன்றம் ஏற்குமா என்பது ஐயம்! ஆதலால், ‘இந்திய தேசிய மொழிகள் நடுவணரசின் ஆட்சி மொழித் தகுதியை அரசியல் சட்ட அடிப்படையில் பெறவேண்டும். இந்தி, நாட்டுப் பொதுமொழியாக பொது உறவு மொழியாக இடம் பெறவேண்டும்’ என்ற தீர்மானம் சரியானது. அதனால் தமிழ் பயிற்றுமொழி, இந்தி நாட்டு மொழி என்ற இரு மொழித் திட்டத்தை நடைமுறைப் படுத்தலாம். இந்த இரண்டு மொழித் திட்ட அடிப்படையில் இந்தி பேசும் மாநிலங்கள் தென் இந்திய மொழி ஒன்றைக் கட்டாயமாகப் படிக்கவேண்டும். ஆனாலும் இந்த இரண்டு மொழிகளுடன் நிற்பது போதாது. விருப்பமொழிப் பாடமாக மூன்றாவது மொழியாக ஆங்கிலம் கற்க வேண்டும். மேலும் கற்கும் திறன் உள்ளவர்கள் படிக்க, பேசத்தக்க வகையில் இந்திய மொழிகளில் எந்த ஒன்றையாவது படிக்கலாம் அல்லது ஆய்வு அடிப்படையில் ருசிய மொழி, சப்பானிய மொழி போன்றவற்றைப் படிக்கலாம்.

இப்படி எண்ணித் திட்டமிட்டுப் பேசினால், எழுதினால், இக்கருத்துக்கு இயக்கருவும் கொடுத்தால் வெற்றி பெறலாம்.

இனிய தமிழ்ச் செல்வ, இந்தியா ஒரு பெரிய நாடு. இந்திய நிர்வாக இயந்திரம் மிகமிகப் பெரியது. இவ்வளவு பெரிய நிர்வாகத்தில் 14 மொழிகள் என்பது ஓரளவு சிக்கல் தான்! ஆயினும் இந்திய ஒருமைப்பாடு மிகப் பெரிய இலக்கு. ஆதலால் இந்தச் சிக்கலை-கூடுதல் செலவை-இழப்பை ஏற்பதைத் தவிர வழியில்லை. இதில் ஒரளவு எளிமைப்படுத்த நடுவணரசின் மாநில மைய அலுவலகம் ஒன்றினை அமைத்து மாநில அளவிற்கு மட்டுமே தொடர்புடைய

தி.19. செய்திகளை, அலுவல்களை அந்த மாநில மைய அலுவலகமே முடிவு செய்ய அனுமதித்தல் நல்லது.

இனிய செல்வ, தமிழ் மொழி தமிழ் நாட்டில் துறை தோறும் துரைத்தனம் செய்ய வேண்டிய மொழி! தமிழ், தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழி! தமிழும் பிற இந்திய தேசிய மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி மொழிகள், இந்தி, இந்தியாவில் நாட்டுப் பொதுமொழி; உறவு மொழி; ஆங்கிலம் அறிவியல் மொழி; கற்க வேண்டிய மொழி; மேலும் சில மொழிகளும் எழுத, படிக்க, கற்றுக் கொள்ளலாம். இனிய செல்வ, ஆய்வு செய்க! இன்ப அன்பு

அடிகளார்

10. தாய்மொழிவழிக் கல்வி-5

இனிய தமிழ்ச் செல்வ,

மொழிப்போர்-இல்லை, இந்தி எதிர்ப்புப்போர் தீவிரமாகிறது! இதில் தீவிரமாக ஈடுபட்டுத் துன்பங்களை ஏற்று அனுபவிக்கும் அனைவருக்கும் நமது பாராட்டுதல்கள்! அவர்களுடைய கொள்கையில் நமக்கு முரண்பாடு இருக்கலாம்! இருக்கிறது! ஆனால் அவர்களுடைய உணர்வை நாம் மதிக்கின்றோம்! அதற்கு மாசு கற்பிக்க நாம் விரும்பவில்லை! நாம் மாறுபடுவதெல்லாம் தமிழுக்கு உடனடியான பகை இந்தியன்று; இந்தி இருக்கவும் முடியாது என்பதுதான். ஆனால் தமிழுக்கு உடனடிப்பகையாக இன்று இருப்பது ஆங்கிலந்தான்! தமிழ் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பதும் ஆங்கிலம் தான்! தமிழனின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும் ஆங்கிலம் தான்! இது நம்பிக்கை மட்டும் அல்ல! நாட்டின் நிகழ்வுகள் தரும் படிப்பினை!

இனிய செல்வ, திருக்குறள்,

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்"

(948)

என்று கூறுகிறது. "நோய்க்கு மருத்துவம் செய்வதை விட நோயின் முதலை-நோயின் காரணத்தை மாற்று!” என்பதே திருக்குறள் கொள்கை. இன்று தமிழினம் வளராததற்கு-தமிழ் வளராததற்குக் காரணம் ஆங்கிலம் பயிற்று மொழியாக நீடித்தலேயாம். நமது வீட்டில், நமது பல்கலைக் கழகங்களின் வளாகங்களில், நமது தமிழ் நாட்டில் எந்த மொழி ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் அக்கறை தோன்ற வேண்டாமா? ஆங்கில மொழியின்பால் ஈடுபாடு வளர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் ஆங்கிலத்தை அனைத்துக் கொண்டதுதான்! உலக மாந்தரொடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் வேண்டாமா என்று கேட்பர். நமது நாட்டு மாந்தரொடு தொடர்பு கொள்ள ஒருமொழி வேண்டாமா? கூடாதா? இனிய செல்வ, ஆங்கிலத்தின் மூலம் உலகத் தொடர்பு என்பது இன்று சாத்தியமில்லை! உலக நாடுகள் அனைத்திலும் அந்தந்த நாட்டு மொழிகளே பயிற்று மொழிகள்! ஆட்சி மொழிகள்! ஆதலால் ஆங்கிலம் உலக மொழியல்ல! ஆனால் எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் ஒரு மொழியாகப் பயிலப்பெறுகிறது. அவ்வளவுதான்! ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு சோவியத்தில், ஜப்பானில் பயணம் செய்தல் இயலாது. இந்தியாவிலும் இயலாது. ஆதலால் ஒரு மனிதன், உலக மனிதனுடன் தொடர்பு கொள்ளவேண்டின் உலக மனிதனாக உயர வேண்டும் எனில் பல மொழிகள் கற்க வேண்டும். முயன்றால் கற்கவும் இயலும். இனிய செல்வ, இந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்றாலும் தேசிய மொழிகளின் ஆர்வங்களுக்கு ஏற்ப நாட்டு மொழிகளை, தேசிய மொழிகளை இந்திய அலுவல்களில் வேண்டிய அளவுக்குப் பயன்படுத்துதல் வேண்டும் என்ற நிலை ஏற்பு செய்யப் பெற்றுள்ளது. இந்த முடிவின்படி மைய அரசு அலுவலகங்கள் மாநில மக்களுடன் தொடர்புகொள்ள மாநில மொழிகளையே பயன்படுத்த வேண்டும் என்பது நடைமுறை! இனிய செல்வ, மிகச் சிறந்த ஏற்பு, மைய அரசின் பணிகளுக்குரிய தேர்வுகளை அவரவர் தாய் மொழியிலேயே எழுதலாம் என்ற முடிவு! அமரர் அறிஞர் அண்ணா அவர்கள் கருத்து மைய அரசின் தேர்வுகளில் இந்தியைத் தாய்மொழியாகவுடைய மாணவர்களுடன் மற்ற மாநில மாணவர்கள் போட்டியிட முடியாது என்பதேயாகும். இன்று மைய அரசின் தேர்வுகளை அவரவர் தாய் மொழியிலேயே எழுதலாம். இந்தி மொழி மாநில இளைஞர்கள் இந்தியிலேயே எழுதுகின்றனர். நமது தமிழ் நாட்டு இளைஞர்களோ ஆங்கிலத்திலேயே எழுதுகின்றனர். தாய் மொழியில் எழுதும் இந்தி மாநில இளைஞர்கள் வெற்றி பெறும் அளவுக்குத் தாய்மொழியல்லாத ஆங்கிலத்தில் எழுதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வெற்றியைப் பெறமுடிய வில்லையே! ஏன்? தமிழ் நாட்டு இளைஞர்கள் தமிழ் வழி கற்காததே காரணம்! ஆங்கிலம் தாய்மொழியாக அமையாததால் திறமை நிறைவுபெறவில்லை! இதுவே காரணம்.

இனிய செல்வ, இந்தியத் தலைநகரில் எந்த மொழி என்பதை முடிவு செய்வதற்குமுன்பு தமிழ் நாட்டில் எது பயிற்று மொழி? தமிழ் நாட்டில் எது ஆட்சி மொழி? என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த முடிவுகளிலிருந்து தான் மைய அரசின் மொழிக் கொள்கையில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையும்! அவர்களும் ஏற்கத் தக்கதாக முடியும்! இந்தத் திசையில் பாராட்டுதலுக்குரிய கலைஞரும் மாண்புமிகு தமிழக முதல்வரும் சிந்தனை செய்ய வேண்டும் என்பது நமது விருப்பம்.

மொழி வழிப்பட்ட இயக்கங்கள் உணர்ச்சி பூர்வமானவை. இதற்குத் தீர்வு காண்பதில் நிதானம் மிகுதியும் தேவை. தீர்வு காணும் முயற்சிகளில் மக்களாட்சி மரபுகள் மீறப்படுதல் கூடாது என்பதையும் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு

அடிகளார்

11. தொடரும் துன்பம்

இனிய செல்வ!

தாய்மொழி வழிப் பயிற்சி பற்றி எழுதினோம். அறிவு தேவை! அறிவு, சிந்தனையைச் சார்ந்தது! ஒழுக்கமாக உருக்கொள்வது! அறிவு, தாய்மொழிக் கல்விவழிதான் இயலும்! தாய்மொழியின் இலக்கணப்பகுதி அன்றாட வாழ்க்கையிலேயே கற்றுக் கொள்ளப்படுகிறது! அறிவு முயற்சிக்குத் தடையாக மொழிச்சிக்கல் இருக்காது! தாய் மொழிக் கல்வி அறிவூற்றுக்குத் துணையாய மையம்! உலக நாடுகள் அனைத்திலும் தாய்மொழியே பயிற்றும் மொழி! நமது தமிழ் நாட்டில் தான் ஆங்கிலம் பயிற்று மொழி! ஏன்? திருவள்ளுவர்,

"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

உண்மை அறிவே மிகும்"

என்று கூறுகிறார். இந்தத் திருக்குறளுக்கு ஊழின்பாற் பட்ட பொருள் கூறுவர். அஃது அவ்வளவு ஏற்புடையது அல்ல! வாழ்க்கை ஊழின்பாற்பட்டது என்றால் அப்புறம் ஏன் வாழ்க்கை? கல்வி, கேள்வி ஏன்? இனிய செல்வ, திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பாலாக அமைந்தது ஏன்? மரபு வழிப்பார்வையை நீக்கிவிட்டு இந்த அமைப்பு முறையைப் படித்துப் பார்! புதிய பார்வை கிடைக்கிறதா? இனிய செல்வ, திருவள்ளுவர் எல்லோரையும் போல அறம் செய்யவே நினைத்தார்! அறத்துப்பால் செய்தார்! அறத்துப் பாலின் முடிவு ஊழ்! ஊழ் இயல் வந்தவுடன் திருவள்ளுவர், ஊழ்வழிப்பட்டு மானுடத்தின் வாழ்க்கை தேக்கமுறுதல் கூடாதென்று நினைக்கிறார்! ஊழினை எதிர்த்து முறியடித்து விட்டு நேர்பட வாழவைக்க வேண்டும் என்று நினைக்கிறார்! மானுடம் ஊழினை வெற்றிகண்டு வாழ்வியலை இயக்கவே பொருட்பாலை இயற்றுகின்றார்! ஊழினை எதிர்த்துப் போராடும் மானுடத்திற்கு அறிவறிந்த ஆள்வினையைத் துணையாகச் சேர்க்கிறார். பெரியாரையும் துணையாகச் சேர்த்து விடுகின்றார்! ஆனால், பொருட்பால் இயக்கத்தில்-சமுதாயத்தில் முரண்பட்ட இயல்புகளைக் காண்கின்றார்! பெரியார் துணையை நாடினால் அது கிடைப்பது இல்லை. சிற்றினமே வந்து சேர்கிறது! நல்ல நட்பைநாடினால் தீ நட்பேவந்து பொருந்துகிறது. செங்கோலை நாடி ஓடினால் அது கிடைப்பதில்லை! கொடுங்கோன்மைதான் கிடைக்கிறது! இத்தகு முரண்பாடுகளை திருவள்ளுவர் சிந்திக்கின்றார்! இனிய செல்வ, அதனாலேயே பொருட்பாலின் முடிவு கயமையாயிற்று. கயமை அதிகாரம் திருவள்ளுவரின் மனநிறைவு இன்மையைக் காட்டுகிறது! அது மட்டுமல்ல! திருவள்ளுவருக்கே தாங்க முடியாத ஆற்றாமை மீதுார்கிறது. இதனை,

"ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஓ மளவுமோர் நோய்"

என்று வெளிப்படுத்துகின்றார். ஆம்! திருவள்ளுவர் சொல்லியும் கேட்கவில்லை! ஆம்! ஆம்! ஆம்! இனிய செல்வ, இதில் உனக்கென்ன ஐயம்! திருவள்ளுவர் சொன்னதை அவர் வாழ்ந்த காலத்திலும் யாரும் கேட்கவில்லை! ஏன் இன்று வரையிலும் கூட யாரும் கேட்கவில்லை! எங்கோ இங்கொருவர் அங்கொருவர் திருக்குறள் கற்றவர்கள் இருக்கலாம்! அவர்களும் திருக்குறளை நம்புகிறார்களா? திருக்குறள் நெறியில் வாழத் தலைப்படுகிறார்களா என்று கேட்பின் இல்லை என்பதே விடை! இனியசெல்வ, திருவள்ளுவர் சொன்னதைத் தான் கேட்க வில்லை. அதிமேதாவிகள்; அவர்கள் தாங்களாகவே பட்டறிவிலிருந்து அறிவு, கொள்முதல் செய்தார்களா? விழுந்த இடத்தில் விழாமல் எழுந்து நடந்தார்களா? அதுவும் இல்லை! இனிய செல்வ, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தமிழ் இனத்தின் வாழ்க்கையில் ஒரு தேக்கம். நம் முன்னோர் பெற்ற வெற்றிகளைத் தோல்விகளாக்குகின்றனர். துன்பங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகின்றன; ஆனால் ஆரவாரத்திற்குப் பஞ்சமில்லை! இனியசெல்வ தொடர்ந்து எழுதுவோம்! இன்ப அன்பு

அடிகளார்

12. சலத்தால் பொருள் செய்யற்க

இனிய செல்வ!

பல மடல்கள் எழுதத் தவறிவிட்டன. அன்பு கூர்ந்து பொறுத்தாற்றிக் கொள்க.

இன்றும் நாடு தழுவிய நிலையில் பேசப்பெறும் ஒரு செய்தி ‘ஊழல்’ ஆகும். இந்த ஊழல், கையூட்டு, (லஞ்சம்) வேண்டியவர்க்குச் சலுகை ஆகிய வழிகளில் கால்கொண்டு வளர்கிறது. கையூட்டு இன்று தோன்றிய வழக்கமல்ல. நம்முடைய நாட்டில் பன்னெடு நாள்களாகவே வளர்ந்து வந்துள்ள ஒரு தீய பழக்கம்-தொற்றுநோய். இது இன்று வளர்ந்து நாட்டளவினதாகிய நோயாக வளர்ந்துவிட்டது. ஊழலும் தேசியமயமாகிவிட்டது.

இந்தக் கையூட்டுப் பழக்கத்தை முதன் முதலில் கண்டு அறிமுகப்படுத்தியமை மதத்தலைவர்களையும் புரோகிதர்களையுமே சாரும். முதன் முதலாகக் கடவுளுக்குக் கையூட்டுக் கொடுத்து வீடு பெற முயலும் வழியை, புரோகிதர்கள் அறிமுகப்படுத்தினர். இதனைச் சங்க இலக்கியம் "அறவிலை வாணிகம்" என்று கேலி செய்கிறது. என்ன செல்வ, சிரிக்கிறாய்? சிரித்து என்ன செய்வது? இன்றும் நமது சமய வாழ்க்கையில்-திருக்கோயில் நிர்வாக அமைப்பில் வணிக வாடையே மிகுதி. மதப் புரோகிதர்களால், மதத் தலைவர்களால் தொடங்கி வைக்கப் பெற்ற கையூட்டு முறை வளர்ந்து ஆண்டவன் சந்நிதிவரை ஆள்பவர்கள் சந்நிதிவரை வளர்ந்து விட்டது. கையூட்டுமூலம் வளரும் பொருள், - வாழ் வளிக்காது; ஆக்கம்போல் காட்டிக் கேட்டினையே தரும். இனிய செல்வ! தவறான வழியில் பொருளீட்டுதலைத் திருக்குறள், "சலத்தால் பொருள் செய்தல்" என்று கூறுகிறது. இனிய செல்வ, திருக்குறள் இந்த மட்டோடு நிற்கவில்லை. சலத்தால் பொருள் செய்தல் நில்லாது என்பதற்கு, "பச்சை மண்ணால் செய்யப்பெற்ற பானையில் தண்ணீர் சேமித்து வைத்து இருப்பதை" உதாரணமாக எடுத்துக் காட்டுகிறது.

இந்தக் கையூட்டு எப்படிக் கால்கொள்கிறது? இனிய செல்வ, மனித உரிமைகள் மதிக்கப் பெறாமல் அவர்களுடைய உரிமைகள் கூட ஆட்சியாளர்களால் மதத் தலைவர்களால் சலுகை எனக் கருதி வழங்கப்பெறும் காலத்தில்தான் கையூட்டுமுறை நுழைகிறது. சலுகையென்றால் வழங்குவோரின் விருப்பு-வெறுப்புக்கள் காரணமாக வழங்கப்பெறாமலும் போகலாம். அல்லது காலம் தாழ்க்கப் பெறலாம். அதனால் வாய்ப்பிழந்தவர்கள், வாழ்விழந்தவர்கள் எப்படியாவது வாழ்ந்திடவேண்டுமே என்று அஞ்சித் தான் கையூட்டுக்கள் வழங்குகின்றனர். அதுவும் மகிழ்ச்சியோடு கொடுப்பதில்லை. அழுதுகொண்டே கொடுக்கின்றனர். "அழக்கொண்ட எல்லாம் அழப்போம்!” "வேலொடு நின்றான் இடு என்றது போலும்” என்ற திருக்குறள்களையும் அறிக.

இந்தச் சூழ்நிலையில் கையூட்டுக்கள், ஊழல்கள் அற்ற சமுதாய அமைப்பு காணவேண்டுமாயின் அடியிற்கண்டுள்ள நடைமுறைகள் தேவை.

1.நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் உத்தரவாதம் செய்யப் பெற வேண்டும். (கல்வி, வேலை வாய்ப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், மருத்துவம் முதலியன).

2.நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் யாதொரு தடையுமின்றி உரிய காலத்தில் கிடைக்கத்தக்க வகையில் அரசு இயந்திரம் இயங்க வேண்டும். 3. அசையாச் சொத்து வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்.

இந்த நெறிமுறைகளை இன்று யாரும் வரவேற்க மாட்டார்கள். ஏன்? அரசுகூட ஏற்காது! இனிய செல்வ, அடுத்து மீண்டும் எழுதுகின்றோம். இன்ப அன்பு

அடிகளார்

13. ஒருமைப்பாட்டு உணர்வு கொள்

இனிய செல்வ!

இன்றைய இந்தியா எப்படி இருக்கிறது? ஆள்கிற கட்சிகள் எப்படி இருக்கின்றன? எதிர்க்கட்சிகள் எப்படி இருக்கின்றன? வினாக்கள் புரிகின்றனவா? ஆம்! திருக்குறள் நெறிக்கு முற்றிலும் எதிர்நிலையில் இன்றைய நாடு இருக்கிறது.

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு."

என்பது திருக்குறள். ஆம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாடு பல குழுக்களாகப் பிரிந்து கிடந்தது. நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரிய முட்டுக்கட்டை இந்தக் குழு மனப்பான்மையே! வெளிப்படையாகத் தெரியும் சாதி, குல, கோத்திர மதப்பிரிவினைகள் வேறு. இந்தப் பிரிவினைகள் வழிப்பட்டு, வேறுபட்டு நிற்கும் கூட்டங்கள், குழுக்கள் என்று அழைக்கப்படுவதில்லை! 'பல்குழுக்கள்’ என்று குறிப்பிட்டது ஒரு அணிபோல் தோற்றத்தில் காட்டி, உள்ளே முரண்பட்டுக் கிடக்கும் சக்திகளைக் குழுக்கள் என்று திருக்குறள் இனம் காட்டுகிறது.

இனிய செல்வ! இந்தக் குழுக்கள் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று கேட்கின்றாய். குழுஉ மனப்பான்மையில் ஒதுங்கியும், ஒதுக்கியும் ஒரு சிறு கூட்டம் சேர்ப்பதற்குக் காரணம், வறட்சித்தன்மை மிக்க தலைமை உணர்வே! உயர்வு மனப்பான்மை இயக்குகிறது; ஆனால், இயல்பாக உயர்வு நலத்திற்குரிய எந்தத் தகுதியும் இல்லை. ஆதலால் தாழ்வு மனப்பான்மை எதிர் விளைவை உருவாக்கும் பொய்யான உயர்வு மனப்பான்மையாக உருக் கொள்கிறது. இது ஒரு முக்கிய காரணம். அடுத்து செல்வ, அப்பட்டமான தற்சார்பான வாழ்க்கைமுறை. அதாவது சுயநலம். மேலும் சில சமயங்களில் பயந்தாங்கொள்ளித் தனங்கள், தைரியம் என்ற ஆடையைக் கட்டிக் கொண்டு பொய்யாட்டம் போடும். இத்தகு ஆட்டங்கள் பயனற்றவை.

இன்று நம்முடைய நாட்டை வருத்தும் துன்பங்களுள் பெரியது பல்வகைப்பட்ட குழுக்கள் அமைந்திருப்பதே. இத்தகு குழு மனப்பான்மையுடைய முரண்பட்ட சக்திகள் நாட்டின் அனைத்து அமைப்புகளிலும் உள்ளன. இந்திய நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றுள்ள பேராயக் கட்சியாகிய காங்கிரஸ் (இ) கட்சியில் உள்ள குழு உக்கள் எண்ணில் அடங்காதவை. அதுபோலவே தான் மற்ற கட்சிகளிடத்திலும் அமைந்து கிடக்கின்றன. ஏன்? இனிய செல்வ, அண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் உடைந்து விடும் நிலைக்கு வந்துவிட்டது என்ற செய்தியைப் படித்தாய் அல்லவா? ஆம் செல்வ! கடந்த அரை நூற்றாண்டுக்குள்ளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முற்றாக உடைந்து விட்டது. இப்போது ஏற்படும் பிரிவு நான்காவது. விஞ்ஞான பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய கடமைப்பாடுடைய கட்சிகள் கூட உடைபடுகின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் ஒவ்வொருவரும் கற்கும் கல்வியை விட - அறிவை விடப் பாரம்பரியம் அதிகச் செல்வாக்குடையதாக விளங்குகிறது என்பதுதானே! இனிய செல்வ, குழூஉ மனப்பான்மை கூடாது. கருத்து மாற்றங்கள் மனம்விட்டு விவாதிக்கப் பெற்று ஏற்றுக் கொள்ளப் பெறுதல் வேண்டும். கருத்து மாற்றங்கள் ஏற்படவில்லையா? அதனால் என்ன? குடியா முழுகிவிடப் போகிறது? காத்திருக்கலாமே! இப்போது எல்லாம் இத்தகு பொறுமை இல்லை. கருத்து மாற்றங்களுடையோர் குழூஉக்களாகப் பிரிந்து உட்பகை கொள்கின்றனர். உட்பகையின் காரணமாக ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு பாழ்களை விளைவிக்கின்றனர். இந்த அளவிலும் நிற்பதில்லை, குழூஉ மனப்பான்மை ஆளும் அரசுகளையே கையகப்படுத்திக் கொண்டு ஆட்சி முறைக்குக் கேடு செய்கின்றனர். மக்களாட்சி நடைபெறும் நாட்டில் குழூஉக்கள் தோன்றிவிடின் அரசே நடைபெறாது. அரசையே இந்தக் குழூக்கள் தம்வயப்படுத்தி இயக்க முயலும். ஆக, நாள்தோறும் அதிகாரப் பங்கீடுகள் பற்றிய சர்ச்சையே நடைபெறும். அரசு எந்திரத்தின் உறுப்புக்களாகிய அரசு அலுவலர்கள் திசை தெரியாமல் தவிப்பர். யார் சொல்வதைக் கேட்பது என்ற சங்கடத்திலேயே காரியங்கள் ஒத்திப் போடப்படும் நாட்டில் நிர்வாகமே நடைபெறாது. இத்தகு இரங்கத்தக்க நிலை நமக்கு வேண்டியதுதானா? இனிய செல்வ, எண்ணுக! எண்ணித்துணிக! கூடித் தொழில் செய்க! ஒருமைப்பாடுடையராய் நாட்டு வேள்வி இயற்றுவோமாக! நாட்டின் அரசைக் குழுக்களின் அரசாக மாற்றி மக்களுக்குத் தீங்கு செய்கின்றனர். ஆட்சியும் நிலை குலைகிறது. இன்றைய நமது நாட்டின் நிலையும் இதுவேயாம்.

சிற்றூர்கள் - பேரூர்கள் நலம்பெற பல்குழூஉ மனப்பான்மை அறவே விட்டொழிக்க வேண்டும். எல்லோரும் ஒர் குலமாக - ஓரினமாக - ஓர் நிறையாகக் கூடித் தொழில் செய்ய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். தலைமைப் பசி வரக்கூடாது! தாழ்வெனும் தன்மையுடன் பணிசெய்தல் வேண்டும். தேவையில்லாமல் கூட்டம் போடக்கூடாது. நமது நாட்டில் கூட்டம் நல்ல பயனை அடையமுடிவதில்லை. ஒரோவழி அபூர்வமான சூழ்நிலைகளிலே நமது நாட்டில் கூட்டம் பயன்தருகிறது.

இனிய செல்வ! குழூஉ மனப்பான்மை தீயது! நாட்டுக்கு ஏற்றது பரந்த ஒருமைப் பாட்டுணர்வேயாம்! இனிய செல்வ, சின்னச் சின்னக் கூட்டம் வேண்டாம். சிறு பிள்ளைத்தனம் வேண்டாம். இனிய செல்வ, ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்கேற்றதாக நம் அனைவரின் சிந்தனை அமைவதாக! இந்தச் சிந்தனை உயிர்ப்பும் உறுதியும் உடையதாக அமைவதாக! நாம் அனைவரும் இந்தியர்! மனிதர்! உரத்தகுரலில் சொல்வோமாக! நமது நாடு உலகம்; நமது வீடு, நமது நாடு. இந்தப் பண்புகள் நமது அணிகலன்கள் ஆகுக! இன்ப அன்பு

அடிகளார்

14. இகல்இன்றி இரு

இனிய செந்தமிழ் செல்வ!

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழினத்தின் ஒருபகுதியினரை வகுத்திவந்த துன்பம் ஒருவாறாக மறைந்தது. ஆம் செல்வ! இலங்கைத் தமிழர்களின் துன்பத்தைத்தான் கூறுகின்றோம். வீரகாவியங்கள் செய்த பாரதிதாசனே "கெட்ட போரிடும் உலகம்" என்று போரிடும் உலகத்தினைச் சாடுகின்றான். வழக்கம்போல சமாதானத்தின் காவலனாக உள்ள நமது பாரதநாடு இலங்கையில் சமாதானத்தைத் தோற்றுவித்துள்ளது. இனிய அன்ப! இந்த ஈழத்தமிழர்களில் சிக்கலில் நமது திருக்குறள் பேர்வையின் 19-1-85 பொதுக்குழு எடுத்தமுடிவுகளே இலங்கை இந்திய உடன்பாட்டின் நெறிகளாக அமைந்துள்ளன எனில் அதுவியப்பன்று! திருக்குறளின் சிறப்பு அது.

திருவள்ளுவர் ‘படைச்செருக்கு’ முதலிய அதிகாரங்கள் கூறினாரேனும் ‘இகல்’ என்று ஒர் அதிகாரம் அமைத்து, மாறுபடுதலையும் மாறுபாட்டின் வழி பொருதுதலையும் தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றார். இனிய செல்வ! திருவள்ளுவர் இகல் அதாவது மாறுபாடு கொள்ளுதல் தவறு என்று மட்டும் கூறவில்லை. மாறுபாட்டின் காரணமாக அமையும் பிரிவினை உணர்வை கூடிவாழாமையை நோய் என்றே கூறுகின்றார். கூடி வாழ்தலே மானுடத்தின் இயற்கை இயற்கை நியதிகளுக்கு மாறானது எல்லாம் நோய்தானே! தீமைதானே!

"இகலென்ப வெல்லாவுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை

பாரிக்கும் நோய்”

என்பது குறள்,

இனிய செல்வ! மாறுபடுவதால் பிரிவினை உணர்வு பெறுவதால் வெற்றி கிடைக்கிறது! புகழ் கிடைக்கிறது! பொருள் குவிகிறது! என்றெல்லாம் சிலர் கருதுகின்றனர். இது ஒரோவழி உண்மையும் கூட. ஆனாலும் இவை நிலையானவையல்ல. பிரிவினைகளால் போர்களால் பெற்ற வாழ்வு விரைவில் நிலை தாழும்! முடிந்தும் போகும்! அலெக்சாந்தரின் வெற்றிகளும் நெப்போலியனின் வெற்றிகளும் என்னாயின! அந்த வெற்றி வீரர்களின் வாழ்க்கை எப்படி முடிந்தது? துன்பமாக அல்லவா முடிந்தது? ஏன், அசோக சக்கரவர்த்தியின் போர்க்கால வாழ்க்கையை வரலாறு பாராட்டவில்லை? போரின் முடிவில் அவர் மனம் ஏற்றுக்கொண்ட சமாதான வாழ்க்கையை உலக வரலாறு போற்றுகிறது. அசோகர் அரசின் நியதிகளுக்கு அடங்காத வரைக் கூட, அன்பு நெறியிலேயே திருத்த முயன்றார். சமாதானத்தையும் பொறுத்தாற்றும் பண்பையும் (சகிப்புத்தன்மை) கருவிகளாகக்கொண்ட "சீலத்தினால் வெற்றி" என்ற நெறி வழியே கிரேக்கரையும் சிங்கள நாட்டினரையும் தாம் கவர்ந்து வெற்றி கொண்டதாக அசோகர் குறிப்பிட்டுள்ளார். இனிய செல்வ! இன்று அசோகர் வழி வந்த பாரத நாட்டு மக்கள், இலங்கைக்குச் சமாதானத்தைப் பரிசாக வழங்கியுள்ளனர். அந்தப் பரிசே இந்திய இலங்கை ஒப்பந்தம். "துன்பத்துள் துன்பம் இகல்" என்பது திருக்குறள். மாறுபாடுகளும் பிரிவினையும் துன்பமே! இலங்கை, இலங்கையருக்கே! இலங்கையில் வாழும் தமிழர்களும் பேசும் மொழியால் தமிழர்கள்; நாட்டால் இலங்கையர்களேயாம். இந்த உண்மையினைச் சிங்களவர்களும் மறத்தல் கூடாது தமிழர்களும் மறத்தல் கூடாது. வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாகவே கூடி வாழ்தல் வேண்டும்! பிரிவினை தீது! மாகாணப் பிரிவினைகள் வசதிக்காகவேயாம்! இந்தப் பிரிவினை நெடுஞ்சுவராகி விடக்கூடாது. வீட்டில் அறைகள் அறைகளின் சுவர்கள் பிரிவினைத் தன்மை உடையன அல்ல. அவை வசதிகளைக் குறிக்கோளாகக் கொண்டவை. இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனைக் காத்தலே பெளத்த சமய நெறி - கோட்பாடாக விளங்க முடியும்! இலங்கையில் உள்ள சிங்கள நலன்களைக் காப்பதிலேயே தமிழர் சமயம் பண்பாடு ஒளிவிட முடியும்! இதுவே அசோகர் போர் முடிவில் கண் "தர்ம விஜயக் கோட்பாடு” இந்தத் தர்ம விஜயக் கோட்பாடு வெல்க! வளர்க!

என்றும் வேண்டும் இன்ப அன்பு

அடிகளார்

15. பிறப்பால் இல்லை பிரிவினை

இனிய தமிழ்ச் செல்வ!

ஆரியர்களும் ஆங்கிலேயர்களும் விதைத்த நச்சு விதைகள் கிளைத்துச் செடிகளாகி நச்சுக் கனிகளைத் தந்து கொண்டுள்ளன. ஆம்! சாதிமுறைகள் ஆரியம் தந்தவை. ஆரியர்கள், வருணம், கலாசாரம் என்றெல்லாம் பேசி மானுடத்தைப் பிரித்தனர். ஒரு பிரிவினர், இன்னொரு பிரிவினருக்கு இடையே எந்தச் சூழ்நிலையிலும் கலந்துவிடாத வண்ணம் இந்து மத விதிமுறைகளைக் கடுமையாக்கினர். இந்தப் பிரிவினைப் போக்கினையே ஆங்கில ஏகாதிபத்தியம் தனது ஆட்சிக்கு அரணாக்கிக் கொண்டது. இந்தப் பொல்லாத சாதித் தீமைகளைத் தமிழக மக்கள் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். ஆனால் பயன்தான் கிடைக்கவில்லை. ஆம் செல்வ, இது முற்றிலும் உண்மை! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவர்வழி வெற்றி பெறவில்லை. ஆயினும் "ஒரு குலத்திற்கு ஒரு நீதி" என்று கூறும் மனுவாதி நூல்கள் வெற்றி பெற்று விட்டன.

ஆரியரும் ஆங்கிலேயரும் போட்ட பாட்டையிலேயே நமது நாட்டுத் தலைவர்களும் நடைபோட்டனர்; நடை போடுகின்றனர். மக்களின் மனப்போக்கை - உணர்ச்சிகளை (வெற்று உணர்ச்சிகளை) ஒட்டியே சென்று எளிதில் வெற்றிக் கனிகளைக் கொய்ய நினைக்கின்றனர். இதன் விளைவு நமது நாட்டில் இன்னமும் தீண்டாமை அகலவில்லை. ஏன்? நமது தலைமுறையில் அகலுமா என்பதே இன்றுள்ள பிரச்சனை. மருந்துக்குப் பழகிப்போன உடம்பு மருந்தின் பயனாகிய நோய் நீக்கத்தைத் தராது என்பர். அதுபோல சாதிகளிலேயே பழகிப்போன நமக்குச் சாதிகளை விடமுடியாத அளவுக்கு மூடத்தனம் வளர்ந்து விட்டது. மூடத்தனம் மட்டுமல்ல. முரட்டுதனமும் வளர்ந்து வருகிறது. இன்று எங்கு பார்த்தாலும் சாதிச் சங்கங்கள்! சாதிச் சண்டைகள்! முற்போக்குத் தன்மை வாய்ந்தவை என்று கூறிக்கொள்ளப்படுகின்ற கட்சிகளில்கூட சாதி தொடர்பான எண்ணங்கள் இடம் பெற்றுள்ளன. அவைகளும்கூட வழிவழியாகச் சாதிப் பெயரால் சமூக மேலாண்மையை வைத்துக் கொண்டுள்ள சமூகத்தினிடத்தில் தான் சங்கமித்திருக்கின்றன. பச்சையாகச் சாதியை தீண்டாமையைப் பின்பற்றுகின்ற - வளர்க்கின்ற மடங்களிடத்தில் அரசியல் தலைவர்களுக்குள்ள பாசம் அலாதியானது. காரணம் அவர்கள் பாடங்களிலிருந்து "ரஷிப்பவர்கள்" அல்லவா! .

இலக்கியத்துறையில் திருக்குறள் தோன்றி "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று நெறி காட்டிய தமிழகத்தில் மீனாட்சிபுரம், புளியங்குடி, விழுப்புரம், தோப்பூர் என்று சாதிக் கலவரங்கள் நடந்த இடங்களைப் பட்டியல் போட வேண்டியிருக்கிறது. இன்று உடனடியாகச் "சாதி” என்ற புற்றுநோய்க்கு மருத்துவம் செய்யாவிடில் இது இரத்தப் புற்றாக மாறிவிடும்! எச்சரிக்கை!

சாதிகளைப் பற்றி எண்ணி நினைத்துப் பார்க்கக்கூட இந்த மக்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. சாதீய அமைப்புகள், சங்கங்கள் தடை செய்யப்படவேண்டும்.

இந்த நாட்டில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் அனைத்துரிமைகளுக்கும் உரியவர்கள் ஆயினும் கல்வியில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குச் சில தனிச் சலுகைகள் வழங்க வேண்டியது, தவிர்க்க இயலாதது. இதற்கு அளவுகோல் பிறந்த சாதியல்ல! பின் தங்கிய நிலையே என்பதனை உறுதியாக்க வேண்டும். இங்ங்ணமின்றி மீண்டும் மீண்டும் "சாதிகளை ஒழிப்போம்; வகுப்பு வாதங்களை முறியடிப்போம்” என்று கூறிக்கொண்டே சாதிகளை வளர்க்கும் முறைகளைப் பேணி வளர்ப்பது முற்றிலும் முறையான செயலன்று. பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவதற்கு என்று ஏற்படுத்திய சலுகைகள், உதவிகள் நமது நல்லூழின்மையால் "சாதிகளைக் காப்பாற்றுபவைகளாக" மாறிவிட்டன. செல்வ! இனியும் பொறுத்தாற்ற என்ன இருக்கிறது? உடனடியாக சிந்தித்து,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை."

என்ற குறளை ஒரு நூறு தரம் சிந்தித்துச் செயற்படுதல் நன்று. இன்ப அன்பு

அடிகளார்

16. நுனிமரம் ஏறி அடிமரம் வெட்டற்க

இனிய செல்வ!

திருக்குறள் தோன்றிய காலம், பலர் கருதுவது போன்று பொற்காலமன்று. திருக்குறள் தோன்றிய காலத்திலும் நமது சமுதாயம் இன்றிருப்பதைப் போலத்தான் தரமிழந்த நிலையில் இருந்திருக்கிறது. தரமிழந்த நிலையில் கிடந்த சமுதாயத்தைத் தரத்திலும் தகுதியிலும் வளர்த்து உயர்த்தவே திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். ஆயினும் என்ன? செல்வ, திருக்குறளைப் பலரும் படித்தனர்; உரைகள் எழுதினர். ஆனால் யார் ஒருவரும் திருக்குறள் நெறியில் வாழ்ந்திட ஆர்வம் காட்டவில்லை. அதனால் திருக்குறள் நெறியில் சமுதாயம் வளரவில்லை. வளராதது மட்டுமல்ல. மேலும் மோசமாகிவிட்டது. நாளுக்கு நாள் நமது நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறது. இந்த வார்த்தைகளை வழக்கம் போலப் புழுதிப் போரில் புலம்பம் என்று ஏளனம் செய்துவிடவேண்டாம். இது ஒரு அறிவார்ந்த உண்மை.

இனிய செல்வ! இன்று தென் இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுகிறது! யாரால் அழிக்கப்படுகிறது? செல்வ, உன் வார்த்தை உண்மையல்ல. சிங்களர்களால் அழிக்கப் பெறவில்லை. தமிழர்களாலேயே அழிக்கப் பெறுகிறது. இதற்குத் துணையாக வேறு வழியின்றி இந்திய அமைதிப்படையும் துணை செய்ய வேண்டியதாயிற்று. ஆம். செல்வ! தமிழர் நலம் காக்க-சிங்களர்-தமிழர் நலம் காக்க-இலங்கையின் நலம் காக்க இந்தியாவிலிருந்து அமைதிப்படை சென்றது. இலங்கை அரசு இந்திய அமைதிப்படையை வரவேற்கிறது. சிங்களர்கள் தொடக்கத்தில் எதிர்த்தாலும் இப்போது அமைதியாகி விட்டனர். எதிர்ப்பும் இல்லை. மகிழ்ச்சி வரவேற்பும் இல்லை. முற்றாக வரவேற்பை எதிர்பார்க்க இயலுமா? ஒரு நாட்டில் அயல்நாட்டுப் படை இறங்குவதை எந்தக் குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்? ஆனாலும் மிக உயர்ந்த அரசியல் தந்திர அடிப்படையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் இயற்றப்பெற்று இலங்கையில் மனித வாழ்வின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் உத்தரவாதம் செய்யப்பெற்றது. இது வரவேற்கத்தக்க மகிழ்வான செய்தி. விடுதலைப் புலிகளும் தொடக்கத்தில் விருப்பத்துடன் வரவேற்காது, போனாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பகிரங்கப் பொதுக் கூட்டம் நடத்தி உடன்படிக்கையை வரவேற்றார்கள்; ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன? இனிய செல்வ, விடுதலைப் புலிகளின் நடவடிக்கையில் உண்மையில்லாமல்

தி.20. போய்விட்டது. அதாவது ஆயுதங்களை ஒப்படைப்பது போலக் காட்ட-சில ஆயுதங்களை மட்டும் ஒப்படைத்து விட்டு பெரும்பான்மையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு விட்டனர். பேரரசுகள் மதித்த ஒரு தலைவர்-சுதந்திரத்திற்காகப் போராடும் தலைவர் இங்ஙணம் செய்யலாமா? இனிய செல்வ, நீயே எண்ணிப்பார்! ஆயுதங்களை முடக்கி வைத்துக் கொண்டது மட்டுமல்ல. தனக்கு உடன்பாடிலாத-தன்னை எதிர்க்கின்றவர்களைக் கொன்று குவிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இது சரியா? நியாயமா? இதுதான் தமிழ்ச் சாதியின் குணமா? இலங்கைத் தமிழர் என்றால் வேலுப் பிள்ளை பிரபாகரன் தலைமையில் உள்ள விடுதலைப் புலிகள் மட்டும்தானா? பாரதி வாசகத்தில் கேட்டால், "சீனத்தராய் விடுவாரோ?” இதுமட்டுமா, செல்வ! இலங்கையில் இதுவரையில் வாழும் இருவேறு இனங்களாகிய சிங்களருக்கும் தமிழர்க்கும் சண்டை வரவில்லை. வந்தால் தமிழ்ச்சாதி இலங்கையில் வாழாது. இதையெல்லாம் எண்ணிப் பார்க்காது விடுதலைப் புலிகள் சிங்களக் குடும்பங்களைக் கொல்லத் தொடங்கி விட்டனர். என்ன செய்வது! இந்திய அமைதிப்படை வேடிக்கை பார்க்கவா இலங்கைக்குச் சென்றது? இல்லையே! விடுதலைப் புலிகளால் தமிழர்களும்-சிங்களர்களும் கொல்லப்படாமல் தடுக்க முயன்றபோது விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப் படையினருடன் போர்ப் பிரகடனம் செய்து போர் செய்து கொண்டிருக்கிறார்கள். இது நியாயமா? எந்த அடிப்படையில் நியாயம்? சாத்தியமற்ற ஒரு காரியத்திற்காக வலிந்து தற்கொலை செய்து கொள்வதைத் தியாகம் என்று சொல்ல இயலுமா?

விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப் படையுடன் போராடுகிறார்களா? அல்லது அவர்களுக்குப் பின் ஏதாவது அந்நிய சக்தி வேலை செய்கிறதா? இனிய செல்ல, எது எப்படியாயினும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் தலைமையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளும், இந்திய அமைதிப்படையினருடன் போர் செய்வதை வரவேற்க இயலாது. வீரம் இருக்கிறது; விவேகம் இல்லை, என்பதே முடிவாகும். இந்த விடுதலைப் புலிகளை நினைத்துத்தான் போலும் திருவள்ளுவர்,

"நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் துரக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும்”

என்றருளிச் செய்தார். இந்தியா ஒரு வல்லரசு நாடு. இந்தியப் படை வலிமை வாய்ந்த படை. இந்தப் படையை எதிர்த்துப் போராடுவது சாத்தியமல்ல என்பதை விடுதலைப் புலிகள் உணராதது தவக்குறைவே. இனிய செல்வ, இன்று என்ன செய்யவேண்டும்?

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்

நான நன்னயம் செய்து விடல்"

என்ற குறள் நெறிப்படி உடனடியாக இந்திய அமைதிப்படை போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பைத் தரவேண்டும். இலங்கை அரசும் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு தமிழர்களை இலங்கை குடிமக்களாக ஏற்று அனைத்து அரசியல் உரிமைகளையும் வழங்கி வாழ்வளிக்க வேண்டும். இனிய செல்வ, இவை நடக்க வேண்டும்! நடந்தேயாக வேண்டும்! இதுவே நமது பிரார்த்தனை! இன்ப அன்பு

அடிகளார்

17. உட்பகை உயர்வு தராது

இனிய செல்வ,

இன்னமும் இலங்கையில் அமைதி கால் கொள்ளவில்லை. இது வருந்தத்தக்கது. என்ன செய்வது? இலங்கைச் சிக்கலில் அடிப்படையும் தெளிவும் இல்லாமல் குழம்பு கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் என்றால் மூன்று வகையான தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்களுள் ஒருவகையினர் இந்தியத் தமிழர்கள். (இந்தியாவிலிருந்து சென்ற தொழிலாளர்கள்; அங்கேயே பல ஆண்டுகள் தங்கியவர்கள்) அடுத்த வகையினர் தொழில் வாணிகம் கருதி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் போய் வந்து கொண்டிருப்பவர்கள். மூன்றாவது வகையினர் இலங்கையிலேயே - யாழ்ப் பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வழிவழியாக வாழ்ந்து வரும் பூர்வீகக் குடிகளாகிய தமிழர்கள். இவர்களே ஈழத்துத் தமிழர்கள் என்று அழைக்கப் பெறுகின்றனர். இனிய செல்வ! இந்த மூன்றுவகைத் தமிழர்களையுமே பாதுகாக்க வேண்டியது நமது கடமை! இதில் இந்தியத் தமிழர்களுக்கும் - இலங்கைத் தமிழர்களுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. இந்தியத் தமிழர்கள் வாழ்வினும் சாவினும் தங்களைத் தாங்களே சார்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இன்று இலங்கை அரசுடன் நட்புறவுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அடுத்து, இலங்கைத் தமிழர்களில் முஸ்லீம்கள், ஈழத் தமிழர்கள் போராட்டங்களில் சேரவும் இல்லை; அவர்களோடு உடன் வாழவும் விரும்பவில்லை. வடக்கு கிழக்கு மாகாண இணைப்பில் ஒரே சிக்கல், ஆங்கு வாழும் இஸ்லாமியரும் சிங்களவர்களும் இணைப்புக்கு உடன் பாடததுதான்! மட்டக் களைப்புத் தமிழர்களிலும் பெரும்பான்மையோர் ஆளும் அரசாங்கத்தினருடன் கூட்டு. அவர்களுள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒர் அமைச்சர் என்றெல்லாம் இருக்கின்றனர். அடுத்து யாழ்ப் பாணம் பகுதியில் வாழும் தமிழர்கள். இவர்கள்தாம் இன்றைய போராட்டத்திற்குரிய மக்கள். இந்த யாழ்ப் பாணத்துத் தமிழர்களில் தனி ஈழம் கேட்டுப் போராடும் அணி ஒன்றல்ல; பலப்பல! இத்தனை அணிகளும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை வரவேற்று விட்டன. ஆனால் நடை முறைக்குக் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுப் போராடுகின்றனர்.

இனிய செல்வ,

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு'

‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்’.

என்ற திருக்குறளைப் போராளிகள் சிந்திக்கவேண்டும். இந்திய அரசு போராளிகளுக்குத் தொடக்கக் காலம் முதலே அனுசரணையாக இருந்து வந்திருக்கிறது. நெறியில்லா நெறிகளில்கூட உதவியாக இருந்திருக்கிறது. இந்தியா ஒரு மனிதர் அல்ல; ஒரு நாடு. ஆசியநாடுகளில் வல்லாண்மையுடையதாக விளங்கித் தலைமையேற்கும் நாடு. இந்தியா ஒப்பந்தம் பற்றி முன்பே போராளிகளிடம் விளக்கி, அவர்களின் சம்மதத்துடனேயே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிற வழியிலும் கொஞ்ச தூரம் - அமைச்சரவை அமைக்கும் வரையில் போராளிகள் வந்தனர். அதற்குப்பின் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா சில தவறுகளைச் செய்துவிட்டார் என்று காரணம் காட்டி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு மாறாக இந்திய அமைதிப்படையுடனேயே போராடத் தொடங்கியதற்கு மாறாக இலங்கை அதிபர் செய்த தவறுகளை இந்திய அரசுக்கு எடுத்துக்காட்டி, தீர்வு காண முயன்றிருக்க வேண்டும். இனிய செல்வ! திருக்குறள்,

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு"

என்று கூறுகிறது. இன்றைய ஈழத்துத் தமிழர்கள் இந்தக் குறளுக்குப் பொருத்தமான-ஒரு சமுதாயமாகவா வாழ்கிறார்கள்? அம்மம்ம! ஒரே தமிழினத்தில் இத்தனைக் குழுக்களா? உட்பகை கொண்டு ஒருவரை ஒருவர் கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் பகைமைச் சேற்றில் சிக்கிச் சீரழியும் ஓர் இனம் எப்படி விடுதலை பெற முடியும்? இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும்கூட மாநில அமைச்சரவை அமைக்கும் பொறுப்பு வந்தபோது கூட அனைத்துத் தமிழர்களும் ஒன்று படவில்லை; இனிய செல்வ! ஈழத்துத் தமிழர்கள் நமது அனுதாபத்திற்கு உரியவர்கள்-ஆனால் வழிதான் தெரியவில்லை. இனிய செல்வ!

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்பது திருக்குறள். இந்தத் திருக்குறள் அடிப்படையில் பிரச்சனையை அணுக வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தினைச் செயற்படுத்த அதாவது மாநிலங்களை அமைக்க இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தமும் - சேர்க்கையும் செய்யப் பெற்றுள்ளது. இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இலங்கைச் சிக்கல் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நமது பாரதப் பிரதமர் சென்னையில் பேசிய பேச்சு ஊக்கம் தந்தது. ஆனால் இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள அரசியல் சட்டங்கள் பாரதப் பிரதமர் பேசியதற்கு ஒப்பவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு இசையவும் அமையவில்லை என்ற ஏக்கமும் நமக்கு இருக்கிறது. இந்திய இலங்கைச் சிக்கலில் மிகவும் முக்கியமானது காணிப் பிரச்சனை, அதாவது தமிழர்கள் வழிவழியாக வாழும் நிலப் பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றி, அதன்பின் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பறித்துவிடுதல் என்பது. இஃதொரு நியாயமான அச்சமே. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மாநிலத்தில் உள்ள காணிகள் மீது உரிமை இருக்கிறது. இதுபோல இலங்கையில் தமிழ் மாகாண அரசுகளில் காணி உரிமையை இலங்கையில் நிறைவேற்றப்பெற்றுள்ள அரசியல் சட்டப் பிரிவுகள் வழங்காதது ஒரு பெரிய குறை. ஆயினும் தொடர்ந்து இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தி இந்த உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று நம்புகின்றோம். இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் பெற்றுள்ளதைப் போன்ற உரிமைகளே, இலங்கையில் அமையும் தமிழ் மாகாணங்களுக்கு வேண்டும். இதுவே நமது பாரதப் பிரதமர் நமக்குக் கொடுத்த உறுதி. இந்த வகையில் இந்திய அரசை நாம் அனைவரும் வலியுறுத்த வேண்டும்.

இன்ப அன்பு

அடிகளார்

18. மக்களாட்சியே மாண்புறு ஆட்சி

இனிய செல்வ,

தமிழ் நாட்டின் அரசு கலைக்கப்பட்டு விட்டது. கலைக்கப்பட்டதோடு மட்டுமல்ல. தமிழ் மக்களுக்கு தலை குணிவும் வந்து சேர்ந்துள்ளது. என்ன விழிக்கிறாய்! ஆம்! மிக உயர்ந்த சட்டமன்றத்தில் குப்பத்து நிகழ்ச்சிபோல அடிதடிச்சண்டை! இது வெட்ககரமான செய்தியல்லவா! ஜனநாயகம் - மக்களாட்சி என்றால் என்ன? தெளிவான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள், தெளிந்த உணர்வுடன் முடிவெடுத்தல், எடுத்த முடிவினை அனைவரும் ஏற்று ஒழுகுதல் இவையே ஜனநாயகப் பண்பு சார்ந்த வாழ்க்கை முறை. நாட்டில் மக்களாட்சிமுறை ஏற்பட்டு 38 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களாட்சிமுறையைச் சார்ந்த ஒழுகலாறுகள் நம்முடைய வாழ்க்கையில் கால் கொள்ளவில்லையே! பழைய அநாகரிக முறையே கோலோச்சுகிறதே! என்ன செய்வது! அரசியல், + ஆட்சியியல் ஆகியவை தற்சார்புகளில் சிக்கித்தவிக்கும் வரையில் இந்தநிலை நீடிக்கத் தான் செய்யும். அரசியல், + ஆட்சியியல் ஆகியவற்றில் ஆணவத்தின் பாற்பட்ட தன்முனைப்பு இருக்கும்வரை இந்தநிலை நீடிக்கத்தான் செய்யும்! ஆம்! செல்வ, ‘நான்' பெரிதல்ல! நாடு பெரியது! என்ற விரிந்த - பரந்தமனம் வேண்டாமா?

இனிய செல்வ, ஒரு சிறு சுவையான நிகழ்ச்சி! நேற்று முன்தினம், சீரகச் சுடுநீர் குடிக்க வேண்டிய நேரத்தில் கொண்டு வந்து தந்தனர். அது, குறுகலான வடிவமைப்புடைய குவளையில் இருந்தது. உடன் அவசர நிலையில் சூட்டோடு குடிக்க இயலவில்லை. அந்தச் சுடுநீரை ஒரு சிறிய தாம்பாளத்தில் ஊற்றினோம். ஆறிவிட்டது! இதிலிருந்து என்ன புரிகிறது? குறுகிய மனப்போக்குடையவர்கள் எளிதில் சினம் தணியார்கள்; மாற மாட்டார்கள். இதுதானே உண்மை. ஒருவர் கருத்தைப் பிறிதொருவர் ஏற்கும் வண்ணம் எடுத்துக்கூறி ஏற்கவைத்தலே மக்களாட்சிப் பண்பு. அது போலவே மற்றவர் கருத்தைத் தன் கருத்துப்போலவே எடுத்தாய்வு செய்து ஏற்கக் கூடியதானால் ஏற்பதும் கடமை. மக்களாட்சி முறைக்கு "ஏற்புமுறை” தலையாயது; இன்றியமையாதது. இசைவான ஏற்பு பெறும்வரை அறிவார்ந்த நிலையில் கலந்து பேசுதலே வாழ்வியல்.

இனிய செல்வ, நமது திருக்குறள் முடியாட்சிக் காலத்தில் தோன்றியது. ஆயினும் மக்களாட்சிமுறைத் தாக்கம் மிகுதியும் திருக்குறளில் உண்டு. அடியிற் கண்டுள்ள திருக்குறள்களைப் படித்துப்பார்:

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.

(118)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.

(448)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

(517)

என்ற திருக்குறள்கள், மக்களாட்சியில் ஈடுபடும் வாக்காளர்கள், வேட்பாளர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் கற்றுத் தெளிய வேண்டியவை, இனிய செல்வ, சமன்செய்து சீர்ததூக்கும் கோல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.

இந்தத் திருக்குறள் ஒவ்வொருவர் வாழ்க்கைக்குமே பாடமாக அமையவேண்டிய திருக்குறள். கடைகளில் பொருளை வாங்கும் முன்பு, எவரும் தராசைத் துக்கிச் சமநிலை காட்டிய பின்பே எடைக்கல்லையும் பொருளையும் இட்டு நிறுப்பர். அதுபோல் சிறந்த பண்புள்ள மனிதர்கள் மற்றவர் கருத்தைத் தன்முனைப்பும் தற்சார்புமின்றி ஏற்று ஆய்வு செய்வர். இதுவே சமன் செய்யும் பண்பு. இத்தகு பண்புகள் கொள்ளும் குடும்பத்தார் அன்போடு இணைந்து வாழ்வர். எங்கும் ஒருமை நிலவும். காழ்ப்பு இல்லை! கலகமும்-இல்லை! காந்தாரிக்குக் குழந்தைகள் பிறந்தது போல இன்று கட்சிகள் பிறக்கின்றன; இயக்கங்கள் தோன்றுகின்றன! இவற்றால் என்ன பயன்? வெறும் வெளிச்சமே! இனிய செல்வ, மீண்டும் எழுதுவோம்! இன்ப அன்பு

அடிகளார்

19. தக்காரைத் தேர்வு செய்

இனிய செல்வ!

தமிழகத்தில் நடக்கக் கூடாதது நடந்து விட்டது.

"பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்”

என்ற நெறியைப் போற்ற வேண்டிய தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் முறைகேடாக நடந்து கொண்டார்கள். சட்டமன்றத்தில் கலகம், அடிதடிச் சண்டை! இந்தச் செய்திகள் தமிழர்க்குத் தலைகுனிவைத் தரத்தக்கன.

இனிய செல்வ, மக்களாட்சி-ஜனநாயகம் என்பது ஒர் உயர்ந்த வாழ்க்கை முறை. தேர்தல்களினால் மட்டும் ஜன நாகரிகம் சிறந்துவிடா. இருவேறு கருத்துக்களைச் சமநிலையில் கேட்டல், ஆய்வு செய்தல், ஏற்பன ஏற்றல், ஏற்புக் குரியனவல்லாதனவற்றைத் தொடர்ந்து விவாதித்துச் செழுமைப்படுத்தி ஏற்றல் முதலியன ஜனநாயகத்தின் அடிப்படையாகும். இதனை வள்ளுவம்:

"சமன் செய்து சீர்துரக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி”

என்று கூறும். இன்று இந்தப் பண்பு நம்முடைய ஜனநாயகத்தில் காணக்கிடைக்கவில்லை. மாறுபட நினைப்பது ஒரு குற்றமாகக் கருதப் பெறுகிறது. இனிய செல்வ, அது மட்டுமா? பகையும் காட்டுகின்றனர். அதன் காரணமாக இன்று பல அநியாயங்களைக் கண்டும் காணாமல் போகவேண்டியிருக்கிறது; வாயிருந்தும் ஊமையாக இருக்க வேண்டியிருக்கிறது. இதனை எப்படி மக்களாட்சி என்று கூறமுடியும்? இனிய செல்வ, மக்களாட்சியில் நாட்டை ஆள்பவர்களைத் தேர்வு செய்து பொறுப்புத் தரவேண்டும். எப்படி ஆள்பவரைத் தேர்ந்தெடுப்பது? நாட்டை ஆளுதல் என்பது பொறுப்புள்ள பணி. ஆட்சிப் பொறுப்பு துன்பந்தருவது என்றார் இளங்கோவடிகள். இன்றோ ஆட்சிப் பொறுப்பேற்பது ‘சுகம்’ ஆகி விட்டது. மறைமுகமாக அதுவே ஒரு சொத்து ஆகிவிட்டது. என் செய்வது? இரங்கத்தக்க நிலை, இனிய செல்வ, நமது திருக்குறள் ஆள்பவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையைப் பற்றிக் கூறுகிறது.

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்”

என்ற திருக்குறளை நன்றாகப் படி! சிந்தனை செய்க!

ஆட்சிக்குரிய தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றவர்கள் ஒரிடத்தில் கூடுதல் வேண்டும். கும்பலாக அல்ல; ஒருமை உணர்வுடையவர்களாகக் கூட வேண்டும். ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையுளராகச் சேர்ந்து உலகியலை நடத்த வேண்டும். இனிய செல்வ, ஆட்சிப் பொறுப்பை ஏற்பவரின் முன் உள்ள கடமைகள் என்ன? நாடு எப்படி இருக்கிறது? இன்றுள்ள நிலையில் நாட்டை ஆளும் தகுதி, திறமை யார் மாட்டு இருக்கிறது என்று ஆய்வு செய்து தகுதியுடையவரைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இதுவே திருக்குறள் காட்டும் தேர்தல் முறை. இனிய செல்வ, தேர்ந்தெடுக்கப் பெறுபவரின் தகுதியே தேர்வுக்கு அளவுகோல். மற்றபடி பணமில்லை! பணம், வாக்களிப்பில் தூண்டு ஆற்றலாக அமையின் நாடு தகுதியில்லாதாரைத் தேர்வு செய்து அழிவைத் தேடிக்கொள்ளும்! இன்று தமிழகத்தில் நடந்தது என்ன? ஒரே அணியில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் விலை, வன்புதுன்புகள் ஆள் தூக்கல் முதலிய அனைத்துக் கேடுகளும் நடந்து விட்டன. இதுவா மக்களாட்சிமுறை! தலைவர் தேர்தல் தகுதி அடிப்படையில் நடைபெற வேண்டும். இனிய செல்வ, உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்தின் தலைமையமைச்சர் பொறுப்பில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலைப் போரில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த சர்ச்சிலை அடுத்து வந்த பொதுத் தேர்தலில் இங்கிலாந்து மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்போது சர்ச்சில்,

"என்னுடைய பணி இப்போது தேவை இல்லை" என்று கூறி விளக்கினார். ஆதலால் இன்றைய தமிழ்நாட்டின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தலைவரைத் தேர்ந்தெடுப்பதே முறை. இதில் வேட்பாளரின் ஆர்வத்தை விட வாக்காளர்களுக்கே ஆர்வம் கூடுதலாக இருக்க வேண்டும். இன்றைய நடைமுறையில் மக்களாட்சியின் தோற்றங்கள் உள்ளனவே தவிர உணர்வுகள் இல்லை. இன்றைய ஜனநாயக முறை, சூதாட்டம் போன்ற ஒன்றாகி விட்டது.

இன்ப அன்பு

அடிகளார்

20. பொதுத்துறை பேணுக!

இனிய செல்வ;

உனக்கு வேதனை தரக்கூடிய செய்தி ஒன்றினை எழுத நேரிட்டிருக்கிறது. வருத்தப்படாதே! செயல் செய்யத் துணிந்து நில்! வறுமையை எதிர்த்துப் போராடும் களமாக வாழ்க்கையை ஆக்குக!

இனிய செல்வ,

மானுடம் உய்வதற்காக அளிக்கப் பெற்ற இந்தப் பரந்த உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் 24 பேர் பட்டினியால் உணவின்றிச் செத்து மடிகின்றனர். உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் உண்டும் - உண்ணாமலும் பசியால் வாடுகின்றனர். இனிய செல்வ, எப்படி இருக்கிறது நமது உலகம், பார்த்தாயா? சற்றுப் பொறு! நமது நாட்டைப் பற்றியும் தெரிந்துகொள். நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் 27.1 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்தத் தகவல் நமது நாடாளுமன்றத்தில் திட்ட அமைச்சரால் தரப்பெற்ற செய்தி (indian Express-25.3.88). வறுமைக்கோடு என்றால் என்ன என்று கேட்கிறாயா? உயிர்வாழ்வதற்குரிய உணவு கிடைக்காதது வறுமைக் கோடு. இனிய செல்வ, இந்தியாவில் வாழ்பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபகுதி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். என்ன மனச் சங்கடப்படுகிறாயா? ஆம்! நீ சொல்வதிலும் ஒருவகையில் உண்மை இருக்கவே செய்கிறது.

விஞ்ஞானம் வளர்கிறது! தொழிற்புரட்சி வளர்ந்து வந்துள்ளது. கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெறுகின்றன. கோயில் திருவிழாக்களுடன் போட்டி போடும் வகையில் அரசியல் ஆரவார விழாக்கள்! இவ்வளவுக்கும் மத்தியில் வறுமை வளர்கிறது. இனிய செல்வ, இன்னும் ஒரு வேடிக்கை கேள்! சிரிக்க முடிந்தால் சிரிப்பாயாக! நமது நாட்டில் தனிநபரின் சராசரி வருமானம் ரூ. 56, 64 ஆம்! மாட்சிமைமிக்க இந்தியக் குடிமகன் உடல் தேய உழைத்து ஈட்டும் சராசரி வருமானம் மாதம் ரூ 56, 64 இனிய செல்வ, இதிலும் ஒரு வேடிக்கை! இல்லை விநோதம்! இந்தச் சராசரி வருமானக் கணக்கில் பலநூறு கோடி ஈட்டுகின்ற முதலாளிகளின் வருவாயும் சேர்ந்திருக்கிறது என்பதை மறந்து விடாதே! இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் நாம் இருப்பது நாடா? அல்லது வேட்டைக்காரர்கள் வாழும் காடா? என்று கேட்கத் தோன்றுகிறது!

நமது திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வறுமையைத் திட்டுகிறார். வறுமையைப் "பாவி' என்று திட்டுகிறார்.

"இன்மை யெனஒரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்”

என்பது திருக்குறள். ஆம்! இனிய செல்வ, மதத் தலைவர்கள், மதப்புரோகிதர்கள், எல்லோரும் சேர்ந்து செத்தபிறகு சிவலோகம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அந்தச் சிவலோகம்-வைகுந்தம் கூட வறுமையாளருக்குக் கிடைக்காதாம். ஆம்! வறுமையால் மனித மதிப்பீட்டுக்குரிய இனிய பண்புகள் எல்லாம் இழக்கப்படும். அப்புறம் எப்படி வீடுபேறு கிடைக்கும்? சிவலோகம் வேண்டாம். வைகுந்தமும் வேண்டாம். வாழ்ந்தால் போதும், என்றால் "சீச்சி! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு, என்று பாரதி பேசினானே! அந்த ஏச்சுக்கு ஆளாகி விடுவர். ஆக, வறுமையுடையவர்கள் இந்த உலகத்திலேயும் வாழ இயலாது! இனிய செல்வ, நாட்டின் நடப்பைப் பார்த்தாயா? என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாயா? திருவள்ளுவர் இதற்கும் வழி சொல்கிறார். எந்த ஒரு மனிதனும் சுரண்டப் படுதல் கூடாது. நாட்டில் கூட்டுறவுத்துறையும் பொத்துறையும் வளர வேண்டும். புதிய சொத்துரிமைகள் தோன்றாதபடி கண் காணிக்க வேண்டும். "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்"

என்ற திருக்குறள் நெறியில் அரசுகள், முறை கேடான செல்வத் தொகுப்பாளர்கள் தோன்றாவண்ணம் கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும். வாணிகம் நாட்டுடைமையாக்கப் பெறுதல் வேண்டும்; வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் வேண்டும். சில ஆண்டுகளுக்கு ஆடம்பரமான - ஆரவாரமான விழாக்கள் அடியோடு நிறுத்தப் பெறுதல் வேண்டும். இப்போது, இந்த நூற்றாண்டில் நாம் அனைவரும் வறுமையை எதிர்த்துப் போராடி வெற்றிபெறத் தவறிவிட்டால் வரலாறு பழி தூற்றும். ஆதலால், இனிய செல்வ! உடன் வறுமையை எதிர்த்துப் போராட முயற்சி செய்வோமாக! இன்ப அன்பு

அடிகளார்

21. பலர் கூடிக் காண்டல் ஞானம்

இனிய செல்வ,

சொல்வது சொல்; பலர் கேட்பது சொல். இன்றைய மனித உலகம் தனது காலத்தையும் சக்தியையும் மிகுதியாகச் செலவழிப்பது சொற்களிலேயாம்! எங்கும் பேச்சுக் கச்சேரி நடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா? மேலும் கருத்தரங்குகள் - கவியரங்குகள் - பட்டி மன்றங்கள் - மாநாடுகள் என்றெல்லாம் அமைத்துக்கொண்டு பேசித் தீர்க்கிறார்கள். இன்றைய சமுதாயத்தில் சொற்பொழிவாற்றுவது ஒரு தகுதியாகிவிட்டது. மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிக் காண்பதே அறிவியல்! ஆய்வை முடிவு செய்யக்கூட சிலர் தேவை! மாநாடுகள் என்றால் பலர் கூடி ஆய்வு செய்து முடிவு எடுக்கும் அற்புதமான அறிவியலாக இருக்கும்; இருக்க வேண்டும். ஜப்பான் தேசத்தில் ‘ஷக்சி’ (Shuchi) என்ற சொல், வழக்கில் இருக்கிறது. இந்தச் சொல்லுக்குப் பொருள் ‘பலர் கூடிக் கண்ட ஞானம்' (Shuchi is “the wisdom of the many" or collective wisdom"), என்பது பொருள். ஒருசிலர் கூடினால் நல்லறிவு காணும் பேச்சு நடக்கவேண்டும். பலர் கூடினால், பெரும்பயன் தரக்கூடிய பேச்சு வேண்டும். இனிய செல்வ, நீ சொல்வது உண்மை! இன்று படித்ததைச் சொல்கிறார்கள். அதையும்கூட ஆன்ம அனுபவத்திற்கு உள்ளாக்காமல் அப்படியே ஒப்பிக்கிறார்கள்; பகடை பேசுகிறார்கள். குற்றங்களைக் கூறுகிறார்கள்; பழி தூற்றுகிறார்கள். இதற்காகவா ஆற்றல் மிக்குடைய சொற்கள் பயன்பட வேண்டும். இனியசெல்வ, நமது நிலை இரங்கத்தக்கது.

அண்மையில் ஏப்ரல் 22, 23, 24-இல் சென்னை மறைமலை நகரில் காங்கிரஸ் (இ) மாநாடு நடைபெற்றது. மாநாடு நடந்தது புதிய நகரத்தில்! புதிய புகைவண்டி நிலையத்திற்கு அருகில் புதிய பொலிவுடன்! புதிய விளம்பர உத்திகளுடன் நடந்தது! ஆம். இந்த நாட்டை ஆண்டவர்கள், ஆள்பவர்கள், ஆளப்போகிறவர்கள் மாநாடு நடத்தினார்கள். காங்கிரசுக்கு மகத்தான வரலாற்றுப் புகழ் உண்டு! சென்ற காலத்தில் காங்கிரஸ் செய்த சாதனைகள் பலப்பல!

சுதந்தரத்தை வாங்கிக் கொடுத்து நம்மை மனிதர்களாக்கியதே காங்கிரஸ்தான்! திட்டமிட்ட திசையில் அழைத்துச் சென்றதும் காங்கிரஸ்தான். சென்ற தலைமுறை வரை காங்கிரஸ் துடிப்புடன் செயலாற்றல் மிக்குடைய இயக்கமாக விளங்கிய அத்தகைய துடிப்பை இன்று மறைமலை நகரில் கூடிய கூட்டத்தில் காணமுடியவில்லை. ஏன்? மாநாட்டுப் பேச்சுக்களில் எழுச்சியில்லை! புதிய வேகத்தைக் காணோம். பொருளாதாரத் தீர்மானத்தின் மீது சூடான விவாதம் நடந்திருப்பது உண்மை. அந்த விவாதத்தைச் செய்தித்தாள்கள் தரவில்லை. ஏன்? தொலைக் காட்சியும் வானொலியும் கூட தரவில்லை. நமக்கு நல்லூழின்மையே; இனிய செல்வ, திருவள்ளுவர், மாநாடுகளில் கூடுபவர்கள் "அரும்பயன் ஆயும் அறிவினார்” களாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றார்.

இனிய செல்வ! அன்றாடம் நாம் நடத்தும் வாழ்க்கையிலேயே பயன்கள் தென்படுகின்றன. ஆனால், வரலாற்று நுண்ணறிவும் ஆய்வு செய்யும் மனப்பாங்கும் இல்லாததால் இவை அறிதற்கு அரிய பயனைக் காணத் துணை செய்வதில்லை. அறிதற்கு அரிய பயனைத் தேடுபவர்களே மானிடர். அத்தகையோர் பலர் கூடி ஆய்வு செய்வதே மாநாடு. இத்தகைய மாநாடுகளில் செய்திகளை ஆய்வு செய்து பெரும் பயனளிக்கக் கூடிய சொற்களையே சொல்வர். மறைமலை நகர் மாநாடு நம்முடைய நாட்டை முன்னேற்றத் திசையில் உய்த்துச் செலுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த ஆவேசம் கிடைக்கவில்லை. ஏன்? மாநாட்டில் கூடியோர் அறிதற்கரிய பயனை - பெரும்பயனை அறியும் ஆர்வமுடையராக இல்லை. ஏதோ மரபுக்காகக் கூடினர், கலைந்தனர் போல் தெரிகிறது. இது வருந்தத்தக்கது.

இனிய செல்வ,

நம்முடைய திருக்குறள் பேரவையினர் எதிர்வரும் மே 20, 21, 22ஆம் நாட்களில் வட ஆர்க்காடு இரத்தினகிரியில் கூட இருக்கின்றனர். இனிய செல்வ, நீயும் உனது நண்பர்களும் இரத்தனகிரிக்கு வருவது உறுதியான செய்தி; இரத்தினகிரியில் கூடப் போகிறவர்கள்.

"அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்”

என்ற திருக்குறள் நினைவொடு வருக! மற்றவை அடுத்த மடலில் இன்ப அன்பு

அடிகளார்

22. இகலின்றி வாழ்தல் இனிது

இனிய தமிழ்ச் செல்வ!

உலகம் அபாய கட்டத்திலிருந்து தப்பித்துவிட்டது! ஆம் அபாயத்திலிருந்து தப்பித்துவிட்டது! ஆனாலும் இன்னமும் பாதுகாப்பு கிடைக்கவில்லை. ஆம்! இனிய செல்வ! அமெரிக்க-சோவியத் நாடுகளின் தலைவர்கள் மாஸ் கோவில் கூடினர்; கலந்து பேசினர். மானிட சமுதாயத்தை அழிவிலிருந்து பாதுகாப்பதற்குரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை இருவரும் செய்து கொண்டுள்ளனர். ஏவுகணைகள் அதாவது கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகள் 50 விழுக்காட்டுக்கு மேல், உற்பத்தி கட்டுப்படுத்தப் பெறும். அணு ஆயுத சோதனைகள் பரஸ்பர கண்காணிப்பின் கீழ் நடைபெறும். இதுவே ஒப்பந்தத்தின் சாரம்.

இனிய செல்வ! உலகத்தைக் காப்பாற்ற இந்த உடன் படிக்கை போதாது. போர் ஆயுதங்களையே நாடுகள் உற்பத்தி செய்யக்கூடாது. படைகள் உலக நாடுகளின் பேரவையிடம் மட்டும் தான் இருக்க வேண்டும். நாடுகளுக்குரியது, போலீசு படை மட்டும்தான் என்ற நியதி உருவாக வேண்டும். இத்தகையதொரு நியதி எதிர்காலத்தில் உருவாகத்தான் போகிறது. மண்ணகம் அமைதி தழுவிய வாழ்க்கையை ஏற்பது என்பது வரலாற்றின் கட்டாயமாகும். அமெரிக்க-சோவியத் நாடுகள் இரண்டு சித்தாந்தங்களின் பிரதிநிதிகள். ஒன்று முதலாளித்துவம். பிறிதொன்று பொதுவுடைமை. இனிய செல்வ, இவ்விரண்டு நாடுகளுமே வளர்ந்து எழுகின்றன. இவ்விரண்டு நாடுகளுக்கிடையில் இருந்து வந்த கசப்புணர்வு அளவற்றது. ஆயினும் அண்மைக் காலமாக இரண்டு நாடுகளின் தலைவர்களும் சந்திக்கின்றனர்; கலந்து பேசுகின்றனர்; மானுடம் வாழ்வதற்குரிய நெறிமுறைகளை ஆய்வு செய்கின்றனர். இது உலக வரலாற்றிற்கு ஒரு புதுமை போல! இனிய செல்வ, இன்றைய சோவியத் ஒன்றியத் தலைவர் கார்பொச்சேவ் அற்புதமான மனிதர்! சிந்தனையாளர்! சமாதானத்தின் காவலர்! இவர் முதலில் அமெரிக்காவுக்குச் சென்றார்! அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரீகனும் நல்ல மனிதர், இவ்விரு தலைவர்களும் இன்று திருக்குறள்

தி.21. வழியில் இணைந்து நடைப்பயிலத் தொடங்கியுள்ளனர். ஆம்! திருவள்ளுவர் வழியில் நடக்கின்றனர்.

திருவள்ளுவர் படை வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அந்தப் படை போர் செய்வதற்காக அல்ல! எதிரியை அச்சுறுத்துவதற்காகத் தான். படை. அரண் முதலியன பற்றிப் பேசிய திருவள்ளுவர், மிகுந்த பகை ஆகாது என்றும் கூறியுள்ளார். "பகைமாட்சி" என்று ஒர் அதிகாரமே இயற்றியுள்ளார். “இகல்” என்னும் ஒர் அதிகாரம் இயற்றி உள்ளார். இனிய செல்வ! இந்த அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்கள் எல்லோரும் படிக்கத்தக்கன. இந்த அதிகாரத்தில் பகை கொண்டு பொருதுவதால் வலிமை கெடுகிறது என்று வள்ளுவம் கூறுகிறது. பிற உயிர்களுடன் கூடிக் கலந்து வாழாமல் பகை வழிப்பட்டு வாழும் குற்றம் பொருந்திய வாழ்க்கை தகாது என்று குறள் கூறுகிறது. இனிய செல்வ! சிலர் வலியப் பகைமைக் குணங்கொண்டு மோதவருவர் என்று வள்ளுவம் கூறுகிறது. இன்றைய வல்லரசு நாடுகள் இந்தத் திருக்குறள் நெறிக்குப் புத்துயிர் கொடுத்துள்ளன. செல்வ! மீண்டும் ஒரு திருக்குறள். இதோ படித்துப்பார்!

இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம்

நன்னயம் என்னும் செருக்கு.

(860)

எவ்வளவு அற்புதமான திருக்குறள்! ஒருவன் மாறுபாடு கொண்டு வாழ்வானாகில் பொல்லாதன பல உண்டாகும். இதற்கு மாறாக நட்புக் கொண்டொழுகின் செல்வம் உணடாகும.

இனிய செல்வ! இன்றைய உலக வல்லரசு நாடுகளாகிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பகைமை பாராட்டாது நேச நாடுகளாக விளங்குவது உலகத்திற்கு நல்லது. ஏன், நமக்கும் நல்லது. இனிய செல்வ, உலகப் பேரரசுகள் கூட ஒன்று சேர்கின்றன! ஆனால்! ஆனால்...! நம்முடைய நாட்டு மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் பகையாளிகளாக வாழ்வது வெட்கக்கேடு. ஆம்! யாழிடைப் பிறந்த இசைபோல, நமக்குத் திருக்குறள் விளங்குகிறது என்று கூறினால் தவறல்ல. சமாதானம் செய்து வைப்பவர் பாக்கியவான்கள். நமது நாட்டு வாழ்க்கையில் அமைதியும் சமாதானமும் திருக்குறள் வழி வருவதாகுக! உலகம் அமைதியுற வள்ளுவர் காட்டும் வழியே வழி! இன்ப அன்பு

அடிகளார்

23. பிறர்க்கென வாழ்தல் பெருவாழ்வு

இனிய செல்வ,

மாந்தர் வாழ்வதற்கே பிறந்தனர். ஆனால், வாழ்ந்தால் மட்டும் போதுமா? வாழ்க்கையின் குறிக்கோளை அடைய வேண்டாமா? அதாவது பயனடைய வேண்டாமா? இன்றைய மனிதன் தனியே உழைத்து வாழ்ந்திடவில்லை! இன்றைய மனிதன் சமூக உழைப்பில் வாழ்கிறான். இன்று சமுதாயம் அடைந்துள்ள பெரியதொரு வளர்ச்சி, மாந்தர்களுடைய உழைப்பு, சமூக உழைப்பாக - அதாவது சமூகத்திற்குப் பயன்படக்கூடிய உழைப்பாக வளர்ந்து விட்டது. இந்த வளர்ச்சி அறிவார்ந்த நிலையில் ஏற்பட்டதா? அல்லது உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களின் வழி ஏற்பட்டதா? இனிய செல்வ, நீ கேட்டது நல்ல கேள்வி! நமது நாட்டைப் பொறுத்தவரையில் வரலாற்றுப் போக்கில் அடைந்த வளர்ச்சியேயாம்! இந்தச் சூழ்நிலையில் தனி மனிதர்கள் அல்லது வாயுள்ள சிலர் கூடித் தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ள நினைப்பது, தங்களுக்கு மட்டும் தீர்வு காணும் வகையில் சிந்திப்பது ஆகியன இன்று நடைபெற்று வரும் தீய பழக்கங்கள்!

இன்று மனிதர்களில் பலர் வாழக் கூட ஆசைப்படவில்லை; பிழைப்பு நடத்த விரும்புகின்றனர். பிழைப்பு என்பது என்ன? அறிவு வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவ தில்லை; அன்பு நெறியில் வாழத் தலைப்படுவதில்லை! ஊக்கமில்லாத நசிவு வாழ்க்கை! சமூக ஆர்வம், சமூகச் சிந்தனை, சமூக உழைப்பு ஆகியன இல்லை! மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! இத்தகையோர் கற்றறிவு இல்லாதவர்களிடத்தில் இருந்தால் கூட மன்னிக்கலாம். படித்தவர்களிடத்திலே கூட இன்று நன்றாக இல்லை. இவர்களைப் பற்றி, பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. "படித்தவன் சூது’ என்றான் பாரதி.

வாழும் மாந்தரை மூன்று பிரிவினராகப் பிரித்தார் திருவள்ளுவர். முதல் வகையினர் சுயநலத்திலே நாட்டமுடைய அணியினர். அவர்கள் தமது பிழைப்பைப் பற்றியே கவலைப்படுவர், ஆதாயங் கருதியே செயற்படுவர். இவர்கள் ஊருணி போன்றவர்கள் என்றார். ஊருணி, ஊருக்குக் கொடுப்பது போலத் தோன்றும். ஊருணி ஊருக்குத் தண்ணீர் கொடுப்பதும் உண்மை; ஆனால் ஊருணி ஏன் ஊரார் உண்ணத் தண்ணீர் கொடுக்கிறது? தனது ஊற்று வளத்தை, தூய்மையை, ஊருணி என்ற தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ளும் சுயநலத்துடன் கொடுக்கிறது. கொடுப்பதுகூட இல்லை! மக்களே எடுத்துக் கொள்வதாகும். ஊருணி பயன்படாது போனால் குட்டையாகிவிடும். காலப் போக்கில் ஊருணி பயன்படாத நிலையினதாகித் தூர்க்கப் பெறும். ஆதலால் ஊருணியின் நிலை தற்காப்புத்தான்.

அடுத்த வகையினருக்குத் தற்காப்பு உணர்வு உண்டு. ஆயினும் விருப்பு - வெறுப்பின்றி எல்லோருக்கும் பயன்படுவர். முதலாளித்துவ சமுதாயத்தின், நிலப் பிரபுத்துவ சமுதாயத்தின் நன்றியை விரும்பாத இவர்கள் பயன் மரம் போல் வாழ்பவர்கள்; வளர்ந்தவர்கள்; ஆயினும் முழுமையில்லை.

மூன்றாவது அணியினர் பிறருக்காகவே வாழ்வர். பிறருக்கு வழங்குவதற்காகவே பொருள் ஈட்டுவர். ஈட்டிய பொருளை வழங்குவர். மற்றவர்களுக்காகத் துன்புறுவர். மற்றவர்கள் துன்ப நீக்கமே இவர் தம் வாழ்வு. இனிய செல்வ, இவர்கள் மருந்து மரம் அனையர்.

ஊருணி, மாந்தரிடத்திலிருந்து யாதும் பெறாமல் உண்ணும் நீர் வழங்குகிறது. ஆயினும் தற்காப்பு நிலை. பயன் மரம், சமுதாயத்தினிடமிருந்து கொஞ்சம் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் பல மடங்கு மதிப்புள்ள கனிகளைத் திருப்பித் தருகிறது. மருந்துமரம் சமுதாயத்தினிடத்தில் மிகமிகக் குறைவாகப் பெற்றுக் கொண்டு தாம் பெற்றுக் கொண்டதை விடப் பலமடங்கு சமுதாயத்திற்குத் திருப்பித் தருகிறது. ஏன்? தன்னையே கூட அழித்துக் கொள்கிறது. இவை வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நிலை.

இன்றைய மனிதரோ, சமுதாயத்தின் ஒருங்கிணைந்த ஆக்கத்தை விரும்புவதில்லை; அதற்காக உழைப்பதில்லை! சமுதாயத்தின் நன்மையை நாடாமல் சமுதாயத்திற்கு மாறாக - எதிரான ஒன்றையே நாடுகின்றனர். சமுதாயத்தினிடத்திலிருந்து நிறையப் பெற விரும்புகின்றனர். தங்களுடைய ஆதாயத்திற்காகவே சமுதாயம் என்ற அமைப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். ஊதிய நிலையில் நாடு தழுவிய ஒரே ஊதியம் கேட்பர்! நாடு தழுவிய ஒரு மொழி விரும்பி ஏற்கமாட்டார்கள்; நாடு தழுவிய ஒரு நெறி ஏற்கமாட்டார்கள். எல்லாருக்கும் நன்மை விளையக் கூடிய வகையில் போராட்டங்கள் கூடப் பொதுமையாக அமைவதில்லை. இது இன்றைய போக்கு!

இனிய செல்வ, குறள்களைப் படித்துப்பார்!

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகலாம்

பேரறி வாளன் திரு”

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தாற்றால் செல்வம்

நயனுடை யான்கட் படின்"

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கட் படின்”.

இன்ப அன்பு

அடிகளார்

24. அளவறிந்து ஆற்றுக

இனிய செல்வ!

நல்வாழ்த்துக்கள்! நமது தமிழகத்தில் ஒரு போராட்டம் இப்போது நடந்து முடிந்திருக்கிறது. ஆம்! ஆசிரியர், அரசு அலுவலர்கள் போராட்டம் தான்!

இந்தப் போராட்டத்தை நடத்திய நண்பர்களது குறிக்கோளில் நாம் ஐயப்படவில்லை! ஆயினும், குறிக்கோளை அடையும் வகையில் உள்ள தடைகளைக் கண்டறிய வேண்டும் என்பது நமது விருப்பம்.

மைய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வேண்டும் கேட்பதில் தவறில்லை, நடைமுறைச் சாத்தியம் என்ன? இந்தியா ஒரு பெரிய நாடு. பலர் சொல்வதைப்போல இஃது ஒரு துணைக் கண்டம். இந்நாட்டில் மைய-மாநில அரசுகள் தனித்தனி வரவு செலவுத் திட்டமுடையன; தனித்தனி நிதி ஆதாரங்களும் உடையன. மைய அரசு, அதன் நிதி ஆதாரத்தில் சில கோட்பாடுகளின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு நிதி தந்து உதவுகிறது. இந்த நிதி உதவி பெரும்பாலும் திட்ட அடிப்படையினாலான செலவுகளுக்காகவே அமையும். மைய அரசு பணிகளிலும் மாநில அரசுப் பணிகளிலும் எல்லோரும் சேர்தலுக்குரியவர். ஆனால் பலர் மைய அரசுப் பணிகளை விரும்பி நாடுவதில்லை. ஏன்? இவர்களுக்கு இந்திய நாட்டளவில் மாற்றங்கள் நிகழும். மாநில அரசைப் பொருத்தவரையில் மாநில அளவுதான். இரண்டு அரசு ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் என்றால் மைய அரசுப் பணிக்கு யாரும் விரும்பிப் போகமாட்டார்கள். இந்திய நாட்டளவில் பணி மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பணி செய்வது என்பதூஉம், ஒன்றல்ல. ஒரு தன்மையுடையதுமல்ல. மைய அரசு ஊதியம் பெற விரும்புபவர் மைய அரசுப் பணியில் சேர்வதுதான் முறை.

மைய, மாநில அரசுகளின் நிதி வேறு. வேறானவை. அதுபோலவே நிதிப் பயன்பாட்டு முறையிலும் மாநில அரசுகள் சுதந்திரமுடையன, இந்தியா முழுவதற்கும் ஒருங்கு படுத்தப்பட்ட - மையப் படுத்தப்பட்ட நிதியில் ஒழுங்கு தோன்றினால் ஒரே மாதிரி ஊதியம் பற்றிச் சிந்திக்க இயலும். மாநிலத்திற்கு மாநிலம் அரசின் நிதி - ஆதாரங்க்ள், தனி நபர் வருவாய், நிதியைப் பயன்படுத்தும் வகை ஆகியவற்றில் நாடு தழுவிய நிலையில் கண்ணோட்டம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் மைய-மாநில அரசுகளில் ஒரே ஊதியம் வாங்குவது சாத்தியமா?

இனிய செல்வ, நமது மதிப்பிற்குரியவர்கள் ஆசிரியர்கள்! நமது அரசு அலுவலர்கள்! இவர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்குவது நல்லதுதான். யார்தான் மறுப்புக் கூற இயலும்? ஆனால் நம்முடைய தமிழகத்தின் பொருளாதார நிலை என்ன? நமது நிதிநிலை நெருக்கடிக்கு ஆட்பட்ட நிலை. நமது நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே நிதியில் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப் பெறவில்லை. திட்டமிலாத செலவு மிகவும் கூடுதல். தனி நபர் வருமானம் மிகவும் குறைவு. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கையும் கூடுதல்தான். ஓர் அரசு தன்னுடைய பொருளாதார அடிப்படையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அள்ளிக்கொடுக்குமானால் நாட்டின் செல்வம் கெடுமாம். இது திருவள்ளுவர் கூறும் கருத்து.

"உளவரை துரக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்"

(480)

என்பது திருக்குறள். மைய அரசைப்போல ஊதியம் வழங்க வேண்டுமானால் நமக்குச் சற்றேறக்குறைய 370 கோடி ரூபாய் செலவாகும். இந்தச் செலவை அரசு எப்படி ஈட்டுவது என்று வழிவகை காண வேண்டும். இல்லையானால் அரசின் நிதிநிலை கெடும். நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

விலைவாசி ஏற்றத்தைக் காட்டி ஊதிய உயர்வு கேட்கப் பெறுகிறது. விலைவாசி ஏறியிருப்பது உண்மை. ஆனால் ஊதிய உயர்வு, விலைவாசி ஏற்றத்திற்குப் பரிகாரமாக இயலுமா? ஊதிய உயர்வின் மூலம் அதிகப் பணப்புழக்கம் ஏற்படுகிறது. உடனே விலையும் ஏறிவிடுகிறது. விலை ஏற்றமும் ஊதிய உயர்வும் நச்சுச் சுற்று வளையம் போல் சுற்றி வருகிறது. சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. இதற்குத் தீர்வுகாண ஒரே ஒரு வழிதான் உண்டு. ‘விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துக' என்று மைய மாநில அரசுகளைக் கேட்பதுதான்! சீனா போன்ற நாடுகளில் தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் கூட விலை ஏற்றம் இன்றி ஒரே நிலைப்பாட்டில் நிற்கிறது. நாமும் நமது அரசுகளை விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும்படி கேட்கலாம். இப்படிக் கேட்பது கடமையும்கூட விலை, கட்டுப்படுத்த பெற்றால் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லது. ஒருக்கால் அரசால் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது போனால் உற்பத்திப் பண்டங்களை வழங்கியும் உற்பத்திச் செலவைக் குறைத்தும் விலையைக் கட்டுப் படுத்தலாம். இத்தகு கோரிக்கைகளை வைத்துப் போராடுதல் நல்லது.

இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வாழ்க்கைச்செலவுப் புள்ளியும் மாறுபடுகிறது. ஆதலால் ‘ஒரே ஊதியம்’ என்ற கொள்கையைவிட "சீரான வாழ்க்கைக்குரிய ஊதியம்” என்ற கொள்கை வரவேற்கத்தக்கது. ஆனால் இதைக் கணித்து நடைமுறைப்படுத்துவது, எளிதான செயலன்று. அதனால் நாடு முழுவதும் கட்டுப்படுத்தப் பெற்ற விலை-ஒரே வாழ்க்கைச் செலவுப்புள்ளி என்ற நிலை உருவானால் நல்லது. இந்த அடிப்படையிலேயே ஊதிய ஏற்றத் தாழ்வுகளைக் கணிசமாகக் குறைக்கலாம். குறைத்துவிட முடியும். ஊதிய உயர்வுகளைக் கேட்டு "காகித நோட்டுக்களின்" புழக்கத்தை அதிகப்படுத்தி நாட்டின் நிதி நிலையைக் கெடுக்காமல் நியாய விலையில்-கட்டுப்படியாகும் விலையில் நுகர்வுப் பொருள்கள் கேட்பது, எல்லாமட்டத்திலும் இலவசக்கல்வி கேட்பது இலவசமருத்துவம் கேட்பது போன்றவைகள் வரவேற்கத் தக்கன. இந்த இனங்கள் புதிய நிதிச் சுமையைக் கொண்டுவராது. அதேபோழ்து சீரான வாழ்க்கைக்குத் துணை செய்யும். இன்ப அன்பு

அடிகளார்

25. சலுகையின் எல்லை

இனிய செல்வ!

நல்வாழ்த்துக்கள்! திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. ஆயினும் மானிட இயல்பினை நன்றாகத் தெரிந்து, தெளிந்து இயற்றப்பெற்ற நூல். உளஇயல் கற்பதற்கு ஏற்ற நூல் திருக்குறள். இன்றைய வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் திருக்குறளின் அறிவுரைகளின் அருமைப்பாடு புரியும். சான்று இன்றைய செய்தித்தாள்களில் தொடர்ந்து வரும் செய்திகளாகும். ‘ஆதி திராவிடர் பேரணி’, 'வன்னியர் போராட்டம்', 'யாதவர் மாநாட்டுக்கோரிக்கை', 'பிராமணர்கள் உண்ணாவிரதம்', 'தேவர் பேரவை மாநாடு' என்பன போன்ற செய்திகளேயாம், எங்குப் பார்த்தாலும் சாதி வழிப்பட்ட இயக்கங்கள். இனிய செல்வ! அரசியல் கட்சிகளுக்குள்ளும் கூட சாதீய சக்திகள் ஊடுருவி விட்டன, இனிய செல்வ, குறிப்பாகச் சொன்னால் இன்றைய தமிழகத்தில் தமிழர்கள் இல்லை; இந்தியாவில் இந்தியர்கள் இல்லை. அதாவது ஒருமைப்பாட்டுணர்வுடன் கூடிய சமுதாயம் காலூன்றவில்லை மனிதப்படைப்பு இயற்கை செய்தது! இல்லை - இயல்பான பரிணாம வளர்ச்சி! சாதீயப்படைப்புகள் மனிதன் செய்தவை. இனிய செல்வ, இந்தப் பொல்லாதபுன்மையுடைய சாதி, குல, கோத்திர வேற்றுமைகளை எதிர்த்துத் தமிழர்கள் - நாயன்மார்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று ஆற்றுப்படுத்தினார்கள். பனம்பாரனார் காலம் முதல் பாரதிதாசன் காலம் வரை தொடர்ந்து போராடி வந்துள்ளனர். அது போலவே சமய உலகிலும் அப்பரடிகள் முதல் அண்ணல் காந்தியடிகள் வரை போராடி வந்துள்ளனர். வள்ளல் பெருந்தகை சாதிகளைக் கடுமையாகவே சாடினார். ஆயினும் பயன் கிடைக்கவில்லை. ஏன்? இனிய செல்வ, "புரியாதபுதிர் என்கிறாயா? அப்படியெல்லாம் ஒன்றும் புரியாதது அல்ல. நோயும் தெரிகிறது. நோயின் காரணமும் தெரிகிறது. ஆனால் மருத்துவம் செய்யும் துணிவு தான் இல்லை. ஒருபுறம் பழைமைப்பிடிப்பு தடையாக இருக்கிறது. மறுபுறம் தேர்தல் தடையாக இருக்கிறது. இவற்றுள்ளும் பழைமைப் பிடிப்பாளர்கள் கை தளர்ந்து வருகிறது. பழைமைப் பற்றாளர்கள் சமுதாய மேலாண்மை உடையவர்கள் அல்ல. அரசியல், தேர்தல் வெற்றி-தோல்வி உணர்வுகள் வழிப்பட்ட அச்சம் பெரிதும் தடை! இனிய செல்வ, இந்தத் தவற்றுக்கு நாம் அனைவரும் மதிக்கும் பெருந்தலைவர்கள் கூட இரையாகின்றனர். என்ன செய்வது? நாட்டின் ஊழ்வினை அதுவோ?

ஆதி திராவிட மக்கள் - ஹரிஜன சமுதாயத்தினர், சமுதாய அமைப்பின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை. அவர்கள் இந்துமத சாத்திரங்கள் அடிப்படையில் மிகவும் கேவலமாக, விலங்கினும் மோசமாக நடத்தப்பட்டார்கள். இவர்களை மனிதர்களாக்க வேண்டியது உடனடியான பணி! தலையாய கடனும் கூட; இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதைகள் இதற்குரிய பரிகாரத்தை அரசியல் சட்டத்திலேயே கண்டுள்ளனர். இந்த உணர்வும் செயல்முறையும் வரவேற்கத்தக்கன! பாராட்டத்தக்கன! ஆனாலும் தீண்டாமையை பின் தங்கிய நிலையைப் பிரதானப்படுத்தி ‘சாதிகளை’ விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறது. இனிய செல்வ, சாதிகளை மறக்கடிப்பதற்குரிய முயற்சி இது. தீண்டாமையிலும் பின் தங்கிய நிலையிலும் அல்லலுறுவதைக் குடும்ப அடிப்படையில் கணக்கெடுத்துத் தீர்வுகாண வழிவகை கண்டிருந்தால் இன்று பரவலாக அந்தப் பயன் சென்று சேர்ந்திருக்கும். இன்று இந்தப் பயனை அடைந்திருப்பவர்கள் இந்தத் தொகுதியில் கொஞ்சம் வளர்ந்த வல்லாண்மையுடையவர்களேயாம். கடை கோடி மனிதனுக்கு ஒன்றுமே கிடைக்க வில்லை. நாமும் சுதந்திரம் பெற்ற நாற்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடி விட்டோம். இன்று ஆதி திராவிடர்களுக்குரிய மேம்பாட்டுப் பணிகள் ‘சாதியின்’ பெயராலேயே செய்யப் பெறுவதால் சாதிகளை மறக்க முடியவில்லை. மாறாகச் சலுகைகளை அடைய சாதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயமும் தோன்றி விட்டது. இனிய செல்வ, இன்றுள்ள மனப் போக்கு வளர்ந்தால், நமது நாட்டின் தீண்டாமை போகாது. ஆதி திராவிடர்கள் என்ற சமுதாய அமைப்பு நீங்கி எல்லோரும் ஒர் குலம் என்ற நிலை உருவாகாது. இது தொடர்பாக நிறைய உனக்கு எழுத வேண்டியுள்ளது. அடுத்த கடிதத்தில் விரிவாக எழுதுகின்றோம்.

அதற்குள்ளாக,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை”

என்ற திருக்குறளைப் படித்து வைத்துக் கொள்! பயன் தரும்! மற்றவை பின். இன்ப அன்பு

அடிகளார்

26. சலுகையின் எல்லை - 2

இனிய செல்வ,

நல்வாழ்த்துக்கள்! சென்ற கடிதத்தைக் கவனமாகப் படித்திருப்பாய் என்று நம்புகின்றோம். இந்தக் கடிதம் எழுதுவதற்குள் ஒரு புதுச்செய்தி! கிறிஸ்தவர்கள் மாநாடு நடத்தியுள்ளனர்; தார்மீக மாநாடு நடத்தியுள்ளனர். அதில் மதம் மாறிய கிறிஸ்தவ ஹரிஜனங்களுக்கும் இந்து ஆதி திராவிடர்களுக்கு வழங்குவது போலச் சலுகை கொடுக்கத் தக்கவகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றிப் பின் விரிவாக எழுதுகின்றோம்.

முன் கடிதத்தின் தொடர்ச்சியாகச் சில செய்திகள்! - இந்தியாவில் சாதிகள் தோன்றியது ஆரிய நாகரிகத்திற்குப் பிறகுதான். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரும் சாதியைக் கண்டித்திருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரடிகளும் சாதி வேற்றுமைகளைச் சாடி இருக்கிறார். சற்றேறக் குறைய 1500 ஆண்டுகளாகத் தமிழறிஞர்கள், சான்றோர்கள் சாதிமுறைகளை மறுத்து வந்தாலும் சாதி முறைகள் போகவில்லை. அது மேலும் மேலும் இரத்தப்புற்று நோயாக வளர்ந்து கொண்டு வருகிறது. சாதி முறைகள் மதத் தொடர்புடையனவாக இருந்த வரையில் அது சமூகத் தீமையாக இருந்து வந்தன; ஒரளவு பொருளியல் தீமையாகவும் விளங்கின. இட ஒதுக்கீடுகள் வந்த பிறகு, சாதி வேற்றுமைகள் சமூகத் தீமையாக மட்டுமல்லாமல் அரசியல் தீமையாகவும் உருப் பெற்று விட்டன.

இனிய செல்வ, உன்னுடைய கேள்வி நியாயமானதே! பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியவர்களுடன் சம நிலைக்கு வரச் சலுகைகள் தேவையே! தேவை மட்டும் அல்ல, அவசியமும் கூட! ஒதுக்கீடு தேவை என்பதில் இரண்டு கருத்து இல்லை! எவ்வளவு காலத்திற்கு ஒதுக்கீடு தேவை? ஒதுக்கீட்டு முறையை நடை முறைப்படுத்துவது எப்படி என்பவற்றில் தான் கருத்து வேறுபாடு. மிகச் சிறந்த அறம் கூடச் செய்யும் முறையால் பயன்தராமல் போவதுடன் மட்டுமன்றி எதிர்விளைவையும் உண்டாக்கி விடுமே! மருந்து நல்லதாக இருந்தால் மட்டும் போதாது; மருந்தைக் கையாளும் முறையும் நல்லதாக அமைய வேண்டும். ஒரு மருந்து அனுபானத்தால் முரண்பட்ட பலன்களைத் தரும் என்பதை நினைவிற் கொள்க.

தீண்டாமையால் அல்லற்படுபவர்களுக்குக் குடும்ப அடிப்படையில் 25 ஆண்டுகள் அவசியமானால் மேலும் 10 ஆண்டுகள் சலுகை, என்று ஒரு கோட்பாடு வகுத்துக் கொண்டால் சாதிகள்-சாதியின் உட்பிரிவுகள் சிக்கல் தோன்றாது. குறிப்பிட்ட கால வரையறையிருப்பதால் விரைவுணர்வுடன் பணிகள் நடைபெறும் காலத் தவணைப் படி முறைகள்படி வளர்ந்த குடும்பங்கள் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப் பெறுவதால் கடைகோடி மனிதனுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். என்றாவது ஒரு காலத்தில் இந்தியாவில் தீண்டாமை இல்லை என்ற சாதனையை அடையலாம்; அடையமுடியும். இப்போதுள்ள நடை முறையில் என்றுமே தீண்டத்தகாதவர்கள் இருப்பார்கள். வாயடி, கையடிக்காரர்கள் சலுகையைத் திரும்பத் திரும்பப் பெற்றுப் பயனடைவர். இதில் என்ன சமூக நீதி இருக்கிறது? இதனால் தீண்டாமை சமுதாயத்தில் நிலைப்பட்டுப் போகுமே என்ற கவலை தோன்றுகிறது.

இனிய செல்வ, சிலர் தமது தலைமைப் பதவிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகச் சாதிகளைக் காப்பாற்றப் போராடுவர். இது நல்லதா? யோசித்து எழுதுக! இதே நிலைதான் பிற்பட்டோர் நிலையிலும் கூட! இந்த ஒதுக்கீட்டுப் பேச்சு தலை தூக்கி நிற்பது அரசுப் பணிகளுக்குத் தான்! கல்வி, அறிவு பெறுவதற்கே! கல்வியையும் வேலை வாய்ப்பையும் ஒன்றாக்கினால் என்றும் அறிவு வளராது; தற்சார்பு நிலை உருவாகாது; தன்னம்பிக்கையும் ஏற்படாது. அரசைச் சார்ந்தே வாழும் ஒட்டுண்ணியாக மக்கள் மாறுவர் - வளர்வர். இது நன்றன்று. இந்தியாவில் கற்ற அனைவரும் அரசுப் பணியில் இடம் பெறுவது என்பது நடை முறைச் சாத்தியமல்ல. ஆதலால் ஆங்காங்குப் படித்த இளைஞர்களும் தொண்டு நிறுவனங்களும் தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புக்களைத் தோற்றுவித்து வழங்க வேண்டும். இந்த நூற்றாண்டின் அறம், வேலை வாய்ப்பு வழங்குவதேயாம். ஆதலால் சாதிகளை நினைவில் வைத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயத்திலிருந்து சமுதாயத்தை மீட்டாக வேண்டும். சாதிகளை மறப்பதற்குரிய செயல்முறைகளை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். இஃதோர் அவசர அவசியத் தேவை.

தீண்டப்படாத நிலையும், மிகப் பின் தங்கிய நிலையுமே அளவுகோலாக அமைய வேண்டும். சாதிப் பெயர்கள் அளவு கோலாகத் தொடர்ந்து இருக்கக் கூடாது. இரத்தினகிரியில் 11-10-80இல் நடந்த திருக்குறள் பேரவை மாநில மாநாட்டின் தீர்மானங்களைப் படித்திருக்கிறாயா? இல்லையெனில் உடனடியாக எடுத்துப் படிக்கவும். சாதிப் படை நோய் நீங்க அத்தீர்மானம் ஒரு சரியான மருந்து என்பதை நினைவிற்கொள்க. அதேபோழ்து,

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்ற திருக்குறளையும் நினைவிற் கொள்க. இன்னமும் எழுத வேண்டிய செய்திகள் உள்ளன. நாட் காலை 4 மணி வந்து விட்டது. திருக்கோயிலுக்குச் செல்ல அழைப்பு விடுக்கிறார் பரிவு மிக்க தொண்டர் சித. பேச்சிமுத்தன். ஆதலால் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றோம்!

மற்றவை அடுத்த கடிதத்தில். இன்ப அன்பு

அடிகளார்

27. ஆட்சிமொழிச் சிந்தனை

இனிய செல்வ! -

நல்வாழ்த்துக்கள்! தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் யுத்திகளுக்குக் கட்சிகள் அலைமோதுகின்றன. வழக்கம் போலத் தேர்தல் யுத்திகளில் இந்தி எதிர்ப்பு முக்கிய இடத்தை வகிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் இந்தி நுழையாமல் பாதுகாப்பது திராவிட முன்னேற்றக் கழகமே என்று உரிமை கொண்டாடுகின்றது. இனிய செல்வ! அண்மைக்காலத்தில் தோன்றிய தேசிய முன்னணியில் தி.மு.க. சேர்ந்தது. தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள், இந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்ற கொள்கையில் தீவிரக் கருத்துடையவை. ஆதலால், இந்தத் தேசிய முன்னணியில் சேர்ந்துவிட்டதால், இந்தி எதிர்ப்பைத் தி.மு.க. கைவிட்டு விட்டது என்று பரவலாகப் பேசப் படுகிறது. இஃது இன்றைய அரசியல் நிலைப்படி சரியான கருத்து அல்ல. காங்கிரஸ் வகுப்பு வாதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி. அதே காங்கிரஸ், கேரளாவில் குறிப்பிட்ட மதப் பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் லீக்குடன் கூட்டு வைத்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் மதச் சார்பின்மையை வகுப்புவாதக் கொள்கையைக் கைவிட்டு விட்டதாகக் கூற முடியுமா? ஒருக்காலும் முடியாது. இனிய செல்வ! இந்திய அரசியலில் எந்த ஒரு கட்சியும் பலம் வாய்ந்த மக்கள் கட்சியாக இல்லை. ஆதலால் கூட்டணிகள் சேர்கின்றன. கூட்டணி, கொள்கை அடிப்படையில் அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே நோக்கம் அல்லது நாட்டில் இருக்கும் கட்சிகளுள் பெரியதாகிய காங்கிரசை எதிர்ப்பதே நோக்கம். காங்கிரசை எதிர்ப்பது என்ற பொது உணர்வில் கட்சிகள் முன்னணியில் நிற்கின்றன. இந்த மனப்போக்கு இப்பொழுது வளர்ந்து, சிறிய, சிறிய கட்சிகளிடையே கூட மேலோங்குகிறது. அ.தி.மு.க-தி.மு.க.விற்கும் இடையே உள்ள பகைமை அத்தகையது. இவர்களுக்கிடையில் உள்ள பகைமை காங்கிரசுக்கு இலாபமும் கூட இனிய செல்வ! இது கிடக்கட்டும், அரசியல்! நாமும் மற்றவரைப் போலத் தமிழை விட்டு விடக் கூடாதல்லவா?

இனிய செல்வ! நமது நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் அக்டோபர் 24ஆம் நாள் பேசுகையில் “தமிழ் உணர்ச்சி இருக்கலாம்; வெறி இருக்கக் கூடாது” என்று பேசியுள்ளார். இது நூற்றுக்கு நூறு உண்மை வரவேற்கத்தக்கது. ஆனால் உண்மை என்ன என்பது பாரதப் பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. தமிழர்களுக்கு இன்று தமிழ் உணர்ச்சியே இல்லை என்பதே உண்மை! "விடுதலை பெற்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தமிழகத்தின் ஆட்சியில் முழு நிலைத் தகுதியில் தமிழ், ஆட்சி மொழி ஆகவில்லை. தமிழ் துறைதோறும் பயிற்றுமொழியாக வளரவில்லை. தமிழ், அறிவியல் தமிழாக வளம் பெறவில்லையே!” என்று நாளும் நினைந்து நினைந்து துடிக்கிறார் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி. தமிழ் பேசத் தெரியாத தமிழ் ஆர்வலர் பேராசிரியர் விஞ்ஞானி கை.இ.வாசு அவர்கள் தமிழில் அறிவியலைக் கொணர ஓயாது உழைக்கிறார். ஆயினும் எங்கும் ஆங்கிலம் வாயிலாகக் கற்கும் பள்ளிகள்; கல்லூரிகளில் ஆங்கிலம் பயிற்று மொழி! இந்த நிலையில் தமிழருக்குத் தமிழில் வெறி இருப்பதாகப் பாரதப் பிரதமர் கூறியது முற்றிலும் உண்மை அல்ல. இனிய செல்வ! இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு புதிய செய்தியைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதாவது, நமது பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் அக்டோபர் 26ஆம் நாள் திருமங்கலத்தில் பேசும்பொழுது, "இந்தி வெறியர்களைத் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள்" என்று பேசியுள்ளார், தி.மு.கவின் தேசிய முன்னணி இணைப்பை எதிர்க்கும் முகத்தான் இப்படிப் பேசியுள்ளார். "இந்தி வெறி” என்பதை, காங்கிரஸ் ஒத்துக் கொள்கிறதா? அப்படியானால் இந்தியைப் பற்றிய காங்கிரசின் கொள்கை மாறியிருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கண்டாக வேண்டும். இந்தியாவின் மொழிக் கொள்கை ஓரிடத்தில் முற்றுப் புள்ளியாகவும் ஓரிடத்தில் காற்புள்ளியாகவும் நிற்கிறது. இனிய செல்வ! இந்தி, இந்தியாவின் அலுவல்மொழி என்பது முடிந்த முடிவு. இது முற்றுப் புள்ளி உள்ள இடம், "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில் ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும்" என்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானம். இது அரசியல் சட்டத்தில் இடம் பெறவில்லை; அந்தத் தீர்மானத்தில் உள்ள "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில்" என்ற இடத்தில் காற்புள்ளிதானே இட முடியும்! என்றாவது ஒரு நாள் விரும்ப வேண்டும் என்பது தானே இதன் பொருள். இந்தக் காற்புள்ளியையே முற்றுப் புள்ளியாக நினைத்துச் சிலர் மகிழ்ந்தனர்; வெற்றிவிழாவும் கொண்டாடினர். ஆயினும் இந்தத் தீர்மானம் இந்தி வராது என்பதற்குரியதன்று.

இனிய செல்வ! இன்றுள்ள நிலை என்ன? இந்தி தமிழ்நாட்டில் வந்திருக்கிறதா? இல்லையா? இந்தி தமிழ் நாட்டில் வந்துவிட்டது என்பதே உண்மை. ஆங்கிலம், பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படுகின்றது. இந்தப் பள்ளிகளில் இந்தி இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பெறுகிறது. இந்தி வகுப்புகள் நாடு முழுவதும் பரவலாக நடைபெறுகின்றன. இந்திய அரசாங்கப் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் பொது நிறுவனங்களில் அலுவலர்கள் ஆகியோர் நாளும் இந்தி படித்துத் தேறி ஊதிய உயர்வும் பெறுகின்றனர்; உயர்நிலையும் பெறுகின்றனர். சந்தடியே இல்லாமல் இந்தி தமிழகத்தில் வளர்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்தி கற்கின்றனர். எதிர்காலத்தைப் பற்றி உய்த்தறியும் ஆற்றல் மிக்க சமுதாயத்தினர் இந்தியைப் படிக்க ஆரம்பித்து விட்டனர். கிராமபுறத்தில் வாழும் தமிழர்கள் தான் இன்று இந்தி கற்கவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் கற்கும் வாய்ப்பும் இல்லை. ஏன்? கிராமத்து மக்கள் இரண்டாம் தரத்தினர்! அவர்கள் தமிழில் தொடர்ந்து கற்கவும் முடிவதில்லை. இனிய செல்வ! ‘தமிழ் ஆர்வம்' ‘இந்தி எதிர்ப்பு’ ஆகிய இவை வரலாறாக இல்லை; வாழ்வாக இல்லை. இதுவே உண்மை. இத்தகு உண்மையைச் சிலர் ஏற்க மறுக்கலாம். ஆயினும் திருக்குறள் நெறிப்படி.

'உலகத்தா ருண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும்’

என்பதே உண்மை. இன்ப அன்பு

அடிகளார்

28. தேர்தல் சிந்தனை-1

இனிய செல்வ!

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எண்ணற்ற சலுகைகள் வாரி வீசப் போவதாக வாக்குறுதிகள்-அறிவிப்புகள் கணக்கிலா நிலையில் வந்துகொண்டே இருக்கின்றன. எதிர்கால முதலமைச்சர் பதவி தனக்கே என்று உரிமை கொண்டாடும் ஒருவர் அறிவித்துள்ள சலுகைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு 42,600 கோடி ரூபாய் ஆண்டு ஒன்றுக்குத் தேவை. இது எந்த உலகம்! இவ்வளவு நிதிக்கு எங்குப் போவது? இதைப் பற்றி யார் எண்ணிப் பார்க்கப் போகிறார்கள்? நம்மில் பாதிபேர் ஏழைகள். வழிவழியாகச் சலுகைகளையே நம்பி வாழ்பவர்கள். ஆனால் அறிவிக்கப்படும் இந்தச் சலுகைகள் ஆகாச வாணங்களே தவிர, ஒளி விளக்குகள் அல்ல. எல்லாருமே மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கவே முயற்சி செய்கின்றனர். மக்களை, மக்களாக வாழ, வழி செய்வதற்கு யாரும் எண்ணுவதாகத் தெரியவில்லை. நெறிமுறையற்ற சலுகைகளும்கூட ஒரு வகையான கையூட்டுக்களேயாம். அதுவும் தேர்தல் காலத்தில் அறிவித்தால் கட்டாயமாகக் கையூட்டாகவே கருத வேண்டும்.

ஒரு குடியாட்சி நாட்டில் வாழும் மக்கள் அனைத்துரிமைகளுக்கும் சொந்தக்காரர்கள். தேர்தல் அறிக்கைகள் காலத்தில் தயார் செய்ய வேண்டும். ஜனவரியில் தேர்தல் வரப்போகிறது. டிசம்பர் பிறந்து விட்டது. இன்னமும் ஒரு கட்சி கூட தேர்தல் அறிக்கைகள் தரவில்லை. தேர்தல் அறிக்கைகள், ஒர் ஐந்தாண்டுத் திட்டம் போலத் தயார் செய்யவேண்டும். ஆக்கவழியிலான நல்லாட்சி அமைப்ப தற்குரிய திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும். தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புக்கள் உருவாக்குதல், விலைவாசிக் கட்டுப்பாடு, ஆயுட்கால வளர்ச்சி, எல்லாருக்கும் தரமான கல்வி உரிமை முதலியன வழங்கப் பெறுதல் வேண்டும். சுரண்டல் தன்மையுடைய சமுதாய அமைப்பு, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றினை அறவே நீக்கும் செயல் முடிவுத் திட்டங்கள் அறிவிக்கப் பெறுதல் வேண்டும்.

இத்தன்மையான தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொரு கட்சியும் தயாரித்து, மக்கள் மன்றத்தில் வைத்து, மக்கள் கருத்தறிந்து, இறுதி வடிவம் கொடுத்துப் பின் தேர்தல் காலத்தில் மக்கள் மன்றத்தில் வைத்து வாக்குப் பெறுதலே முறை.

இன்று இந்த நடைமுறையை ஒரு கட்சி கூடப் பின்பற்றவில்லை! எல்லாக் கட்சிகளும் தேர்தல் நிதியை நேரடியாகவும், மறைமுகமாகவும் குவித்துக் கொண்டுள்ளன. இன்றைய நிலையைப் பார்த்தால் தேர்தல் என்ற பெயரில் பணபலப் பரீட்சை நடக்கும்போலத் தெரிகிறது. இது மக்களாட்சி முறையன்று!

இனிய செல்வ, தேர்தலில் உனக்கு வாக்கு இருக்கிறது, நீ கட்டாயம் வாக்களிக்க வேண்டும். மறந்துவிடாதே! வாக்களிப்பதற்குமுன் திருவள்ளுவரை நினைத்துக் கொள். அவர் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையைப் பற்றிக் கூறிய திருக்குறளை ஒரு தரம் நினைத்துக் கொள்க!

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்”

என்பது திருக்குறள்.

‘இதனை’ என்று திருக்குறள் எதைச் சுட்டுகிறது? "இதனை” என்பது நாட்டுத் தேவையை! வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், வறுமையை அறவே நீக்குதல், விலையைக் கட்டுப்படுத்தல்; பொருளாதாரத்தில் நாட்டைத் தற்சார்பு நாடாக வளர்த்தல் ஆகிய பணிகளையே "இதனை” என்று குறிப்பிடுகிறார் இந்தப் பணிகளைச் செய்வதை நோக்கமாகக் கொண்ட கட்சி எது? வேட்பாளர் யார்? என்று ஆய்வுசெய்து கொள். ஒரு நல்ல நோக்கம் மட்டும் இருந்தால் போதாது. அதனை நிறைவேற்றும் திறன், கருவிகள் உடையவராக இருக்கின்றாரா என்றும் ஆய்வு செய்தல் வேண்டும் என்பதனையே ‘இதனால்’ என்ற சொல் குறிக்கிறது.

தமிழ் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். உழைக்கும் உள்ளமும், கரங்களும் இருந்தும் வேலை கிடைக்கவில்லை. விலை ஏற்றம் என்பது நச்சுப் பாம்பு. நஞ்சேறும் வேகத்தை விட வேகமாக விலை ஏறுகிறது. தமிழ்நாட்டில் தமிழ், கல்வி மொழியாக, பயிற்றுமொழியாகத் துறைதோறும் வளரவில்லை, இவற்றையெல்லாம் செய்து முடிக்கும் குறிக்கோள் எந்தக் கட்சிக்கு இருக்கிறது? திறன் எந்தக்கட்சிக்கு இருக்கிறது? என்று எண்ணுக! ஒருதடவைக்கு மூன்று தடவை எண்ணுக! சென்றகால வரலாற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்க! ‘இதனை இதனால் இவர் முடிப்பார்’ என்று எண்ணித்துணிக! வாக்களித்திடுக! நல்லாட்சி அமைத்திடுக! இதுவே திருக்குறள், வாக்காளர்களுக்குக் கூறும் அறிவுரை! இன்ப் அன்பு

அடிகளார்

29. தேர்தல் சிந்தனை-2

இனிய செல்வ,

இப்பொழுது உனக்கு எதிர்பாராமல் கிடைத்திருக்கும் மதிப்பில் மூழ்கிக் களித்துக் கொண்டிருப்பாய்! உன்னுடைய நன்மைக்காக அள்ளி வழங்கப்பெறும் உறுதிமொழிகளில் திளைத்துக் கனவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பாய்! உனது கனவை விட்டுச் சற்றே நனவுலகத்திற்கு வருக!

ஆம்! இது தேர்தல் காலம்! வேட்பாளர்கள் கும்பிட்ட கையை இறக்காமல் உலாவரும் காலம்! கட்சிகள்-கட்சிகளின் தலைவர்கள் உறுதிமொழிகளைத் தாராளமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் காலம்! தனி மனிதனின் குறை-குற்றங்கள் அலசப்படும் காலம்! இந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது? நம் நாட்டில் ஒரு பழக்கம் ‘விளம்பரம்’ ஆனவர்களை-விளம்பரம் ஆனவைகளை அப்படியே நம்பிவிடுவது! பின்பற்றுவது! ஒரு திறமை வாய்ந்த ஜோசியர் இருந்தால் ஒரு கோயில்-ஒரு கடவுள் எளிதில் வெற்றி பெற்று விடுகிறது. அதுபோல், ‘பாராட்டுபவர்கள் - அர்ச்சகர்கள் சிலரும் ஒரு பத்திரிகையும் இருந்தால் போதும்-எளிதில் தலைவராகி விடலாம்’ நாமும் நம்பி விடுவோம்! அது போலத்தான் பயன்படுத்தும் பொருள்களையும் கூட நம்பி விடுவோம்! விளம்பரமான பொருள்கள் மீது நமக்கு ஒரு அலாதியான நம்பிக்கை! பற்று! சோதனை செய்யாமல் நம்பி விடுவோம்! அவை தரம் குறைந்தவையாக இருந்தால்கூட நாம் அதை வெளியில் கூறுவதில்லை; வாங்காமலும் இருப்பதில்லை! நமது நாட்டில் இங்ஙனம் நடப்பவைகள் பலப்பல! லஞ்ச லாவண்யம் என்று குறைகூறிக் கொண்டிருப்பவர்கள் வாங்கும் கையூட்டுகளுக்குக் கணக்கே இல்லை! ஆதலால் தேர்தலில் யார் நிற்கிறார்கள் என்று ஆய்வு செய்வதில் பயனில்லை! பேசுபவர்கள் யார்? ஆராய்ச்சி வேண்டவே வேண்டாம்! உறுதிமொழிகளை வழங்குபவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் நாம் அவரை நம்பி, எதையும் நம்பக்கூடாது. பின்பற்றக் கூடாது! எடுத்துக் கூறும் உறுதி மொழிகள் சாத்தியமானவையா? இன்று இவ்வளவு உறுதி மொழிகளை அள்ளி வீசுபவர் இதற்கு முன்பு அவருக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் என்ன செய்தார்? அவற்றின் பயன் என்ன? என்று ஆய்வு செய்வது நமது கடமை. இங்ஙனம் ஆய்வு செய்யாததால் இன்று கூட நாம் அளவுக்குமேல் ஒருவரைத் தலைவராக, இல்லை! - அவதார புருஷராக மதித்து வருகின்றோம். ஆனால் அவர்களுடைய சொல்லையும் செயலையும் கூர்ந்து நோக்கின் அவர்கள் ஒரு சராசரி மனிதர்கள்தாம் என்பது விளங்கும்! அதுபோலவே, சில வரலாற்று நிகழ்வுகளில் சிலர் பழிசுமத்தப்படுவர். சிலர் பாராட்டப்பெறுவர். வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் புகழுக்கும் பழிக்கும் உரியவர்கள் மாறுபடுவார்கள்! ஆதலால், நமது கவனத்திற்குரியது ஒரு தலைவர் பெற்றுள்ள விளம்பரம் அல்ல. அல்லது அந்தத் தலைவருக்குள்ள கூட்டம் கூட்டும் சக்தியல்ல; கூட்டமும் அல்ல. நல்லது செய்யும் மனப்பண்பும் ஆளுமையும் உள்ளதா என்பதே ஆய்வுக்குரிய செய்தி! அருச்சனை ஆடம்பரமாக - ஆரவாரமாக இருப்பதில் மூர்த்தி சிறப்புப்பெற்று விடாது. ஆதலால் யார் சொல்லுகிறார் என்று கவனித்தல் பயன் தராது. என்ன சொல்லுகிறார்? அதன் பயன் என்ன? என்று ஆய்வு செய்து உண்மை தெரிந்து வாக்களிக்க வேண்டும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

'யார்யார் வாய்க் கேட்பினும்’ என்ற சொற்றொடரின் அமைவு ஆழ்ந்த சிந்தனைக் குரியது. ‘எவரேனும்', 'யாரேனும்’ என்ற வழக்குச் சொற்களுடன் இணைத்துச் சிந்திக்க வேண்டிய சொற்றொடர் ‘யார் யார்’ என்பது.

ஆதலால், தேர்தல் உரைகளைக் கேளுங்கள்! ஆய்வு செய்யுங்கள்! செய்திகள் முக்கியமானவை. செய்திகளை விடச் சொல்பவரின் தகுதியும் திறமையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும்.

தமிழ், தனக்குரிய இடத்தைப் பெறுதல் வேண்டும்! துறைதோறும் தமிழ் வளர்ந்து இடம் பெறுதல் வேண்டும்! நாட்டில் வேலை வாய்ப்புப் பெருக வேண்டும்! வறுமை அகல வேண்டும்! வாழ்வு சிறக்க வேண்டும்! இதுவே நமது தேவை! நமக்குத் தேவை சோறும் துணியும் அல்ல! வாழ்வு தேவை! இவற்றை வழங்கக்கூடிய தகுதியும் திறனுமுடைய அணிக்கு வாக்களிப்பது நமது உரிமை; கடமை!

இன்ப அன்பு

அடிகளார்

30. அரசுக்குப் பரிந்துரை

இனிய செல்வ!

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்”

என்று திருவள்ளுவர் கூறியதற்கு இணங்கத் தமிழ் நாட்டு மக்கள் கலைஞரிடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். மகிழ்ச்சிக்குரிய முடிவு; பாராட்டுதலுக்குரிய முடிவு. முதலமைச்சர் மாண்புமிகு கலைஞரை வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவர் வரவேற்றுள்ளார். மாண்புமிகு கலைஞர் தலைமையில் அமைந்துள்ள ஆட்சி, வள்ளுவர் வழி நிகழும் ஆட்சியாக அமையும்.

இனிய செல்வ, இன்றுள்ள சூழ்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதைவிடக் கடினம், தமிழ் நாட்டை ஆளுவது! ஏன் என்றா கேட்கிறாய்? சொல்லுகிறோம் கேள். முதலில் நிதி நெருக்கடி இருக்கிறது. அடுத்து, தொடர் வறட்சியால் களஞ்சியத்தில் இருப்பு இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் வேறு! இவற்றையெல்லாம் விடப் பெரிய சிக்கல் நம்மனோருடைய மனோபாவம்! இத்தகு சூழ்நிலையில் கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளார். கலைஞருடைய ஆட்சி முழு வெற்றி பெற ‘வள்ளுவர் வழி’ துணை செய்யும். நாம் அனைவரும் அரசின் பணிகளுக்கு உறுதுணையாக அமைய வேண்டும்.

திருவள்ளுவர் "இதனை" என்று எதனைக் கூறினார்? அது ஒன்றா? பலவா? ஒன்றல்ல. பலப்பல! ஆயினும் ஒன்றிரண்டைப் பட்டியலிட்டு ஆய்வு செய்வோம்.

முதலில் நிதி நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வது. முதலமைச்சர் சத்துணவு மையத்திற்குப் பெரும்பணம் செலவாகிறது. இந்த முதலமைச்சர் சத்துணவு மையத்தை ஆங்காங்கு நடைபெறும் லாபகரமான தொழிற்சாலைகளிடம் ஒப்படைக்கலாம். அத்தொழிற்சாலைகளின் பொறுப்பிலேயே ஏற்று நடத்தும்படி செய்யலாம். அடுத்து, பத்து லட்சத்துக்கும் மேல் வருவாய் வரும் கோயில்கள் தங்கள் ஊரில் உள்ள முதலமைச்சர் சத்துணவு மையத்தை நடத்தலாம். இவைகளுக்கு வேண்டுமானால் செலவின் அடிப்படையில் 50 விழுக்காடு அரசு மான்யம் வழங்கலாம். இந்த மான்யம் தணிக்கை மேலாண்மை வசதிக்காக, இதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை கணிசமாகக் குறையும்.

அடுத்து இருப்பது இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை. இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஆரம்பகாலத்திலிருந்து தவறான அணுகுமுறை இருந்து வந்துள்ளது. ஆதி திராவிடர் இட ஒதுக்கீட்டு முறையும் அப்படியேதான். சாதி அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீட்டுமுறை இருந்தால் அது உண்மையில் பயன்படாது. சாதி முறையோடு தலைமுறை வரலாறு, குடும்ப அடிப்படை ஆகியனவும் அளவு கோலாக அமைந்தால்தான் கடைகோடி மனிதனுக்கும் பயன்படும். சாதி, பொதுவான அணுகுமுறை. இட ஒதுக்கீடு-கல்வித் தலைமுறை குடும்பத்தின் கல்விச் சூழல் எப்படி அமைந்திருக்கிறது? மூன்று தலைமுறை பட்டதாரிகளாக அமைந்துவிட்ட குடும்பத்தில் கல்வியின் ஊற்றுக்கண் நன்றாகவே அமையும். குடும்ப வருமானம் என்ன? நிலவருவாய், வியாபார வருவாயாக இருந்தால் வருவாயைக் கொண்டு கணக்கிடாமல் அளவைக் கொண்டே நிர்ணயித்து விடலாம்.

தமிழினத்திற்குரிய பகை ஆரியப்பகையோ-பார்ப்பனப் பகையோ அன்று. சாதி வேற்றுமைகள்தான் தமிழினத்தை உள் நின்றழிக்கும் பகை கடந்த பல நூற்றாண்டுகளாக இந்தச் சாதி முறைகளை எதிர்த்துப் போராடியும் சாதிப்பகை அகன்றபாடில்லை. இந்தச் சிக்கலிலும் அதிகமான உணர்வுப் பாதிப்புகள் வேறு ஏற்பட்டுள்ளன. இனிய செல்வ, இயல்பாகவே செயல்திறம் மிக்க கலைஞர், இந்தச் சாதிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் வெற்றி பெறுவார் என்றே நம்புகின்றோம்.

இனிய செல்வ, மூன்றாவது, கடுமையான ஒரு சிக்கல்; தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மை. வேலை வாய்ப்பை வழங்குவது என்பது இன்றுள்ள அவசர அவசியமான பணி! ஆயினும் நெடிய நோக்குடன் இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும். அதாவது, உற்பத்தியோடு தொடர்பில்லாத பணியிடங்களைத் தோற்றுவித்து வேலை வாய்ப்பை வழங்கினால் மேலும் நிதி நெருக்கடி ஏற்படும். கடந்த பத்து ஆண்டுகளில் ஏராளமான பேர் வேலை பெற்றுள்ளனர். ஆனால், உண்மையில் வேலை இல்லை. உதாரணமாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரண்டு காவல் ஆய்வர். இரண்டு காவல் நிலையத்திற்கு ஒர் உயர் ஆய்வர். இது அவசியமில்லாத செலவு மட்டும் அல்ல, பயனற்றதும் கூட! ஆதலால், உற்பத்தியோடு தொடர்புடைய தொழில்களைத் தொடங்குவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இனிய செல்வ, இந்தச் செய்திகள் மாண்புமிகு கலைஞருக்குத் தெரிந்தவையே! அவர் ஓர் எரிகின்ற விளக்கு! ஆனால் நமக்கும் ஒரு வேலை வேண்டாமா? அவர் தூண்டா விளக்கானாலும் நமக்கு வாய்த்துள்ள தூண்டும் பழக்கத்தின் வழி இந்தப் பரிந்துரைகள்! இன்ப அன்பு

அடிகளார்

31. எல்லைக்கண் நின்றார் துறவார்

இனிய செல்வ,

தமிழ் நாட்டில் புதிய அரசு, கலைஞர் தலைமையில் அமைந்திருக்கிறது. கலைஞர் அவர்கள் நம்மை அரசியல் அரங்கத்திற்குத் தாமே நினைந்து வலிய அழைத்தவர்! ஆம்! தமிழக மேலவைக்கு அழைத்தார்; பல்வேறு பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். கலைஞர் அவர்களுடைய அரசு அளித்த உதவியினால்தான் தெய்விகப் பேரவை மிகவும் சிறப்பாக இயங்கியது. அதனுடைய இயக்க நடைமுறை தடைப்படாமல் இருந்திருந்தால் இந்த நூற்றாண்டில் அது ஒரு பன்முக இயக்கமாக வளர்ந்து அரிய பணிகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். வழிவழியாகத் தமிழினத்திற்கு கேடுசெய்யும் அயலினத்தின் சூழ்ச்சியாலும் நம்மவரின் துரோகத்தாலும் நெருக்கடிகால அரசு பேரவை இயக்கத்தை முடக்கியது.

இனிய செல்வ, திருநாளைப் போவார் திருவவதாரம் செய்த சிற்றூராகிய, மேலாதனுார் மேம்பாட்டுப்பணியும் கலைஞர் ஆட்சியில் தான் தொடங்கியது. இடையில் அந்தப் பணியிலும் தொய்வு. நடக்கவில்லை! இந்த பணியும் சிறப்பாக நடைபெற வேண்டும். கலைஞர் ஆட்சியில் தொடங்கப் பெற்றவை கலைஞர் ஆட்சியிலேயே நிறைவு பெற வேண்டும் என்ற நியதி இருக்கிறது போலும். நாம் என்ன செய்ய இயலும்?

இனிய செல்வ, நெருக்கடி கால அரசு நம்முடைய வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியது. அதனால் பொது வாழ்விலிருந்தும் மெள்ள மெள்ள ஒதுங்கிக் கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டோம். அறிவியல் தமிழ் வளர்ச்சிப்பணியிலும் ஈடுபட்டோம். கலைஞர் அறிமுகப்படுத்திய பணியிலிருந்து விலக வில்லை. ஆயினும் தமிழ் நாட்டில் கலைஞரோடு திருமண மேடைகளைத் தவிர வேறு மேடைகளில் கலந்து கொள்ளவில்லை. அந்த வாய்ப்பை ஒரு தடவை கலைஞரின் ஆர்வலர்கள் வழங்கினார்கள். அதாவது கலைஞரின் சட்டசபைப் பணி வெள்ளிவிழாக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள்! இசைவும் தந்திருந்தோம்! அந்த நேரம் தென்குமரியில் மண்டைக் காட்டில் பற்றி எரிந்த சமய சமுதாயக் கலவரச் சமாதானப் பணியில் ஈடுபட்டிருந்த காலம்! அந்தப் பணிகளின் சுமையாலும் எதிர்பாராமல் ஏற்பட்ட பெரிய இடத்து விபத்துக்களாலும் கலந்து கொள்ள இயலாமற் போய்விட்டது. அதனைக் கலைஞருடைய ஆர்வலர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர்; சொன்னார்கள். அதாவது அன்றைய முதல்வர் தடுத்து விட்டார் என்றும், அவருடைய நட்பைக் கருதி வரவில்லை என்றும் கூறினார்கள்! இது உண்மையல்ல. உண்மையிலேயே பணிச்சுமைதான் காரணம்! ஆயினும் மரபுப்படி நமது வாழ்த்துக்களையும் பரிசினை அனுப்பிவைத்திருந்தோம்! அது பற்றி கலைஞர் என்ன நினைத்தார்! அது நமக்குத் தெரியாது! இந்த இடைக்காலத்தில் கலைஞர் தொடர்புக்காக மேவிச்செல்லாத நிலை உண்டு! ஆனால் வேண்டாம் என்று எண்ணியதில்லை; விலகியதில்லை! ஆட்சியாளர்களுக்காக நாம் கலைஞரைப் பிரிந்ததும் இல்லை; பிரியப் போவதும் இல்லை! ஆண்டு தவறாமல் கலைஞர் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை அனுப்பிவைத்துள்ளோம். நமது இதழில் கலைஞர் அவர்கள் படத்தை அட்டைப் படமாகப் போட்டுப் பாராட்டி எழுதியிருக்கிறோம்.

இனிய செல்வ, திராவிட முன்னேற்றக் கழகம் படித்த புத்திசாலித்தனம் நிறைந்தவர்களைக் கொண்ட உயிர்த்துடிப்புள்ள இயக்கம். எல்லாவற்றையும் விட அந்த இயக்கத்தினிடத்தில் நிலவும் நட்புணர்வு வியக்கத்தக்கது; மகிழத் தக்கது. மதுரையில் உலகத் தமிழ்மாநாடு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த காலம். திருப்புத்தூரில் திருமுருகன் பேரவையில் நமது பேச்சு! நமக்கு ஒரு பழக்கம், எந்த மேடை, எந்த அமைப்பாக இருந்தாலும் சமுதாய நலந்தழுவியதாகவே பேசுவது. அந்த உலகத் தமிழ் மாநாட்டில் கலைஞர் கலந்து கொள்ளாதது பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்த நேரம்! நமது திருப்புத்தூர்ப் பேச்சில் தமிழினத்தின் ஒருமையின்மையைப் பற்றி, .

"குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்"

என்ற திருக்குறளை அடிப்படையாக வைத்துப் பேசினோம். அப்போது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடக்கிறது. நமது மொழிமாநாடு இதில் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்று கூறிவிட்டு, இதுபோன்ற மாநாடுகளில் கூட "நம்மை அழைக்க வேண்டும்" என்று பெருமை பாராட்டக்கூடாது என்று பேசினோம். நமது எடுத்துக்காட்டு பொதுவானது தான்! ஆயினும் கூட்டத்திற்கு வந்திருந்த புதுப்பட்டி தி.மு.க. ஆர்வலர் ஒருவர் இந்தப் பேச்சின் சுருக்கத்தை, கலைஞருக்கு அனுப்பிவைத்து அந்தக் கருத்தை கலைஞரைத் தாக்கிப் பேசியதாக முடிவெடுத்தும் எழுதி விட்டார். கலைஞர் அவர்கள் அந்தக் கடிதத்தை நமக்கே அனுப்பிவைத்தார்கள்! கலைஞர் அவர்களுக்கு விளக்கம் எழுதினோம்! இனிய செல்வ, இவ்வளவு முன்னுரை எதற்காக? என்று கேட்கிறாயா? இதோ முடிவுரை!

கலைஞர் அரசு, அமைந்தது! கலைஞரின் தமிழ்நாடு அரசு, அறநிலையத்துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு அழைத்தது! நாமும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து நீண்ட நேரம் சிந்திக்க நேரிட்டது. வேறு காரணம் அல்ல. பணிப் பொறுப்புக்களை மேலும் ஏற்கத் தயக்கம்! ஆயினும் அருள் தந்தை பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளும் வற்புறுத்தினார்கள்! ஒருவழியாக இசைவு! கூட்டத்தில் கலந்து கொள்ளும் முடிவு! அன்றைய கூட்டத்தில் முனை முறியாத அரிசியைப் போல மணம் நிறைந்ததாக கலைஞர் அவர்களுடைய செயற்பாடு இருந்தது! நாம் எப்போது பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும் என்று கலைஞர் அவர்களிடமிருந்து வழிகாட்டுதல்கள் அடுத்து! கலைஞர் வழக்கம் போல விரைவில் முடிவெடுத்து விட்டார்; ஆலோசனைக் குழு அமைப்பது என்று! அந்த முடிவினை - அமைப்பின் பெயரை மட்டும் (உறுப்பினர்கள் பெயர் இல்லை) தமது முத்தான எழுத்தில் எழுதி அனுப்பினார்! நமது இசைவுக்குத் தடை ஏது? முதலமைச்சரின் முடிவு! தமிழினத்தலைவரின் முடிவு! அதற்கு நமது இசைவு கேட்கப் பெறுகிறது என்றால் அதற்குக் காரணம்தான் என்ன? வேறொன்றும் இல்லை! இதோ திருக்குறள் விடை கூறுகிறது. "எல்லைக்கண் நின்றார் துறவார் தொலை விடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு"

(806)

ஆலோசனைக் குழுவில் பொறுப்பையும் கொடுத்துள்ளார். நாம் பல ஆண்டுகள் எழுதியும் பேசியும் வந்த செய்திகளுக்கு ஒரு செயலுருவம் கொடுக்கக் கூடிய வாய்ப்பை வழங்கியுள்ளார். அன்று நாம் மகிழ்ந்து அனுபவித்தது கலைஞர் அவர்களின் தலைநாள் விருப்பம். இன்ப அன்பு

அடிகளார்

32. எல்லார்க்கும் எல்லாம்

இனிய செல்வ,

தமிழ்நாடு அரசின் நிதிநிலைத் திட்டத்தை, பாராட்டுதலுக்குரிய முதல்வர் கலைஞர் அளித்துள்ளார். பொதுவாக இன்றுள்ள சூழ்நிலையில் இதை விடச் சிற்ப்பாக நிதிநிலைத் திட்டம் தயாரிக்க இயலாது. ஆதலால், கலைஞர் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்!

கலைஞர் இயல்பாகவே மனிதநேயம் உடையவர். ஆதலால் நிதிநிலைத் திட்டத்தில் நலிந்தோருக்கு நலம் பயக்கும் திட்டங்கள் பல அறிவிக்கப் பெற்றுள்ளன. இந்த அம்சங்கள் மனநிறைவைத் தரத்தக்கன. ஆயினும்-இனிய செல்வ, ‘ஆயினும்’ என்ற சொல் உனக்கு அதிர்ச்சியைத் தருகிறதா? அதிர்ச்சி வேண்டாம்! நிதிநிலைத் திட்டத்தில் குறை காண்பது நமது குறிக்கோளன்று! ஒரு அரசு தயாரிக்கும் நிதிநிலைத் திட்டம் எப்படி அமையவேண்டும் என்று திருக்குறள் வழிகாட்டுகிறது? அந்த வழியில் மேலும் கலைஞர் அரசு நடைபோடவேண்டும் என்ற ஆர்வத்தால் சில பரிந்துரைகள்! ஆம், பரிந்துரைகளே! அதுவும் நமது பரிந்துரைகள் பரிந்துரைகள் அல்ல! திருவள்ளுவரின் பரிந்துரைகள்!

இனிய செல்வ! "வரவுக் கேற்ற செலவு” என்பது. இன்றைய அறிவுரை மட்டும் அல்ல. திருக்குறளும்,

"ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை

போகா றகலாக் கடை”

(478)

என்று பேசுகிறது! இந்தப் பொருள் நெறிமுறை இன்றைய சமூக வாழ்வில் நடைமுறைப் படுத்தக் கூடியதாக அமைந்துள்ளதா? இல்லையென்பதே நமது கருத்து. ஏன்? நாளும் விலைகள் உயருகின்றன. விலைகள் உயருகின்ற அளவுக்கு வருவாய் உயர்ந்து விடுவதில்லை. அப்படியே ஒரோ வழி அரசு அலுவலர்களுக்கு வருவாய் உயர்ந்தாலும் உடன் மீண்டும் விலை உயர்ந்துவிடும். விலை உயர்வும் ஊதிய உயர்வும் ஒரு நச்சுவட்டமாக நமது நாட்டில் சுழன்று வருகிறது. இதுபோக மேலும் ஒரு தீமை! எளிய வாழ்வுக்கு எதிரான நுகர்வுப் பொருள்கள் நாள்தோறும் சந்தையில் வந்து குவிகின்றன. நுகர்தலின் வளர்ச்சி-பொருளாதார வளர்ச்சி-சமூகத்தின் வளர்ச்சி என்பது ஒரு தத்துவம்! இது முற்றிலும் உண்மை! ஆயினும் வருவாய் வளர்ச்சி, தேவையின் பரிணாம அடிப்படையில் இன்றைய நுகர்வுப் பொருள்கள் படைப்பு நிகழவில்லை! இலாப நோக்கத்தில் படைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, நுகர்வுப்பொருள்களைப் பெற்றிருப்பதின் அடிப்படையில் இன்று சமூக மதிப்பீடுகள் வேறு நிகழ்கின்றன. அதனால் சமூக மதிப்பு என்ற பெயரில் இன்று நுகர்வுப் பொருள்கள் வாங்கப்படுகின்றன. இனிய செல்வ, சான்றாக சைக்கிளை எடுத்துகொள்? காலால் நடந்து செல்ல இயலாத-முடியாத தூரத்தைக் கடக்க சைக்கிள் தேவை. இன்று 100 அடி கூடச் செல்ல வேண்டாதவர்களும் மதிப்பு என்ற பெயரில் சைக்கிள் வைத்துள்ளனர்.

அடுத்து ஒன்று! நமது நாட்டில் காலம் களவு போகாமல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஏன், எந்த ஒரு நிகழ்ச்சியும் கடமையும் குறித்த காலத்தில் செய்யப்படுவதில்லை! நமது நாட்டில் காலம் தாழ்ந்து வருபவர்கள் பெரியவர்கள்! தலைவர்கள்! ஒரு சில பொது நிகழ்ச்சிகள் மணிக்கணக்கில் காலதாமதமாவதைக் கண்டிக்கிறாய் அல்லவா? இப்படியெல்லாம் காலம் கொலை செய்யப்பெறும் நமது நாட்டில் பலர் கடிகாரம் கட்டிக் கொள்கிறார்கள்! இன்று கடிகாரமும் ஓர் ‘அணி’ அழகுப் பொருள்; இல்லை, இல்லை! மதிப்பை உண்டாக்கும் ஒரு பொருள் என்றாகி விட்டது! இன்று நமது நாட்டில் நுகர்வுக்குரிய வருவாய்க்கும் (வாங்கும் சக்திக்கும்) நுகர்வுப் பொருள் படைப்புக்கும் உள்ள இடைவெளி மிகவும் கூடுதலானது.

தனிக் குடும்பநிலையே இப்படி என்றால் பல குடும்பங்களுக்குப் பொறுப்பேற்கக் கூடிய அரசின் சங்கடங்கள் மேலும் பலவாக இருக்கும் அல்லவா? எனவே, இதில் அரசு, தனது வருவாய்ப் பெருக்கத்திற்குரிய வாயில்களைக் கண்டறிய வேண்டும். மக்களிடம் வரி வாங்குவதன் மூலமே தன்னுடைய வருவாயை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. புதிய புதிய வருவாய் வாயில்களை அரசின் சார்பானதாகவே விளங்குமாறு கண்டறிந்து நடைமுறைப் படுத்தி, வருவாய் காணவேண்டும். அதாவது, அரசு தானே நடத்தக் கூடிய தொழிற்சாலைகள், பண்ணைகள் முதலியன நிறுவவேண்டும் (Public Sector), அங்ஙனம் அமைக்கப்பெறும் தொழிற்சாலைகள்-பண்ணைகள் மூலம் வரும் வருவாய்கள் மூலதனம் ஆகும் ஆற்றல் பெறும் வரை நிதியைத் தொகுக்க வேண்டும். தொகுத்த நிதியைக் காப்பாற்றவும் வேண்டும். இன்று அரசுக் கருவூலங்களில் நிதித் தொகுப்பு சேர்வதில்லை. முதலமைச்சர் பொறுப்பை கலைஞர் ஏற்றுக் கொண்ட பொழுது, "கஜானா காலி’ என்று சொன்னதை நினைவு கூர்க.

இனிய செல்வ, ஓரளவு அரசின் நிதி தொகுக்கப் பெற்ற நிலையில் அரசு, செலவுக்குரிய திட்டம் தயாரிக்க வேண்டும். இதனை ‘வகுத்தல்’ என்று கூறுகிறது, வள்ளுவம், இங்ஙனம் அரசு நிதியை வகுக்கும்பொழுது திட்டச் செலவுகள்-அதாவது மேலும் பொருள் வருவாயை அதிகரிப்பதற்குரியதாகவும், வேலை வாய்ப்புகள் அதிகம் தரக்கூடியதாகவும் உள்ள தொழிற்சாலைகள் அமைத்தல், பண்ணைகளை அமைத்தல், மனித வளத்தை மேம்படுத்தும் துறைக்கு அதிகமாக 60 விழுக்காட்டிற்குக் குறையாமல் ஒதுக்குதல் வேண்டும். ஒரு புதிய செலவை ஏற்கும்போது அதற்குள்ள நிதியைத் திரட்ட வேண்டும். சான்றாகச் சத்துணவில் கோழி முட்டை சேர்ப்பது என்று திட்டமிட்டால் மாவட்டத்திற்கு ஒரு நல்ல கோழிப் பண்ணை அமைக்கவேண்டும். இந்தக் கோழிப்பண்ணை, வியாபார ரீதியாகக் கோழி முட்டையைச் சத்துணவு மையங்களுக்கு விற்க வேண்டும். இலாபம் ஈட்ட வேண்டும். இதில் அரசுக்கு இலாபம், 200 பேருக்கு வேலைவாய்ப்பு, கோழி முட்டைகள் கிடைக்கும் உறுதிப்பாடு. தவறுகள் நடக்க வழியில்லை. கோழி முட்டைகளைச் சத்துணவு மையத்திற்கு வாங்கும் செலவு, கோழிப் பண்ணையின் இலாபமாக அமைய வேண்டும். இதுபோலச் செய்யலாம்.

இனிய செல்வ, நாளும் நிதி திரட்டும் புதுப்புது வாயில்கள் காணவேண்டும். நிதியைக் கணக்கிட்டுக் கச்சிதமாகத் தொகுக்க வேண்டும். தொகுத்த நிதியை மக்கள் மேம்பாட்டுக்கும் ஆட்சிக்கும் வகுத்துச் செலவழிக்க வேண்டும். இன்று உடனடியாக இல்லையானாலும் எதிர் காலத்திலாவது "எதுவும் இனாம் இல்லை" என்ற சமுதாயம் தோன்றி எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும்.

இன்ப அன்பு

அடிகளார்

33. ஊராட்சியும் பேராட்சியும்

இனிய செல்வ,

இன்று எங்கும் கிராம சுயராஜ்யம். கிராம பஞ்சாயத்துக்கு சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுகிறார்கள். இஃது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்ச்சி. அண்ணல் காந்தியடிகள் கிராம சுயராஜ்யம் என்றே கூறினார். ஆனால் 40 ஆண்டுகள் கழித்துத்தான் கிராம பஞ்சாயத்துக்களின் அடிப்படை அதிகாரங்களைப் பற்றியே பேசத் தொடங்கியிருக்கின்றோம். காலங் கடந்தாவது இந்த எண்ணம் வந்தது பாராட்டுதலுக் குரியது.

இனிய செல்வ, இன்றைய கிராம பஞ்சாயத்துக்கள் தெரு துப்புரவு செய்யும் தொழில் செய்து வருகின்றன. தெருவிளக்குகள் எரிக்கப்படுகின்றன. இன்றைய பஞ்சாயத்துக்கு இதைத்தவிர வேறு இல்லை. ரூ.100கூட தலைவர் எடுக்க இயலாது. ஆணையர் அனுமதி வேண்டும். போதிய நிதி ஆதாரம் இல்லை. பல பஞ்சாயத்துகளுக்கு மின்சாரக் கட்டணம் கட்டக் கூடக் காசு இல்லை. இன்றைய பஞ்சாயத்துக்களின் நிலை பரிதாபமானதுதான்!

கிராம பஞ்சாயத்துக்கள் குடியரசுத் தத்துவப்படி நாட்டின் ஒருபகுதி கிராம வளர்ச்சிக்குத் திட்டமிடவும், திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றவும், கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி ஆதாரங்கள் வேண்டும்; மேலாண்மையும் பொறுப்பும் இருக்க வேண்டும். ஒரு சுதந்திர சோசலிசக் குடியரசை விரும்புகின்றவர்கள் இதை நிச்சயம் ஏற்பார்கள். நமது நாட்டிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. கிராம பஞ்சாயத்துகளுக்கு உரிமையும் மேலாண்மையும் வழங்கப்படுவதை யாரும் மறுக்கவில்லை. இஃது ஒரு வரவேற்கத்தக்க அம்சம். இனிய செல்வ, ஆனால் பஞ்சாயத்துகளுக்கு அதிக உரிமைகளும் மேலாண்மைகளும் யார் வழங்குவது? மைய அரசு வழங்குவதா? மாநில

தி.23. அரசுகள் வழங்குவதா? என்ற விவாதம் கிளம்பியிருக்கிறது. நம்மைப் பொருத்த வரையில் இதை வரவேற்கின்றோம்.

இனிய செல்வ, ஏற்கனவே நமது நாட்டில் மைய மாநில அரசுகளுக்கு இடையே மோதல்கள் இருந்து வருகின்றன. மைய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. இது தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அறிக்கை வேறு முடிவு செய்யப்பெறாமல் தேங்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மைய அரசு பஞ்சாயத்துத் திருத்தச் சட்டத்தைப் பற்றிப் பேசினால் ஐயம் தோன்றாமலிருப்பதற்கு வழியில்லை.

இனிய செல்வ,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந்து ஆற்றாக் கடை"

என்றார் திருவள்ளுவர். ஆதலால், கிராம பஞ்சாயத்தைப் பொறுத்தவரையில் நடுவணரசினுடைய எண்ணம் சரியானது. அதுமட்டுமல்ல செய்யவேண்டிய காலகட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் அரசைச் சார்ந்தே வாழும் மனநிலையைப் பெற்று வருகின்றனர். என்றைக்கு நாட்டு மக்கள் அரசுக்கு உடமையாகி, அரசுக்கு அரணாகவும் துணையாகவும் இருப்பார்களோ, அன்றைக்கே சுதந்திரத்துக்குப் பாதுகாப்பு, உண்மையான குடியரசு நாடாகவும் விளங்கும். ஆனால், இதை எப்படிச் செய்வது என்பதில்தான் கருத்து வேற்றுமை, முதலில் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்கள், ஊராட்சி அமைச்சர்கள் ஆகியவர்கள் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியங்கள் தலைவர்களையும் இந்தப் பிரச்சினையில் அக்கறையுடையவர்களையும் கொண்டுவிவாதித்திருக்க வேண்டும். ஊராட்சி மன்றங்களை நெறிப்படுத்த-வளர்க்க மாநில அரசுகளுக்கு மைய அரசு வழிகாட்டுதல் தந்து மாநிலச் சட்டசபைகளிலேயே சட்டம் இயற்றும்படி செய்யலாம். இதுவே போதுமானது. இதற்கு எந்த மாநில அரசாவது மறுத்தால் மைய அரசு பாராளு மன்றத்தில் சட்டமியற்ற முயற்சி செய்யலாம். இப்பொழுது மைய அரசு எடுத்துக் கொண்டிருக்கிற அணுகுமுறை ஏற்கெனவே மைய மாநில அரசுகளுக்கு இருக்கிற இடை வெளியை அதிகப்படுத்த வாய்ப்பளித்திருக்கிறது. ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்போது மைய அரசு தனது அணுகு முறையின் காரணமாகத் தவறுகள் நேரும்படி அனுமதித்து விடக் கூடாது. ஆதலால், உடனடியாக மைய அரசு, ஊராட்சி மன்றங்களைப் பொறுத்தவரையில் கட்டாயத் தேர்தல், திட்டமிடும் அதிகாரம் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நிதியியல் பொறுப்பு ஆகியவற்றிற்கு உரிமையும் ஒப்புறுதியும் தருகிற ஒரு சட்ட முன்வரவைத் தந்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுக்குத் தந்து அந்தந்த மாநிலங்களில் சட்டம் இயற்றும்படி செய்யலாம். இதுவே சரியான அணுகுமுறை.

நல்ல காரியங்களை எண்ணினால் மட்டும் போதாது. செய்தால் மட்டும் போதாது. அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் ஐயம் கொள்ளாத வகையில் அவர்களுடைய நம்பிக்கையையும் பெறத்தக்கவகையில் செய்வதுதான் முறையான அரசியலுக்குரிய பண்பு. ஆதலால்,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை"

என்ற திருக்குறள் நெறியைத் தேறி, அந்நெறியில் செயற்பட வேண்டும் என்பது இந்திய ஒருமைப்பாட்டை விரும்புகிற அனைவருடைய விருப்பம். இன்ப அன்பு

அடிகளார்

34. எழுத்துச் சீர்திருத்தம்

இனிய செல்வ!

திருக்குறள் ஒரு அற்புதமான நூல்! வாழ்வியலின் துறைதோறும் விளக்கும் பெருநூல்! இதனால் மட்டும் ஒரு நூல் சிறப்புடையதாகாது. எதிர்வரும் காலத்திற்குவளர்ச்சிக்கு வாயில் வைத்து பயிற்றும் நூலே சிறந்த நூல்! மானுடத்தின் சென்ற கால வரலாறு இனி கிடைக்கத்தக்கதில்லை. சென்றவை சென்றவைதான்! நிகழ்காலம் என்பது நீரில் குமிழி போன்றது; விரைந்து செல்வது. காலதேவன் இறக்கை கட்டிக்கொண்டு பரப்பவன்! ஆதலால் எதிர்காலம் என்பது நிச்சயம்!

இனிய செல்வ! நீ கேட்பது உண்மைதான். நம்முடைய எதிர்காலம் உறுதிப்படுத்தப் பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால், மானுடம் வாழ்தல் என்பது ஒரு தொடர் வரலாறு. ஆதலால், பெரிதும் மானுட இனத்திற்கு எதிர்காலம் உண்டு. அந்த எதிர்கால மானுடத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலம் உண்டு. அந்த எதிர்காலத்தைச் சீராக அமைப்பதற்குரியவாறு நிகழ்காலம் அமைய வேண்டும். எதிர்காலச் சமுதாயம் அறிவுடையதாக வாழ்தல் வேண்டும். அதற்கு இன்று வாழும் சமுதாயம் அடிப்படைகளை அமைத்தாக வேண்டும்.

இனிய செல்வ! அறிவு என்பது வளரும் தன்மையது; மாறும் தன்மையது. இது மொழியியல் வரலாறு; மொழியின் தன்மை! மானுடத்திற்கு வாய்த்த கருவிகளுள் சிறந்தது மொழியேயாம்! நம்முடைய தாய்மொழி, தமிழ், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகக் காலம் தோறும் புதுமை நலன்கள் பெற்று வளர்ந்து வந்துள்ள மொழி! அதுபோல நம்முடைய மொழியின் வரிவடிவங்களும்-எழுத்துகளும் மாறி மாறி வளர்ந்து வந்துள்ளன.

இனிய செல்வ! இந்த யுகம் அறிவியல் யுகம், காலம், ஆற்றல் ஆகியவற்றைச் சிக்கனப்படுத்தும் யுகம். ஆதலால், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று கூறுகிறார்கள். அதே போழ்து தமிழ் எழுத்துக்களை மேலும் சீர்திருத்தினால் தமிழ் மொழி கெடும் என்று சிலர் கூறுகின்றனர். இன்றைய தமிழகம் பரவலாக விவாதிக்க வேண்டிய பொருள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம். பல்கலைக் கழகங்கள் தோறும் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய பொருள் இது. எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அண்மைக்காலமாக, பெரியார் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து ஒரு அறிஞர் குழு தொடர்ந்து கலந்துரையாடல்களையும் விவாதங்களையும் நடத்தி வருகிறது. அதே போழ்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றது என்பது ஒர் அணியின் கருத்து.

இனிய செல்வ! இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆராய்ந்தும் மக்கள் கருத்தறிந்தும் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்ய ஒரு ஆய்வுக்குழுவை அமைத்திருக்கலாம். அந்த ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை அரசு மேலும் ஆராய்ந்து முடிவெடுப்பதே முறையான செயல்! இதனால் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஒரு பரவலான விவாதம் நடந்திருக்கும். இருவேறு கருத்துகளைச் சீர்தூக்கி ஆய்வு செய்யவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுமா? வேண்டாவா என்ற வினாவிற்கு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் விடை காண இயலாது; அறிவார்ந்த ஆய்வின் அடிப்படையில் முடிவு காணல் வேண்டும். இப்பொழுதும் ஒன்றும் காலம் நழுவி விடவில்லை; தமிழ்நாடு அரசு ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டுமென்பது நமது வேண்டுகோள். அங்ஙணம் இன்றி ஒருதலைப் பட்சமாகத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் இல்லை என்று அறிவிப்பது நன்மரபாகாது. நேற்றைய அறிவு சிறந்ததுதான். ஆனால் இன்றைய அறிவுக்கு, நேற்றைய அறிவு ஈடுகொடுக்குமா என்பதையும் ஆய்வு செய்தல் வேண்டும். இனிய செல்வ! தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஓர் ஆய்வுக்குழுவை அமைத்து முன்வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

"அறிதோறு அறியாமை கண்டற்றால்”

என்னும் திருக்குறள் அடி நினையத்தக்கது. இன்ப அன்பு

அடிகளார்

35. பதவிக்கு அழகு பகைத்திறம் அறிதல்

இனிய செல்வ,

மானுட வாழ்க்கைக்குப் பகை ஆகாது. அதனாலன்றோ, நமது திருக்குறள் "பகையென்னும் பண்பிலதனை" என்று கூறுகிறது. கம்பனும் "யாரோடும் பகை கொள்ளலன்" என்றான். இராமனுக்குக் கூட இராவணன் மீது பகை இல்லை. பகை இருந்திருந்தால் மூர்க்கத்தனமான போரே நடந்திருக்கும். தூது அனுப்பியிருக்கமாட்டான். “இன்று போய் நாளை வா" என்று சொல்லும் நிலை தோன்றியிருக்கிறது. பகை தீது, பகை கொடிது. ஆனால், பகையைக் கண்டு வாளா அஞ்சினால் பகை மாளாது. ஏன் பகை கூடாது என்பதனைக் காரண காரியத்துடன் ஆராய்ந்து அறிந்து பகையை விளக்கினாலேயே உண்மையாக-முற்றாகப் பகைமை அகலும். தமக்குத் துன்பம் வருமே என்ற அச்சத்தின் காரணமாக மட்டும் பகையை வெறுத்தல் கூடாது. மானுடத்தின் அகநிலை வாழ்க்கையும் சரி, புறநிலை வாழ்க்கையும் சரி பாதிக்கும்.

இனிய செல்வ, ஈழத்துத் தமிழர் சிக்கல்கள், நமது நாட்டைப் பொருத்தவரையில்,

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்"

என்றாயிற்று. ஆனால், இன்றைய இந்திய தமிழக-இலங்கைச் சமூக இயலில் தவிர்க்க இயலாதது என்பதையும் நினைவிற்கொள்க. தவிர்க்க இயலாத-முடியாத தீமை நம்பாலதாயிற்று. நாமும் விடுதலைப் புலிகளைத் தேர்ந்து தெளிந்து ஏற்றுக் கொள்ளவில்லை; ஆதரிக்கவில்லை. அவர்களுடைய விருப்பம் என்ன? வேனவா என்ன? என்று தெரியாமலேயே தற்செயலாக அல்லது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சரியான செயல் திட்டத்துடன் உறவுகள் கால் கொள்ளவில்லை; இலங்கையில் சிங்கள ராணுவத்தின் பிடியில் சிக்கித் தவித்த விடுதலைப் புலிகள் இந்தியாவை, சர்வதேச விதிமுறைகளை மீறிச் சரணடைந்தனர். தமிழ் நாட்டு மக்கள் இனவழிப் பரிவு காட்டினர். ஆதலால் தன்னிச்சையாக நடந்தது போலாகி விட்டது.

இனிய செல்வ, தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்த பல்குழு மனப்பான்மை, ஈழத்துத் தமிழர் சிக்கல் ஒருதலையாகக் கேட்க - ஆய்வு செய்ய இயலாமல் தடுத்துவிட்டது. ஈழத்துத் தமிழர்கள் இருவேறு-பல்வேறு குழுக்களாகவே இந்தியத் தமிழ்நாட்டில் புகுந்தனர்; நடமாடினர்; அரசியல் ஆதாயம் தேடினர். இந்த அணிகளில் விடுதலைப்புலிகள், தமிழ்நாட்டின் அன்றைய ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்று விட்டதால், நடுவணரசின் ஆதரவையும் பெற்றது. திரு.சபாரத்தினம் தலைமையில் இயங்கிய எடலோ இயக்கம் அன்றைய எதிர்கட்சியின் திமுகவின் ஆதரவையும் பெற்றிருந்தது. அதனால் நடுவணரசு செவிசாய்க்கவில்லை. திடீரென ஒரு நாளில் விடுதலைப் புலிகளால் சபாரத்தினமும் அவரைச் சார்ந்தவர்கள் 300 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையால் நமது முதல்வர் கலைஞர் ஆற்றொனாத் துயரம் எய்தினார் இனிய செல்வ, இந்த வரலாற்றுப் போக்கில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் காலத்தின் கட்டாயமாக ஏற்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் சரியா? தவறா? என்று ஆராய்ந்து அறிய யாதொரு கட்சியும் முன்வரவில்லை. ஆனாலும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஈழத்துத் தமிழர்களின் அனைத்து அமைப்புகளும் வரவேற்றன. விடுதலைப் புலிகளும் கூடத் தொடக்கத்தில் தயக்கத்துடன் வரவேற்றனர். ஆனால், அது நடிப்பே என்று பின் தெரிய வந்தது. ஆயுதங்களை ஒப்படைப்பதுபோல ஒத்திகை நடத்தினார்கள். ஆனால், காலப் போக்கில் அவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரிக்காதது மட்டுமன்றி, இந்தியாவுக்கு எதிராக நினைக்கவும் தொடங்கிவிட்டனர். அவ்வண்ணமே பேசினர்; ஏன், இந்திய அமைதிப்படையை எதிர்த்துப் போராடினர்; ஏன் இந்த நிலை?

இன்று விடுதலைப் புலிகளும், இலங்கைக் குடியரசு தலைவரும் இந்திய அமைதிப்படையைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். இனிய செல்வ; நமக்கு ஏன் இந்த அவலம்? விடுதலைப்புலிகள், இலங்கை அரசுக்கும் சிங்கள தீவிர வாதிகளுக்கும் அஞ்சி இந்தியாவுக்கு வந்தனர். இவர்களுக்கு இலங்கை ஒருமைப்பாட்டிலும் அக்கறையில்லை, இந்திய அரசின் கொள்கையாகிய நடுநிலைக் கொள்கையிலும் நம்பிக்கையில்லை இலங்கை அரசும் இலங்கையின் ஒருமைப்பாட்டில் அதிக ஆர்வம் காட்டாமல் விடுதலைப் புலிகளைச் சமாளிப்பது எப்படி என்ற கவலையுடனேயே இந்திய அரசை அணுகியது. இலங்கை அரசுக்கு, இலங்கையின் இனப்பகையில்லாத ஆட்சிக் கொள்கையில் நம்பிக்கையில்லை. பெரும்பான்மை இனவழிச் செல்லும் இயல்பு இன்றைய இலங்கைக் குடியரசுத் தலைவரின் கொள்கையாக இருக்கிறது. இந்தியா-இலங்கை நட்பிலும் இன்றைய இலங்கை குடியரசுத் தலைவர் பிரேமதாசாவுக்கு நம்பிக்கையில்லை. இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் ஆராய்ந்தால் ஈழத்துத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. ஆனால், இங்ஙணம் கருதுவது தவறு. இந்தியா தலையிடாது போனால், இந்தியாவின்மீது விரோதம் கொண்டுள்ள நாடுகள் தலையிடும். அது இந்தியாவுக்கு நல்லதன்று.

இனிய செல்வ! இன்று என்ன நிலை? இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், ஈழத் தமிழ் மாநிலம் கிடைத்தது. தேர்தல் மூலம் அமைந்த மாநில ஆட்சி நடக்கிறது; ஆனாலும் ஒப்பந்தப்படி அதிகாரப் பகிர்வு முற்றாக நடக்கவில்லை; "மாநில ஆட்சி" என்ற அமைப்பு தோன்றியிருக்கிறது. இதற்கிடையில் இந்திய வெறுப்பில் வளர்ந்த இலங்கைக் குடியரசுத் தலைவர் பிரேமதாசா இப்போது புதிய அரசியல் வியூகம் வகுக்கிறார். விடுதலைப் புலிகளுடன் சமாதானம் பேசத் தொடங்கியுள்ளார். இந்திய நாட்டை நம்பிய விடுதலைப்புலிகள், பிரேமதாசாவின் பிரதி நிதிகளாக இந்திய அமைதிப்படையை வெளியேறச் சொல்கிறார்கள்; பிரேமதாசாவுடன் கூடிக் குலாவுகிறார்கள். இந்தியப்படை இலங்கையில் இருந்து என்ன ஆகப் போகிறது? திரும்ப அழைப்பதில் தவறு இல்லை. ஆனால், எப்போது திரும்ப அழைப்பது என்பதே கேள்வி!

விடுதலைப்புலிகள் தமிழ் ஈழம் கேட்டல்லவா போராடினர். அந்தத் தமிழ் ஈழத்தை, இலங்கைக் குடியரசுத் தலைவர் ஒத்துக் கொண்டு அறிவித்து விட்டாரா? அந்தத் தமிழ் ஈழத்தில் தேர்தல் நடந்து, தலைவர் பிரபாகரன் தமிழ் ஈழத்தின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்று விட்டாரா? இந்தச் சூழ்நிலை உருவானால்தானே இந்தியப்படை வெளியேற இயலும்! தமிழர்களிடத்தில் ஒற்றுமை வந்து விட்டதா? விடுதலைப்புலிகளால் மற்ற இயக்கத்தினருக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதம் கிடைத்து விட்டதா? தமிழ் ஈழம் கேட்கும் தமிழர்களிடையில் இனவழி ஒற்றுமை இல்லை. சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் பகை இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களுக்குள்ளேதான் பகை மிகுதி. இந்தப் பகை நிலைமாறி ஒன்றுபட்டு விட்டார்களா? விடுதலைப் புலிகளின் எந்தெந்த லட்சியங்கள் நிறைவேற்றப் பட்டுவிட்டன. இந்திய அமைதிப்படை வெளியேற? இந்திய அரசு ஒரு தவறு செய்துவிட்டது. திருக்குறள் நெறி நிற்காத தவறுதான் அது.

"செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.”

(869)

நீதியை அறிந்து அவ்வழி அஞ்சாது பகைமைக்காக மட்டுமே அஞ்சும் பகைவரைப் பெற்றால் அவர்களைச் செறுத்து ஒறுத்தால் என்றும் இன்பங்கள் நீங்கா.

ஆம்! சிங்களப் பகைவர்களைக் கண்டு அஞ்சி, நமக்கு நட்பும் உறவும் போல வந்த விடுதலைப் புலிகளை ஏற்றது தவறு. விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி நமது நட்பும் உதவியும் நாடிவந்த இலங்கை அரசை நம்பியது தவறு. இவை இரண்டுமே செறுத்து ஒறுத்து ஒதுக்கத்தக்கவை. இனிய செல்வ! மேலும் விளக்கம் எழுத விரும்பவில்லை! உய்த்து உணர்க! இன்ப அன்பு

அடிகளார்

36. எனைத்தானும் நல்லவை கேட்க!

இனிய செல்வ,

மானுட சாதி சுவைத்து மகிழும் சுவைகள் பலப்பல. இலக்கியத் துறையில் ஒன்பது சுவை. உணவுத் துறையில் அறுசுவை. இனிய செல்வ, அறுசுவையைப் பற்றி உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லையல்லவா? ஆம்! அறு சுவையறியாதார் யார் உளர்? ஆனால் இலக்கியத் துறையைச் சேர்ந்த ஒன்பது சுவையை அறிந்தவர்கள் மிகமிகச் சிலரே. அவருள்ளும் இந்தச் சுவைகளை அனுபவித்தவர்களை - அனுபவிக்கின்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இன்று நமது நாட்டில், கேட்கும் பொறிகளாகிய செவிகளுக்கு, நிறைய வேலை கிடைக்கின்றன.

வலியக் கூடக் கொண்டு வந்து தருகிறார்கள்! கேட்க வேண்டாதவைகளைக் காலங்கெட்ட காலத்திலும் கூடத் தர முயற்சி செய்கிறார்கள். இதனால் எங்கே நமது காது கேட்க வேண்டிய நேரத்தில் கேட்க வேண்டியதைக் கேட்க இயலாத நிலை உருவாகி விடுமோ என்ற அச்சமும் தோன்றுகிறது.

இன்று மேடைகள் வளர்ந்து வருவது உண்மை. நூற்றுக்கணக்கான பேச்சாளர்கள் தோன்றியிருப்பதும் உண்மை. ஆனால் எத்தகைய செய்திகள் மேடைகளில் பேசப்படுகின்றன? இலக்கியம் பேசப்படுகிறதா? இல்லை! இலக்கியத்தின் பெயரால் துக்கடாச் செய்திகளே பேசப்படுகின்றன. அந்தத் துக்கடாச் செய்திகளும் கூடத் தரம் குறைந்தவையே. ஊரெலாம் அரசியற் கட்சிக் கொடிகள்! நாளும் அரசியல் மேடைகள்! ஆனால், எந்த மேடையிலாவது அரசியல் பேசப்படுகிறதா? எங்கே? இனிய செல்வ, உண்மையைச் சொல் பார்க்கலாம்! எங்குப் பார்த்தாலும் எரிந்த கட்சி-எரியாத கட்சி பற்றியே பேச்சு! மதசம்பந்தமான மேடைகளிலோ அமைதியும் இல்லை; சாந்தமும் இல்லை. நேர்மாறாக வெறுப்பு-விருப்புகளையே பேசுகின்றனர்! மதப்பிரசாரகர்கள், மதம்பிடித்துப் போய் அலைகின்றனர்! இதில் எந்த மேடையில் மானுடத்தின் ஆக்கத்திற்குரிய செய்திகள் கிடைக்கப் போகின்றன? ஐயகோ, பாபம் பரிதாபநிலை!

செவிச் சுவை! ஆம், செவிச்சுவைமிக்க இலக்கியச் சிந்தனைகளே வாழ்வளிக்கும்! அன்புச்சுவை நிறைந்த செய்திகள்! ஆழ்ந்த அறிவியல் சார்ந்த சிந்தனைகள்! பெருமிதம் தரும் செய்திகள்! நாளும் உயிர் ஓம்பி வளர்க்கும் உயர் சிந்தனைகள்! இவைகளைப் பரப்புகிறவர்கள் தரம் உயர் சிந்தனையாளர்கள்! அறிஞர்கள்! உயிர் குலத்தின் செவிகளுக்குச் சுவையாகவும் வாழ்வளிப்பனவாகவும் பேசப் படும் பேச்சே, பேச்சு!

இனிய செல்வ! பலர் சென்ற காலத்தின் புகழினைப் பற்றியே பேசுவர். இதனால் விளையும் பயன் என்ன? சென்ற கால நிகழ்வுகளின் விவரங்கள் இன்றைய சமூகத்திற்குத் தேவையில்லை. சென்றகால சமுதாயத்தின் தவறுகளுக்குத் தீர்வுகள் தேவை. முடிவுகள் தேவை. அங்கிருந்து இன்றைய வாழ்வு தொடங்கப்படுகிறது; எதிர்காலத்திற்குரிய முயற்சி கால் கொள்ளப்படுகிறது; எனவே, எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை தேவை. இத்தகைய பேச்சு தேவை. செவிக்குச் சுவை, கேட்கத் தூண்டுகிற அளவுக்குச் சிறிது தேவை. ஆனால், மிகுதியும் தேவை உயிர் செழித்து வளரக் கூடிய செய்திகள்! இத்தகைய பேச்சு, ஒரோவழி கசப்பாக இருந்தாலும் விளைவு வாழ்க்கையில் இன்பச் சுவையேயாம். பயனிலாதன சுவையுடையன அல்ல. இன்றைய மேடைகள் பல நோய்களைப் பரப்புகின்றன. மேடைப் பேச்சாளர்கள் பலர் நோய் பரப்பும் கிருமிகளாகவே உள்ளனர். சந்துகளிலும், திண்ணைகளிலும் தேநீர் கடைகளிலும் உந்து வண்டிகளிலும் சாலை ஓரங்களிலும் இன்று எங்கும் பேச்சு! என்ன பேச்சு? நோயைப் பரப்பும் பேச்சுக்களேயாம். சமுதாயப் பகைமையை வளர்க்கும் நச்சுப் பேச்சுக்கள்! இன்று நஞ்சு பாம்பிடத்தில் இல்லை. மனிதனின் பற்களில்தான் இருக்கிறது.

இனிய செல்வ, சமுதாய மாற்றங்கள் ஏற்படச் செவிச்சுவை தேர்ந்து கேட்க வேண்டும். 'எனைத்தானும் நல்லவை’ கேட்க, வேண்டும். வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கக்கூடிய புதியவற்றைக் கற்க வாய்ப்பில்லை. கற்றார் வாய் கேட்கக் காமுறுதல் வேண்டும். பழகும் வட்டத்தை விரிவாக்கிக் கொள்ள வேண்டும், தரத்தை உயர்த்திக் கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் செவிக்குச் சுவையான செய்திகள்; உணர்வுகளுக்கு இனிய செய்திகள், உயிர்க்கு இனிய செய்திகள்; அறிவார்ந்த செய்திகள் கிடைக்கும்! நமது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்! வளர்ச்சியும் கை கூடும்! இனிய செல்வ, எல்லா உணவும் உணவல்ல! எல்லாப் பேச்சும் பேச்சல்ல! இனிய செல்வ, நச்சுணவை விரும்பாததுபோல, நச்சுச் செய்திகளையும் கருத்துக்களையும் கேட்காதே! அறிவியல் அறிஞர்களை நாடித் தேடுக! அவர்கள் கூறுவதையே கேட்க! அடுத்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு

அடிகளார்

37. ஜனநாயகமும் கருத்துப் பரிமாற்றமும்

இனிய செல்வ,

நமது நாடு மக்களாட்சி முறையில் இயங்குகிறது. அதாவது ஜனநாயக முறையில் இயங்குகிறது. மானுடம் கண்ட சிறந்த அரசியல்-சமூக வாழ்வியலிலேயே மிகவும் சிறந்தது ஜனநாயக அரசியல் முறையேயாம். ஜனநாயக ஆட்சி முறையில்-மக்களாட்சி முறையில் எந்த ஓர் இடத்திலும் அதிகாரம், மையம் கொள்ளாது. ஒரோ வழி மையங் கொண்டாலும் பலரைத் தழுவிய நிலையிலேயே மையங் கொள்ளும். இனிய செல்வ, உன்னுடைய கேள்வி சரியானதே! நமது நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சி, ஆனால், நாம் ஜனநாயகத்திற்கு, ஜனநாயக வாழ்க்கை முறைக்கு இன்னமும் பக்குவமாகவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஜனநாயக வாழ்க்கை முறைக்குப் பகைமை, காழ்ப்பு ஆகா. அதுபோலவே வெறுப்பும் காட்டாது பகைமையும், கசப்பும் காழ்ப்பும் கடந்ததே ஜனநாயக வாழ்க்கை. ஏன்? ஜனநாயக வாழ்க்கை முறையில் விவாதங்கள் இருக்கும். தூற்றுதல் இருக்காது. ஜனநாயக வாழ்க்கை முறையில் விவாதித்து விவாதித்துக் கருத்தொருமை காண்பதே நோக்கம்.

இனிய செல்வ, உலகத்தை நட்பாக்குவதே அறிவு என்று திருக்குறள் கூறுகிறது; ஆம்! தம்மைச் சார்ந்தாரையும் சார்ந்துவரத் தயங்குவாரையும் முரண் நிற்பாளரையும் நமக்கு நட்பாக்கிக் கொள்வதே ஜனநாயக வாழ்க்கையின் நியதி. சிறந்த அறிவின் பயனும் அதுவே.

இன்று ஜனநாயகம் என்ற பெயரில் சண்டைகளே நடக்கின்றன. தமக்கு வாக்களிக்கவில்லை. தேர்தலுக்கு உதவி செய்யவில்லை என்று ஆட்சி எந்திரத்தையே அவர்களுக்கு விரோதமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த முறைகள் மலிந்ததால் தற்காப்புக் கருதியே பலர் அரசியலைச் சார்கின்றனர்; அரசியல்வாதிகளுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. இதுவே, இன்றைய நம்நாட்டு நிலை.

இனிய செல்வ! பரஸ்பரம் நட்பு இல்லாதவர்கள்; நாட்டின் நலனில் அக்கறையில்லாதவர்கள் ஜனநாயக அரசியலில் ஈடுபடுகின்றனர். அதனால் சட்ட சபையிலிருந்து பாராளுமன்றம் வரை சண்டை! நட்பாடல் தேற்றாதவர்கள் ஜனநாயக அரசியலுக்கு வருவதே தவறு! அவமானம்! பகைமையை, குழுச் சண்டைகளை வளர்ப்பவர்கள் சர்வாதிகாரிகளே! ஜனநாயக வாதிகள் அல்லர்! அரசு அமைத்து ஆள ஒரு கட்சிக்கு உரிமையே தவிர, அரசே ஒரு கட்சிக்குச் சொந்தமல்ல? ஆளப்படுபவர்கள் அனைவர் நலமும் காக்கப்பட வேண்டும் என்பதை நினைவிற் கொள்க! கட்சி-பிரதி கட்சி கருத்து வழியேயாம்! பகை வழியன்று. ஆனால், இன்றைய நடப்பு அரசியல் உலகில் காழ்ப்புணர்ச்சி வளர்ந்திருக்கிறது! கலகம் செய்கின்றனர்! வசைமொழிகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்! இது ஜனநாயகம் அல்ல!

ஆந்திர மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பு! நாடாளும் பிரதமரும், ஆந்திர மாநில முதல்வரும் அது பற்றிக் கலந்து பேசவில்லை. ஒன்றாகச் சேர்ந்து நிவாரணப் பணிகளைச் செய்ய முன்வரவில்லை! இனிய செல்வ, ஏன் என்றா கேட்கிறாய்? ஜனநாயகப் பண்பில் காலூன்றாததே காரணம். இனிய செல்வ, ஆந்திர மக்களின் நலனிலும், கட்சி-பிரதி கட்சி உணர்ச்சியே விஞ்சி நிற்கிறது என்பதே உண்மை! நாடாளும் பிரதமர், மாநிலங்களுக்கு வந்தால், மாநில முதல்வர்களிடம் தனியே சிலமணி நேரம் சமூகம், பொருளாதாரம் பற்றிக் கலந்து பேசுவதில்லை; கலந்து பேச விரும்புவதில்லை. இவையெல்லாம் ஜனநாயகத்தில் நாம் வளராமையின் அடையாளங்கள்! மக்களாட்சிமுறை அறிவு நலத்தில் நாம் வளரவில்லை என்பதன் வெளிப்பாடு! பொது வாழ்வில் குழுக்கள், உட்குழுக்கள் இவைகளின் தோற்றமும் வளர்ச்சியும் நாட்டைச் சீரழிக்கும். ஜனநாயக ஆட்சி முறையில் கருத்துப் பரிமாற்றங்களே சாதனம்! அதிகாரம் அல்ல! இனிய செல்வ, எல்லாரையும் தழுவி நிற்கும் நட்புணர்வு இல்லாதார் பகைவரையும் நட்பாக்கிக் கொள்ளும் தகைமை இல்லாதார், ஜனநாயக முறையரசியலில் பங்கேற்பது நெறியும் அன்று; முறையும் அன்று.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பதும் தவிர்க்க இயலாத அளவுகோலேயாம். பெரும்பான்மை என்பது, எதிர் விளைவுகளை உருவாக்காமல் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்! பெரும்பான்மையர் சிந்தனைகளை, கருத்துகளை மறுப்பதும் எதிர்ப்பதும் பெரும்பான்மையினரின் செயலாகிவிடக் கூடாது. ஒரு முடிவு நிலையில் செயற்பட்டாக வேண்டுமே என்ற நிலையில் தான் "பெரும்பான்மை” என்ற தத்துவம் பயன்படும். சிறந்த ஜனநாயகப் பண்புள்ள அரசியலே நாட்டுக்குத் தேவை.

"உலகம் தழீஇயது ஒட்பம்!”-என்று கூறுகிறது திருக்குறள். சண்டை போட்டுக் கொள்ள-ஒரு தீமை செய்ய அறிவா வேண்டும்? நட்பைக் காணவும் வளர்க்கவும்தான் அறிவு தேவை. அதுவும் சார்பில்லாத பொது நிலையில் உலகத்தவரிடம் நட்புக் கொள்ளுதல் வேண்டும். உலகத்தவரை நட்பாகக் கொள்ளுவதே அறிவு! மனம் சுருங்குதலும் விரிதலும் நல்வாழ்வின் அடையாளங்களல்ல! இனிய செல்வ, ஜனநாயகத்தின் சமூகவியலின் அரிச்சுவடியையே நாம் படிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

"உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு"

(425)

இன்ப அன்பு

அடிகளார்

38. காலம் அறிந்து செய்க!

இனிய செல்வ,

காலம் ஓர் அற்புதமான கருவி, ஆற்றல்! வாழ்வியலுக்குக் காலமே முதற்பொருள், காலத்தால் ஆகியதே வாழ்க்கை! காலம் கருதி உரிய காலத்தில் உரியன செய்யாது போனால் எதுவும் நடக்காது. வாழ்க்கையே பயனற்றுப் போகும். இனிய செல்வ, காலந்தாழ்த்தும் இயல்புடைய வர்கள் குறைந்த வேலைக்குக் கூடுதலான காலத்தைப் பயன்படுத்துவர். இதனால் பயனும் சுருங்கியதாக அமையும்; துன்பமும் விளையும் என்பதை நினைவிற்கொள்ளுதல் வேண்டும். காலதாமதங்கள் பாதை தவறச் செய்துவிடும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இனிய செல்வ, "தாமதங்களால் அபாயகரமான முடிவுகள் ஏற்படும்” என்பது ஷேக்ஸ்பியரின் அமுதவாக்கு. தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் நடந்த கலவரங்களுக்குக் காரணம் சாதிகள் அல்ல! அந்தக் கலவரங்கள் சாதிக்கலவரங்களும் அல்ல! கலவரத்தின் தொடக்கம் சாதிகள் அல்ல! எதிர் விளைவுகள் சாதிகளுக்கிடையில் மோதல்களாகி விட்டன.

ஒரு கொலை நடந்து விடுகிறது! இன்னமும் காரணம் காணமுடியவில்லை. கொல்லப்பட்டபெண் அரிசனப் பெண்; மூதாட்டி! இந்தக் கொலையைப் பற்றி ஊர் கவலைப் படவில்லை! ஏன்? நமது ஜனநாயகப் பண்பு வளர்ந்த நிலை அப்படி! ஊராட்சித் தேர்தலில் ஊர் இரண்டுபட்டு! மறுபடி அது ஒன்றாகவே இல்லை! என்ன ஜனநாயகம் இது? ஊராட்சித் தலைவர் தமக்கு வாக்களிக்காத அரிசனங்கள் மீது பராமுகமாகி விட்டார்! அதனால் ஊர் இரண்டுபட்ட நிலை! பாரதி விரும்பிய ஊராண்மை இல்லை! ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் சேர்ந்து உலகியல் நடத்தும் ஊராண்மை இல்லை! இதனால் அரிசனங்கள் காவல் நிலையத்திற்குச் செல்கின்றனர்! காவல் நிலையத்தினர் எல்லைக் கோட்டுச் சிக்கலில் சிக்கிக் கொண்டு காலந்தாழ்த்தினர். எந்த ஒரு காவல் நிலையமும் வந்த வழக்கைப் பதிவு செய்து கொண்டு உரிய காவல் நிலையத்திற்கு மாற்றலாம். இதுவே நடைமுறை. இதனைக் காவல்நிலைய அலுவலர்கள் உணர்ந்து காலத்தில் கடமையைச் செய்யாது காலந்தாழ்த்தியதால் ஆதி. திராவிடர்கள் சாதித் தலைவரை நாடுகிறார்கள்! அவர் வந்தார்! அமைதிக்குப் பதில் கலவரத்தைத் தூண்டிவிடத் தக்கவகையில் பேசிவிட்டார்! பிடித்துக் கொண்டது கலவரத் தீ!

எந்தச் சமுதாயத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க இயலும்; முடியும்! அருமையுடையது என்று ஒன்று இல்லை; காலமறிந்து கடமைகளைச் செய்யின்! என்பது வள்ளுவம்.

"அருவினை யென்ப உளவோ கருவியால்

கால மறிந்து செயின்"

(483)

காலமறிந்து செய்யவேண்டும். உரிய கருவிகளைப் பயன்படுத்திச் செய்யவேண்டும். மதுரை மாவட்டக் கலவரத்திற்கு மிகுதியும் காரணம் ஒன்று காலந்தாழ்த்தியது; இரண்டு கருவிகள் முரண்பட்ட நிலையில் இயங்கியது. அதாவது கருவிகள் கலவரத்தை அடக்கி அமைதிப்படுத்தும் மனித சமூகம் எடுத்துக்கொள்ளாமல், கலவரத்தை வளர்ப்பவர்கள் கையில் சிக்கிக்கொண்டன! இதனால் வள்ளுவம் ஒரு நடை முறை வாழ்வியல் என்பது புலனாகிறது. இனிமேலாவது திருக்குறளை அரசு அலுவலர்கள் கற்றறிவார்களா?

இன்ப அன்பு

அடிகளார்

39. வாக்காளர் கடமை

இனிய செல்வ,

நமது நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் களத்தில் இறங்கிவிட்டனர்; இங்கும் அங்கும் சுறுசுறுப்பாக நடமாடுகின்றனர்! ஆரவாரமான காட்சிகள்! வெடி தெறிக்கும் பேச்சுகள்! தேர்தல் குடு பிடித்து விட்டது! ஆனால், வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தான் சூடு பிடித்திருக்கிறது! ஐயோ, பாவம்! இனிய செல்வ, தேர்தலில் தீர்ப்பு வழங்க வேண்டிய வாக்காளர்கள் இன்னும் சுறு

தி.24. சுறுப்பு அடையவில்லை! இனிமேலும் அடைவார்களா? என்பதும் கேள்விக்குறியே!

இனிய செல்வ, நாட்டின் தலைவிதி வாக்காளர்கள் கையில் இருக்கிறது! ஆனால் வாக்காளர்களோ வாளா இருக்கிறார்கள்! வாக்காளர்களுக்குத் திருவள்ளுவர் அற்புதமான ஆலோசனைகளைக் கூறியுள்ளார்! திருவள்ளுவர், வாக்காளருக்கென்று எழுதியுள்ள திருக்குறள்:

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்”

(517)

என்பதாகும்.

"இதனை’ - அதாவது வாக்காளர்களின் குறிக்கோளை-திட்டத்தை-தனிமனிதச் சார்பற்ற நாட்டின் பொதுத் திட்டத்தை என்பது பொருள். இன்றைய சூழ்நிலையில் நமது வாக்காளர்களின் பொதுத்திட்டம் எதுவாக இருக்க முடியும்?

1. வறுமையையும், ஏழ்மையையும் முற்றாக ஒழித்து வளமான சமுதாயத்தை அமைக்கப் பொதுத் துறையை வலிமைப் படுத்துதல்-கூட்டுறவுத் துறையை வலிமைப்படுத்துதல் மூலம் சமவாய்ப்புச் சமுதாயம் (சோஷ லிசம்) காணத் திட்டமிடல்; செயற்படுத்துதல்.

2. சாதி, மத வேற்றுமைகளற்ற ஒருமைப்பாடுடைய சமுதாய அமைப்பைக் காணல்.

இவையிரண்டும் இன்றையத் தேவை! முதல் தேவை! மேலும் சிலவும் உண்டு. ஆயினும், இவையே முக்கியமானவை! இந்த இலக்குகளை நாடு அடையக் கூடிய வழிவகைகளை ஆராய்ந்து செயல்புரியத் தக்காரே நமது பேராளராக-நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதி உடையவர். இன்றைய தேர்தலில் நிற்கும் கட்சிகள் அளித்துள்ள தேர்தல் அறிக்கைகளைக் கவனமாகப் படிக்க வேண்டும்! இவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளைக் கவனமாகக் கேட்க வேண்டும்; இதற்கும் திருவள்ளுவர், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

(423)

என்று அழகுற அறிவுரை கூறியுள்ளார்.

இனிய செல்வ, இந்தக் குறிக்கோள்களை அடைவது எளிதல்ல. சுயநல சக்திகள் தடைகளாகக் குறுக்கே வந்து நிற்கும். ஆட்சியையே கூடக் கவிழ்த்து விடுவதாகப் பயமுறுத்தும். இதுவே, நமது சென்றகால வரலாறு! இனிய செல்வ, குறிக்கோளில் ஊசலாட்டம் இல்லாதவர்கள் தேவை! சுயநலத் தன்மையுடைய சமுதாயப் பிற்போக்குச் சக்திகளுடன் அதிகாரப் பசி காரணமாகச் சமாதானம் செய்து கொண்டு குறிக்கோள்களைக் காற்றில் பறக்க விடுபவர்களாக இருக்கக் கூடாது. இனிய செல்வ, இந்த விவேகம் நமது வாக்காளர்களுக்கு என்று வருகிறதோ, அன்றுதான் நமக்கு நல்ல காலம்! தேர்தலின் முடிவை எதிர்பார்த்து......

இன்ப அன்பு

அடிகளார்

40. நல்லன நடப்பதாகுக!

இனிய செல்வ,

நமது நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஒருவாறாக நடந்து முடிந்துவிட்டது. ஆனால், நமது நாட்டு வாக்காளர்கள் தேர்தலுக்குப் பின் தெளிவை உண்டாக்காமல் குழப்பத்தை உண்டாக்கிவிட்டார்கள். இதனை நினைக்கும் பொழுது

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்"

(510)

என்ற திருக்குறள் நினைவுக்கு வருகிறது. வாக்களிப்பு என்பது நமது தலைவிதியை அதாவது சமூக, பொருளாதாரத்தை வளர்த்து நல்வாழ்க்கையை அமைக்கக் கூடியது என்று நினைக்கிறார்களா? அல்லது சீட்டாட்டத்தில் உட்கார்ந்து ஆடுகின்ற துருப்புச் சீட்டு என்று நினைக்கிறார்களா என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

நமது வாக்காளர்கள் தம்தம் மனப்போக்கில் அல்லது குழு மனப்போக்கில் அல்லது இயக்குகிறவர்களின் மனப் போக்கில் வாக்களிக்கிறார்கள் என்று தெரியவருகிறது. வாக்காளர்களில் பல கோடிப் பேர்கள் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொன்னால்கூடத் தவறில்லை என்று தோன்றுகிறது. இனிய செல்வ, ஆம்! கோபம்தான்! ஏன் கோபம்!

எந்த ஒரு அணியையும் ஆட்சியில் அமரக்கூடிய பெரும்பான்மை தந்து நிலையான ஆட்சி ஏற்பட வாக்களிப்புச் செய்யாதது முதற் குற்றம்! பத்துப் பேர்களுக்கிடையில் தனித்து நின்று தனிப் பெரும்பான்மையாக வந்துள்ள காங்கிரஸ் கட்சியை சற்றேறக்குறைய 1, 2 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சியைப் பார்த்து, 100, 80, 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனித் தனியாகப் பெற்றுள்ள கட்சிகள் ஆர்ப்பரிக்கின்றன. மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டார்கள் என்று! இது உண்மையல்ல. மக்கள் எல்லாக்கட்சிகளையுமே நிராகரித் திருக்கிறார்கள் என்பதே உண்மை. 1984 இல் காங்கிரசுக்கு மிகமிகப் பெரும்பான்மையைத் தந்திருந்தார்கள். அதனால் காங்கிரஸ் ஆட்சிப் போக்கில் சறுக்கியது! மதச்சார்பின்மையை 2-ஆம் நிலைக்குத் தள்ளியது! ஜனநாயக நடை முறைகள் கட்சியிலும் ஆட்சியிலும் அருகிப் போயின. இங்ஙனம் ஏற்பட்ட வழுக்கல்களைச் சரி செய்யலாம் என்று கருதி மிக மிகப் பெரும்பான்மையைக் குறைக்க வாக்காளர்கள் எண்ணியிருக்கலாம். ஆயினும் பிடியைக் கொஞ்சம் கூடுதலாக இறுக்கிப் பிடித்துவிட்டார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவுதான் நடந்தது! எதிர்த்து நின்றவர்களுக்கு ‘இராமபிரானின் திருவருளும்’ கிடைத்தது என்று 'தினமணி’ கூறுகிறது.

இனிய செல்வ, இது நமது ஊகம். வாக்காளர்களின் எண்ணம் நமக்குத் தெரியாது. ஆனால், வாக்குகள் அளிக்கப் பெற்றுள்ள நடைமுறைகளைப் பார்த்தால் வாக்காளர்களுக்கு இத்தகைய எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை; இருக்கவும் முடியாது ஏன்? தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தந்த தேர்தல் அறிக்கையைப் பற்றி நாட்டில் யாரும் அதிகம் பேசவில்லையே! பத்திரிகைகளிலே கூடத் தேர்தல் அறிக்கைகளைப் பற்றி விவாதங்கள் நடை பெறவில்லையே! இந்த நிலையில் வாக்காளர்களுக்கு எப்படி அரசியல் தெளிவு வரும்! சாதி, பணம், மதம், பிரச்சார பவனிகளின் தோரணைகளிலே வாக்காளர்களின் வாக்குகளைக் கவர்ச்சிக்க முயன்றன அரசியல் கட்சிகள்! இனிய செல்வ, அது மட்டுமா! தேர்தலில் நின்ற அரசியற் கட்சிகள் வெற்றி தோல்விகளை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து எப்படி அகற்றுவது என்பதைத் தவிர வேறு நோக்கங்கள் இருந்ததாகத் தெரியவில்லை.

இனிய செல்வ, இந்தியா ஒரு பெரியநாடு! பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு; பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் நாடு; ஏழைகள் அதிகம் வாழும் நாடு. இந்த நாட்டை ஆள்கின்ற எந்தக் கட்சியானாலும் அந்தக் கட்சியின் ஆட்சி, இந்திய ஒருமைப்பாட்டினைக் கட்டிக் காப்பாற்றக்கூடிய கொள்கையும், கோட்பாடும் உடையதாக இருக்கவேண்டும். மதச் சார்பற்ற தன்மையுடைய அரசே இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றது. மேலும், நமது இந்திய நாடு பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிறைய உள்ள நாடு. அதுபோலவே சம வாய்ப்புக்களும் பெறாத பல கோடி மக்கள் வாழும் நாடு. ஆதலால் சமநிலை சமவாய்ப்பு சமுதாயக் கோட்பாடே நமக்கு ஏற்றது. இவைகளில் எந்த ஒரு தன்மையையும் நாம் இழப்பது விரும்பத்தக்கதல்ல.

இனிய செல்வ! தேசீய முன்னணி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் சூழல் உருவாகக் கூடும்! அமைய இருக்கும் புதிய ஆட்சிக்கு நமது வரவேற்பு! இந்த ஆட்சி நாட்டின் நலன் கருதித்தீட்டிடும் திட்டங்களை நாட்டின் குடிமக்கள் என்ற உணர்வில் - நிறைவேற்றிட ஒத்துழைப்போம்! உழைப்போம்! இனிய செல்வ! ஜனநாயக ஆட்சிமுறை உள்ள நாட்டில் அரசியல் கட்சிகள் பகைமை உணர்வுடைய எதிர் எதிர் கட்சிகளாக இயங்கக்கூடாது! அரசியல் கட்சிகளுக்கிடையில் நட்பியல் அடிப்படையில் விவாதங்கள் வளர வேண்டும். கட்சி-பிரதி கட்சி அடிப்படையில் நாடாளுமன்ற சட்டமன்ற விவாதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும். நாட்டின் நலனுக்குரிய காரிய சாதனை அடிப்படையிலேயே அணுக வேண்டும்! ஜனநாயக வழி ஆட்சி நடைபெறும் நாட்டில் ஆட்சிகள் மாறுவது தவிர்க்க இயலாதது! இப்படி மாற்றங்கள் நேரும்போது துள்ளி மகிழ்தலும் துயருறுதலும் தவிர்க்கப் பெறவேண்டும். காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் தேதிய முன்னணியின் ஆட்சிக்குச் சரியான முறையான எதிர்க்கட்சியாக இருந்து ஒத்துழைப்புத் தரவேண்டும். அப்படியே தருவார்கள் என்று நம்புகின்றோம். தேசிய முன்னணிக்கு காங்கிரஸ் தாய் வீடு போல, ஆதலால் தேசிய முன்னணியும், அதன் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பையும் கேட்பார்கள் என்று நம்புகின்றோம்.

இனிய செல்வ! நல்லன நடப்பதாகுக!

இன்ப அன்பு

அடிகளார்

41. அழுக்காறு கொள்ளற்க!

இனிய செல்வ,

தமிழினம் காலத்தால் முன்தோன்றி மூத்த இனம். தமிழகத்தின் வாழ்க்கையை நெறிமுறைப்படுத்த வேண்டிய இன்றியமையாமை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்த மையைப் பொருள் இலக்கணம் செய்ததன் மூலம் உய்த்துணர முடிகிறது. தொல்காப்பியத்தை ஒட்டித் தமிழில் தோன்றிய நீதிநூல்கள் பல. இனிய செல்வ, திருக்குறளும் நமது வாழ்வியலை முறைப்படுத்தத் தோன்றிய நூலேயாம். இத்தனை நீதிநூல்கள் தோன்றிய பிறகும் ஏன் தமிழகம் வளர வில்லை? தமிழர்கள் வாழ்க்கையில் ஏன் செழுமையில்லை? வடகொரியா, ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகளில் அரை நூற்றாண்டு வளர்ச்சியைப் பார்! இனிய செல்வ, திருவள்ளுவர் பொருட்டாலின் முடிவில் கயமை அதிகாரம் அல்லவா இயற்றியுள்ளார்! ஏன் இப்படி? திருக்குறள் சொல்லுவதை யார் கேட்கிறார்கள்! அப்படியே ஒரே வழிக் கேட்டாலும் திருப்பிச் சொல்வார்களே தவிரச் செய்வோர் யார்? இனிய செல்வ, நமது தமிழினம் உள்ளீடழிந்து உருக்குலைந்து வருவதன் அடையாளங்கள் உன் கண்ணுக்குப் படுகிறதா? உணர்கிறாயா? எங்கும் பல்குழு மனப்பான்மை! பாழ் செய்யும் உட்பகை! பரஸ்பரம் அழுக்காறு என்ற பாவி இன்று உலாவராத இடம் இல்லை! எத்தீமையிலும் முதல்தீமை அழுக்காறு! அதனால்தானே திருவள்ளுவர் அழுக்காற்றினைப் ‘பாவி’ என்று திட்டுகிறார்.

இனிய செல்வ, இன்று எல்லாருக்கும் பகைவர்கள் இருக்கிறார்கள்! ஆம்! சத்தியமாக எல்லாருக்கும் பகைவர்கள் இருக்கிறார்கள்! உண்மையாக நமக்கும் தான்! ஏன்? என்று கேட்கிறாயா? நல்ல கேள்வி! நாம் யாருக்கும் தீங்கு செய்ததில்லை! செய்யவும் எண்ணியதில்லை! ஏன், செய்ய வேண்டிய அவசியமும் இல்லை! ஆயினும் பகைவர்கள் உள்ளனர். ஏன்? இனிய செல்வ, நாம் சில காரியங்கள் உருப்படியாகச் செய்கிறோம்! அதனால், மக்கள் மதிக்கிறார்கள்! நாடு மதிக்கிறது! இந்த மதிப்பீடுகள் நமது தகுதியை மீறியதாகக் கூட இருக்கலாம். ஆயினும் சில அபூர்வ பிறவிகளுக்கு-பாடுபடாமல் திடீரென்று சவுரியாகிக் கூந்தலில் தொற்றிக் கொண்டு சிறப்புப் பெற்று வருபவர்களுக்கு இது பிடிக்கவில்லை! பிடிக்காது வெப்புநோய் கண்டவர்களுக்குக் கற்கண்டும் கசக்கும். அழுக்காற்றின் வயப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உண்டு, உடுத்து வாழ்வதே கூடப் பிடிக்காது! இஃது அழுக்காற்றின் இயல்பு! அழுக்காறு கையாலாகாக் குணமுடையவர்களின் குணம்! இனிய செல்வ, திருக்குறளைப் படி!

"உடுப்பது உம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்”

(1079)

இன்ப அன்பு

அடிகளார்

42. தேவரனையர் கயவர்

இனிய செல்வ,

நமது மரபில் தேவர், தேவலோகம் என்றெல்லாம் பேசக்கேட்டிருக்கிறாய் அல்லவா? அண்மையில் ஒரு கூட்டத்தில் தேவர்கள் வாழும் கோட்டை என்று ஒருவர் பேசினார்! கூட்டத்தில் தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள் பலர் இருந்தார்கள். நாம் தேவர்கள் வாழும் கோட்டையல்ல என்று வாதாடினோம் ஏன்? இனிய செல்வ, தேவர்கள் புராண இலக்கியங்களின்படி கூடப் பாராட்டப்படக் கூடியவர்கள் அல்லர். தேவர்கள், பலரோடு கூடி ஒன்றாக வாழ மாட்டார்கள்! தேவர்களுக்கிடையில் நடந்த சண்டைகள் பற்றிப் புராணங்கள் நிறைய பேசுகின்றன. தேவர்கள் இந்திரன் மனைவி இந்திராணிக்காகக் கூடச் சண்டை போட்டுக் கொள்வார்கள். தேவகோட்டையில், கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பகத்தரு உண்டு; காமதேனு உண்டு. அப்புறமும் ஏன் சண்டை என்றா கேட்கிறாய்? அதுதான் புரியாத புதிர்! தேவர்கள் மற்றவர்களுடன் உயர் பண்புடன் நடந்து கூடிவாழக் கற்றுக்கொண்டவர்கள் அல்லர். மற்றவர்களுடைய அறிவுரைகளும் இவர்களிடையே விலை போகாது. தேவர்கள் தாம் நினைத்தபடியெல்லாம் காரியங்களைச் செய்வர். தேவர்களை அவர்களுடைய விருப்பங்களே ஆட்டிப்படைக்கும். அவர்களிடத்தில் ஆய்வும் இல்லை! மற்றவர் ஆய்ந்து சொல்வதையும் கேட்க மாட்டார்கள். இனிய செல்வ, ஒரோவழி கேட்பர்கள் இல்லை, இல்லை! கேட்பதுபோல ஆசாரம் காட்டுவார்கள். வணங்குவது போல வணங்குவார்கள். அந்த வணக்கம் தீமை வருமோ என்ற அச்சத்தின் பாற்பட்டது. அல்லது தாம் விரும்பியது கிடைக்கும் என்பதற்காகவும் வணங்குவர். தேவர்களை ஆட்டிப்படைக்கும் குணங்கள் இரண்டு. ஒன்று அச்சம்! பிறிதொன்று ஆசை! இவ்விரண்டின் காரணமாகத் தாம் விரும்பியவாறெல்லாம் தேவர்கள் நடப்பார்கள்! கயவர்களும் கீழ்மக்களும்கூடத் தேவர்களைப் போன்றவர்களே! கயவர்களுக்கு - கீழ்மக்களுக்கு நன்மை தெரியாது; நல்லது தெரியாது. நல்லவர்களின் அருமையும் தெரியாது. கயவர்கள் தாம் நினைத்தபடியெல்லாம் நடப்பார்கள். இவர்களுடன் நட்புச் செய்தல் உறவு கொள்ளுதல் இயலாத ஒன்று. இவர்களைப் பயமுறுத்தினால், உதைத்தால் அடங்குவர்; அடங்குவது போல நடிப்பர். இது எல்லாராலும் இயலாத ஒன்று. கயவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றினால் ஒரளவு சரியாக நடப்பர். அதுவும் சில காலத்திற்குத்தான்! ஆசைக்கு அளவேது? இனிய அன்ப, ஆதலால் தேவர்கள் என்னும் வகையினர் ஆரியப்புராணங்களால் உயர்வாகப் பேசப் படுவர்களாயிருப்பினும் தேவர்களும், கயவர்களும் ஒரே நிலையினர். அதாவது தேவர்களும் கயவர்களே! இத்தகைய தேவர்களில் பலர் இன்று பூதேவர்களாக நம்மிடையில் வாழ்கின்றனர். அவர்கள் தாம் விரும்பியவாறெல்லாம் நடக்கின்றனர். நாட்டை நடத்த ஆசைப்படுகின்றனர். நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது! இந்த நிலை என்று தணியுமோ! என்ன செய்வது? உறவுதான் ஆழம்படவில்லை!

"தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்”

இன்ப அன்பு

அடிகளார்

43. மறைமலைநகரும் காமராசர் இரயில் நிலையமும்

இனிய செல்வ,

"எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு"

வாழ்க்கைப் போக்கில் சிக்கல்கள் தோன்றுவது இயற்கை; தவிர்க்க இயலாததும் கூட! ஆனால் சிக்கல்களுக்கு எளிதாகவும் பயன்தரத் தக்கவாறும் தீர்வு காண்பதே நல்லது. சிக்கலுக்குத் தீர்வுகாண்பதே வாழ்வாங்கு வாழும் கலை. மேலும் புதிய சிக்கல்கள் தோன்ற இடமளிக்காமலும் தீர்வு காண வேண்டும். அதிலும் சிக்கலைக் கடுமையாக்கினால் அந்தச் சிக்கலுக்கு நிகரானதொரு சிக்கலை உருவாக்கிவிடும். "மான”த்துடன் சிக்கலைக் கூட்டுச்சேர அனுமதித்துவிடக்கூடாது. ஒரு சிக்கலுக்கு மானத்துடன் கூட்டுக் கிடைத்து- விட்டால் மானம்-பிணக்கு, பகை, சண்டை ஆகிய பரிவாரங்களுடன் வந்து குடிபுகும், ஆதலால் வாழ்க்கைப் போக்கில் சிக்கல்கள் தோன்றி வளர்வதை அறிந்து கொள்ள வேண்டும்.

இனிய செல்வ,

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

"மறைமலை நகருக்குத் திரண்டு வாருங்கள்” என்று தான் நண்பர்கள், மாநாட்டுக்கு நம் எல்லாரையும் அழைத்தார்கள். இந்த உண்மையை காங்கிரஸ் மாநாட்டின் செய்தித்தாள் விளம்பரங்கள் ஐயத்திற்கிடமின்றி எடுத்துக் காட்டுகின்றன. மறைமலை நகரில் காங்கிரஸ் மாநாடு நடந்த இடத்திற்கு "காமராஜ் நகர்" என்று பெயர் சூட்டினார்கள். இது வரவேற்கத் தக்கதேயாம். காங்கிரஸ் பேரியக்க மாநாடு அகில இந்திய மாநாடு. ஆதலால், மாநாட்டுக்கென்று தனி இரயில் நிலையம், தொலைபேசி ஆகியவை அமைக்கப் பெறுகின்றன. இவையெல்லாம், மாநாடு நடக்கின்ற வரை இயங்கும் தற்காலிகத் தன்மையுடையனவேயாம். மாநாடு முடிந்தவுடன் அகற்றப்படும். இதுவே நடைமுறை. ஒரோவழி சில மாநாடுகளில் புதிய நகர்கள் தோன்றுவதும் உண்டு. சென்னையில் புதிய நகர் ஒன்றும் தோன்ற வில்லை.

மறைமலை நகரில் தான் மாநாடு நடக்கிறது. மாநாட்டின் போது ஒரு நகரமும் தோன்றவில்லை. இந்த நிலையில் மறைமலை நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்காக அமைத்த இரயில் நிலையத்திற்கு "மறைமலை நகர் இரயில் நிலையம்” என்று பெயர் வைக்காமல் “காமராசர் இரயில் நிலையம்” என்று பெயர் வைத்தது ஏன்? மறைமலை நகருக்கு காமராசர் பெயரில் இரயில் நிலையம் பொருந்துமா? பொருந்தாதா? என்பதல்ல கேள்வி! காங்கிரஸ் நண்பர்களுக்குத் தமிழ்ப் பற்று உண்டா? இல்லையா? என்பதல்ல கேள்வி! மறைமலை நகரில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்காக ஓர் இரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்கு ‘மறைமலைநகர் நிலையம்’ என்ற பெயர் வைப்பது இயல்பான சிந்தனை. ஏன் வைக்கவில்லை? இனிய செல்வ, இரயில் நிலையத்தை நிலைப்படுத்தித் தரும்படி தீர்மானம் போடுகிறார்கள். மாநாடு முடியும் நிகழ்ச்சியில் கடைசியில் அமைவது தீர்மானங்கள் நிறைவேற்றுதல். அந்தத் தீர்மானத்தில் மாநாட்டுக்காக அமைத்த - காமராசர் பெயரால் அமைத்த இரயில் நிலையத்தை மறைமலையடிகள் இரயில் நிலையமாக அமைத்துத் தரும்படி கேட்பது தானே முறை? எப்படி இந்த நிலை மாறியது? காங்கிரஸ் நண்பர்களுக்குப் பெருந்தலைவர் காமராசர் அவர்களிடமிருந்த பற்று காரணமாக இருக்கலாம் என்று கூறக்கூடும்.

இனிய அன்பு, ஆம்! உண்மைதான்! தமிழராய்ப் பிறந்தார் யாருக்கு - பெருந்தலைவர் காமராசர் புகழ் பாடுவதில் விருப்பம் இருக்காது? பெருந்தலைவர் காமராசரை நினைவுச் சின்னங்கள் மூலம் நினைவு கூர்வதா? பெருந்தலைவர் காமராசரின் கொள்கை, கோட்பாடுகளுக்கு வெற்றி பெற்றுத் தருவதன் மூலம் நினைப்பதா? என்று நினைத்துப் பாருங்கள்; மக்கள் தலைவராக விளங்கிய காமராசர் மக்களுக்கு நன்மை கிடைக்கும் பொழுதெல்லாம் மகிழ்வார். காமராசரின் நினைவு பஞ்சாயத்து சபைகளின் ஊராட்சி மன்றங்களின் வெற்றியில் தான் அமைந்திருந்தது. இனிய செல்வ, தலைவர்கள் பெயரால் நினைத்த போக்கிலெல்லாம் நினைவு கூரச் சிலைகள் அமைத்தல், பெயர்கள் சூட்டுவது ஆகியன நல்ல மரபல்ல. இனிய செல்வ, நமது காங்கிரஸ் நண்பர்கள் எண்ணிப் பார்த்து மறைமலையடிகள் பெயரை ஏற்பது பெருமை தரும். மக்களின் தலைவர் காமராசருக்குப் பெருமை சேர்க்கும் மாநாட்டில் தீர்மானம் போட்டதுடன் சரி! பிரதமர் அறிவித்ததோடு சரி! அந்தப் பெயரை அரசின் ஆணைவழி முறைப்படுத்திக் கொள்ளவும் இல்லை. ஏன் இந்த மெத்தனம்? மறைமலை நகரில் உள்ள இரயில் நிலையத்தின் பெயரைக் காமராசர் பெயரால் வைக்க, மாநில அரசை இசைவு கேட்டால் மாநில அரசு மறைமலை நகர் இரயில் நிலையம் என்றுதான் பெயர் சூட்டும்! இதில் என்ன கேள்வி இருக்கிறது? இனிய செல்வ, தொடர்ந்து எழுதுகின்றோம். இன்ப அன்பு

அடிகளார்

44. அரசின் கடமை

இனிய செல்வ,

புதிய அரசின் நிதிநிலைத் திட்டம் வந்து விட்டது. எதிர் பார்த்தபடி இல்லை. கிராமப்புற ஏழ்மை நீங்க, வேலையில்லாத் திண்டாட்டம் நீங்க உருப்படியாக ஒன்றும் இல்லை! மாநில அரசின் நிதிநிலைத் திட்டமும் வந்து விட்டது. இதில் ‘கருணை’ அதிகம் இருக்கிறது! நெடிய பார்வையும் இருந்திருந்தால் முழு வரவேற்பு அளிக்கலாம். இன்று மோசமாக இருந்துவரும் எதிர்காலத் தலைமுறையைப் பாதிக்கக் கூடிய ஆரம்பக் கல்வியைப் பற்றிய பேச்சில்லை! மூச்சில்லை! மேலும் பல ஓராசிரியர் பள்ளிகளைத் திறப்பதாக அறிவிப்பு! அவசியமென்ன? தெரியவில்லை. இனிய செல்வ, நமது நாட்டில் செல்வம் இல்லாமல் இல்லை. ஆனாலும் ஏழ்மை வளர்கிறது! ஏன்? நாட்டின் செல்வத்தில் 80 விழுக்காடு செல்வத்தை 20 விழுக்காடு கோடீசுவரர்கள் அள்ளி கொள்கின்றனர். இனிய செல்வ, மக்கள் தொகையில் (80) எண்பது விழுக்காட்டினர். 20 விழுக்காட்டளவேயுள்ள நாட்டுச் செல்வத்தைப் பங்கிட்டுக்கொண்டு வறியவர்களாக வாழ்கின்றனர். இனிய செல்வ இதனை Economics Times, 'Too little for too many" என்று கூறி நையாண்டிப் படமும் போட்டுள்ளது. கிராமப்புற ஏழைகளுக்காக நிறைய பேசுகிறார்கள்! ஆனால் ஒன்றும் நடப்பதில்லை. கிடைப்பதெல்லாம் இருக்கும் சொரணையையும் மறக்கடிக்கச் செய்ய சில சில இலவசங்கள்; அவ்வளவுதான்; ஆட்சிமுறை முதலாளிகள் அகம் மகிழவே நடக்கிறது. எங்குப் பார்த்தாலும் இழுத் தடிப்புகள்! இனிய செல்வ, இதுதான் இன்றைய நடைமுறை அரசு. அடிமை காலத்திய ஆட்சி அமைவுப் பொறிகளில் சுதந்திரத்தின் தாக்கம் இல்லை. மாற்றமும் இல்லை! பழைய முறைகளிலேயே (பாணி) வேலை செய்கிறார்கள்! புரட்சிகரமான முற்போக்குச் சிந்தனைகளையும் செயல்களையும் தடுப்பாரின்றியே சிதற அடித்து வருகின்றனர். தடுத்துக் கேட்பார் யாரும் இல்லை! அப்படியே கேட்டு விட்டால் ஆபத்து காத்திருக்கிறது. இனிய செல்வ, திருவள்ளுவர் அரசியலுக்கு-அரசுக்குச் சொன்ன நெறிமுறை இன்றும் பொருந்தும். நாளைக்கும் பொருந்தும்.

இனிய செல்வ, நாளும் அரசுகள் செல்வம் வளர்தலுக்குரிய புதிய புதிய யுத்திகளை, வழிமுறைகளைக் கண்டாக வேண்டும். இதற்குப் பயன்படுவனவே தேசிய அறிவியல் மையங்கள்! தேசிய அறிவியல் ஆய்வு மையங்களை இன்று அரசு கலந்து ஆலோசிக்கின்றன என்பதற்குரிய அடையாளம் எதையும் காணோம். அல்லது அறிவியல் ஆய்வு மையங்களுக்கு நாட்டின் வளர்ச்சிக்குரிய தொழில் நுட்பங்களைத் தருக அல்லது கண்டு தருக என்ற கேட்புகள் கிடைத்ததாகவும் தெரியவில்லை. இனிய செல்வ, நமது நாட்டின் நிலவளத்தில் 17 விழுக்காடுதான் பயன் படுத்துகின்றோம். மீதி, பயன்பாட்டுக்கு ‘இன்னமும் வரவில்லை’ தண்ணீரில் கணிசமான பகுதி வீணாகிப் போகிறது. ஏன்? நம்முடைய நாட்டின் ஆற்றலில் பெரும்பகுதி மனித ஆற்றல்தான்! இந்த மனித ஆற்றல் இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தப் படவில்லையே! இனிய செல்வ, அரசுகள் நாட்டின் வளத்தைப் பெருக்க, புதிய புதிய யுத்திகளைக் கையாண்டு பயன்பாட்டுக்கு வராத வளங்களை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டும். உற்பத்தித் திறனைக் கூட்டவேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டும். இதுவே அரசு, நாட்டின் வளத்தைப் பெருக்கும் வழிகள்! இதனை விட்டு விட்டு அஞ்சற் கட்டணங்களைக் கூட்டுவது, போன்றவைகளால் மேலும் விலைகள் கூடும். மேலும் ஏழைகளே ஏழைகளாவர். அது போலவே லாட்டரி சீட்டுகள் விற்பது. மதுக்கடைகளைத் திறப்பது போன்றவைகள் நாட்டின் வளம் பெருக்கும் வழிமுறைகளல்ல. பனம் ஏழைகளிடத்திலிருந்து அரசின் கருவூலத்திற்கு மாறும். இரண்டு இடங்களிலும் அந்தப்பணம் பயனீட்டு முறை என்ற செல்வ இயக்கத்திலிருந்து பிறழ்கிறது. இனிய செல்வ,

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு”

(385)

என்பது திருக்குறள்! இயற்றலும் என்ற சொல்லுக்கும் பொருள் செல்வம் ஈட்டுதலுக்குரிய புதிய புதிய வாயில்களைக் காணுதல் என்பதாகும். இனிய செல்வ, அடுத்து வரும் மடல்கள்! தொடர்ந்து எழுத எண்ணம். இன்ப அன்பு

அடிகளார்

45. “நாமும் நமதும்” - வேண்டும்

இனிய செல்வ;

இன்றைய மனிதகுலத்தில் எல்லாரிடமும் இருப்பது "செருக்கு” என்ற தீய குணமாகும். “எனது நாடு" "எனது மொழி” “எனது இனம்” “எனது சமயம்” “எனது சொத்து” என்பன போன்றவை. பாவேந்தன் பாரதிதாசன் நாட்டுப்பற்றினால் அடுத்த நாட்டினை அழிக்கின்றான்-என்று கூறுகிறான்.

தென்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்

சுதந்தரத்தால் பிறர் நாட்டைத் துன்புறுத்தல்;

என்பது பாரதிதாசன் பாடல்.

ஆதலால் நாடுகளுக்கிடையே உள்ள எல்லையை எடுக்கச் சொல்கிறான்.

"நாட்டொடு நாட்டை இணைத்து மேலே ஏறு",

என்பது பாவேந்தன் பாடல் வரி. ‘எனது’ என்ற சொல்லினைப் பாவேந்தன் வெறுக்கிறான்.

"இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்

‘இது எனது’ என்னுமோர் கொடுமையைத்

தவிர்ப்போம்!”

என்று பாடுகின்றான்.

‘எனது’ என்ற சொல்லும், அந்தச் சொல் தோன்றுதற்குரிய பின்னணியும் ‘நான்’ என்ற அகந்தையை உருவாக்குகிறது. பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் ‘நான்’ என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்துவர். இனிய செல்வ, இந்த ‘எனது’ சென்ற காலத்தில் விளைவித்த துன்பமும் மிகுதி. இன்று தரும் இன்னல்களும் அதிகம். இனிய செல்வ என்ன செய்வது? யாரிடம் சொல்வது? இருக்கன் குடி கடவுள் சந்நிதியில் கூட ‘நான்’ தான் வம்புக்குக் காரணம். திருச்சி மாவட்டம் வி.களத்துார்க் கலகத்திற்கு "எனது மதம்” என்ற உணர்ச்சியே காரணம் ஏன்? காவிரி நடுவர் மன்றத்திற்குப் போகிறது? கர்நாடகத்துடன் நமக்குள்ள காவிரி நீர்ச் சிக்கல்கூட ‘நான்’ ‘எனது’ தானே! யாருக்குத் தண்னீர் தேவை? என்பதல்ல விவாதத்தின் அடிப்படை! உரிமை உணர்வே அடிப்படை. ‘எனது’ ‘உனது’ என்ற சொற்கள் வழக்கிற்கு வந்த பின்தான் சண்டைகள் ஏற்படுகின்றன. இன்று எங்கும் உரிமைச் சண்டைகள்! இந்த உரிமைச் சண்டைகள் வந்த பிறகு மனித குலம் சமூக உணர்விலிருந்து நீண்ட தூரம் விலகிப் போய் விட்டது. சுதந்திரம் வந்து 43 ஆண்டுகள் ஆன பிறகும் இந்தியாவில் "இந்தியர்கள்" தோன்றவில்லை. இனிய செல்வ, பாரதி ‘நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்!” என்று பாடினான். இன்று ‘நாமும் இல்லை; நமதும் இல்லை’. எங்கு நோக்கினும் ‘என்னுடையது’ என்ற உணர்ச்சி! இந்த உணர்ச்சி மிருகத்தனமாக வளர்கிறது என்பதன் அடையாளங்கள் பலப்பல. ‘ராமஜன்ம பூமி-பாபர் மசூதி’ எண்ணப் போக்குகள் என்ன? மத நம்பிக்கைகளா? இல்லை! இல்லை! ‘என்னுடைய மதம்’ என்ற உணர்ச்சிமிக்க ஆரவாரச் சந்தடியில் கடவுள் காணாமல் போய் விட்டார்! 'சிவசேனை' என்ன சொல்கிறது? இன்னும் எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும்.

இனிய செல்வ, விருப்பங்கள் - ஆர்வங்கள் செருக்குகளாக வளரக் கூடாது. செருக்கின் இயல்பென்ன? செருக்கு மற்றவர்களை மதிக்காது! மற்றவர் கருத்தை மதிக்காது! மற்றவர்கள் உரிமைகளுக்குப் பாதுகாப்பு இல்லை! தான் நினைப்பதே சரி! அதுவே வேதம் என்று கூறும்.

இனிய செல்வ, ‘யான்’ ‘எனது' என்ற செருக்கு அறவே கூடாது! ஏன்? இனிய செல்வ, ‘நான்’ என்பது அற்ற நிலையே இன்பநிலை! இன்ப அன்பு நிலை! இந்தியாவிற்கு இந்த ஞானோதயம் என்று வரும்! இன்றைய இந்தியாவின் போக்கு எப்படி இருக்கிறது? இன்றைய இந்தியாவில் சாதி, மதச் சண்டைகள் நடவாத மாநிலம் இல்லை. எங்கும் கலகத் தீ. மைய அரசு அலுவலகங்களில் தீ!

இனிய செல்வ இன்றைய இந்தியா எங்கு போகிறது? கி.பி.2000 இல் இந்தியா வலிமை பெற்ற ஒரு நாடாக விளங்க வேண்டாமா? ஆம்! நம் ஒவ்வொருவரையும் விட இந்தியா பெரிது! இந்தியா வலிமை பெற்றிருக்க வேண்டும். அப்படியானால் ‘நான்’ ‘எனது’ என்ற செருக்குகளை அறவே விட்டொழிக்க வேண்டும். அல்லது நாட்டின் நலன், மனிதகுல நலன் என்ற ஆதார சுருதிக்கு அடங்கியாவது வாசிக்கவேண்டும். இனிய செல்வ, இதுவே இன்றை தேவை! அடுத்து எழுதுகின்றோம். இன்ப அன்பு

அடிகளார்

46. ஒரே ஆன்மீக ராகம்

இனிய செல்வ,

நமது முன்னோர்கள் வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை கண்டார்கள். ஒற்றுமையையே கண்டார்கள். வேற்றுமைகளை அவர்கள் பார்த்ததில்லை. பார்க்க விரும்பவும் இல்லை.

"வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்

விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்

மாறுபடுங் கருத்தில்லை”

என்றார் தாயுமானவர். "வேறுபாடுகளைக் காண்பதுதான் நமது இடும்பைகளுக்கெல்லாம் காரணம்" என்றார் விவேகானந்தர். இந்த அற்புதமான வாழ்வியல் நாகரிகத்திற்கு ஊடே குறுக்குச்சால் ஒட்டினவர்களும் இல்லாமற் போகவில்லை; ஆனால் அந்த அருளார்களின் கருத்து சென்ற நூற்றாண்டுகளில் எடுபட வில்லை. இனிய செல்வ, வரலாற்றை மறுத்து எழுதப் பேனா துடிக்கிறது. ஆம்; மதச்சண்டைகள் வரலாற்று ஏடுகளில் நிறைய பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்பதை யார்தான் மறக்க

தி.25. முடியும்? இனிய செல்வ, பாலைவனம் பரப்பளவில் கூடுதல் தான்; பசுஞ்சோலை பரப்பளவில் குறைவுதான். பசுஞ்சோலைதானே நினைவுக்கு வருகிறது. அதுபோல, நமக்கு ஒற்றுமை. ஒருமைப்பாடு என்பதே நினைவு. ஆனால் இன்று நமது நாடு எங்கே போகிறது: மக்கள் வேறுபாடுகளையே காண்கிறார்கள்: இல்லை, வேறுபாடுகளைத் துருவித்துருவிக் கண்டு பிடிக்கிறார்கள். வேறுபாடுகளைப் பற்றியே பேசுகிறார்கள். வேறுபாடுகளை வளர்த்துத் தலைவர்கள் ஆகிறார்கள்:

இனிய செல்வ, "சகோதர ஒற்றுமை, அயலார் அன்பு, தம்பதிகள் இணக்கம் ஆகியன அழகானவை; பயன்தரத்தக்கவை” என்பது மூசானாரின் முதுமொழி, இனிய செல்வ, இவை மூன்றும் இன்று எப்படி அமைந்துள்ளன? சகோதர அன்பு-ஒற்றுமை ஆகியன இன்று அரிதாகிக்கொண்டு வருகின்றன, கடந்த பல ஆண்டுகளாக நம்முடைய வாழ்க்கைப் போக்கில் பணிப் பாங்கில் சகோதரர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைத்துச் சொத்துப் பிரிவினை செய்ய நேரிட்டது. இப்பொழுது உடன் பிறந்த சகோதரர்களுக்கிடையில் சமரசம் பேசிக் கொண்டிருக்கிறோம். சகோதர ஒற்றுமை அன்பு, சமரசம் இவையெல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டுச் சொத்துப் பிரிவினை உணர்ச்சியே தலை தூக்கி நிற்கிறது. இனிய செல்வ, அயலார் அன்பு-இன்று நமது நாட்டில் அருகிப்போன நிலையில் காணப்படும் ஒன்று. இந்த அயலார் அன்பை அரசியல் சொத்துரிமை பொய்மையான தலைமை உணர்ச்சி ஆகியன கெடுத்து வருகின்றன. இனிய செல்வ, அடுத்தது தம்பதியரிடத்தில் ஒற்றுமை; இதுபற்றி நாம் எழுத வேண்டுமா? நாள்தோறும் நமது நாட்டுச் செய்தித்தாள்களில் வரும் செய்திகள் மூலம் தம்பதியரிடத்தின் அன்பைவிட, தியாகத்தைவிட, “வரதட்சணையே" ஆட்சி செய்கிறது என்பது புலனாகவில்லையா? இப்படிச் சமுதாயத்தில் மூன்று நிலைகளிலும் வேற்றுமையே கோலோச்சுகின்றது!

இனிய செல்வ, இன்று இந்தியாவுக்குத் தேவை ஒற்றுமை! ஒருமை; ஆனால் நாளும் நடப்பதென்ன? நமது நாட்டுப் படத்தை எடுத்து சாதி, வகுப்பு மதக்கலவரங்கள் நடக்கும் பகுதியை அடையாளமிட்டுக் காட்டு என்றால் எந்த மாநிலம் இந்த அடையாளத்தைப் பெறாமல் தப்பிக்க இயலும்? இனிய செல்வ, ஏன் இந்த அவலம்? நாம் கூட உண்மையாகச் சொல்கின்றோம் - நாம் "இந்தியராக” இருக்க ஆசைப்படுகின்றோம்; "இந்து”வாக இருக்க ஆசைப்படுவதில்லை. ஏன்? அதனாலேயே சைவத்தை எடுத்துக்கொண்டு வலியுறுத்தி, சைவமாக வாழ ஆசை; ஆம்; "எந்நாட்டவர்க்கும் இறைவா பேற்றி?" என்பது சைவ வாழ்வு. இன்று நமது சமுதாயத்தில் எண்ணற்ற சாதிகள்; இவைகளுக்கிடையே ஆரோக்கியமில்லாத போட்டிகள் இந்து-முஸ்லீம் சண்டைகள்; இந்து-கிறிஸ்துவச் சண்டைகள், இனிய செல்வ, பாரதி கூறியது போல, "ஒரு பரம் பொருள்” தான் முக்கியம் ‘ஏகம் ஸத்விப்ரா பஹீதா வதந்தி’ இருப்பது ஒன்றே. மகான்கள் அதற்குப் பல பெயரிட்டு அழைக்கிறார்கள். அப்படியானால் முஸ்லீம்கள் தொழும் அளவற்ற அருளாளனும், கிறிஸ்தவர்கள் போற்றி வணங்கும் பரமண்டலத்திலுள்ள பரமபிதாவும் இந்துக்கள் தொழும் பல்வேறு திருநாமங்கள் கொண்ட கடவுளும் ஒருவரே; ஒருவரே; அப்படியானால் கலகம் ஏன்? சண்டை ஏன்? அதுதான் புரியாத புதிர்; மதங்கள் பழக்க வழக்கங்களைச் சார்ந்தவை. இவை மாறுபடலாம்; மறுக்கப்படலாம். அதனால் குடி ஒன்றும் கெட்டுவிடாது. அதிலும் நமது தமிழ்நாட்டு மக்களுக்குப் பொறுப்பு மிகுதியும் உண்டு. காரணம் ஒருமையைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்ட நாடு தமிழ்நாடு; இனிய செல்வ, நமது திருவள்ளுவர்.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்"

(214)

என்று அருளியுள்ளார். இங்கு "ஒத்தது” என்றது ஒத்துப் போகக்கூடிய பண்பாட்டை மட்டுமன்று; அளவையும் கூடக் கூறியதாக ஏற்கவேண்டும். அதாவது பலவற்றில் ஒத்துப் போக இயலவில்லையா? கவலைப்படாதே; ஏதாவது ஒரு செய்தியில்-ஒரு கருத்தில் ஒத்தகருத்து இருக்கிறதா? அது போதும். உறவினை வளர்த்துக் கொள்ள, நட்பினை வளர்த்துக் கொள்ள; காலப்போக்கில் இந்தக் குறைந்த அளவான-இல்லை, ஒரே ஒரு உடன் பட்ட செய்தியில் தொடங்கிய உறவு வளரும். பழகும் நட்பு உருவாகும். மேலும் பல முனைகளில் கருத்தொருமைப்பாடு தோன்றும் வேற்றுமைகள் குறையும். மேலும் பலவற்றில் உடன்பாடான கருத்துக்கள் தோன்றும். இதுவே வாழும் முறைமை, இனிய செல்வ, எண்ணிப்பார்; இன்று பலர் கூடுகின்றனர்; கூடுகின்றோம் ஆயினும். ஒற்றுமையில்லை. வெளியே ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது; உள்ளே பல்குழு மனப்பான்மை; குடுமிபிடிச் சண்டைகள்; ஏன்? பொதுக் குறிக்கோள் இல்லை; அந்தக் குறிக்கோளை அடைய தற்சார்பை, தற்பெருமையைத் தியாகம் செய்ய மனமில்லை; இந்தியா ஒன்றுபட வேண்டுமானால் ஒரே ஆன்மீக ராகம் இசைக்கப்பட வேண்டும். இந்த நிலை நீடித்தால் இன்னும் பல நூறு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாற்றமும் ஏற்படாது; வளர்ச்சியும் இராது. அடுத்து எழுதுவோம். இன்ப அன்பு

அடிகளார்

47. நடிப்புப் போலிகள்

இனிய செல்வ,

இன்று பெருமை எது? நன்மை எது? பெரியோர் யார்? இவையெல்லாம் துணிந்து தெளிவு காணமுடியாத வண்ணம் நாட்டின் நடப்புகள் சென்று கொண்டிருக்கின்றன. மனித மதிப்பீடுகள் மறைந்து பண மதிப்பீட்டுச் சமுதாயம் தோன்றிக் கொண்டு வருகிறது. அறிவினைவிடப் பணம் பெரிது. இன்று அறிவு விற்பனைப் பொருளாகிவிட்டது; என்றும் இல்லாத அளவுக்குச் சாதிகள் உயர்வு பெற்றுவிட்டன. விதண்டாவாதம் செய்தல், சொற்சிலம்பம் ஆடுதல் முதலியன வரவேற்கப் படுகின்றன. வன்முறை கலாச்சாரமாகிவிட்டது; இனிய செல்வ,

"மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்”

(278)

என்று திருவள்ளுவர் கூறியது போல, மனத்தில் மோசமான நாற்றம் அடிக்கும் குப்பை கூளம்; ஆனால் உடலோ புனிதம் காட்டுகிறது. மிகமிகப் பெரியர் போல-ஐம்புலன்களை வென்ற வீரம் உடையவர்களின் கோலம் தாங்கி நிற்கின்றனர். இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் திருவள்ளுவர் காலத்திலேயே பலர் இருந்துள்ளனர். இன்று கேட்பானேன்? இன்றைய சூழ்நிலையில் நல்லது எது? என்று தெளிந்து துணிய முடியுமா? அப்படியயே துணிந்து விட்டால் சொல்லத்தான் முடியுமா? ஒரோவழி சொல்லியேவிட்டாலும் யார் கேட்பார்?

இனிய செல்வ, ஆணவத்தின் மொத்த உருவம், விருப்பு - வெறுப்புகளின் கொள்கலம், சாதி வெறி, விளம்பர ஆசை, ஆதிபத்திய ஆசை. மறைவாகச் சூது செய்யும் பசுத்தோல் போர்த்த புலித்தன்மை, இணைந்து போகமுடியாத அளவுக்கு அசுரத்தனம். இவ்வளவுமுடைய மனிதர் எந்த உருவைக் கொண்டால் என்ன? ஒன்றும் பயனில்லை. இத்தகைய மனிதர்கள் பலர் தோன்றியுள்ளனர். இனிய செல்வ, உய்த்துணரும் திறன் இருக்கிறதா? இனம் காட்டுக!

நாம் யாருடன் சேர்வது? இனத்துய்மை வேண்டும் என்று வள்ளுவர் சொன்னார். ஆனால் இத்தகு இனமல்லா தார்-இனம்போல் நெருங்குகின்றனர்; பேசுகின்றனர்; நாடக மாடுகின்றனர். விரைந்து புகுகின்றனர். இத்தகையோர் நாட்டில் நடமாடுவதால் யாது பயன்? இந்தப் போக்கில் திருப்பெருந்துறை நினைவிற்கு வருகிறது.

"நாடகத் தால் உன்னடியார் போல்

நடித்து நான் நடுவே, வீடகத்தே புகுந்

திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்'

என்னும் திருவாசகம் நினைவிற்கு வருகிறது. என்ன விரைவு? பொய்ம்மை கண்டு கொள்ளப்படாது என்பதால் விரைவு! எப்படி விரைந்தால் என்ன? புகுந்தால் என்ன? திருவள்ளுவர் கண்டு காட்டிய செருக்கும் மெய்கண்ட சிவம் உணர்த்திய ஆணவமும் நகைக்கும்; நகைத்து எள்ளல் செய்யும்; இனிய செல்வ கவனமாகப் படி! இயலுமானால் எழுதுக: இன்ப அன்பு

அடிகளார்

48. வாழ்க, வருவாய்க்குத் தக

இனிய செல்வ,

இந்தியாவின் இன்றைய கடன் பல்லாயிரம் கோடிக்கும் மேலாக இருக்கிறது. அந்நிய நாட்டுச் செலாவணி இருப்பு குறைந்துவிட்டது! ஆம்! இந்தியா ஏழை நாடாக, கடன்கார நாடாக ஆகிக்கொண்டிருக்கிறது! நமது நாட்டு மக்களில் 58.9 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். ஆற்றல் மிக்க இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்! வேலை பார்ப்போரிலும் பாதிப்பேர் போதிய ஊதியமின்றி முறையாக வாழமுடியாமல் அல்லற்படுகின்றனர்! இஃது இன்றைய பாரதத்தின் நிலை.

இனிய செல்வ, இந்த இடர்ப்பாடான நிலையைச் சமாளிக்க முயலுகிறார் பாரதப் பிரதமர்! பிரதமர் அந்நிய நாட்டு முதலாளிகளை பாரதத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்கும்படி கெஞ்சுகிறார்! நடை பாவாடை விரிக்கிறார்! நாட்டின் அரசியற் கட்சிகள் அனைத்தும் இதனை எதிர்க்கின்றன. பாரதப் பிரதமர் சொல்லும் ஒரே சமாதானம் "நிதி இல்லை! பணம் இல்லை என்ன செய்வது? இனிமேலும் கடன் வாங்க முடியாது” என்பதுதான்.

ஆம்! பிரதமர் சொல்லுவதில் உண்மை இல்லாமல் இல்லை! ஆயினும் நாட்டில் பணம் இல்லை என்று கூறுவது தான் உண்மையில்லை! நாட்டில் நிறைய பணம் இருக்கிறது! நாட்டில் பெரிய முதலாளிகளிடம் உள்ள கருப்புப் பணம் கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்திற்குப் போதும்! கருப்புப் பணம் சற்றேறக்குறைய 40,000 கோடி! இதுபோக அரசியற் கட்சிகள் தேர்தல் செலவுகளுக்காக மறைமுகமாக ஈட்டி வைத்துள்ள பணம் பற்பல கோடிகள்! இவையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படாமல் சாதி, இன, மதக் கலவரங்களை வளர்க்கவும் அரசியல் கட்சிகளுக்குள் உட்பூசலை வளர்க்கவும் பயன்படுகின்றன! உண்மையாகச் சொன்னால் நாட்டின் அழிவுக்குச் செலவாகின்றன!

நாட்டு மக்களில் எந்தத் தரப்பு மக்களிடத்திலும் நிதியைப் பற்றிய பொறுப்பான சிந்தனை இல்லை! அணுகுமுறை இல்லை! கடன் வாங்குதல், கடனை வஜா செய்யப் போராடுதல் முதலிய தீய பழக்கங்கள் மக்களிடையே பரவிவிட்டன! அரசு, நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கென வழங்கும் நிதி உதவிகள் அரசுக்குத் திரும்ப வருவதும் இல்லை! வங்கிகளுக்கும் இதே கதிதான்! இனிய செல்வ, நீ கேட்பது சரியான கேள்வியே! அரசுக்குத் திரும்ப வராதது ஒருபுறம் இருக்கட்டும்; மக்களாவது முன்னுக்கு வந்தார்களா? திட்டத்தின் இலக்காகிய ஏழை மக்களிடத்தில் கூட உருவாகவில்லை! 10 விழுக்காடு தான் செலவழித்த பணத்திற்குள்ள சொத்து உருவாகியிருக்கக்கூடும்! ஏன் இந்த அவலம்? பணிகள் முறையாக நிறைவேற்றப்படத்தக்கவாறு திட்டங்கள் அமையவில்லை! அவசரத்தில் அள்ளித் தெளிக்கும் நிலை!

இனிய செல்வ, நாம் ஏழைகள், நமது நாடு ஏழை நாடு என்ற எண்ணம் சமுதாயத்தில் எந்தமட்டத்திலாவது இருக்கிறதா? நமது நாட்டில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நமது நாட்டுத் தலைவர்கள் தாமே! நமக்குத் தெரிந்தவர்கள் தாமே! நமக்கு உறவினர்கள் தாமே! இவர்களுடைய வரவேற்புக்கு எத்தனை இலட்சங்கள் செல்லுகின்றன. தெரியுமா? அரசியல் பேரணிகளுக்குச் சொல்லவே வேண்டாம்! அதேபோலத்தான்! அரசியல் தலைவர்களின் பவனிகளில் வரும் நூற்றுக்கணக்கான கார்களின் அணி வகுப்பு, இனிய செல்வ, அரசியல் இயக்கங்களுக்குச் சளைத்ததல்ல, மத சம்பிரதாயங்கள்! கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் இவைகளில் சிக்கனப் பார்வையே கிடையாது! பலப்பல இலட்சங்கள் செலவழிக்கப்படுகின்றன!

நமக்கு அறிமுகமான ஒரு சிற்றறூரில் அண்மையில் முளைப்பாரி விழா எடுத்தார்கள்! பத்து நாள் விழா! பத்து நாளும் இரவும் பகலும் ஒலிபெருக்கிகள் அலறின! இரவெல்லாம் திரைப்படக் காட்சிகள்! கொட்டு மேளங்கள்! கோலாகல வைபவம்! நமது மதிப்பு, இந்த திருவிழாவை முன்னிட்டும் பொதுவாகவும் தனித்தனியாகவும் செலவழித்த ரூபாய் ஒரு லட்சம் இருக்கும்! திருவிழா எடுத்தவர்களில் பலர் வசதி அதிகம் இல்லாதவர்கள்! திருவிழா வேண்டியது தான்! பக்தி சிரத்தையுடன் திருவிழாக் கொண்டாடும் மக்களைப் பாராட்ட வேண்டியதுதான்! பக்தியைவிட, களியாட்ட உணர்வு மிகுதியாகி விட்டது! பக்தி, சாந்தம், அமைதி ஊக்கம் முதலிய குணங்களைப் பெறுவதற்காகவும், தனித்தனியாகவும் கூட்டாகவும் வளர்வதற்குரிய ஒரு சாதனம்! ஆனால், திருவிழா என்ற பெயரில் "அடிதடி" களைத் தவிர வேறென்றும் இல்லை... என்ற திரைப்படங்களுக்கு என்ன வேலை! திருவிழா முடித்த கையுடனேயே அடிதடி ரகளைகள், ஒரு பஜனை உண்டா? பக்திப் பாடல்கள் பாடும் அரங்கு உண்டா? பக்திச் சொற்பொழிவு உண்டா? ஒன்றும் இல்லை! திரைப்படங்களின் ஆக்கிரமிப்புத்தான்! ஏற்கனவே நாட்டில் திரைப்படக் கொட்டகைகள் அதிகம்! இரவும் பகலும் காட்சிகள் நடக்கின்றன! போதும் போதாதற்குத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வேறு திரைப்படங்கள் காட்டுகின்றன! இனிய செல்வ, இவ்வளவும் ஏன் எழுதினோம் என்று நினைக்கிறாயா? நமது நிதியைப் பற்றிய பொறுப்புணர்வுடன் கூடிய அணுகுமுறை பாரிடமும் இல்லை.

இனிய செல்வ, சம்பாதிப்பதனால் மட்டும் செல்வனாகிவிட முடியாது! நிதியை எப்படிச் செலவழிக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் செல்வனாக முடியும். "வறுமையைவிடச் சிக்கனமின்மை மிகக் கொடிது” என்பது சீனப் பழமொழி! வறுமையை மாற்றலாம். சிக்கனமின்மையை மாற்றுவது கடினம்! பணம் செலவழிக்கப் போகிறாயா? இந்தச் செலவால் உனக்கு என்ன நன்மை? உன் குடும்பத்துக்கு என்ன நன்மை? ஊருக்கு என்ன நன்மை? என்று ஆராய்ந்து அறிந்து செலவு செய்யும் பழக்கம் வேண்டும். சிக்கனம் என்பதும் வருவாயை ஒத்தது என்ற எண்ணம் வளர்ந்தால் பலகோடிக் கணக்கில் நமது நாட்டில் பணம் மிஞ்சும். ‘எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை’யே நமது நாட்டினர், சிக்கனச் சேமிப்பிலிருந்து நிறைவேற்ற முடியும். இனிய செல்வ, நமது திருவள்ளுவர், "வருவாய் நிறைய வரவில்லையா? ‘கவலைப்படாதே’ செலவுகளுக்குரிய வாயில்கள் அகலாமல் பார்த்துக் கொள்” என்றார்.

“ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை”

(478)

என்பது திருக்குறள். இன்ப அன்பு

அடிகளார்

49. இட ஒதுக்கீடு

இனிய செல்வ,

மண்டல் குழு அறிக்கையின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்த நடுவண் அரசு முடிவெடுத்திருக்கிறது. அதாவது, நடுவண் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு 27 விழுக்காடு செய்வதாக முடிவு. இனிய செல்வ, இது தொடர்பாக ஒரு செய்தி உனக்கு தெரிந்தாக வேண்டும். அதுதான் நடுவண் அரசு பணிகளுக்கு ஆள் தேர்வு செய்வதில்லை என்ற அரசின் முடிவு. அதாவது, அரசு அலுவலகங்களில் ஒரே கூட்டம்! போதும் போதும் என்றாகி விட்டது போலும்! இந்த நிலையில் இட ஒதுக்கீட்டு அறிவிப்புகள்! வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் ஆர்வம் இல்லை! முயற்சி இல்லை! இருப்பதை எப்படிப் பங்கிடுவது என்பதுதான் கவலை!

இனிய செல்வ, கம்பன் கூட "எல்லாருக்கும் எல்லாம்” என்றுதான் கனவு கண்டான்! நமது நிலை ஏழ்மையை, இன்மையைப் பங்கிட்டுக் கொள்வது எப்படி என்பதுதான்; இனிய செல்வ, தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோர் ஒதுக்கீடுகள் வேண்டாம் என்பது நமது கருத்து அல்ல. உயர் சாதியினருக்குத் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பின் தங்கியவர்களுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம் என்பதிலும் இரண்டு கருத்து இருக்க நியாயமில்லை. ஆயினும், இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மட்டும் குறைக்க கூடியதா? குறைக்க முடியுமா? தாழ்த்தப் பட்டவர்கள், மிகவும் பின் தங்கியவர்கள், பின் தங்கியவர்கள் ஆகியோரின் 80 விழுக்காடு பேரின் தரமும் செயல் திறன்களும் முறையாக வளர்க்கப்படுதல் வேண்டும். இன்று பெறும் இந்த வளர்ச்சி தான் உண்மையான நலம் பயக்கும். இடைக்கால ஏற்பாடாக ஒதுக்கீட்டை ஏற்கலாம்.

தாழ்த்தப்பட்டோர், மிகவும் பின்தங்கியோர், எண்பது விழுக்காட்டு மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். மற்ற 20 விழுக்காட்டினர் நகர்ப்புற வாசிகளாக மாறி உள்ளனர். இவர்களில் பலர் வளர்ந்தவர்கள். இவர்கள் தொடர்ந்து வளரவும் நிலைப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இன்றைய கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளின் தரம்... ஐயோ... ஐயோ...! எழுதவும் கூசுகிறது. அவ்வளவு மோசம்! கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளுக்குப் போதிய ஆசிரியர்கள் நியமிப்பதில்லை! போதிய கட்டிட வசதியில்லை. கற்பிக்கும் கருவிகள் இல்லை! பரிதாபகரமான நிலை! இத்தகைய கல்வி நிலையை வைத்துக் கொண்டு உயர்சாதிக்கு ஒப்ப நகர்ப்புறவாசிகளுக்கு இணையாக வளர வேண்டுமென்றால் முடியுமா? ஒருக்காலும் முடியாது. ஆளும் அரசுகளுக்குத் தாழ்த்தப்பட்டவர்களிடத்தில் பின்தங்கியவர்களிடத்தில் பரிவும் அக்கறையும் இருக்குமானால் கிராமப்புறக் கல்வியின் தரத்தைக் கூட்டவேண்டும். இனிய செல்வ, அடுத்து உயர் சாதியினர் என்று கூறப்படுவோர் மட்டுமே முன்னேறியவர்களா? தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சேர்ந்தவர்கள் முன்னேறியவர்களாக இல்லையா? வசதியும் வாய்ப்புமுடையோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என்று ஒதுக்கீடு செய்தால் இச்சாதிகளில் உள்ள முன்னேற்ற நிலையை அடைந்தவர்கள் ஒதுக்கீட்டின் பலன்களை அடைவர். இந்த, தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரில் கடைகோடி மனிதனுக்குச் சென்றடையாது. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கிய ஒதுக்கியச் சலுகை அந்தச்சாதியைச் சேர்ந்த 20 விழுக்காடு மக்களுக்குள்ளேதான் சுழன்றுக் கொண்டிருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக மற்ற தாழ்த்தப்பட்ட குடும்பங்களைப் பொருத்த வரையில் இன்றுவரை எட்டாத கனி தான், அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோர்களின் முன்னேற்றத்துக்கென்று ஒதுக்கிய ஆண்டுகள் 15 ஆண்டுகள்! ஆனால் மூன்று 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தாழ்த்தப்பட்ட சாதியினர் இன்னமும் முன்னேறவில்லை என்பதே உண்மை. அதே போழ்து மற்ற சாதியினர் முன்னேறிய சாதிப்பட்டியலில் உள்ளவர்கள்! ஏன் மற்ற சாதிகளில் கூட அழுக்காறு வளரத் தொடங்கிவிட்டது? தாழ்த்தப்பட்டவர்களிடத்திலும் சலுகை இன்றி முன்னேற முடியாது என்ற இயலாமைக் குணம் தலை காட்டுவதை உணர்தல் வேண்டும். இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட சாதிமுறை மாறாநிலை உருவாகிறது என்பதுதான் உண்மை.

இனிய செல்வ, ஆம்! நீ கேட்பது சரியான கேள்வி! கல்வியைப் பொருத்தவரையில் மக்களை நான்கு பிரிவினராகப் பிரிக்கலாம். மூன்று தலைமுறை வரையில் கல்வியில் முதுகலை அல்லது தொழிற் கல்வி, மருத்துவக்கல்வி, பொறியியற் கல்வி பெற்றிருந்தால் அந்தக் குடும்பம் கல்வியில் முன்னேறிய குடும்பம் என்று கருதிச் சலுகை பெறும் சாதிப் பட்டியலிலிருந்து நீக்கி முன்னேறிய சாதிப்பட்டியலில் சேர்க்கவேண்டும். நமது பாராட்டுதலுக்குரிய முதல்வர் கலைஞர் இந்தத் திட்டத்தை வேறுவகையாக அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது பட்டதாரியே இல்லாத குடும்பத்தினைச் சார்ந்தவருக்கு 5 மதிப்பெண் கூட்டுவது என்ற திட்டம்தான் அது. இதற்குச்சாதி இல்லை; சாதி வேண்டாம்! கல்வியில் பின்தங்கிய குடும்பம் என்ற ஒரே அளவுகோல்! இந்த அளவுகோலைப் பணி இட ஒதுக்கீட்டுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே பலர் விருப்பம். இஃது ஒரு வரவேற்கத்தக்கமுறை. அடுத்து, பொருளாதாரத்தில் மட்டும் பின் தங்கியவர்கள். இவர்களுக்குப் பொருளாதார உதவி மட்டுமே கிடைக்கும். கல்லூரிகளில் இடஒதுக்கீடோ, மதிப்பெண். சலுகையோ கிடைக்காது; கிடைக்கக்கூடாது. அடுத்து, கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள். இவர்களுக்கு இரண்டு உதவிகளும் தரவேண்டும் என்று முறைப்படுத்துவதோடன்றி இதில் பின்னடைவோரைக் குடும்ப அடிப்படையில் கணித்து அட்டைகள் (cards) வழங்கிக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் மேம்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். நிர்ணயிக்கப்பெற்ற மேம்பாட்டு நிலைக்கு வந்தவுடன் அவரும் இவருடைய குடும்பமும் முன்னேற்ற மடைந்த சாதியைச் சேர்ந்த குடும்பமாகக் கருதப்பட வேண்டும். அல்லது முழுதும் முன்னேற்றமடையாமல் இருந்தால் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைகளுக்கும் செல்லலாம். 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை மறு ஆய்வு செய்து அந்தந்த நிலைகளில் இருத்தி மேம்பாடு அடையச் செய்யலாம். இந்த நடைமுறை கல்வியைப் பொருத்த வரையில் ஆகும்.

இனிய செல்வ, அரசுப்பணி மனைகளில் இட ஒதுக்கீடு! இன்று அரசுப் பணிகளுக்கிருந்த மதிப்பீடு குறைந்திருக்கிறது. தன்னம்பிக்கையும் ஆசையும் உடைய சிலர், அரசுப் பணிகளிலிருந்து விலகித் தனியே தொழில் தொடங்குகின்றனர். அல்லது தனியார் துறைப்பணிக்குச் செல்கின்றனர். வேலை வாய்ப்புகளை நிறைய உண்டாக்குவதன் மூலமே வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்கவும் வேலை வாய்ப்புத் துறையில் உள்ள ஆரோக்கியமில்லாத போட்டிகளைத் தவிர்க்கவும் வழி ஏற்படும். அதுவரையில் அரசு அலுவலகங்களில் இரண்டு மூன்று நிலைகளில் பணிபெற்ற குடும்பங்கள் இரண்டு தலைமுறை பணி பெறலாம். கடைநிலை ஊழியர் குடும்பங்கள் மூன்று தலைமுறை வரையில் பெறலாம். ஆனால் அடுத்த நிலைப் பணிகள் அளவுக்கு தரத்தை-தகுதியை உயர்த்திக்கொண்டாலே பெறலாம். அப்படி இல்லையெனில், இரண்டு தலைமுறை மட்டும் தான் பெறலாம். அகில இந்தியப் பணி - முதல்தர நிலைப்பணி பெற்ற குடும்பங்கள் (l.A. S, I.P.S.) பெற்ற அளவிலேயே முன்னேற்றமடைந்த சாதியைச் சேர்ந்த குடும்பங்கள் என்று கருதப்படுதல் வேண்டும். இந்தக் குடும்பங்கள் எதிர்ப்பார்த்தபடி வளராது போனால் பெற்ற வளர்ச்சியை நிலைப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டால் மூன்றாந் தலைமுறையில் சலுகைகளைப் பெறலாம் (ஆயினும் உரிமையாகாது). இனிய செல்வ, வேலை வாய்ப்பைப் பொருத்தவரை, நிறைய வேலை வாய்ப்புக்களை உண்டாக்குவதே தீர்வுக்குள்ள ஒரே வழி. இந்தியா, தனியார் துறையிலும் சரி, பொதுத்துறையிலும் சரி, அரசு திட்டமிட்டால் வேலை வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன; உருவாக்க முடியும்.

இனிய செல்வ, பொதுவாகச் சாதி முறையில் ஒதுக்கீடு உள்ள வரையில் சாதிகள் நிலைப்பாடு கொள்ளும்; சாதிச் சண்டைகளும் ஓயா, நமது நாட்டு இளைஞர்கள் தன்னம்பிக்கையையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். சாதிகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அந்தந்தச்சாதிகளின் குடும்ப அடிப்படையில் மேம்பாட்டுக்குரிய பணி ஒதுக்கீடுகளைக் கால எல்லைக்குட்பட்டுச் செயற்படுத்த வேண்டும்.

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை"

(469)

என்ற திருக்குறள்படி நாம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, மிகவும் பின்தங்கியவர்களுக்கு நன்மை என்று நினைத்துச் செய்வது பின் அவர்களுக்குத் துன்பமாகவும் நாட்டுக்கு நீங்கா இடர்ப்பாடாகவும் தோன்றும். சிந்தனை செய்வார்களா? இன்ப அன்பு

அடிகளார்

50. வேற்றுமையில் ஒற்றுமை

இனிய செல்வ,

'சரித்திரம் திரும்பி வருகிறது’ என்பார்கள்! உனக்கு எப்போதுமே சரித்திரம் திரும்பி வருவது பிடிப்பதில்லை. அதுவும் நம்முடைய நாட்டுச் சரித்திரம் பின் தொடரக்கூடாது. ஏன்? நம்முடைய நாட்டுச் சரித்திரத்தில் பெருமைப்படத்தக்க நிகழ்ச்சிகள் பல உண்டு என்பது உண்மையேயாயினும் அதில் பல சந்தர்ப்பங்களில் உயிர்ப்பு இருந்த தில்லை; பரவலாக நாட்டு மக்களிடையே விழிப்பு இருந்ததில்லை. பல தலைமுறைகளுக்கு ஒர் அறிஞன் தோன்றுவான்; ஒரு மேதை தோன்றுவான்; அத்திபூத்தாற்போல ஒரு சில அரசியல் தலைவர்கள் தோன்றுவார்கள். இனிய செல்வ, நமது நாட்டில் மிகப்பழங்காலமே சிறப்புடையது. வரவரக் கெட்டும் போய்விட்டது! இல்லை. நாட்டை நாம் கெடுத்துவிட்டோம்!

இனிய செல்வ, ஆம்! நிலப்பிரபுத்துவம் தோன்றியது. ஜமீன்தாரிமுறை நாட்டில் தோன்றியது; பண்ணையடிமை முறை தோன்றியது; மதங்கள் தோன்றின; சாதிமுறைகள் தோன்றின; மூடத்தனங்கள் முளை விட்டன; புரோகிதர்கள் தோன்றினர்! இந்தத் தீமைகளை ஊக்கமளித்து வளர்த்த அரசுகள் தொடக்கத்தில் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொண்டன. காலப்போக்கில் நமது நாட்டு அரசர்கள் ஊக்கமளித்து வளர்த்த சக்திகளே அரசர்களை அழித்தன. இனிய செல்வ, அந்நிய ஆட்சிகள் வந்தன! அந்திய ஆட்சிகளும் இந்தியர்களுக்குள் பிரிவினைகளை வளர்த்தே தம் ஆட்சியை நிலைப்படுத்தின. ஆயினும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகள் வரலாற்றுப் போக்கில் படுதோல்வி அடைந்தன.

அண்ணல் காந்தியடிகள் நமது நாட்டின் பொது வாழ்க்கையில் கால் எடுத்து வைத்தார்; குறுகிய புத்திகளால் கூன் விழுந்து கிடந்த இந்திய சமூகத்தை உற்று நோக்கினார்! கூனை நிமிர்த்தார்! சாதிகளை மறந்தோம் மதங்களும் தத்தம் செல்வாக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டன. இனிய செல்வ, எல்லாரும் "இந்திய”ரானோம்! நாடு விடுதலை பெற்றது. இனிய செல்வ, நாடு விடுதலை பெற்றதும் மக்களாட்சி தோன்றியது! மக்களாட்சி தோன்றிய பிறகு நமது வரவாறு பழைய நிலைக்குப் போகிறது! இனிய செல்வ. இது நல்லதா? பழைய வரலாறு திரும்புகிறது! அன்று மன்னர்கள் செய்தார்கள்! இன்று ஆள்வோரே செய்கின்றனர்! இன்றும் சாதிகள் வளர்க்கப்படுகின்றன! வர்க்கப்போருக்குப் பதில் சாதீயச் சண்டை நடக்கின்றன! ஏன்? மக்களிடையே மீண்டும் சாதீய மனோநிலைகளைத் தோற்றுவித்து அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். அரசை, அதிகாரத்தைப் பாதுகாக்கும் உத்தியாக மேற்கொண்டுள்ளனர். இன்று அரசியல் பிரச்சனையே பூதாகரமாகக் காட்டப்படுகிறது. மனித உறவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தவறுகின்றோம். நம்மால் இன்று அலட்சியப்படுத்தப்படுவது நாட்டின் அடிப்படை பிரச்சனைகளே! அதாவது, மனித நேயத்தை, மனித உறவுகளை அலட்சியப்படுத்துகின்றோம். இனிய செல்வ, நமது நாட்டிலும் சரி, உலக நாடுகளிலும் சரி முற்காலத்தில் மனித உறவுகள் போற்றி வளர்க்கப்பெற்றன. சாதிகள், மதங்கள், அதிகாரங்கள், மரியாதைகள், சம்பிரதாயங்கள் இவைகளைக் கடந்த நிலையில் நமது நாட்டில் ஒரு காலத்தில் மனிதம் மதிக்கப் பெற்றது; சமுதாய உறவுகளில் நிதானம் இருந்தது.

இன்று அந்த நிதானம் எங்குப் போயிற்று? நிதானம் முன்னேற்றத்துக்கு முரண்பட்ட ஒழுக்கமா? இல்லை, பகைத்துத்தான் வாழவேண்டுமா? எதையாவது ஒன்றை இழந்தால்தான் வாழ இயலுமா? இயலாதா? பழைய ஞானத்துடன் விஞ்ஞானம் இணையாதா? பாபர் மசூதியை இழந்தால்தான் இராமர் கோயில் தோன்றுமா? இனிய செல்வ, நாம் போகிற போக்கைப் பார்த்தால் ஞானம்-விஞ்ஞானம் என்ற இரண்டையுமே இழந்துவிட்டு சாதிகளையும் மதங்களையும் சண்டைகளையும் தான் பாதுகாப்போம் போலத் தோன்றுகிறது. இது விரும்பத்தக்க தல்ல.

இனிய செல்வ, உலகில் வேற்றுமைகளே அதிகம். அதிலும் இந்தியாவில் வேற்றுமைகள் ஏராளம்! நாம் வேற்றுமையைத் தேட வேண்டாம். அவை எளிதில் புலனாகின்றன. ஆயினும் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமையைக் காண்பதை. வளர்ப்பதை விழுமிய குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். எண்ணத் தொலையாத சாதிகள் உள்ளன. மண்டல் குழுப் பட்டியல்படி 3743 சாதிகள்! இந்தியாவில் நூற்றுக் கணக்கான மதங்கள்! அரசியல் கட்சிகள் பலப்பல! இப்படி இந்தியா இன்று பலப்பல குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தக் குழு மனப்பான்மையை அரசுகள் ஊக்கமளித்து வளர்க்கின்றன. எங்கும் உட்பகை! இதனால் இந்தியா இன்று வேந்தமைவு இல்லாத நாடாக ஆகி வருகிறது. எங்கும் கலவரம்! கொலைகள்! தற்கொலைகள்! அரசுடைமைப் பொருள்கள் இழப்பு! ஏன் அரசே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இனிய செல்வ,

"பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு"

என்ற திருவள்ளுவர் வாக்கு உண்மையாகி வருகிறது. இன்ப அன்பு

அடிகளார்

51. வருவாய்க்காக வழிமாறற்க!

இனிய செல்வ,

நமது தமிழகத்தில் மலிவு விலை மதுக்கடைகள் "நாட்டு மதுக்கடை" என்ற பெயரில் திறக்கப்பட்டு விட்டன. இது ஒரு வருந்தத்தக்க நிகழ்ச்சி. அதுவும் வள்ளுவர் கோட்டம் கண்ட பெருந்தகை கலைஞர் ஆட்சியில் மலிவு விலை மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏன், கலைஞர் உளமாரச் செய்கிறாரா? இல்லை! செய்யவேமாட்டார். இது முக்காலும் உண்மை! சத்தியமும் கூட! அப்படியானால் ஏன் திறக்கிறார்? நிதி நெருக்கடி, கள்ளச் சாராயம் இவைகளைக் காரணம் காட்டுகிறார். இனிய செல்வ, இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆயினும், நிதி நெருக்கடி அரசுக்கு! அரசு தனது நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண மக்களுக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கலாமா? அதுவும் கிராமப்புற ஏழை மக்களுக்கு உண்டாக்கலாமா? அரசாவது முயன்றால் புதிய வருவாய்களைத் தேடலாம்; தேட முடியும். அரசுக்கு வருவாய்க்குரிய வாயில்கள் ஏராளம்! அரசு தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள மக்களைச் சுரண்டுவது சிறந்த பொருளாதாரக் கொள்கையல்ல!

இனிய செல்வ மலிவு விலை மதுக்கடை மூலம் 530 தோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கிறது அரசு. அரசுக்கு 530 கோடி ரூபாய் வருவாய் வர, கிராமப்புற ஏழை மக்கள் 5000 கோடி ரூபாய்க்குக் குடித்தாக வேண்டும். இவ்வளவுக்கு அவனிடம் பணம் ஏது? கிராமப்புறத்தான் ஏற்கெனவே ஏழை! வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றான். நியாய விலைக் கடையில் அரிசிக்குக் கூடை தாங்கிக் கால்கடுக்கத் தவம் செய்கிறான். அவனிடம் ஏது காசு! கிராமப்புறத்துக் குடிமக்களுக்குக் குடியை அறிமுகப்படுத்துவது கொடிய முதலாளித்துவத்தின் செயல் என்று லெனின் கூறினார். இவையெல்லாம் கலைஞருக்குத் தெரியாததா? அப்புறம் ஏன் செய்தார்? அதுதான் புரியவில்லை! இனிய செல்வ, நமக்கொன்று புரிகிறது. தெளிவாகப் புரிகிறது. கலைஞர் இனந்தெரியாத அறச்சங்கடத்தில் இருக்கிறார். ஆதலால், விரைவில் மீண்டும் மதுவிலக்கை கலைஞர் அறிமுகப்படுத்துவார் என்றே நம்புகின்றோம். இனிய செல்வ, ஏன் முன்பு 1972இல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டபோது நாம் மேலவை உறுப்பினர். நாம் அரசுக்குச் சாதகமாக வாக்களிக்கவில்லை. சும்மா இருப்பார்களா? கலைஞரிடம் நமது நிலை தி.மு.க. அரசுக்கு எதிரான நிலை என்று கூறியுள்ளனர். எப்போதும் நம்பால் பழமை பாராட்டும் கலைஞர் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்கொள்ளாதது மட்டுமல்ல, நமது நிலையை அவர் புரிந்து கொண்டு வாதாடி யிருக்கிறார். அப்போது கலைஞர்,

"களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தா னைத் தீத்துரீஇ யற்று

(929)

என்ற குறளை எடுத்துக்காட்டாகக் கூறினார். நீருக்குள் அமிழ்ந்தவன் உயிர் பிழைத்தல் அரிது. மதுப்பழக்கத்தில் மூழ்கியவன் உய்தல் என்பது இல்லை. இந்தக் கருத்துப் பொதிந்த குறளை நமக்கு எடுத்துக்காட்டியவர் கலைஞர் தான்! ஆதலால் கலைஞர் விரைவில் பூரண மதுவிலக்கை மீண்டும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனிய செல்வ, அதேபோழ்து நமக்கும் ஒரு பெரிய கடமை இருக்கிறது. இனிய செல்வ, என்ன கடமை என்றா கேட்கிறாய்? அதுதான் மக்களிடம் கள்ளுண்ணலின் கொடுமையை உணர்த்துவது! இந்தக் கடமையை உணர்ந்து இன்று செய்வார் யார்? இன்று நமது நாட்டில் சமூகச் சிந்தனையாளர்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. இனிய செல்வ, கலைஞரின் கொற்றம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி கேட்க நமக்கு உரிமை இருக்கிறது! அந்த உரிமையைப் பாராட்டுக்குரிய கலைஞர் மறுத்ததில்லை. இனிமேலும் மறுக்கமாட்டார்! மறுக்காதது மட்டுமல்ல. கவலையுடனும் கவனத்துடனும் ஆய்வு செய்வார்! செய்யக் கூடியதைச் செய்வார்! நம்புவோமாக! இன்ப அன்பு

அடிகளார்

52. நாடுக நடுநிலை

இனிய செல்வ,

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது நமது திருக்குறள். அன்றே மானிட சமுதாயம் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் அமைதி வழியில் நடைபோட நடுவுநிலைமைப் பண்பு தேவை என்றார் திருவள்ளுவர். மனிதன் சார்புகளில் சிக்கித்தவிப்பவன்; உழல்பவன் அவனுடைய சுபாவங்கள் இயல்பாகவே சார்புகளைச் சார்ந்தே அமையும். ஒரோவழி சார்புகளிலிருந்து விடுதலை பெற்றாலும் ‘உலகம்’ பைத்தியக்காரன் என்று ஏசும்! வாழவிடாது. இதுவே சென்ற கால வரலாறு.

இனிய செல்வ, நடுவுநிலை என்பது சார்புகளினின்று நீங்கிய குணம். நடுவு நிலைமைப் பண்பு நன்மையை, உண்மையை, நேர்மையை மையமாகக்கொண்டு வளரும் பண்பு. நடுவு நிலைமைக்கு விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. நடுவுநிலைப்பண்பு கற்றறிந்த அறிஞர்களுக்கே உரியது. புலனழுக்கற்று யார்மாட்டும் அருள்புரிந்தொழுகும் சீலமுடையோரே நடுவுநிலை நெறி நிற்பர். இனிய செல்வ, நடுவுநிலையின் இலக்கணத்தைத் திருக்குறள் விளக்குவதை அறிவாயாக!

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி"

(118)

இனிய செல்வ! கடைக்குள் பண்டங்கள் வாங்கச் சென்றிருக்கிறாயா? அங்குப் பண்டங்களை நிறுத்துக் கொடுக்கும் தராசு பார்த்திருக்கிறாயா? பழைய காலத்தில் அந்தத் தராசை முதலில் தூக்கி, தராசு சமநிலையில் இருப்பதைக் காட்டுவர்! அதாவது தராசில் கோளாறு இல்லை என்பதைக் காட்டுவர்! பின் நிறுப்பர்! முதலில் தராசின் வேறுபாடற்ற-பழுதற்ற சமன் நிலையைக் காட்டு தலை, “சமன்செய்து” என்றார் திருவள்ளுவர். இனிய செல்வ, ஒரு சிக்கலுக்குத் தீர்வு செய்பவர் முதலில் சார்பின்றி, சமநிலையில் இருதரப்பார் செய்திகளையும் உற்றறியும் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும். அவர்களே சான்றோர்! இனிய செல்வ, இன்று நாம் சான்றோரைக் காண முடிகிறதா? இல்லை! ஏன்? எல்லாரும் சாதி, மதம், எனது, உனது, புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகியவற்றில் சிக்கிக் கொண்டவர்களாகவே விளங்குகின்றனர்.

இனிய செல்வ, உலக நாடுகள் பேரவை ஐ.நா. சபை அமைந்திருக்கிறது. ஆனால் ஐ.நா. சபையில் இடம் பெற்றிருப்போர் சான்றோர்களா? உலக சமாதானத்தைப் பேணி, உலகத்தை ஆக்கவழியில் உய்த்துச் செலுத்த வேண்டிய ஐ.நா. சபை ஓரஞ்சார்ந்து நடைபோடுவது போலத் தெரியவில்லையா? அமெரிக்காவின் கை. ஐ.நா சபையில் ஓங்கியிருப்பதுபோல் இல்லையா? இனிய செல்வ! வளைகுடாப் போர் வந்துவிட்டதே! ஏன்? ஈராக் அதிபர் சதாம்உசேன் மட்டுமா காரணம்? இல்லை! ஐ.நா., சபையும் காரணம்.

இனிய செல்வ, செய்தித் தாள்களில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் என்ற பெயர்கள் அடிக்கடி அடிபடுவதைப் பார்த்திருப்பாய்! பாலஸ்தீனத்தின் எல்லைச் சிக்கல் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களால் மேற்கத்திய வல்லரசுகள் அடிக்கடி தம் போக்கிற்கேற்ப, இந்த நாடுகளின் எல்லையை மாற்றிக் கொண்டே வந்துள்ளன. இனிய செல்வ, கடைசியாக 1967-இல் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையையும் காசாஸ்டியையும் 6 நாள் போரில் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த ஆக்கிரமிப்பினால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அராபியர்கள் நாடற்றவர்கள் ஆயினர். இந்த ஆக்கிரமிப்புக்கு நாடற்றவர்களான அராபியர்களுக்கு இதுவரையில் என்ன தீர்வு என்றே தெரியவில்லை. ஐ.நா. பாதுகாப்பு சபை மெளனம் சாதிக்கிறது. அப்படியானால் குவைத்துக்கு மட்டும் என்ன அவசரம் வந்தது? இராக் அதிபர் சதாம் உசேன் என்ன கேட்கிறார்? பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு நீதி கேட்கிறார்! இதற்குப் பதிலே இல்லை! இதுதான் ஐ.நா. சபையின் குறிக்கோளாக இருப்பின் ஐ.நா சபையே ஒரு பஞ்சாயத்துப் படையை அனுப்பி மீட்கலாமே! ஏன் பன்னாட்டுப் படைக்கு அனுமதி வழங்கவேண்டும்? இவையெல்லாம் புரியாத புதிர்! இனிய செல்வ, குவைத்தை மீட்பதுதான் அமெரிக்காவின் நோக்கமா? ஐ.நா. சபையின் நோக்கமா? அப்படியானால் ஈராக்கின் மீது குண்டு மழை பொழிவானேன்? ஈராக் மக்கள் என்ன தவறு செய்தார்கள்? இனிய செல்வ, அமெரிக்காவுக்கு, போர்க் கருவிகள் செய்வதும் விற்பதுமே ஒரு பெரிய தொழில். கடன் கொடுப்பதும் கடன் வாங்கிய நாடுகளின் வாக்குகளை ஐ.நா. சபையில் பெறுவதும் அமெரிக்காவின் சாகசம்.

இனிய செல்வ, வீட்டிலும் நாட்டிலும் நடுவு நிலைமை தேவை. உலகிலும் நடுவு நிலைமை தேவை. அதுவும் ஆளுவோருக்கு இன்றியமையாத தேவை நடுவுநிலைப்பண்பு. நடுவுநிலைமை போற்றும் இயல்பு வளர்ந்தாலே சமூகம் வளரும்! வாழும்! சான்றோர் வீதிதோறும் காணப்படுதல் வேண்டும். வளைகுடாப் போர் அமைதியாக இனிதே முடியவேண்டும். ஈராக் அதிபர் சதாம் உசேன் போரினை நிறுத்த முன்வர வேண்டும். இது நமது விருப்பம்! உலக மக்கட் சமுதாயத்தின் விருப்பம். இனிய செல்வ, பொறுத்திருந்து பார்ப்போம்! மீண்டும் எழுதுகின்றோம். இன்ப அன்பு

அடிகளார்

53. அமெரிக்கா எண்ணிப்பார்க்குமா?

இனிய செல்வ,

வளைகுடாப்போர், தற்காலிக ஓய்வு பெற்றிருக்கிறது. போர் நிலையாக நிற்க உலக நாடுகள் அவை துணை செய்ய வேண்டும். துணை செய்யும் என்று நம்புவோமாக.

இனிய செல்வ, வளைகுடாப்போர் இரண்டு அநியாயங்களுக்கிடையில் நடந்த போர். அமெரிக்காவின் அநியாயம் 35 விழுக்காடு ஈராக்கின் அநியாயம் 25 விழுக்காடு உலக நாடுகள் சபையின் அநியாயம் 40 விழுக்காடு இப்படித்தான் அநியாயத்தைப் பங்கு போட வேண்டியிருக்கிறது. ஆம்; குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தது குற்றம் குற்றமே! ஆக்கிரமிப்புக்குப்பின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பைக் காரணங்காட்டியது. காரணத்தில் உண்மை இருக்கிறது. சொன்ன ஈராக் அதிபரிடத்தில் தான் உணமை இல்லை. இனிய செல்வ, அமெரிக்காவுக்கு இந்த உலகில் குவைத் ஆக்கிரமிப்பு மட்டுந்தானே தெரிந்தது. பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நடந்து எத்தனை ஆண்டுகளாயிற்று. அமெரிக்காவின் கண்ணை உறுத்துவது ஈராக்கின் ஆக்கிரமிப்பு அல்ல. குவைத்தின் எண்ணெய் வளம்! ஆம்; குவைத்தின் எண்ணெய் வளம் இனி அமெரிக்காவின் ஆஸ்தி போல! உலகநாடுகள் பேரவை! இல்லை, இல்லை? வல்லாளர்கள் கை ஓங்கும் பேரவை! அமெரிக்காவின் எடுபிடிகளாகச் சில நாடுகள் உலக நாடுகள் பேரவையில் இடம் பெற்றுள்ளன! இவை கை தூக்கிகள்! இனிய செல்வ, கொரியாவில் -வியத்நாமில் சண்டை நடந்தபோது உலக நாடுகள் பேரவை தனது படையை அனுப்பியது. அதுபோல உலக நாடுகள் பேரவை இன்று செய்யாதது ஏன்? இந்த அநியாயம்தான் உலக நாடுகள் பேரவை செய்தது! நமது நாட்டில் ஆட்சிகள் இல்லாத தனி நபரைக் கட்சியில் சேர்த்துக்கொண்டு "சர்வ கட்சி” என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோலத் தான் பன்னாட்டுப் படை!

இனிய செல்வ, உலக நாடுகளின் பந்தோபஸ்து சபை குவைத்தை மீட்கத்தான் பன்னாட்டுப் படைக்கு அனுமதி தந்தது. ஆனால் தாக்கி அழிக்கப்பட்டவரோ ஈராக் மக்கள்! ஏன் இந்தக் கொடுமை? தட்டிக் கேட்க உலக அரங்கிலேயே யாரும் ஆள் இல்லையா? அந்தோ பரிதாபம்! இனிய செல்வ, வளைகுடாப்போர் ஓய்ந்து விட்டது. ஆனால் போரின் விளைவுகள் என்ன? ஈராக்கையும் குவைத்தையும் திரும்ப எடுத்துக் கட்ட பல்லாயிரம் கோடி தேவை. எண்ணற்ற குடும்பங்கள் நிராதரவாக உள்ளன. இவற்றிற்கெல்லாம் தீர்வு காண வேண்டும்.

இனிய செல்வ, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விளைவு தோன்றினால் என்ன செய்வது? இனிய செல்வ, விளங்க வில்லையா? ரெளடிகள் முதலில் இளைத்தவனைத் தான் தாக்குவார்கள். பின் வாழ்க்கையாகிவிடும். எல்லாரையும் தாக்குவார்கள். ஈராக்கைத் தாக்கி வெற்றி கண்ட அமெரிக்கா, நாளை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளாகிய வளர்முக நாடுகளிடத்தில் எப்படி நடந்து கொள்ளும்? ஏன் நமது இந்தியாவிடமே எப்படி நடந்து கொள்ளும்? 'சண்டித்' தனத்தைக் காட்டாது என்று நம்புவதற்கு என்ன உத்தரவாதம்? இனிய செல்வ, இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாடுகள் தனித்தனியே படைவைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான்! ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடாது! உலக நாடுகளின் பேரவை மட்டுமே படைவைத்துக் கொள்ள வேண்டும். உலக நாடுகள் பேரவை கூட வைத்திருக்க அனுமதிக்கப் பெற வேண்டியது அமைதிப்படையே தவிர, ஆக்கிரமிப்புப்படையல்ல. இனிய செல்வ, இந்த ஒரே வழிதான் உலகத்திற்குத் தீர்வு! அமெரிக்கா ஒத்துக்கொள்ளுமா? அமெரிக்காவின் தொழிலே போர்க் கருவிகள் செய்து சந்தையில் விற்பது தானே! அமெரிக்காவின் அணுகுமுறை அடியோடு மாறினால்தான் உலகத்திற்குப் பாதுகாப்பு; சமாதானம்!

அமெரிக்கா எண்ணிப்பார்க்குமா? அமெரிக்காவை மற்ற நாடுகள் நிர்பந்தப்படுத்துமா? அமெரிக்க மக்கள் தங்கள் அரசைப் போர் அற்ற அரசாக அமைக்க முன்வருமா? வளைகுடாப் போரில் அமெரிக்க வீரர்கள் இறக்க வில்லையா? அமெரிக்காவிற்கு இழப்பு இல்லாமலே ஈராக்கிற்கு இழப்பு உண்டாக்க முடிந்ததா? முடியுமா? போர் ஆயுதம் செய்தலைத் தொழிலாகக் கொண்ட நாடு, போர் மூலம் தீர்வு காண முயலும் ஒரு நாடு எப்படி அழியாமல் இருக்க முடியும்? இன்றில்லையானாலும் எதிர்காலத்தில் போரைச் சாதனமாக உடைய நாடு, நடுவுநிலை பிறழ்ந்து போனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும் நாடுகள் வரலாற்றில் நிலை நின்றதில்லை. அவைகளுக்கும் அழிவு வரும்.

இனிய செல்வ நமது திருக்குறள்,

"கெடுவல்யான் என்பதறிக தன்நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்”

(116)

என்றருளிய திருக்குறளை எண்ணுக! அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இந்தத் திருக்குறளை - திருக்குறளின் பொருளை எண்ணிப்பார்த்துத் திருந்த வேண்டும். இன்ப அன்பு

அடிகளார்

54. யாரைத் தேர்ந்தெடுப்பது?

இனிய செல்வ,

நாடு, தேர்தலைக் காண இருக்கிறது. இந்த உலகம் கண்ட ஆட்சி முறைகளில் மக்களாட்சி முறையே சிறந்தது. ஆனால், மக்களாட்சி முறை வெற்றி பெறுவது எளிதன்று. மக்களாட்சி முறை வெற்றி பெற வாக்காளர்கள் அறிவும் தெளிவும் உடையவர்களாக வேண்டும். நமது நாட்டில் 77 விழுக்காடு எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் வாழும் நாடு. இனிய செல்வ, நமது தேர்தல் முறை எளிதன்று. ஆதலால், நமது தேர்தல் மக்களாட்சிப் பண்புகள் தழுவிய தேர்தல் அல்ல. சாதிகள் தேர்தலில் வெற்றி பெறுகின்றன. பணம் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிறது. மதங்கள் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றன. கவர்ச்சிகள் ஏன் மெள்ள மெள்ள வன்முறையுங் கூடத் தேர்தல் சாதனங்களாக வளர்ந்து வருகின்றன.

இனிய செல்வ, வாக்காளர்களின் தரம் உயர்ந்தால் தான் ஆட்சியின் தரம் உயரும். திருவள்ளுவர் வாக்களிப்பதற்கு முன் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டிய திருக்குறள் ஒன்று தந்துள்ளார்.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்"

என்பதுதான் அந்தத் திருக்குறள்; இனிய செல்வ, ‘இதனை’ என்பது என்ன? இன்றைய நாட்டின் நலனே என்று கொள்ளலாம். இன்று நமது நாடு நன்றாக இல்லை; வலிமையாக இல்லை! வளமாக இல்லை. ஒரு நலமுடையதாக இல்லை. நமது நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. கடனில் மூழ்குகிறது. எங்கும் கையூட்டு வழக்கமாகி விட்டது. வேலை இல்லாத் திண்டாட்டம். இனிய செல்வ, கையூட்டும் சார்புகளும் இல்லாத அரசு அமைய வேண்டும். மக்களுக்கு இலவசங்கள் வழங்காமல் கடின உழைப்புடையவர்களாகிட வழி நடத்த வேண்டும். மக்கள் உழைப்பால் படைக்கப்பெறும் வளத்தைச் சுரண்டுபவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். நல்ல தரமான கல்வியறிவு வழங்கப்பெறுதல் வேண்டும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடைய நீண்ட ஆயுளுடைய அரசாக விளங்க வேண்டும். மூன்று கால் ஒட்டங்கள் அரசுக்கு ஆகாது.

இனிய, நல்ல, பலமுள்ள நாட்டின் நிலைமைகளைச் சீர் செய்யக் கூடிய அரசை அமைக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு தாம் பொறுப்பேற்று அமைக்க இருக்கும் அரசைக் கருவியாகக் கொண்டு வளமான நாடுகாணவும், வேலை வாய்ப்புப் பெருகி வளரவும் தூய்மையான உயர் நோக்குடைய அரசை எந்த அணி அமைக்கும் என்பதை ஆராய்ந்து வாக்குகள் அளிக்க வேண்டும். ஆளும் வேட்கையுடன் முனைப்புடன் தேர்தலில் நிற்பாரை எங்ஙனம் ஆய்ந்தறிவது? தேர்தலில் நிற்பவர்களுடைய சென்ற கால வரலாறுதான் சிறந்த கருவி. சென்ற காலத்தில் அவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? பணம் எவ்வளவு சேர்த்தார்கள்? ஆடம்பரமாகப் பவனி வந்த நிலைமைகள் நாட்டை வீட்டுக்குக் கொண்டு போனார்களா? வீட்டை நாட்டுக்குக் கொண்டு வந்தார்களா? என்று ஆய்வு செய்க! குறிப்பாகச் சென்ற காலத்தில் பதவியில் இருந்திருப்பார்களாயின் அவர்களுடைய நடையினை உய்த்தறிக. இன்று வாக்காளர்களைச் சந்திக்க வருவது எதற்காக? மக்களுக்குத் தொண்டு செய்யவா? அதிகாரத்தைச் சுவைத்து அனுபவிக்கவா? ஆராய்க; கூர்ந்து ஆராய்க! ஆராய்ச்சியின் முடிவில் யார் தேர்தல் மூலம் பெறும் ஆட்சி அதிகாரத்தை மக்களுக்கே; மக்கள் நலத்துக்கே பயன்படுத்துவார்கள் என்று யாரிடம் வாக்காளர்களுக்கு நம்பிக்கை வருகிறதோ அவர்களிடமே வாக்குச்சீட்டின் மூலம் ஆட்சி அதிகாரத்தை ஒப்புவிக்க வேண்டும். இனிய செல்வ, இது திருவள்ளுவர் காட்டும் தேர்தல் முறை. திருவள்ளுவர் கூறும் வாக்களிப்பு முறை. வெற்றி பெற்றால் நாடும் வளரும்; நாமும் வளர்வோம்! இன்ப அன்பு

அடிகளார்

55. பெருமை பெருமிதம் இன்மை

இனிய செல்வ,

அயல்நாட்டுப் பயணத்தின் விளைவாக, சென்ற மடல் எழுத இயலவில்லை. பொறுத்துக்கொள்க. நமது நாடு எங்கோ திசைமாறிச் சென்றுகொண்டிருக்கிறது; தறிகெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. மக்களாட்சி முறையில் கொலை பயிலும் கொடியோர், இழிவுபடுத்தும் இழி மனத்தினர் நடைபயில்வது விரும்பத்தக்கதல்ல. அவை அறவே வெறுத்து ஒதுக்க வேண்டியன. நம் நாட்டு மக்களுக்கு இந்தத் துணிவு என்று வரும் ?

இனிய செல்வ, தமிழ் நாட்டின் அரசியலில் புரட்சிச் செல்வி ஜெயலலிதா அவர்கள் இழிவு, அவமானம் இவைகளைத் தாங்கிக்கொண்டு போர்க்குணத்துடன் போராடி மாபெரும் வெற்றியைப்பெற்று முதல்வராகியுள்ளார். அவர் தம் கொற்றம், நாளும் நன்மைபெருகி வளரும் வகையில் பணிகளை இயற்றும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளார்கள்.

புரட்சிச் செல்வி ஜெயலலிதா அவர்களின் வெற்றியைப் பயனுடையதாக்கும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சித் தொண்டர்களும் நடந்து கொள்ளவேண்டும். "நிறை கர்ப்பிணி நிறை குடத்தைத் தூக்கிக்கொண்டு நடப்பது போல நடக்க வேண்டும்” என்பது அறிஞர் அண்ணா தந்த அறிவுரை. இனிய செல்வ, வெற்றியைப் பெறுவது எளிது. அந்த வெற்றியைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கு நல்ல பண்புகளும் கூடுதலான முயற்சியும் தேவை. இனிய செல்வ, பெருமை எளிதில் வரலாம்; கிடைக்கும். அந்தப் பெருமை நம்மிடம் செருக்கைத் தந்துவிடக் கூடாது, யார் மாட்டும் எளியராக, இரவன் மாக்களைப் போல எளிய மொழிகளைப் பேசி உறவுகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். பெருமிதம் என்ற தவறான குணம் வந்து சாராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த இனிய பண்பாட்டை மாண்புமிகு முதல்வர் அவர்களின் தொலைக்காட்சிப் பேட்டி எடுத்துக் காட்டியிருக்கிறது. அதாவது ஆட்சியின் உறுப்புக்கள்-காவல் துறையினர். ஆட்சித்துறை அலுவலர்கள் மீது எந்தக் குறையும் சொல்லாதது மட்டுமின்றி அவர்களுடைய திறமையை வியந்து கூறியமை உணர்த்துகிறது. இது ஒரு நல்ல மரபு. ஆதலால், வெற்றி பெற்றதைவிட இந்த வெற்றியைப் பாதுகாத்துக் கொள்வதிலும் பயனுடையதாக்குவதிலும் அதிகக் கவனம் தேவை; ஆற்றல் மிக்க முயற்சி தேவை.

பெருமை பெருமிதமின்மை சிறுமை

பெருமித மூர்ந்து விடல்

(979)

இந்த இயல்பை, அ.இ.அ.தி.மு.க. கட்சியினர் பெற்று விளங்கி மாண்புமிகு முதல்வருக்கு உற்ற துணையாக அமைய வேண்டும் என்பது நமது விருப்பம். இன்ப அன்பு

அடிகளார்

56. நடந்தாய் வாழி காவேரி

இனிய செல்வ,

மானுடத்தை உந்திச்செலுத்தி வரலாறு படைக்கும் திசைநோக்கி நகர்த்துவது மனிதரின் எண்ணங்களேயாம். மனிதனின் எண்ணங்களுக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. இனிய செல்வ, திருக்குறள்,

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்"

என்றது. ஒரு மனிதர் தாம் எண்ணியவாறே எண்ணியவற்றை அப்படியே அடைவர் என்பது திருக்குறள் கருத்து. ஆம்! உண்மை! இன்று பலருக்கு என்ன செய்யவேண்டும் என்று எண்ணும் பழக்கமே இல்லை! கேட்டதைச் செய்கிறார்கள்! சொல்வதைச் செய்கிறார்கள்! கைக்கு வந்ததைச் செய்கிறார்கள். ஆழ்ந்த எண்ணத்திலிருந்து செயல்கள் முகிழ்க்காத தன் காரணமாக, செயல்கள் செய்வதில் துணிவான, ஆர்வம் செறிந்த இலக்கு உணர்வுடன் கூடிய துடிப்பு இருப்பதில்லை. அதன் காரணமாகப் பயனும் விளைவதில்லை. இலக்குடன் கூடிய வாழ்க்கைக்கு எண்ணங்களே வித்துக்கள்! எண்ணங்கள்தான் முளைத்துச் செடியாகி மரமாகிப் பயன் தருகின்றன. எண்ணம் போல வாழ்வு என்ற பழமொழியை உணர்க!

எண்ணினால் மட்டும் போதாது. எண்ணத்தை அடையும் செயற்களத்தில் போர்க்குணத்துடன் போராட வேண்டும். தடைகளுக்கும் துன்பங்களுக்கும் அஞ்சி தயங்கிப் பின்னடைவாக நின்று விடக்கூடாது. எண்ணத்தில் திண்மை வேண்டும். இனிய செல்வ, கொட்டகை போடும் தொழிலாளர் கொட்டகை போடுதற்குக் குழிதோண்டிக் காலூன்றுவார். காலை ஊன்றி மண்இட்டு மூடியபிறகு தூணாக நிற்கும் கம்பை ஆட்டி அசைத்துப் பார்ப்பார். ஆட்டம் இல்லையானால் கொட்டகைக் காலின் உறுதிப்பாட்டை அறிந்து கொண்டு கொட்டகை போடுவார். அதுபோல வாழக்கை பற்றிய - வாழ்க்கையின் இலக்கு பற்றிய எண்ணம் வேண்டும். உறுதியாக எண்ண வேண்டும். அப்போது எண்ணியதை அடையலாம்.

இனிய செல்வ, "காவிரி போற்றுதும்! காவிரி போற்றுதும்" என்று போற்றிப் புகழப்பட்ட காவிரியின் நீர்ப்பிரச்சினை பற்றி 100 ஆண்டுகளாக விவாதம் நடந்து கொண்டே வருகிறது; காரியம் ஒன்றும் ஆகவில்லை. இன்று தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் புரட்சித்தலைவி அவர்கள் காவிரி நீர் தாவாவுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று எண்ணினார். உறுதியாக எண்ணினார். இன்று காவிரி நீர் தாவாவைப் பற்றி எல்லாரும் பேசுகின்றனர். மத்திய மாநில அரசுகள், இந்திய உயர்நீதி மன்றங்கள், பாராளுமன்றம், சட்டமன்றங்கள் இப்பிரச்சினை பற்றிப் பேசத் தலைப்பட்டுள்ளன; விவாதிக்கத் தலைப்பட்டுள்ளன; செய்தித்தாள்கள் பலமான விவாதத்தை நடத்துகின்றன. இது ஒரு நல்ல அறிகுறி! இங்ஙணம் காவிரி நீர் தாவாவை நாடுதழுவிய நிலையில் விவாதிப்பது விரைந்து முடிவுக்கு வரத் துணையாக அமையும்.

இனிய செல்வ, இது மட்டுமா? தமிழக மக்களாகிய "நாமும் காவிரியில் தண்ணீர் தேவை! ஆடி பதினெட்டு விழாவிற்குத் தண்ணீர் தேவை, தஞ்சையின் நஞ்சைகள் பழையகாலம் போல் நெற்களஞ்சியமாக வேண்டும்” என்று எண்ணினோம்; திண்ணமாக எண்ணினோம். அந்த எண்ணத்தின் ஆவேசம் இயற்கையைக் கூட இயக்கியிருக்கிறது! ஆம்! பருவ மழை காலத்தில் பெய்யத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் கொள்ளளவு போக எஞ்சிய தண்ணீர் கொள்ளிடம் வழியாகக் கடலுக்கு அனுப்பப்படுகிறது! ஆடிப் பதினெட்டாம் பெருக்கு நாளன்று நாம் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடினோம். கர்நாடக மாநிலத்தார் தண்ணீர் தர மறுத்ததாலும் இயற்கை - இயற்கையையே திருமேனியாகக் கொண்டுள்ள இறைவன் தமிழக மக்களின் எண்ணத்திற்கு வெற்றியைச் சேர்த்துள்ளான்.

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்”

இன்ப அன்பு

அடிகளார்

57. மார்க்சியம் தோற்றுவிட்டதா?

இனிய செல்வ,

சோவியத் நாட்டில் கவலை தரத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆம்! கொர்பசேவின் மறுசீரமைப்புக் கொள்கைக்குச் சோதனை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமா? மனித குலத்தின் சிக்கல்களுக்குத் தீர்வுகாண வழிகாட்டும் மார்க்சியத்துக்கும் சோதனை ஏற்பட்டுள்ளது. இனிய செல்வ, இவையெல்லாவற்றையும் நாம் வியப்புடனோ அல்லது வருத்தத்துடனோ பார்க்கவில்லை! மனித குலத்தின் கடந்தகால வரலாற்றை நோக்கின் இது வரலாற்றின் நிகழ்வு தான்! அதிசயம் ஒன்றும் இல்லை! என்று எண்ணுகிறோம்.

ஆம்! மனிதகுலம் எப்போதும் ஒன்று பட்டதில்லை; ஓரணியாக நின்றதில்லை! மனிதன் குழு மனப்பான்மையுடையவன். எப்பொழுதும் ஓரமைப்பில் உள்ளவர்கள் கூட ஒன்றாக இருக்கமாட்டார்கள். ஏன்? "புகழ் வேட்டை”யே காரணம். குழுச் சண்டைகளில் ஈடுபடுவோருக்குச் செல்வாக்கு அதிகம். வரவேற்பு இருக்கும். இரத்த வேட்கையுடைய கழுகு சும்மா இருக்காது அல்லவா? இனிய செல்வ, கூடிச் சிந்தனை செய்தல், தனிக்கருத்துக்கு மதிப்பளித்தல், கலந்து பேசுதல், கருத்துப் பரிமாற்றம் செய்தல், தெளிந்த நிலையில் ஒரு முடிவுக்கு வருதல், அந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ளல் என்பன சமூக வாழ்வியலின் நீதி! இந்த நீதிக்கு இன்று யார் உடன்படுவர்? உள்ளம் செத்தால் என்ன? உண்மை ஒளிந்து கொண்டால் என்ன? "தான்" ஒரு விளம்பரப்பொருளாக வேண்டாமா? தன்னுடைய தகுதியின்மையை-நிறையின்மையை வெளிச்சம் போட்டு மறைக்க வேண்டாமா? ஆதலால். ஒன்று சேர மாட்டார்கள்! உட்கார்ந்து பேசி உறவை வளர்க்க மாட்டார்கள்! இது மாந்தரின் இயல்பு!

இனிய செல்வ, அதனால் சோவியத் ஒன்றியம் உடைகிறது! ஏன்? “தனிமனித வேட்டைக்காரர்கள் தோன்றி விட்டனர். மறந்தும் சிந்தனைத் தெளிவில் ஒன்றாகி விடக்கூடாது என்பதற்காகப் பகைமையை வளர்த்துக் கொள்வார். இனிய செல்வ, மக்கள் பல குழுக்களாக உள்ளனர். அந்தப் பல குழுக்களிடையே உட்பகை, ஒருவருக்கொருவர் அடுதலும் படுதலும் நிகழ்வதால் அரசியல் நடைபெறுவதில்லை; ஆட்சி நடைபெறுவதில்லை.

இன்று இந்த நிலை!

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வாழ்வியலை மார்க்சியத்தைக் கண்டு வாழ்ந்த நாடு - சர்வதேசீயத்தை எல்லையாக உடைய ஒரு நாடு, இன்று சிறுசிறு மாநிலங்களாகச் சிதறுகிறது. ஏன்? இனிய செல்வ, இதனால் மார்க்சியம் வாழ்வியலுக்கு ஒவ்வாதது என்று கொக்கரிக்கின்றனர் சிலர். இனிய செல்வ, மார்க்சியம் வரலாற்றுப்போக்கில் வெற்றி பெற்றே தீரும். வடிவங்கள் மாறுபடலாம்; உள்ளீடு மாறாது. இன்று சோவியத்தில் நடப்பது என்ன? சோவியத்தில் மனிதப் போராட்டங்கள் நடக்கின்றன. சித்தாந்தப் போராட்டம் நடக்கவில்லை. கோர்ப்பசேவின் மறு சீரமைப்பு மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பெற்றது உண்மை. ஆனால், பூரணமாக விவாதிக்கப் படவில்லை. இன்று உலகந் தழீஇய நிலையில் "தலைமை வழிபாடு” நடைபெறுகிறது. ஆதலால் கருத்தைச் சொல்லத் தயக்கம்! இந்தத் தயக்கம் சோவியத் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தது. மனிதர்கள் மாறினார்கள். ஆனால், கொள்கைகள் மாறவில்லை. அல்லது ஏற்றுக் கொள்ளப்படவும் இல்லை! இந்தத் ‘தனிமனி’தப் பிறவிகளின் அட்டகாசம் இன்று எங்கும் இருக்கிறது. அது சோவியத்திலும் இருக்கிறது. ஆயினும், ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம்-மறுபடியும் வெல்லும்’ என்று காத்திருப்போமாக!

சோவியத்தில் நடந்த ஒரு பெரிய தவறு என்ன? பொதுவுடைமை அரசாங்கம் ஆதலால் "பொதுவுடைமை விதிகளில் உழைக்க வேண்டாம்" என்ற ஒரு சித்தாந்தம் தலைதூக்கியது. இந்தத் தவற்றை, சோஷலிசப் பொன் விழாவின்போதே அன்றைய தலைவர் பிரஷ்னேவ் கூறியிருந்தார். உரிமைகள், உழைப்புக்கு ஊற்றுக்கண்ணாக அமைய வேண்டுமேயல்லாது உரிமை உழைப்புக்குத் தடையாக அமைவது பொருந்தாது; கொஞ்சமும் பொருந்தாது. ஆளும் கட்சியினர் என்ற அடிப்படையில் ஏதாவது உரிமை இருக்குமானால் அது உழைப்பதேயாகும். இதனை, சோவியத் மக்கள் மறந்தனர். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். நமது நிலையில் இன்று புத்திக்கொள்முதல் செய்யாவிடில் எதிர்காலம் நம்முடையதல்ல. இன்ப அன்பு

அடிகளார்

58. திருவள்ளுவர் உலக மனிதர்

இனிய செல்வ,

இன்றுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர், திருக்குறளை நினைந்து உணர்ந்து படிக்கும் ஆர்வம் மேலிடுகிறது. இந்த உலகத்தில் பிறந்த "முதல் மனிதர்” திருவள்ளுவரே. நாம் மனிதகுலத் தோற்றத்தின் அடிப்டையில் இவ்வாறு கூறவில்லை. வேறுபாடுகளைக் கடந்த மனிதத் தன்மையோடு விளங்குபவனே மனிதன். ஆம்! மனிதம் பிறக்கிறது; மொழியில்லாமல் பிறக்கிறது; இனம் இல்லாமல் பிறக்கிறது; சமயம் இல்லாமல் பிறக்கிறது. இனிய செல்வ, மொழி, இனம், சமயம் இவையெல்லாம் மனிதன் தோன்றி வளரும்பொழுது சம்பாதிக்கும் கொள்முதல்களேயாம். பிறந்தபின் ஈட்டும் கொள்முதல்கள், இயற்கையாயமைந்த பொதுமையை அழிக்க அனுமதிப்பது என்ன நியாயம்? இனிய செல்வ, புதிய கொள்முதல்களும் ஏன் ஈட்டப்பட்டன? உலக மாந்தரின் உள்ளங்களைப் புரிந்து கொண்டு, உறவு கலந்து பேசி ஒன்றித்து வாழத்தான்! ஆயினும் நாட்டில் நடப்பதென்ன? இன வழிச் சண்டைகள்! சாவுகள்! மொழிவழிப் போட்டிகள்! இச்சண்டைகளால் "மனிதம்” இழக்கப்படுகிறது! மானுடம் அழிக்கப்படுகிறது.

இனிய செல்வ, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் மாந்தரைப் பிரிக்கும் எந்தவொரு கொள்கையும் கூறப்பெறவில்லை; ஒரு சொல் கூட எடுத்தாளப் பெறவில்லை. திருக்குறள் உலகந்தழீஇய ஒப்பமுடைய பொது நூல்! இனிய செல்வ, திருக்குறள் அறிவு உலகந்தழீஇயதாக அமைய வேண்டும்.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்”

(140)

என்று திருக்குறள் கூறுகிறது. திக்குறள் தமிழ் மரபில் தோன்றியது. உலகந்தழீஇய சிந்தனை பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் தோன்றி வளர்ந்து வந்துள்ளது. கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!” என்றார். தொல்காப்பியமும் உலகம் தழுவியது தான். இருபதாம் நூற்றாண்டுக் கவிஞன் பாவேந்தன் பாரதி தாசனும்,

"நாட்டொடு நாட்டை இணைத்து மேலே

ஏறு! வானை இடிக்கும் மலைமேல்

ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!

ஏறி நின்று பாரடா எங்கும்!

எங்கும் பாரடா இப்புவி மக்களைப்

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!”

என்று கூறினான். "புவியை நடத்து! பொதுவில் நடந்து!" என்றான். ஆயினும் தமிழகம், திருக்குறள் காட்டிய பொதுமையை ஏற்றுக்கொண்டதா? சாதி, மொழி, மதச்சண்டைகள் மறைந்தனவா? இல்லை, இல்லை! எங்ஙனம் தமிழன் இந்தியனாவான்? உலக மனிதனாவான்?

திருக்குறள் உலகப்பொதுமறை! ஆம்! உண்மை! இந்த உண்மையை உலகத்துக்கு எடுத்துக் கூறினோமா? உலக மாந்தர் திருக்குறளை ஏற்றுக்கொள்ளச் செய்தோமா? இனிய செல்வ, உனக்குக் கோபம் வருகிறதா? ஏன் வராது? ஆம்! நீ கூறுவது உண்மை? இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் திருக்குறள் வந்திருப்பது உண்மை! அதுவுங்கூடத் தமிழன் தந்ததல்ல அறிவுபசியெடுத்த அயல்வழி அறிஞர்கள் வந்து எடுத்துக்கொண்டு போனார்கள்!

இனிய செல்வ, திருக்குறளைப் படிப்பது வேறு; அறிவது வேறு; திருக்குறள் நெறிகளை ஏற்று வாழ்தல் என்பது வேறு. தமிழ் மக்கள் திருக்குறளை வாழ்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. திருக்குறளை நாம் வாழ்வாக்கிக் கொள்ளாமல் வழிபாட்டு நிலைக்குத் தள்ளினோம்! இதனால், திருக்குறளை நாட்டு நூலாக ஆக்கவேண்டும் என்ற கொள்கை வலுபெறுவதாக நீ கூறுவதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆயினும், திருக்குறளை நாட்டு நூலாக்க நாட்டு மக்களிடத்தில்-பல்வேறு மொழிகளில் திருக்குறளின் பொதுமையை, திருக்குறள் காட்டும் மனிதத்தை எடுத்துக் கூறினால் தான் நாட்டுமக்கள் ஏற்பார்கள்? மக்களின் ஏற்பு வழி திருக்குறள் நாட்டு நூலாகும். இந்தப் பணியைத் தமிழ் மக்கள் செய்யவில்லை; தமிழறிஞர்கள் செய்யவில்லை; தமிழ்நாடு அரசு செய்யவில்லை. இனிய செல்வ, இதனை உணர்ந்து உலக மாந்தருக்குத் திருக்குறளின் பொதுமையை விளக்குவதற்காகத் திருக்குறள் உலக ஆய்வு மையம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் தொடங்கிப் பணி செய்யும் முயற்சி மேற்கொள்ளப் பெற்றது. மதுரை அறநெறி அண்ணல் எஸ். நாராயணன் செட்டியார் அவர்களும், நமது திருக்குறள் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் ந.மணிமொழியன் அவர்களும் இந்த மையத்தை இயக்க முன் வந்தார்கள்! ஆயினும், நல்லூழின்மையால் இயங்கவில்லை. இனிய செல்வ, பொறுப்பேற்றுக் கொண்டவர்கள். செயல் வல்லவர்கள். ஆதலால், ஊழைக் காரணமாகக் கூறினோம். அடுத்த முயற்சியாக "திருக்குறள் தேசியநூல் கருத்தரங்கு” ஒன்றினை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடத்தினார்கள். கட்டுரைகள் திருக்குறளுக்குச் சிறப்புச் செய்தன; தேசியம் தென்படவில்லை; பொதுமை பொதுளவில்லை. இனிய செல்வ, திருக்குறள் திருமறை மார்க்சியம் போல் ஒரு பொது அறநூல் என்பதை உணர்தலிலும் உணர்த்துவதிலும் வெற்றி பெற்றால் தான் மீண்டும் "கர்நாடகம்" நிகழாமல் தவிர்க்கலாம். ஆம்! இன்று கர்நாடக மாநிலத்தில் திருவள்ளுவர் சிலையை வைக்க மறுக்கின்றனர்; வழக்காடுகின்றனர். ஏன்? இன்னும் இந்தியாவே உருவாக வில்லையே! கர்நாடகம் கர்நாடகம்தான்! கேரளா, கேரளா தான்! காஷ்மீர், காஷ்மீர் தான்! பஞ்சாப் பஞ்சாப்தான்! தமிழ்நாடு தமிழ்நாடு தான்! இந்த வேறுபட்ட நிலையில் கர்நாடகத்தில் ஒரு சிலர் தவறு செய்கின்றனர்; திருவள்ளுவரைத் தமிழராக எண்ணுகின்றனர். திருவள்ளுவர் தமிழராகப் பிறந்தவர் என்பது என்னவோ உண்மை. ஆனால் திருவள்ளுவரோ உலக மனிதராக உயர்ந்தவர். திருக்குறள், பொதுமையே பேசுகிறது! இந்திய மொழிகள் எல்லாம் திருக்குறளுக்கு உரிமை கொண்டாடி எடுத்துச் சென்றுள்ளன. கன்னட மொழியும் பல ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளைப் பெற்று விளங்குகின்றது. ஆதலால், கர்நாடக மக்கள் திருவள்ளுவரைத் தமிழராகவோ, திருக்குறளைத் தமிழ் நூலாகவோ எண்ணித் திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ அந்நியமாக மாட்டார்கள் என்று நம்புகின்றோம். யாரோ சில "தனிமை வாதிகள்” செய்யும் முயற்சிகள் வெற்றி பெற, கர்நாடக மக்கள் இடம் தரக்கூடாது! தரமாட்டார்கள் என்று நம்புகின்றோம்! கர்நாடக மாநில மக்கள் வரலாற்றுப் போக்கிற்கு ஏற்ப, உலகப்பொதுமறையாகத் திருக்குறளை ஏற்க, திருவள்ளுவரைப் போற்ற முன் வரவேண்டும். இனிய செல்வ, எண்ணுவன நிகழும்! மக்கள் திருவள்ளுவர் சிலையை ஏற்பர்! இது உறுதி! அதே போழ்து கடமையை மறந்து விடாதே! இன்ப அன்பு

அடிகளார்

59. வேதாகமக் கல்லுரி

இனிய செல்வ,

இன்று தமிழ் நாட்டில் நடைபெறும் விவாதம் எது? ஆம்! "வேதாகமக் கல்லூரி” அமைப்பது குறித்துத்தான் எல்லாரும் பேசுகிறார்கள்! தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண் பமைந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு அரசு வேதாகமக் கல்லூரி ஆரம்பிப்பதாக அறிவித்தார். அறிவித்தது தான் அறிவித்தார்! இந்த அறிவிப்பின் எதிரொலியாக அரசியல் அரங்கத்தில், மக்கள் மன்றத்தில் உள்ள பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கை தந்துள்ள வண்ணம் உள்ளனர்! முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடுமையாக ஆட்சேபணை செய்கிறார்! இனிய செல்வ, கலைஞரின் ஆட்சேபணையை நம்மால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை! திருக்கோயில் அர்ச்சகர்களாக சாதி, குல வேறுபாடின்றி அனைத்துச் சமூகத்தினரை நியமிப்பதற்கு வழி செய்யும் சட்டத்தை கலைஞர் இயற்றினார். ஆனால், அந்த முயற்சியை கலைஞர் தொடர்ந்து மேற்கொள்ளவில்லை. அதற்கு உண்மையான காரணம் என்ன வென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்திய உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு அதற்குத்தடை என்பது உண்மையல்ல. இனிய செல்வ, சென்ற கால நிகழ்ச்சியை அதன் காரண காரியங்களை ஆராய்வானேன்? இன்றைய மாண்பமைந்த முதலமைச்சர் அவர்கள் வேதாகமக் கல்லூரி தொடங்கி அதில் ஆதி திராவிடர்களையும் சேர்த்துப் படிக்க வைப்பதாக அறிவித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இந்து சமூக வரலாற்றில் ஒரு திருப்புமையம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? சமஸ்கிருத மொழியையே தமிழர் படிக்கக் கூடாது. வேத சாத்திரங்களை, ஆகமங்களைத் தமிழர்கள் படிக்கக் கூடாது என்று தடை இருக்கிறது. இனிய செல்வ, இந்தச் சூழ்நிலையில் சாதி வேறுபாடின்றி ஆதி திராவிடர்கள் உட்பட வேதாகமங்களைப் படிக்க வாய்ப்பளிப்பதும் அவ்வழி அனைவரும் அர்ச்சகராவதும் வரவேற்கத் தக்கவை தானே! இதற்கு ஏன் ஆட்சேபணை? எதற்காக ஆட்சேபணை?

இனிய செல்வ, சமயச்சார்பற்ற அரசு வேதாகமக் கல்லூரி திறக்கலாமா? இஃது ஒரு வினோதமான கேள்வி! இந்துக்களின் திருக்கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை அரசு ஏற்கலாம்! ஆனால், அத்திருக்கோயில்களுடன் பிணைக்கப் பெற்றுள்ள வேதாகமங்களைக் கற்பிக்கும் கல்லூரியை நிறுவக் கூடாதா? இனிய செல்வ, வேதாகமங்கள் தமிழில் மொழி பெயர்த்துக் கற்பிக்கப்படும் என்ற செய்தியை மறு ஆய்வு செய்தல் நல்லது. சில மொழி பெயர்ப்புக்கு உரியனவாகா! பூசை, சடங்குகள் செய்முறை பற்றித்தான் ஆகமங்கள் கூறுகின்றன. ஆகமங்களைத் தழுவிய நிலையில் தமிழிலேயே பூசை, சடங்கு முறைகளை எழுதச் செய்யலாம். இதனால், மொழி பெயர்ப்பில் விளையும் சில சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

இனிய செல்வ, திருக்கோயில் அர்ச்சகர்கள் சாதி முறையில் உயர் குலத்தினரேயன்றி பொருளாதார நிலையில் அப்படி அவர்கள் இல்லை. அனைவரும் அர்ச்சகராக வரவேண்டும் என்ற கொள்கைக்குச் செயல் வடிவம் தர, வேதாகமக்கல்லூரி அவசியமான தேவை என்பதே உண்மை! இனிய செல்வ, வேதம், ஆகமம், திருக்கோயில் பூசை இவையெல்லாம் ஒன்றோடொன்று நெருக்கமானவையல்ல. இவைகள் தோன்றிய காலங்கள். தோன்றிய களங்கள். நுதலும் பொருள்கள் ஆகியன வேறு வேறு என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். அடிநிலைக் கோட்பாடாகிய ஒருமைப்பாட்டை மையமாகக் கொண்டு ஒன்றாக்கி யிருக்கிறார்கள்! இன்றைய சூழ்நிலையில் வேற்றுமைகளைப் பேசி விவாதங்களை வளர்க்காமல் இன்றையத் தேவையாகிய ஒருமைப்பாடு ஒன்றினையே மையமாகக் கொண்டு அணுகுதலே சிறந்த முறை. விவாதங்கள் வளர வளர வீம்பு உணர்வுதான் வளரும்! உண்மை மறைந்து விடும்!

இனிய செல்வ, ஆரியம்-தமிழ், ஆரியன்-தமிழன் என்ற பிரிவினை தோன்றி வளர்ந்து பல்லாயிரம் ஆண்டுகளாகிவிட்டன! நால்வேதம் எது? ஆகமம் எது? ஆரியம் எது? என்று வினாக்களை எழுப்பிக் கொண்டே போகலாம். இதனால், திறமை வளரலாம்! பண்பாடு வளராது! இதனைத் தமிழ் நாட்டு மக்கள் உணர்தல் வேண்டும். எதிலிருந்து எது வந்தது? சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் வந்தது-இந்த ஆராய்ச்சி இன்று தேவைதானா?

இனிய செல்வ! தமிழை இரண்டாம் நிலைக்குத்தள்ளும் முயற்சி நல்லதல்ல; வரவேற்கவும் முடியாது. இதனைத் தமிழ் நாட்டில் உள்ளோர் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் ஈடுபடுவோர் நெறியல்லாதன செய்கிறார்கள்! குற்றமே புரிகிறார்கள் என்று உணர்தல் வேண்டும். இனிய செல்வ, நமது திருக்கோயில்கள் வேதங்கள், ஆகமங்களைக் கடந்து திருமுறைகளின் நெறிக்கு வந்து விட்டன! இன்றைக்குத் திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள இறை, திருமுறைப் பாடல்களைக் கேட்டு எழுந்தருளியுள்ள இறையே என்பதை உணர்தல் வேண்டும். சடங்கு நெறியைக் கடந்து பத்திமை யுகத்திற்கு வந்தாயிற்று! இனி, ஞான நெறியே நமக்குத் தேவை.

இனிய செல்வ, இன்றையத் தேவை இந்தியா. ஆதலால், விவாதங்கள், வேண்டாம்! வேதங்கள் நம்முடைய மண்ணில் தோன்றியவையே! ஆகமங்களும் நம்முடையனவே! இவற்றில் ஆதிபத்தியச் சாயல்கள் உடைய பகுதிகளை ஏற்காது தவிர்க்கலாம்; தவிர்க்க வேண்டும். நமது இந்தியப் பண்பாட்டிற்கு-தமிழ்ப் பண்பாட்டிற்கு அனுசரணையாக இருப்பவைகளைக் கற்போம்! கற்பிப்போம்! நமது சிந்தனைப் புலன்கள் திரு நெறிய தமிழில் தோய்ந்து விளக்கமுறுக! நமது அரவணைப்பு உலகந்தழீஇயதாக அமைவதாகுக! ஆம்! வேதாகமக் கல்லூரி வரட்டும்! வேதாகமங்களுடன் நிற்காது திருமுறைகளும், திவ்யப் பிரபந்தங்களும் கற்பிக்கப் பெறும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு, வரவேற்கத்தக்கது.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்ற திருக்குறள் நெறிவழி எண்ணுக! துணிக!

திருக்குறள் நெறியில் மறைகள் மொழியின் பாற் பட்டன அல்ல. நிறைமொழி மாந்தர் அருளிச் செய்பவையெல்லாம் மறைகளே!

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்”

அடுத்து எழுதுகின்றோம்! இன்ப அன்பு

அடிகளார்

60. கூட்டுடைமைப் பொருளாதாரம்

இனிய செல்வ,

நம்முடைய நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் பற்றி நாடு தழுவிய நிலையில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆயினும் பொதுமக்கள் அதிகம் பங்கேற்காதது ஒரு குறையே! ஆயினும் இடதுசாரி அரசியற் கட்சிகள் கதவடைப்பு வரையில் சென்று மக்கள் கவனத்தை ஈர்க்க முயன்றன. எனினும் பொதுமக்கள் போதிய ஆர்வங் காட்டவில்லை. இனிய செல்வ, அது சரி! நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள்? இனிய செல்வ, பொருளாதாரக் கொள்கை என்பது பெரும்பாலும் நான்கு வகையானது என்று குறிப்பிடுவர். அவற்றுள் முதலாவது தனியுடைமை. இரண்டாவது பொதுத்துறை (பொதுத்துறை என்பது அரசு மக்கள் துறை) மூன்றாவது மக்களின் கூட்டுடைமைச் சொத்து, அடுத்து அரசுடைமை (மக்களுடைமை)ச் சொத்து.

இனிய செல்வ, நமது நாட்டில் முதல் மூன்று சொத்து வகைகளும் நடைமுறையில் உள்ளன., அதாவது, ஏகபோகத் தனியுடைமையும் உண்டு. பொதுத்துறையும் உண்டு; கூட்டுடைமையும் உண்டு; நமது நாட்டின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரம் என்பர் அரசியல் வாதிகள், ஆயினும் நமது நாட்டில் தனியுடைமை வளர்ந்திருப்பதைப் போல், பொதுத்துறை வளரவில்லை. கூட்டுடைமையும் வளரவில்லை. ஏன் பொதுத்துறை வளரவில்லை? இனிய செல்வ, நம்மில் பலர் நாட்டுப் பற்றுடன் பொதுத்துறையை வளர்க்கவும் கூட்டுறவை வளர்க்கவும் உரிய மனப்பான்மையுடன் வளரவில்லை; வளர்க்கப் பெறவும் இல்லை! பழைய பழமொழி ஒன்றுண்டு! "மகள் பொன்னிலும் மாகாணிப் பொன் எடுப்பான்” என்று கூறுவர். இனிய செல்வ, "நாமிருக்கும் நாடு நமது” என்றும், "மன்னும் இமயமலை எங்கள் மலையே” என்றும் "எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்றும் பாரதி பட்டயங்கள் தந்த பிறகும் பாரதி பட்டயத்தைத் தொடர்ந்து இந்திய அரசியல் சட்டம் "நாம் அனைவரும் இந்திய நாட்டில் சம உரிமை பெற்றவர்கள்” என்று உரிமைச் சாசனம் செய்த பிறகும் நமக்கு நாட்டுடைமையைக் காப்பாற்றும் அக்கறையை விட நம்முடைய சொத்தைக் காப்பாற்றுவதில் தானே அக்கறை. ஆர்வம், திறமை யெல்லாம் செயற்பாடுறுகிறது! ஏன்? நாட்டையே வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அளவுக்கு நம்மனோரின் மனநிலை கெட்டுப் போயிருக்கிறது. இதனால், தனியுடைமை நிறுவனங்கள் வளர்ந்து வருவதுபோல் பொதுத்துறை வளரவில்லை; கூட்டுடைமையும் வளர வில்லை; வளரவிடவும் இல்லை ‘மனிதன்’, ‘இந்தியன்’ என்ற உணர்வுகளை விட "நான்” ‘எனது’ என்ற உணர்வும் அதைவிட, செய்யும் தொழில் சார்ந்த தொழிலாளி மனோ நிலையுமே வளர்ந்து பொது மனப்பான்மையைக் கெடுத்துக் கொண்டு வருகிறது. பொதுத்துறையில் இழப்பு: கூட்டுறவுத் துறையிலும் இழப்பே மிகுதி. இந்த நிலையைக் கண்ட நமது பிரதமர், இழப்பில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் துறையில் ஒப்படைக்கலாமா என்ற ஓர் ஆலோசனையை மக்கள் மத்தியில் வைத்துள்ளார். இடது சாரி அரசியற் கட்சிகள் தனியார்மயப் படுத்தும் கொள்கையை எதிர்க்கின்றன. ஆயினும் பொதுத்துறையை இழப்பின்றி நடத்தத் தொழிலாளர்களைப் பக்குவப்படுத்தி ஒத்துழைப்புத் தருவதாக உறுதி கூற முன்வர வில்லை. தனியுடைமைக் கொள்கை அமெரிக்காவுக்கு ஒத்து வரலாம். அந்த நாட்டில் மக்கள் தொகை குறைவு. பரப்பளவிலும் இந்தியாவை விட மும்மடங்கு பெரியநாடு. அமெரிக்காவில் ஏழைகள் குறைவு. அது மட்டுமல்ல. அமெரிக்க முதலாளிகள் நாட்டுப் பற்றுடையவர்கள்; நல்லவர்கள். இந்தியா, பரப்பளவில் சிறிய நாடு. மக்கள் தொகை அமெரிக்காவை விட மூன்று மடங்கு கூடுதல். இந்தியாவில் ஏகபோக முதலாளிகள் எண்ணிக்கை குறைவே. நடுத்தர வர்க்கத்தினர் கணிசமான அளவு உளர். இந்தியாவில் ஏழைகளே மிகுதி. ஆதலால், இந்தியாவிற்குத் தனியுடைமைப் பொருளாதாரம் ஒத்துவராது. ஆதலால், பொதுத்துறையையும் கூட்டுடைமையையும் வளர்த்தாக வேண்டும்.

இனிய செல்வ, திருவள்ளுவர் எத்தகைய பொருளாதாரக் கொள்கையைக் கூறுகிறார்? என்று கேட்கிறாய்! நல்ல கேள்வி! திருவள்ளுவர் பல்வேறு உடைமைகளைக் கூறுகிறார். ஆனால், ‘சொத்துடைமை’ பற்றிக் கூறவில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அரசியலில் தான் பொருள் செயல் வகை கூறப்படுகிறது. நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நமக்கு நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும் பாதுகாக்கவும் அனுபவிக்கவும் கடமையும் உரிமையும் உண்டு. ஆனால் ‘தனி உடைமை’ இல்லை. திருவள்ளுவர் ‘வீட்டையும் தாம் நுகரும் பொருளையுமே’ தன்னுடையது என்று தனியுடைமைப் பட்டியலில் வைக்கிறார்.

“தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்று” 1107 என்ற திருக்குறளை அறிக. அதாவது ஒருவன் குடியிருக்கும் வீடும் அவன் நுகரும் பொருள்களும் அவரவருடைய உழைப்பில் ஈட்டியவை. தனியுடைமைச் சொத்துக்கள். இவை (Private Properties) இவை உற்பத்தியுடன் தொடர்புடைய சொத்துக்கள் இல்லையென்பது அறிக. உற்பத்திக் களங்களில் தலையாயது நிலம். நில உடைமை பற்றித் திருக்குறள் என்ன கூறுகிறது? நிலத்தை உழுது பயன் காண்பவன் அந்த அளவுக்கு நில உரிமை கொள்ளலாம் என்பது திருவள்ளுவர் கருத்து. இனிய செல்வ,

"செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்”

(1039)

என்ற திருக்குறளில் நாள்தோறும் கழனிக்குச் செல்ல வேண்டும் என்பதாலும் கணவன்-மனைவி உறவை நில உறவுக்கு உவமையாக்கிக் கூறியதாலும் நிலம் உழவனின் உரிமைப்பொருள் என்று கூறி, உழாதாரின் நில உரிமை-ஜமீந்தாரி உரிமை போன்றவற்றை திருவள்ளுவர் கேள்விக் குறியாக்கியுள்ளார் என்பதை எண்ணுக.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்"

(1033)

என்ற திருக்குறளையும் ஓர்க. இனிய செல்வ, சுரண்டல் பொருளாதார அமைப்பை, திருவள்ளுவர் ஏற்கவில்லை என்பதனை,

சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று”

(66)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்”

(169)

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை”

(859)

என்ற திருக்குறள்களால் அறிய முடிகிறது. ஆம்! நமது நாட்டுக்கு ஏற்ற பொருளாதாரமாகத் திருக்குறள் காட்டுவது ஒப்புரவறிதலாகிய கூட்டுடைமைப் பொருளாதாரமேயாம். கூட்டுடைமைப் பொருளாதாரத்தில் சுரண்டும் தன்மை இல்லை; ஏகபோகம் இல்லை. அறிவறிந்த ஆள் வினையுடையோர் பலர் கூடிப் பொருளைச் செய்து ஒப்புரவு அறிந்து ஒழுகி வாழும் கூட்டுடைமைப் பொருளாதாரம் நமது நாட்டுக்கு ஏற்புடையது. தனி உடைமைப் பொருளாதாரம் இருப்பதில் தவறில்லை. ஆனால் சமூக மேலாண்மையின் கீழ் தனி உடைமை இருக்கலாம். பொதுத்துறை வரவேற்கத்தக்கது. ஆயினும் நமது நாட்டுப் பொதுத்துறையில் தொழிலாளர்கள் பங்கும் மக்கள் பங்கும் இல்லை. இந்தியாவில் பொதுத் துறை என்பது அரசின்-ஆள்வோரின் ஏகபோக உடைமையாக இருக்கிறது. அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது எப்படி பொதுத்துறையாக இயலும்? பொதுத் துறை ஒருவகையான மக்கள், தொழிலாளர்கள் பங்கேற்கும் துறையாக அமையின் வரவேற்கலாம். இந்திய நாட்டின் சூழ்நிலையில் இந்தியர்களுடைய மனோநிலையில் தனி உடைமைப் பொருளாதாரக் கொள்கை பயன்தருமா என்பது ஐயப்பாடே! அதனால்தான் திருவள்ளுவர் தனி உடைமையை விவரித்துக் கூறவில்லை போலும்! இனிய செல்வ, படிக்கவும்; சிந்திக்கவும்; எழுதவும்! கருத்துப் பரிமாற்றங்கள் நடை பெறட்டும்! இன்ப அன்பு

அடிகளார்

61. நதிகள் இணைப்பு

இனிய செல்வ,

நம்முடைய நாட்டு அரசின்-பாரத நாட்டு அரசின் செயற்பாட்டைப் பார்த்தாயா? ஏன் இவ்வளவு பெரிய காலக்கொலை? 1974-இல் காவிரி ஒப்பந்தத்தின் காலம் முடிகிறது. 1974-இல் புதுப்பிக்கப்படுதல் வேண்டும். புதுப்பிப்பதில் போதிய விரைவு காட்டாமல் காலந் தாழ்த்தியதன் விளைவாக இன்று நாட்டில் உள்நாட்டுச் சண்டை! ஆம்! கர்நாடக மக்களும் தமிழர்களும் மோதிக் கொள்கிறார்கள்? ஏன் இந்த அவலம்? குற்றம் செய்பவர்களை விட, குற்றத்தை அனுமதிப்பவர்கள் முதல் குற்றவாளிகளாவார்கள் என்பது அரசியல் நியதி. இந்திய அரசு ஏன் இவ்வளவு காலம் தாழ்த்தியது? இந்திய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் எதற்காக இருக்கிறது? இந்திய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் ஆண்டுதோறும் கூடியதே, என்ன பேசினார்கள்? என்ன செய்தார்கள்? இந்திய மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தாவாக்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளாத அளவுக்கு; சிந்தனை முரடு தட்டிப் போகும் அளவுக்கு ஓர் அரசு-அதுவும் மக்கள் அரசு அனுமதிக்கலாமா? இந்திய நாட்டை ஆண்டு வந்த அரசுகள் தேர்தல் சுரத்திற்கு இரையாகி முடிவு எடுக்கத் தயங்கினவா? அல்லது தாட்சண்யத்திற்குப் பலியாகினவா? அல்லது நடுவண் அரசு எடுக்கும் முடிவுகளை மாநில அரசுகள் கேட்குமா என்ற அச்சமா? இனிய செல்வ, இவற்றுள் எதுவாக இருந்தாலும் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணாமல் ஒத்தி வைத்துப் பின்விளைவாகப் பலப்பல சிக்கல்களை வரவழைத்துக் கொள்வதை எங்ஙனம் வரவேற்க இயலும்?

இனிய செல்வ, எப்போதும் நாடு தழுவிய, உலகந்தழீஇய நிலையில் திருத்தங்களும் செயல்முறைகளும் காண்பது நல்லது. விரிந்த நிலையில் எண்ணும்பொழுது சிக்கல்கள் அதிகம் எழா! ஒரோவழி எழுந்தாலும் வெப்பம் குறைந்திருக்கும். ஒரு நாடு என்றால் என்ன? இந்த நாட்டின் இயற்கை வளங்கள் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையுடையன அல்லவா? இந்திய அரசு, மாநிலங்களை இணைக்கும் சாலைகளை, தேசீய நெடுஞ்சாலையாக்கி உரிமைப்படுத்திக் கொண்டுள்ளது. இரயில்வேயை இணைத்து இந்திய இரயில்வேயாக ஆக்கியுள்ளது. ஆனால் இனிய செல்வ, இந்திய நதிகளை இணைக்கும் முயற்சியை மேற்கொள்ளாதது ஏன்? இது புரிந்து கொள்ள முடியாத புதிர்! இனிய செல்வ, இந்த நிலையில் நம் தமிழ் நாட்டின் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் தென்னிந்தியாவின் நதிகளையாவது முதலில் இணையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். உடனே ஆந்திர முதலமைச்சர் மறுத்து விட்டார். இனிய செல்வ, இந்திய நாட்டின் நீர் வளத்தில் ஒரு பகுதி கடலில் போய்க் கலந்து வீணாவதை யாராலும் மறுக்க இயலுமா? ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் காலங் கடத்துவதனால் தோன்றும் எதிர் விளைவுகள் பற்றி நமது அரசியல் தலைவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்? இனிய செல்வ, எதையும் உரிய காலத்தில் செய்யவேண்டும் என்பது திருக்குறளின் கோட்பாடு.

"அருவினை என்ப உளவோ கருவியால்

காலம் அறிந்து செயின்"

என்பது குறள்.

கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதி நீர்ச் சிக்கல் அப்படியொன்றும் கடுமையான தல்ல. ஆனால், நடுவண் அரசு கால தாமதம் செய்வதன் மூலம் பிரச்சனையைக் கடுமையானதாக்குகிறது என்பதே உண்மை; உடலுக்கு நோய்வரின் உடன் விரைந்து மருந்து தேடுவதைப்போல மனித உறவுக்குத் தீங்கு ஏற்படக்கூடிய செய்திகளுக்கு விரைந்து தீர்வு காணவேண்டும். அப்படியல்லாது காலந்தாழ்ப்பின் அநியாயங்கள் பழக்கப்பட்ட தனால் நியாயம் அந்நியமாகி, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் கெடுத்து விடும். இனிய செல்வ, 1974-இல் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்கவேண்டும். இடையில் பதினெட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன! கர்நாடக மாநிலத்தில் பல அமைச்சரவைகள் வந்து போய்விட்டன. இது மிகவும் பெரிய தவறு. இப்போது மாநில அரசுகளிடமிருந்து காவிரி நீர்ப்பிரச்சனை மைய அரசுக்குப் போய்விட்டது. இது நமது பிரதமர் நரசிம்மராவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பு எளிதில் அமையாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும். சார்பின்றி நியாய அடிப்படையில் சிந்தித்துத் தீர்வு காணவேண்டும்; நிலையான தீர்வாகவும் இருக்க வேண்டும். காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதன்மூலம் கர்நாடக-தமிழ் மக்களிடையே உடன் தழீஇய உறவினையும் வளர்க்க வேண்டும், பிரதமர் செய்வாரா?

இனிய செல்வ, செய்தால்தான் இந்திய நாட்டின் இந்தியரின் பிரதமர், உடனடியாகத் தீர்வு காணவேண்டும். அது மட்டுமல்ல. இந்திய ஆறுகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும். காலந்தாழ்த்தாது செய்ய வேண்டும். இனிய செல்வ, தமிழ் நாட்டு முதல்வர் ஆலோசனைப்படி முதலில் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும். பின் கங்கையைத் தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டும். மிகப் பெரிய காரியம். தொடங்கினால் தான் சில்லறைச் சச்சரவுகள் குறையும். இனிய செல்வ, பொதுமை ஒரு வேள்வி! இந்திய ஆறுகளை இணைப்பது இயற்ற வேண்டிய வேள்வி! இந்தத் தலைமுறையில் இயற்ற வேண்டிய வேள்வி! இந்த வேள்வியைத் தொடங்கிய பெருமை புதிய பிரதமர் நரசிம்மராவுக்குக் கிடைக்குமா! பொறுத்திருந்து பார்ப்போம்! இன்ப அன்பு

அடிகளார்

62. இந்தியனாகச் சிந்திப்போம்

இனிய செல்வ,

மனிதன் நடுநிலையாளனாக இருத்தல் அரிது. அரிதினும் அரிது. சார்புகளே மனிதனைப் பிடித்தாட்டும் தன்மையன. மனிதனை மனிதனின் ஆன்மாவை, ஆன்மாவின் அறிவுப் புலனை, உணர்வைத் தொட்டு ஆட்டிப் படைக்கும் ஆற்றல் சார்புகளுக்கு உண்டு. இனிய செல்வ, சார்பு என்றால் என்ன? தன்னயப்பு முதற்சார்பு. "தான்” என்ற உணர்வின் அடிப்படையில் தன்னையும் தனது நலன்களையும் முதனிலைப்படுத்தி மற்றவர்களை ஒரு பொருட்டாக எண்ணாதவர்களுடைய உணர்வு எப்பொழுதும் அவர்களைப் பற்றியே வட்டமிடும். அவர்கள் தங்களுடைய விருப்பங்களையே முதன்மைப் படுத்துவர். தங்களுடைய தவறுகள் அவர்களுக்குத் தெரியவே தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்ய மாட்டார்கள். யாராவது எடுத்துக் கூறினாலும் ஏற்க மாட்டார்கள்; மாறாகக் கோபம் கொள்வார்கள்.

இனிய செல்வ, அடுத்து இனம், சாதி, மொழி, சமயம், கொள்கை, கோட்பாடு, பற்று ஆகியனவும் முறையே சார்புகளாக அமைவது உண்டு. இவையெல்லாமே மனிதனை, மனிதனின் சுதந்திரத்தை, மனிதனின் விரிந்த பரந்த நிறை நிலையைக் குறைப்படுத்துவன சார்புகளேயாம். இனிய செல்வ, அப்படியானால் இவை வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளத் தக்கவையல்லவா என்று கேட்கிறாய்! நல்ல கேள்வி! நாம் இனம், மொழி, சமயச் சார்பின்றி வாழ்தல் வேண்டுமா? வாழ்தல் இயலுமா? ஒருக்காலும் இயலாது. ஆயினும் இவைகளின் மீது நாம் விருப்பங்கொள்ளுதலும் இவற்றை ஏற்றுப் போற்றுதலும் வாழ்க்கையில் கடைப் பிடித்தலும் தவிர்க்க இயலாதன மட்டுமல்ல; கடமையும் கூட! ‘ஒருவன் அவனை நேசித்தல் தவறன்று. ஆனால், அதுபோல மற்றவர்களுக்கும் வாழ உரிமை உண்டு’ என்றும் மற்றவர்களும் வாழ்தல் வேண்டும் என்றும் எண்ணுவது சார்பற்ற நிலை. மற்றவர்கள் வாழ்வதற்காகத் தன்னுடைய அறிவறிந்த ஆள்வினையை அர்ப்பணிப்பது நோன்பு. மற்றவர்கள் நலனுக்காகத் தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணிப்பது தியாகம். இது ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி. தியாக நிலையை அடைந்த ஆன்மாக்கள் தான் புகழ்பட வாழுவன; புவியை நடத்துவன; இன்ப அன்பு நிலையை எய்துவன. இனிய செல்வ, இது போலத்தான் பிற சார்புகளும் கூட! அவரவர் மொழியைப் போற்ற வேண்டும்; விரும்பிக் கற்க வேண்டும். அது போலவே, மற்றமொழிகளை மதித்து விரும்பிக் கற்க வேண்டும். அம்மொழிகளின் நலன்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டுப் பற்றுக் கூட அளவை மீறும் பொழுது சுரண்டலையும் சண்டைகளையும் தோற்றுவிக்கின்றன. ஆதலால் நாட்டுப்பற்று தேவை. ஆனால் நாட்டுப் பற்று உலகந்தழீஇய உறவுக்குத் தடையாக அமைந்து விடக் கூடாது. இது போன்ற நிலைகளில் வளர்வதுதான் சார்பற்ற நிலை.

இனிய செல்வ, காவிரி நீர்ச் சிக்கல் ஏற்பட்டபின் நீ பார்த்த காட்சிகள், நீ கேட்ட செய்திகள் இந்தியா என்றொரு நாட்டினைத் தழுவிய இயல்புக்கு ஏற்றனவாக இருந்தனவா? கவனத்துடன் எண்ணுக. அகில இந்தியக் கட்சிகள் என்ற ஆல வட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கூட இந்தியராக எண்ணவில்லை; இந்தியராகப் பேசவில்லை. தமிழ்நாடு; கர்நாடகம் என்ற சார்பு வட்டங்களுக்குள்ளேயே நின்றுதான் பேசினார்கள்; எழுதினார்கள். இனிய செல்வ, கன்னடன், தமிழன் என்ற இனவழிச் சார்புகளே மோலோங்கி நின்றன; இந்தியராக எவரும் நடந்து கொள்ளவில்லை. இவ்வளவு பரந்த நாட்டில்

தி.28. இந்தியராக ஒருவர் கூட வளர்ந்து உயர்ந்து நின்று கன்னடர்களின் எண்ணம், தமிழர்களின் எண்ணம் இவ்விரண்டையும் சீர்துரக்கி ஆய்வு செய்து எழுத வில்லை; பேசவில்லை! இனிய செல்வ, ஏன் நடுவு நிலை ஒழுக்கமாக வளரவில்லை. சார்புகளுக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கும் பழக்கம் வளரவில்லை. ஒரோ வழி சிந்தித்துக் கூறினாலும் மக்கள் மன்றம் ஏற்குமா? இது ஐயப்பாடு! குறுகிய பற்றுக்கள் மூலம் உணர்ச்சியூட்டி மக்களை இயக்குவதன் மூலம் ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்ள விரும்பும் 'தலைவர்கள்’ இன்று மிகுதி, இன்று நாட்டின் தலைவர்களாக யாரையும் காணோம். சாதிகளின் தலைவர்களாக மதங்களின் தலைவர்களாக, மாநிலங்களின் தலைவர்களாக கட்சிகளின் தலைவர்களாகத்தான் பலரும் விளங்குகின்றனர். இது வளரும் சமுதாயத்திற்கு நல்லதன்று. சார்புகள் இருக்கலாம். சார்புகளை வளர்க்கலாம். தவறில்லை. ஆனால் சார்புகள் வழிப்பட்ட நிலையில்தான் எண்ணுவது, சிந்திப்பது செயற்படுவது என்றால் இது மனித குலத்திற்கு நலம் தராது; பயன் தராது; இனிய செல்வ, சார்புகள் காலூன்றி நிற்கும் இடமாகப் பயன்படலாம். ஆனால், சார்புகள் வாழ்க்கையாக மாறி விடுதல் கூடாது. சார்புகள் வழி சிக்கித் தவிக்கும் சமுதாயம் நோய்வாய்ப்படும், வளராது. சிறு சிறு கலகங்களால் சீரழியும். இனிய செல்வ சார்புகளைக் கடந்த நடுநிலை காக்கும் சிலர் இன்று நமக்குத் தேவை. தமிழனாக மட்டுமல்லாமல் இந்தியன் என்ற மனப்பான்மையில் சிந்திக்கும் இயல்பு தேவை. இந்த இயல்பு வளர்ந்தால் இந்தியா இருக்கும். இல்லையென்றால் சோவியத்துக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவுக்கும் ஏற்படும்.

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தராச் சார்தரும் நோய்!”

இன்ப அன்பு

அடிகளார்

63. குறிக்கோள் நட்பு

இனிய செல்வ,

மனித வாழ்க்கை மகிழ்வுறும் நிலையில் இயக்கும் உறுப்புக்கள் பலப்பல. இந்த உறுப்புக்கள், உயிர்ப்புள்ள உறுப்புக்கள்! காலந்தோறும் வந்து பொருந்தும் உறுப்புக்கள். இனிய செல்வ, தந்தை, தாய், உடன்பிறந்தார், நண்பன், மனைவி என்றெல்லாம் உள்ள வாழ்க்கையின் பருவநிலை தேவை. இவை அடிப்படையில் வந்து பொருந்தும் உறுப்புக்கள்! இந்த உறுப்புக்களை நெறிப்படுத்தி வளர்க்கும் பாங்குடையது சமூகம்.

இனிய செல்வ, இந்த உறுப்புக்கள் அனைத்திலும் நனி சிறந்தது நட்பேயாம். உயிர்த்தோழன் வழங்கும் ஆற்றலைத் தாய், மனைவி, உடன் பிறந்தார், மக்கள் இவர்களில் எவரும் தர இயலாது. ஆம்! தாயினும் தோழன் காட்டும் பரிவும் தியாகமும் வாழ்க்கையை நரக வேதனைக் காளாக்காமல் காத்து இன்புறும் நிலையினை வழங்கும் தன்மையுடையது. இனிய செல்வ, திருவள்ளுவர் நட்பு பற்றி நிறைய பேசுகிறார். திருக்குறள் காட்டும் நட்புநெறி இன்று எங்கு இருக்கிறது? அழுக்காறும் அவாவும் பலகாலும் பழகிய நட்புறவைக் கெடுத்து விடுகிறது. அச்சமும் பேடிமையும் தியாக உணர்வைப் பொசுக்கி, சுயநல மனிதனாக்கி விடுகிறது.

இனிய செல்வ, நோன்பு என்றால் விரதம்! விரதம் என்றால் உண்ணாமை அல்லது வழக்கம் போல் உண்ணாமை. பல ஆகாரம் உண்ணல் என்பது இன்றைய வழக்கு. ஆனால், பிறர் நலத்துக்காக முயற்சி மேற்கொண்டு வாழும் குறிக்கோளை நோன்பு என்றது புறநானூறு.

"தனக்கென முயலா நோன்றாள்

பிறர்க்கென வாழுநர்”

என்பது புறநானூறு, நட்புக்குரிய அன்பு, தியாக ஊற்றுக் கண்ணாலேயே வளரும். இழப்பும் துன்பமும் இல்லையேல் அன்பு ஊற்றுக்கண் திறக்க வேறு வாயில்கள் ஏது? ஐயமும் நம்பிக்கையின்மையும் உறவுகளின் வாய்க்கால்களைத் தூர்க்கும் கோரைகள்! நட்புவளரும். துளயநட்பு-அன்பில் விளைந்த நட்பு-அர்ப்பணிப்பில் உறுதியான நட்பு-நாளும் வளரும். எதுபோல வளரும்? பிறை நிலா, முழுநிலாவாக வளர்தல் போல வளரும் என்று கூறுகிறது திருக்குறள், ஆம்; பிறை நிலா குறுகிய கால அளவு! ஒளிக்கற்றையும் குறைவு! நிறைநிலா இரவு முழுவதும் ! ஒளிக்கற்றையும் அதிகம்; நல்ல நண்பன் வாழ்நாள் முழுதும் துணை நிற்பான்; வாழ்வுக்கு ஒளியூட்டுவான்; வளம் சேர்ப்பான்!

"நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு"

என்பது குறள். இனிய செல்வ, நல்ல நூல்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்; கற்கும் தொறும் இன்பந்தரும்; கற்கும் தொறும் அறிவு தரும்; ஆக்கம் தரும்; பண்பினை நல்கும். அதுபோல, நல்ல நண்பன் பழகுதலுக்கு எளியனாக இருப்பான்; பழகுந்தொறும் இன்பமளிப்பான்; இத்தகைய நட்பியல்-தோழமையியல் இன்றைய சமூகத்தில் அருகிப் போய்விட்டது. தேடிப்பார்த்தாலும் இல்லை. இனிய செல்வ, இன்றைய அரசியல், சமூகம் அனைத்துத் துறையிலும் சிறந்த தோழமைப் பண்புள்ளவர்கள் கூட்டாளிகளாகச் சேரவில்லை. எல்லாரும் புகைவண்டிப் பயணமே செய்கின்றனர்; சத்திரங்களிலேயே உண்டு உறங்குகின்றனர். அதனால் வரலாற்றுறுப்புக்களிடையே காரியங்கள் நடைபெறவில்லை. இனிமேலும் நடைபெறுமா? உடன் வருவது யார் என்ற ஐயம் வந்தபிறகு, பயணம் எப்படி நடக்கும்? இன்று நமது நாட்டுக்குத் தேவை கெட்டிக்காரர்கள் அல்ல; சாமர்த்திய சாலிகள் அல்ல. கெட்டிக்காரத்தனமும் சாமர்த்தியமும் எளிதில் அடையலாம். நம்பிக்கைக்குரிய தோழமையுடன் நல்லெண்ணத்தில் தோய்ந்த நட்புடன் தியாகம் செய்பவர்கள் தேவை!

இனிய செல்வ, இன்று எங்கும் தியாகத்தையும் காணோம். சேவையையும் காணோம்! எங்கும் கையூட்டு; ஏன், இந்த நிலை? இலட்சியம் உடைய மனிதரையே நம்முடைய உலகம் உருவாக்கவில்லையே! இலட்சியம் குறிக்கோள் இவற்றில் ஒற்றுமை இருந்தால் அபிப்பிராய பேதங்கள் உருவாகா. உருவானாலும் பிரிவினைகளைத் தாரா; இனிய செல்வ, அண்ணல் காந்தியடிகளுக்கும் அமரர் நேருஜிக்கும் இடையில் எவ்வளவு அபிப்பிராய வேற்றுமைகள்! ஆயினும் ஒன்றுபட்டு இருந்தனர். ஏன்? நாடு விடுதலை பெற வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது? இன்று அப்படி உயர் குறிக்கோள் உடைய மனிதரையும் காணோம்! இயக்கங்களையும் காணோம்! அதனால்தான் கட்சிகள் கூடப் பச்சை மண்பானைப் போல நொறுங்குகின்றன. அல்லது எரிமலைக் குழம்பினைப் போல குழம்புகின்றன, சுரண்டலும் ஆதிக்கமும் அன்பின்-நட்பின் ஆக்கத்திற்கு எதிர்பண்புகள்! இன்று எங்கு நோக்கினும் இவைகளே ஆரவாரத்துடன் ஆட்டம் போடுகின்றனர். ஐயோ பாவம்-அன்பு, தொண்டு, தியாகம் இவை பொருளிழந்த சொற்களாயின. இன்ப அன்பு

அடிகளார்

64. கீழ்மக்கள்

இனிய செல்வ,

"தேவலோகம்” என்ற ஒன்றைப்பற்றிப் புராணங்கள் பலபடக் கூறுகின்றன. அப்படி ஒரு தேவலோகம் இருக்கிறதோ, இல்லையோ தேவலோகத்தைப் பற்றிப் புராணங்கள் கூறும் செய்திகள் தேவலோகத்திற்குப் போகும் ஆர்வத்தைத் துரண்டுகின்றன. ஆம்! தேவலோகத்தில் காமதேனு உண்டு; கற்பகத்தரு உண்டு. வேண்டியன வேண்டியாங்கு பெறலாம். யாதொரு துன்பமும் இல்லை! ஆனால், தேவலோகத்தில் சண்டை ஓய்ந்ததே இல்லை. தேவர்களைப் பற்றித் திருவள்ளுவருக்கு நல்லெண்ணம் இல்லை. தேவர்களைக் "கயமை” அதிகாரத்தில் வைத்துத் திட்டுகிறார். தேவர்கள் கயவர்களைப் போன்றவர்கள் ஏன்? தேவர்கள் நல்லன, இன்பந்தருவன பார்த்துச் செய்வார்கள். கயவர்கள் தாம் நினைப்பன வற்றையெல்லாம் செய்வார்கள். தாம் செய்யும் செயல்களால் விளையும் பயன் அல்லது எதிர் விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தேவர்களும் அப்படித்தான்! கயவர்களுக்கு அவர்தம் வாழ்வே பெரிது. மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். பிறர் துன்பத்தில் இவர்கள் இன்புறுவார்கள். தகுதியில்லாதவற்றையெல்லாம் அடைய விரும்புவார்கள். அவசியமானால் பொய்யும் பேசுவர்; சூதும் செய்வர். பிறர் பொருள் விரும்பல், பிறர் மனை நயத்தல், வளர அத்தனை கீழ்மையான செயல்களையும் செய்வர். ஏன்? தம்மையே விலைகூறி விற்றுக் கொள்வர். எவருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் பயன்படமாட்டார்கள். உபயோகத்திற்கு உரியவராகார்; கரும்புபோல் கொல்லப்பயன்படுவர். அறியாமை மிகுதியும் உடையவர் கயவர். ஆனால், அறிவுடையார் போல நடிப்பார். சொன்னாலும் கேட்டுச் செய்யார்; சுய புத்தியுடனும் செய்யார். இத்தகு கயவர்களைக் "கீழ் மக்கள்" என்று இலக்கியங்கள் கூறும். இவர்கள் திருந்துதல் அரிது. காஞ்சிரங்காயைத் தேனில் ஊறப்போட்டால் இனிக்குமா; என்ன? கரியைப் பால்விட்டுக் கழுவினால் வெண்மையாகுமா? கரி, கரிதான்! அதுபோல் கயவர்கள் திருந்த மாட்டார்கள்.

இன்று நாட்டில் கயமைத் தனம் வளர்ந்து வருகிறது. இது வளரும் நாட்டுக்கு நல்ல தல்ல. சின்னஞ்சிறு கதைகள் பேசிப் பொழுதைக் கழிக்கும் கயவரால் விளையப் போவது என்ன? ஒரோ வழி அவர்கள் நன்மை செய்வது போலக் காட்டினாலும் அதில் அவர்களுடைய சுயநலம் புதைந்து இருக்கும். கயவர்கள் சிலபொழுதுகளில் கொடுத்தாலும் கூட அதிலும் ஒன்று குறி ஈர்ப்பு இருக்கும்.

ஆதலால், கயவர்கள் சமுதாய நலங் கொல்வர்; அவர்கள் புல்லுருவிகள்! அதுபோலத் தேவர்களும் விரும்பியதையே பேசுவார்; செய்வர். அதனால் தேவ-அசுர யுத்தங்கள் நடைபெற்றன. தேவர்களின் கயமைத் தனத்தை எதிர்த்தே அசுரர்கள் போரிட்டனர்.

"தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்” - குறள்

இன்ப அன்பு

அடிகளார்

65. மக்களாட்சி முறை

இனிய செல்வ,

உலக வரலாற்றில் மக்களாட்சி முறை ஜனநாயக ஆட்சி முறையின் தோற்றம். வரலாற்றின் திருப்பு மையமாகும். கோட்டை, கொத்தளங்களில் வாழ்ந்த அரசர்கள்-பிரபுக்களிடமிருந்த கட்டுப்பாடில்லாத அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் முடியரசுகள் மக்கள் அரசுகளாக மாற்றப்பட்டன. இனிய செல்வ, மக்கள் வரலாற்றில் இது ஒரு திருப்பு மையம். ஆயினும் என்? ஆபிரகாம் லிங்கன், "மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது குடியாட்சி" என்று மக்களாட்சி பற்றிக் கூறினான். மக்களாட்சி முறையில் அரசியல் தலைமை ஏற்பது முடியாட்சியில் உள்ளதைவிடப் பொறுப்புமிக்குடையது. மிகமிக வளர்ந்த மனப்பாங்கு தேவை. மக்களுக்காக ஆட்சி என்பதை மறந்து விடக்கூடாது. சாதி, மதம், கட்சி, நண்பர், பகைவர் என்றெல்லாம் பாராது மகவெனப் பலர் மாட்டும் உறவும் உரிமையும் கொண்டு ஒழுகும் விரிந்த மனப்பான்மை ஜனநாயக ஆட்சியின் அரசியலாளருக்கும் ஆள்பவருக்கும் தேவை. எல்லாருக்கும் நீதி கிடைப்பதில் இடர்ப்பாடுகள் இருந்தாலும் தமக்கு அநீதிகள் இழைக்கப்பட வில்லை என்ற உணர்வையாவது குறைந்த அளவு மக்களாட்சி முறை அரசியலார் மக்களுக்கு வழங்கியாக வேண்டும். அப்படி யிருந்தால்தான் அது மக்களாட்சி! இல்லையானால் கட்சி ஆட்சி-குழு ஆட்சி என்ற நிலைக்கு இழிந்து விடும்.

மக்களாட்சி முறை தோன்றிய காலத்திலிருந்தே அதன் தத்துவங்களுக்கு ஏற்ப நடந்ததில்லை. தலைவர்களும் கிடைத்ததில்லை. இன்று வரலாறு போகிற போக்கை பார்த்தால் இனி மேலும் கிடைப்பார்களா என்பது தெரியவில்லை. இனிய செல்வ, வின்ஸ்டன் சர்ச்சில் "இந்த ஜன நாயகம் மிகவும் மோசமான ஓர் அரசியல் அமைப்பு. மற்ற எல்லா முறைகளும் அதைவிட மோசமானவை என்ற ஒரே காரணத்தினால் ஏற்றுக் கொள்ளப்படும் செயல்முறை" என்று கூறினார். இன்றைய உலகில் மக்களாட்சி முறை நடைபெறும் நாடுகளின் நிகழ்ச்சிகளை உற்று நோக்கின் வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்று உண்மையாகி வருகிறது.

இனிய செல்வ, ஜனநாயகத்திற்குப் பேர் போன அமெரிக்காவில் இனக் கலவரம், சோவியத் ஒன்றியம் உருவத்தையே இழந்து விட்டது! இந்திய மக்களாட்சி முறைத் தோற்றத்தினைக் காட்டித் தனி நபர் வழிபாட்டுத் திசையிலும் குழூஉ ஆட்சி முறையிலும் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. இவையெல்லாம் வருந்தத்தக்க செய்திகள்!

மக்கள் மன்றத்திலும் பேச்சுரிமை, போராட்ட உரிமை போன்றவைகள் தவறான முறையிலேயே பயன்படுத்தப் படுகின்றன. இனிய செல்வ, இந்தச் சூழ்நிலைகளைப் பார்க்கும் பொழுது ஜனநாயகக் கோட்பாடுகள் வளரும் நம்பிக்கை அறவே இல்லை. ஆதலால், நாம்தான் இந்த ஜனநாயக முறைகளைத் தாங்கிக் கொள்ள நம்மைப் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று புலப்படுகிறது.

"உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்"

என்று தானே திருவள்ளுவர் கூறினார். இன்ப அன்பு

அடிகளார்

66. வன்முறை தவிர்ப்போம்!

இனிய செல்வ,

அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் நாடெங்கும் அமைதியாக நடத்தப்பெற்றது. அது மட்டுமல்ல, அமரர் ராஜீவின் உயிரைக் குடித்த வன்முறையை எதிர்த்தும் வன்முறை எதிர்ப்புணர்வு காட்டப்பெற்றது. வன்முறையை எதிர்த்து நாடெங்கும் உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பெற்றது. இனிய செல்வ, எது வன்முறை? வெட்டுதலும் சுடுதலும், கொலை செய்தலும் மட்டுமல்ல வன்முறை. சிந்தனையிலும் சொல்லிலும், ஒருவரைப் புண்படுத்துவது கூட வன்முறையே என்று அண்ணல் காந்தியடிகள் கூறினார்.

இனிய செல்வ, வன்முறையும் ஜனநாயகமும் நம்முள் முரணானவை! நல்ல பண்பட்ட ஜனநாயக ஆட்சிமுறையை - மக்களாட்சி முறையைப் பின்பற்றுபவர்கள், ஒழுக்கமாகக் கொண்டவர்கள் ஒருபொழுதும் வன்முறையாளர்களாக இருக்க மாட்டார்கள்! ‘வன்முறை’யை அங்கீகரிக்கமாட்டார்கள்!

இனிய செல்வ,

"செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்பு"டை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு"

"இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று”

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்றுள்ளக் கெடும்!”

என்ற திருக்குறளைச் சிந்தனை செய்க! இனிய செல்வ, இந்த திருக்குறள்கள் வன்முறைக்கு எதிரானவை!

மக்களாட்சி வாழ்க்கை முறையில் கருத்துப் பரிமாற்றம் தான் முதன்மையான செயற்பாடு! கருத்துப் பரிமாற்றம் முறையாக நடைபெறத் தொடர்ந்து கலந்து பேசுதல், விவாதித்தல் ஆகியன நிகழ்ந்து தெளிவுண்டாகும் நிலையில் ஒரு கருத்து உருவாக வேண்டும். அங்ஙனம் ஒரு கருத்து உருவாகாது போனால் தொடர்ந்து, உள் நோக்கமும் பகைமை உணர்வுமின்றி விவாதம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். கருத்துப் பரிமாற்றத்திற்குரியத் தற்சார்பும் தன் முனைப்பும் இன்றி, மற்றவர் கருத்து சரியெனப்பட்டால் உடன்படுதல் வேண்டும். இந்த நிலையில் தான் கருத்துப் பரிமாற்றம் வெற்றி பெறுகிறது. ஜனநாயக வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்போர் ஒரு கருத்துக்குரியவர்கள் யார் என்று காணல் ஆகாது, கூடாது. கருத்துள் உள்ள நல்ல கூறுகளையே எண்ணுதல் வேண்டும். பூனையைப் பார்த்தால் புனுகின் மணத்தை அனுபவிக்க இயலுமா? புனுகுதான் அனுபவத்திற்குரியது. ஒன்றுக்கும் ஆகாத நத்தைச் சிப்பியில்தான் முத்து தோன்றுகிறது. முத்தையே முதலாகக் கொள்க! இதனைத் திருவள்ளுவர்,

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்று கூறி விளக்குகிறார்! இந்தக் குறள் ஜனநாயக வாழ்க்கையின் அடிப்படையாகும். ஜனநாயக வாழ்க்கையில் சொல்பவர் யார் என்பது முக்கியமல்ல. சொல்லப்படும் கருத்துக்களே கவனத்திற்குரியன, கருதுதற்குரியன.

கருத்துலகில் தாக்குப்பிடித்து நிற்க இயலாதவர்கள் பிடிவாதம் கொள்வர். மாற்றுக் கருத்துக் கூறுவோர்களைப் பகைவர்களாகக் கருதுவர். இதனில் சிந்தனை உலகத்தில் - கருத்துலகத்தில் தேக்கம்! வளர்ச்சி இல்லை.

இன்று நமது பாராளுமன்றம், சட்டமன்றங்களில் கூட ஜனநாயக மரபுகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்த வளாகங்களிலேயே வன்முறைகள் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இது வருந்தத் தக்கது! நாடு முழுதும் இலட்சிய நோக்குடைய வாழ்க்கையோடு தொடர்பில்லாத நிலையில் அரசியல் போனநிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். எங்கும் வன்முறை பெருவழக்காகிவிட்டது. இந்த நிலை எங்கும் மாற வேண்டும். அறமல்லாதவற்றை அகற்றவும் கூட அன்பே கருவி! இதுவே திருக்குறள் நெறி!

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை"

இனிய செல்வ, வன்முறையைத் தவிர்ப்போம்! மனித குலத்தைக் காப்போம்.

இந்தியாவில் - சிற்றூர் முதல் பேரூர் வரையிலும் வன்முறைக் கலாசாரம் நாளும் பெருகி வளர்கிறது. பொது வாழ்க்கையின் தரம் குறைகிறது, நல்லவர்கள் அப்பாவிகளாகின்றனர். இது தான் இன்றைய இந்தியா? உலகம் என்ன வாழ்கிறது? சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இனக்கலவரம். இனக்கலவரத்திற்குரிய அடிப்படையை ஆராயும்பொழுது மனித குலம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது. "நீதி” நீதியாக இல்லாமல்-இனம் கருதி சாய்ந்து கொடுக்கிறது. இது நியாயமா, சாதி, இனம், கட்சி? மதம் என்ற பிடிப்புகளிலிருந்து நீதி - சமூக நீதி மீட்கப்பட்டால்தான் உயிர்க் குலத்திற்கு நன்மை உண்டு. பாதுகாப்பு உண்டு. வாழ்க்கையில் நடுவு நிலைமைப் பண்பு கடைப்பிடியாக ஒழுக்கமாக இடம் பெற வேண்டும். இனிய செல்வ! திருவள்ளுவர் நடுவுநிலைமை என்று ஓர் அதிகாரமும் எடுத்துக் கூறினார். இனிய செல்வ! ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் கூடி உலகியல் நடத்த வேண்டும். எங்கும் எந்தச் சூழ்நிலையிலும் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். மற்றவை அடுத்த கடிதத்தில். இன்ப அன்பு

அடிகளார்

67. நாணம் தேவை

இனிய செல்வ,

திருக்குறளுக்கு உள்ள ஒரே பெருமை நாம் வாழும் காலத்தின் உலகத்தையும் திருக்குறளில் பார்க்க முடிகிறது என்பதுதான்! இனிய செல்வ, மானுட வாழ்க்கையின் சிறந்த அணிகலன் நாணம், பரதி, "நாணமும் அச்சமும் தாய்கட்கு வேண்டுமாம்" என்று பாடியுள்ளார். திருக்குறளும் பாரதியும் முரண்படவில்லை. நடைமுறை உலகியலில் முரண்படுகிறது. ஏன்? மனித குலத்தின் தரம் மிகமிகக் குறைந்து வருகிறது. நாணம் மனிதர்க்குத் தேவை! தீயவை எண்ண-செய்ய நாணப்படுதல் மனித வாழ்க்கைக்குத் தேவை. ஆனால், இன்று நாணமுடையோர் யார்? நாணத்தின் விலை என்ன? இன்றைய உலகம் நாணத்தை இழந்து மனம் போனபடியெல்லாம் வாழ்ந்து தன்னைத்தானே வெட்கமின்றி வியந்து போற்றிக் கொள்கிறது! இன்று ஏது நாணம்? இன்று நாணப்படுகிறவர்கள் ஏமாளிகள்; வாழத் தெரியாதவர்கள்; நெறிமுறை பிறழ்ந்த செயல்களே இன்று அங்கீகரிக்கப் பெறுகின்றன! இன்று நல்லவர்கள் இல்லை, சான்றோர்கள் இல்லை! உலகந்தழீஇய நிலையில் இன்று நாணப்படுவோர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. தப்பித்தவறி நாணப்படுவோர் எவராவது இருந்தால் அவர்களைச் சமூகம் ஏற்காது. ஏற்காதது மட்டுமல்ல, பைத்தியக்காரப் பட்டமும் கட்டும்.

இனிய செல்வ. நாணமின்றி நடப்பது மட்டும் இன்று வளரவில்லை! இன்று வறுமையில் துஞ்சும் மானுடத்தைக் கண்டு நாணி அவர்தம் முன்னேற்றத்திற்கு உரிய நெறி முறைகளை நாடவேண்டும். நாணமும் வெட்கமுமில்லாத வாழ்க்கையிலிருந்து விலகி அறிவறிந்த ஆள்வினையை நாட வேண்டும். இன்று எத்தனை பேர் ஆர்வத்துடன் பொருள் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்? எங்கும் வேலை தேடும் படலம்! முச்சந்திகளில் கூட்டம்! வறுமொழியாளராக வம்பப் பரத்தரொடு கூட்டு: இது என்ன ஒரு வாழ்வா?

இனிய செல்வ, வாழும் மாந்தர் யார் மாட்டும் வேறுபாடின்றி அன்பு காட்டுதல் வேண்டும். அவர் தம் நல்வாழ்வுக்கு நாளும் உழைத்திடல் வேண்டும். அதுவே யோகம்! “ஊருக்கு உழைத்திடல் யோகம்" என்றான் பாரதி. இன்று இப்படி யோகம் செய்வார் யாருமில்லை. எங்கும் நிர்வாணமான சுயநலம்; தற்புகழ்ச்சி; தன்னைத்தானே வியந்து கூறிக் கொள்ளல், முதலிய குற்றங்கள் மலிந்துவிட்டன. இனிய செல்வ, பேணுதல் வாழ்க்கைக்குரிய இயல்புகளில் தலையாயது பேண வேண்டியன பலப்பல. முதலில் உடல் நலம், அறிவு நலம் பேணப்படுதல் வேண்டும். அடுத்து மனிதகுல உறவுகள் பேணப்பட வேண்டும். இன்று மனிதகுல உறவுகள் சீரழிந்துள்ளன. இன்று உறவுக்கு அடிப்படை தேவையாகிவிட்டது. தன்னலமுடையார் கூட்டம் ஒரோவழி ஒன்று சேர்கிறது! உண்மை! எத்தனை நாளைக்கு! சில நாட்களுக்கே இந்த உறவு! பின் கெடும். பகையாகமாறும்! இனிய செல்வ, இதுவா வாழ்க்கை? இல்லை! இல்லை!

நம்முடைய செயல் திறனும் பண்பாடும் இழிந்து போகும் நிலை கண்டு நாணவேண்டும். நல்லனவற்றையே நாடும் பண்பு வளர்தல் வேண்டும். யார்மாட்டும் விருப்பும் வெறுப்பும் இன்றிச் செயல்பட்டாகவேண்டும். இவையெல்லாம் பேணிக் காத்துக்கொள்ளாதார் யாதொன்றும் அறியாதார்! பேதைமையுடையார்! என்று வள்ளுவம் கூறுகிறது! இன்று நாம் காண்பதென்ன? பேதமையைத் தவிர வேறு எதைக் காண்கிறோம்!

"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்

(833)

இன்ப அன்பு

அடிகளார்

68 . என்புருக்கி நோய்

இனிய செல்வ,

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் உடன்பாட்டு முறையிலும் எதிர்மறை முறையிலும் வகுத்துக் கூறியுள்ளார்! நம்முடைய நாடு எப்படி இருக்கிறது? திருக்குறள் விளக்கும் நாடாக உள்ளதா? திருக்குறள்;

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு

என்று நாடு எப்படி இருக்கக்கூடாது என்று விளக்குகிறது!

நாட்டில் பல குழுக்கள் இருக்கக்கூடாது. நமது நாட்டின் நிலை என்ன? நமது நாட்டில் பல குழுக்கள் உள்ளன. சாதிகள், சாதிக்குள் சாதிகள், பலப்பல மதங்கள், எண்ணற்ற அரசியல் கட்சிகள், மாதர் பேரவைகள், நடிகர் மன்றங்கள்! இவைபோக காரணங் கூற இயலாத அழுக்காற்றின் வழியில் அமைந்த பல குழுக்கள்! குழுக்களுக்குள் மோதல்கள், அழுக்காறு! அவா! வெகுளி! இங்ஙனம் குழுக்கள் பலவானதற்குக் காரணமென்ன? இனிய செல்வ! சரியான கேள்வி? முதற்காரணம் நல்ல உயர்ந்த குறிக்கோள் இன்மையே! இனிய செல்வ! குழு மனப்பான்மை என்பது தற்சார்பான ஒரு சிறிய வட்டம். அவ்வளவுதான்! சுயநலக்காரர்கள், தற்பெருமை பாராட்டுபவர்கள், அகங்காரம் உடையவர்கள் நீண்ட காலத்திற்குப் பலர் ஒன்று கூடி வாழ்தலும் அரிது! ஏன்? அவரவர்களுடைய நலன் பாதிக்கப்படும்பொழுது பொதுமை கருதி விட்டுக் கொடுக்க மாட்டார்கள்! பிரிந்து போய்த் தான் அடைய விரும்பியதை அடைய முயற்சி செய்வர்.

மாறுபட்ட நோக்கங்களும், முரண்பட்ட நலன்களும் உடையவர்கள் நீண்ட நாட்களுக்கு ஒன்றுபட்டு ஒத்து வாழ இயலாது. இனிய செல்வ! ஒரோ வழி வளர்ந்தாலும் அது வெறும் தோற்றம்! மாயை! அவ்வளவுதான்.

இனிய செல்வ! பல குழுவாகப் பிரிந்து வாழ்பவர்கள் முரணிய சிந்தனை உடையவர்கள். நல்லவர்களைக் காத்துக் கொள்ள மாட்டார்கள்! மாறாக, மாறாத உட்பகை கொண்டு பழகுவர்! இனிய செல்வ! பகைமையே தீது! அதிலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு என்றும்-பகை, எப்போதும் பகை, அகத்தே எரியும் பகை. ஆதலின் இந்த உட்பகையைப் பாழ் செய்யும் உட்பகை என்றார். இனிய செல்வ! வெளிப்படையான பகையில் நமக்கு அறிவு வளர வாய்ப்புண்டு. அதே பகை உட்பகையாக இருந்து கேடுகளைச் செய்யும். அதனால் பாழ் செய்யும் உட்பகை என்றார்.

இனிய செல்வ! எங்கும் குழுஉ மனப்பான்மை. குழுஉ வழிபட்ட மாறுபாடுகள், தம்முள் முரண்பட்ட நலன்கள் இவற்றின் எதிர் விளைவாகப் போட்டிகள், இவையனைத்தின் காரணமாகவும், ஆங்காங்கு மோதல்கள்! சண்டைகள்! இதனால் நாட்டின் அவசிய வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட முடிவதில்லை. நாள்தோறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சனைகள்! இதுதான் இன்றைய நமது நாடு. பஞ்சாபில் படுகொலைகள் வழக்கமாகி விட்டன. காஷ்மீரில் என்ன நடக்கிறது? புரியாத புதிர், ஏன் இந்த அவலம்? நாட்டின் நலன் காத்தல் என்ற பொது நோக்கு மக்களிடத்தில் வளரவில்லை! வளர்வதற்குரிய முயற்சிகளையும் அரசு செய்யவில்லை! சமுதாய இயக்கங்களும் செய்யவில்லை. ஆதலால் வரவர மக்களின் தரத்தில் அரிமானம் ஏற்பட்டு வருகிறது. கயமைத்தனங்கள் வளர்ந்த வண்ணமுள்ளன. இனிய செல்வ! இதில் என்ன வேதனை என்றால் சமூக அங்கீகாரத்துடன் சமூக மேம்பாடு, ஜனநாயகம் என்ற பெயரில் நடப்பது தான்.

இனிய செல்வ, நம் நாடு வளர்ந்த நாடுகள் வரிசையில் நிற்க விரும்பினால் நாம் நாட்டின் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடுத்து இரண்டாவது இடந்தான் மற்றவைகளுக்கு என்று சொல்ல வேண்டும். இனிய செல்வ, எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதனை இரண்டாந்தரத்திற்குத் தள்ளக்கூடாது. அதுபோலவே எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடமிருந்து அந்நியனாகக் கூடாது. மனித உலகத்தை அரித்துத் தின்னும் என்புருக்கி நோய் ஆக இருக்கும் இந்நோயை அறவே எதிர்த்துப் போராடவேண்டும்.

இனிய செல்வ, இன்றிருக்கும் நிலை தொடர்ந்தால் 2001-ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? எண்ணிப்பார்! எழுதுக! இன்ப அன்பு

அடிகளார்

69. கவரிமான்

இனிய செல்வ,

கவரிமான் என்று மான் வகையில் ஒரு சாதி. இந்த கவரிமான் காடுகளில் ஓடித் திரிந்து வாழும். அப்படி ஓடித் திரிந்து வாழும் அந்தக் கவரிமான் ஒரு வேலியைத் தாண்டும்பொழுது வேலியில் கவரிமான் உடம்பிலுள்ள ரோமம் ஒன்று உதிர்ந்துவிட்டாலும் கவரிமான் பொறுத்துக் கொள்ளாதாம்! உடனே செத்துப் போகும் என்று திருக்குறள் கூறுகிறது.

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்”

(969)

என்பது திருக்குறள்.

இனிய செல்வ, நமது நாட்டில் நடந்த பங்குச் சந்தை ஊழல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய்! செய்தித் தாள்களிலும் படித்திருப்பாய்! பங்குச் சந்தை (Share Market) என்பது நமது நாட்டில் ஒரு பெரிய தொழில்! பங்குச் சந்தை என்றால் என்ன? நமது நாட்டில் நடக்கும் பெரிய தொழில் நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்பனைக்கு வரும். அந்தத் தொழிற்சாலையின் நடைமுறை, ஸ்திரத்தன்மை, இலாபம் ஆகியவற்றிற்கு ஏற்ப பங்கின் விலை கூடும் அல்லது குறையும். கூடினால்-ஒரு பங்கின் விலை ரூ.1000 என்றால் பங்குச் சந்தையில் ரூ.2000 விலை போகும். சந்தைகளுக்கு ஏற்பக் கூடவும் கூடும்; குறையவும் குறையும். ஹர்ஷத்மேத்தா என்பவர் எடுத்த பங்குகள் பல மடங்கு கூடுதலாகப் போயிருக்கிறது. இந்தப் பங்கு உயர்வு கேடுதரும் என்பது நாடறிந்த உண்மை. இவர், தான் விரும்பியவாறு எல்லாப் பங்கு விலையையும் கூட்டியிருக்கிறார். பங்குகளை வாங்கியிருக்கிறார். பங்குகளில் ஒரு சில பங்குகளை வைத்துக்கொண்டு வங்கிகளின் பணத்தை திறமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

இனிய செல்வ, நமது மாண்புமிகு அமைச்சர் ப.சிதம்பரம் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்து விட்டார், தெரியுமா? ஏன் ராஜிநாமா செய்தார்? இந்தப் பங்குச் சந்தையில் ப.சிதம்பரம் பங்கு வாங்கியுள்ளார். ஒருவர் தாம் சம்பாதித்த பணத்தில் பங்கு வாங்குவது தவறில்லை. இன்று பல இடங்களில் நாடே விலை பேசப்படுகிறது. இன்று நடந்து வருகிற ஒரு பெரிய காரியம் அது. கையூட்டை வெளிச்சம் போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள். இன்றைக்குக் கையூட்டை தேசிய மயப்படுத்திய பெருமையும் நமது தலைமுறைக்கு உண்டு. இவ்வளவும் நாட்டில் நடக்கும்பொழுது ப.சிதம்பரம் பங்குச் சந்தையில் பங்கு வாங்கியது எப்படி ஊழலாக முடியும்? என்ன சிக்கல் என்றால் நடைமுறையில் இருந்த விலையைவிடக் கூடுதலாக விலை கிடைத்துள்ளது. அவ்வளவு விலை கூடுதல் அமைச்சர் என்பதற்காகக் கிடைத்ததா? அல்லது அமைச்சர் பொறுப்பிலிருந்து ப.சிதம்பரம் அவருக்கு ஏதாவது உதவி செய்திருப்பாரா? என்றெல்லாம் ஐயம் பிறக்கிறது.

தி.29. ப.சிதம்பரம் இந்தத் தவறுகளையெல்லாம் செய்யவில்லை. பங்குகளைச் சந்தையில் வாங்கியதுதான் அவர் செய்தது! ஆயினும் ராஜிநாமா செய்துவிட்டார். அன்று ஓ.வி.அளகேசன், லால்பகதர் சாஸ்திரி! இன்று ப.சிதம்பரம்! மிகமிக உயர்ந்த மரபு!

ஆம்! மாண்புமிகு ப.சிதம்பரம் நல்ல சிந்தனையாளர். செயல்திறம் உடையவர்! அவர் ஏன் இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டார்? புரியாத புதிர்! நாடு தழுவிய நிலையில் பத்திரிகைகளில் ப.சிதம்பரம் பற்றிய செய்திகள் வெளிவந்தன. ஒன்றும் கண்டிக்கவில்லை. விதி முறைப்படி தவறில்லை. அறநெறிப்படி தவறு என்று இதழ்கள் எழுதின. யார் எதைச் சொன்னால் என்ன? ப.சி. ராஜிநாமா செய்து விட்டார். தமது நிலையை மிகமிக உயர்த்திக் கொண்டு விட்டார்! பம்பாய் இதழ் ஒன்று கூறியதுபோல ப.சி. ராஜிநாமாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக் கொள்வாரா, என்ன? ஒருபோதும் மாட்டார்!

நாம் ப.சி. அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்; தாங்கள் அடுத்து நாட்டுக்கு நல்லது என்று எதை நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள் என்று! இனிய செல்வ, இன்றைய அரசியலில் ப.சி. ஒரு குறிஞ்சி மலர், திருவள்ளுவர் கூறிய கவரிமான் சாதி! வளர்க ப.சி.! இன்ப அன்பு

அடிகளார்

70. பொறுமையின் இலக்கணம்

இனிய செல்வ,

திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். திருக்குறள் வாழ்க்கை நூலாதலே வேண்டாம் என்று பலரும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். திருக்குறள் வாழ்க்கை நூலாதல் இயலுமா? அதுவும் இந்த நூற்றாண்டில் இயலுமா?

இனிய செல்வ, ஆய்வு செய்ய வேண்டும். போதிக்கும் ஒழுக்க நெறி உயர்ந்ததாக இருக்கலாம். மிக உயர்ந்தவர்கள் கூட ஒழுக்க நெறிகளைப்பற்றி உபதேசிக்கலாம். ஆனால், நடைமுறை எப்படி இருக்கிறது? ஏன் இந்த நிலை? திருவள்ளுவர் மிக மிக உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு மக்கள் சமூகத்தைப் புரிந்துகொள்ளாமல் ஒழுக்க நெறிகளை உபதேசித்துள்ளாரா? இந்த வினாக்கள் அண்மைக் காலமாக அடிக்கடி எழுகின்றன!

திருக்குறள் ஒரு இலட்சிய நூலே! நடைமுறைக்கிசைந்த வாழ்க்கை நூலல்ல! இனிய செல்வ, நீ சொல்வது புரிகிறது! ஆயினும் மக்களின் நிலைக் கேற்பவும் அறம் கூறமுடியாது; ஒழுக்க நெறி கூறமுடியாது. ஆயினும் பள்ளத்தில் கிடப்பவரை எழுப்பிக் கொணர வேண்டாமா? படிமுறை வளர்ச்சிதான் சாத்தியம்! சுத்த நீதியும் மக்கள் மன்றத்தில் எடுபடாது. திருவள்ளுவருக்கு இது தெரியும்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்”

(314)

என்ற திருக்குறளில் பழி வாங்கும் உணர்வுடைய மனிதர்களுடன் திருவள்ளுவர் கூடவே போகிறார் என்பதை "ஒறுத்தல்" "அவர்நாண" என்ற சொற்கள் புலப்படுத்துகின்றன. ஆயினும் பல்வேறு திருக்குறளைப் பார்க்கும்போது திருக்குறள் வாழ்க்கை நூலாதல் இயலுமா என்ற வினா எழும்பாமல் இருக்காது.

இனிய செல்வ, இன்றைய நமது நாட்டின் போக்கில் யாருக்காவது கோபம் வராமல் இருக்குமா? எங்குப் பார்த்தாலும் வன்முறை! இழிவான பேச்சு! பழிதூற்றல்! உப்புக்கும் பெறாத செய்திகளுக்கும் போராட்டங்கள்! அறமல்லாதவற்றிற்கும்கூட, "கூட்டம் கூடி”ப் போராடுகின்றனர், சுயநலத்தின் அடிப்படையில்! இன்று யாருக்கும் வேலை செய்ய விருப்பமில்லை! இந்த நெறியல்லா நெறி வழிச் செல்லும் மக்கள்மீது நமக்குக் கோபம் வரவேண்டாமா? இனிய செல்வ, திருவள்ளுவர் என்ன அவர் சொன்னபடி வாழ்ந்தனரா? "செத்தாருள் வைக்கப்படும்” என்று கூறியல்லவா திட்டுகிறார்!

இனிய செல்வ, ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திக்க விருப்பமே! ஆனாலும், சூழ்நிலை பாதிக்கிறது! பொறுத்தால் கோழையாகி விடுவோமோ என்ற அச்சம் மேலிடுகிறது! நாளெல்லாம் கொலை, பொழுதெல்லாம் கொள்ளை என்ற நிலை நாட்டில்! நிர்வாணமான சுயநலம் அரங்கேறுகிறது; ஆத்தான மண்டபம் ஏறுகிறது. இந்தச் சூழ்நிலையில் பொறையுடைமைப் பண்டை ஏற்க முடியுமா? பொறையுடைமை மேற்கொண்டு ஒழுக இயலுமா? இனிய செல்வ, இந்தப் போராட்டம் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. ஆயினும் திருவள்ளுவரின் சொல்லாட்சி முறை, பொருள் வைப்பு முறை நம்மைச் சிந்திக்க வைக்கத் துரண்டுகிறது.

ஒருவர் நம்மைப் பழி தூற்றுகிறார்! இல்லாதன, பொல்லாதனவெல்லாம் கூறுகிறார்! நமக்கே கேட்டுக் கொண்டிருக்க இயலாத நிலையில் ஆத்திரம் மேலிடுகிறது! இனிய செல்வ, என்ன செய்வது? திருவள்ளுவரின் ஆலோசனை பொறுத்துக் கொள்! துறவியைப் போலப் பொறுத்துக் கொள் என்பது. ஏன்? உன்னைப் பழிதூற்றுவோர் யார்? நல்லவர்கள் அல்ல; பிழைப்பவர்கள்; தகுதியில்லாதவர்கள்! அவர்கள் பேச்சுக்குக் கவலைப்படுவானேன்? கதிரவன் நாய் குரைப்புக்காக ஞாலம் சுற்றி வருவதைத் தவிர்க்கிறதா? அல்லது விரைந்தோடும் ஊர்தி, குரைத்துக்கொண்டு வரும் நாயைக் கண்டு நின்று விடுகிறதா? ஒன்றும் நடப்பதில்லை! நெறியின் நீங்கியோர், நன்மையை நன்மை என்று அறியாதார், நன்று தீது தேர்ந்து தெளியும் அறிவிலாதார் - இவர்கள் மூர்க்கர்கள்! சொந்த புத்தியும் இல்லாதவர்கள், சொற்புத்தியும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அவர்கள் பேதையர்; கொண்டதை விடார்! அவர்களிடம் சொல்லும் எதையும் கேளார். கல்லில் முளையடித்த முயற்சி போல் பாழே. இத்தகுதியோர் வார்த்தைகளுக்கு அஞ்சுவதில் பயன் என்ன? ஒன்றும் இல்லை. மற்றவர் வருத்தத்தில் துன்பத்தில் மகிழ்வது தீயவர்களுக்குப் பொழுதுபோக்கு!

இனிய செல்வ, இவர்களுடைய இன்னாத சொற்களைப்பற்றி அலட்டிக் கொண்டாலும் பயன் இல்லை. என்பதனாலேயே,

"துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்

இன்னாச் சொல் நோற்கிற் பவர்"

(159)

என்றார்.

துறவிகளிடம்கூட சாபமிடுதல் போன்ற துன்பம் விளைவிக்கும் செயல்கள் உண்டு. அதனால், துறந்தாரின் தூய்மையுடையார் என்றார்.

இனிய செல்வ, திருக்குறள் கூறும் பொறையுடைமை எண்ணத்தக்கது. இன்னாதன கூறுவார் மாட்டுப் பொறையுடைமை வேண்டும். அதேபோழ்து நமது வாழ்வை ஆக்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையைப் பொருளுடையதாக்குக நிலம் போல என்றார்.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

(151)

ஆதலால், பொறையுடைமை என்பது அழுவதும் அல்ல; அழிவதும் அல்ல. பயனற்ற சின்ன மனிதரிடம் சண்டை போடாதே! ஒதுங்கி வாழ்க! ஆற்றலுடன் வாழ்க! சீறுவோர்ச் சீறுக! ரெளத்திரம் பழகுக! இனிய செல்வ, இது ஒரு ஆலோசனை! இன்ப அன்பு

அடிகளார்

71. இரண்டு சக்கரங்கள்

இனிய செல்வ,

இன்று உலக முழுவதும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகளில், மற்ற நாடுகளில் மக்களாட்சி அமைவதற்கு முன்பே அரசியற் கிளர்ச்சி நடந்து மக்களாட்சி முறை அமைத்துவிட்டனர். இங்கிலாந்தில் அரசர் பரம்பரை இருந்தாலும் பாராளுமன்ற ஆட்சி முறை அமைந்துள்ளது. இந்த வேலை முடிந்தபிறகு, அந்த நாடுகளில் அரசியல் இயக்கங்கள் தங்களுடைய வேகத்தைத் தணித்துக் கொண்டு நாட்டின் முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்துகின்றன. அதனால் அந்த நாடுகள் வளர்கின்றன.

நமது நாட்டு வரலாறு வேறு மாதிரியாகச் செல்கிறது. நமது நாட்டிலும் சுதந்தரப் போராட்டம் நடந்ததுண்டு. அப்போது அதில் ஈடுபட்டவர்களுடைய எண்ணிக்கை அளவில் கூடுதல் என்று சொல்ல முடியாது. நமது சுதந்தரப் போராட்டம் மக்கள் போராட்டமாக நடந்ததா என்பதே ஆய்வுக்குரிய செய்தி! ஆனால், சுதந்தரத்துக்குப் பிறகுதான் நமது நாட்டில் அரசியல் சூடுபிடித்திருக்கிறது. புதிய புதிய கட்சிகள் தோன்றுகின்றன; தலைவர்கள் தோன்றுகின்றனர். ஊர்தோறும் கட்டப்பெற்றுள்ள கொடிகளை எண்ணினால் நமது நாட்டுக் கட்சிகளை எண்ணிச் சொல்லிவிடலாம்! இனிய செல்வ, அக்காலத்தில் ஒரு சிற்றூரில் ஒரு குடும்பம் அல்லது இரண்டு குடும்பங்கள் அரசியலில் ஈடுபட்டன. இக்காலத்தில் அரசியலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இது தவறன்று. மேலும் கூடக்கூடலாம்; கூடவேண்டும்! ஆனால், மக்களாட்சி முறைக்குரிய நெறி முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இனிய செல்வ, திருவள்ளுவர் முடியாட்சிக் காலத்தில் இருந்தவர். அவர் இந்தக் காலத்துக்குடியாட்சி முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அரசன் இருக்கலாம்; அரசுகள் இருக்கலாம், அரசுகளுக்கு அதிகாரம் இருக்கலாம். ஆயினும் அந்த அதிகாரம் அரசனின் விருப்பை-வெறுப்பைச் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அரசு, பொது; நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது; ஆள்வோரின் பகைவருக்குக்கூட உரிமையுடையது. ஆள்வோர் விருப்பு-வெறுப்பு உடையவராக இருத்தல் கூடாது. ஆள்பவர்கள் வழிவழியாக வந்துள்ள முறைகளையும், சட்ட நூல்கள் வகுத்துக் கூறும் முறைகளையுமே கருவியாகக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டும்; நீதி செலுத்த வேண்டும். இதுதான் ஆட்சிமுறை.

மக்களாட்சி முறை நாடுகளில் சட்டங்களே ஆள்கின்றன; ஆளவேண்டும். ஆளுங் கட்சியும், எதிர்க் கட்சியும் ஒரு வண்டியின் இரண்டு சக்கரங்கள் போன்றவை. அல்லது அண்ணா கூறியது போல, "எதிர்க்கட்சி, ஆளுங்கட்சிக்கு மூக்கணாங்கயிறு போன்றது”. இனிய செல்வ, மூக்கணாங்கயிறு, மாட்டின் மூக்கை அறுக்கவும் கூடாது; வண்டியையும் தன்போக்கில் போகவிடாமல் மாடுகளை இழுத்துப் பிடிக்கவும் பயன்படவேண்டும். இன்று ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எதிரிகளாக நடந்து கொள்கின்றன. ஒரு சிலர் மையொட்டித் தாளைப்போல நடந்து கொள்கிறார்கள். இவ்விரண்டு முறையுமே தவறு.

எதிர்க்கட்சிக்கு என்று சில கொள்கைகள் உண்டு. அந்தக் கொள்கைகளை ஆளுங்கட்சி ஏற்காது. ஆனால், பொதுவாக மக்களுக்கு நலன்கள் செய்யும் ஆட்சிக்கு உற்ற துணையாக எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடும்பொழுது எதிர்க்கட்சிகள் அவைகளை நிகழவொட்டாமல் தடுக்க வேண்டும். இனிய செல்வ, நீ கேள்வி கேட்பது புரிகிறது. இன்று நாடு தழுவிய நிலையில் மக்களாட்சி முறை. முறைபிறழ்ந்து விட்டதால் மக்கள் நலம் நாடும் பணி குறைந்து வருகிறது. நடைபெறும் சில பணிகளும் கூட குழுஉ மனப்பான்மையில் அவரவர் கட்சியினருக்கே அமைகிறது. இனிய செல்வ, எதிர்கட்சிகளைக் கண்காணித்தல், ஓட்டுக் கேட்டல் போன்றவைகள் நிகழ்கின்றன. ஏன்? சில சமயங்களில் பொதுவிதிகள் கூட மறுக்கப்படுகின்றன. இவையெல்லாம் மக்களாட்சி முறைக்கு உடன்பாடானவை அல்ல. திருக்குறள் "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்”

என்று கூறியது.

முறை செய்தலாவது தன் ஆட்சிக்குட்பட்ட அனைவரையும், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து நலம் செய்ய வேண்டும். யார்மாட்டும் வெறுப்புக் காட்டக் கூடாது; விருப்பமும் காட்டக்கூடாது. ஆட்சிக்கு அடிப்படை ஆள்பவர்களின் விருப்பங்களும் அல்ல; வெறுப்புகளும் அல்ல, "முறை”கள்தான்!

அரசு, தம் மக்களைக் காப்பாற்றுதல் என்றால் என்ன பொருள்? பகைமைகளிலிருந்தும் பாதுகாப்பது என்றுதான் பொருள். உழைப்பாளர்கள் உற்பத்தி செய்து பொருளைக் குவிக்கின்றனர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் செழிப்பு இல்லை! நாளுக்குநாள் வறுமைக்கோடு வளர்கிறது! இந்தச் சுரண்டல்முறைப் பொருளாதாரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவது வழிவழி வளர்ந்து வந்துள்ள அறநெறிமுறை! இந்த முறையை அரசுகள் தவறாது காப்பாற்ற இது வேண்டும்!

மக்களுக்குள் பகைமை வருவது இயல்பு. ஆனாலும், ஒருவன் தன் பகைவனை அழிக்க அரசு இடம்கொடுக்காமல் காப்பாற்றவேண்டும். அதுதான் முறை!

இனிய செல்வ, இந்த முறை சார்ந்த அரசுகளாலேயே மக்களைக் காப்பாற்ற இயலும்! இன்ப அன்பு

அடிகளார்

72. விருதுபெறும் வித்தகர்

இனிய செல்வ,

நமது வள்ளுவர் வழி - இதழாசிரியர் அருமை நண்பர் தே.கண்ணன் அவர்கள் ‘திருவள்ளுவர் விருது' பெற்றிருக்கிறார்; ஆம்! நீ சொல்வது நூற்றுக்கு நூறு சரி! திருக்குறள் ஆர்வலர்கள் அனைவரும் மகிழக் கூடிய செய்தி! இந்த விருதை நமது தே.கண்ணன் பெற்றிருக்கிறார்! எத்தனை ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு பெற்றிருக்கிறார்-தெரியுமா? திருவாளர் தே.கண்ணன் அவர்கள் தமிழ்நாடு அரசின் வணிக வரித்துறையில் பணியாற்றியவர். மாவட்ட வணிக வரி அலுவலர் பதவி வரை அரசுப் பணியில் வளர்ந்து உயர்ந்தவர்.

இனிய செல்வ, வணிக வரித்துறையில் பணி செய்தும் அவர் என்றும் போலத்தான் இருக்கிறார். இனிய செல்வ, புரிகிறதா? இந்த உலகத்தில் கல்லை. தே.கண்ணன் போன்றவர்கள் விசித்திரமானவர்கள்; கல்லை, தே.கண்ணன் அவர்களுடன் நமக்கு உறவு ஏற்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று! அவர் அன்றைய சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் பணி செய்தபோது முதலில் உறவு ஏற்பட்டது! அந்த நாள்முதல் இந்த நாள் வரையில் தலை நாள் காட்டிய பரிவையே காட்டி வருகிறார்! குறியொன்றும் இல்லாத பரிவு-தியாகம்.

அந்தக் காலத்தில் கல்லை, தே.கண்ணன் அவர்களுடைய அழைப்பின் பேரில் சேலம் மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டப் பயணம் ஏற்றுக் கொள்ளப் பெற்றது. அப்பொழுது கிருஷ்ணகிரியில் பலர் வீடுகளின் முகப்பில் திருக்குறள். அலுவலகங்களில் திருக்குறள்! இப்படி இடம் பெற வைத்திருந்தார்! ஒருவரை ஒருவர் சந்தித்தால் எலுமிச்சம்பழம் பெறுவதுதான் மரபு! கல்லை தே.கண்ணன் அவர்கள் ஒரு புது மரபை உருவாக்கினார். நாம் கிருஷ்ணகிரி சென்றவுடன் திருக்குறள் பதித்த அட்டையைக் கொடுத்து வரவேற்றார். இவர் திருக்குறள் பதித்த அட்டைகள் எப்பொழுதும், அவர் கைவசம் இருக்கும்.

இனிய செல்வ, கல்லை. தே.கண்ணன் அவர்கள் நல்ல திருக்குறள் அறிஞர்; 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த போது ‘தமிழ்க் காப்பு மாநாடு’ ஒன்று குன்றக்குடியில் கூட்டப்பெற்றது. அந்த மாநாட்டில் முத்தமிழ்க் ‘காவலர், சிலம்புச் செல்வர், தமிழ் மறவர் சி. இலக்குவனார் ஆகியோருடன் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் பங்கேற்பாளர்கள் நூறு பேர்; மாநாடு நன்றாக நடந்தது; இடையில் சி. இலக்குவனார் மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்துவிட்டார்! இனிய செல்வ, ஏன் அவசரப்படுகிறாய்? சொல்ல வந்ததை முழுதும் சொல்லாமல் விட இயலுமா? இந்தி எதிர்ப்புணர்ச்சிக்குக் காட்டும் ஆர்வத்தைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது மாநாட்டின் முடிபு. இந்த மாநாட்டில் கல்லை, தே.கண்ணன் அவர்களும் கலந்து கொண்டார். மாநாட்டுப் பேராளர்கள் வருவதற்கு இடையூறாக தமிழ்நாடு அரசு ஒற்றர் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் வந்து மடத்தைக் கண்காணித்தனர். இதனால், கல்லை, தே.கண்ணன் அவர்கள் சில தொல்லைகளுக்கும் ஆளானார்; ஆனால், கடுமையாகப் பாதித்து விடவில்லை.

இனிய செல்வ, கல்லை. தே.கண்ணன் அவர்கள் தாம் ஒய்வு பெற்ற பிறகு "வள்ளுவர் வழி” இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்தக் காலத்தில் ஒர் இலக்கிய இதழை இழப்பில்லாமல் நடத்த முடியுமா? மிகுந்த இடர்பர்டுகளுக்கிடையில் நடத்தி வருகிறார். அவரே இதழ்களை மடித்து அஞ்சல் செய்து வருகிறார். இனிய செல்வ, நாமெல்லாம் முயன்று அவருடைய இழப்பை ஈடு செய்ய வேண்டும். இது நமது கடமை! இனிய செல்வ, கல்லை, தே.கண்ணன் அவர்கள் திருக்குறள் விருதினைப் பெற்றுள்ளார்.

"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு"

என்ற திருக்குறள் நெறிதான் இந்த விருதினைப் பெறத்துணை செய்தது; கல்லை. தே.கண்ணன் அவர்கள் நீதியை விரும்புபவர். அறத்தையும் 'அறம்' என்றே சிறப்பித்துக் கூறப்பெறும் திருக்குறளையும் விரும்புவர். அது மட்டுமா? பல ஆண்டுகளாகத் தமக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்ந்தவர். அதனால் அவரை உலகு பாராட்டியுள்ளது. நாமும் பாராட்டுவோம் வள்ளுவர் வழியை எண்ணி! இன்ப அன்பு

அடிகளார்

73. கயமை சாடு

இனிய செல்வ,

இன்று நாட்டில் கயமைத் தனம் வளர்ந்து வருகிறது. கயமை என்றால் என்ன? கடமையை முறையாகச் செய்யாமை. வேலை செய்வதில் விருப்பமின்மை, ஊதியம் வாங்கும் பணியை முறையாகச் செய்யாமல் வேறு பல சுய சம்பாத்தியங்களில் ஈடுபடுவது, கையூட்டுகள் பெறுவது., கையூட்டுகள் பெறுவதன்மூலம் பொது நலனைக் கெடுத்தல்; நன்றி மறத்தல்; அவதூறு பேசுதல்-இன்னும் பல! அடுக்கினால் பெருகும்! இந்தக் கயமைத் தனம் இன்று பெருகி வளர்ந்து வருகிறது! அப்பட்டமான நிர்வாணமான சுயநலம்! காரியம் நிறைவேற வேண்டுமானால் அழைக்காமலே சந்திக்க வருவர். கடிவாளம் என்றால் மட்டும் ஐயோ பாவம்! இவர்களும் மனிதர்களா?

இன்று எங்குப் பார்த்தாலும் கயமைத்தனம் மேனி மேலோங்குகிறது. நாளுக்கு ஒரு கொலை! நாழிகைக்கு ஒரு திருடு! நாளொன்றுக்குப் பல விபத்துக்கள்! நாடு நகர்வதில்லை! இனிய செல்வ, இவர்களைத் திருத்துவது யார்? திருத்த முடியுமா? திருத்தமுடியும் என்ற நம்பிக்கை திருவள்ளுவருக்கு இருந்தால் ஏன் கயமை என்றே அதிகாரம் ஒன்றமைத்து ஓதுகிறார்? கயமை அதிகாரத்திலும் கயவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையைத் திருவள்ளுவர் தரவில்லை!

இனிய செல்வ, கயவர்கள் சுயமாகவும் சிந்திக்க மாட்டார்கள்! சொன்னாலும் கேட்கமாட்டார்கள், அவர்கள் நோய் போன்றவர்கள் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். இனிய செல்வ, இனிப்பு சுவையுடையது. கசப்புச் சுவையுடைய எட்டிக் காயை மறைவாகத் தேனில் ஊறப்போட்டால் எட்டிக்காய் இனிக்குமா, என்ன? ஒரு பொழுதும் இனிக்காது. ஏன்? கரியைப் பால் விட்டுக் கழுவினால் கரி வெள்ளையாகிவிடுமா, என்ன? ஒரு பொழுதும் வெள்ளை ஆகாது. அதுபோலத்தான் கயவர்கள் நிலை; கயவர்கள் சொல்லப் பயன்படார்.

இனிய செல்வ, இன்று எங்கும் கயமைத்தனமே மேவி வளர்ந்து வருகிறது. எந்த ஒன்றும் முறையாக நடப்பதில்லை. நடக்க வேண்டும் என்ற விருப்பமும் பலருக்கு இல்லை! இனிய செல்வ, நாடு தழுவிய, நிலையில் வளர்ந்துள்ள இந்த அநாகரிகத்தை எப்படிச் சந்திப்பது? யார் சந்திப்பது? மக்களாட்சிமுறை உள்ள நாட்டில் சட்டமே ஆட்சி செய்கிறது என்ற கோட்பாடுள்ளது. மக்கள்தான் விழிப்புணர்வு பெறவேண்டும். இனிய செல்வ, நமது நாடு-மக்கள் சக்தி சிந்திக்கத் தலைப்படுதல் வேண்டும். சிந்தித்தவைகளைத் தக்காருடன் கலந்து பேசவேண்டும். மனம்விட்டு விவாதிக்க வேண்டும்; தெளிந்த முடிவினை எடுக்க வேண்டும்; முடிவுகள் மீது செயற்பாட்டுக்கு வரவேண்டும்; இனிய செல்வ, மக்களில் இப்படி இருப்போர் எண்ணிக்கை குறைவு? இங்ஙனம் செயற்படுத்த இயலாவண்ணம் நிற்போருக்கு யார் துணை? கொடினுடைக்கும் பணியைத் தொடக்க வேண்டியது தான்! .

"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு”

(987)

என்று கூறும் திருக்குறளிலேயே கயமை அதிகாரமும் வருகிறது. இனிய செல்வ, இன்னாதன செய்தல் வேறு. கயமைத்தனம் வேறு! கயமை என்பது சின்னத்தனம்! உள்ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல்! அள்ளிச் சாப்பிட்ட கை, ஈரம் காய்வதற்கு முன்பே சோறிட்டவரை மறப்பது. மறப்பது மட்டுமல்ல-உண்ட வீட்டுக்குத் தீமை செய்தல்! பலகாலும் பழகினால்கூட அந்நியர் போல நடந்து கொள்வது! இன்ன பிற கயமைத்தனங்கள்! வீட்டைக் காவல் செய்ய அமைத்தால் வீட்டையே திருடுவது! கோயில் பூசை செய்வோர் சிலை திருடி விற்பது! நாட்டுப் பணியில் அமர்த்தினால் நாட்டையை விலை பேசுவது! சுயநலத்திற்குப் பொதுநலத்தைக் கெடுப்பது! இன்ன பிறவும் கூட கயமைத் தனங்களேயாம்! இனிய செல்வ., இன்றைய நாடு எப்படி இருக்கிறது? நாளும் கயமைத்தனம் வளர்ந்து வரவில்லையா? "ஆம்" என்கிறாய்! அப்புறம் ஏன் சும்மா இருக்கிறாய்?

இனிய செல்வ, உன்னையும் சுயநலம் ஆட்கொண்டு விட்டதா? கோழையாக்கி விட்டதா? ஏன் மெளனம்? மெளனத்தைக் கலை! விழித்துக் கொள், போராடு! போராடு! நாட்டில் வளர்ந்து வரும் கயமைத்தனத்தை எதிர்த்துப் போராட ஆயத்தமாகு! என்ன, சாவுதானே வரும்? இந்த உலகில் சாகாமல் வாழ்ந்தவர் யார்? அவமானத்தைத் தூக்கிச் சுமந்து வாழ்வதைவிட சாதல் நல்லது. மக்கள் நலனுக்காகப் போராடிச் சாகும் சாவை-உளதாகும் சாக்காட்டை வாழ்த்தி வரவேற்போம்! இன்ப அன்பு

அடிகளார்

74. தோழமையைத் தேடுவோம்

இனிய செல்வ!

நம்மனோர் வாழ்க்கையிலும்-நம்மை அறியாது திருக்குறள் தத்துவம் இடம் பெற்றுவிடுகிறது. அதுதான் ஊழோ! இனிய செல்வ! ஊழில்கூட நம்பிக்கை வந்து விட்டதா என்பது உன் கேள்வி! ஊழ்த் தத்துவத்தில் நமக்கு என்றும் நம்பிக்கை உண்டு. ஆயினும் ஊழைப்பற்றிய இலக்கணத்தில் நமக்கு மாறுபாடு உண்டு! மேலும் "ஊழ் வெற்றிபெற இயலாதது" என்று கூறப்பெறுவதையும் நாம் ஏற்பதில்லை! ஊழ்-மனிதனுடைய பழக்க வழக்கங்களில் உருவாவதேயாம்! இனிய செல்வ! நம்மை நாள்தோறும் இட்டுச் செல்வது அல்லது வழிநடத்திச் செல்வது நமது பழக்கங்களும் வழக்கங்களுமேயாம். பழக்கம் தவிரப் பழகும் அறிவும் ஆளுமையும் நமக்கு இருப்பின் ஊழ்உருவாகாமலே தடுக்கலாம். ஒரோ வழி எளிதில் வெற்றியும் பெறலாம். இதுவே நமது கருத்து.

மார்ச்சு 13,14-ல் திருக்குறள் பேரவை மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ‘வள்ளுவர் வழி’ ஆசிரியர் இனிய அன்பர் கல்லை தே.கண்ணன் அவர்களுக்குப் பாராட்டுச் செய்யவும் பொன்னாடை போர்த்தவும் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. வழக்கம்போல நம்மவர்கள் விழாவைக் காலந்தாழ்த்தினர். ஆதலால் தே.கண்ணன் அவர்களுடைய பாராட்டு விழாவிற்கு அடுத்த படியாக இருந்த ஒரு பாராட்டு விழாவும் ஒரே விழாவாக நடத்தவேண்டிய அறச்சங்கடம் தோன்றிவிட்டது. அந்த விழாவில் திருக்குறளை, செளராஷ்டிர மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்ட பூஜ்யஶ்ரீ சித்தநரஹரி அவர்களுக்கும் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தை நடத்திச் சாதனை செய்த அறநெறியண்ணல் கி.பழநியப்பனார் அவர்களுக்கும் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரே மேடையில் நால்வருக்கும் பாராட்டுவிழா; விழாக் குழுவினர் பொறுப்பில் ஏற்பாடு! நமது ஏற்பாடும் கலந்து பேசி முடிவெடுக்கவில்லை. ஏன்? விழா நேரம் வெவ்வேறுதானே! விழாக் குழுவினர் எல்லா விழாக்காரர்களையும் போலப் 'பொன்னாடை’ வாங்கி வைத்திருந்தனர். நமது ஏற்பாடு பொன்னாடைகளே! இனிய செல்வ, விழா மேடையில் வேறுபாட்டைத் தவிர்க்க இயலவில்லை, ஏன்? விழா நாள் ஞாயிற்றுக் கிழமை! புதியதாகப் பொன்னாடைகள் வாங்க இயலவில்லை. நமக்கும் அவர்கள் ‘பொன்னாடை’ தான் வாங்கியிருக்கிறார்கள் என்று முன்கூட்டியும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் இயலாத நிலையில் பணி நெருக்கடி! என்ன செய்வது? விருந்தினருக்குப் பொன்னாடை போர்த்தப் பெற்றது. நமது உறுப்பினர்களுக்கும் ‘பொன்னாடை’ போர்த்தப் பெற்றது. இனிய செல்வ,

"பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை

செய்தாங் கமையாக் கடை”

என்று திருக்குறள் கூறும் இலக்கணப்படி தே.கண்ணன் அவர்களும் கலைவாணி சீனி திருநாவுக்கரசு அவர்களும் பொறுத்து ஏற்றுக் கொண்டு இன்முகங்காட்டியது அன்றைய இராமனை நினைவூட்டியது. திருக்குறள் மரபுநெறி ஏற்றுப் போற்றல் என்பது உயர் பண்பல்லவா?

இனிய செல்வ, திருக்குறள் நட்பியல் பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறது. நம்மையும் ஆய்வு செய்யும்படி வற்புறுத்துகிறது. ‘நட்பாராய்தல்’ என்றே ஒரு அதிகாரம்! ‘தீ நட்பு’ என்றும் ஒரு அதிகாரம்! இவ்வளவும் கூறியபின் 'பழைமை’ என்று ஒரு அதிகார அமைப்பு ஏன்? நாம் என்ன முற்றறிவினரா? இல்லையே! நமக்கும் சில எதிர்பார்ப்புக்கள் உண்டல்லவா? அவ்வழி யாரோடாவது நட்பு ஏற்பட்டு விடலாம்! காலம் போகப் போக அந்த நட்பில் மாறுபாடு தோன்றலாம். என்ன செய்வது? பழகிய நட்பில் பிரிவுகளைத் தவிர்ப்பதற்குத் தான் பழைமை அதிகாரம். நண்பரும் தவறு செய்யலாம். அல்லது நாமேகூட நன்று-தீது ஆராயும் அறிவில் சோர்வுபட்டு நல்லனவே செய்யும் நண்பரைக் கூட வேறாகக் கருதலாம் அல்லவா? இந்த மாதிரி சமயங்களில் நட்பினை நிலைநிறுத்தப் பழைமை பாராட்டல் என்ற பண்பு பயன்படும்! இனிய செல்வ, இன்று நாட்டில் நட்பியல் இருக்கிறதா என்பதே கேள்வி! மனிதன் விரைந்தோடுகின்றான்! அவனுக்குத் தெரிந்தவர்கள் உண்டு; அறிமுகமானவர்கள் உண்டு. நண்பன் உண்டா? நீயே கேட்டுப் பார்!

நட்புக்கு ஈடான சொல் தோழமை என்பது. நட்பு, நண்பன் என்ற சொற்களைவிட தோழமை, தோழன் என்ற சொற்கள் ஈர்ப்புள்ளவையாக உள்ளன. சேக்கிழார் அறிமுகப்படுத்தும் சொல் ‘தோழன்’ என்ற சொல்லாகும். ருஷ்யப் புரட்சியின்போது ‘தவாரிஷ்’ என்ற சொல் மந்திரச் சொல் போல் விளங்கியது. ‘தவாரிஷ்’ என்றால் ‘தோழன்’ என்பது பொருள். அதுமுதல், பொதுவுடைமை இயக்கத்தில் தோழன் என்ற சொல் பெருவழக்காயிற்று. ஆதலால் தோழன் என்ற சொல்லை பொதுவுடைமைக் கட்சி சாராதவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இது தவறு. "தோழன்” என்ற சொல் வழக்கு நல்ல வழக்கு. தோழர்களைத் தேடுவோம்! கோப்பெருஞ் சோழனுக்கு ஒரு பிசிராந்தையாரும், வள்ளல் பாரிக்கு ஒரு கபிலரும், நற்றமிழ் நம்பியாரூரருக்கு ஒரு சில பெருமானும் போலத் தோழர்கள் வாய்த்தால் வாழ்வு சிறக்கும்! புரூட்டஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாது! இன்ப அன்பு

அடிகளார்

75. தீமையை எதிர்த்து நில்

இனிய செல்வ,

மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை; இருப்பதும் இயலாது. ஆயினும் நல்லவர்களாக இல்லாது போனாலும் கெட்டவர்களாகாமல் இருக்கக்கூடாதா? மற்றவர் மனம் புண்படப்பேசுவதும் நடந்து கொள்வதும் நல்லதா? அவசியமா? இனிய செல்வ! கருத்து வேற்றுமை கலகங்களை வளர்க்க வேண்டுமா? சொத்துத் தகராறுகளைப் பேசித் தீர்க்க இயலாதா? மனிதன் மனம் வைத்தால் எது நடக்காது?

இனிய செல்வ, இன்று எல்லோரிடமும் ஓர் ஆசை வளர்ந்து வருகிறது. அதுதான் தலைவர் ஆகவேண்டும் என்ற ஆசை! அதற்காக எளிதாக முடியக்கூடிய காரியத்தைக்கூட அணுகாமல், பேசாமல் விவகாரமாக்குகிறார்கள்; கட்சியாக்குகிறார்கள். கொடிக்கம்பங்கள் தலை தூக்குகின்றன. இந்த நடைமுறை பாராளுமன்றத்திலிருந்து சிற்றூர்வரை வளர்ந்துவிட்டது. இனிய செல்வ, மக்களுக்கு ஒரு யோகம்? அடிக்கடி மேடைகளைப் பார்க்கிறார்கள்! பயன் இருக்கிறதோ இல்லையோ கேட்கிறார்கள்! இல்லை, ஒலிபெருக்கி மூலம் கேட்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இனிய செல்வ, இன்று நமது தேவை, சமுதாய அமைப்பு! சமுதாய அமைப்பு-இது உருவாகவில்லை! இனி எதிர்வரும் காலத்திலும் உருவாகாதுபோல் தெரிகிறது. நாடு முழுவதும் பல குழுக்கள்! ஒருங்கிணைப்பு இல்லாத கூட்டம்! வெறுங்கூட்டம்! கூச்சல் போடும் கூட்டம்! கலாட்டா செய்யும் கூட்டம்! இனிய செல்வ, சமுதாய நாகரிகத்திற்குப் பதிலாக கும்பல் கலாசாரம் (Mob Culture) வளர்கிறது, இதனால் உழைப்பாற்றல் வீணாகிறது; பொருளுற்பத்தி பாதிக்கிறது; அமைதி கெடுகிறது! இந்த அவலம் ஏன்? "நான்” தான் காரணம்! எல்லோரும் வளரத்தான் வேண்டும். குடியரசு நாட்டுக்கு இது அவசியமானதும் கூட! ஆயினும், வளராமலே-வளர்த்துக் கொள்ளாமலே தலைமை ஏற்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்! விபரீதமான ஆசை; தன்னலம் சார்ந்த ஆசைகளால் தூண்டப்பெற்று செயல்படுகின்றனர். இத்தகைய மனப்போக்கில் செல்பவர்களுக்கு வரலாற்றைப் பற்றிய கவலை இல்லை. வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் விரும்பமாட்டார்கள். தெரிந்தாலும் தெரியாததுபோல் நடிப்பார்கள். இல்லை-இல்லை மறந்துவிடுவார்கள். விளைவுகளைப் பற்றிய கவலையே இல்லை; எதிர்விளைவுகளைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். எதிர்விளைவுகளைத் தாங்கமுடியாமல் கூச்சல் போடுவார்கள்! பழி தூற்றுவார்கள்! அணுகிப் பார்த்தால் அற்பமான விஷயங்களுக்காக இவ்வளவு ஆரவாரம் என்று தெரியும்! இனிய செல்வ, இது மட்டுமா? இங்ஙனம் கோஷ்டி சேர்ப்பதிலே இவர்களுக்குப் பிழைப்பு வேறு நடக்கிறது! மக்களிடத்தில் நன்கொடை தண்டல்! ரெளடிசத்துக்குப் பயந்து பலர் கொடுக்கிறார்கள்! பண முடை இல்லை.

தி.30.

இனிய செல்வ, இப்படி ஒரு "கும்பல் நாகரிகம்” நமது நாட்டில் வளர்கிறது! இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அடக்குவாரின்றித் திருவிளையாடல்கள் செய்கின்றனர். நாழிகைக்கு ஒரு கொலை; நாளுக்கு ஒரு கொள்ளை என்று வளர்கிறது. பயணம் செய்வோருக்குப் பாதுகாப்பு இல்லை! வெடி குண்டுகள் தாராளமாக நாட்டில் புழங்குகின்றன. அமைதிப் பூங்காவாக, செல்வக் களஞ்சியமாக இருக்க வேண்டிய நாட்டில் இந்த அவலம் ஏன்? பொது மக்கள் இப்போது எதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. படித்தவர்கள்-சராசரி வளர்ந்தவர்கள் தன் பெண்டு, தன் பிள்ளை, என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஒரு சிலருக்கு அச்சம். பயம்! எல்லாரும் விதுரர், துரோணர், பீஷ்மர் போல வாழ்கின்றனர்.

இனிய செல்வ, நமது நாட்டில் இன்று நேற்றுத் தோன்றியதல்ல. இந்த நிலை! மகாபாரத காலத்திலேயே துச்சாதனன் துடுக்குத் தனத்தைத் தட்டிக் கேட்க ஆளில்லையே! பாஞ்சாலியை அரசவையில் துகிலுரியும் பொழுது கணவன்மார்கள் கூடக் கையறு நிலையில் நெட்டை மரங்கள் என நின்றனர்! மிகப் பெரிய அறிஞர்களாகிய விதுரர், துரோணர், பீஷ்மர்கூட வாய்திறக்க மெளனம்! மெளனம்! ஏன்? பாண்டிய நாட்டில் கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமை கண்டு மக்கள் கொதித்து எழுந்தனரா? இல்லை! அதனால்தானே கண்ணகி மதுரையை எரிக்கின்றாள்!

வரலாறு தொடர்கிறது; அவ்வளவுதான். அன்றெல்லாம் முடியரசு! இன்று மக்கள் அரசு! இன்று மக்கள் தட்டிக் கேட்கலாம்! கேட்கவேண்டும்! ஆனால் கேட்கமாட்டார்கள். இனிய செல்வ, இன்று விருப்பம்போல் நடப்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறது. மக்களே போல் நடமாடித் தீமைகள் செய்கின்றனர். இது கயமை உலகம்!

"தேவரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்!’

என்றார் வள்ளுவர். இந்த நிலை மாறினாலேயே நாடு வளரும்; இதற்கு ஒரே வழி நாட்டு மக்கள் அனைவரும் அரசியலில் ஈடுபாடு காட்டுதல்! சமுதாய அமைப்புக்கு உழைத்தல், பொதுவாழ்க்கைக்கு என்று சில மணி நேரமாவது ஒதுக்குதல், பயத்திலிருந்து விடுதலை பெறுதல்! இன்ப அன்பு

அடிகளார்

76. கூட்டாளி ஏன்?

இனிய செல்வ,

இன்று முயன்றாலும் ஒருவராய் வாழ முடிவதில்லை. இந்த உலகின் பரந்த எல்லைகளோடு தொடர்பு வந்தாய் விட்டது. நுகர்வன பலப்பலவாயின. அதனால் பொருள் தேவை அளவற்றதாகிறது. அது மட்டுமா? பொருள் இருந்தால் மட்டும் போதாது. சொத்தும் வேண்டும். தனி உடைமைச் சமுதாய அமைப்பு தோன்றிய பின் சொத்து தோன்றிற்று. காலப் போக்கில் சொத்தின் மதிப்பு, பலவாகக் கூடி, இன்று சொத்து மனித மதிப்பீட்டின் அடிப்படை ஆயிற்று. இஃது ஒரு எதிர்மறை வரலாறு, ஆயினும் நடந்துவிட்டது. நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பலரோடு கூடிவாழ்வது போல ஒரு தோற்றம்;

இனி செல்வ, உணர்வு ஒத்தவர்கள் பலர் கூடி வாழ்ந்தால் அற்புதங்கள் நடக்கும். அதிசயங்கள் நடக்கும். பலர் கூடித் தொழில் செய்துவாழும் பொழுது அறிவின் தெளிவு இருக்கும். ஆற்றல் மிகு விளங்கும். ஆனால், இன்று எண்ணிக்கையில் பலர்! வாழ்நிலையில் பலரின் சிந்தனையும் செயலும் கூடுவதில்லை. சில சமயங்களில் சிந்தனை குழம்பிப் போகிறது. நெப்போலியன் சொன்ன கழுதைக் கதைபோல் ஆகிவிடுகிறது. ஆம்! நம்முடன் ஓரிருவர் கூட்டு வாழ்க்கை நடத்த முன்வந்தாலே போதும். இந்தக் கூட்டு வாழ்வின் அறிவு, உணர்வு, செயல் அத்தனையும் இணைந்திருக்க வேண்டும். ஒருவரின்றேல் ஒருவர் இல்லை என்றிருக்க வேண்டும். இதுவே நட்புத் தோழமை!

நண்பன் ஏன்? கூட்டாளி ஏன்? அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்! ஆக்கத்திற்குத் துணை செய்ய வேண்டும். இதற்காகவே நட்பு தோழமை கூட்டாளி அலுவலர்! எந்தப் பெயரால் கூறினால் என்ன? நம்முடன் நம்மைச் சார்ந்து வாழ்பவர்கள், நமக்கும் சார்பாக இருப்பவர்கள் இவர்கள்தான் அழிவிற்கும் பொறுப்பு! ஆக்கத்திற்கும் பொறுப்பு! இனிய செல்வ, அழிவிலிருந்து காக்க முடியவில்லை, ஆக்கமும் தரமுடியவில்லை என்றே வைத்துக் கொள்! அப்போது தப்பித்து ஓடுபவன் ஒருவருள் ஒருவராய் வாழ்ந்தது உண்மையல்ல. அது வெறும் நடிப்பு. ஒதுங்கி நிற்கிறான் என்றால் அவன் நண்பனாய்க் காட்டியதெல்லாம் தோல்பாவைக் கூத்தாட்டம் போலத்தான்! பின் யார் உண்மையான கூட்டாளி? நண்பன்? தோழன்? கேடு வந்தவிடத்தும் அக்கேட்டினை நாம் அனுபவிக்கும் பொழுதும் நம்முடன் இருந்து துன்பத்தை அனுபவித்து உழல்கின்றானே அவன் தான் நண்பன்! தோழன்! கூட்டாளி! சுந்தரர்-பரவையின் பிரிவு தவிர்க்க முடியாததாயிற்று! ஆயினும் அப்பிரிவினைத் தவிர்க்க சுந்தரருடன் இருந்த திருவாரூர் வீதியில் நள்ளிரவில் நடந்து உழன்றானே சிவபெருமான்! அது நட்பு தோழமை!

இனிய செல்வ, இன்று எங்கு பார்த்தாலும் கூட்டம்! கூடி வாழ்வது போலத் தெரிகிறது! ஆனால், பரஸ்பரம் நம்பிக்கையில்லை. கட்சி என்றாலே கூட்டாய்வு என்று பெயர். ஆனால், இன்றைய கட்சிகளின் வடிவம் ஜனநாயகம். ஆனால், நடைமுறையில் தனி நாயக நாகரிகம்! பண நாகரிகம்! எல்லாம் ஒருவரே! இது! இன்றைய அரசியல் போக்கு! ஆளுங்கட்சிக்கு ஒரு தலைவர். இதுதான் நடைமுறை! இந்த நடைமுறைக்கு இன்று ஓய்வு கொடுத்தாகி விட்டது. ஏன்? பரஸ்பரம் நம்பிக்கையில்லை. நாற்காலிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம்! அதுமட்டுமா? இன்று கட்சிகளில் பொருளாளர்கள் உண்டு. ஆனால், பொருள் இல்லாத பொருளாளர்கள். பொருள் முழுவதும் தலைவர் வசம்! பலராய்க் கூடி இருப்பதாகக் காட்சி! ஆனால், தனி ஒருவர்தான் எல்லாம்! ஏன் இந்த நிலை! நிறுவனங்கள், கிராமங்களில் கூட பார்க்கலாம்! கூட்டமாக வாழ்கிறார்கள். ஆனால் கூட்டுணர்வு இல்லை! கூட்டம்! அஃது ஒரு கும்பல்! கூட்டம் கூட்டுவது எளிது! ஆனால், அந்தக் கூட்டத்தினை உணர்வால், உயிர்ப்பால் செயலால் ஒன்றுபடச் செய்தல் எளிதன்று. இனிய செல்வ, அதுவும் இந்தியர்களுக்கிடையில் சாத்தியமல்ல. இந்தியர்கள் தனியே இருந்தால் நல்லவர்கள். கூட்டமாக கூடிவிட்டால் அராஜகம்தான்! நாம் கூட்டு வாழ்க்கைக்கே தகுதியற்றவர்கள். பூமியில் தானே வாழ்கின்றோம். பூமி தன்னைத்தானே சுற்றி வருவது போல நாமும் நம்மை நாமே சுற்றி வருகிறோம். நாடு, ஊர், பாராளுமன்றம், சட்டசபை, பஞ்சாயத்து என்றெல்லாம் அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் அனைத்தம் பலர் கூடி வாழ்வதற்குத்தான்; கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதற்காகத்தான்! நடப்பு அப்படியல்ல.

இனிய செல்வ, எங்கே உண்மையான கூட்டுறவு இல்லையோ, அங்கே ஒரு கும்பல்தான் இருக்கும், இந்தக் கும்பல் பயனற்றது! உண்மையான நட்பு, தோழமை இருந்தால் சிந்தனையில், செயலில் பெருக்கம் இருக்கும்; ஒரோவழி அல்லற்பட்டு ஆற்றாது உழல வேண்டியிருப்பினும் நம்முடன் நமது துன்பத்திலும் பங்கேற்று உழல்வார்கள். 'இதனால் துன்பத்தின் தாக்கம்-பாதிப்புக் குறையும்! கவலை குறையும்’ போர்க்குணம் தோன்றும்! வளரும்! வாழும் துடிப்புத் தோன்றும்! இதற்கே கூட்டு! நட்பு! தோழமை! இன்று எங்கே தேடுவது கூட்டாளியை? சமூகத்தின் மாற்றங்கள் ஏற்பட்டாலே நட்புக் கிடைக்கும்! தோழமை கிடைக்கும்! பிழைப்பு நடத்தக் கூடாது, வாழ்தல் வேண்டும் என்ற உணர்வு சிறக்க வேண்டும். ‘இரண்டு நல்லது; இரட்டை வடம் நல்லது! ஆனால் இரட்டைப் போக்கு உள்ளவரை நட்பு வளராது! தோழமை தோன்றாது! மனிதனும் உருவாக மாட்டான்!

உடன்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடன்உறைந் தற்று

(890)

இன்ப அன்பு

அடிகளார்

77. வளர்ச்சி அல்ல; வீக்கம்!

இனிய செல்வ,

நமது நாடு நாட்டின் பொருளாதாரம் எங்குப் போய்க் கொண்டிருக்கிறது? வானளாவப் புகழப் பெறும் புதிய பொருளாதாரக் கொள்கை என்ன? இதன் விளைவு என்ன? திருக்குறள் அரசுக்குக் கூறிய பொருளாதாரம் என்ன? இனிய செல்வ, திருக்குறள் அரசுக்குரிய பொருளாதாரம்.

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு"

என்பது. அதாவது, அரசின் செலவினங்கள் தெருகி வளர்வது இயற்கை. அதற்கேற்ப அரசின் வருவாய்த் துறையும் அகன்று-கொண்டே இருத்தல் வேண்டும்.

அங்ஙனம் அகலுதலும்கூடப் புதிய, புதிய வாயில்களின் வழியாக அகலுதல் வேண்டும். அதுவே இயற்றல். இனிய செல்வ, புதிய புதிய வாயில்களில் செல்வத்தை ஈட்டுதல் - சம்பாதித்தல் வேண்டும். ஈட்டிய செல்வத்தை - அச்செல்வம் மூலதன வடிவம் பெறும் வரை காத்தல் வேண்டும். அரசுக்குக் கருவூலம் இன்றியமையாதது. அரசு வரவுகளைச் சில்லறையாக உடனுக்குடன் செலவு செய்தல் கூடாது. பொதுவாக வரவுகளைத் தொகுக்காமல் சில்லறையாகச் செலவழிப்பது செல்வ வளர்ச்சிக்குத் துணை செய்யாது. "சில்லறைச்செலவு” செல்வச் சீரழிவேயாம். அதுபோலவே அரசுகள் செலவு. வாயிற் கதவைத் தட்டிய பின் செல்வத்தைத் தேடுவதும் ஆகாது. ஏன்? அரசுக்கு மட்டும் அல்ல. தனி நபர்களுக்கும் கூடச் செலவு வந்தபின் செல்வம் தேடினால் வரவு குறையும்; உள்ள நிலை பாதிக்கும்; அமைதி குறையும். இனிய செல்வ, செல்வத்தை ஈட்டித் தொகுத்துக் காத்த பிறகு அச் செல்வத்திற்குரிய செலவுத் திட்டம் தயாரித்துச் செலவழிக்க வேண்டும்.

இனிய செல்வ, அரசு பல்வேறு பொறுப்புக்கள் உடையது. ஆதலால் பல்வேறு பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் செலவுக்குத் திட்டமிடுதல் வேண்டும். அரசின் பொறுப்பு பெரியது ஆதலால் செலவில் ஆழ்ந்த சிந்தனையும் திட்டமிடும் பாங்கும் தேவை. இன்றைய அரசின் பொருளாதாரக் கொள்கை திருக்குறட் பொருளாதாரத்துடன் ஒத்துப்போகிறதா? இல்லை! இல்லை! அர்சு தனது வருவாய்க்காகத் தனது மக்களைக் குடிகாரனாக்குகிறது; அத்திட்டத்தை நம்பி வாழும் ஏமாளியாக்கப் பரிசுச் சீட்டு விற்கிறது. இவை அரசின் கடமையொடு சார்ந்த வரவு வாயில்கள் அல்ல. "நல்நடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே.” என்பதற்கு, இன்றைய அரசுகளின் நிதிநிலை மூலதனத் திரட்சியைப் பெறுவதில்லை. இஃது ஒரு பெரிய குறை.

அடுத்து, நாட்டின் தேவைக்கு ஏற்ப அரசு பொருள் திரட்டுவதில்லை. அதனால் பற்றாக்குறை விழுகிறது, பற்றாக் குறை மட்டுமா? அரசின் நிலையான செலவினங்களுக்கும் போதிய நிதி ஆதாரங்களைத் தேடாமையால் அரசின் பல துறைகளில் பணி இடங்கள் நிரப்பப்படாமலும் போதிய வசதிகள் இல்லாமலும் காலந்தள்ளப்படுகிறது. குறிப்பாகக் கல்வித் துறையைக் கூறலாம். அரசுகள் திட்டக்குழுக்கள் வைத்துள்ளன. ஆயினும், வீண் செலவுகளைத் தவிர்த்த பாடில்லை. குடியரசுகள் இராஜரீக அரசுகளாக மாறி வருகின்றன, பொதுத்துறைகளில் ஒரு சில இழப்புக்கள் தாம்! ஏன் இழப்பு? இனிய செல்வ! பொதுத்துறை, அரசியல்வாதிகள் புகுந்து விளையாடும் இடம்! நிர்வாகத் தலையீடு! அதனால் இழப்பு! பொதுத்துறையை இழப்பு என்று காரணம் கூறித் தனியார் உடைமையாக்கினால் என்னாகும்! எல்லாம் எந்திர மயமாகும். வேலையாட்கள் குறைவர்! அதனால், வேலையில்லாத் திண்டாட்டம் கூடும்! அரசின் வருவாய் குறையும்! மக்கள் நலப் பணிகள் பாதிக்கும். இதை யார் உணர்கிறார்கள்? இனிய செல்வ, புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் பன்னாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வரும். இதனால் இந்தியாவில் பணம் புழங்கும். இந்தியாவில் இந்தியருக்குப் புதிய சொத்து உருவாகுமா? நமது நாடு தன்னிறைவு அடையுமா? அந்நிய மூலதனம் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பா? இவையெல்லாம் எண்ணத்தக்கன. சிந்திக்கத்தக்கன. இனிய செல்வ, புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் வரவு-செலவு உயர்ந்து காட்டும் - உண்மை. ஆனால், இது வளர்ச்சியல்ல! வீக்கம்! தனியுடைமை ஊக்கப்படுத்தப்படுவதன் மூலம் கள்ளப் பணம் பெருகி வளரும். அரசுடன் முதலாளிகள் போராடுவர். அரசைப் பலவீனப்படுத்துவர், இவையெல்லாம் விரும்பத் தக்கனவா? இனிய செல்வ, சிந்தனை செய்க! இந்தியப் பொருளாதார வாயில்கள் இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தப் பெறவில்லை! ஏராளமான செல்வாதாரங்கள், செல்வம் எடுக்கப் பயன்படாமலேயே அழிகின்றன. இவற்றில் நிலம் முதன்மையானது, நமது நாட்டில் தரிசு நிலம் பல லட்சக் கணக்கான ஏக்கர்கள் உள்ளன, நாட்டில் நீர் வளம் முழுதும் பயன்படுத்தப்படவில்லை; ஏன்? மனித சக்தியைக் கூட பூரணமாகப் பயன்படுத்தவில்லை. எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம். கடை வீதிகளில் நின்றும் இருந்தும் பேசியே பொழுது போக்குகிறார்கள். ஏன்? பகலிலும் இரவிலும் எப்போதும் திரைப்படம் பார்க்க இந்தியாவில் தான் முடியும்! தமிழ்நாட்டில் தான் முடியும்! இனிய செல்வ வேலைக்கு ஆள் இல்லை! ஆளுக்கும் வேலை இல்லை! இதுதான் இன்றைய இந்தியா; வேலைகள் நிறைய உள்ளன, தரமான வேலைக்காரர்கள் கிடைப்பதில்லை. அர்ப்பணிப்பு உணர்வுடன் பயன்தரத்தக்க வகையில் வேலைகளைச் செய்வதில்லை, அதேநேரத்தில் ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்று காத்திருக்கிறார்கள்! இவையிரண்டும் உண்மை. இனிய செல்வ, இந்தியா வளர வேண்டுமாயின் நமது பொருளாதார அமைப்பு திருக்குறள் நெறியில் அமைய வேண்டும். இனிய செல்வ, நாட்டின் நலன் கருதியும், அடுத்த தலைமுறையின் நலன் கருதியும் வரவு செலவு திட்டமிடப்படுதல் வேண்டும், தேர்தல் வெற்றி கருதிய வரவு செலவுத் திட்டம் நாட்டின் நலனை முற்றாகக் காத்தல் இயலாது. இனிய! அடுத்த கடிதத்தில் மேலும் எழுத எண்ணம்! இன்ப அன்பு

அடிகளார்

78. குடியாண்மை

இனிய செல்வ,

நாடு விடுதலை பெற்று 47 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆயினும் வறுமை அகன்றபாடில்லை. ஏழ்மை நீங்கவில்லை. ஏன்? தலைக்குமேல் கூரை இருக்கிறதோ இல்லையோ வறுமைக்கோடு இருக்கிறது. இன்று நமது நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் 58.9 விழுக்காடு. இந்த அவலம் எப்போது அகலும்?

இனிய செல்வ, இன்று நம்மிடையில் குடியாண்மை குடிகொள்ளவில்லை! அப்பட்டமான நிர்வாணச் சுயநலம்! நமக்குத் தெரிந்த அறிமுகமான ஒருவர் பணப் பிசாசுதான்! பணம் என்றால் பலவும் செய்வார். பணம் பெறுகிற வரையில் நன்றாகப் பழகுவார். அப்புறம் தேடி அலைந்து தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வழியிலா, பல வழிகளிலும் பொருள் ஈட்டுவார். பெறுவதோ அரசுச் சம்பளம். அரசின் வேலை செய்வதே இல்லை! சொந்தத் தொழில்கள் பலப்பல! ஐயோ, இவர்களுக்குச் சமூக உணர்வு பற்றிக் கவலை இல்லை. இத்தகைய பணப்பூதங்கள் நடமாடுவதால் ஒப்புரவாண்மை கெடுகிறது.

இனிய செல்வ, மனிதன் சமுதாயத்தில் ஒரு உறுப்பினன். குடியில் பிறந்து சிறந்து விளங்கும் இயல்வு தேவை. எந்த நாட்டில் குடியாண்மை அதாவது தாம் பிறந்து வளர்ந்த குடியை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வலர்கள் இல்லையோ, அந்த நாட்டில் வறுமை குடிகொள்ளும். இனிய செல்வ, நமது நாடு வளமான நாடு! ஆனால், நமது நாட்டு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்! இந்த நாட்டில் தான் இலர் பலர்; உடையவர் சிலர். ஏன் இந்த அவலநிலை! நோற்பவர் சிலர், நோலாதவர் பலர். ஆம்! பிறர் நலத்துக்கென முயல்வது நோன்பு. இந்த நோன்பு நோற்பார் யார்? நோற்பவர்களைப் பைத்தியக்காரர்களாக ஆக்குபவர்களே இன்று மிகுதி. இங்ஙணம் நோற்பதை-வாழ்வதை ஒப்புரவு என்று திருக்குறள் கூறுகிறது. இனிய செல்வ, திருக்குறள் கூறும் குடியாண்மை நம்மிடத்தில் இருந்தால் நமக்குச் சுற்றம் தழீஇய வாழ்க்கை வந்தமையும். இன்று இது இல்லை! ஏன் இல்லை! சுயநலமே காரணம். இந்த உலகில் ஏராளமான உணவுப் பண்டங்கள்! இந்த உலகத்து மக்கள் அனைவரும் உண்டு வாழலாம்! ஆனாலும் உணவுப் பஞ்சம் இருக்கிறது! ஏன்? ஓரிருவர் குவித்து வைத்துக்கொண்டு கொள்ளை லாபத்துக்கு விற்கின்றனர். இனிய செல்வ, அப்படி விற்பதிலுங் கூடக் கலப்படம்! மற்றவர் வேதனையைப் பற்றிக் கவலைப்படாத பிறவிகள்! இவர்கள் இந்த நிலக்குப் பொறையாவர்.

இங்ஙனம் சமுதாயம் சீர் கெட யாது காரணம்? விழிப்புடன் இருந்து புல்லுருவிகளை அகற்றாமையே காரணமாகும். இனிய செல்வ, தமிழ்க் குடியில் வறுமை குடியேறிப் பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பசிக்குத் தேடிக் கையேந்தி வாங்கி உண்டு பிழைத்திருக்கின்றனர். திருவள்ளுவர் காலத்திலேயே இரந்து வாழும் வாழ்க்கை வந்து விட்டது. அது மட்டுமா? பல் குழுவாகப் பிரிந்து பாழ் செய்யும் உட்பகையால் கலகம் செய்து கொண்டு செத்துள்ளனர். இந்த அவலம் எப்போது அகலும்? நமது தமிழ்க்குடி மரபினர் என்று வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்படுவர்? நமது தமிழ்க்குடியில் எவன் ஒருவன் தன் சோம்பலை உதறித் தள்ளிவிட்டு ஆளுமையுடன் குடி செயற்பணிக்கு முன்வருகிறானோ அப்போது குடியாண்மை உருவாகும்; குடியாண்மை வளரும். தமிழ்க்குடியில் உள்ள குற்றங்களும் நீங்கும்!

இனிய செல்வ, சோம்பலால் குடி கெடுகிறது. அதனால் தானே புறநானூற்றுப் புலவர் "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்றார். இன்றைய தமிழகத்திற்குக் குடியாண்மையுடையோர் தேவை.

"குடி மடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட வுற்றி லவர்க்கு

(604)

இன்ப அன்பு

அடிகளார்

79. குடிசெய்வார் இயல்பு

இனிய செல்வ,

திருக்குறள் பொது மறை! உலகப் பொது மறை! ஆயினும் ஒருவன் தான் பிறந்த குடியை வளர்க்க வேண்டும்; காக்கவேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. நிலப்பரப்பு அளவில் பெரியது. வேளாண்மை செய்யும் பொழுது பாத்தி பிரித்து வரப்பெடுத்துக் கட்டி நீர் கட்டினால் தான் வேளாண்மைத் தொழில் வெற்றி பெறும். அதுபோல் உலகம்-மக்கள் தொகுதி அளவில் கூடியது. நாடும் கடலும் இடையில் கிடப்பது. எனவே மக்களையும் பகுதியாய் பிரித்து எடுத்து வளர்த்தலே எளிது; நடைமுறைக்குரியது. மக்கள் தொகுதியின் அடிப்படை பகுப்பு குடி! குருதிச் சார்புடையது! அதற்கு அடிப்படை குடும்பம், சுற்றம்! குடி என்பது மொழியின் அடிப்படையிலானது என்றும் கொள்ளலாம். இனிய செல்வ, குருதி வழி அமைவது என்று கொண்டாலும் தவறில்லை.

இனிய செல்வ, ‘குடி செயல் வகை’ என்று திருக்குறளில் ஒர் அதிகாரம் உள்ளது. இனிய செல்வ, ஏதாவது ஒரு காரியம் செய்ய நாள் பார்த்துக் காத்திருத்தல் பருவம் பார்த்தலாகும். இந்த உலகில் விரைந்து செல்லக்கூடியது காலம்! காலம் யாருக்காகவும் காத்திருக்காது. இழந்தாலும் திரும்பி வராது; கிடைக்காது. இனிய செல்வ, இளமை எத்தனை நாளைக்கு? நம் ஒவ்வொருவருக்கும் வரையறுத்த வாழ் நாள் எவ்வளவு? அதோ பார்! நமக்கு முன்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள்! நெடுந்துாரம் போவானேன்? தமிழ்க்கொண்டல் அருளரசு கிருபானந்தவாரியார் பம்பாய்-சென்னை விமானத்தில் ஏறினார்! சென்னையில் இறங்கவில்லை! அவருடைய பூதவுடல் இறக்கப்பட்டது. கடிகாரம் டிக், டிக் என்ற ஒலியுடன் நகர்கிறது! இல்லை! நமது உயிரை மரணத்தை நோக்கி நகர்த்துகிறது! நாம் பேருந்து, விமானப் பயணத்திற்குச் சுறுசுறுப்பாக இருப்பது போலவே கடைசிப் பயணத்திற்கும் சுறுசுறுப்பாய் இருப்பது நல்லது. இனிய செல்வ, என்ன பொருள்? “காலம் போற்று! கடமைகளைச் செய்!” என்பதே. நீ பிறந்த குடிக்கு நன்மை செய்! நீ பிறந்த குடியை வளர்ப்பாயாக! உன் மொழியை வளர்த்திடு! கடமையை வேள்வியாகச் செய்! நாளை நாளை என்று ஒத்திப் போடாதே! நல்ல நாள் என்று ஒன்று இல்லை! கடமை வேள்வியை, உழைப்பு நோன்பை இயற்றுபவருக்குப் பிறந்த குடிக்குரிய பணிகளைச் செய்பவருக்கு ஒவ்வொரு நாளும் நல்ல நாளே! பருவம் பார்க்காதே!

இனிய செல்வ, வாழும் வாழ்நாள் சிலவே! பாலப் பருவம் தாயின் மடியில் கழிகிறது! விளையாட்டில் போகிறது! கற்பதில் கரைகிறது! நாம் மனிதனாகிச் செயல் செய்வதற்குரிய காலம் - சுதந்திரமான காலம் பதினெட்டு வயதில் வருகிறது! இது உலக நியதி! வாழும் காலம்-செயல் செய்யும் காலம் பொதுவாக 40 வயது வரை தொடர்கிறது. இந்த காலமே இளமைக் காலம் ! ஒரு சிலருக்கு 50-60 வயது வரையில் கூடச் செயல் செய்யும் காலம் தொடரலாம். இனிய செல்வ, பதினெட்டு முதல் நாற்பது வயதுக்குட்பட்ட இடைக்காலம் ஒவ்வொருவர் வாழ்விலும் பொற்காலம்! ஆவேசமாகச் செயல் புரியும் காலம் ! புவியை நடத்தக்கூடிய பொற்காலம்!

உயிரியற்கை சுறுசுறுப்பேயாம். மனிதனே சோம்பலைப் படைப்பவன்! விதி, வினை, நல்லநாள், கெட்டநாள், சூழ்நிலை என்றெல்லாம் பல காரணங்கள் கூறிக் கடமைகளை ஒத்திப் போடுதலே சோம்பல்! பொழுது போக்கு அரட்டை அடித்தல் முதலியன சோம்பலை வளர்ப்பன. புகழ், இலாபம், கடினம், ஒத்துழைப்பில்லை என்ற சொற்கள், இச்சொற்கள் வழி உணர்த்தப்பெறும் பொருள் முதலியன சோம்பலுக்கே சுருதி கூட்டுவதாகும். சோம்பல் மானத்தின் பகை! ஆக்கத்தின் பகை! வாழ்க்கைக்கு ஒரு புற்றுநோய்! இனிய செல்வ, சோம்பல் என்றால் ஒன்றுமே செய்யாதிருத்தல் என்று கருதிவிடாதே! இந்த உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைச் செய்வர். சிலர் இரண்டு, மூன்று கூடச் செய்யலாம், அதுவல்ல கருத்து! நம் ஒவ்வொருவருடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் இசைந்தவாறு பொருந்தும் அளவுக்குப் பணி செய்தல்வேண்டும், நம்முடைய நேரத்தில் ஒரு நொடிப் பொழுதோ அல்லது ஆற்றலோ வறிதே கழியக்கூடாது. எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும். எல்லை, மனம் அல்ல! இலட்சிய நோக்கு! இலட்சிய நோக்கு விரிவடைந்தால் அறிவு அகண்டமாகும்! ஆற்றல் ஊற்றெனப் பெருகும். இனிய செல்வ, சோம்பலை உதறித் தள்ளி எழுந்து நில்! விழிப்புடன் நில்! உன் வாழ்நாளைக் களவு கொடுத்து விடாதே! உன் முறுக்கேறிய தசைகள் தளரும் முறையில் அறிவறிந்த ஆள்வினை செய்! நீ, பிறந்த குடியின் மேம்பாட்டுக்குரிய பணியைச் செய்க!

இனிய செல்வ, நாம் பிறந்த குடியை வளர்த்தாக வேண்டும்! நாம் பிறந்த குடி என்ன நம்மை வரவேற்கப்போகிறதா? அம்மம்ம, ஒரு குடிப்பிறந்தாருள்ளும் அழுக்காறு புகுந்து நடத்தும் திருவிளையாடல்! கொடுமை! கொடுமை ! மண்டையை உருளச் செய்து வருகிறது! பகைமை! உட்பகை! புறங்கறல்! சிறுமை செய்தல்! இனிய செல்வ, அழுக்காற்றின் காரணமாக நாம் எடுக்கும் குடி செயல் பணிகளுக்கு - நற்பணிகளுக்குக் கூடத் தடைசெய்தல், இடையூறு விளைவித்தல் இவையெல்லாம் நடக்கும்! பெருமை பார்ப்பர்! இவைகளால் குடி செயல் கெடும்! இனிய செல்வ! நீ பிறந்த குடியை வளர்ப்பதற்குரிய பணியைச் செய்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டாயா? உண்மையாக வந்து விட்டாயா? உறுதியாக நீ பிறந்த குடிக்கு உன் பணியைச் செய்வதை நோன்பாக ஏற்க உறுதி கொண்டுவிட்டாயா? அப்படியானால் யாரிடமும் நீ பெருமையை எதிர்பார்க்காதே! மானம், மரியாதை, மதிப்பு, அவமதிப்பு ஆகிய சொற்கள் இலட்சிய வாழ்க்கையைக் கெடுக்கும்! நாளும் நல்ல பணிகள் பல செய்வதைக் கெடுக்கும்! ஏச்சா? பேச்சா? பழியா? தாங்கிக்கொள்! அன்புகாட்டு! அன்புசெய்! அப்போதுதான் தமிழ்க் குடிக்கு ஏதாவது செய்ய இயலும்! எவரையும் யாரையும் நிலம் போலத் தாங்கு! இனமானத்தை இழந்து தன்மானத்தைக் காக்காதே! இனமானத்திற்குத் தன்மானம் முரண்படக்கூடியது!

இனிய செல்வ, உன்னோடு உடன்படாதவரோடும் உடன்பாடு காண முயலுக! உன்னைப் பழிதூற்றுவோரிடமும் நீ அன்பைப் பொழி! அப்போதுதான் நீ பாதுகாப்பு எல்லையைக் கடந்து பணி செய்யும் எல்லைக்குள் நுழைய முடியயும்! மேவ முடியயும்! இனிய செல்வ, இன்று தமிழ்க்குடி வாழ்வாங்கு வாழவில்லை! தமிழ் மொழி வளரவில்லை! ஆங்கிலமும், இந்தியும், ஆரியமும் தமிழின்மீது ஆட்சி செலுத்த முயலுகின்றன. தமிழ்க் குடும்பங்களில் சரிபாதிக் குடும்பம் வறுமைக் கோட்டுக்கு கீழ்! காவிரித் தண்ணீர் கிடைக்கவில்லை! இந்நிலையில் தமிழர் குடி ஒன்றுபடவில்லை! ஒன்றாக வாழக் கற்றுக் கொள்ளவில்லை, இன்று தமிழ்க்குடி பல குழு வயப்பட்டுள்ளது. குடி செய்யும் முயற்சியாண்டும் இல்லை! குழுக்கள் போராட்டம் நடக்கின்றது. இனிய செல்வ, தமிழ்க் குடியை வளர்க்க வேண்டும். நடக்குமா?

இனிய செல்வ, நமக்குதெரிந்து பிறந்து மொழி பயின்ற காலத்திலிருந்து தமிழ் நாட்டு வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால் தமிழ்க் குடியினர் ஒன்றுபட்டு நின்ற காட்சியில்லை! இனிய செல்வ, யார் வந்தால் என்ன? வராது போனால் என்ன? நாம் ஒத்துப்போவோம்! ஒத்துழைப்போம்! தமிழ்க் குடியைக் காப்போம்!

"குடி செய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்”

இன்ப அன்பு

அடிகளார்

80. மழைவளம் காப்போம்

இனிய செல்வ,

மழை பெய்திருக்கிறது. இல்லை, இல்லை! மழை கொட்டியிருக்கிறது! எங்கும் வெள்ளம்! இடிபாடுகள்! அழிவுகள்! பெய்த மழைத் தண்ணீரில் பாதி கடலுக்குப் போய்விட்டது! இப்படிப் பெய்த மழைத் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதியிருந்தால் பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மழை பெய்தால்கூட போதுமானது. இடிபாடுகளையும் தவிர்க்கலாம். இனிய செல்வ, நமது பழக்கமே வேண்டும் போது தேடுவது; வந்தால் அனுபவிப்பது. எதிரதாக் காக்கும் அறிவும் இல்லை; பட்டறிவும் மிக மிகக் குறைவு. இன்றைய வாழ்வே நமது இலட்சியம்! நாளை என்பது நமக்கு இல்லை! எதிர்காலம் என்பது ஒன்று நம்மனோர் சிந்தனையில் இல்லை. இதுதான் நமது போக்கு! இந்த வகையில் வைதிக மதம் நம்மை குருடாக்கிவிட்டது.

தஞ்சை மாவட்டத்தில் பல ஏரிகளைத் தூர்த்து விட்டார்கள். திருச்சி மாவட்டத்திலும் ஏரிகள் தூர்ந்து கொண்டிருக்கின்றன. இனிய செல்வ, நாடு வளர்கிறது, அறிவியல் வளர்கிறது என்கிறார்கள்! நமக்கு என்னவோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை! கடந்த காலத்தைப் போல, நம்முடைய முன்னோர்களைப்போல நாம் என்ன செய்திருக்கின்றோம்? செய்கின்றோம்? காவிரியில் கரிகாலன் அணை கட்டினான்! மிகுதி நீரை வாங்கக் கொள்ளிடம் ஆற்றினை அகலமும் உயர் கரைகளும் உடையதாக அமைத்தான். கல்லணை உடையவில்லையே! நாம் கட்டிய குடகனாறு அணை உடைந்துவிட்டதே! பழங்காலக் கோயில்களைக் காண்க! விண்ணளந்து காட்டி வானை மறைக்கும் திருக்கோயில்கள்! இன்று சத்துணவுக்கூடம் அமைக்கக் கூட-அதுவும் அளவில் சிறியது; சிமெண்டு பலகையில் ஆனது-முழங்கால் போடுகிறோம். ஏன் இந்த அவலம்? இலக்கியத்திலும் தான் என்ன பெரிய சாதனை? "காக்கா கருப்பு தான்!”

இனிய செல்வ, திருவள்ளுவர் மழையைப் பற்றிக் கூறும்பொழுது,

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்று கூறினார். இன்று மழை நம்மைக் கெடுத்துவிட்டது. பல நூறு கோடி ரூபாய்களுக்கு இழப்பு: உயிரிழப்பு: இழப்புகளுக்கிடையில் ஒரு மகிழ்ச்சி. எல்லா ஏரிகளிலும் கண்மாய்களிலும் தண்ணீர் நிரம்பி வழிவது நம்பிக்கையைத் தருகிறது. கழனிகள் விளையும். இரண்டாண்டுகளுக்குப் பஞ்சம் இல்லை! விவசாயிகளிடம் பணம் புழங்கும். திருவள்ளுவரின் திருக்குறள் மழையைப் பொறுத்தவரையில் உண்மையாகிவிட்டது. ஆனால், நமது வாழ்க்கைமுறை பெய்யும் மழையை முழுதாகப் பயன்படுத்தக் கூடியதாக அமையவில்லையே என்ற ஏக்கம் வரும்பொழுது பெருமூச்சு வருகிறது.

இனிய செல்வ, குடிமக்கள் ஏரி, குளங்களைக் குடி ஊழியம் அடிப்படையில் பாதுகாக்கும் பண்பு வளர வேண்டும். இனிய செல்வ, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தில் குன்றக்குடிப் பகுதியில் பெருமழை! போக்கும் மடையைத் தூர்ந்துபோகும் அளவுக்கு யாரும் கவனிக்கவில்லை. வெள்ளம் வந்தவுடன் தான் கவனம். மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில் இரவு 10 மணிவரையில் செய்ய வேண்டியதாயிற்று. இப்படித்தான் எல்லா இடங்களிலும்! அதுபோலவே ஆண்டுதோறும் கண்மாய்க் கரைகளின் அறுத்தோடிகள், மண் அரிப்பால் தாழ்ந்து போதல் போன்றவைகளைக் கவனித்து இருந்தால் நாங்களே மூன்று மாதத் தண்ணீர் கூடுதலாகச் சேமித்திருக்க முடியும். இந்த வேலைக்கு என்று நாளும் ஒதுக்கப்படுகிறது! இனிய செல்வ, எந்த நாள்? மதுரை ஆலவாயண்ணல் வைகை வெள்ளம் அடைக்க மண் சுமந்தாரே அந்த ஆவணிமூல நன்னாள்! அதுவும் சொல்லிவைத்தாற்போல் இந்த ஆண்டு நடைபெறவில்லை! ஏன்? இனிய செல்வ, நம்மையே கேள்வி கேட்கிறாயே! ஒரு அஞ்சலட்டை எழுது! து.ச.கணேசக் குருக்கள், சி.மருதுபாண்டியன், சுப.செல்வராஜ் ஆகியோருக்கு! எல்லாரும் குன்றக்குடிதான் (623 206)! எழுதிப்பார்!

இனிய செல்வ, பெய்யாமல் மழை கெடுக்கலாம். ஆனால், பெய்து கெடுப்பது என்பது மழையின் குறையல்ல! ஓர் ஆண்டு பெய்யாத மழை அடுத்த ஆண்டு சேர்த்து வரும். வானம் சேர்த்துப் பெய்து பயன் என்ன? தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்தும் முயற்சியில்லையே!

சங்க காலத்துக் கவிஞன் கூறினான் தண்ணீரைத் தேக்கி வைக்கும் அரசு வளரும், வாழும் என்று!

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

இரண்டுமே மழையின் குற்றமல்ல - மக்களின் குற்றமே!

மழை வளம் காக்க மண் வளம் காத்தல் வேண்டும். நிலமகள் பசிய சோலைகளால் புனைவு பெற்றால் புவி

தி.31. நனைய மழை பெய்யும்! மண் வளம் மரங்களுக்கு ஆக்கம்; மரங்களின் செழிப்பு மண்ணிற்கு ஆக்கம்; இவ்விரண்டையும் கண்டு கார்மேகக்கன்னி சூல்தாங்கி சூழ்ந்து வந்து பெய்வாள். மழை! மாமழையால் கிடைக்கும் மழை நீரை ஏரிக்கரை உயர்த்தி தேக்கி வைத்தால் ஏரி நிறைந்த செல்வம் சேர்த்துச் சேமமுற வாழலாம்! இன்ப அன்பு

அடிகளார்

81. டங்கல் ஒப்பந்தம்

இனிய செல்வ,

ஊரும் உலகமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. விரிவடைய விரிவடைய விசாலமான புத்தி வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் இன்றைய நடப்பு அப்படியில்லை. ஊரில் நடக்கும் போட்டா போட்டி, ஆதிக்கங்கள், அமுக்கங்கள் ஆகிய எல்லாமே உலகத்திலும் நடக்கின்றன.

இனிய செல்வ, டங்கல் ஒப்பந்தம் பற்றிப் பேசுகிறார்கள். ஆதரித்தும் பேசுகிறார்கள்; எதிர்த்தும் பேசுகிறார்கள். இனிய செல்வ, நமது நிலை என்ன?

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை

என்ற திருக்குறள் நெறிதான்! பொதுவாக டங்கல் ஒப்பந்தத்தை உலக நாடுகள் முழுதும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஏன்? சீனாகூட விரும்புகிறது. இந்த வகையில் அமெரிக்காவின் உலகந்தழீஇய ஒட்பம் வெற்றி பெற்றுள்ளது.

இனிய செல்வ, டங்கல் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு பெரிய பயன் எல்லா நாடுகளுக்கும் எந்த விதமான தடையுமின்றி உலகச் சந்தை திறந்து விடப்பெற்றுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி உரிமங்கள் இல்லை; வரிகள் இல்லை, இஃதோர் அனுகூலமான செய்தி. ஆனால், இந்தப் பொதுவிதி நமது நாட்டுக்கு ஒத்து வருமா? நமது நாடு மக்கள்தொகை பெருகிய நாடு உற்பத்தியில் போதிய சுறுசுறுப்புக்காட்டாத நாடு! உற்பத்திப் பொருளின் முடிவும் மற்ற நாடுகளை நோக்க சுமார்! இதனால் கைத்தறித்துணிகளைத் தவிர, எலெக்ட்ரானிக்ஸில் ஒருசில பொருள்களைத் தவிர மற்றவை உலகச் சந்தையில் இடம் பிடிப்பது கடினம். ஆனால், நமது நாட்டுச் சந்தை ஏகபோகமாகப் போய்விடும். நமது பொருள்கள் தேக்க நிலை அடையும்.

இனிய செல்வ, இன்று நமது நாட்டில் உற்பத்தி செய்யப் பெறும் மருந்துகளுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தை வாய்ப்பு உண்டு, உலகத்தில் மருந்து உற்பத்தியில் சில சிறியமாற்றங்களைச் செய்து, ஒரே மருந்தைப் பல பெயர்களில் தயாரிப்பார்கள். டங்கல் திட்டம் இதைத் தடை செய்கிறது. ஒரு மருந்து உற்பத்தியை, விதிமுறைகளை அனுசரித்து அதனுடன் பதிவு செய்து "பேடெண்ட்” பெற்று விட்டால் அதே மாதிரி மருந்தை மற்ற நாடுகள் செய்ய முடியாது.

இனிய செல்வ, உலகப் பொருளாதார ஆதிபத்தியம் உருவாகலாம். டங்கல் திட்டத்தின் மூலம் இம்முறை எளிதில் எளியநாடுகளின் வளர்ச்சிக்குத் தடையாக அமையலாம். ஆதலால், நமது நாட்டுமக்கள் தொகையும், நமது நாட்டுத் தொழில் வளர்ச்சியின் மந்தப் போக்கும் அதற்கு மேலாக அண்மைக் காலமாக நமது உற்பத்தி அயல் நாட்டு மூலதனத்தைச் சார்ந்திருப்பதும் சிந்திக்க வைக்கின்றன. வட்டிச்சுமை வேறு, உலகில் தூங்காதது இரண்டே இரண்டு. ஒன்று காலம். பிறிதொன்று வட்டி. இனிய செல்வ, இந்தச் சூழ்நிலைகளை யெல்லாம் நினைவில் கொண்டு பார்த்தால் திட்டம் எவ்வளவு நல்லதானாலும் நமது நிலை ஏற்புடையதாக இல்லை. இனிய செல்வ, அண்டை அயல்நாடுகளைப் போல் தற்சார்பான தொழில் முயற்சி. கடின உழைப்பு, ஆகியவற்றை நமது நாட்டு மக்கள் பெற்றாலன்றி வாழ்தல் அரிது. நமக்கு முன்னுதாரணமாக விளங்கியது ஜப்பான் நாடு. ஆனால் இன்று ஜப்பான் நாடே நுகர் பொருள் உலகச் சந்தையில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

இனிய செல்வ, ஒப்பந்தம் சரியானதா? தவறானதா? என்பதை விட நமது நிலையில் வளர்ச்சி வேண்டும் என்பதே உண்மை.

இன்ப அன்பு

அடிகளார்

82. விலை ஏற்றம்

இனிய செல்வ,

இந்தியாவில் இரவு-பகல் எப்போதுமே தூங்காமல் இடையீடின்றி உயர்வது எது? ஆம்! நூற்றுக்கு நூறு சரி! எப்போதும் தூங்காமல் ஏறுவது வட்டி. வட்டி உயர்வு உலக நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் பல உலக நாடுகளில் இல்லாத ஒன்று விலை உயர்வு. இனிய செல்வ, நமது நாட்டில் விலை உயர்வு எப்படி? பல நாடுகளில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் குழுக்கள் உள்ளன. இனிய செல்வ, 1982-ல் நாம் சீனக் குடியரசுக்குச் சென்றிருந்தபோது விசாரித்ததில் "கடந்த 10 ஆண்டுகளாக விலை ஏற்றமே இல்லை. ஒரே நிலையில் விலை இருக்கிறது" என்றனர். நாட்டளவில் விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒன்று பணி செய்கிறது.

இனிய செல்வ, எல்லாருக்கும் திடீர் என்று வருவாயை உயர்த்திவிடமுடியாது. ஆனால், விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி ஒவ்வொருவருக்கும் செலவைக் குறைக்கலாம், குறைக்க முடியும். அப்படியே உற்பத்திச் செலவு கூடி விலை ஏற்றம் தவிர்க்கமுடியாத நிலையில் அரசு, அவசியமான நுகர்வுப் பொருள்களுக்குக் குறிப்பாக அரிசி, கோதுமை முதலியனவற்றுக்கு மான்யம் அளித்து நியாய விலையில் இல்லை, கட்டுபடியாகக்கூடிய விலையில் உணவுப் பொருளை வழங்கும் பொறுப்பை ஏற்கும்; ஏற்க வேண்டும். இதுதான் அரசின் நடைமுறை.

இனிய செல்வ, இன்று நமது நியாய விலைக் கடைகளில் அரிசி விலை கிலோ ரூ. 4-75, கோதுமை விலை கிலோ ரூ. 4-50. இந்த விலை தமிழ்நாடு அரசு ஆதரவு விலைக்குரிய மான்யம் கொடுத்தபிறகு! இந்த விலை இன்று சராசிரி ஒரு நடுத்தர வகுப்பினனான ஏழைக்கு ஒத்துவருமா? அவனுடைய வாங்கும் சக்தி எப்படி இருக்கிறது? உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் தனி நபரின் வருவாய் குறைவு. தனி நபரின் வருவாய்க்கும் நுகர்பொருள் விலைக்கும் இடையில் உள்ள இடைவெளி மேலும், மேலும் அகன்று கொண்டே போகிறது. நுகர்பொருள் மட்டுமா விலை ஏறி இருக்கிறது? இனிய செல்வ, சாதாரணமாகக் கிராமத்தில் "ஒரு கார்டு போடக்கூடாதா?” என்பர். ஆம்! ஒரு கார்டு-அஞ்சலட்டை 5 காசு 25 ஆண்டுகளுக்கு முன்! இன்று அஞ்சல் கட்டணங்களில் விலை ஏற்றம் உயர்வு! ஏன் உயர்த்துகிறார்கள்? என்பதே விளங்கவில்லை.

இனிய செல்வ, பொருளாதார இயக்கத்தின் செய்பாடாக விலை ஏறுதல் தவிர்க்க முடியாதது. ஆனால், எவ்வளவு, எந்த அடிப்படையில் விலை ஏறுகிறது? அரசுகள் மக்களிடமிருந்து தண்டல் செய்யும் வரிகளை மட்டுமே நம்பியுள்ளனர். இது முறையன்று. பொதுத் துறையை வலிமைப்படுத்தி வருவாய் காண வேண்டும். இனிய செல்வ, மதுவிலக்கு கொண்டு வந்தபொழுது அதனால் உருவான இழப்பை ஈடு செய்ய இராஜாஜி தமிழ்நாட்டில் விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் மிகக் குறைவாகவே விதிக்கப்பட்டிருந்தது. இன்று விற்பனை வரி பல்கிப் பெருகிவிட்டது. கூடுதல் விற்பனை வரி வேறு.

இனிய செல்வ, நமது நிலையே இப்போது அறச்சங்கடம்! கார் டயரும் விலை உயர்வு; பெட்ரோல் விலை உயர்வு; எண்ணெய் விலை உயர்வு! எல்லாமாகச் சேர்ந்து பயணச்செலவை உயர்த்துகிறது. கிலோ மீட்டருக்குக் குறைந்தது ரூ. 6 வாங்கவேண்டி யிருக்கிறது. இவ்வளவு தொகை கொடுக்கப் பல அமைப்புகளுக்கு சக்தியில்லை; இருக்கவும் முடியாது. இனிய செல்வ, இந்தியாவில் விலையேற்றம் இந்திய மக்களில் பெரும்பாலோராகிய நடுத்தர வர்க்கத்தைப் பாதிக்கிறது. மாதம் ஒன்றுக்கு ஆயிரக் கணக்கில் ஊதியம் வாங்கும் ஓர் அரசு அலுவலர் கூட இன்று ஏழை போல ஒரு வேளை உண்டும் ஒரு வேளை உண்ணாமலும் வாழும் நிலையில் உள்ளனர். ஏழைகளின் நிலையை எழுதிக் காட்ட வேண்டுமா?

இனிய செல்வ, மயில் இறகுகள் கனமில்லாதன. எடைகுறைவு. அதனால் ஒரு வண்டியில் மயில் இறகுகளை ஏற்றும்பொழுது அந்த வண்டி சுமக்கக்கூடிய அளவுக்கே ஏற்றவேண்டும். கனமில்லாதன என்ற நினைப்பில் அளவுக்கு அதிகமாக ஏற்றினால் ஏற்றப்பட்டது மயிற் பீலியேயானாலும் வண்டியின் அச்சுமுறியும். அதுபோலத்தான் விலை ஏற்றம்! இவ்வளவுதான் அவ்வளவுதான் என்று சமாதானம் கூறிக்கொண்டு விலையை ஏற்றிக்கொண்டே போனால் நடுத்தர மக்கள் அல்லற்படுவர்; ஏழை மக்கள் துன்புறுவர். எல்லை கடக்கும் நிலையில் மக்கள் கொதித்து எழுந்து ஆட்சியின் அச்சையே முறித்துவிட முனைவர். இதுதான் நேற்று வரை நடந்த வரலாறு. அரசுகள் படிப்பினையை ஏற்பது நல்லது.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

(475)

இன்ப அன்பு

அடிகளார்

83. சூது

இனிய செல்வ,

திருவள்ளுவர் 'சூது’ என்று ஓர் அதிகாரமும் வகுத்து எழுதியுள்ளார். சூதாட்டத்தின் வரலாறு அல்லது சூதாட்டத்தின் கொடுமை நீ கேட்டிருப்பாய் என்றே நம்புகின்றோம். ஆம்! ஆம்! இனிய செல்வ, மகாபாரதக் கதையில் தொடக்கமே அதுதான்! ஆம்! அன்று தருமன் நாட்டை வைத்துச் சூதாடினான். இனிய செல்வ, உன் கேள்வி புரிகிறது! அன்று என்ன என்று கேட்கிறாய்? ஆம்! இன்றும் நாட்டை பணயம் வைத்துத்தான் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால் சூதாட்டம் என்ற பெயர் இல்லை! புனைவுகளுக்குப் பெயர்போன நூற்றாண்டல்லவா இது! ஆதலால், இன்றைய சூது பன்னாட்டு மூலதனக் கடன், திறந்த வெளிச்சந்தை, டங்கல் ஒப்பந்தம் என்ற பெயர்களில் நடக்கின்றன. பொதுத்துறை பலவீனம் என்று பழி சுமத்தித் தனியார் துறை ஊக்குவிக்கப் பெற்று வருகிறது. இனிய செல்வ, இந்தப் போக்கு நீடித்தால் இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தியா இருக்கிறதா அல்லது காணாமல் போய்விடுமா? என்ற கவலை மேலோங்குகிறது. இனிய செல்வ, நெறிமுறை சாராத பொருள் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சூதாட்டம் தான்!

ஆசை, சூதாட்டத்திற்குக் காரணம். அரசுக் கருவூலங்களில் பணம் இல்லை. அரசுக்குப் புதிய வருவாய் இனங்களைக் கண்டு திட்டமிடவும் திறன் இல்லை. இந்த நிலையில் மக்களை அரசு சுரண்டி அரசினை நடத்த வேண்டியிருக்கிறது. இனிய செல்வ, மதுவருந்தல் கேடு பயக்கும். மக்கள் மேலும் ஏழைகளாவார்கள். நோய்களுக்கும் இரையாவார்கள். ஆனால், ஆள்பவர் சொல்கிறார்கள், ஆண்டுக்கு 640 கோடி வருகிறது என்று! மக்கள் 6000 கோடி ரூபாய்க்கு மேல் குடித்தால்தான் அரசுக்கு 640 கோடி ரூபாய் வருமானம் வரலாம். மக்களை ஏழைகளாக்கி அரசுக்கு வருமானம் வருவதில் என்ன பொருள் இருக்கிறது, அல்லது நியாயம் இருக்கிறது? இது ஒருவகைச் சூதாட்டம்! நலம் செய்வது போலத் தீமை செய்வது. வாழும் மாந்தனின் அறிவை, அறிவறிந்த ஆள்வினையைப் பறித்துக்கொண்டு வீதியில் நிறுத்துவது.

இனிய செல்வ, இன்னொரு பயங்கரமான சூதாட்டத்தை அரசுகள் நடத்துகின்றன. அது என்ன சூது, என்றா கேட்கிறாய்? அதுதான் லாட்டரிச் சீட்டு! ஆசை தீது! அதிலும் பொருளாசை கொடிது! ஆசை யாரை விட்டது! இனிய செல்வ, ஆம்! உண்மை நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை! பொருளில்லார்க்கு, இவ்வுலகம் இல்லை என்பது உண்மைதான்! இனிய செல்வ, பணத்தை விரும்புவது. பணத்தைச் சம்பாதிப்பது தவறல்ல! ஆனால், பணத்தை நேரிடையாக விரும்பாமல் பணம் வரும் வாயில்களை, உழைப்பை, தொழிலை விரும்பி முயன்று உழைத்துப் பணம் ஈட்ட வேண்டும். இதனைத் திருக்குறள் "இயற்றல்” என்று குறிப்பிடுகிறது. இனிய செல்வ, இன்று அரசுகளும் சரி, தனியார்களும் சரி, பண ஆசை பிடித்து அலைகின்றனர். முயற்சி நடக்கிறது. இனிய செல்வ, அரசுக்குப் பணம் தேவை. அரசின் பணத்தேவைக்குக் குடிமக்களின் பணத்தாசையைக் கருவியாகக் கொண்டு பரிசு என்ற பெயரில் சுரண்டப்படுகிறது. பணக்காரர்கள் நூற்றுக்குத் தொண்ணுறு பேர் பரிசுச் சீட்டுகள் வாங்கமாட்டார்கள். பரிசுச் சீட்டுகள் பெரும்பாலும் ஏழைகள் தான் வாங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஏழைகள், நடுத்தர மக்கள் வாங்குகிறார்கள். இனிய செல்வ, நமக்குத் தெரிந்தவர் ஒருவர் ஏழை தான்! போதிய வருவாய் இல்லை என்பதும் உண்மை தான்! ஆனால் அவர் சீட்டுகள் வாரியாகப் பல சீட்டுகள் வாங்குகிறார்; நூற்றுக் கணக்கான ரூபாய்க்கு வாங்குகிறார். ஆனால் அவர் பக்கம் அதிர்ஷ்டக் காற்று அடிக்க மறுக்கிறது. இனிய செல்வ, கிடைக்கும் வருவாயைக் கொண்டு சரியாக உண்ணாமல், அழகாக உடுத்தாமல், ஐயோ பாவம் சீட்டுகளை வாங்குகின்றார். "இன்றில்லையானாலும் நாளை கிடைக்கும்” என்ற நம்பிக்கையிலேயே வாங்கிக் கொண்டே இருக்கிறார். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அன்று இவருக்கு வேலை ஓடாது! பரிசு விழாத ஏமாற்றத்தினால் வேலை செய்வதில் சோர்வு தலைகாட்டுகிறது! ஆகப் பண இழப்பு! அனுபவித்து வாழ மனமில்லை! கைப்பொருள் இழப்பு! பணிகளிலும் பாதிப்பு! இவையெல்லாம் லாட்டரிச் சீட்டால்-சூதால் விளையும் எதிர் விளைவுகள்.

இனிய செல்வ, குளத்தில் தூண்டில்! தூண்டிலின் நுனியில் புலால் துண்டு. இந்தப் புலால் துண்டின் நுனியை மீன் சுவைக்கிறது! என்ன நிகழும்! சுவைப்புலன் தூண்டப்பட்ட பின் மீண்டும் மீண்டும் துண்டினை அணுகித் தூண்டில் முள்ளில் சிக்கிக் கொள்ளும். முடிந்தது கதை! இனிய செல்வ, அதில் ஒன்று அடைந்தாலும் பிறிதொன்றை நாடுவதால் இழப்பேயாம். சூதாடுவோருக்கு நன்றாக வாழ்தல், இன்பமாக வாழ்தல் என்றும் இல்லை! கிடையாது! சூது வறுமையைத்தான் தரும். உழைப்பே செல்வத்திற்குரிய ஆதாரம்! அதிர்ஷ்டத்தில் ஒன்றும் நடப்பதில்லை! நடக்காது!

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

(932)

இனிய செல்வ, சூது வறுமையையே தரும், சிறுமையே செய்யும். ஏன் இந்தச் சூது? இனிய செல்வ, குடிமக்களுக்கு நன்மையைத் தரவேண்டிய அரசு இங்ஙனம் சூதாட்டம் நடத்தலாமா? சூது பொருளைக் கெடுக்கிறது; பொய் சொல்லப் பழக்குகிறது. அன்பு, அருள் நலம் சார்ந்த வாழ்க்கையைக் கெடுக்கிறது. அல்லலில் உழலச் செய்கிறது. இத்தகு கொடுமை பல செய்யும் லாட்டரிச் சீட்டு விற்பனை தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 750 கோடி. இந்த அவலம் தொடர்வது நல்லதல்ல; விரும்பத்தக்கதும் அல்ல. திருவள்ளுவருக்கும் உடன்பட்டதல்ல.

இன்ப அன்பு

அடிகளார்

84. சலுகைகள்-குடும்பங்கள் அடிப்படையில்

இனிய செல்வ,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந்து ஆற்றாக் கடை"

என்ற திருக்குறளைக் கற்றிருப்பாய் என்ற நம்புகின்றோம். இனிய செல்வ, செய்யும் காரியம் நல்லதா அல்லது கெடுதலா என்பது செய்யும் காரியத்தைப் பொறுத்தது மட்டும் அல்ல, அல்லது செய்பவரைப் பொறுத்தது அல்ல. யாரை நோக்கிச் செய்யப்படுகிறதோ அந்த நபரைப் பொறுத்தது என்பது திருக்குறளின் கருத்து. மேலும் ‘உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து’ என்றும் திருக்குறள் கூறுகிறது.

இனிய செல்வ, நமது நாட்டில் நடைமுறைப்படுத்தப் பெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நல்லதேயாயினும் பக்க விளைவுகளும் எதிர் விளைவுகளும் இல்லாமலில்லை, பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் மனிதரை மேலே தூக்கி விடுதல் அவசியம் மட்டுமல்ல, சமூகத்தின் கடமையுமாகும். ஆனால், பள்ளத்தில் கிடத்தல் என்ற நிலையை அளவு கோலாகக் கொள்ளாமல் சாதிகளை அளவு கோலாகக் கொள்ளுதல் நடைமுறையில் சிறந்த கொள்கைதானா? சாதிகள் சமூகமாகிவிடுமா? ஒரு சாதியில், ஒரு சமூகத்தில் அனைவரும் பின் தங்கியவர்களாக இருத்தல் கூடுமா? இனிய செல்வ, இவையெல்லாம் ஆய்வுக்குரிய கேள்விகள், சமூகத்தின் பெயரில் சட்ட அடிப்படையில் ஒதுக்கீடு அமையுமாயின் முண்டியடிக்கும் தகுதியுடைய ஆற்றல் மிக்கவர்கள்-அரசின் கதவைத் தட்டும் சக்தியுடையவர்கள் தான் பயன் அடைவார்கள். கடை கோடி மனிதனுக்கு ஒன்றும் கிடைக்காது. ஏன்? பிற்பட்டோருக்குரிய அளவுகோலுக்கு இசைந்து உள்ள தனிக் குடும்பங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை வழங்கினால் அனைவருக்கும் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. கடைகோடி மனிதனும் பயனடைவான்.

இனிய செல்வ, மக்கள் தொகுதியை மூன்றாகப் பிரிப்பது! முதல் வகைத் தொகுதியைச் சார்ந்த அனைத்து குடும்பங்களும் சமூகத்தால் அங்கீகரிக்கப் பெறாத குடும்பங்கள்; கல்வியில் பின் தங்கிய குடும்பங்கள்; பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள்; என்ற அடிப்படையில் இனம் கண்டு தாழ்த்தப்பட்ட சமூகமாகக் கருதி அனைத்துச் சலுகைகளையும் வழங்கலாம். இந்தத் தொகுதியைச் சார்ந்த குடும்பங்களுக்குக் குடும்ப அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும் உதவி. அதற்குப் பிறகு அந்தக் குடும்பத்தைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டு முன்னேறியோர் தொகுதியில் சேர்க்க வேண்டும். அது போலவே தொகுதி 2-ல் உள்ள குடும்பங்கள் மிகவும் பிற்பட்டோர். இந்தக் குடும்பங்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையினர். இந்தக் குடும்பங்களுக்கும் காலக்கெடு அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்து உயர்த்த வேண்டும். வளர்ந்த குடும்பங்களைப் பிற்பட்டோரிலிருந்து நீக்கி முன்னேறிய குடும்ப வரிசையில் சேர்க்க வேண்டும். கடைசியாக உள்ளது மூன்றாவது தொகுதி. இந்தத் தொகுதியினர் பொருளாதாரத்தில் மட்டும் பின் தங்கியவர்கள், இந்தக் குடும்பங்களை, குடும்பங்கள் அடிப்படையில் அங்கீகரித்து உதவி செய்யலாம். -

இனிய செல்வ, இந்த நடைமுறையில் எல்லோருக்கும் உதவி கிடைக்கும். இனிய செல்வ, 1953-ல் 2720 ஆக இருந்த சாதிகள், 1983-இல் 3332 சாதிகளாகப் பல்கி பெருகி வளர்ந்து விட்டது தெரிகிறதா? ஏன்? சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுவதால் சாதிகளைக் காப்பாற்ற மக்கள் நினைக்கிறார்கள், காலப்போக்கில் மறைந்துபோன சாதிக் கூட உயிர்பெற்று எழுந்து விட்டது. சாதிகளிலிருந்து தப்பி வளரவே ஒதுக்கீட்டுக் கொள்கை. ஆனால், நடைமுறையில் சாதிகள் வளர்கின்றன; இயக்கம் அடைகின்றன. இறுக்கம் அடைகின்றன.

இனிய செல்வ, "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளுவம் இந்த வையகத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் மனிதக் குலப்பிரிவினைகளுக்குக் காரணமான சாதிகள், மதங்கள், உலகியல், வாழ்க்கைக்குச் சாதனங்களாக அமைதல் கூடாது. சாதிகள் அடிப்படையில் சலுகைகள், இட ஒதுக்கீடு உள்ளவரை சாதிகள் தொலையா. புதிய சாதிகள் தலையெடுக்கும். போலிச் சான்றிதழ்கள் நடமாடும். இவையெல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும். குடும்ப அடிப்படையில் பின் தங்கிய நிலைமையை மட்டுமே அளவு கோலாகக் கொண்டு சலுகைகள் வழங்கப்பெறுதல் வேண்டும். இடஒதுக்கீடு அளித்தல் வேண்டும். எந்த ஒரு சலுகையும் காலக்கெடுவுடன் கூடியதாகவும் அமைய வேண்டும். இது தான் சமூக நீதி. இன்ப அன்பு

அடிகளார்

85. மக்கள் இருக்கிறார்கள்: மனிதன் இருக்கிறானா?

இனிய செல்வ,

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம், எண்பத்தைந்து கோடி மக்கள். ஆனால் தகுந்த மனிதர்களைத்தான் காணோம். உலக வரலாற்றில் அரிஸ்டாட்டில் முதல் திருவள்ளுவர் வரை மனிதனைத் தேடியிருக்கிறார்கள். ஆனால் மனிதன் கிடைக்கவில்லை.

இனிய செல்வ, மனிதன் யார்? உடைமை பெற்றவன் மனிதனா? பட்டம், பதவிகள் பெற்றவன் மனிதனா? இல்லை, இல்லை! அப்படியானால் மனித உறுப்புகள் அனைத்தும் குறைவறப் பெற்றவன் மனிதனா? அதுவும் இல்லை. திருவள்ளுவர் மறுக்கிறார். "உறுப்பொத்தல் மக்கள் ஒப்பன்று" என்பது திருக்குறள். மானுடம் அற்புதமான படைப்பு. இனிய செல்வ, மனித உடம்பில் உள்ள பொறிகள், புலன்கள் ஆகியவை, அவை இயங்கத் துணை செய்யக் கூடிய சதை முதலிய அமைப்புக்கள்! அம்மம்ம, அற்புதம்! அற்புதம்! ஒன்றன் பணியில் பிறிதொன்று தலையிடுவதில்லை. ஆனால் ஒன்றோடொன்று ஒத்திசைந்து இயங்கி உயிரைக் காப்பாற்றுகின்றன; இயக்குகின்றன. இந்த இயக்கத்தில் ஒர் ஒழுங்கு (Order) நிலவுகிறது. முறை பிறழாத நிகழ்ச்சியும் (Consistancy) நிலவுகிறது. ஏன் இவ்வளவு பொறி நுட்பங்கள்? ஆற்றல் வாய்ந்த அமைப்புக்கள்?

மானுடம் புவியை நடத்தும் சக்தியைக் கொண்டது. மானுடம் படைப்பாற்றல் உடையது. இனிய செல்வ, எத்தனை மனிதர்கள் புவியை நடத்துகின்றனர்? இன்று புவியல்லவா தூக்கமுடியாத மனிதச் சதைப் பிண்டங்களைத் தூக்கிக் கொண்டு செல்கிறது; மனிதன் சிந்திப்பவன். ஆனால் அவன் சிந்திக்க மறுக்கிறான்! ஏன் சிந்திக்க மறுக்கிறான்? சில நூறு சம்பாதிக்கிறான். அவனைச் சுற்றி முகஸ்துதி செய்கிறவர்கள் கூடி விடுகின்றனர். உடனே அவனுக்கு நினைப்பு, தான் பெரிய மனிதன் என்று! அவன் எதையும் செய்யத் துணிகின்றான். அதீதத்தினுடைய எல்லை வரையில் பேசுகிறான்! கடைசியாக நான்முகன் தலையில் முருகன் குட்டியது போலக் குட்டித்தான் தீரவேண்டியிருக்கிறது! வேறு வழியேயில்லை.

இனிய செல்வ, இந்த மாதிரியான மனிதர்களைத் திருவள்ளுவரே கைவிட்டு விட்டார். ‘கயவர்கள்’ என்று கூறிக் கரும்புபோலக் கொன்று பயன் கொள்ளுமாறு கூறுகிறார்.

இனிய செல்வ, இன்று இத்தகைய கயவர்கள் கூட்டம் வளர்ந்து வருகிறது. ஏன், இன்றைய உலகியலை நடத்துபவர் யார்? இந்தக் கயவர்கள் தான்! நல்லவர்கள் செயலற்ற வர்களாகி விட்டனர். ஐயோ, பாவம் அப்பாவிகள்! இத்தகைய நல்லவர்கள் கூட்டம்? அப்பாவிகள் கூட்டம் சமுதாயத்தில் 90 விழுக்காடு தீயவர்கள் கூட்டம் 10 விழுக்காடு தான். செயலாண்மையும் துணிவும் இல்லாதவர்கள் கோடிக்கணக்கில் இருந்து என்ன பயன்? நல்லவன் திண்ணையிலிருந்து எழுந்திருப்பதற்கு யோசிக்கும் வேளையில் கயவன் ஊரையே கொளுத்திவிட்டுச் சாப்பறை கொட்டத் தொடங்கிவிடுவான். இதுதான் இன்றைய நடைமுறை. இத்தகு மாக்களுடன் பழகுவதை விடக் கொடிய மிருகங்களிடத்தில் கூடப் பழகி விடலாம்; வாழ்ந்து விடலாம். இனிய செல்வ, இங்கு அறிவியல், நடைமுறை இயலுடன் மாறுபடுகிறது. ஆம்! நீ சொல்வதுதான்! மனிதனைத் திருத்தமுடியும் என்று அறிவியல் நம்புகிறது. ஆனால், இலக்கிய மரபுகள் இயலாமையையே எடுத்துக் கூறுகின்றன. பொதுமறை கூறவந்த திருவள்ளுவரே

"நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்"

என்று கூறியதை ஓர்க. இனிய செல்வ, ‘பழமொழி’ என்ற இலக்கியம் கரியைப் பாலில் கழுவினால் கரி வெண்மையாகாது. பால்தான் கருப்பாகும் என்று கூறுகிறது. அதுமட்டுமா? சுவைமிக்க தேனில் எட்டிக்காயை ஊறப் போட்டாலும் எட்டிக்காய் இனிக்காது! இனிய செல்வ, அறுமுகச்செவ்வேள் சூரபன்மனை ஊர்தியாகக் கொண்ட தத்துவம்தான் என்ன? சூரபன்மனைப் பயன்படுத்தலாம். அவனாகப் பயன்பட மாட்டான்! அதுவும் எப்போதும் கண்காணிப்பில் தொடர் மேலாண்மையின்கீழ் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். நிர்வாக இயலில் Under Control என்று கூறுவர். இனிய செல்வ, இன்றைய இந்தியாவில் தமிழகத்தின் நிலை இதுதான். மக்கள் கூட்டம் இருக்கிறது. தகுதியான நபர்களைத் தேடவேண்டியிருக்கிறது. இது எதிர்கால இந்தியாவிற்கு நல்லதல்ல. சோறும் துணியும் எல்லோருக்கும் கிடைத்துவிடும். அதைப்பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவேண்டாம். ஆனால், மனிதன்-புவியை நடத்தும் மனிதன் வெற்றியினைப் பெற்றுக் குவிக்கும் மனிதன் தோன்றுவானா? இதுவே இன்றுள்ள பெரிய வினா? விடை சொல்லும் பொறுப்பு யாருடையது? ஆம்! ஆட்சியாளர்கள் முதலில் பதில் கூறவேண்டும். சமூகமும் குடும்பமும் அடுத்த நிலையில் பதில் கூறவேண்டும். பதில் கிடைக்குமா? இன்ப அன்பு

அடிகளார்

86. இட ஒதுக்கீடு

இனிய செல்வ,

தமிழகம் பொங்கி எழுந்து ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. ஆம்! இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தான்! 1924-ல் தொடங்கிய இடஒதுக்கீடு தொடர்ந்து நடக்கிறது; என்றென்றும் தொடரும் போல இருக்கிறது! இனிய செல்வ, பின் தங்கியதற்குரிய நிலைகள் மாற்றப்படாமல் நாற்காலிகள் வழங்கப்படுவதால் மட்டும் பின்தங்கிய நிலை மாறுமா?

இன்றைய கல்விப் போக்கு என்ன? ஆரம்பப் பாடசாலைகள் முதல் சேர்கிற மாணவர்கள் அனைவரும் உயர்நிலைக் கல்விக்கும் அதற்கு மேல் கல்லூரிக் கல்விக்கும் வருவதில்லை. இனிய செல்வ, உன்னுடைய கேள்வி சரியானது! இடைத்தங்கல் ஏராளம்; இடைமுறிவுகளும் ஏராளம்! தோராயமாகக் கணக்கிட்டால் 10 விழுக்காடு மாணவர்கள் தான் கல்லூரிக் கல்விக்கு-ஆராய்ச்சிப் படிப்புக்கு வருகிறார்கள். இதிலும் சராசரி மதிப்பெண் பெற்று வருவதில்லை. தேர்ச்சிக்குறிய மதிப்பெண் பெற்று வருவதில்லை. தேர்ச்சிக்குரிய மதிப்பெண் அளவே குறைக்கப்பட்டு விட்டன! அதிலும் ‘தான மார்க்கு’கள் வேறு. இனிய செல்வ, இந்த நிலை நீடித்தால் எங்ஙனம் பின்தங்கிய நிலை மாறும்?

எல்லோருக்கும் கிடைத்துவிடும். அதைப்பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவேண்டாம். ஆனால், மனிதன்-புவியை நடத்தும் மனிதன் வெற்றியினைப் பெற்றுக் குவிக்கும் மனிதன் தோன்றுவானா? இதுவே இன்றுள்ள பெரிய வினா? விடை சொல்லும் பொறுப்பு யாருடையது? ஆம்! ஆட்சியாளர்கள் முதலில் பதில் கூறவேண்டும். சமூகமும் குடும்பமும் அடுத்த நிலையில் பதில் கூறவேண்டும். பதில் கிடைக்குமா? இன்ப அன்பு

அடிகளார்

86. இட ஒதுக்கீடு

இனிய செல்வ,

தமிழகம் பொங்கி எழுந்து ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. ஆம்! இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தான்! 1924-ல் தொடங்கிய இடஒதுக்கீடு தொடர்ந்து நடக்கிறது; என்றென்றும் தொடரும் போல இருக்கிறது! இனிய செல்வ, பின் தங்கியதற்குரிய நிலைகள் மாற்றப்படாமல் நாற்காலிகள் வழங்கப்படுவதால் மட்டும் பின்தங்கிய நிலை மாறுமா?

இன்றைய கல்விப் போக்கு என்ன? ஆரம்பப் பாடசாலைகள் முதல் சேர்கிற மாணவர்கள் அனைவரும் உயர்நிலைக் கல்விக்கும் அதற்கு மேல் கல்லூரிக் கல்விக்கும் வருவதில்லை. இனிய செல்வ, உன்னுடைய கேள்வி சரியானது! இடைத்தங்கல் ஏராளம்; இடைமுறிவுகளும் ஏராளம்! தோராயமாகக் கணக்கிட்டால் 10 விழுக்காடு மாணவர்கள் தான் கல்லூரிக் கல்விக்கு-ஆராய்ச்சிப் படிப்புக்கு வருகிறார்கள். இதிலும் சராசரி மதிப்பெண் பெற்று வருவதில்லை. தேர்ச்சிக்குறிய மதிப்பெண் பெற்று வருவதில்லை. தேர்ச்சிக்குரிய மதிப்பெண் அளவே குறைக்கப்பட்டு விட்டன! அதிலும் ‘தான மார்க்கு’கள் வேறு. இனிய செல்வ, இந்த நிலை நீடித்தால் எங்ஙனம் பின்தங்கிய நிலை மாறும்?

நுண்மாண் நுழைபுலம் வேண்டாமா? அறிவும் நுழைபுலமும் வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் நாற்காலிகளைத் தரும் முயற்சி போதிய பயனைத்தருமா? பின் தங்கிய நிலைதான் மாறுமா?

இந்த ஆண்டும் மேல்நிலைப் பள்ளித் தேர்ச்சிகளை நீ கூர்ந்து படித்திருந்தால் ஒன்றை உணர்ந்திருப்பாய்! அதாவது 80 விழுக்காட்டுக்கும் மேலாக நகர்ப்புற மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்கள் போதிய அளவு தேர்ச்சி பெறவில்லை. அதிலும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு. இந்த நிலை தரும் படிப்பினை என்ன? கல்வியின் தரத்தைக் குறிப்பாக ஆரம்பக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தித் தரமாகக் கல்வியும் பயிற்சியும் தந்தால் பின்தங்கிய நிலை மாறும். நமது பிள்ளைகள் மேட்டுக் குடியினரின் பிள்ளைகளை விடப் புத்திசாலிகள் தான்! ஆனால் அவர்களுக்கு வாய்ப்புதான் வழங்கப்படவில்லை.

இனிய செல்வ, மேலும் ‘பின்தங்கிய நிலை’ என்பது ஒட்டு மொத்தமாக ஒரு சமூகமே பின் தங்கியிருக்காது. அது போலவே முன்னேறிய நிலை என்பதும் ஒரு சமூகம் முழுதுக்கும் பொருந்தாது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில்தான் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட நிலையும் பின்னடைவும் இருக்கும். தாழ்த்தப்பட்ட சமூகத்திலும் கூடத் தீண்டாமை கடுமையாக இருந்த காலத்தில் டாக்டர் அம்பேத்கார் தோன்றினார் என்பது நினைவுக்குரியது. அது போலவே முன்னேறிய சமூகத்திலும் அனைவரும் முன்னேறியவர்கள் அல்ல; இருக்கவும் முடியாது. இனிய செல்வ, தமிழ் நாட்டிலேயே பழைய சாமான் விற்பனைக் கடைகள் செட்டி நாட்டில்தான் அதிகம். நகரத்தார்கள் குடும்பங்களில் பலர் வீட்டை இடித்து விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். வீட்டில் உள்ள பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழ் நாட்டில் தொழில் மேதைகளும், பெரிய மூலதனம் உள்ளவர்களும் இலட்சாதிபதிகளும் நகரத்தார் சமூகத்தில் உண்டு. இது உண்மை. ஆனால், சமூகத்தில் ஒரு சில நூறு குடும்பங்கள் வசதி பெற்றிருந்தால் அந்தச் சமூகத்தையே முன்னேறிய சமூகம் என்று கூற முடியுமா? அல்லது கூறலாமா? அதுபோலவே, பிற்பட்டோர் என்ற சமூகப் பட்டியலில் தான் ஜமீன்தார்கள் அனைவரும் உள்ளனர். அதனால் அந்தச் சமூகம் முழுதும் முன்னேறியது அல்லது பிற்படுத்தப்பட்டது என்று கூற இயலாது.

ஆதலால், இடஒதுக்கீடு அவசியமில்லை என்பது நமது கருத்து அல்ல. இட ஒதுக்கீட்டிற்குக் கால நிர்ணயம் வேண்டும். இட ஒதுக்கீட்டு முறை சமூக ரீதியில் அமைவது கடை கோடி மனிதன் முன்னேறத் துணை செய்யாது. குடும்ப அடிப்படையில் அமைய வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கு, பிறந்த சாதியை-சமூகத்தை ஆதாரமாகக் கொள்ளாமல் பின்னடைவு நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளத்தில் கிடப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்காது போயினும் சமூகம் கெடும்! உண்மையை ஓர்ந்து உரியவாறு செய்யாது போனால் சமூகம் கெடும்!

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்"

இன்ப அன்பு

அடிகளார்

87. ஊழல் பிரச்சனைக்குத் தீர்வுகாண....

இனிய செல்வ,

நமது நாட்டு அரசியலில் - அதுவும் மைய அரசியலில் பங்குபத்திர ஊழல், சர்க்கரை இறக்குமதி ஊழல் ஆகிய செய்திகள் தீ பற்றி எரிவதைப்போல் எரிந்து கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றம் சென்ற சில நாள்களாகக் கூடியும் நடைபெறவில்லை! எதிர்க் கட்சியினர் பல நாள்கள் உள்ளே

87. ஊழல் பிரச்சனைக்குத் தீர்வுகாண....

இனிய செல்வ,

நமது நாட்டு அரசியலில் - அதுவும் மைய அரசியலில் பங்குபத்திர ஊழல், சர்க்கரை இறக்குமதி ஊழல் ஆகிய செய்திகள் தீ பற்றி எரிவதைப்போல் எரிந்து கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றம் சென்ற சில நாள்களாகக் கூடியும் நடைபெறவில்லை! எதிர்க் கட்சியினர் பல நாள்கள் உள்ளே போராடி விடை காணமுடியாமல் எய்த்துக் களைத்துப்போய் பாராளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து ராஜிநாமா செய்திருக்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு வெளியே வந்து பாராளுமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு மறியலும் ஆர்ப்பாட்டமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இனிய செல்வ, எதிர்க்கட்சிகள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேட்கிறாயா? ஊழல்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை! இதைச் செய்ய நமது பிரதமர் யோசிக்கிறார்! ஏன்? காங்கிரஸ் கட்சியில் பல குழுக்கள் உண்டு! இதில் யார் மீதாவது நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் கட்சி உடையும்! நாடாளுமன்றத்தில் பலம் இழக்கக்கூடும்! அதனால் ஆட்சி கவிழும் அபாயம் உண்டு! ஆதலால் பிரதமர் நரசிம்மராவ் தயங்குகிறார். எதிர்க்கட்சிகளும் பிடிவாதத்தைத் தவிர்க்க முன்வரவில்லை.

இனிய செல்வ, பழைய காலத்தில் ‘ஊழல்’ என்று பேச்சு அடிப்பட்டாலே அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்தனர். டி.டி.கே, ஆர்.கே.சண்முகம் ஆகியோர் ராஜிநாமாக்கள் முன்னுதாரணங்கள்! ஆனால் இன்றோ போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.

இனிய செல்வ, நாட்டு மக்கள் பெருவாரியான வாக்குகள் மூலம் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். பிரதமராக நரசிம்மராவைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்கள். மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

"தேரான்தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறம்

தீரா இடும்பை தரும்"

என்ற திருக்குறள் நெறிப்படி பார்த்தால் பிரதமர் நரசிம்மராவுக்கு இடையூறில்லாமல் காங்கிரஸ் ஆட்சியை நீடிக்க அனுமதிப்பது எதிர்க்கட்சிகளின் கடமை. எதிர்க்கட்சிகளால் ஆட்சியும் அமைக்க இயலவில்லை! எதிர்க் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை! காங்கிரசை எதிர்ப்பதில் மட்டும் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபடுகின்றன! கூட்டாக ஆட்சி அமைக்கவும் இயலவில்லை. இனிய செல்வ, நமது நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று திரும்பத் திரும்ப அழைக்கிறார். ஆனால், எதிக்கட்சிகள் எடுத்துக்கொள்ள தயாராய் இல்லை; நாடாளுமன்றம் மக்களுடைய மன்றம். மக்கள் வாக்களித்து, பாராளுமன்றத்துக்குச் செல்கிறார்கள். அதனால் பாராளுமன்றக் கூட்டத்தைப் புறக்கணிப்பது என்பது மக்கள் இட்ட கட்டளையைப் புறக்கணிப்பது போலாகும்.

இனிய செல்வ, அதனால் உயர்ந்த ஜனநாயக மரபுப்படி பாராளுமன்றத்தில் எந்த ஒரு சிக்கலையும் விவாதித்துத்தான் முடிவு எடுக்கவேண்டும். அல்லது ஆளுங்கட்சித் தலைவர்களும் எதிர்கட்சித் தலைவர்களும் கூடிப் பேசி - மனம்விட்டு பேசி ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவைப் பாராளுமன்றத்தின் ஏற்புக்கு வைக்கலாம். இனிய செல்வ, அமரர் ஜவகர்லால் நேரு இப்படி ஒரு சிக்கல் வரும் என்று உய்த்துணர்ந்ததால் உடன் எதிர் கட்சித் தலைவர்களைத் தமது இல்லத்திற்கு விருந்திற்கு அழைத்து விருந்து மேசையிலேயே பல ராஜதந்திர முடிவுகள் எடுக்கப் பெற்றதாக அறிந்தோர் கூறுவர். சிக்கலுக்குத் தீர்வு காணும் பொழுது பாராளுமன்ற நடவடிக்கைகளில்-பாராளுமன்ற ஜனநாயகத்தில் நாட்டு நலனை மையமாகக் கொண்டே விவாதிக்க வேண்டும்.

ஒரு கொள்கை அல்லது கோட்பாடு பலர்கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வரவில்லையென்றால் அதற்குக் காரணம் சிக்கலின் கடுமையல்ல. விவாதத்தில் ஈடுபடுவோர் ஜனநாயகப் பண்புகள் நிறைந்தவர்களாக இருக்கமாட்டார்கள். அல்லது கடின சித்தமும் பிடிவாதமும் உடையவர்களாக இருப்பர். இனிய செல்வ, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிலர், சிக்கல் தீர்ந்துவிட்டால் தனக்குப் பேசப் பொருள் கிடைக்காது, தனது பெருமை பாதிக்கும் என்று நினைத்தும் சிக்கலை வளர்ப்பர். மனிதர்களில் பலவிதம்! இதற்குள் முங்கிக் கரையேறுவதுதான் ஜனநாயகத்திற்குரிய தேர்வு! இத்தேர்வில் வெற்றி பெறுவோர் சிலரே!

அரசியல் ஆதாயம், கட்சி-பிரதி கட்சி மனோபாவம் இம்மியும் இருக்கக்கூடாது. இன்று இதுதான் இல்லை. ஆட்சி எந்திரமே அரசியல் கட்சியாக-அரசியல் கட்சியின் அதிகார பீடமாக மாறிவரும் அபாயம் வளர்ந்து வருகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டு மக்களில் 80 விழுக்காட்டு மக்கள் அரசியல் கட்சிகளைக் சார்ந்திருக்கவில்லை. விரும்பிய கட்சிக்குத் தங்களுடைய வாக்கை அளிக்கிறார்கள். வாக்களித்தவர்களை மறந்துவிடக் கூடாது. கட்சிக்காரர்களையே சுற்றக்கூடாது. நாட்டுமக்களை, சுதந்திரம் இழந்து கட்சியாளர்களைச் சுற்றும்படி செய்யக்கூடாது. நாட்டு மக்களுக்குத் தாங்கள் விரும்புகிற அரசியலைப் பின்பற்றுகின்ற - வாக்களிக்கின்ற உரிமை உண்டு. அந்த உரிமை பாதுகாக்கப் பெறுதல் வேண்டும்.

பாராளுமன்ற எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தைப் புறக்கணிப்பதைக் கைவிட வேண்டும். ஆளுங்கட்சியும் பெரும்பான்மையை நம்பி ஆட்சி செய்யக்கூடாது. எதிர்க்கட்சி வாக்கு ஒன்று, ஆள்கின்ற அரசுக்கு விரோதமாகிறது என்றால் அதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தமது கொள்கையை-கோட்பாட்டை-அணுகுமுறையை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சிக்கலுக்கு ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒத்த நிலையில் ஒரு முடிவு காண இயலாமற் போயின் பாராளுமன்ற நடவடிக்கைகளை அடையாளமாக ஒரு மணிநேரம் வேண்டுமானால் புறக்கணிக்கலாம். இனிய செல்வ, வெளி நடப்புச் செய்யாமல் இதில் தீர்வு காணாமல் பிரச்சினை இறுக்கமாகி விட்டால் என்னசெய்வது? என்று கேட்கிறாய்; ஒரேவழி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு மக்கள் மன்றத்திற்கு வந்து விளக்கமளிப்பதுதான் செய்யக்கூடியது. "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்!”

இன்ப அன்பு

அடிகளார்

88. இட ஒதுக்கீட்டுக் கொள்கை

இனிய செல்வ,

புஸ்வானம் வந்துவிட்டது! வெடித்து விட்டது! அது என்ன என்கிறாயா? அதுதான் சமூகநீதி என்ற பெயரில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை! 69 விழுக்காடு இட ஒதுக்கீடு!

'சமூகம்’ - என்ற சொல் சாதியைத்தான் குறிக்கும். 'சமுதாயம்’ என்ற சொல் பொதுவாக மக்கள் சமுதாயத்தைக் குறிக்கும். சாதிமுறை அமைப்பும், அதனால் ஏற்பட்ட தாழ்வுகளும் நாடறிந்தவை. அதனாலேயே வள்ளுவமும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கூறியது. மனிதரில் பள்ளத்தில் கிடக்கிறவர்களை மேலே தூக்கிக் கொண்டு வரவேண்டியது அவசியம்., கடமையும் கூட! பள்ளத்தில் கிடப்பவர்களில் சாதி பார்த்துச் சிலரைத் தூக்குவது, சிலரைப் பள்ளத்திலேயே போட்டு விடுவது என்பது எப்படி நீதியாகும்? பள்ளத்தில் கிடப்பவர்களிலும் கூடச் சிலர் புறக்கணிக்கப் படுகின்றனர் சாதியின் பெயரால்!

இனிய செல்வ! அதுகிடக்கட்டும்! குறிப்பிட்ட சாதிகளில் கூடப் பள்ளத்தில், படுகுழியில் கிடப்பவர்கள் மேலேறவில்லை. அவர்களிலும் தமது இயல்பூக்கத்தினால் கையை மேலே நீட்டி ஏற முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் இட ஒதுக்கீட்டுக் கொள்கை சென்ற காலத்தில் பயன்பட்டிருக்கிறது. இனிய செல்வ! சுதந்திரம் வந்து 47 ஆண்டுகளுக்குப்பிறகு பிற்பட்டோர் பட்டியல், மிகவும் பிற்பட்டோர் பட்டியல் என்று பட்டியல் நீண்டு கொண்டே போவது ஏன்? இனிய செல்வ, ஒரே பாராளுமன்றத்தொடரில், இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சட்ட வரைவாக்கம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் வருகிறது. அதே பாராளுமன்றத்தில் நமது நிதியமைச்சர் தனது அலுவலகத்தில் மத்திய அரசில் வேலை பார்ப்போர் எண்ணிக்கையில் சற்றேறக்குறைய 38,500 பேர் வேலை நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அதாவது வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இன்னும் 8,000 பேருக்குச் சீட்டுக் கிழிக்கப் போகிறாராம். நமது மாநில அரசிலும் 10 ஆண்டுகளாகக் காலி ஏற்றப்பட்ட பணியிடங்கள் சற்றேறக்குறைய 27,000 காலியாக உள்ளன. ஒரு நடுநிலைப்பள்ளியில் மூன்றே ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். இப்போது ஆசிரியப் பணியிடங்கள் நிரப்ப இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் முழுவதும் அல்ல, அறை குறையாக, பொறுத்திருந்து பார்ப்போம்.

இனிய செல்வ, அரசுப் பணிமனைகளில் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை, ஆண்டு தோறும் 1 விழுக்காடு தான் வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இனிய செல்வ, வேலையில்லாத் திண்டாட்டம் 300 விழுக்காடுக்கும் மேலாக வளர்ந்து வந்திருக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 1989க்கு முன் பதிவு செய்தவர்களின் எண்களையே இப்போது அனுப்பி வருகின்றனர். எவ்வளவு தேக்கம் பார்! இந்த நிலையில் ஆட்குறைப்பும் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் 69 விழுக்காடு ஒதுக்கீடு என்ன பயன் தரும்?

இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒரளவு கல்விக்குப் பயன்படும். அதுவும் குறிப்பாகத் தொழில் கல்விக்குப் பயன்படும்.

இனிய செல்வ, போதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யாத போது மாணவர்கள் எதைக் கற்பார்கள்? பட்டப் படிப்புக்களும், வேலை வாய்ப்புக்களும் ஒத்திசைந்து போக வில்லை. இஃது ஒரு தீய சுழற்சி வட்டம்! இனிய செல்வ. இந்தியக் குடிமகனின் பாதுக்ாப்பு, நீதித் துறையேயாம். நீதித்துறையை விஞ்சி அரசியல் சட்டத்தைத் திருத்துவது இன்று நல்லதாக இருக்கலாம். ஆனால் நெடிய கால நோக்கில் பார்த்தால் மக்கள் அவலப்படுவார்கள். மக்கள் விருப்பம், ஆட்சியாளர்கள் விருப்பம் நீதித்துறை இவைகளுக்கிடையில் மோதல் ஏற்படுமாயின், மாறுபாடுகள் தோன்றின், உடன் அந்தக் குறிப்பிட்ட செய்திபற்றி மக்கள் கருத்தறிய, கருத்துத் தேர்வு நடத்தலாம். அல்லது முத்தரப்பினரும் அடங்கியவர்களின் குழு ஒன்று நியமித்து, மக்கள் கருத்தறிந்து, அறிக்கை தரச்செய்து நடைமுறைப்படுத்தலாம். அப்படித்தான் அம்பா சங்கர் அவர்கள் ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டது. அவர் அந்த அறிக்கை தயார் செய்து தந்தார். அந்த அறிக்கை ஆட்சியாளருக்குப் பிடிக்காததால் அதை வெளியிடவும் இல்லை; நடைமுறைப் படுத்தவும் இல்லை.

இனிய செல்வ, நமது நாட்டு ஆட்சிமுறை மூன்று அமைப்புக்களைக் கொண்டது. முதல் அமைவு பாராளுமன்றம், சட்டமன்றம், அமைச்சரவை ஆகியன. இவை அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகளை நிர்ணயிக்கும். இரண்டாவது நிர்வாக இயந்திரம்-அதிகார வர்க்கம், இந்த அமைவின் பொறுப்பு அமைச்சரவையின் கொள்கைகளையும், திட்டங்களையும் நடைமுறைப் படுத்துவது; நிறைவேற்றுவது! மூன்றாவது நீதித்துறை! இதன் பணி முதல் இரண்டு அமைவுகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி வழங்குவது. இந்த மூன்று அமைவுகளுக்கும் தனித்தனியே கடமைகளும், அதிகார வரம்புகளும் நிர்ணயிக்கப் பெற்றுள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரண்டாவது, மூன்றாவது அமைவுகளின் உரிமைகள், அத்து மீறல் செய்யப்படுகின்றன. முதல் அமைவே சர்வமும் ஆகத் துடிக்கிறது. இனிய செல்வ, இந்தப் போக்கு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்து விடும். நமது நாட்டில் வளர்ந்து வரும் கட்சி மனப்பான்மை மிகவும் கசப்பாக இருக்கிறது. கட்சிகளுக்கிடையில் சண்டைகளே நடக்கின்றன. ஆளும் கட்சியைச் சாராதவர்களை அந்தியர் களைப் போல நடத்தும் மனப்போக்கு மெள்ள மெள்ள வளர்கிறது; வளர்ந்து வருகிறது. காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம், காங்கிரஸ் கொள்கைகளை ஏற்காதவர்கள் கூட அதன் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர்கள், சலுகைகளையும் பெற்றனர். சலுகையும் முடிந்தது. கட்சியைக் கைவிட்டு விட்டனர். ஆதலால் ஆளும் ஆட்சி முறையில் கட்சி வாசனை தலைக்காட்டக்கூடாது.

இனிய செல்வ, இட ஒதுக்கீட்டுக் கொள்கை வெற்றி பெறட்டும்! நமது வாழ்த்துக்கள்! பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்! இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்புக்கள் விரிவாக்கப்படுமா? அடுத்த நூற்றாண்டிலாவது எல்லோரும் எல்லாம் பெறுவார்களா? இன்ப அன்பு

அடிகளார்

89. பிளேக்-நோய்கள்

இனிய செல்வ,

நோய்கள் பரவுகின்றன! ஆம்! பிளேக்கையும் சேர்த்துத் தான் கூறுகின்றோம்! இனிய செல்வ, இன்று பிளேக் மட்டுமா பரவுகிறது? பிளேக் நோய் உடனே கொல்வதால் எல்லாரும் பயப்படுகிறார்கள். நித்தம் சாகடித்துக் கொண்டேயிருக்கும் வியாதிகள் பலப்பல! சாவதைவிடக் கொடியவை நாள் தோறும் அடையும் துன்பங்கள்! துயரங்கள்! வன்முறைகள்! வாழும் முறைமை அறியாநிலை! அறிந்தாலும் வாய்ப்புக்கள் இல்லை! வாய்ப்புக்கள் என்ன, நமது வீட்டுக் கதவைத் தட்டுமா? ஐயோ, பாவம்! இன்று நல் வாய்ப்புக்கள் வந்து வீட்டுக்கதவைத் தட்டினாலும் திறக்க மறுக்கும் மதோன் மத்தர்களின் எண்ணிக்கையே மிகுதி! எங்கும் நீக்கமற நிலவும் அசிரத்தை நோய்க்கு ஏது மருந்து?

இனிய செல்வ, சூரத் நகரம் ஒரு பெரிய நகரம்! நகராட்சி நடந்து வந்திருக்கிறது! ஆயினும் நகரம் சுத்தமாக, சுகாதாரமாகப் பேணப்படவில்லை, என்பதை பிளேக் நோய் ஊருக்கு அறிவித்திருக்கிறது; உலகத்திற்கு அறிவித்திருக்கிறது. தொலைக்காட்சியில் வேறு சூரத் நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப் படுத்துவதைக் காட்டுகிறார்கள். பல நாள்களாகச் செய்தும் இன்னமும் அள்ளி முடியவில்லையாம்! ஏன் இந்த அவலம்? நடைபெற்றுக் கொண்டிருந்த நகராட்சி, அன்றாடக் குப்பைகளை அள்ளி, கழிவுநீரை அகற்றி நகரைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்பது தானே பொருள்!

இன்று இத்தகைய அசிரத்தை நமதுநாடு முழுவதும் துறைதோறும் பரவிக்கிடக்கிறது; பரவிக்கொண்டு வருகிறது. இனிய செல்வ, நம்மவர்களைப் பீடித்துள்ள இந்த அசிரத்தை என்பது பிளேக்-கை விடக் கொடிய நோய்! அசிரத்தையால் பணிகள் முறையாக நடப்பதில்லை. ஆனால் வாழும் ஆசை யாரை விட்டது? வாழும் ஆசையும் சிரத்தையும் கூடினால் வாழலாம்! வாழ முடியும்! அசிரத்தையுடையவர்கள் வாழ்தல் அரிது! பிழைப்பு நடத்த முயல்வார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் கையூட்டு, கொள்ளை முதலியன நிகழ்கின்றன!

இனிய செல்வ, நோய்,-காரியம்! நிகழும் காரியங்களுக்குப் பரிகாரம் தேடிப் பயனில்லை. இந்தப் பரிகாரங்கள் நிரந்தரமாகா. நிரந்தரமான பரிகாரம் காணவேண்டின் நோயின் காரணங்களைக் கண்டறிய வேண்டும். நோயின் காரணங்களையே மாற்ற வேண்டும். இன்று நமது சமுதாயத்தில் நோய் பரவலாகி விட்டது. தவறுகளை நியாயப்படுத்தும் திறன் வளர்ந்து வருகிறது. எங்கும் அசிரத்தை! செய்யும் பணிகளின் பயனுக்கு உத்தரவாதம் இல்லை! இந்தச் சமூக வாழ்க்கை முறை பிளேக்-கை விடக் கொடியது!

இனிய செல்வ, வெற்றிகள் நிலையானவை அல்ல. வெற்றி நிலைபெற்று நம்பாலதாக இருக்க வேண்டும் எனில், தொடர்ந்து விழிப்புணர்வுடன் கூடிய முயற்சி வேண்டும். சென்ற தலைமுறையினர், மனிதரைக் கொல்லும் கொள்ளை நோய்களை அறவே ஒழித்து வெற்றி கண்டனர். இன்றோ நாம், மீண்டும் அந்த நோய்களுக்கு இறையாகின்றோம்! ஏன்? அன்று அவர்கள் வாழ்ந்தனர். நாட்டுக்கு உழைத்தலைத் தவமெனக் கொண்டனர். சிரத்தையுடன் பணிகளை நிறைவேற்றினர். முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் பணிகளையும் பின் வந்த திட்டங்களின் பணிகளையும் ஒப்பு நோக்குக!

சுதந்திரம் பெற்றவுடன் நமது நாட்டில் அமைதியான வகையில் பணிகள் பல நடந்தன. அதனால், இன்று நமது நாடு பலமான பொருளாதார அஸ்திவாரத்தைப் பெற்று விளங்குகிறது. இன்று நாம் அஸ்திவாரங்களை மறந்து விட்டோம்! புறஞ்சுவர் பூசி மகிழ்கின்றோம்! இனிய செல்வ, நாடு மீண்டும் ஆவேசத்தைப் பெற வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதிச் செய்தல் வேண்டும். இனிய செல்வ, வந்த பிளேக்கிற்கு விடைகொடுத்து அனுப்புவது எளிது! அது போதாது! நமக்கு சிரத்தை-அக்கறை தேவை! செய்யும் வேலைகளை இம்மாநிலம் பயனுறும் வகையில் செய்ய வேண்டும். இந்த நிலை உருவானால் நாடு வளரும்! நாமும் வளர்வோம்! இஃதன்றித் தினமும் சோறு தின்று, சின்னஞ் சிறுகதைகள் பேசிச் செத்துப்போகும். வேடிக்கை மனிதர்களின் எண்ணிக்கை பெருகி வளர்கிறது! இந்தப் போக்கு பிளேக்-கை விடக் கொடியது. இதற்கு தீர்வு கண்டாலே நம்நாடு சுதந்திரமாக வாழ இயலும். இனிய செல்வ, தோளில் சுமை அழுத்துகிறது! அந்நிய மூலதனச் சுமை! மூளையில் அழுத்தம் ஏற்பட இருக்கிறது! அந்நிய நாட்டுத் தொழில் நுட்பங்கள்! இனி படிக்கும் செய்தித்தாள்கள் கூட அந்நியத் தாள்களாக இருக்கும்! இனிய செல்வ, இந்தப் போக்கு-நம்மை-நமது மக்களை இந்த நாட்டுக்கு அந்நியமாக்கும் அபாயம் வந்து விடக்கூடாது! அசிரத்தையைத் தவிர்! எழுந்திரு! நாட்டுக்கு உழைத்திடும் தவம் செய்வோம்! "கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்"

(668)

இன்ப அன்பு

அடிகளார்

90. சாதிகள்-களைகள்

(1)

இனிய செல்வ,

"பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்ற திருக்குறள் நெறி இனி இந்தநாட்டை வென்றெடுக்குமா என்பது ஐயத்திற்குரியதாகி வருகிறது. எங்கு நோக்கினும் சாதிகளின் பெயரால் பேரணிகள், சாதிகள் மாநாடுகள், சாதிகளுக்கு இடையே பேதங்கள், சாதிக் கலவரங்கள், மதச் சண்டைகள், படுகொலைகள் இவையெல்லாம் நமக்குக் கற்றுத்தரும் படிப்பினை என்ன? இனிய செல்வ. இன்று நாட்டில் செல்வாக்குப் பெற்றுள்ள அணிகளுக்கும் கூட உள்ளூர குளிர்சுரம் இருக்கிறது; பயம் இருக்கிறது. தங்களுடைய இருப்பை நிலையாக்கிக் கொள்ள சாதிகளைப் பயன்படுத்துகின்றன என்று தெளிவாகத் தெரிகிறது; புலனாகிறது. இனிய செல்வ, இதனால் விளையப் போவது என்ன?

தமிழினம் பல்குழுவாகப் பிரியும்; சாதி, குலம், கோத்திரங்கள் ஆழம்பட்ட நிலையில் வேரூன்றும். இந்தச் சிறு சிறு குழுக்களிடையே பகை வளரும்; கலகங்கள் நடக்கும்; சமுதாயம் என்ற அமைப்பு இருக்காது. சமூகம் என்ற அமைப்பு இருக்காது; வலிமை இழப்பர்; வாழ்வை இழப்பர். இனிய செல்வ, எல்லைகளைக் கடந்து தேசியத் தலைவர்களாக விளங்கினவர்களை-இன்றும் தேசியத் தலைவர்களாக மதித்துக் போற்ற வேண்டியவர்களை மிக முயன்று சாதித்தலைவர்களாக ஆக்குவது வரலாற்றுக்கு மாறுபட்டது. அந்த மாபெரும் தேசியத் தலைவர்களுக்கு மரியாதை செய்வது என்ற பெயரில் அவர்களுடைய மதிப்பைச் சீர்குலைப்பதாகும். இனிய செல்வ, மதுரையில் வ.உ.சி. சிலை ஒன்று சிம்மக்கல் பக்கம் நிற்கிறது. இனிய செல்வ, சிலைக்கு அடியில் சிலை நிறுவியது "சைவ வேளாளர் சங்கம்" என்று எழுதப் பெற்றுள்ளது. வ.உ.சி.க்கு வரலாற்றில் நிலைத்த புகழுண்டு. வடபுலத்தில் பாலகங்காதர திலகரைப் போல் தென்புலத்தில் வ.உ.சி. ஆங்கில சாம்ராஜ்யத்தின் வர்த்தகக் கப்பல்களை எதிர்த்து, சுதேசிக் கப்பல் விட்டு வெற்றி கண்ட பெருந்தகை. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வ.உ.சி.க்கு நிலையான இடம் உண்டு.

இனிய செல்வ, பசும்பொன் தந்த தேவர் திருமகன் என்று பாராட்டப் பெறும் முத்துராமலிங்கத் தேவர் தேசியத் தலைவர்; தெய்வீக நெறியில் தோய்ந்த தலைவர்; வீரர்; ஆற்றொழுக்காகப் பலமணிநேரம் தத்துவ மெய்ப் பொருள் பேசும் ஆற்றல் மிக்கவர். அவர் ஒர் ஆன்ம ஞானி; தேவர் திருமகனாரையும் சாதித்தலைவர் ஆக்க முயன்று வெற்றியும் பெற்று வருகின்றனர். இது தேவர்; திருமகனாரின் புகழுக்கு அணி சேர்க்குமா? என்பது குறித்து அன்பர்கள் சிந்திக்க வேண்டும். இனிய செல்வ, திருவள்ளுவரையும் வள்ளுவப் பண்டாரக்குலத்தில் தோன்றியவர் என்ற செய்தி பரப்பப்படுகிறது.

வளரும் சமுதாயத்திற்குச் சாதிகள்-களைகள். களைகள் நிறைந்த கழனியில் பயிர் வளராது. இனிய செல்வ. அதுபோலச் சாதிப்புன்மைகள், வேற்றுமைகள் வளரும் மனிதக் கூட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்னியமாகி விடுவர். மனிதக் கூட்டத்தில் வாழும் ஒவ்வொருவரும் சமூகம் உருவாகத் துணையாக அமைய மாட்டார்கள். ஒருவருக்கொருவர் கடமைப் பொறுப்பு இருப்பதை உணரார், இந்த நிலையில் கூடி வாழ்தல் எனும் பண்பு அரிதாகிவிடும். காலப்போக்கில் தமிழரும் இல்லை, இந்தியரும் இல்லை என்றாகிவிடும். இனிய செல்வ, இந்தியா அந்நியருக்கு அடிமையானது ஏன்? எப்படி? வீரம் இல்லாமலா? விவேகம் இல்லாமலா? இல்லை! உலகத்தின் எந்த இனத்தையும் விட இந்தியர்களுக்கு வீரம் அதிகம் உண்டு; விவேகமும் உண்டு. ஆயினும் ஒருவர் பிறிதொருவருடைய வீரத்தை, விவேகத்தை அங்கீகரிப்பதில்லை. ஏன் ? சாதிகளே காரணம்; மத வேற்றுமைகளே காரணம்.

(2)

இனிய செல்வ, இந்தச் சாதிப்புன்மைகள் பழமையானவையும் அல்ல. சமயங்கள் பெற்றெடுத்த நச்சுக் குழந்தைகளுமல்ல. நிலப் பிரபுத்துவமும் தனியுடைமையும் பெற்றெடுத்தவை. இவற்றைப் பின்னால் அங்கீகரித்துப் பாதுகாத்தன சமய நெறிகள். இனிய செல்வ, தொன்மைக் காலத்து மகரிஷிகளின் வாழ்க்கையில்-திருமண உறவில் கூடச் சாதிகள் இருந்ததில்லை. இன்று இந்தச் சாதிகள் வளர்ந்து மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கின்றன. பல தலைமுறைகளாகத் தாழ்த்தப்பட்டவர்களாக வாழும் - வாழ்ந்து கொண்டிருக்கிற ஆதி திராவிடர்களும் இன்னமும் மற்ற சாதியினரின் அங்கீாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் சலிப்படைந்து சமுதாயத்திற்கு எதிர் விளைவு சக்திகளாக உருமாற்றம் பெற்று வருகிறார்கள். இதனை இந்திய சமூகம் அறிந்து, உணர்ந்து ஆதி திராவிடர் சமூகத்தை அங்கீகரிக்க முன்வர வேண்டும். இனிய செல்வ, ஆதி திராவிடர் சமூகமும் தனித்து நிற்பதால் தீண்டாமை போய் விடாது. காவிரி கடலில் கலந்தால்தான் காவிரி கடலாகும். உப்பு, உணவில் கலந்தால்தான் உணவுக்கு ருசி. அதுபோல, ஆதி திராவிட சமூகமும் மற்ற சமூகங்களும் கலக்க வேண்டும். ஒன்றாக சங்கமிக்க வேண்டும். அப்போதுதான் வேற்றுமைகள் அகலும். ஒருமைப்பாடு தோன்றும்!

இனிய செல்வ, இன்று சாதிகளாலும் மதங்களாலும் நோய்வாய்ப்பட்டுள்ள இந்திய சமுதாயத்திற்கு வள்ளுவமே மருந்து! "பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்ற பெருநெறி நின்று ஒழுக வேண்டும் இனிய செல்வ, உலகத்திற்குத் தமிழ் கூறும் நல்லுலகம் தந்த நெறிகள் பலப்பல, அவற்றில்,

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்”

என்பது.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்”

என்பது.

"பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!”

என்பது.

"எல்லாரும் இன்புற்று இருக்க

நினைப்பதுவே அல்லாமல்

வேறொன்றறியேன்”

என்பது. இந்த நெறிகள் மானுடத்தின் ஒழுகலாறாகும் பொழுதுதான் மானுடம் வெல்லும்; வையகம் வளரும்.

இனிய செல்வ, இன்று தமிழகம் திருக்குறள் நெறியிலிருந்து நெடுந்தொலைவிற்கு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் திருக்குறள் தமிழகத்தை வென்றெடுக்குமா? அல்லது திருவள்ளுவரும் திருக்குறளும் வழிபாட்டுப் பொருள்களாக்கப் படுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இனிய செல்வ, நமக்கும் உழுதசால் வழிச் செல்லும் பழக்கம் இருக்கிறது போலும்! 'காலம்’-மனிதனை உருவாக்கும் சாதனமே. ‘காலம்’ மனிதனை உருவாக்குவதில் பங்கேற்கலாம்; பொறுப்பேற்க முடியாது. காலத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் இடையில் நடக்கும் போராட்டமே வாழ்க்கை! இந்தப்போராட்டத்தில் மனிதனைக் காலம் வெற்றிகொண்டுவிட்டால் காலம் மனிதனின் முதுகில் மூப்பு, முதுமை என்ற முத்திரைகளைக் குத்திச் சுடுகாட்டுக்கு அனுப்பி விடுகிறது. மனிதன் காலத்தை வெற்றி கொள் வானானால் மனிதன் காலத்தின் முதுகில் முத்திரையைக் குத்தினால் "அசோகர் காலம்” என்பதுபோல அவன் பெயரைச் சுமந்து கொண்டு காலம் விளங்கும். இந்தத் தலைமுறையில் இந்தப்பேறு தமிழினத்திற்குக் கிடைக்குமா? தமிழரில் யாருக்காவது கிடைக்குமா? ஏன்? காத்திருப்பானேன்? முயற்சியைத் தொடங்குவோம்! முடிவு எப்படியானாலும் ஆகட்டும்! இனிய செல்வ, சாதிகளை மறப்போம்! பண்பாட்டு மலை உச்சியில் ஏறுவோம்! நம்முடன் பிறந்த மானுடப் பரப்பைப் பார்ப்போம்! மனித சமுத்திரத்தில் சங்கமமாவோம்! எல்லாரும் ஒன்றென முரசு கொட்டுவோம்; இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம்! இன்ப அன்பு

அடிகளார்

91. விருப்பங்கள்

இனிய செல்வ,

திருக்குறள் ஓர் அரசியல் நூல். திருக்குறள் முடியாட்சிக் காலத்தில் தோன்றினாலும் இக்காலத்திற்குரிய பண்புகளை விரித்துரைக்கத் தவறவில்லை. உண்மையில் - சொன்னால் இன்று பிரிட்டனில் நடைபெறும் முடியாட்சியும் குடியாட்சியும் கலந்த முறையைத் திருக்குறள் விரும்பியதாக இருக்கிறது. ‘நாகரீகம்’ என்ற சொல்லுக்கு உலக மொழிகள் சொல்லும் விளக்கம் வேறு. ஆனால், திருக்குறள் கூறும் விளக்கம் சிறப்புடையது. நண்பர்கள், பழகிய நட்புடையவர்கள் கொல்லும் நஞ்சைக் கொடுத்தாலும் விரும்பிக் குடிக்கவேண்டும். அப்படி விரும்பிக் குடித்தால் சாகாமல் வாழ்வர் என்பது திருக்குறள் கூறும் நாகரிகம். இனிய செல்வ, உன்னுடைய கேள்வி புரிகிறது! நஞ்சைக் குடித்தால் சாகாமல் இருக்க இயலுமா? என்பதுதானே உன் கேள்வி; இயலும் என்பது திருக்குறளின் பதில்!

தூய செங்குருதியைப் பெற்றுள்ள உடம்பில் நஞ்சு ஒன்றும் செய்யாது. நஞ்சினை, நஞ்சின் தன்மையை மாற்றும் ஆற்றல் தூய செங்குருதிக்கு உண்டு. அத்தகைய தூய செங்குருதியை எப்படி பெறுவது? விருப்பு-வெறுப்பற்ற நிலையிலேயே தூய செங்குருதி கிடைக்கும். விருப்பங்கள் இல்லாத வாழ்க்கை உண்டா? உண்டு! தேவை வேறு. விருப்பம் வேறு. விருப்பங்கள், வெறுப்புகளுக்கு வாயிலாக அமைந்து விடுதல் உண்டு. நமக்கு ஒன்றில் விருப்பம். நமது விருப்பத்திற்கு மாறாக விரும்புவர் அல்லது விருப்பத்திற்கு உடன்படாதவர் மீது வெறுப்பு ஏற்படும்.

இனிய செல்வ, வாழ்க்கை, செயல்களால் ஆய ஏடுகளை உடையது. செயல்களுக்குத் தாய் கடமையுணர்வு. கடமையில் விருப்பார்வம் இல்லாமல் போனால் கடமையைச் சீராகச் செய்துமுடிக்க இயலாதே! ஆம், உண்மைதான்! ஆனால், விருப்பம் என்பது கடமையைத் தூண்டும் அளவிற்கு இருத்தல் பிழையன்று. இறுகிப்போன வெறுப்புக்களை ஈன்றெடுக்கும் பண்பாக விருப்பம் உருக்கொள்ளக்கூடாது. இனிய செல்வ, நாம் இந்த மண்ணில் வாழ்கின்றோம்; சமூகத்தில் வாழ்கின்றோம்! நமக்கென்று வழி இருக்கிறது; சமயம் இருக்கிறது. பொறுப்புகள் இருக்கின்றன; கடமைகள் இருக்கின்றன. இந்தச் சமூகத்தில் நாம் எப்படி விருப்பு அற்றவர்களாக வாழமுடியும் என்பது உன்னுடைய கேள்வி! ஒருவருடைய விருப்பத்துடன் ஒத்துப் போகாதவர்களிடம் வெறுப்பு ஏற்படுவானேன்? பிரிவு ஏற்படுவானேன்? அந்நியமாக வேண்டிய அவசியம் என்ன? காலப்போக்கில் பகைவராக அனுமதிக்க வேண்டுமா? அவசியம் இல்லை.

இனிய செல்வ, ஒன்றுக்கொன்று இனம் என்று இயற்கையிலே உண்டு. பாலுக்கு இனம் உப்பல்ல; சர்க்கரை! அது போல, நீ காணும் ஒவ்வொருவரிடத்திலும் உனக்கு ஒத்துவரக்கூடிய ஒன்றிரண்டு பண்புகள் கூடவா இல்லாமல் இருக்கும்! இருக்கின்ற ஒத்த பண்பினை அறிந்து மேவிப் பழகி, நட்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் இரண்டு பேருக்குமிடையே உள்ள இடைவெளி குறையும். இடைவெளி குறையக் குறைய நட்பு வளரும். ஒத்த கருத்துக்கள் உருவாகும். ஆற்றல் பெருகும் ஆக்கம் வளரும்.

இனிய செல்வ, ஜனநாயக வாழ்க்கைமுறை-கூட்டுறவு வாழ்க்கைமுறை எளிதில் உருவாகாது. ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும் இத்துறையில் தன்னை வளர்த்துக்கொள்ளப் போராடவேண்டும். சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லும். கொடுந் தீமையை வென்றெடுக்க வேண்டுமாயின் பெரும் போராட்டம் தேவை. இனிய செல்வ, அழுக்காறு போன்ற தீமைகளைக் கூட விருப்பு-வெறுப்புக்களைக் கடந்தால்தான் வெல்லமுடியும். மற்றொருவர் என்று ஒருவர் இல்லை. எங்கு நோக்கினும் நீயே! உன்னோடு பிறந்த பட்டாளம்! மானிட சமுத்திரம்! இச்சமுத்திரத்தில் உள்ள தண்ணீரில் வேற்றுமை உண்டா? இல்லையே! மானிட சமுத்திரத்துக்குள் சங்கமமாகி விட்டால் வேற்றுமைகள் அகலும்! ஒருமைப்பாடு கால்கொள்ளும்! எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் பெருந்தகைமை, சன்மார்க்க ஒழுக்கம்-தோன்றும். இந்த நிலை கைகூடினால் "யாரோடும் பகை கொள்ளாத” பெரு வாழ்வு அமையும்.

கடவுள் பக்தி உடையவர் என்று விளம்பரம் செய்து கொள்வோருக்கு முதலில் தேவையான பண்பு, வேண்டுதல் - வேண்டாமை யில்லாது ஒழுகுதலாகும். வரலாறு முழுதும் கூர்ந்து பார்த்தால் மதவெறி-ஆதிக்க வெறி இவைகளால் நடந்த கலகங்கள், சண்டைகளே மிகுதி. இன்றும் நம்மை வருத்தும் கொடிய நோய்களான ஆசைகள், விருப்பங்கள், பெருமை பாராட்டல், விளம்பர வேட்டை யாடுதல், பணம் தேடல் இன்னோரன்னவற்றால் இன்றும் மனிதன் பிரிக்கின்றான்; பிரிந்துகொண்டேயிருக்கின்றான்! ஒரு சிலர் ஒன்றாக இருத்தல் போலக் காட்டி வாழ்வில் பிரிந்தே நிற்கின்றனர். இது பெரிய கொடுமை, மாடுகள் மந்தைகளாக வாழ்கின்றன. மனிதன் ஒன்றாகக் கூடி வாழ இயலாதா?

தி.33. இனிய செல்வ, இயலும்! முக்காலும் இயலும்! தேவை, மனிதத்துக்கு-உறவுக்கு முதன்மையான இடத்தைக் கொடுத்தல்; மற்றெல்லாம் இரண்டாம் நிலையின என்று கருதுதல்; தன் விருப்பத்தைத் திணிக்காது மற்றவர் விருப்பத்தை மதித்தல்; அந்த விருப்பத்திற்கு இடையூறின்றி வாழ்தல்; ஒரோவழி மாறுபாடுகள் தோன்றின் உடல் நோய்க்கு மருத்துவம் போல மருத்துவப் பாங்கில் அணுகுதல்; மாறுபாடுகளை அகற்றுதல்; மாறுபாடுகளை அகற்றிக் கொள்ளுதல். இந்தப் பண்பு விட்டுக் கொடுத்தல் ஆகாது. ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் அறிவியல் சார்ந்த முடிவாகும்.

இந்த முடிவும் இந்த முடிநிலை சார்ந்த வாழ்க்கை முறையும் தோன்றினால் சிறியோரை இகழமாட்டார்கள்; யாரையும் அந்நியப்படுத்தமாட்டார்கள். மற்றெவரையும் விடத் தம்மை உயர்ந்தவராகக் கருதிக் கொள்ளமாட்டார்கள். தனிச் சலுகைகள் எதிர்பார்க்கமாட்டார்கள். மற்றவர் உரிமைக்குக் காவலராக வாழ்வர். இவர்களுக்குள் "உதவி இல்லை; ஒப்புரவு உண்டு”. இனிய செல்வ, ஒப்புரவு ஓர் உயர்ந்த வாழ்க்கைமுறை. ஒப்புரவு வாழ்க்கை நிலை மலரும் பொழுதான் ‘கொடுப்பாரும் கொள்வாரும் இல்லா’ச்சமுதாயம் தோன்றும். விருப்பங்கள் உண்டு. விருப்பங்கள் வழிப்பட்ட ஆர்வம் உண்டு. ஆர்வம், ஆளுமை மிக்க முயற்சியைத் தரும். ஆக்கங்கள் படைக்கப் பெறும். இந்த வாழ்க்கைமுறை தவத்தினும் உயர்ந்தது.

இன்று கூடி வாழ விரும்புவோர் சிலரே. ஆயினும் உளமார அந்நிய உணர்வேயின்றிக் கூடி வாழ்வோர் மிகமிகச் சிலரே! அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அற்ப விஷயங்களுக்கெல்லாம் கோபம், பிரிவினை, அந்நியப்படுதல், தீமை செய்தல், தூற்றுதல், வழக்குகள், நியாமான-தனக்குத் தீங்கில்லாத உரிமைகளைக்கூட மறுத்தல், தன்னை வியந்து கொள்ளல், தன்னை உயர்த்திக் கொள்ளல், தனக்கு ஒத்துவரக் கூடியவையே நியாயங்கள் என்று நம்புதல், தனக்கு ஒத்துவருபவர்களை மட்டுமே நேசித்தல், மற்றவர்களைப் பகைவர்களாகக் கருதுதல், இன்னோரன்ன தீமைகள் வளர்ந்து வருகின்றன. நமது வரலாறு, பழைய வரலாறு. நல்வாழ்வுக்கு ஏராளமான உதாரணங்களைக் காட்டுகின்றன. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு, பாரி-கபிலர் தோழமை முதலியவை சிறந்த எடுத்துக் காட்டுக்கள்!

இனிய செல்வ, விருப்பங்கள் வளரட்டும்! அவ்விருப்பங்கள் வெறுப்புகளை ஈனுதல் கூடாது. "விதை ஒன்று. போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?” என்பது பழமொழி. இப்பழமொழி விருப்பங்களைப் பொருத்தவரை உண்மை யல்ல. விருப்பங்கள் வெறுப்புக்களை ஈன்றெடுத்தலே மிகுதி. இது தவிர்க்கப்படுதல் வேண்டும். தன்னை வியத்தல், மற்றவர்களிடமிருந்து விலகி உயர்ந்து அந்நியமாதல் என்பது கூடாது.

"புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள

இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி"

என்பது சான்றோர் வாழும் நெறி.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்"

என்ற திருக்குறள் நெறி வழியில்-வள்ளுவர் வழியில்-நம் விருப்பங்களைத் திணிக்காது மற்றவர் விருப்பங்களை முன்னிறுத்தி அவை மாறுபாடாக அமையின் மருத்துவம் செய்து கூடி வாழ்வோம்! இன்ப அன்பு

அடிகளார்

92. உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல்

இனிய செல்வ, மனிதன் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உரியவன்; ஆளானவன்! எந்த ஒரு மனிதராலும் தனித்து வாழ இயலாது. ஒரோவழி இயன்றால் அந்த வாழ்க்கையில் மனிதம் மிளிராது; விலங்கியலே மேம்பட்டு விளங்கும்; பயனும் இருக்காது; பிழைப்பு நடந்தாலும் அது வாழ்தல் ஆகாது. இனிய செல்வ, வாழ்தலுக்குச் சமூகம் தேவை. சமூகம் தழுவிய உலகந்தழுவிய வாழ்க்கையைத்தான் வள்ளுவம் காட்டுகிறது. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" என்றே கூறுகிறது. ஒழுக்கத்தில் சிறந்தது உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல், உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல் எளிதான காரியமா? இல்லை, ஒருபோதும் இல்லை! கடினம் தான்! அந்தக் கடினமான முயற்சியைத்தான் மேற்கொள்ள வேண்டும். இடுக்கான வழியில் செல்வதே வாழ்வு என்று விவிலியம் கூறுகிறது.

மானுடம் ஒரு குலமாக வளர, அமைய என்ன செய்ய வேண்டும்? நல்லமுறையில் விளம்பரம் செய்து கூட்டத்தைக் கூட்டிவிடலாமே! ஆனால், கூடி வாழமாட்டார்களே! "இரண்டு மனிதர்களை ஒரு அறையில் போட்டுப் பூட்டி விட்டு சிலமணி நேரம் கழித்துத் திறந்து பார்த்தால் அந்த அறைக்குள் பிணங்கள் தான் கிடைக்கும்" என்றொரு துணுக்கு படித்ததாக நினைவு. மனிதன் சார்ந்து வாழ, கூடி வாழ எத்தகைய பண்புகள் தேவை? இன்று ஏராளமான மக்கள் கடவுளை வழிபடுகிறார்கள்! ஆனால், கடவுள் நெறியில் நிற்பதில்லை; ஒழுகுவதில்லை. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவன் கடவுள்! அப்படியானால் இன்று கடவுள் நம்பிக்கை உடையவர்கள் வழிபடுகிறவர்களிடம் வேண்டுதல், வேண்டாமையாகிய இயல்புகள் - குணங்கள் இருக்கக்கூடாது அல்லவா? இன்று எங்குப் பார்த்தாலும் மிகமிக உயர்ந்த இடத்திலிருந்து கிராமம் வரை வேண்டுவோர் வேண்டாதோர் என்ற அணி மனப்பான்மை பெருகி வளர்ந்து வருகிறது. மிக உயர்ந்த ஜனநாயக மரபில் எதிர்க் கட்சிகள் இருக்கும்; இருக்கவேண்டும். ஆனால் இன்று நம்முடைய நாட்டில் எதிர்க் கட்சிகள் இல்லை. எதிரிக் கட்சிகள்தான் இருக்கின்றன. எங்குப் பார்த்தாலும் பிரிவினை உணர்ச்சிகள்!

மனித இயற்கை ‘வேண்டும்’ ‘வேண்டாம்’ என்ற குண இயல்புகள் இருப்பது. ஆனால், அவை தம்முடன் வாழ்பவர்களுடன் ஒத்து இருக்கின்றனவா என்று ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளவோ, தள்ளவோ தவறிவிடின் சமூகம் தோன்றாது; சமூகம் உருக்கொள்ளாது: தனிமனிதனுக்குப் பாதுகாப்பும் உத்திரவாதமும் இருக்காது. காலம் செல்லச் செல்ல மனிதன், பிறிதொரு மனிதனிடத்திலிருந்து அந்நியப்பட்டுப்போவான். அந்நியப்பட்ட நிலையில் சந்தேகம், பயம், அச்சம், உட்பகை, வன்மம் முதலிய தீய குணங்களுக்கு மனிதன் அடிமையாகி விடுவான். அதனாலேயே கடவுள் கூட மற்றவர்கள் விரும்பியதைத் தனக்கு எதிராக அமையும் என்று தெரிந்து அருளிச்செய்கிறான். பத்மாசூரன் கதை, சூரபதுமன் கதை எடுத்துக்காட்டுக்கள்! இனிய செல்வ, பத்மாசூரனும் சூரபதுமனும் சமூகப் பகைவர்களாக மாறின போதுதான் கடவுள் ஒறுக்கின்றார்! இனிய செல்வ, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வேண்டுதல்களையும் வேண்டாமைகளையும் ஓர் எல்லைக்குள் கட்டுப்படுத்திக் கொண்டால் அல்லது சமுதாய நலன் என்ற ஆதார சுருதிக்கு முரணாமல் அமைத்துக்கொண்டால் நல்லது. சமூகமும் வளரும், வாழும்!

இனிய செல்வ, இன்று எங்கு நோக்கினும் நிர்வானமான சுயநலம்! விளம்பர ஆசை பண ஆசை! இவையெல்லாமாகச் சேர்ந்து இன்று மனித குலத்தின் பண்பாட்டை அரிமானம் செய்து வருகிறது. இந்தப் போராட்டத்திலிருந்து இந்தியாவை - இந்தியர்களை - தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். பத்திரிகை உலகம், திரைப்பட உலகம் இவ்விரண்டும் மானுடம் பண்பாட்டுச்சியில் ஏறுவதற்குப் பயன்படும் ஏணிகள்! ஆனால் இன்று இவை மனித குலத்தின் நாகரிகத்திற்குப் பள்ளங்களைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன! தரமான நூல்களைப் படிக்கும் போக்கு மக்களிடத்தில் வளர வேண்டும். மேடைகள், இசை அரங்குகள், பொழுதுபோக்கு மையங்களாக மாறக்கூடாது. இசை, கிளர்ச்சியை உண்டு பண்ணவேண்டும். ‘இசை ஒரு பொழுது போக்கு சாதனம் அல்ல!’ என்று அண்மையில் கங்கை அமரன் கூறியதை நினைவுகூர்வோமாக!

இனிய செல்வ, கருத்து வேற்றுமைகள் எழுவது இயற்கை. அவை பரிமாற்றம் செய்து கொள்ளப்பெற்று ஒத்த கருத்து உருவாதல் வேண்டும். இனிய செல்வ, அதுவும் இயலாது போனால் கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மன முறிவுக்கு இடம் கொடுக்காமல், உள்ளம் ஊனப்படாமல் பழகவேண்டும். பழகும் பாங்கில் ஒத்த கருத்து உருவாகலாம். அல்லது கருத்து வேற்றுமைகள் மறந்தே போகலாம். இனிய செல்வ, இத்தகு பண்புகளுடைய மனிதர்களைக் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இனிய செல்வ, நம்முடைய ஆளுநர் - முதல்வர் மோதல்களைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. பெருந்தகைமை என்ற பண்பை இனிமேல் காணாமலே போய்விடுவோமோ என்ற அச்சம் மேலிடுகிறது. இனிய செல்வ, ஒழுக்கம் என்றால் என்ன? அதிலும் ஆன்மீக ஒழுக்கம் என்றால் என்ன? அன்றாட வாழ்க்கையில் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது மட்டும் ஒழுக்கமா என்ன? இவை ஒழுங்குகள்! ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது. உயிரியல் பண்புகளே ஒழுக்கம். அவற்றினுள்ளும் தலையாயது ‘வேண்டுதல் - வேண்டாமை’ அரசனிடமிருந்து மக்கள் விடுதலை பெற்றுக் கடவுள் நெறிக்குச் சென்றது வரலாற்றுத் தொடக்கமே. அரசன் வேண்டுதல் வேண்டாமையின் பாற்பட்டு நன்மையும் தீமையும் செய்ததால்தான் வேண்டுதல் வேண்டாமை இல்லாத கடவுளைத் தேடினர்; கண்டுபிடித்தனர். ஆனாலும் கறை படிந்த மனிதர்கள் அந்தக் கடவுளையும் இப்போது விட்ட பாடில்லை. கடவுளை, மதங்களுக்கும் சுரண்டல் பொருளாதாரத் தத்துவவாதிகளுக்கும் இரையாக்கி விட்டனர். இனிய செல்வ, கடவுளுக்கு ஈசுவரன் என்று ஒரு பேர் உண்டு. ஆனால், நமது மக்கள் கோடி பணம் தொகுத்து விட்டாலே ஈசுவரன் பட்டம் கொடுத்து, கோடீசுவரர் ஆக்கிவிடுவர்! இனிய செல்வ, மனித குலத்திற்கு நிலையான தீர்வு வேண்டுதல் - வேண்டாமை அற்ற மனித சமூகத்தைக் காண்பதிலேயே இருக்கிறது.

இன்று உலகப் போக்கினைப் பார்த்தால் கொஞ்சம் நம்பிக்கை உண்டாகிறது. அணு ஆயுத உற்பத்தியைக் குறைத்திருக்கிறார்கள். செய்து குவித்த அணு ஆயுதங்களைக் கடலில் கொட்டியிருக்கிறார்கள். ஆனாலும் உலகின் வீதிகளில் என்ன நடக்கின்றது? நமது நாடு எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது? இது ‘வீரப்பன்’களின் ராஜ்யமாக வல்லவா உருப்பெற்றுக் கொண்டு வருகிறது. இங்கே ஒரு வீரப்பன் என்று நினைக்காதீர்கள்! தெருவுதோறும் ஊர்தோறும் ‘வீரப்பன்’கள் தோன்றுகிறார்கள்! தோன்றிக் கொண்டிருக்கிறார்கள்! ஆயினும் என்ன செய்வது? திசை தவறிப் போய்க் கொண்டிருக்கிற சமுதாயத்தை வள்ளுவர் வழியில் மடை மாற்ற செய்ய இயலும், கடின முயற்சி தேவை. வெற்றி தோல்வியைப் பற்றிக் கருதாமல் போராடிப் பார்ப்போம். மனிதகுல வரலாறு தனது தலைவிதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளட்டும்! வரலாறு தேக்கமின்றி நடைபோடப் புவியை நடத்துவோம்! காலம் விடை சொல்லும்! அடுத்த மடலில் எழுதுகின்றோம்! இன்ப அன்பு

அடிகளார்

93. கல்விமொழியும்-தமிழ்ப்பணியும்

இனிய செல்வ,

1-1-95 முதல் 5-1-95 முடிய உலகத் தமிழ் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. மாநாட்டில் தமிழகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் கொடுத்த நற்செய்தி நான்காம் தமிழ் பற்றியது. அதுதான் அறிவியல் தமிழ்! மாண்பமை முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. இனிய செல்வ, தமிழ் பயிற்று மொழிக் கல்வி இயக்கம் 1962-லிருந்து நடந்து வருகிறது, தொடக்க காலத்தில் கோவை டாக்டர் மு.அறம், பேராசிரியர் அ.தேவராசன் ஆகியோர் முன்னின்று உழைத்தனர். பேராசிரியர் அ.தேவராசன் இத்துரையில் அடிக்கடி கருத்தரங்குகள் நடத்தினார். நாம் பல் கருத்தரங்குகளில் கலந்து கொண்டதுண்டு. அதுபோது கல்வி அமைச்சர் தமிழைப் பயிற்றுமொழியாக்க ஒத்துக் கொண்டார். ஆனால் கலைப் (Arts) பாடங்களுக்கு முதலில் சம்மதித்தார். காலப்போக்கில் அறிவியல், தொழிற் கல்வி முதலியவற்றில் தமிழை அறிமுகப்படுத்தலாம் என்றார். அதோடு தமிழ் வழிக் கல்வி மட்டும் அல்லாமல் ஆங்கில வழிக்கல்வியும் ஒரு வகுப்பு இருக்கும் என்றார். அது தான் வினையாயிற்று. அப்போது தமிழ்நாட்டில் தீவிரப் பிரச்சாரம் ஆங்கிலத்தை அகற்றினால் இந்தி வந்துவிடும் என்பதாகும். தமிழ்வழிக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நிதி உதவியும் செய்ய அரசு முன்வந்தது. ஆயினும் நல்ல புத்திசாலி மாணவர்கள் ‘தமிழ் வழிக்கல்வி’ கற்க முன்வரவில்லை. இந்த நிலையைக் கண்டு டாக்டர் கலைஞர் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழிக் கற்றோருக்கு முன்னுரிமை கொடுத்து ஆணை பிறப்பித்தார். இனிய செல்வ, அந்த ஆணையத் தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்த்தார்கள்; போராடினார்கள். பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுக்கிடந்தன. இந்நிலையில் பலருடைய வற்புறுத்தலின் காரணமாக அந்த ஆணையை அரசு திரும்பப்பெற்றது. இன்றும் சரி! ஆங்கில வழிக் கல்வி விரும்பப்படுகிறது. ஏன்? 'எல்லாரும் சமம்’ என்பது உறுதிசெய்யப்படவில்லை. சமூக மேலாதிக்கம் அதற்குக் காரணம்.

தமிழில் ‘அறிவியல் தமிழ்’ என்ற தமிழைத் தந்த பெருமை விஞ்ஞானி வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கே உரியது. அறிவியல் தமிழ் என்ற வழக்கைத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அதன்பின் பேராசிரியர் கை.இ.வாசு என்ற சிறந்த விஞ்ஞானி; காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் அவர் இயக்குநராகப் பணி செய்யும்போது சுதேசி விஞ்ஞான இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தில் நமக்குப் பொறுப்பு ஏற்படுத்தித் தந்தார். சுதேசி விஞ்ஞான இயக்கம் கிராமங்கள்-சிற்றூர் வரையில் அறிவியல் கண்காட்சிகள் நடத்துவது மூலமும் தமிழில் அறிவியல் கருத்தரங்குகள் நடத்துவது மூலமும் அறிவியல் தமிழைப் பரப்பி வருகின்றது; வளர்த்து வருகின்றது. இனிய செல்வ, கடந்த மூன்றாண்டுகளாக அறிவியல் தமிழ்ப் பேரவை மாநாடு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் வந்து குவிகின்றனர். தமிழிலேயே அறிவியல் கட்டுரை எழுதிப் படிக்கவேண்டும்; வாசிக்கவேண்டும்; விவாதிக்க வேண்டும். அண்மையில் பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தில் நடந்தது. 420 கட்டுரையாளர்கள். 300 பார்வையாளர்கள் வந்திருந்தனர். அறிவியல் தமிழில் புத்தகங்கள் நிறைய வந்துவிட்டன. நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் நிறைய வெளியிட்டுள்ளது. ஆதலால், அறிவியல் தமிழ் வளர்ந்துள்ளது. இருக்கும் குறை கல்லூரி மாணவர்கள் படிப்பதில்லை என்பதுதான்! இனிய செல்வ, தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பெற்றால் தான் அறிவியவில் தமிழ் வளரும். தமிழும் ஆட்சி மொழியாக இயலும்.

இனிய செல்வ, தமிழும் ஆங்கிலமும் கல்வி மொழி என்ற நடைமுறை ஒத்துவராது. தமிழே-தமிழ் மட்டுமே கல்வி மொழியாக இருத்தல் வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாகக் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். இந்திய நாட்டிற்கு மும்மொழித் திட்டமே ஏற்புடையது. மும்மொழித் திட்டம் இல்லாது போனால் தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியாளர் தமது தாய் மொழியைக் கற்கும் வாய்ப்பை இழப்பர். ஏன்? இந்தியா முழுதும் பரவி வாழும் தமிழர்கள் தமது தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கற்கும் வாய்ப்பை இழப்பர் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். ஆதலால் மூன்றாவது மொழியாக இந்திய மொழிகள் ஒன்றை எடுத்துப்படிக்க வேண்டும். இதுதான் சிறந்த நடைமுறை. இந்தியா உருவாவதற்குரிய நடைமுறை.

இனிய செல்வ, உலகத் தமிழ்ச் சங்கம் என்பது ஒன்று இப்போது அவசியமா? தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச்சங்கம் செய்யக்கூடிய பணிகளைச் செய்யலாம்; செய்யக்கூடும். புதிய புதிய நிறுவனங்கள் தோன்றுவதைவிட இருக்கும் அமைப்புகளை வலிமைப்படுத்துவதும் அதன் பணிகளை விரிவடையச் செய்வதும் நல்லது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குத் தமிழ் ஆய்வு, தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய பணிகளைச் செய்வதற்குரிய கருவிகள், அமைப்புக்கள் அனைத்தும் இப்போதே அமைந்துள்ளன. சில கோடி ரூபாய் செலவு செய்தாலே போதும்! சங்கம் என்பதை விடப் பல்கலைக்கழக அமைப்புக்கே உலகில் வரவேற்புக் கிடைக்கும். பழைய மரபில் அமைந்த சங்கங்கள்தான் காலப்போக்கில் பல்கலைக்கழகங்களாயின. மதுரையில் இன்றும் நான்காம் தமிழ்ச் சங்கம் ஒன்று செயற்படுகிறது; தமிழ்க் கல்லூரி ஒன்று நடத்துகிறது. இனிய செல்வ, அவசியம் எனில் இத்தமிழ்ச் சங்கத்தினைப் பழைய மரபுப்படி அமைந்தது என்று உதவி செய்யலாம். இன்று தமிழ்நாட்டில் பல தமிழ்ச் சங்கங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆதலால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தையே வளர்த்தால் அதிகப் பயன்தரும்.

தமிழினத்திற்கு எழுச்சியும் விழிப்புணர்வும் தர உலகத் தமிழ் மாநாடு நடத்திய மாண்பமைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் பிறமொழி இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டுத் தரவேண்டும். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்து அச்சிட்டு உலகிற்கு வழங்கவேண்டும். தமிழில் தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்த்தப் பெறுதல் வேண்டும். அறிவியல் புலத்தின் வாயிலாக அறிவியல் நூல்கள் கொண்டு வரவேண்டும். உலகம் முழுதும் வாழும் தமிழ் மக்களுக்குத் தமிழ் கற்பிக்க ஆசிரியர்களைத் தயார் செய்து அனுப்ப வேண்டும். உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், தமிழ் மொழியைக் கற்பதற்குரிய வசதி செய்து தரவேண்டும்.

தமிழ், வளர்ந்தமொழி, இலக்கியம், இசை, கலை, பரதம், மருத்துவம், ஒவியம், சிற்பம் முதலிய பல துறைகளிலும் வளர்ந்த மொழி. அந்தத் துறைகளையும் வளர்க்க வேண்டும்; பேணிக் காக்கவேண்டும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமே இவற்றைச் செய்ய இயலும்; செய்யவேண்டும். இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம். இன்ப அன்பு

அடிகளார்

94. வாழும் மானிடத்திற்கு அழகு?

இனிய செல்வ,

மனிதன் ஏன் பிறந்தான்? படைப்பாளியாக விளங்கவேதான்! "வினையே ஆடவர்க்கு உயிரே!” என்று சங்க இலக்கியம் கூறும். மனிதன் தன்னுடைய வளர்ச்சி, வாய்ப்புக்கள், சூழலுக்கேற்ப பணிகளைச் செய்கிறான். அது அவனுடைய கடமை. ஒருவன் 24 மணி நேரம் உயிர் வாழ எத்தனை கோடி மனிதர்களும் உயிர்களும் உழைக்கின்றனர். அதுபோல இன்னும் உழைத்துக் கொடுப்பது கடமை. வாழ்வுவழிக் கடமை. இனிய செல்வ, மின்னியலில் ஒரு தத்துவம் உண்டு. அதாவது குறைவான மின்சாரத்தை அளவாகப் பெருக்கிக் கொடுக்கும் ஒரு கருவி உண்டு. இனிய செல்வ, அதுபோலச் சமுதாயத்திடம் மனிதன் தான் வாழ்வதற்குக் கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தான் எடுத்துக் கொண்டதைப் போலப் பலமடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். இது உலக நியதி. மனிதனை விட மற்ற எல்லா உயிர்களும் இந்த நியதியைப் பின்பற்றுகின்றன. தாவரங்கள், விலங்குகள் எல்லாமே மனிதனிடமிருந்து பெற்றுக் கொள்வது குறைவு. இயற்கையிலிருந்து பெற்றுக் கொள்வதும் குறைவு. ஆனால் திரும்பக் கொடுப்பதோ ஏராளம். இனிய செல்வ, அதுமட்டுமா? இவன் தரங்குறைந்தவைகளையே தனக்கு உபயோகமில்லாதவைகளையே தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் தருகின்றான். ஆனால் அவைகளோ மனிதனுக்குத் தரமான நுகர் பொருள்களாக, சுவைபடு பொருள்களாகத் தருகின்றன, ஆயினும் ஆரவாரம் செய்வதில்லை. விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. தாவர உலகத்தில், விலங்குகள் உலகத்தில், பறவைகள் உலகத்தில் பஞ்சமும் இல்லை. பண்டமும் இல்லை; பட்டினியும் இல்லை.

இனிய செல்வ, மனிதனோ பேராசைக்காரன். இந்த உலகத்தையே அவன் சுரண்டுகிறான். இந்த உலகத்தில் உள்ள பொருள்கள் கணக்கற்றவை. உலகம் முழுதும் வயிறார உண்டும் மிஞ்சும். ஆனால் நடைமுறையில் காண்பது பற்றாக்குறை. ஏன்? மனிதனின் பேராசையே காரணம், அவன் சுரண்டுகிறான்; சுருட்டுகின்றான். அதனால் உலகத்தில் இல்லாமை இருக்கிறது. எடுத்துக்கொள்ள விரும்பும் அளவுக்கு உழைக்கவும் மறுக்கிறான். அன்று பதவிகளும் பணிகளும் தொண்டாற்றம் முறையிலேயே அமைந்திருந்தன. நன்றி பெறமாட்டார்கள்; எதிர்பார்க்கவும் மாட்டார்கள். அப்பரடிகள் "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்றார். சராசரி மனிதனுக்கே இது கடமை. பிறப்பொழுக்கம், வாய்ப்புக்கள் காரணமாகப் பதவிகளில் அமர்பவர்கள். பணி செய்யும் பொறுப்புடையவர்களின் பணி. இவர்களிடம் சமுதாயத்தின் எதிர்பார்ப்பு அதிகம் உண்டு. இனிய செல்வ, சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகளை உயர்நிலை எய்திய மனிதர்கள் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள். அங்ஙணம் செய்யும்போது அப்பரடிகள் கூறியதைப்போல் அடக்கமாகச் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

திருவள்ளுவர், நாடாளும் மன்னன் தன்னை வியந்து கொள்ளக்கூடாது, "பணியுமாம் என்றும் பெருமை” என்பது போல இருக்கவேண்டும் என்றார். விண்ணளந்து காட்டி வானை மறைக்கும் கோயில்களின் அடிக்கற்கள் மறைந்து கிடக்கின்றன. வண்ண வண்ண மலர்களையும் இனிய சுவையுடைய கனிகளையும் தரும் மரங்களின் வேர்கள் மண்ணிற்குள் மறைந்து கிடக்கின்றன. ஏ! மனிதனே! நீ என்ன செய்துவிட்டாய்! ஏன் புகழ்வேட்டை ஆடுகிறாய்! உடன் நிற்கும் கூலிப் பட்டாளம் புகழ்வதும் புகழாமா? என்று உளதாகும் சாக்காடு கிடைக்கிறதோ அதுதான் புகழ். தன்னை வியத்தலும், பிறர் வியக்குமாறு செய்து கொள்ளுதலும் நன்றல்ல; புகழல்ல; வாழ்வு நெறியுமல்ல. அடக்கம், பணிவு, கைம்மாறு வேண்டா கடப்பாடு-இவையெல்லாம் வாழும் மானிடத்திற்கு அழகு! அதனால் தான் திருவள்ளுவர்,

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை

(439)

என்றார். இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம். இன்ப அன்பு

அடிகளார்

95. திருக்குறளும்-பெண்ணியமும்

இனிய செல்வ, அண்மைக் காலமாக, திருக்குறள் பெண்ணியத்தைக் கீழ்மைப் படுத்தும் நூல் என்ற கருத்து, விவாதமேடை ஏறி இருக்கிறது. இனிய செல்வ, சமூகப் பழக்க வழக்கங்கள் காலத்திற்குக் காலம் மாறும் இயல்பின. ஒரு காலத்தில் தோன்றும் நூல்கள் அந்தக் காலச் சமூகப் பழக்கவழக்கங்களைக் களமாகக் கொண்டும், சில பழக்கங்கள்-வழக்கங்கள் மாற உந்து சக்தியாகவும் அமைவதுண்டு. அத்தகைய நூல்களில் திருக்குறள் ஒன்று.

இனிய செல்வ, திருக்குறள் முற்றாக மரபு வழி வந்த நூலும் அல்ல; முற்றிலும் புதுமை செய்த நூலும் அல்ல. திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மக்களின் சிந்தனை - செயல்திறன் நோக்கி நூலை இயற்றியுள்ளார். அவர் இயற்றிய நூலில் சிலதான் அவருடைய சொந்தக் கருத்து. பல அவர் காலத்தில் நாடு இருந்த நிலையை விளக்கியிருக்கிறார் என்று கொள்ளுதல் வேண்டும். இனிய செல்வ, திருக்குறள் அறத்துப்பால் தனி மனித ஒழுகலாறுகளையும் குடும்பப் பாங்கினையும் விளக்கிக் கூறுகிறது.

‘பெண் வழிச் சேறல்’, ‘வரைவின் மகளிர்’ அரசியலில் கூறப்படுகின்றன. இந்த அதிகாரங்களின் முறை வைப்பைப் பார்த்தால்தான் திருக்குறள் பெண்ணியத்தைப் பெருமை படுத்துகிறதா அல்லது இழிவு படுத்துகிறதா என்பதை உள்ளவாறு உணரமுடியும். ஆண்-பெண் ஒழுகலாறுகள் சமுதாயத்தில் நிலவும் ஆண்-பெண் விகிதாசாரத்தைப் பொருத்தது. மக்கள் தொகையில் ஆண்-பெண் விகிதாசாரம் சமநிலையில் இருந்தால் நல்லது. ஆனால் பல சமயங்களில் பெண்களின் விகிதம் கூடிவிடுகிறது. ஏன்? பல ஆண்கள் - பெண்ணியல் தன்மை தழுவி வாழும் ஆணகள், ஆண்களாக இன்றி வாழ்கின்றனர். அதுதான் காரணம்.

பாரதத்தில் வரும் ஐவருக்கு ஒருத்தியா என்று கேலி செய்வர். அது அந்தக் காலச் சமுதாய அமைப்பின் கட்டாயம். இனிய செல்வ, அரசியலில் ‘பெண் வழிச் சேறல்’ அதிகாரம் உள்ளது. அரசியல் மிகமிக உயர்ந்தது. அரசியலில் ஆட்சியாளருக்கு ஆலோசனை கூற மிக மிக உயர்ந்த மதிநுட்பமும் தேவை. அதனாலேயே தமிழருடைய அரசியல் முறையில் ஆள்வோருக்கு ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற அமைப்புக்கள் இருந்தன. திருவள்ளுவரும் அமைச்சியல் பற்றி நிறையவே பேசுகிறார்.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்ட தமைச்சு

(631)

வன்கண்குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

டைந்துடன் மாண்ட தமைச்சு

(632)

என்ற அமைச்சுப் பணியைப் பாராட்டுகின்றார். மேலும் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ வேண்டும் என்றும் கூறுகின்றார். இந்த அமைச்சுப் பணிக்கு ஆள்பவரின் மனைவி தகுதியுடையவளாக இருப்பின் அவளுடைய ஆலோசனையைக் கேட்பதைத் திருக்குறள் மறுக்கவில்லை. மாறாக அவர் மனைவி-காமத்திற்குரியளேயன்றி வேறு எந்தத் தகுதியும் இல்லை. அந்த நிலையில் அரசியல் பற்றிய ஆலோசனைகளை மனைவி சொல்லக்கேட்பது ஆள்பவருக்கு ஏற்றதல்ல என்ற கருத்தே பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அடுத்து ‘வரைவின் மகளிர்’ அதிகாரம். பல்லாண்டுகளாகத் திருமணமாகாத பெண்கள் அக்காலத்தில் வாழ்ந்துள்ளனர். ஏன்? இன்றும் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் இரண்டாக இருக்கக்கூடும். ஒன்று பெண்கள் எண்ணிக்கையில் கூடுதலாதல் அல்லது வசதிக்குறைவாதல் ஆகலாம். வரைவின் மகளிர் புழக்கம் அதிகமான காலம் பெரும்பாலும் பிரபுத்துவ காலமாக இருக்கலாம். அதாவது தனியுடைமைச் சொத்துரிமை வந்துவிட்டது. தன்னுடைய குழந்தைக்கு அல்லாமல் வேறு ஒருவருக்குச் சொத்து போய்விடக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாகவே வரலாற்றுப் போக்கில் பலதாரத் திருமணம் நின்றது. பலதாரத் திருமணம் நின்றபிறகு தன் மனைவி புணர்ச்சிக்குத் தகுதியில்லாத காலங்களில் வேறுபெண்களைத் தேடும் நிலையில் வரைவின் மகளிர் குலம் தோன்றுகிறது. இனிய செல்வ, இந்த ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்க இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்து கொள்ளும் உரிமையைத் தனது மக்களுக்கு வழங்கியது. சோவியத் ஒன்றியம் திருமணம் ஆகாத தாய்மார்கள் என்று அங்கீகாரம் செய்தது. இனிய செல்வ, நமது சமய சமுதாய நெறியில்தான் சாத்திர நெறிகளுக்கிடையே முரண்பாடுகள் தோன்றும்போது ஒழுக்க நிலையில் உறுதிப்பாட்டையும் காண்பதில்லை; திருத்தமும் காண்பதில்லை. நமது நாட்டில் வரைவின் மகளிர் பழிப்புக்கு ஆளாயினர். இந்தச் சூழ்நிலையை விளக்குவதுதான் வரைவின் மகளிர் அதிகாரம்.

இனிய செல்வ, இரண்டு அதிகாரங்களை வைத்துக் கொண்டு திருக்குறள் பெண்ணியத்தைப் பெருமைப் படுத்துவதில்லை என்று கூறுவது தவறு. இனிய செல்வ, குடும்ப இயலில் வாழ்க்கைத் துணை நலம் என்ற தனி அதிகாரமே அமைத்து, பெண்ணை ஓர் ஆணின் வாழ்க்கைக்குத் துணை என்று கூறுகிறார். இல்லை, இல்லை! வாழ்க்கைத் துணைநலம் என்றே கூறுகின்றார். தகுதி மிகுதியும் உடைய மனைவியை ஒருவன் பெற்றால் அவன் தன்னை இகழ்வார்முன் பீடு நடைநடக்க இயலும் என்று கூறுகின்றார். இனிய செல்வ, "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்று வினவுகின்ற திருவள்ளுவர் பெண்ணைப் பெருமைப்படுத்துகின்றார் என்றே பொருள் கொள்ள வேண்டும். இன்ப அன்பு

அடிகளார்

குறிப்பு: அடிகளார் தம்மறைவிற்கு முன்னர் மருத்துவ மனையில் இருந்தஞான்று ‘வள்ளுவர் வழி’க்கென்று வரைந்த இம்மடலே அடிகளாரின் இறுதி எழுத்துப் பணியும் ஆகியது. அந்தோ! - ஆசிரியர்

தமிழ்மாமுனிவர்

தவத்திரு

குன்றக்குடி அடிகளார்

நூல்வரிசை

திருக்குறள்

இலக்கியம்

சமயம்

சமுதாயம்

பொது